குழந்தைகளின் உயிர்களினை பறித்த இருமல் பாணி

கடந்த வாரம் இந்தியாவின் , மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்ததன் காரணமாக 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. மத்தியப் பிரதேசத்தில் இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள், பராசியாவில் உள்ள குழந்தை நல  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மேலும்  குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் (Coldrif) இருமல் மருந்தைப் கொடுக்கப்பட்டதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக அந்த நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆரம்ப பகுப்பாய்வுகளில் குழந்தைகளைப் பலி கொண்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற அந்த இருமல் மருந்தில், ‘டை-எத்திலீன் கிளைக்கோல் ‘ (Diethylene Glycol) எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப்பொருள் பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டை எத்திலின் கிளைக்கோல் குழந்தைகளின் உயிருக்கு எவ்வாறு ஆபத்தானதாக மாறுகிறது?

பௌடர் அதாவது தூள் நிலையில் இருக்கும் மருந்துகளை சேதன கரைப்பான் ஒன்றில் கரைத்தே இருமல் பாணி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வழமையாக propylene glycol or glycerin போன்றனவே இவ்வாறு சேதன கரைப்பானாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு குறித்த வகை இருமல் பாணியில் Diethylene glycol என்ற சேதன கரைப்பான் பயன்படுத்தப்பட்டமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகின்றது.

டை எத்திலின் கிளைக்கோல் எமது ஈரலில் அனுசேபம் அடையும் பொழுது diglycolic acid (DGA) ஆக மாற்றமடையும் இது எமது சிறுநீரகத்திற்கு மிகுந்த நச்சுத்தன்மை உடையது ஆகும். இது சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி உடனடியான சிறுநீரக செயலிழப்பினை () ஏற்படுத்திஇறப்பிற்கு இட்டு செல்லும்

நாம் அவதானமாக இருக்க வேண்டுமா?

  1. இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படவில்லை எனினும் பின்வரும் விடயத்தினை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் ஏறத்தாள 50% மருந்துகள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யும் பொழுது ஆரம்பத்தில் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (National Medicines Regulatory Authority) இனால் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனினும் தொடர்ச்சியாக ஒழுங்கான முறையில் இவ்வாறான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. பலருக்கு இம்யூனோகுளோபின் இற்கு பதிலாக வெறும் நீர் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஏற்றப்பட்டமை ஞாபகம் இருக்கலாம்.
  2. மருந்தை உட்கொள்வதற்கும், அதை அளப்பதற்கும் மருந்துடன் சேர்த்து விநியோகிக்கபடும் முடி போன்றவற்றினை பயன்படுத்த வேண்டும் மாறாக மருந்தை அளவீடு செய்ய வீட்டில் உள்ள கரண்டிகள் அல்லது பிற மருந்துகளில் இருந்து வரும் கருவிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  3. பெரியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இருமல் பாணி மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். பாணியின் அளவு மற்றும் உள்ளடக்கம் என்பன வேறுபடும். ஒருவரின் வயது, உடல் எடையைப் பொறுத்து இருமல் மருந்தின் அளவு மாறுபடும். பெரியவர்களுக்கு (adult) பரிந்துரைக்கும் மருந்து அளவை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். அதேசமயம் குழந்தைகளுக்கு சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது. இதனால் இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படும் வாய்ப்புள்ளது
  4. இன்றைய நிலையில் இலங்கையில் உள்ள பல்வேறு தனியார் மருந்தகங்களில் இவ்வாறான இருமல் பாணிகள் வைத்தியரின் பரிந்துரை சீட்டைகள் ஏதும் இன்றி வாங்கக்கூடிய நிலையில் உள்ளது. இது ஓர் ஆபத்தான நிலை ஆகும். சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு Over the counter மருந்துகளை (அதாவது மருந்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கப்படும் மருந்துகள்) பரிந்துரைக்க வேண்டாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.ஏனெனில் இது தீவிரமான மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. குழந்தைகளுக்கு வரும் இருமல், சளி போன்றன அவர்களுக்கு இருக்கும் நியூமோனியா, கடுமையான ஆஸ்த்மா போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவே தகுந்த வைத்தியரிடம் குழந்தையினை காட்டி வைத்தியரின் சிபாரிசின் பிரகாரம் இவ்வாறான இருமல் பாணி மருந்துகள் கொடுக்கப்படல் சிறந்தது.

நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.