பொஸ்பரஸ்குண்டுகள் மரணத்தை ஏற்படுத்தும் விதம்

நேற்றைய தினம் லெபனானில் நடந்த மோதலின் பொழுது பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான எரிகுண்டுகள் 2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யுத்தத்தின் பொழுதும் பாவிக்கப்பட்டதாக சிலரினால் கூறப்படுகின்றது. பலரும் நினைப்பதுண்டு இந்த எரிகுண்டு தீக்காயத்தினை ஏற்படுத்தித்தான் இறப்பினை ஏற்படுத்தும் என்று ஆனால் அது பல்வேறு வகைகளில் இறப்பினை ஏற்படுத்தும். அதனை இப்பதிவு விளக்குகின்றது. பொஸ்பரஸ் குண்டுகள் ஏற்படுத்தும் கடுமையான தீக்காயங்கள், பொதுமக்கள் மீது கட்டுப்பாடின்றி ஏற்படும் சேதம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் ஆகிய காரணங்களால் பல சர்வதேச சட்டங்களின் கீழ் அவற்றின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு அல்லது தடை செய்யப்பட்டுள்ளது

பொஸ்பரஸ் குண்டுகள் (Phosphorus bombs), குறிப்பாக வெள்ளை பொஸ்பரஸ் (White Phosphorus) கொண்ட ஆயுதங்கள், மிகவும் தீவிரமான எரிவினை மற்றும் நச்சுத் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. வெள்ளை பொஸ்பரஸ் காற்றுடன் தொடர்பு கொண்டவுடன் தானாகவே எரிவதற்கான தன்மை கொண்டது. இது சுமார் 800°C – 1300°C வரை அதிக வெப்பத்தில் எரிகிறது.

இவ்வகை குண்டுகள் வெடிக்கும் போது எரியும் பொஸ்பரஸ் துகள்கள் பரவியபடி மனித உடலில் விழுந்து ஆழமான தீக்காயங்கள், நச்சுத் தாக்கம் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்துகின்றன. பின்வரும் காரணங்களினால் பொஸ்பரஸ் குண்டு தாக்குதலின் பொழுது மரணம் சம்பவிக்கின்றது

1. கடுமையான தீக்காயங்கள் (Severe Thermal Burns)

வெள்ளை பொஸ்பரஸ் மனித உடலில் விழும்போது அது தோலில் ஒட்டிக்கொண்டு தொடர்ந்து எரிகிறது. ஆக்சிஜன் கிடைக்கும் வரை இந்த எரிதல் தொடர்வதால், மிகவும் ஆழமான தீக்காயங்கள் ஏற்படுகின்றன. தோல், தசை, எலும்பு வரை தீக்காயம் ஏற்படலாம். அதிக வெப்பத்தால் திசுக்கள் அழிகின்றன. பிரதேபரிசோதனையின் பொழுது பின்வரும் இயல்புகள் காணப்படலாம் ஆழமான கருகிய காயங்கள், மஞ்சள் நிற நெக்ரோசிஸ் (necrosis) பகுதிகள் , பூண்டு போன்ற மணம் (garlic smell) மற்றும் காயங்களுக்குள் பாஸ்பரஸ் துகள்கள்

2. பொஸ்பரஸ் நச்சுத் தாக்கம் (Systemic Phosphorus Poisoning)

பொஸ்பரஸ் தோல் வழியாக அல்லது புகை வழியாக உடலுக்குள் சென்று உடல் முழுவதும் நச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலில் பின்வரும் விளைவுகள் ஏற்படும்

  • கல்லீரல் – கொழுப்பு மாற்றம் மற்றும் செயலிழப்பு
  • சிறுநீரகம் – திடீர் சிறுநீரக செயலிழப்பு (Acute tubular necrosis)
  • இதயம் – இதயத் துடிப்பு கோளாறு
  • மூளை – நரம்பியல் பாதிப்பு

3. புகை மற்றும் வாயு உள்ளிழுத்தல் (Inhalational Injury)

பொஸ்பரஸ் குண்டுகள் வெடிக்கும் போது பாஸ்பரஸ் ஆக்சைட்கள் மற்றும் அடர்ந்த புகை உருவாகின்றன. இந்த புகை சுவாசக் குழாயில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பின்வரும் நோய் நிலைமைகள் ஏற்படும் சுவாசக் குழாய் எரிச்சல், நுரையீரல் அழற்சி, Pulmonary edema. இறுதியாக சுவாச செயலிழப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்

4. ஓக்சிஜன் குறைபாடு மற்றும் மூச்சுத்திணறல் (Suffocation)

பொஸ்பரஸ் எரியும் போது காற்றில் உள்ள ஓக்சிஜனை அதிக அளவில் பயன்படுத்துகிறது. குறிப்பாக மூடிய இடங்களில் இது ஓக்சிஜன் அளவை குறைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டு இறுதியாக மரணம் ஏற்படும்.

இதன் காரணமாக முக்கியமாக பங்கரில், கட்டிடங்களில் பாதுகாப்பாக உள்ளவர்களுக்கு தீக்காயம் ஏற்படவிட்டாலும் அவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பார்கள்

5. பல உறுப்புகள் செயலிழப்பு (Multi-Organ Failure)

கடுமையான தீக்காயம் மற்றும் நச்சுத் தாக்கம் சேர்ந்து பல உறுப்புகள் செயலிழப்பு (Multi-organ failure) ஏற்படலாம். இதன் காரணமாக இறுதியில் மரணம் சம்பவிக்கலாம்.

பெண்களுக்கு புதிய அச்சுறுத்தல்!!!

இலங்கையில் சில சம்பவங்களில் கணவன் அல்லது காதலன் மனைவி அல்லது காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்ற நிகழ்வுகள் சமூகத்தையும் சட்ட அமைப்பையும் அதிர்ச்சியடையச் செய்கின்றன . குடும்ப வன்முறைகளின் பொழுது ஆண்கள் தமது மனைவி அல்லது நண்பிகளை கழுத்து அறுத்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் புலம் பெயர் தேசங்களிலும் இலங்கையரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில சம்பவங்கள் வருமாறு

  1. 20 பிப்ரவரி 2026 – ஹப்பிட்டிய, நெலுவா (காலி மாவட்டம்) – 32 வயது பெண் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.நீண்டகால குடும்பத் தகராறுக்குப் பிறகு கணவன் தாக்கி கொன்றதாக போலீஸ் சந்தேகித்தது.
  2. 19 செப்டம்பர் 2025 – ரெண்டபொல, மிரிகம (கம்பஹா மாவட்டம்) – 33 வயது மனைவி ஒருவரை கணவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக போலீஸ் தெரிவித்தது.சம்பவத்துக்குப் பிறகு கணவன் போலீசில் சரணடைந்தார்.
  3. 21 ஆகஸ்ட் 2025 – கார்டிஃப் (UK) – இலங்கை குடும்ப சம்பவம் – இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பிரிந்திருந்த கணவரால் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் குற்றவாளி ஆயுள் தண்டனை பெற்றார்.
  4. 05 நவம்பர் 2025 – கல்மடு, எச்சாங்குளம் (வவுனியா மாவட்டம்) – குடும்பத் தகராறுக்குப் பிறகு கணவன் தனது மனைவியை தாக்கி கொன்றதாக போலீஸ் தெரிவித்தது.
  5. 03 ஜூன் 2025 – புளியங்குளம், வவுனியா – குடும்ப வாக்குவாதத்தின் போது கணவன் மனைவியை கொன்றதாக போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டது.

நெருங்கிய உறவு கொலை கடந்த சில ஆண்டுகளில் கவலைக்கிடமான அளவில் அதிகரித்துள்ளது. காவல்துறை பதிவுகளின்படி, 2021 இல் 82, 2022 இல் 95, 2023 இல் 105 பெண்கள் தங்கள் துணையால் அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர். 2024 ஆகஸ்ட் மாதம் வரை 71 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இத்தகைய சம்பவங்கள் நெருங்கிய உறவு கொலை (Intimate Partner Homicide – IPH) என வகைப்படுத்தப்படுகின்றன. இது கணவன்-மனைவி, காதலன்-காதலி அல்லது ஒரே வீட்டில் வாழும் நெருங்கிய உறவுகளுக்கிடையே நிகழும் கொலைகளை குறிக்கிறது. இத்தகைய கொலைகள் பெரும்பாலும் திடீர் “மனஉந்துதல் /பைத்தியம்” காரணமாக நிகழ்வதில்லை. மாறாக, நீண்ட காலமாக உருவாகி வரும் மனநிலை சிக்கல்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள், குடும்ப வன்முறை வரலாறு மற்றும் சமூக-கலாசார காரணிகள் ஆகியவற்றின் சேர்க்கையாக இவை நிகழ்கின்றன.

ஏதுவான காரணிகள்

முதலாவது முக்கியமான மனவியல் காரணியாக அதிகமான சொந்த உணர்வு மற்றும் நோயியல் பொறாமை குறிப்பிடப்படுகிறது. சில நபர்களுக்கு தங்களின் துணையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலை உருவாகும். இவர்கள் மனைவி அல்லது காதலியை தனிப்பட்ட மனிதராக அல்லாமல் “தமக்குச் சொந்தமான பொருள்” என்ற எண்ணத்துடன் பார்க்கலாம். இதன் விளைவாக, துணைவர் மற்றவர்களுடன் பேசுவது, வேலைக்குச் செல்வது அல்லது சுயமாக முடிவெடுப்பது போன்ற சாதாரண செயல்களையே சந்தேகத்துடன் காணலாம். மனநல மருத்துவத்தில் இந்த அளவுக்கு அதிகமான சந்தேகமும் பொறாமையும் சில சமயம் Othello Syndrome என குறிப்பிடப்படுகிறது. இத்தகைய மனநிலையில் உள்ள ஒருவர், துணைவர் துரோகம் செய்கிறார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பலாம். இந்த நம்பிக்கை அதிகரிக்கும் போது, அவமானம், கோபம் மற்றும் கட்டுப்பாட்டை இழந்த உணர்வு உருவாகி வன்முறையாக மாறக்கூடும்.

இரண்டாவது முக்கிய காரணியாக நர்சிஸிஸ்டிக் காயம் (Narcissistic injury) குறிப்பிடப்படுகிறது. சில நபர்களுக்கு வெளிப்படையாக தன்னம்பிக்கை அதிகமாக இருப்பது போல தோன்றினாலும், உள்ளார்ந்த நிலையில் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கலாம். இவர்களுக்கு நிராகரிப்பை ஏற்கும் திறன் குறைவாக இருக்கும். மனைவி அல்லது காதலி பிரிய முயன்றால், அது தனிப்பட்ட அவமானமாகவும் தங்களின் ஆளுமைக்கு எதிரான தாக்கமாகவும் உணரப்படலாம். இதனால் “என்னை விட்டுப் போக முடியாது” என்ற எண்ணம் உருவாகி, கட்டுப்பாட்டை மீண்டும் பெற வேண்டும் என்ற மனநிலையுடன் வன்முறைக்கு தள்ளப்படலாம்.

