“இயற்கை மருந்து” – மருந்தா? விஷமா?

கடந்த வாரம் தமிழ் நாட்டில் உடல் நிறையினை குறைப்பதற்காக பெண் ஒருவர் அதிக அளவில் வெண்காரம் (borate) உட்கொண்டதை அடுத்து மரணத்தினை தழுவினார். இந்த நிலையில் இயற்கை மருத்துவத்தினை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து இந்த கட்டுரை விளக்குகின்றது

இன்றைய சமூகத்தில் “இயற்கை மருந்து” என்ற சொல் கேட்டவுடன், அது முழுமையாக பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் இல்லை, எவ்வளவு எடுத்தாலும் பாதிப்பு இல்லை என்ற தவறான நம்பிக்கை பலரிடமும் உள்ளது. ஆனால் மருத்துவ அறிவியல் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஒன்றுபட்டு சொல்லும் உண்மை என்னவென்றால் எந்தப் பொருளும் அளவை மீறினால் மருந்தாக இருந்து விஷமாக மாறிவிடும்.

இந்த அடிப்படை உண்மையை முதன்முதலில் அறிவியல் ரீதியாக எடுத்துரைத்தவர் நச்சியலின் (Toxicology) தந்தை என்று அழைக்கப்படும் Paracelsus. அவர் கூறிய புகழ்பெற்ற வாசகம்
“Dose makes the poison” – அளவுதான் விஷத்தை தீர்மானிக்கிறது.

இயற்கை மருந்துகள் என்றால் உண்மையில் என்ன?

மூலிகைகள், தாவரங்கள், கனிமங்கள், உலோகங்கள் ஆகியவை இயற்கையில் உருவானவை. அவை அனைத்தும் செயல்படும்  இரசாயனப்பொருட்கள் (Bio-active chemicals) கொண்டவை. அந்த இரசாயனப்பொருட்கள் தான் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி நோயை குறைக்கின்றன. அதே இரசாயனப்பொருட்கள் அதிக அளவில் உடலுக்குள் சென்றால், உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் விஷமாக மாறுகின்றன. எனவே, இயற்கை மருந்து என்றால் அது இரசாயனப் பொருட்கள் அற்றது  என்ற அர்த்தம் இல்லை.

பாரம்பரிய மருத்துவங்களும் இதையே கூறுகின்றன

ஆயுர்வேதம், சித்தம், யூனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்திலும் அளவு” மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் இதை மாத்ரா என்று அழைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் கூட உலோக மருந்துகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சரியான சுத்திகரிப்பு, சரியான அளவு, சரியான காலம் – இந்த மூன்றும் பின்பற்றப்படவில்லை என்றால், மருந்தே விஷமாக மாறும் என்று பாரம்பரிய நூல்கள் எச்சரிக்கின்றன. பொதுவாகப் பயன்படுத்தும் மூலிகைகளும் ஆபத்தானவையாக மாறலாம். மஞ்சள், கற்றாழை, வேப்பிலை, பூண்டு போன்றவை வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால்:

  • மஞ்சளை அதிக அளவில் தொடர்ந்து எடுத்தால் கல்லீரல் பாதிக்கப்படலாம்
  • கற்றாழை அதிக அளவில் தொடர்ந்து எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்
  • வேப்பிலை அதிகம் எடுத்தால் குழந்தைகளில் மூளை பாதிப்பு ஏற்படலாம்
  • பூண்டு அதிகமாக எடுத்தால் இரத்தக் கசிவு அபாயம் அதிகரிக்கலாம்

இவை அனைத்தும் “இயற்கை” என்பதால் பாதுகாப்பானவை அல்ல என்பதை உணர்த்துகின்றது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

மெதுவாக வரும் விஷம்

இயற்கை மருந்துகளை தொடர்ச்சியாக பறித்துரைக்கப்பட்ட அளவுகள், பாவிப்பு முறைகள் இன்றி ஆண்டுக்கணக்காக பயன்படுத்திவரும் பொழுது மனித உடல் மெதுவான நச்சாதலுக்கு உள்ளாகும் சாத்தியம் நிறையவே உண்டு. இயற்கை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் பல நேரங்களில் மெதுவாக, ஆண்டுகள் கழித்து வெளிப்படும். அதனால் பலர் காரணத்தை உணராமல் “வயது காரணம்” அல்லது “வழக்கமான நோய்” என்று நினைத்து விடுகிறார்கள். சட்ட மருத்துவ நச்சியல்  ஆய்வுகளில், நீண்ட கால மூலிகை மருந்து தவறான பயன்பாட்டால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இயற்கை மருந்து எப்போது பாதுகாப்பானது?

இயற்கை மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால்:

  • சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்
  • தேவையான காலத்திற்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்
  • குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
  • உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும். எம்மில் பலர் நினைப்பதுண்டு இயற்கை அல்லது பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தும் பொழுது ஆபத்து உண்டாகாது எனவே வைத்தியர்களின் ஆலோசனை தேவையில்லை என்று
  • ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து எடுக்கும் போது மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்

முக்கிய செய்தி

இயற்கை மருந்து = மருந்தியல் அறிவியல்

அது நம்பிக்கையின் விஷயம் அல்ல, அறிவின் விஷயம்.

சரியான அளவில் → நோய் தீர்க்கும்

தவறான அளவில் → நோய் உருவாக்கும்

அளவின்றி பயன்படுத்தினால் → உயிருக்கு ஆபத்தாகும்

எனவே, “இயற்கை” என்ற பெயரால் எந்த மருந்தையும் கண்மூடித்தனமாக பயன்படுத்தாதீர்கள். விழிப்புணர்வே பாதுகாப்பு

நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.