அன்று நான் கடமையில் இருந்த பொழுது 45 வயதுமிக்க ஓர் ஆண் நோயாளி முகத்தில் எரிகாயங்களுடன் எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்ன நடந்தது என அவரிடம் வினாவிய பொழுது நான் அறிந்து கொண்ட விடயம் என்னவெனில் அவர் வெளிநாடு ஒன்றில் இருந்து நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தனது தாயாரினை பார்க்க வந்திருந்தார். அன்று அவரின் தாயாரினை பராமரிக்கும் பெண் வேலைக்கு வரவில்லை அதனால் குறித்த நபர் தனது தாயாருக்கு காலை உணவாக கஞ்சி காச்சி பரிமாற முற்பட்ட வேளையில் தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. அவர் பிரஷர் குக்கரில் நீராவி அடங்க முன்னரே அதனை திறந்தமையினால் முகத்தில் பலமான எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முக்கியமாக அவரின் இரு கண்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. இறுதியில் அவரின் பார்வை வழமையான நிலைமைக்கு திரும்பாத நிலையில் தனது நாட்டிற்கு திரும்பவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
இன்றைக்கு எளிதாக சமையல் செய்வதற்கு பெரிதும் பயன்படும் பொருள் பிரஷர் குக்கர். உலகில் இது இல்லாத சமையல் அறைகளே இல்லை எனலாம். பிரஷர் குக்கர் இயங்குவது அதன் உள்ளே உருவாக்கப்படும் அழுத்தத்தால் தான். அப்படிபட்ட அந்த பிரஷர் குக்கர் அது தயாரிக்கப்பட்ட புதிதில் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் வெடித்துச் சிதறியது. இதனால் அச்சம் காரணமாக மக்களிடையே குக்கர் பயன்பாடுகள் குறையத் தொடங்கின.குக்கரை பயன்படுத்தவே மக்கள் பயந்தார்கள்.இதை எப்படி சரி செய்வது என்று இந்தியாவின் பல குக்கர் நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன. பாதுகாப்பான குக்கர் என்பதை இலக்காக வைத்து மேற்படி ஆராய்ச்சியில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த குக்கர்கள் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான TTK நிறுவனமும் களத்தில் இறங்கியது.

அது அந்த நிறுவனம் வணிக ரீதியில் தள்ளாட்டத்தில் இருந்த காலகட்டம்.அதை சமாளிக்க இன்ஜினியரிங் படித்து விட்டு,பேராசிரியராகும் கனவில் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்த “அவரை” அவரது தந்தையும், TTK நிறுவனத்தின் அப்போதைய தலைவருமான நரசிம்மன் அழைத்து வந்து பிசினஸில் இறக்கி விட்டார்.

“அவர்” தொழிலில் நுழைந்த அந்த காலத்தில் அவர்களது TTK நிறுவனம் கடுமையான நெருக்கடியில் இருந்தது.அதோடு இந்த குக்கர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. தன் பொறியியல் அறிவையும்,ஆராய்ச்சி அனுபவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்தார்.
அது தான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் (Gasket Release System). அவர் கண்டுபிடித்த அந்த கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டத்திற்கு அவர் காப்புரிமையை பெறவில்லை. ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, “நான் கண்டுபிடித்த இந்த பாதுகாப்பை காப்புரிமை செய்தால் எங்கள் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் லாபம் வரும்.ஆனால் அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.எனவே வேறு எந்த நிறுவனத்தின் குக்கர் வெடித்தாலும்,அதனால் ஒட்டுமொத்த குக்கர் என்ற கருவிக்கும் கெட்ட பெயர் உண்டாகும்.அதனால் தான் செய்யவில்லை…” என்ற பதிலைத் தந்தார்.

