தற்பொழுது இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இவ்வாறான காலநிலையினால் மனிதர்கள் அதிகளவு பாதிப்படலாம். பாதிப்பு எனப்படும் பொழுது சாதாரண வெப்ப களைப்பு முதல் இறப்பு வரை ஏற்படலாம். இந்நிலையில் அதிக வெப்பநிலையினால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புக்களை மற்றும் பாதிப்புகளையே தடுக்கும் முறைகளை இப்பதிவு விளக்குகின்றது.
மனித உடல் இயல்பாகவே சுமார் 37°C வெப்பநிலையை பராமரிக்கிறது. ஆனால் சூழலியல் வெப்பம் அதிகரிக்கும் போது, உடலின் வெப்பக் கட்டுப்பாட்டு (thermoregulation) முறைகள் தோல்வியடைகின்றன. இதனால் வெப்ப சோர்வு (Heat Exhaustion), வெப்பக் காய்ச்சல் (Heat Stroke), இறுதியில் இறப்பு வரை சூழல் வெப்பநிலையினால் பாதிப்பு ஏற்படும்.
அதிக வெப்பநிலை (Hyperthermia) என்பது உடலின் வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பு தோல்வியடைந்து, உடல் வெப்பநிலையானது இயல்பான அளவை விட (98.6°F) ஆபத்தான நிலைக்கு உயர்வதைக் குறிக்கும் ஒரு மருத்துவச் சொல்லாகும். இது காய்ச்சல் (Fever) கிடையாது. காய்ச்சல் என்பது கிருமித்தொற்றுக்கு எதிராக உடல் தானாக வெப்பத்தை உயர்த்துவது. ஆனால், ஹைப்பர் தெர்மியா என்பது வெளிப்புற வெப்பத்தினால் உடல் சூடாவதைக் குறிக்கும்.

மனித உடலின் வெப்பக் கட்டுப்பாடு
உடல் வெப்பத்தை குறைக்க பல வழிகளைப் பயன்படுத்துகிறது:
- வியர்வை: ஆவியாகும் போது வெப்பம் வெளியேறுகிறது.
- இரத்தக் குழாய்களின் விரிவு (Vasodilation): தோலின் வழியாக வெப்பம் வெளியேற உதவுகிறது.
- சுவாசம் அதிகரித்தல்: ஆவியாகும் குளிர்ச்சி அதிகரிக்கிறது.
- நடத்தை மாற்றம்: நிழல் தேடுதல், தண்ணீர் குடித்தல், உடல் உழைப்பை குறைத்தல்.
ஆனால் சூழலியல் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, இம்முறைகள் போதுமானதாக இருக்காது. உடல் போராடினாலும், நீரிழப்பு, உப்புச் சத்து குறைபாடு, இதய அழுத்தம் போன்றவை ஏற்பட்டு, கட்டுப்பாடு முற்றிலும் தோல்வியடைகிறது.
அதிக சூழல் வெப்பநிலையினால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புக்கள்
இங்கு அதிக சூழல் வெப்பநிலையினால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் அவற்றின் தீவிரத்தன்மை ஏறுவரிசையில் விபரிக்கப்பட்டுள்ளது
1. வெப்ப தசைப்பிடிப்பு (Heat Cramps) – மிதமான தீவிர நிலை
இது ஒரு நபர் அதிக வெப்பத்தில் கடினமான வேலையில் ஈடுபடும்போது உடலில் ஏற்படும் தாதுக்களின் (Electrolytes) குறைபாட்டைக் குறிக்கிறது. உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும்போது, அதனுடன் சோடியம் (Sodium) மற்றும் குளோரைடு போன்ற உப்புகளும் வெளியேறுகின்றன. தாகத்திற்காக வெறும் தண்ணீரை மட்டும் குடிக்கும்போது, உடலில் உப்பின் அளவு குறைந்து (Hyponatremia) தசைகளில் கடுமையான வலி மற்றும் பிடிப்பு ஏற்படுகிறது.