மூன்றாவது காரணியாக சமூக மற்றும் கலாசார அமைப்புகள் குறிப்பிடப்படுகின்றன. சில சமூக சூழல்களில் ஆண் ஆதிக்க எண்ணங்கள் இன்னும் வலுவாக இருக்கலாம். இதில் கணவன் குடும்பத்தின் முழு அதிகாரமும் கொண்டவர் என்ற நம்பிக்கை நிலைத்திருக்கலாம். பெண்களின் சுயாதீனம், வேலை, தனிப்பட்ட முடிவெடுக்கும் உரிமை போன்றவை சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம். இத்தகைய சூழலில் மனைவி பிரிவு கோருவது, விவாகரத்து முயற்சிப்பது அல்லது கணவனின் கட்டுப்பாட்டை எதிர்ப்பது போன்றவை ஆண் ஆதிக்க மனநிலைக்கு சவாலாகக் கருதப்படலாம். இதனால் சிலர் கடுமையான வன்முறைக்கு செல்லக்கூடும்.

நான்காவது முக்கிய காரணியாக மதுபானம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறிப்பிடப்படுகிறது. பல குடும்ப வன்முறை சம்பவங்களில் மதுபானம் ஒரு முக்கிய துணை காரணியாக காணப்படுகிறது. மதுபானம் உட்கொள்ளும் போது மனிதரின் தீர்மான திறன் குறைகிறது, கோபம் அதிகரிக்கிறது மற்றும் தன்னைக் கட்டுப்படுத்தும் திறன் குறைகிறது. இருப்பினும், மதுபானம் தனியாக இந்த கொலைகளுக்கான மூல காரணம் அல்ல. மாறாக, ஏற்கனவே உள்ள கோபம், பொறாமை அல்லது வன்முறை மனநிலையை வெளிப்படுத்தும் சூழலை அது உருவாக்குகிறது.

ஐந்தாவது முக்கிய அம்சம் முன்பிருந்த குடும்ப வன்முறை வரலாறு ஆகும். பல ஆய்வுகள் காட்டுவதுபோல், நெருங்கிய உறவு கொலைகள் பெரும்பாலும் திடீரென நிகழ்வதில்லை. அதற்கு முன்பாக பல எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கும். இதில் அடிக்கடி உடல் வன்முறை, கொலை மிரட்டல்கள், துணையை தொடர்ந்து கண்காணித்தல், பின்தொடர்தல் (stalking), அல்லது கழுத்தை நெரிக்கும் முயற்சிகள் போன்றவை அடங்கும். குற்றவியல் ஆய்வுகளில் இது violence escalation என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, வன்முறை படிப்படியாக அதிகரித்து இறுதியில் கொலையாக முடிவடைகிறது.

இத்தகைய குற்றங்களை புரியும் நபர்களின் மனநிலை பண்புகளை ஆய்வு செய்யும்போது சில பொதுவான குணாதிசயங்கள் காணப்படுகின்றன. இதில் சமூக விதிகளை மதிக்காத antisocial personality traits, பிரிவு அல்லது நிராகரிப்புக்கான கடுமையான பயத்துடன் தொடர்புடைய borderline personality traits, மற்றும் தன்னம்பிக்கை மற்றும் அதிகார உணர்வுடன் தொடர்புடைய narcissistic personality traits போன்றவை அடங்கும். இதற்கு மேலாக, அதிகமான பொறாமை, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமை, மற்றும் குழந்தை பருவத்தில் வன்முறையை அனுபவித்திருப்பது போன்ற காரணிகளும் சில நேரங்களில் தொடர்புடையதாக இருக்கலாம்.

இத்தகைய சம்பவங்களைப் பற்றி பேசும்போது ஒரு முக்கியமான உண்மையை கவனிக்க வேண்டும். இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் பெரும்பாலான ஆண்கள் இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவதில்லை. இந்த கொலைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே நிகழ்ந்தாலும், அவை குடும்ப அமைப்புகளின் பாதுகாப்பு குறைபாடுகளையும் சமூக விழிப்புணர்வு தேவையையும் வெளிப்படுத்துகின்றன. எனவே, குடும்ப வன்முறையின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது.

தடுப்பு முயற்சிகள்

1. சட்ட மற்றும் நிறுவன மாற்றம்

  • இலங்கையின் குடும்ப வன்முறைச் சட்டத்தின் பாதுகாப்பு உத்தரவுகளை வலுப்படுத்துதல்.
  • காவல்துறை மற்றும் நீதித்துறைக்கு நெருங்கிய உறவு கொலை  தனிப்பட்ட பிரச்சினை அல்ல, கடுமையான குற்றமாகக் கருதும் பயிற்சி.
  • பாலின அடிப்படையிலான வன்முறைக்கான சிறப்பு பிரிவுகளை உருவாக்குதல்.

2. சமூக மற்றும் கலாச்சார மாற்றம்

  • ஆணாதிக்கம் மற்றும் வன்முறையை சாதாரணமாக்கும் கலாச்சார நெறிகளை சவாலுக்கு உட்படுத்தும் தேசிய விழிப்புணர்வு இயக்கங்கள்.
  • சமூகத்தில் புகார் அளித்தல் மற்றும் தலையீட்டை ஊக்குவித்தல்.
  • பள்ளி நிலை முதல் பாலின சமத்துவக் கல்வி.

3. உளவியல் ஆதரவு

  • பாதிக்கப்பட்டவர்களுக்கும் தாக்குதலாளிகளுக்கும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துதல்.
  • பாதுகாப்பான தங்குமிடங்களில் உளவியல் பராமரிப்பு.
  • சுகாதாரத் துறையினருக்கு நெருங்கிய உறவு கொலை அடையாளம் காணும் பயிற்சி.

4. பொருளாதார அதிகாரமளித்தல்

  • பெண்களின் பொருளாதார சுயாதீனத்தை ஊக்குவிக்கும் வேலை வாய்ப்புகள், தொழில் பயிற்சி, சிறு நிதி உதவிகள்.
  • பொருளாதார சுயாதீனம், பெண்களை வன்முறையிலிருந்து விடுபட உதவுகிறது.

முடிவாக, நெருங்கிய உறவு கொலைகள் என்பது ஒரே காரணத்தால் நிகழும் சம்பவமல்ல. மனவியல் காரணிகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், சமூக நம்பிக்கைகள், மதுபானம் மற்றும் முன்பிருந்த வன்முறை வரலாறு போன்ற பல காரணிகள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்போது இத்தகைய கொலைகள் நிகழும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சமூக விழிப்புணர்வு, சட்ட பாதுகாப்பு, குடும்ப ஆலோசனை சேவைகள் மற்றும் வன்முறைக்கு எதிரான ஆரம்ப தலையீடு போன்றவை இத்தகைய துயரமான சம்பவங்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

“மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை” 

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறி டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹட்டன் ஏபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சடலத்தை கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் மூன்று சிற்றூழியர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் செய்வது மனநல மருத்துவத்தில் “நெக்ரோபிலியா” (Necrophilia) என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான மற்றும் கடுமையான பாராபிலிக் குறைபாடாக கருதப்படுகிறது. காரணம், மரணமடைந்த நபர் ஒப்புதல் (consent) வழங்க முடியாது என்பதே ஆகும். மனநல மருத்துவ வரையறைகளின்படி, ஒப்புதல் அளிக்க முடியாத நபரை மையமாகக் கொண்ட பாலியல் ஈர்ப்பு ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்படுகிறது.

அடிப்படை உளவியல் காரணிகள்

நெக்ரோபிலியாவிற்கு ஒரே காரணம் இல்லை. பல உளவியல் காரணிகள் இணைந்து செயல்படலாம்.

(A) முழுமையான கட்டுப்பாட்டு உந்துதல்

சிலருக்கு உறவு சார்ந்த அச்சங்கள் அதிகமாக இருக்கலாம் உதாரணமாக நிராகரிப்பு பயம், நெருக்க உறவு உருவாக்க இயலாமை, பாலியல் செயல்திறன் குறித்த பதட்டம் போன்றவை. ஆனால் மரணமடைந்த உடல் எதிர்ப்பு காட்டாது, தீர்ப்பளிக்காது, மறுக்காது. இதனால் “முழு கட்டுப்பாடு” என்ற உணர்வு உருவாகலாம். இது உறவு சார்ந்த உளவியல் குறைபாடுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

(B) இணைப்பு (Attachment) கோளாறு

சிறுவயதில் பாசக்குறைவு, பாதுகாப்பற்ற இணைப்பு, உணர்ச்சி புறக்கணிப்பு இவற்றால், நபர் உண்மையான மனித உறவுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான (ஆனால் அசாதாரணமான) கற்பனை உலகில் ஈடுபடலாம்.

(C) Conditioning (பழக்கமாதல்)

பாலியல் தூண்டுதல் சில சமயங்களில் குறிப்பிட்ட சூழல்களுடன் இணைக்கப்பட்டு பழக்கமாக மாறலாம். உதாரணமாக மரணம் தொடர்பான அனுபவங்கள், மோர்ச்சரி வேலை சூழல் போன்றவை.

(D) ஆளுமைக் கோளாறுகள்

சில சந்தர்ப்பங்களில் சமூக விரோத ஆளுமைக் கோளாறு, சாடிசம் (Sadism), மனச்சாட்சி குறைவு போன்ற ஆளுமைக்குறைபாடுகள் இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடுபவர்களிடத்தில் காணப்படலாம் . இருப்பினும், எல்லா நெக்ரோபிலிக் நடத்தைகளும் ஆளுமைக் கோளாறுடன் தொடர்புடையவை அல்ல.

(E) மனவெறுக்கோளாறு (Psychosis)

மிக அரிதாக கடுமையான மனவெறுக்கோளாறு, மாயநம்பிக்கைகள் போன்ற நோய் நிலைமைகளினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம்

நரம்பியல் (Neurobiological) காரணிகள்

நரம்பியல் பார்வையில், பாலியல் உந்துதல் மூளையின் சில முக்கிய பகுதிகளுடன் தொடர்புடையது:

  • Hypothalamus – பாலியல் உந்துதல் கட்டுப்பாடு
  • Limbic system – உணர்ச்சி செயலாக்கம்
  • Prefrontal cortex – தீர்மானம் மற்றும் சமூக கட்டுப்பாடு

சில ஆய்வுகள், தன்னாட்சி கட்டுப்பாட்டின் குறைவு (impulse control deficit) மற்றும் உணர்ச்சி செயலாக்க கோளாறுகள் அசாதாரண பாலியல் நடத்தைக்கு காரணமாக இருக்கலாம் என முன்வைக்கின்றன.

