உயிருடன் எரிக்கப்பட்டாரா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தேனியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் இறப்பதற்கு சற்று முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக கடந்த வாரம் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் மரணம் மீண்டும் ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இப்பதிவு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது இறந்த நிலையில் எரிக்கப்படாரா? என்று எவ்வாறு ஓர் சட்ட வைத்தியர் ஒருவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.


இவ்வாறு உயிருடன் ஒருவர் எரிக்கப்பட்டாரா அல்லது இறந்த பின்னர் எரிக்கப்பட்டாரா என்ற விடயம் குற்றவியல் வழக்கின் பொழுது ஓர் முக்கியமான விடயம் ஆகும். சாதாரணமாக ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருக்கும் மற்றும் நுரையீரல் சுருங்கி விரிவதன் மூலம் காற்றினை உள்ளிழுத்து வெளித்தள்ளிய வண்ணம் இருக்கும். இவ்வாறு வாகனம் ஒன்று எரியும் பொழுது அதில் உள்ள இறப்பரினால் ஆன மற்றும் பிளாஸ்ட்டிக்கினால் ஆன பகுதிகள் எரியும். இதன் பொழுது அவற்றில் இருந்து பல்வேறு பட்ட நச்சுவாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்கள் மனிதனுக்கு கடுமையான உடல்நலக்கேட்டினை விளைவிக்க வல்லன. இவ்வாயுக்களில் முக்கியமானது கார்பன் மோனோக்சைட் என்பதாகும். இவ்வாயு நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட 200 மடங்கு விரைவாக எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும் இதன் காரணமாக ஓட்ஸிசன் காவுதல் தடைப்பட இறப்பு நிகழும்.
எனவேதான் உடற் கூராய்வு பரிசோதனையில் இறந்தவரின் இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கார்பன் மோனோக்சைட் மற்றும் ஏனைய வாயுக்கள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படும். இங்கு பெறப்பட்ட இரத்தம் ஆனது அளவறிபகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும். அதன் அடிப்படையில் இரத்தத்தில் உள்ள கார்பன் மோனோக்சைட்  அளவினை வைத்து குறித்த நபர் தீப்பற்றி எரிகையில் உயிருடன் இருந்தாரா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். உதாரணமாக புகைப்பிடிப்பவர்களில் 5-10% கார்பன் மோனோக்சைட் இரத்தத்தில் சாதாரணமாக காணப்படும். 20-40% கார்பன் மோனோக்சைட் காணப்படுகையில் அந்த நபருக்கு மனக்குழப்பம், தசைகளில் பலவீனம் என்பன ஏற்படும்.  இரத்தத்தில் கார்பன் மோனோக்சைட் 40% இற்கு அதிகமாக இருக்குமானால் இறப்பு ஏற்படும். இறந்த பின்னர் இருதயம் துடிக்காது மற்றும் நுரையீரல் சுருங்கி விரியாது இதன் காரணமாக மேற்குறித்த வாயுக்கள் இரத்தத்துடன் இரசாயன ரீதியில் சேராது இருக்கும்.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கார்பன் மோனோக்சைட்டு வாயு சேர்வதினால் இறந்த ஒருவரின் உடலின் தோல் மற்றும் அங்கங்கள் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதன் மூலம் குறித்த நபர் உயிருடன் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும். இவை தவிர இறந்தவரின் தொண்டை, சுவாசக்குழல் பகுதிகளில்  அவர் சுவாசம் மேற்கொண்டதன் காரணமாக கரி போன்றன படிந்திருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படும்.