வீட்டில் இருக்கும் குக்கர் மூடியை எடுத்துப் பாருங்கள்.அதில் ஒரு சிறு துளை இருக்கும்.அதுதான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம்.குக்கர் மூடியில் “அவர்” போட்ட அந்த சிறிய ஓட்டை தான் குக்கரை பாதுகாப்பாக மாற்றியதுடன், TTK நிறுவனத்தையும் காப்பாற்றித் தந்தது. அந்த “அவர்” தான் TTK.ஜெகந்நாதன். இன்றைக்கும் கோடிக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பான குக்கர் சமையல் என்பதற்கு வித்திட்ட அந்த மாபெரும் மனிதரான டி.டி.கே.ஜெகந்நாதன் தன் 84 வது வயதில் பெங்களூருவில் அண்மையில் காலமானார்.
பிரஷர் குக்கரில் சமைப்பதினால் ஏற்படும் நன்மைகள்
1. நேர சேமிப்பு – பாரம்பரிய முறைகளினை விட 70% குறைவான நேரத்தினை எடுத்துக்கொள்ளும்
2. மின்சாரம் மற்றும் எரிவாயு சேமிப்பு
3. போசணைப்பொருட்கள் மற்றும் நுண்சத்துக்கள் இழக்கப்படாமல் சமைக்கலாம்
4. இங்கு ஆவியாதல் மிகக்குறைவாக நிகழ்வதால் உணவின் இயற்கை சுவை குன்றாமல் இருக்கும்
5. கடினமான இறைச்சி, வத்தல் , தானியங்கள் போன்றவற்றினை மிக இலகுவாக சமைத்து கொள்ளலாம்
6. சமையலுக்கு குறைந்த அளவிலான நீர் தேவைப்படும்
7. பிரஷர் குக்கரினை பயன்படுத்தும் பொழுது சமையலறையினை தூய்மையாகவும், இட நெருக்கடி இன்றியும் வைத்திருக்கலாம்
பிரஷர் குக்கரினை பயன்படுத்தும் பொழுது கையாளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
1. பிரஷர் குக்கரில் பயன்படுத்தப்படும் இறப்பர் வளையத்தினை பரிசோதித்துக்கொள்ளவேண்டும், நெகிழ்வுத்தன்மை குறையும் பொழுது குறித்த காலஇடைவேளையில் அதனை புதிதாக மாற்ற வேண்டும். மேலும் அது ஒழுங்கான முறையில் உள்வைக்கபட்டிருக்குகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2. பொதுவான உணவுகள் சமைக்கும் பொழுது நீர் மற்றும் உணவு பிரஷர் குக்கரின் 2/3 பங்கிற்கே நிரப்ப வேண்டும். மறுதலையாக 1/3 பங்கு வெறுமையாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உணவு அவிந்து விரிவடைய இடம் காணும். அரிசி போன்ற அதிகம் விரிவடையும் தானியங்களை அவிக்கும் பொழுது பிரஷர் குக்கரின் 1/2 பங்கிற்கே நிரப்ப வேண்டும்.
3. பாதுகாப்பான முறையில் நீராவி அமுக்கத்தினை வெளியேற்றல் – குக்கரினை ஆறவைத்து நீராவியினை ஒடுங்கி அமுக்கத்தினை இல்லாது செய்தல் அல்லது குக்கரின் மேல் உள்ள வால்வு இணை திறந்து வெளியேறல் அல்லது குக்கரின் மேல் நீரினை ஊற்றுவதன் மூலம் நீராவியினை சடுதியாக ஒடுங்க அனுமதித்து அமுக்கத்தினை இல்லாது செய்தல்.
4. நீராவி ஒடுங்கிஅல்லது வெளியேறி அமுக்கம் இல்லாது போன பின்னர் குறைந்த விசையினை பயன்படுத்தி திறக்க வேண்டும். ஒருபொழுது கடுமையான விசையினை பாவித்து திறக்க கூடாது.
5. நடுத்தர, சீரான வெப்பத்தில் சமைப்பதே சிறந்தது. அதிக வெப்பத்தில் சமைப்பது ஆபத்தினை உண்டாக்கும்.
6. நீருக்கு பதிலாக எண்ணெய் போன்றவற்றினை பயன்படுத்தி பெரிய இறைச்சி துண்டங்களை deep-fry செய்வது ஆபத்தினை உருவாக்கும். ஏன்னெனில் பிரஷர் குக்கர் நீரில் சமைப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது எண்ணெயினை பாவிக்கும் பொழுது அதிக வெப்பநிலை காரணமாக இறப்பர் வளையம் உருகி ஆபத்தினை விளைவிக்கலாம் மேலும் வால்வு ஒழுங்காக வேலை செய்யாது
7. பாதுகாப்பு வால்வு மற்றும் சாதாரண வால்வு என்பவற்றினை குறித்த காலத்தில் மாற்ற வேண்டும்.
8. முக்கியமாக பிரஷர் குக்கரினை அடுப்பில் வைக்கும் பொழுது பாத்திரத்தின் கைபிடியும் முடியின் கைப்பிடியும் ஒரே நேராக ஒன்றாக இருத்தல் வேண்டும். வேறுவேறு கோணங்களில் இருக்கும் பொழுது சமையலின் பொழுது அதிக அமுக்கம் காரணமாக முடி கழன்று ஆபத்தினை உருவாக்கும். சிறந்த தரக்கட்டுப்பாடு பெற்ற பிரஷர் குக்கரில் முடியினை பொருத்தும் பொழுது அதன் பிடியானது அது நேராக பாத்திரத்தின்பிடியுடன் பொருந்தும் அத்துடன் குறித்த சுழியில் மேலும் அசைக்க முடியாதவாறு குறித்த பிரஷர் குக்கர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நன்றி