வகைப்பாடு

சில உளவியல் ஆராய்ச்சியாளர்கள் நெக்ரோபிலியாவை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்

  1. முதன்மை நெக்ரோபிலியா – பிரதான பாலியல் விருப்பம்
  2. வாய்ப்புச் சூழ்நிலை – கொலைக்குப் பிறகு
  3. திடீர் உந்துதல்
  4. கற்பனை மட்டுமே

சட்டப் பார்வை

மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் (post-mortem sexual act) என்பது சட்டரீதியாக மிகவும் கடுமையான விஷயம். இலங்கையில் இது குறித்து தனித்துப் “necrophilia” என்ற பெயரில் பிரிவு இல்லாவிட்டாலும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் தண்டனை சட்டத்தின் பிரகாரம்

(a) Section 365 – “Unnatural offences”

பழமையான பிரிவாக இருந்தாலும், மனித உடலுடன் இயற்கைக்கு மாறான பாலியல் செயல் மேற்கொண்டால் குற்றமாகப் பார்க்கப்படும். மரணமடைந்த நபருடன் நடந்த பாலியல் செயலும் இப்பிரிவின் பரப்பளவுக்குள் வரலாம்.

(b) Section 292 – Trespassing on burial places

கல்லறை அல்லது அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அவமதிக்கும், கல்லறையை சேதப்படுத்தும் அல்லது சடலத்தை அசட்டையாக கையாளும் செயல்கள் குற்றமாகும்.

(c) Section 346 – Causing disappearance of evidence

மரணத்திற்குப் பிந்தைய பாலியல் செயல், முன் நடந்த குற்றத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்டதாக இருந்தால், ஆதாரங்களை மறைத்தல்/மாற்றுதல் குற்றமும் சேர்க்கப்படும்.

சட்டரீதியான நிலைப்பாடு

  • மரணமடைந்த நபர் ஒப்புதல் வழங்க முடியாததால், இது “ஒப்புதல் இல்லாத செயல்” என கருதப்படும்.
  • மனித மரியாதை (human dignity) மரணத்திற்குப் பின்பும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது

நெக்ரோபிலியா என்பது மிகவும் அரிதான, கடுமையான மற்றும் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய பாராபிலிக் குறைபாடாகும். இது இயல்பான மனித பாலியல் நடத்தை அல்ல. இதன் பின்னணி உளவியல், நரம்பியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான ஒருங்கிணைப்பாகும். இந்நிலையைப் புரிந்து கொள்ளும் போது மருத்துவ அறிவு, நீதிமுறை உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை ஒன்றிணைந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் – ஏன்?

கடந்த சில நாட்களாக இலங்கையில் பெற்றோல், டீசல் போன்றவற்றிற்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புகின்றனர் இந்நிலையில் மோட்டார் சைக்கிள்கள் தாமாகவே தீப்பற்றி எரிந்த  சம்பவங்கள் நாட்டில் ஒரு சில பதிவாகியுள்ளன. இவ்வாறன நிலையில் ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன,அவற்றினை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

மோட்டார் சைக்கிளில் தீப்பற்றுவது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இது பெரும்பாலும் எரிபொருள் கசிவு, மின்சார குறுக்குச்சுழற்சி, இயந்திர அதிகவெப்பம், விபத்து அல்லது தீவைத்தல் போன்ற காரணங்களால் நிகழ்கிறது.

  1. முழு டேங்க் (Full Tank) நிரப்பினால் ஏன் தீப்பற்றலாம்?

மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்புவது சில சூழ்நிலைகளில் தீப்பற்றும் அபாயத்தை அதிகரிக்கலாம். இது பெரும்பாலும் வெப்பவிரிவு(Thermal Expansion), ஆவி உருவாகுதல்(Vapor Formation), அழுத்தம் அதிகரித்தல்(Pressure Build-up), மற்றும் கசிவு(Overflow) காரணமாக நடைபெறும். பெட்ரோல் (Gasoline) என்பது குறைந்த தீப்பற்றும் வெப்பநிலை (Low Flash Point) கொண்டது, அதிக ஆவியாகும் தன்மை உடையது, காற்றுடன் கலந்து எளிதில் வெடிப்பு கலவையை உருவாக்கக்கூடியது இதனால் சிறிய தீப்பொறியும் தீப்பற்றும் நிகழ்வைத் தூண்ட முடியும்

வெப்பவிரிவு மற்றும் அதன்விளைவு

ஒரு மோட்டார் சைக்கிள் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டால், அதன் உள்ளே காற்று இடைவெளி (ullage space) குறைந்து விடுகிறது. வெயிலில் நிறுத்தியபோது அல்லது இயந்திரம் இயக்கப்பட்டபோது டேங்க் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரிக்கும்போது பெட்ரோல் விரிவடைகிறது. விரிவடைய இடமில்லாததால் அது டேங்க் மூடியின் வழியாக Overflow குழாயின் வழியாக வெளியே கசியும் கசியும் பெட்ரோல் சூடான என்ஜின் அல்லது எக்ஸாஸ்ட் குழாயைத் தொட்டால் தீப்பற்றும்.

பெட்ரோல் ஆவி உருவாக்கம்

முழு டேங்கில் திரவ அளவு அதிகமாக இருப்பதால் வெப்பம் காரணமாக அதிக அளவு பெட்ரோல் ஆவி உருவாகும் அத்துடன் டேங்க் மூடியைத் திறக்கும் போது திடீரென ஆவி வெளியேறும். இந்த ஆவி ஸ்பார்க் பிளக், மின்சார குறுக்குச் சுழற்சி, நிலை மின்சாரம் (Static electricity) இவற்றுடன் தொடர்பு கொண்டால் உடனடி தீப்பற்றும்.

உள்ளழுத்தம் அதிகரித்தல்

மோட்டார் சைக்கிள் டேங்கில் காற்றோட்ட அமைப்பு (vent system) உள்ளது. அது அடைந்திருந்தால், சேதமடைந்திருந்தால் அல்லது டேங்க் மிக அதிகமாக நிரப்பப்பட்டிருந்தால் உள்ளே அழுத்தம் அதிகரித்து பெட்ரோல் பீறிட்டு வெளியேறலாம். இதனால் எரிபொருள் ஆவி மேகம் உருவாகி தீப்பற்றும் அபாயம் அதிகரிக்கும்.

2. எரிபொருள் கசிவு (Fuel Leakage)

மோட்டார் சைக்கிள் தீவிபத்துகளில் மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான காரணமாக எரிபொருள் கசிவு கருதப்படுகிறது. பெட்ரோல் மிகவும் ஆவியாகும் மற்றும் குறைந்த தீப்பற்றும் வெப்பநிலை (Low Flash Point) கொண்ட திரவமாக இருப்பதால், சிறிய தீப்பொறியும் தீவிபத்துக்குக் காரணமாகும். எனவே, எரிபொருள் கசிவு ஒரு சாதாரண இயந்திர கோளாறு மட்டுமல்ல; அது தீ மற்றும் உயிரிழப்புக்கான அபாய காரணியாகும்

எரிபொருள் கசிவு ஏற்படும் காரணங்கள்

1. எரிபொருள் குழாய்(Fuel Hose) சேதம்- பழைய ரப்பர் குழாய் கிழிதல், வெப்பத்தால் கடினமடைதல் – அதன் காரணமாக குழாய் முறிதல், தவறான பொருத்துதல் அல்லது இணைப்பு தளர்வு – முக்கியமாக ஓர் எரிபொருள் நிலையத்தில் நிரப்பிய பெற்ரோலினை டாங்கின் கீழ் உள்ள இணைப்பு குழாயினை கழற்றி பெற்ரோலினை வெளியே எடுத்து விட்டு மீண்டும் சரியான முறையில் இறுக்கமாக பொருத்தாமை

2. கார்புரேட்டர் / இன்ஜெக்டர் கோளாறுFloat valve செயலிழப்பு

3. பெட்ரோல் டேங்க் சேதம்- விபத்தில் டேங்க் உடைதல், துருப்பிடித்தல், வெல்டிங் குறைபாடு

3. இயந்திர அதிக வெப்பம்(Engine Overheating)

மோட்டார் சைக்கிள் தீவிபத்துகளுக்கான ஒரு முக்கிய காரணமாக இயந்திர அதிக வெப்பம்கருதப்படுகிறது. இயந்திரம் இயங்கும் போது எரிபொருள் எரிதல் மூலம் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பம் இயல்பாக குளிரூட்டும் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த அமைப்பில் கோளாறு ஏற்பட்டால் அல்லது இயந்திரம் நீண்ட நேரம் அதிக சுமையில் இயங்கினால், அதிக வெப்பம் உருவாகி தீப்பற்றும் சூழல் உருவாகலாம். முக்கியமாக சூழல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இன்றைய காலப்பகுதியில் இவ்வாறான தீப்பற்றுவதற்கான சந்தர்ப்பங்கள்  அதிகம் ஆகும்.

4. எண்ணெய் அல்லது எரிபொருள் கசிவு

முக்கியமாக இன்றைய காலப்பகுதியில் பிளாஸ்டிக் கான்களில் பெற்றோலினை மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் கொண்டு செல்லும் பொழுது அதில் இருந்து கசிவு ஏற்பட்டு பெற்றோல் சூடான சைலென்சரின் மீது விழுந்து தீப்பற்றலாம் அல்லது பெற்றோல் கானினை பின்புறத்தில் தொங்கவிடும் பொழுது அவை சூடான சைலன்சரில் பட்டு உருகி பெற்றோல் கசிந்து தீ விபத்து ஏற்படலாம்

5. எரிபொருள் நிரப்பும்போது சிந்துதல்

பொதுவாக மக்கள் டேங்க் முழுவதும் நிரப்புகிறார்கள், சிறிது பெட்ரோல் வெளியே சிந்துகிறது, உடனே வண்டியை இயக்குகிறார்கள் சிந்திய பெட்ரோல் சூடான சைலன்சரில் பட்டு அல்லது என்ஜினில் பட்டு  தீ விபத்து ஏற்படலாம்.

