இன்றைய நாட்களில் தமிழர் பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு தற்கொலை மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் பதின்ம வயதினர் தொடக்கம் முதியவர்கள் வரை உள்ளடங்குகின்றனர். தற்கொலை முயற்சியின் பொழுது பலர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்யும் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் காரணங்கள் பெரும்பாலும் அற்பத்தனமானவை. ஒருவர் தற்கொலை செய்தவுடன் சமூக ஊடகங்கள், உற்றார் மற்றும் உறவினர் குறித்த காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கருதுவார்கள். இங்குதான் நாம் தோல்வி அடைகின்றோம் அல்லது பிழையான திசையில் பயணிக்கின்றோம் ஏனெனில் ஓர் தற்கொலைக்கு பல்வேறுபட்ட ( தனிநபர், சமூக, கலாச்சார மற்றும் குடும்ப) காரணிகள் ஏதுவாகின்றன அவ்வாறான நிலையில் நாம் காரணி ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு திருப்தி அடைகின்றோம். மேலும் ஓர் தற்கொலை மரணம் நிகழும் இடத்து அதனை விரிவாக ஆராய்ந்து அவ்வாறான தற்கொலை மரணங்களை தடுக்கும் பொறிமுறை ஒன்று இலங்கையில் உருவாக்கப்படவில்லை இவ்வாறான காரணங்களினால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் எதிர்காலத்தில் அதிகரித்து செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவேதான் நாம் சிறுவர் பராயத்தில் இருந்தே அவர்களின் மனதில் மனவைராக்கியத்தினை வளர்க்க வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர், மதகுருமார் , சமூகத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

பெற்றோர்கள் சிறுவயதுமுதலே தமது பிள்ளைகளை சிறிதளவேனும் கடின முயற்சிகளில் ஈடுபட விடல், விளையாட்டில் ஈடுபட அனுமதிப்பதன் மூலம் தோல்வியினை ஏற்கும் மனப்பாங்கினை வளர்த்தல் மற்றும் தோல்வியில் இருந்து மீண்டெழும் திறனை வளர்த்தல் , மனநெருக்கடியான சூழ்நிலைகளில் தகுந்த தீர்மானம் எடுக்கும் திறனை வளர்த்தல், நிஜ வாழ்க்கைக்கும் திரை வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டினை உணர வைத்தல், உறவினர் மற்றும் நண்பர்களிடையே உறவு கொண்டாடல், புகைத்தல் மற்றும் போதை அற்ற வாழ்க்கை, பெற்றோரின் அன்பான அரவணைப்பு போன்ற வாழ்க்கைக்கு தேவையான பல்வேறுவகையான திறன்களை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்வினை மேம்படுத்தலாம்.
எமது கலாச்சாரத்தில் பெண் அல்லது ஆண் ஒருவர் மிக்க துயரத்தில் இருக்கும் பொழுது அல்லது தான் தற்கொலை செய்ய உள்ளதாக கூறும் பொழுது எம்மில் பலர் அதனை கருத்தில் கொள்வதில்லை மேலும் சிலர் எள்ளி நகையாடவும் செய்வார்கள், நிச்சயம் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் தற்கொலைகளை தடுப்பதில் முக்கிய பங்காற்றவேண்டும். மேலும் தற்கொலை சம்பந்தமான செய்திகளை வெளி வெளியிடும் பொழுது உரிய ஊடக ஒழுக்கவியலை கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடவேண்டும். மாறாக தற்கொலைகளை தடுப்போம் என்ற தொனிப்பொருளில் தற்கொலைகளை தூண்டும் அல்லது முன்னுதாரணப்படுத்தும் செய்திகளை வெளியிடல் நன்றன்று.
முற்றும்
