உயிருடன் எரிக்கப்பட்டாரா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தேனியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் இறப்பதற்கு சற்று முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக கடந்த வாரம் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் மரணம் மீண்டும் ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இப்பதிவு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது இறந்த நிலையில் எரிக்கப்படாரா? என்று எவ்வாறு ஓர் சட்ட வைத்தியர் ஒருவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.


இவ்வாறு உயிருடன் ஒருவர் எரிக்கப்பட்டாரா அல்லது இறந்த பின்னர் எரிக்கப்பட்டாரா என்ற விடயம் குற்றவியல் வழக்கின் பொழுது ஓர் முக்கியமான விடயம் ஆகும். சாதாரணமாக ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருக்கும் மற்றும் நுரையீரல் சுருங்கி விரிவதன் மூலம் காற்றினை உள்ளிழுத்து வெளித்தள்ளிய வண்ணம் இருக்கும். இவ்வாறு வாகனம் ஒன்று எரியும் பொழுது அதில் உள்ள இறப்பரினால் ஆன மற்றும் பிளாஸ்ட்டிக்கினால் ஆன பகுதிகள் எரியும். இதன் பொழுது அவற்றில் இருந்து பல்வேறு பட்ட நச்சுவாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்கள் மனிதனுக்கு கடுமையான உடல்நலக்கேட்டினை விளைவிக்க வல்லன. இவ்வாயுக்களில் முக்கியமானது கார்பன் மோனோக்சைட் என்பதாகும். இவ்வாயு நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட 200 மடங்கு விரைவாக எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும் இதன் காரணமாக ஓட்ஸிசன் காவுதல் தடைப்பட இறப்பு நிகழும்.
எனவேதான் உடற் கூராய்வு பரிசோதனையில் இறந்தவரின் இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கார்பன் மோனோக்சைட் மற்றும் ஏனைய வாயுக்கள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படும். இங்கு பெறப்பட்ட இரத்தம் ஆனது அளவறிபகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும். அதன் அடிப்படையில் இரத்தத்தில் உள்ள கார்பன் மோனோக்சைட்  அளவினை வைத்து குறித்த நபர் தீப்பற்றி எரிகையில் உயிருடன் இருந்தாரா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். உதாரணமாக புகைப்பிடிப்பவர்களில் 5-10% கார்பன் மோனோக்சைட் இரத்தத்தில் சாதாரணமாக காணப்படும். 20-40% கார்பன் மோனோக்சைட் காணப்படுகையில் அந்த நபருக்கு மனக்குழப்பம், தசைகளில் பலவீனம் என்பன ஏற்படும்.  இரத்தத்தில் கார்பன் மோனோக்சைட் 40% இற்கு அதிகமாக இருக்குமானால் இறப்பு ஏற்படும். இறந்த பின்னர் இருதயம் துடிக்காது மற்றும் நுரையீரல் சுருங்கி விரியாது இதன் காரணமாக மேற்குறித்த வாயுக்கள் இரத்தத்துடன் இரசாயன ரீதியில் சேராது இருக்கும்.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கார்பன் மோனோக்சைட்டு வாயு சேர்வதினால் இறந்த ஒருவரின் உடலின் தோல் மற்றும் அங்கங்கள் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதன் மூலம் குறித்த நபர் உயிருடன் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும். இவை தவிர இறந்தவரின் தொண்டை, சுவாசக்குழல் பகுதிகளில்  அவர் சுவாசம் மேற்கொண்டதன் காரணமாக கரி போன்றன படிந்திருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படும்.

மேற்குறித்த செயற்பாடுகள் மூலம் ஒருவர் தீப்பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்தாரா அல்லது இறந்த நிலையில் எரிக்கப்பட்டாரா என்பதினை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.