மோட்டார் சைக்கிளில் தீ விபத்தினை குறைத்தல்

  • டேங்க் முழுவதும் நிரப்பாமல் சிறிது இடைவெளி விடுதல்
  • நிரப்பும் பொழுது பெற்றோல் சிந்தினால் நிரப்பிய பின் உடனே இயக்காமல் சிறிது நேரம் காத்திருத்தல்
  • சிந்திய பெட்ரோலை துடைத்தல்
  • பிளாஸ்டிக் கொள்கலனில் அதுவும் பின்புற இருக்கையில் எரிபொருள் கொண்டு செல்வதனை நிறுத்துதல்

போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் தீ விபத்தைத் தவிர்க்க உதவும்.

ஆமணக்கு – ஒரு பக்கம் மருந்து, மறுபக்கம் மரண நஞ்சு!

சித்த மருத்துவத்தில், ஆமணக்கு எண்ணெய் மலச்சிக்கலை நீக்கும் இயற்கை மருந்தாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுப் புண், வாத நோய்கள், மூட்டு வலி, தோல் நோய்கள் போன்றவற்றில் இது உபயோகிக்கப்படுகிறது. சூடாக்கி தடவினால் நரம்பு வலி குறையும்; முடி வளர்ச்சிக்கும், தலையோட்டின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
ஆயுர்வேதத்தில், இது வாத தோஷத்தை சமப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது. உடலின் சுரங்கங்களை (srotas) சுத்தப்படுத்தி, ஜீரணத்தை மேம்படுத்துகிறது. Ricinoleic acid காரணமாக வீக்கம், வலி குறைக்கும் தன்மை கொண்டது. மூட்டு வலி, வாத நோய்கள், தோல் பிரச்சினைகள், சிறிய காயங்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஆமணக்கு எண்ணெய் பிரித்தெடுப்பின் பொழுது உருவாகும் ரைசின் நஞ்சு பற்றி இப்பதிவு விளக்குகின்றது

ஜார்ஜி மார்கோவ் (Georgi Markov) “குடை” கொலை வழக்கு என்பது பனிப்போர்க் காலத்தின் மிகவும் அதிர்ச்சியூட்டும் உளவுத்துறை சம்பவங்களில் ஒன்றாகும். இந்த வழக்கின் முக்கிய விவரங்கள் இதோ

  • சம்பவம்: செப்டம்பர் 7, 1978 அன்று லண்டனில் உள்ள வாட்டர்லூ பாலத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த மார்கோவ், தனது வலது தொடையில் ஏதோ குத்துவது போன்ற உணர்வைப் பெற்றார். பின்னால் திரும்பியபோது ஒரு நபர் குடையை எடுத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு ஒரு டாக்ஸியில் தப்பிச் சென்றார்.
  • பலி: ஜார்ஜி மார்கோவ் பல்கேரியாவின் கம்யூனிச ஆட்சியை விமர்சித்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். BBC World Service-ல் அவர் ஆற்றிய உரைகளுக்காக பல்கேரிய அரசால் குறிவைக்கப்பட்டார்.
  • கொலை ஆயுதம்: மார்கோவ் இறந்த பிறகு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது காலில் 1.52 மிமீ அளவுள்ள ஒரு சிறிய பிளாட்டினம் உருண்டை கண்டறியப்பட்டது. அதில் ரைசின் (Ricin) என்ற கொடிய விஷம் இருந்தது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட குடை,  வடிவமைக்கப்பட்ட ஒரு ரகசிய துப்பாக்கி ஆகும்.
  • குற்றவாளி: பல்கேரியாவின் ரகசிய ஏஜென்ட் “பிக்காடில்லி” (Piccadilly) – உண்மையான பெயர் பிரான்செஸ்கோ குல்லினோ (Francesco Gullino) – இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் மீது இறுதிவரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

ரைசின் (Ricin) விஷம்: அறிவியல் பின்னணி 

ரைசின் என்பது ஆமணக்கு விதைகளில் (Castor seeds) இருந்து பெறப்படும் ஒரு மிகக்கொடிய நச்சுப்புரதம் ஆகும்.

 

  • செயல்படும் விதம்: இது மனித செல்களுக்குள் சென்று புரத உற்பத்தியை (Protein synthesis) முற்றிலுமாகத் தடுக்கிறது. ஒரு சிறிய மூலக்கூறு ரைசின் ஒரு செல்லையே அழிக்கும் வல்லமை கொண்டது.
  • மரணத்திற்கான காரணம்: ஜார்ஜி மார்கோவ் உடலில் செலுத்தப்பட்ட சுமார் 500 மைக்ரோகிராம் (μg) ரைசின், அவரது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை (leukocytosis) பன்மடங்கு உயர்த்தியது. இதனால் அவருக்கு காய்ச்சல், வாந்தி, மற்றும் இறுதியில் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து மரணம் ஏற்பட்டது.
  • மருத்துவ சவால்: ரைசினுக்கு இன்றுவரை முறையான எதிர் மருந்து (Antidote) கிடையாது. இது உடலில் மிக விரைவாகச் சிதைவடைவதால், சாதாரண மருத்துவப் பரிசோதனைகளில் இதைக் கண்டறிவது மிகவும் கடினம்

நச்சியல் ரீதியாகப் பார்க்கும்போது, ஆமணக்கு விதையிலிருந்து (Castor seeds) தயாரிக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் பாதுகாப்பானது, ஆனால் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரைசின் (Ricin) மிகவும் கொடியது என்பதற்கு பின்வரும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன

1. கரைதிறன் வேறுபாடு (Solubility) 

  • ரைசின் என்பது நீரில் கரையக்கூடிய (Water-soluble) ஒரு புரதமாகும்.
  • ஆமணக்கு விதைகளை நசுக்கி எண்ணெய் எடுக்கும்போது, ரைசின் எண்ணெயுடன் கலக்காது. அது விதையின் கழிவுப் பகுதியிலேயே (Castor cake/mash) தங்கிவிடும். எனவே, தூய்மையான ஆமணக்கு எண்ணெயில் ரைசின் இருப்பதில்லை. 

2. வெப்பத்தினால் செயலிழத்தல் (Heat Inactivation)

  • ஆமணக்கு எண்ணெய் தயாரிக்கும்போது விதைகள் சூடுபடுத்தப்படுகின்றன. ரைசின் ஒரு புரதம் என்பதால், சுமார் 80°C வெப்பநிலையில் அது தனது நச்சுத்தன்மையை இழந்து சிதைந்துவிடும் (Denaturation).
  • இந்த வெப்பப்படுத்துதல் முறை எண்ணெயை முற்றிலும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. 

3. நச்சுத்தன்மை செயல்படும் விதம் (Mechanism of Toxicity)

  • ஆமணக்கு எண்ணெய்: இது குடலில் ரிசினோலியிக் அமிலம் (Ricinoleic acid) ஆக மாறுகிறது. இது குடலைத் தூண்டி மலமிளக்கியாக (Laxative) மட்டுமே செயல்படுகிறது, உயிரணுக்களை அழிப்பதில்லை.
  • ரைசின்: இது உயிரணுக்களுக்குள் நுழைந்து ரைபோசோம்களை (Ribosomes) செயலிழக்கச் செய்கிறது. இதனால் செல்கள் உயிர்வாழத் தேவையான புரதங்களை உருவாக்க முடியாமல் இறக்கின்றன. இதனால்தான் ஒரு மிகச்சிறிய அளவு ரைசின் கூட (உதாரணமாக மார்கோவ் வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய உருண்டை) மரணத்தை ஏற்படுத்துகிறது. 

சுருக்கமாகச் சொன்னால், ரைசின் ஒரு புரத நச்சு, அது எண்ணெயில் கரையாது மற்றும் வெப்பத்தால் அழியக்கூடியது. அதேசமயம் ஆமணக்கு எண்ணெய் என்பது ஒரு கொழுப்பு அமிலம், அதில் நச்சுத்தன்மை கிடையாது. எனவே உரிய முறைகளை பின்பற்றாது தாயாரிக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் விஷமாகலாம்.

உயிராபத்தினை ஏற்படுத்தும் நீர் வெறுப்பு நோய்

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, வீதியோரங்களில் உள்ள கட்டாக்காலி நாய்கள் கடித்ததால் அல்லாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் கடித்ததாலேயே இந்நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர். முன்பெல்லாம் தெருநாய்கள் மூலமே இந்நோய் பரவியது, ஆனால் தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் நாய்கள் மூலம் பரவுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களில் பூனை கீறல் மூலம் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் வெறுப்பு நோய் எவ்வாறு ஏற்படுகின்றது, எவ்வாறு பரவுகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

1.சொல்மயக்கம் –  நீர் வெறுப்பு நோய்?? விசர் நாய்க்கடி நோய்?? எது சரியானது

    பலரும் நினைப்பது போன்று நாய் கடித்தால் மட்டும் தான் நீர் வெறுப்பு நோய் உண்டாகும் என்பது உண்மையான விடயம் அல்ல. நாய், பூனை, கீரி … போன்ற பாலூட்டி விலங்கினங்கள் கடித்தால் அல்லது நகத்தினால் கீறினால் நீர் வெறுப்பு நோய்/ ரேபிஸ் உண்டாகலாம். எனவே வெறி நாய்க்கடி நோய் என்ற சொற்பதம் பொருத்தம் அற்றது. 

    2. நீர் வெறுப்பு நோய் நோய் (Rabies) என்றால்என்ன?

    நீர் வெறுப்பு நோய் நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கு கடிப்பதன் மூலம் பரவுகிறது. இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியவுடன், இது உயிருக்கு நிச்சயமான ஆபத்தை (மரணம்) விளைவிக்கும். இருப்பினும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன் முறையான மற்றும் உடனடித் தடுப்பு சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இதை 100% தடுக்க முடியும். இந்த வைரஸ் மனிதர்கள் உட்பட அனைத்து பாலூட்டிகளையும் தாக்கக்கூடியது. இது பாலூட்டிகளின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையில் கடுமையான வீக்கத்தை (Acute encephalitis) உண்டாக்கி மரணத்திற்கு வழிவகுக்கிறது.

    3. இலங்கையில் நீர் வெறுப்பு நோயின் தற்போதைய நிலை

    • இலங்கையில் நீர் வெறுப்பு நோய் ஒரு தொடர்ச்சியான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்நோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 25-30 என்ற அளவில் காணப்படுகிறது.
    • நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 250,000 விலங்கு கடிச் சம்பவங்கள் பதிவாகின்றன.
    • சுமார் 100,000 க்கும் அதிகமானோர் அரச மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி (ARV) மற்றும் நோய் எதிர்ப்புச் சீரம் (RIG) போன்ற சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

    4. எவ்வாறான விலங்குகள் கடிப்பதன் மூலம் நீர் வெறுப்பு நோய் உண்டாகும்

    நாய்கள், பூனைகள், நரிகள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உட்பட அனைத்து பாலூட்டிகளுக்கும் இந்நோய் வரலாம். பெருச்சாளிகள் (bandicoots) மூலமும் இது பரவக்கூடும்

    5. நீர் வெறுப்பு நோய் விலங்குகளிடம் காணப்படும் ஆரம்ப அறிகுறிகள்

    • நடத்தையில் மாற்றம்.
    • சோர்வு (Lethargy).
    • காய்ச்சல்.
    • உணவு மற்றும் தண்ணீரை மறுத்தல்.
    • விழுங்குவதில் சிரமம்.
    • வாந்தி, வயிற்றுப்போக்கு.
    • அதிகப்படியான எச்சில் வடிதல்.
    • அடிக்கடி மலம் அல்லது சிறுநீர் கழிக்க முயற்சித்தல்.
    • குரைக்கும் சத்தம் மாறுபடுதல்.
    • தாடை தொய்வடைதல் (Dropped jaw).

