அன்று காலையில் இருந்தே பல தொலை பேசி அழைப்புக்கள், அவை யாவும் ஒரு இளைஞனின் மரணத்துடன் தொடர்பானது. தொடர்பு கொண்டவர்கள் எல்லோரும் சொன்னார்கள், இது ஓர் சந்தேகத்திற்குரிய மரணம் ஆதலால் நன்றாக ஆராய்ந்து தீர்மானிக்கும் படி. நானும் அந்த குற்றம் நடைபெற்ற பிரதேசத்தினை போலீசாரின் உதவியுடன் சென்றடைந்தேன். அது ஓர் கட்டிட தொகுதியின் பின்புறம் உள்ள ஓர் சிறிய வெளி. அதில் ஓர் மரம் அதில் தான் அவனது உடல் தூங்கிக் கொண்டிருந்தது. நான் சென்ற உடனேயே அங்கு கூடி இருந்தவர்கள் சொன்னார்கள் அவனின் தலையினை பார்க்கும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். நானும் அவதானித்தேன் அவனது தலை மற்றும் முகம் ஓர் தடித்த துணியினால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் தூக்கினை மாட்டுவதற்கு எந்தவொரு ஓர் உபகரணமும் இல்லை மேலும் சம்பவம் நடைபெற்ற பிரதேசம் ஓர் திறந்த வெளி. இவை நிலைமையினை மேலும் சிக்கலாக்கியது. கூட இருந்த உறவினர்களின் குற்றசாட்டு அவன் முகத்தில் துணி போடப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் தான் தூக்கிலிடப்பட்டான் என்பது ஆகும்.
குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலன் விசாரணைகளும் உடற் கூராய்வு பரிசோதனை முடிவுகளும் எதுவிதமான கொலை நடைபெற்றமைக்கான எதுவிதமான சாதகமான முடிவுகளையும் காட்டவில்லை. அவ்வாறே இரத்த மற்றும் சல பரிசோதனைகளும் எதுவிதமான கொலை நடைபெற்றமைக்கான சாதக முடிவுகளையும் காட்டவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தான் இறந்தவரின் உளவியல் உடற் கூராய்வு (psychological autopsy) பரிசோதனை தகுதி வாய்ந்த சட்ட மருத்துவ மனோதத்துவ நிபுணர்களினால் (Forensic psychiatrist) நடத்தப்பட்டது. இதற்காக இறந்தவரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன் இறந்தவரின் தொலை பேசி கலந்துரையாடல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முடிவாக நிபுணர்களின் குழு இறந்தவர் மரணத்துக்கு பயந்து தான் முகத்தினை மூடிக்கொண்டு தூக்கில் தொங்கினார் என்று கூறியது. இவ்வாறே சிலசந்தர்ப்பங்களில் வாயினுள் துணி போன்றவற்றினை அடைந்து கொண்டும் தொங்குவார்கள் ஏன்னெனில் சத்தம் வெளியில் வருவதனை தடுப்பதற்கு என்ற மனோவியலே காரணம் .
முற்றும்