2. வெப்ப மயக்கம் (Heat Syncope) – நடுத்தர தீவிர நிலை
உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைகின்றன (Vasodilation). இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால் ஒரு நபர் திடீரென மயங்கி விழுகிறார். மயங்கி விழும்போது ஏற்படும் தலைக்காயம் அல்லது உயரமான இடத்திலிருந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் மரணத்திற்கு காரணமாகலாம்.
3. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) – நடுத்தர தீவிர நிலை
வெப்பக் களைப்பு அல்லது வெப்ப சோர்வு என்பது உடல் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு ஆரம்ப நிலை பாதிப்பாகும். இது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) அளவுக்கு உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் அது ஹீட் ஸ்ட்ரோக்காக மாறக்கூடும்.
முக்கிய அறிகுறிகள் (Main Symptoms)
- அதிகப்படியான வியர்வை: உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள மிக அதிகமாக வியர்க்கும்.
- தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்: திடீரெனத் தலை சுற்றுவது போன்ற உணர்வு அல்லது மயக்கம் வருதல்.
- குமட்டல்: வாந்தி எடுப்பது போன்ற உணர்வு அல்லது வாந்தி.
- தசைப் பிடிப்பு (Muscle Cramps): கால்கள் அல்லது வயிற்றுப் பகுதிகளில் தசை இறுக்கம் ஏற்படுதல்.
- குளிர்ந்த, ஈரமான தோல்: உடல் சூடாக இருந்தாலும், தோல் தொடுவதற்கு குளிர்ச்சியாகவும் பிசுபிசுப்பாகவும் இருக்கும்.
- வேகமான, பலவீனமான நாடித்துடிப்பு: இதயம் வேகமாகத் துடிக்கும் ஆனால் நாடித் துடிப்பு மெலிதாக இருக்கும்.
4. வெப்பக் காய்ச்சல் (Heat Stroke) – அதி தீவிர நிலை
‘ஹீட் ஸ்ட்ரோக்’ அல்லது வெப்பக் காய்ச்சல் என்பது உடலின் வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்து (104°F / 40°C அல்லது அதற்கு மேல்), அதை உடலால் தானாகக் குறைக்க முடியாதபோது ஏற்படும் ஒரு உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசர நிலை ஆகும். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை நிரந்தரமாகப் பாதிக்கலாம். மனித உடல் ஆனது வியர்வை, vasodilation, ஹார்மோன் கட்டுப்பாடு போன்ற முறைகளால் போராடினாலும், அவை தோல்வியடைந்தவுடன் பல உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது.
முக்கிய அறிகுறிகள்
- அதிக உடல் வெப்பநிலை: உடல் சூடு 104°F (40°C) க்கும் மேல் உயர்தல்.
- மனநிலை மாற்றம்: குழப்பம், எரிச்சல், தெளிவற்ற பேச்சு, வலிப்பு அல்லது சுயநினைவு இழப்பு.
- தோல் மாற்றம்: தோல் மிகவும் சூடாகவும், சிவந்தும், வறண்டுமிருக்கும். வியர்வை முற்றிலும் நின்றுவிடலாம்.
- இதயத் துடிப்பு: இதயம் மிக வேகமாகத் துடிக்கும் மற்றும் சுவாசம் வேகமாக இருக்கும்.
- கடுமையான தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி.
முதலுதவி
- உதவிக்கு அழையுங்கள்: உடனடியாக 1990 எண்ணிற்கு அழைத்து மருத்துவ உதவியை நாடுங்கள்.
- குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றவும்: பாதிக்கப்பட்டவரை நிழலான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு உடனே கொண்டு செல்லுங்கள்.