    6. நீர் வெறுப்பு நோய் நோயின் இரண்டு வகைகள்

    நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளிடம் நீர் வெறுப்பு நோய் இரண்டு வடிவங்களில் காணப்படும்

    1. தீவிரமானவடிவம்(Furious Form)

    இந்த வகை பாதிப்புள்ள விலங்குகள் பின்வரும் அறிகுறிகளைக் காட்டும்:

    • அதிகமான ஆக்ரோஷம் மற்றும் குரைத்தல்.
    • பயம் மற்றும் அமைதியற்ற தன்மை.
    • குறிக்கோளின்றி அங்கும் இங்கும் அலைதல்.
    • எதிரே தென்படும் எதையும் கடித்தல்.
    • உடலில் வலிப்பு ஏற்படுதல்.

    2. அமைதியானவடிவம்(Dumb Form)

    இந்த வகை பாதிப்புள்ள விலங்குகள் பின்வரும் அறிகுறிகளைக் காட்டும்:

    • குழப்பமான நிலையில் இருத்தல் மற்றும் தனிமையை நாடுதல் (மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல்).
    • உடல் உறுப்புகள் அல்லது கால்கள் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ செயலிழத்தல் (Paralysis), இதனால் நடக்க முடியாமல் போதல்.

    முக்கிய குறிப்பு: இந்த இரண்டு வகை நீர் வெறுப்பு நோய் பாதிப்புகளும் இறுதியில் விலங்கின் மரணத்திலேயே முடியும்.

    7. இந்நோய் எவ்வாறு பரவுகிறது?

    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீர் வெறுப்பு நோய்யால் பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர், கடி அல்லது பிறாண்டல் மூலம் உடலில் நுழையும்போது இந்த வைரஸ் பரவுகிறது.
    • ஏற்கனவே உள்ள காயங்கள் அல்லது சிராய்ப்புகளை விலங்கு நக்குவதன் மூலமோ, அல்லது கண்கள், வாய், மூக்கு போன்ற மென்மையான சவ்வுகளில் (Mucous membranes) உமிழ்நீர் படுவதன் மூலமோ பரவலாம்.
    • வைரஸ் கடித்த இடத்தில் உள்ள தசை செல்களில் பெருகி, பின்னர் நரம்புகள் வழியாக மத்திய நரம்பு மண்டலத்தை அடைகிறது. அங்கிருந்து இதயம், அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் போன்ற மற்ற உறுப்புகளுக்குப் பரவுகிறது.
    • அடைவு காலம் (Incubation period): கிருமி உடலில் நுழைந்து அறிகுறிகள் தோன்றுவதற்கு பொதுவாக 1 முதல் 3 மாதங்கள் எடுக்கும். சில நேரங்களில் இது ஒரு வாரத்திற்கும் குறைவாகவோ அல்லது அரிதாக ஒரு வருடத்திற்கு மேலாகவோ இருக்கலாம்.

     8. நீர் வெறுப்பு நோய் உடலினுள் ஏற்படுத்தும் மாற்றங்கள்

    நீர் வெறுப்பு நோய் வைரஸ் இரத்தத்தின் மூலம் பரவாது; இது நரம்புகள்வழியாகவே பயணிக்கிறது.

    1. விலங்கு கடித்த இடத்தில் தசை திசுக்களில் வைரஸ் முதலில் தங்கும்.
    2. பின்னர் அங்கிருந்து நரம்புகளை சென்றடைந்து, முதுகு தண்டுவடம் வழியாக மூளையை நோக்கி நகரும் (நாளுக்கு சுமார் 12-24 மி.மீ வேகத்தில்).
    3. மூளையை அடைந்ததும் கடுமையான அழற்சியை (Encephalitis) உண்டாக்கும்.

    மூளையிலிருந்து உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வைரஸ் மீண்டும் பரவுவதால், கடிபட்டவரின் உமிழ்நீரிலும் வைரஸ் வெளியேறத் தொடங்கும்.

    9. நீர் வெறுப்பு நோய் நோய்த்தொற்றுஏற்படும்அபாயமற்றசந்தர்ப்பங்கள்

    பின்வரும் சந்தர்ப்பங்கள் பொதுவாகத் தொற்று பாதிப்புடையவையாகக் கருதப்படுவதில்லை

    1. பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர் காயங்களற்ற தோலில் படுதல் (இருப்பினும் சோப்பு போட்டு கழுவுவது அவசியம்).
    2. விலங்கைக் கொஞ்சுதல், குளிப்பாட்டுதல் அல்லது அது பயன்படுத்திய பாத்திரங்களைத் தொடுதல்.
    3. விலங்கு உண்ட உணவின் எஞ்சிய பகுதியை உண்ணுதல்.
    4. விலங்கு விழுந்து இறந்த கிணற்று நீரைப் பருகுதல்.
    5. பாதிக்கப்பட்ட பசு அல்லது ஆட்டின் காய்ச்சாத பாலைக் குடித்தல் (இருப்பினும் இது தவிர்க்கப்பட வேண்டும்).
    6. ஊர்வன (பாம்பு, பல்லி), நீர்வீழ்வன மற்றும் பறவைகள் கொத்துதல்.
    7. வீட்டு எலிகள் கடித்தல்

    10. விலங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

    • காயத்தைக் கழுவுதல்: கடித்த இடத்தை உடனடியாக சோப்பு மற்றும் ஓடும் நீரைப் பயன்படுத்தி குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். இது காயத்தில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளை அகற்ற உதவும்.
    • கிடைக்கப்பெற்றால் 70% மதுசாரம் (alcohol solution) அல்லது போவிடோன்-அயோடின் (povidone-iodine) தடவவும்
    • இரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல்: காயத்திலிருந்து இரத்தம் வந்தால், சுத்தமான துணி அல்லது கட்டு பயன்படுத்தி அழுத்தவும்.
    • மருத்துவ உதவியை நாடுதல்: காயம் சிறியதாக இருந்தாலும், தாமதிக்காமல் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் காயத்தை மதிப்பீடு செய்து, தேவையான சிகிச்சைகள் மற்றும் நீர் வெறுப்பு நோய் தடுப்பு ஊசிகள் அல்லது டெட்டனஸ் ஷாட்கள் போன்றவற்றை பரிந்துரைப்பார் .
    • விலங்கைப் பற்றிய தகவல்கள்: முடிந்தால், கடித்த விலங்கின் வகை, அதன் உரிமையாளர் பற்றிய தகவல்கள் மற்றும் விலங்கின் தடுப்பூசி விவரங்களை மருத்துவரிடம் தெரிவிக்கவும். இது சிகிச்சை முறையை தீர்மானிக்க உதவும்.
    • விலங்கைக் கண்காணித்தல்:
      • இந்தக் கண்காணிப்பானது ஒரு பொறுப்பான மற்றும் விவேகமான நபரால் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியம்.
      • குறிப்பிட்ட அந்த விலங்கை 14 நாட்கள் முழுமையாகத் தினமும் கண்காணிக்க வேண்டும்.
      • விலங்கின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ, நோய் அறிகுறிகள் தென்பட்டாலோ, விலங்கு இறந்துவிட்டாலோ அல்லது காணாமல் போய்விட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
      • கடித்த விலங்குக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்காவிட்டால், 14 நாட்கள் கண்காணிப்புக் காலம் முடிந்தவுடன் அதற்கு உடனடியாகத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

    கண்காணிப்புக் காலத்தில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டால், தயக்கமின்றி உங்கள் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அல்லது பொது சுகாதாரப் பரிசோதகரைத் தொடர்பு கொள்ளவும்.

    •  நீர் வெறுப்பு நோய் அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப் பிடிப்பு, காயத்தைச் சுற்றி கூச்ச உணர்வு போன்ற ரேபீஸ் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
    • ஏனைய விலங்குகளுக்கான பாதுகாப்பு: நீர் வெறுப்பு நோய் உள்ள விலங்குடன் தொடர்பிலிருந்த ஏனைய விலங்குகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அந்த விலங்குகளுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்தால், உடனடியாக மீண்டும் ஒரு தடுப்பூசி (Revaccinated) போட்டு 45 நாட்கள் கண்காணிக்க வேண்டும்.

    11. நீர் வெறுப்பு நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

    இலங்கையில் நீர் வெறுப்பு நோய் பரவுவதற்கு முக்கியக் காரணியாக நாய்கள் விளங்குகின்றன. எனவே, நாய்கள் மூலம் பரவும் நீர் வெறுப்பு நோயை கட்டுப்படுத்துவதே மனிதர்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும்.

    • தடுப்பூசி செலுத்துதல்: இதுவே மிகச்சிறந்த தடுப்பு முறையாகும். அனைத்து நாய்களுக்கும் ஆண்டுதோறும் தடுப்பூசி போடப்பட வேண்டும். குட்டி நாய்களுக்குப் பிறந்து 4-6 வாரங்களுக்குள் முதல் தடுப்பூசியும், அதிலிருந்து 3 மாதங்களில் இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் ‘பூஸ்டர்’ (Booster) ஊசிகளைத் தொடர வேண்டும்.
    • பதிவேடுகளைப் பேணுதல்: செல்லப் பிராணிகள் (நாய்கள் மற்றும் பூனைகள்) தடுப்பூசி போட்டதற்கான அட்டவணையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். கடித்த சந்தர்ப்பங்களில் இதை மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம்.
    • சமூக நாய்கள் (Community Dogs): பாடசாலைகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் வாழும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அவற்றுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக சுகாதார அமைச்சின் (Ministry of Health) பிராந்திய MOH அலுவலகங்கள் நடத்தும் தடுப்பூசித் திட்டங்களைப் பயன்படுத்தலாம்.
    • பொறுப்பான வளர்ப்பு: தெரியாத அல்லது வீதியிலுள்ள நாய்க்குட்டிகளை வீட்டிற்கு கொண்டு வருவதைத் தவிர்க்கவும். வளர்ப்பு நாய்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தராத வகையில் வளர்க்கப்பட வேண்டும்.

