அதீத மது போதையும் தீடீர் மரணமும்

அண்மையில் இரவில் நடந்த மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவன் அடுத்த நாட்காலை தீடீரென்று மரணத்தினை தழுவிய செய்தி எல்லோருடைய மனதையும் ஒருகணம் பதற வைத்தது. பலருக்கு ஏன் இவ்வாறான தீடீர் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி தெரியாது. இப்பதிவில் அதிகளவு மதுபான பாவனை எவ்வாறு தீடீர் மரணத்திற்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றேன்.

  1. நாம் மதுபானம் அருந்தும் பொழுது அது எமது இரத்தத்தில் எதைல் ஆல்கஹாலின் அளவு படிப்படியாக அதிகரித்து செல்லும். இவ்வாறு செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் அது குறித்த நடத்தை கோலங்களினை மது அருத்துபவரில் ஏற்படுத்தும். உதாரணமாக 50mg/dl என்ற அளவில் உள்ளபொழுது அது மது அருந்துபவரில் அதிகம் கதைக்கும் தன்மை, சுயநிலை மறந்த தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். இவ்வாறே படிப்படியாக அதிகரித்து 250mg/dl என்ற அளவினை அடையும் பொழுது மயக்கம் மற்றும் கோமா நிலை போன்றவற்றினை ஏற்படுத்தும். 300mg/dl என்ற அளவினை தாண்டும் பொழுது அது ஆல்கஹால் நஞ்சு (Acute alcohol intoxication) ஆதலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.
  2. மதுபானமானது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களினை உண்டாக்கும். அவற்றில் முக்கியமானது உணவு விழுங்கும் ஆற்றலினை பாதித்தல் ஆகும். இதன்காரணமாக அதிக மது அருந்திக்கொண்டு உணவு அருந்துபவர்களில் உண்ணும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம் அல்லது வாந்தி எடுக்கும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம். இவ்வாறு புரைக்கேறுவதினால் மது அருந்துபவர் திடீர் மரணம் அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
  3. அருந்தும் மதுவின் அளவினையும் அவர்கள் அதற்கு எடுக்கும் கால இடைவெளியினையும் வைத்து மது அருந்துபவர்களினை அவர்களினை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவர்களின் ஒருவகையினர் தான் Binge drinker (heavy episodic drinker) இவர்கள் யார் என்றால் நாளாந்தம் மது அருந்தாமல் குறித்த சில நாட்களில் மிக அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள். இவர்களை வரைவிலக்கணப்படுத்த பல்வேறு வரைவிலக்கணங்கள் மருத்துவரீதியில் உண்டு. இவர்கள் இவ்வாறு அளவுக்கு அதிகமாக மது அருந்தி சில மணித்தியாலங்களில் அவர்களின் இருதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக (sudden arrhythmic death syndrome (SADS)) மாறும் அதாவது சாதாரண மனிதன் ஒருவனுக்கு சராசரியாக நிமிடத்திற்கு 72 துடிப்புக்கள் என்று காணப்பட்ட இருதய துடிப்பு அதிகரித்து அதன் ரிதம் மாற்றமடையும் இதனால் மது அருந்தியவருக்கு மயக்கம், தலைச்சுற்று போன்றன ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படலாம்.
  4. மேலும் அதீத போதையில் மது அருந்தியவர் தன்னிலை மறந்து நீண்டநேரம் மனித உடலின் நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழ் உள்ளவாறும் கால்ப்பகுதிமேலே உள்ளவாறும் தூங்குவார்கள் அதாவது கட்டில் அல்லது கதிரையில் இருந்து நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழே விழுந்த நிலையில், இவ்வாறு இவர்கள் ஏறத்தாழ தலைகீழாக அதிக நேரம் தூங்கும் பொழுது அவர்களின் வயிற்றில் உள்ள அங்கங்கள் நெஞ்சு பகுதியினை அமுக்குவதினால் மூச்சு விட சிரமப்பட்டு இறப்பார்கள். இவ்வாறான இறப்புக்கள் சட்ட மருத்துவத்தில் positional asphyxia deaths என்றழைக்கப்படும்.456
  5. அதீத மது போதையில் உள்ளவர்கள் வீதி விபத்துகளில் சிக்கியும், உயரமான கட்டிடங்களில் இருந்து தவறி வீழ்ந்தும், நீரில் மூழ்கியும் திடீர் மரணங்களை சந்தித்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
  6. மது அருந்த தொடங்கும் பொழுது நண்பர்களாக அருந்த தொடங்கியவர்கள், சிறிது நேரம் செல்ல போதையில் ஒருவரை ஒருவர் அடித்து கொலை செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.
  7. ஒருவர் நீண்ட காலமாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருக்கும் பொழுது அவர்களின் உடலில் பல்வேறுபட்ட நோய் நிலைகள் ஏற்படலாம். குறிப்பாக ஈரல் பழுதடைந்தல் (Cirrhosis), உணவு விழுங்கும் களத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் வரிக்கோசுநாளத்தில் ஏற்படும் வெடிப்பினால் ஏற்படும் குருதிப்பெருக்கு (esophageal varicieal bleeding), இதயத்தின் செயற்பாடு குறைதல்(cardiomyopathy) போன்றன ஏற்படலாம். மேற்குறித்த நோய் நிலைகள் திடீர் மரணங்களினை ஏற்படுத்தலாம்.
  8. பொதுவாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருப்பவர்கள் தற்கொலைக்கு முன்பாக அதிக மது அருந்திய நிலையிலேயே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அதீத மது போதை பல்வேறுபட்ட வழிகளில் திடீர் மரணங்களினை விளைவிக்கின்றது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.