மின்னல் எச்சரிக்கை!!

டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
5. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
6. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
7. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது) .
8. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
9. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
10. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
11. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
12. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
13. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. 

அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு  முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா?

 உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (  ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

மேலும் தற்காலத்தில் ChatGPT  இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது

சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியாமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி  அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும்.  

 மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்     

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.