    12. நீர் வெறுப்பு நோய் தொடர்பான சட்டவிதிமுறைகள்


    இலங்கையின் ரேபீஸ் கட்டளைச் சட்டம் (Rabies Ordinance) மற்றும் பொதுத் தொல்லைக் கட்டளைச் சட்டத்தின் (Nuisance Ordinance) படி, செல்லப் பிராணிகளால் பொதுமக்களுக்குச் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது உரிமையாளரின் சட்டபூர்வமான கடமையாகும். தவறும்பட்சத்தில் சிவில் மற்றும் குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கைகளுக்கு உரிமையாளர்கள் பொறுப்பாவார்கள்.

    விலங்கு கடித்தால் காயம் சிறியதா பெரியதா என்று பார்க்காமல் உடனடியாக அரச வைத்தியசாலையை அணுகுவது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும். இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் இதற்கான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன

    “சிறுவரில் ஒரு குற்றத்தினை  நிறுத்துவது என்பது  ஒரு உயிரை காப்பாற்றுவது”

    குற்றம் என்பது ஒரே நாளில் உருவாகும் முடிவு அல்ல; அது ஒரு நீண்ட பயணம். முதலில் ஒரு சிறிய குற்றம்  மூலம் தான் தொடர் குற்றம் மற்றும் பாரிய குற்றம் ஆரம்பம் ஆகின்றது . அந்த முதல் குற்றம் மனத்தில் உள்ள அறநெறி தடையை உடைத்து விடுகிறது. “நான் இதைச் செய்துவிட்டேன், ஒன்றும் ஆகவில்லை” என்ற எண்ணம் மனதில் பதிகின்றது. இதுவே முதல் படி ஒரு முறை தவறு செய்தால்,அடுத்த முறை செய்வது எளிதாகிறது. பின்னர் மனம் தன்னை நியாயப்படுத்த மனித மனம் (Cognitive Dissonance) பல காரணங்களை உருவாக்குகிறது. உதாரணமாக  “அது அவசியம் தான்”, “எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்கள்” என்று. இதனால் குற்றம்  → நியாயம் ஆகிறது. இதுவே மிக ஆபத்தான கட்டம்.

    தவறு செய்தவன், தன்னைப் புரிந்துகொள்ளும் மனிதர்களைத் தேடுவான். அப்போது தவறை ஊக்குவிப்பவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் நண்பர்களாக மாறுவார்கள் “நாம்தான் சரி – சமூகம் தான் தவறு” என்ற எண்ணம் உருவாகும். அடுத்து சமூகக் கற்றல் தொடங்குகிறது. ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்கள், இரகசிய உறவுகள், குற்றங்களை ஊக்குவிக்கும் உற்றார், உறவினர்கள் மற்றும் சமூகம் காரணமாக “நாம் vs சமூகம்” என்ற மனநிலை உருவாகிறது. சட்டப்படி வாழும் உலகம் வெளிப்புறமாக மாறுகிறது. பல நேரங்களில் இரண்டாவது குற்றம் லாபத்திற்காக அல்ல, முதல் குற்றத்தை மறைக்கவே செய்யப்படுகிறது.

    முதல் தடவை உரிய ஆவணம் இன்றி வாகனம் செலுத்துதல்  → பொலீசாரிடம் பிடிபடல்  → முதல் தடவை குற்றத்தில் இருந்து தப்ப பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்தல்  → எவ்வித குற்ற உணர்வும் இன்றி தொடர்ச்சியாக குற்றம் செய்தல் உருவாக்கப்படுகின்றது மற்றும் குற்றம் மறைக்கப்படுகின்றது. முதல் குற்றம் மறைக்க, இன்னொரு குற்றம் செய்ய வேண்டி வரும். இப்போது மனிதன் குற்றம் செய்கிறான் லாபத்திற்காக அல்ல – தப்பிக்க.

    Skinner கூறிய வலுவூட்டல் கோட்பாடு (Reinforcement Theory) படி, குற்றம் பலன் தரும் போது, தண்டனை தவிர்க்கப்படும் போது, மேலும் ஊரார், உறவினர் பாராட்டும் பொழுது அல்லது கவனிக்கப்படாமல் விடும் பொழுது அந்த குற்றங்கள் மீண்டும் மீண்டும் செய்யப்படும். குற்றம் → பலன் என்ற சமன்பாடு மனதில் பதிகிறது. சமூகத்தில் “குற்றவாளி” என்ற அடையாளம் ஒட்டப்பட்டால், வேலை வாய்ப்பு குறையும், மரியாதை இழக்கும். அதனால் “நான் ஏற்கனவே குற்றவாளி தான்” என்ற எண்ணம் வலுப்பெற்று, குற்றம் வாழ்க்கை முறையாகிறது. மேலும் குற்ற செயல்களினால் இலகுவாக உடல் வேதனையின்றி கிடைக்கும் வெகுமதி (பணம் அல்லது பொருள் ) மேலும் குற்ற செயல்களை செய்ய தூண்டும் . குற்றம் செய்து பணம் கிடைத்தால் தண்டனை வரவில்லை என்றால் மனம் கற்றுக்கொள்கிறது.“இது வேலை செய்யும் வழி” பயம் குறைகிறது துணிச்சல் அதிகரிக்கிறது.

    சிக்கிய திரும்ப முடியாதநிலை (Entrapment Stage)

    குற்றத்தினை நிறுத்தினால் வெளிப்படும் ஆபத்து, குற்றத்தினை தொடர்ந்தால் மட்டுமே பாதுகாப்பு என்ற மனநிலை உருவாகிறது. இப்போது குற்றம் பணத்திற்காக அல்ல, வாழ்வதற்காக செய்யப்படுகிறது. தொடர்ந்து குற்றம் செய்வதால் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன முக்கியமாக Amygdala மங்குகிறது, Dopamine அதிகரிக்கிறது, Prefrontal Cortex குறைகிறது. குற்றம் பழக்கமாகி, நரம்பியல் அடிமைத்தனமாகிறது. ஒரு கட்டத்தில் நிறுத்தினால் வெளிப்படுவேன் தொடர்ந்தால் தான் பாதுகாப்பு என்ற பயம் உருவாகும் அப்போது குற்றம் வாழ்க்கையாக மாறுகிறது.

    ஆனால் சிலர் தொடர் குற்ற உலகில் இருந்து வெளியே வருகிறார்கள். Hirschi கூறிய சமூக கட்டுப்பாட்டு கோட்பாட்டின் (Social Control Theory) படி, திருமணம், குழந்தை, பொறுப்பு, சமூக ஆதரவு ஆகியவை பிணைப்பை வலுப்படுத்தி குற்றத் தொடரினை உடைக்கின்றன. மாறாக சிலர் கடுமையான குற்றங்களுக்கு செல்கிறார்கள் அவர்களில் உணர்ச்சி மங்கல், குற்ற உணர்வு இல்லாமை, அதிகார ஆசை ஆகியவை வன்முறையை அதிகரிக்கின்றன.

    முடிவாக, குற்றம் என்பது ஒரே முடிவு அல்ல; அது ஒரு தொடர் வீழ்ச்சி. முதல் தவறு → நியாயப்படுத்தல் → சமூகச் சுற்றம் → மறைப்புக் குற்றங்கள் → அடையாள மாற்றம் → சிக்கிய நிலை என குற்றத் தொடர் உருவாகிறது.

    சமூகத்தின் பொறுப்பு

    ✅ ஆரம்பத்தில் கண்டித்தல்

    ✅ சரியான வழிகாட்டல்

    ✅ மாற்றத்திற்கான வாய்ப்பு

    ❌ கேலி செய்யாதீர்கள்

    ❌ நிரந்தரமாக ஒதுக்காதீர்கள்

    இதுவே குற்றங்களைத் தடுக்கும் உண்மையான வழி. தண்டனை மட்டும் போதாது ஆரம்பக் கட்டத்தில் தலையீடு அவசியம். ஒவ்வொரு பெரிய குற்றமும் ஒரு சிறிய தவறிலிருந்து தான் தொடங்குகிறது. அந்த முதல் தவறை நியாயப்படுத்தாதீர்கள் அத்துடன் சாதாரணமாக நினைக்காதீர்கள்.

    எப்ஸ்டீனின் மரணம்: தற்கொலையா? அல்லது கழுத்து நெரித்துக் கொலையா? சட்ட மருத்துவ பார்வையில் ஓர் அலசல்

    2026-ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, அமெரிக்க நீதித்துறைசுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை (Epstein Files) வெளியிட்டது. ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்’ கீழ் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்களில், ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் பயண விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதன் பின்னர் எப்ஸ்டீனின் மரணம் தொடர்பாக பல்வேறு வாத பிரதி வாதங்கள் இடம் பெற்று வருகின்றது. அவரது குடும்பத்தின் சார்பில் எப்ஸ்டீனின் பிரேத பரிசோதனையில் பங்குபற்றிய வைத்திய நிபுணர் எப்ஸ்டீனின் மரணம் கழுத்தை நெரிக்கப்பட்டதினால் ஏற்பட்ட மரணம் என கூறியுள்ளமை பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது இந்த நிலையில் எப்ஸ்டீனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது, மரணம் தற்கொலையா அல்லது கொலையா என இப்பதிவு விளக்குகின்றது .

    ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கைது செய்யப்பட்டது முதல் அவர் இறந்தது வரையிலான காலவரிசை இதோ:

    • ஜூலை 6: டெட்டர்போரோ (Teterboro) விமான நிலையத்தில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிறார்களை கடத்தியது மற்றும் பாலியல் குற்றச்சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • ஜூலை 10: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் இருந்ததாலும் சிறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் (Special Housing Unit – SHU) அடைத்தனர்.
    • ஜூலை 18: நீதிபதி எப்ஸ்டீனுக்கு பிணை வழங்க மறுத்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    • ஜூலை 23: எப்ஸ்டீன் கழுத்தில் படுக்கை விரிப்பு துணியுடன் மயங்கிக் கிடந்ததை காவலர்கள் கண்டனர்; உடனடியாக அவர் 24 மணிநேர “தற்கொலை கண்காணிப்பில்” (Suicide Watch) வைக்கப்பட்டார்.
    • ஜூலை 24: அவர் தற்கொலை கண்காணிப்பில் இருந்து நீக்கப்பட்டு, மனநல கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
    • ஜூலை 30: அவர் மீண்டும் பழைய தனிமைப்படுத்தப்பட்ட  பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு விதிகளின்படி அவருடன் மற்றொரு கைதி (Cellmate) தங்கியிருக்க வேண்டும்.
    • ஆகஸ்ட் 10 (காலை 6:39): நியூயார்க் டவுன்டவுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எப்ஸ்டீன், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்  
    • ஆகஸ்ட் 9 (காலை 8:00): எப்ஸ்டீனுடன் இருந்த கைதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் எப்ஸ்டீன் அறையில் தனியாக இருந்தார் (இது சிறை விதிமீறல் ஆகும்).
    • ஆகஸ்ட் 9 (இரவு 10:30): காவலர் கடைசியாக எப்ஸ்டீனின் அறைப் பகுதிக்குச் சென்ற நேரம் இதுவே. அதன்பின் அடுத்த நாள் காலை வரை யாரும் அங்கு செல்லவில்லை.
    • ஆகஸ்ட் 10 (நள்ளிரவு 12:00 – காலை 6:30): காவலர்கள் டோவா நோயல் மற்றும் மைக்கேல் தாமஸ் ஆகியோர் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் செய்ய வேண்டிய சோதனைகளைச் செய்யத் தவறினர். பின்னர் தாங்கள் பொய் கணக்கு எழுதியதை ஒப்புக்கொண்டனர்.
    • ஆகஸ்ட் 10 (காலை 6:30): எப்ஸ்டீன் தனது அறையில் படுக்கை விரிப்பால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் அசைவற்றுக் கிடப்பதை காவலர்கள் கண்டனர்.
    • ஆகஸ்ட் 10 (காலை 6:33): அபாய மணி ஒலிக்கப்பட்டது. தாங்கள் சோதனைகளைச் செய்யாமல் “தவறு செய்துவிட்டதாக” காவலர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    அதிகாரப்பூர்வ உடற்கூறாய்வு அறிக்கையின்படி, எப்ஸ்டீனின் மரணம் “தூக்கிட்டுத் தற்கொலை” (Suicide by hanging) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், எப்ஸ்டீன் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் பின்வரும் சந்தேகங்களை எழுப்பி  இது கொலையாக இருக்கலாம் என்று கூறுகின்றார் அந்த விவரங்கள் இதோ

    1. கழுத்து எலும்பு முறிவுகள் (Neck Fractures)

    எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன. குறிப்பாக, நாக்குக்கு அடியில் உள்ள ஹையாய்டு எலும்பு (Hyoid bone) மற்றும் தைராய்டு குருத்தெலும்பின் (Thyroid cartilage) இரண்டு பக்கங்களும் உடைந்திருந்தன.

    எப்ஸ்டீன் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் பேடன், தனது 50 ஆண்டு கால அனுபவத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒருவருக்கு இப்படி மூன்று எலும்புகள் உடைவதை தான் பார்த்ததில்லை என்று கூறினார். இது ஒருவரை கழுத்தை நெரித்துக் கொல்லும் போது (Homicidal strangulation) ஏற்படும் காயம் போன்றே இருப்பதாக அவர் வாதிடுகின்றார்.

    மேலும் அவர் வாதிடும் பொழுது,  எப்ஸ்டினின் உடல் கால் தரையினை தொடும் படி இருந்த நிலையிலேயே அதாவது பகுதியளவிலான தூக்கில் தொங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டது. இதில் பகுதியளவான உடல் நிலையே கழுத்தில் நெருக்கும் விசையினை உஞற்றும் இதன் காரணமாக கழுத்து எலும்புகள் உடைவதற்கான சாத்தியக்கூறு குறைவாக இருக்கும்

     

    2. கழுத்தில் இருந்த தழும்பு (Ligature Mark)

    பொதுவாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு, கயிறு தாடைக்குக் கீழே மேல்நோக்கிச் செல்லும். ஆனால், எப்ஸ்டீனின் கழுத்தில் படுக்கை விரிப்பால் ஏற்பட்ட தழும்பு, கழுத்தின் நடுப்பகுதியில் நேராக இருந்தது. ஒருவரை கயிறு அல்லது கம்பியால் பின்னால் இருந்து நெரித்துக் கொல்லும் போதுதான் தழும்பு கழுத்தின் நடுவே நேராக அமையும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

    3. உயிரியல் ஆதாரங்கள் இல்லாமை (Lack of Evidence)

    எப்ஸ்டீனின் கழுத்தில் ரத்தக் கறைகள் இருந்தன, ஆனால் அவர் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் படுக்கை விரிப்பில் ரத்தக் கறைகள் இல்லை. இது அந்த விரிப்புதான் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியது.

    சட்ட மருத்துவ விளக்கம்

    1.கழுத்து எலும்புகள் ஏன் முறிந்தன

      வயது முதிர்ந்தவர்களுக்கு (எப்ஸ்டீனுக்கு 66 வயது) கழுத்து எலும்புகள் பலவீனமாக இருப்பதால், தற்கொலை செய்து கொள்ளும்போதும் அரிதான நிகழ்வாக இத்தகைய முறிவுகள் ஏற்படலாம். மேலும் வயதாகும் பொழுது கழுத்தில் உள்ள மேற்குறித்த கசி இலைய எலும்புகள் கல்சியம் படிவடைவதன் காரணமாக எலும்பாக மாற்றமடையும் இந்நிலையில் இவை இலகுவாக முறிவடையலாம்

      2. போராட்டத்திற்கான அறிகுறிகள் இல்லை (No Defensive Wounds)

      எப்ஸ்டீனின் கைகளில் காயங்களோ, நகங்கள் உடைந்தோ அல்லது அவர் யாரையாவது தாக்கியதற்கான அடையாளங்களோ இல்லை.  

      3. இரத்த பரிசோதனை முடிவுகள்

      இரத்த பரிசோதனையின் பொழுது அவர் உடலில் மயக்க மருந்துகளோ அல்லது விஷமோ கொடுக்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை.

      எனவே, ஒரு போராட்டமின்றி அவரைக் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்று விசாரணை அமைப்பு (FBI) முடிவு செய்தது.சிறையில் கேமராக்கள் வேலை செய்யாதது மற்றும் காவலர்கள் தூங்கியது போன்ற பல குளறுபடிகள் இருந்தாலும், உடற்கூறாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இது தற்கொலை என்றே இறுதி செய்யப்பட்டது.

      ஒரு சிறிய குண்டு… எப்படி உயிரைக் கணநேரத்தில் பறிக்கிறது?

      சின்னம் சிறிய துப்பாக்கி சன்னம் உடலில்படும் பொழுது அது தனது அளவில் தான் காயத்தினை உருவாக்கும் என்பது தான் பலரின் எடுகோளாகும். உண்மையில் அவ்வாறல்ல. ஓர் அதிவேக துப்பாக்கி சன்னம் உடலின் ஊடாக செல்லும் பொழுது தனது பருமனிலும் பார்க்க பலமடங்கு காயத்தினை உடல் உள்ளுறுப்புக்களில் ஏற்படுத்துகின்றது இதன் காரணமாகவே துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் அநேகமாக இறப்பு அல்லது அவயவ இழப்புக்கள் நடைபெறுகின்றது. ஓர் சிறிய துப்பாக்கி சன்னம் எவ்வாறு உடலில் பாரிய காயத்தினை உண்டாக்கின்றது? எப்படி உயிரைக் கணநேரத்தில் பறிக்கிறது?

      சிறிய துப்பாக்கி குண்டுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த விரிவான விளக்கம் இதோ

      1. இயக்க ஆற்றல் (Kinetic Energy) 

      துப்பாக்கி குண்டின் அழிவுத்திறன் அதன் எடையை விட, அதன் வேகத்தைச் (Velocity) சார்ந்தே அமைகிறது. 

      • விதி: இயக்க ஆற்றல் = ½ × நிறை × (வேகம்)².
      • இதன் பொருள், ஒரு குண்டின் வேகம் இரண்டு மடங்கானால், அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு நான்கு மடங்கு அதிகரிக்கும். சிறிய குண்டுகள் மிக அதிக வேகத்தில் (High-velocity) பாய்வதால், அவை உடலில் ஊடுருவும்போது அபாரமான ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. 

      2. குழிப்பாதைகள் (Cavitation)

      உடலுக்குள் குண்டு செல்லும்போது இரண்டு வகையான குழிகளை அல்லது பாதைகளை உருவாக்குகிறது:

      • நிரந்தரக் குழி (Permanent Cavitation): குண்டு நேரடியாகத் திசுக்களை நசுக்கி, கிழித்துச் செல்லும் பாதை. இது குண்டின் அளவை விட சற்றே பெரியதாக இருக்கும்.
      • தற்காலிகக் குழி (Temporary Cavitation): குண்டு அதிவேகமாகச் செல்லும்போது ஏற்படும் அழுத்த அலைகளால் (Shock waves), சுற்றியுள்ள திசுக்கள் பக்கவாட்டில் வேகமாகத் தள்ளப்படுகின்றன. இது ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிடும் என்றாலும், இந்த விரிவு குண்டின் அளவை விட 10 முதல் 30 மடங்கு பெரியதாக இருக்கும். இது ரப்பர் பேண்டை இழுப்பது போல திசுக்களை இழுத்துத் tearing (கிழித்தல்) காயங்களை உண்டாக்குகிறது.

      3. குண்டு சிதறுதல் மற்றும் சுழலுதல்

      • தடுமாற்றம் (Tumbling/Yawing): காற்றில் நேராகச் செல்லும் குண்டு, அடர்த்தியான உடல் திசுக்களில் பட்டவுடன் நிலைதடுமாறி சுழலத் தொடங்கும். குண்டு பக்கவாட்டில் சுழன்று செல்லும்போது, அது அதிகப்படியான திசுக்களைச் சேதப்படுத்தி பெரிய காயத்தை உருவாக்குகிறது.
      • சிதறுதல் (Fragmentation): சில சிறிய குண்டுகள் (உதாரணமாக 5.56 மிமீ) உடலில் பட்டவுடன் பல துண்டுகளாகச் சிதறும். இந்த ஒவ்வொரு துண்டும் ஒரு தனித்தனி குண்டு போலச் செயல்பட்டு, வெவ்வேறு திசைகளில் உள்உறுப்புகளைக் கிழிக்கும். 