- உடல் வெப்பத்தைக் குறைக்கவும்: குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் உடல் முழுவதையும் துடையுங்கள். குறிப்பாக அக்குள், கழுத்து மற்றும் தொடை இடுக்குகளில் ஐஸ் கட்டிகளை (Ice packs) வைக்கவும். விசிறி அல்லது ஏசி மூலம் காற்றோட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
- எச்சரிக்கை: அவர் சுயநினைவில்லாமல் இருந்தால் வாய் வழியாக தண்ணீர் அல்லது மருந்துகளைக் கொடுக்க வேண்டாம். காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது.
தடுப்பு முறைகள் (Prevention)
- நீர்ச்சத்து: தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர், இளநீர் அல்லது மோர் குடிக்கவும்.
- ஆடை: தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
- நேரம்: நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதையும் கடினமான வேலைகளையும் தவிர்க்கவும்.
- பாதுகாப்பு: வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்லுங்கள்
நீர்ச்சத்து முகாமைத்துவம் (Hydration Management)
1. எப்போது குடிக்க வேண்டும்?
- தாகத்திற்காகக் காத்திருக்க வேண்டாம்: தாகம் எடுப்பதற்கு முன்பே அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கிறது என்றால் உங்கள் உடல் ஏற்கனவே நீர்ச்சத்தை இழக்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
- அடிக்கடி பருகுங்கள்: வெயிலில் வேலை செய்யும்போது அல்லது வெளியில் செல்லும்போது 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு கிளாஸ் (சுமார் 250 மி.லி) தண்ணீர் குடிப்பது நல்லது.
- தினசரி அளவு: சாதாரண நாட்களில் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என்றாலும், கடுமையான வெயில் காலங்களில் 3-4 லிட்டர் வரை நீர்ச்சத்து தேவைப்படலாம்.
2. எவற்றைக் குடிக்கலாம்?
வெறும் தண்ணீரைத் தவிர, உடலில் இழந்த தாதுக்களை (Electrolytes) ஈடுசெய்யும் சில பாரம்பரிய பானங்கள் சிறந்தது
- இளநீர்: இதில் இயற்கையாகவே பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், இது சிறந்த நீர்ச்சத்து பானமாகும்.
- மோர்: இது உடலைக் குளிர்விப்பதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது.
- நன்னாரி: இது ஒரு சிறந்த உடல் குளிர்விப்பானாகக் கருதப்படுகிறது.
- எலுமிச்சை சாறு: உப்பு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடிக்கும்போது எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்கிறது.
- நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்: தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. தவிர்க்க வேண்டியவை
- காஃபின் மற்றும் ஆல்கஹால்: காபி, டீ மற்றும் மதுபானங்கள் உடலில் உள்ள நீரை வெளியேற்றி விரைவாக நீர்ச்சத்துக் குறைவை (Dehydration) ஏற்படுத்தும்.
- அதிக சர்க்கரை உள்ள பானங்கள்: செயற்கை குளிர்பானங்கள் நீர்ச்சத்தை அதிகரிக்காது, மாறாக உடலுக்குத் தேவையற்ற கலோரிகளை வழங்கும்.
உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். அது வைக்கோல் நிறத்தில் (pale yellow) இருக்க வேண்டும். வெப்பமான நேரங்களில் (காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை) வெளியில் செல்வதைத் தவிர்ப்பது மேலதிகப் பாதுகாப்பை வழங்கும்.

இலங்கையில் அதிகரித்த சூழலியல் வெப்பம் காரணமாக மரணங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளன. எனினும் அதிகரித்த சூழலியல் வெப்பம் ஏற்படும் மரணங்கள் சட்ட மருத்துவத்தில் சாவல் மிக்கவை அதாவது இத்தகைய மரணங்களை சட்ட மருத்துவ ரீதியில் இனம் காண உரிய ஆய்வுகூட வசதிகள் (இழையவியல் மற்றும் நச்சியல்) தேவை இதன் காரணமாக இத்தகைய மரணங்கள் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலேயே அறிக்கை இடப்பட்டுள்ளன.