      4. உறுப்புகளின் தன்மைக்கேற்ப பாதிப்புகள்

      உடலின் எல்லா உறுப்புகளும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படுவதில்லை

      • மீள்சக்தி கொண்ட உறுப்புகள் (Elastic Organs): நுரையீரல் மற்றும் தசைகள் ரப்பர் போன்ற தன்மை கொண்டவை. இவை தற்காலிகக் குழி விரிவடையும்போது சற்றே விரிந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்பதால், இவற்றில் பாதிப்பு ஓரளவுக்குக் குறைவாக இருக்கும்.
      • திடமான உறுப்புகள் (Inelastic Organs): கல்லீரல் (Liver), மண்ணீரல் (Spleen) மற்றும் மூளை (Brain) போன்றவை மென்மையானவை அல்ல. இவை விரிவடையும் தன்மையற்றவை என்பதால், குண்டின் அழுத்த அலைகள் பட்டவுடன் ஒரு கண்ணாடி சிதறுவது போல சிதைந்துவிடும். 
      ஈரல் மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் வந்த துப்பாக்கி சூட்டு காயத்தின் தீவிரத்தன்மை

      5. எலும்பு முறிவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் துண்டுகள்

      குண்டு எலும்பில் மோதும்போது, எலும்பு பல துண்டுகளாக உடையும். அந்த உடைந்த கூர்மையான எலும்புத் துண்டுகள் துப்பாக்கி குண்டைப் போலவே அதிவேகத்தில் மற்ற உள்உறுப்புகளைக் கிழித்துச் செல்லும். இது ‘Secondary Missiles’ என்று அழைக்கப்படுகிறது. 

      எனவேதான்  இத்தகைய காயங்கள் காரணமாகத் தீவிர இரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு உடனடியான உயிரிழப்பு ஏற்படும்.

      உடல் அரிப்பினை நீக்க கருவிகளை பயன்படுத்தும் நவீன பசு

      வேரோனிகா (Veronika) என்ற 13 வயது பசு, ஆஸ்திரியாவில் ஒரு செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. இது கருவிகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் பசு என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வேரோனிகா குச்சிகள், துடைப்பங்கள் மற்றும் பிரஷ்களைப் பயன்படுத்தி தனது உடலில் அரிப்பு ஏற்படும் இடங்களைத் தேய்த்துக் கொள்கிறது.  கடினமான தோலுக்கு பிரஷ் பகுதியையும், மென்மையான வயிற்றுப் பகுதிக்கு அதன் கைப்பிடிப் பகுதியையும் மாற்றிப் பயன்படுத்தும் புத்திசாலித்தனம் இதற்கு உள்ளது.

      இது தற்செயலானது அல்ல, திட்டமிட்டு செய்யப்படும் செயல் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தனது நாக்கைச் சுருட்டிப் பிடித்து கருவிகளைக் கையாள்வதில் இது அதிகத் திறமை பெற்றுள்ளது. இது சிம்பன்சிகள் மற்றும் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு மேம்பட்ட அறிவாற்றல் நிலையைக் காட்டுகிறது.

      பண்டைய காலத்தில் ஆவுரஞ்சிக் கல்லின் பயன்பாடு

      சங்க இலக்கியங்களில் ஆவுரஞ்சிக் கல் (ஆதீண்டு குற்றி) பற்றிய நேரடி மற்றும் மறைமுகக் குறிப்புகள் தமிழர்களின் கால்நடைப் பண்பாட்டையும், அறச்சிந்தனையையும் பறைசாற்றுகின்றன. “ஆ” என்றால் பசு, “உரோஞ்சுதல்” என்றால் உரசுதல் என்று பொருள். மாடுகள் தண்ணீர் குடித்த பிறகு அல்லது மேய்ந்து முடித்த பின் ஏற்படும் “தினவு” (அரிப்பு) போக்க இந்தக் கற்களைப் பயன்படுத்தியதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

      பண்டைய தமிழகத்தில் செய்யப்பட்ட 32 வகைஅறங்களில் ஒன்றாக இது போற்றப்பட்டது. விலங்குகளின் உடல் அரிப்பை நீக்குவதற்காகக் கல்லினை நட்டு வைப்பது ஒரு நற்செயலாகக் கருதப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

      சங்க இலக்கியச் சான்றுகள்

      1. பொருநராற்றுப்படை: கரிகால் வளவனின் கொடைத்திறம் மற்றும் நாட்டின் வளத்தைச் சொல்லும்போது, பசுக்கள் தங்களை உராய்ந்து கொள்ளும் வகையில் தூண்கள் (ஆதீண்டு குற்றி) அமைக்கப்பட்டிருந்ததை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இது ஒரு நாட்டின் செழிப்பிற்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது.
      2. பத்துப்பாட்டு: பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை மற்றும் மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் ஊர் மந்தைகளில் மாடுகள் ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் அவை உராய்ந்து கொள்ளும் கற்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
      3. தொல்காப்பியம்: தொல்காப்பியத்தின் புறத்திணையியலில், பசுக்களைக் கவர்தல் (வெட்சி) மற்றும் மீட்டல் (கரந்தை) போன்ற செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆநிரைகளே செல்வமாகக் கருதப்பட்ட அக்காலத்தில், அவற்றின் நலனுக்காகச் செய்யப்பட்ட அறங்களில் ஆவுரஞ்சிக் கல்லும் ஒன்று.
      4. சிலப்பதிகாரம்: ஐயை வழிபாட்டின் போது “ஆதீண்டு குற்றி” அல்லது மாடுகள் உராய்ந்து கொள்ளும் தூண்கள் பற்றி இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

      ஆவுரஞ்சிக் கல் வடிவம் மற்றும் அமைவிடம்

      இவை பொதுவாக 3 முதல் 4 அடி உயரமுள்ள, வழவழப்பான மேற்பரப்பைக் கொண்ட கருங்கல் தூண்களாக இருக்கும். பல நூற்றாண்டுகளாக மாடுகள் உராய்ந்ததால் இவை தேய்ந்து மெருகேறி இருக்கும். சில கற்களில் தர்மம் செய்தவரின் பெயரோ அல்லது குறியீடுகளோ செதுக்கப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் பழைய ஊர் மந்தைகள், நீர் நிலைகள் அல்லது மாடுகள் கூடும் பொது இடங்களில் இவை காணப்படுகின்றன. சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் (கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர்) சங்க கால மக்களின் மேய்ச்சல் நிலப் பண்பாட்டையும், விலங்குகள் மீதான அவர்களின் அக்கறையையும் வெளிப்படுத்துகின்றன.

      மாடுகள் ஏன் உடலைத் தேய்க்கின்றன? (Ethological explanation)

      மாடுகள் கல், மரம், தூண் போன்ற பொருட்களில் தங்கள் உடலை அடிக்கடி தேய்ப்பதை நாம் பொதுவாகக் காணலாம். இந்த நடத்தை (self-grooming behaviour) ஒரு சாதாரண செயல் போல தோன்றினாலும், அதற்கு பின்னால் பலஉடல் சார்ந்த (physiological) மற்றும்நடத்தை சார்ந்த (ethological) காரணங்கள் உள்ளன. இந்த நடத்தை மாடுகளின் உடல் ஆரோக்கியம், தோல் பாதுகாப்பு மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணி கட்டுப்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

      1. அரிப்பு (Pruritus)

      மாடுகளில் உடலைத் தேய்க்கும் மிக முக்கியமான காரணம்அரிப்பு உணர்வுஆகும். தோலில்உண்ணி (ticks), பேன் (lice), ஈபோன்ற வெளிப்புறஒட்டுண்ணி இவை இருப்பதால், தோலில் histamine release ஏற்படுகிறது. இதன் விளைவாக, மாடுகளுக்கு அரிப்பு உணர்வு உண்டாகிறது.

      இந்த அரிப்பை குறைக்க, மாடுகள் கல் அல்லது மரம் மீது உடலைத் தேய்க்கின்றன. தேய்த்தல் மூலம்sensory relief கிடைக்கிறது.இந்த செயல் ஒரு reflex behaviour ஆக தொடங்கி, பின்னர் அனுபவத்தின் மூலம் உருவாகும் learned behaviour ஆக மாறுகிறது.

      2. முடி உதிர்வு (Shedding behaviour)

      பருவமாற்ற காலங்களில், குறிப்பாககோடை காலத்தில், மாடுகளின் பழைய முடி உதிரத் தொடங்கும். இந்த பழைய முடிகளை அகற்றஉடலைத் தேய்க்கும் நடத்தை காணப்படுகிறது.இந்த செயல் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும், புதிய முடி வளர்ச்சிக்கு உதவவும் செய்கிறது.

      3. தோல் தூண்டல் (Cutaneous stimulation)

      உடலைத் தேய்ப்பதன் மூலம் தோலில் ஒரு வகையான mechanical stimulation ஏற்படுகிறது. இதன் விளைவாக:

      • தோலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்
      • Sebaceous glands செயல்பாடு தூண்டப்படும்
      • சுரக்கும் எண்ணெய் (sebum) தோலில் சமமாகப் பரவும்

      இதனால் தோல் வறட்சியின்றி பாதுகாக்கப்பட்டு, மொத்த தோல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

      4. ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை  குறைத்தல்

      மாடுகள் தொடர்ந்து உடலைத் தேய்ப்பதால்

      • வெளிப்புற ஒட்டுண்ணிகள்  அகற்றப்படுகின்றன
      • ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை (parasite load) குறைகிறது

      இது இரசாயன மருந்துகள் இன்றி நடைபெறும் ஓர் இயற்கை மருத்துவம் ஆகும்.

      இயைவாக்கம் மற்றும் கூர்ப்பு

      ஆவுரஞ்சிக் கல் என்பது மாடுகளின் அரிப்பைத் தீர்க்க மனிதன் செய்த உதவி. ஆனால் வேரோனிகா, மனித உதவி இன்றித் தானே ஒரு பொருளைக் கருவியாக மாற்றித் தன் அரிப்பைத் தீர்த்துக்கொண்டது வியப்பான பரிணாம வளர்ச்சியாகும்.

      பொதுவாக சிம்பன்சிகள், காகங்கள் மற்றும் யானைகளிடம் மட்டுமே காணப்படும் “கருவி பயன்படுத்தும் திறன்” ஒரு பசுவிடம் நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

      வேரோனிகா ஒரு பண்ணை விலங்காக இல்லாமல், செல்லப்பிராணியாக 13 ஆண்டுகள் சுதந்திரமான சூழலில் வாழ்ந்ததால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள இதற்கு வாய்ப்பு கிடைத்ததாக The Guardian இதழ் குறிப்பிடுகிறது.

      உயிரினங்களின் இயைவாக்கம் (Adaptation) மற்றும் கூர்ப்பு (Evolution) ஆகிய இரண்டிலும் சூழல் காரணிகள் (Environmental Factors) மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இவை இயற்கைத்தேர்வினை (Natural Selection) தீர்மானிப்பதன் மூலம் உயிரினங்களில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. சாதாரணமாக ஓர் பசுவிற்கு உடல் அரிப்பினை போக்குவதற்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதவிடத்து அவை மாற்று வழிகள் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ள விளையும் என்பதே இயற்கையின் வழிகாட்டுதல் ஆகும்.

      நன்றி