மேற்குறித்த செயற்பாடுகள் மூலம் ஒருவர் தீப்பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்தாரா அல்லது இறந்த நிலையில் எரிக்கப்பட்டாரா என்பதினை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

நன்றி

குழந்தைகளின் உயிர்களினை பறித்த இருமல் பாணி

கடந்த வாரம் இந்தியாவின் , மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்ததன் காரணமாக 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. மத்தியப் பிரதேசத்தில் இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள், பராசியாவில் உள்ள குழந்தை நல  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மேலும்  குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் (Coldrif) இருமல் மருந்தைப் கொடுக்கப்பட்டதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக அந்த நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆரம்ப பகுப்பாய்வுகளில் குழந்தைகளைப் பலி கொண்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற அந்த இருமல் மருந்தில், ‘டை-எத்திலீன் கிளைக்கோல் ‘ (Diethylene Glycol) எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப்பொருள் பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டை எத்திலின் கிளைக்கோல் குழந்தைகளின் உயிருக்கு எவ்வாறு ஆபத்தானதாக மாறுகிறது?

பௌடர் அதாவது தூள் நிலையில் இருக்கும் மருந்துகளை சேதன கரைப்பான் ஒன்றில் கரைத்தே இருமல் பாணி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வழமையாக propylene glycol or glycerin போன்றனவே இவ்வாறு சேதன கரைப்பானாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு குறித்த வகை இருமல் பாணியில் Diethylene glycol என்ற சேதன கரைப்பான் பயன்படுத்தப்பட்டமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகின்றது.

டை எத்திலின் கிளைக்கோல் எமது ஈரலில் அனுசேபம் அடையும் பொழுது diglycolic acid (DGA) ஆக மாற்றமடையும் இது எமது சிறுநீரகத்திற்கு மிகுந்த நச்சுத்தன்மை உடையது ஆகும். இது சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி உடனடியான சிறுநீரக செயலிழப்பினை () ஏற்படுத்திஇறப்பிற்கு இட்டு செல்லும்

நாம் அவதானமாக இருக்க வேண்டுமா?

  1. இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படவில்லை எனினும் பின்வரும் விடயத்தினை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் ஏறத்தாள 50% மருந்துகள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யும் பொழுது ஆரம்பத்தில் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (National Medicines Regulatory Authority) இனால் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனினும் தொடர்ச்சியாக ஒழுங்கான முறையில் இவ்வாறான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. பலருக்கு இம்யூனோகுளோபின் இற்கு பதிலாக வெறும் நீர் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஏற்றப்பட்டமை ஞாபகம் இருக்கலாம்.
  2. மருந்தை உட்கொள்வதற்கும், அதை அளப்பதற்கும் மருந்துடன் சேர்த்து விநியோகிக்கபடும் முடி போன்றவற்றினை பயன்படுத்த வேண்டும் மாறாக மருந்தை அளவீடு செய்ய வீட்டில் உள்ள கரண்டிகள் அல்லது பிற மருந்துகளில் இருந்து வரும் கருவிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  3. பெரியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இருமல் பாணி மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். பாணியின் அளவு மற்றும் உள்ளடக்கம் என்பன வேறுபடும். ஒருவரின் வயது, உடல் எடையைப் பொறுத்து இருமல் மருந்தின் அளவு மாறுபடும். பெரியவர்களுக்கு (adult) பரிந்துரைக்கும் மருந்து அளவை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். அதேசமயம் குழந்தைகளுக்கு சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது. இதனால் இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படும் வாய்ப்புள்ளது
  4. இன்றைய நிலையில் இலங்கையில் உள்ள பல்வேறு தனியார் மருந்தகங்களில் இவ்வாறான இருமல் பாணிகள் வைத்தியரின் பரிந்துரை சீட்டைகள் ஏதும் இன்றி வாங்கக்கூடிய நிலையில் உள்ளது. இது ஓர் ஆபத்தான நிலை ஆகும். சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு Over the counter மருந்துகளை (அதாவது மருந்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கப்படும் மருந்துகள்) பரிந்துரைக்க வேண்டாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.ஏனெனில் இது தீவிரமான மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. குழந்தைகளுக்கு வரும் இருமல், சளி போன்றன அவர்களுக்கு இருக்கும் நியூமோனியா, கடுமையான ஆஸ்த்மா போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவே தகுந்த வைத்தியரிடம் குழந்தையினை காட்டி வைத்தியரின் சிபாரிசின் பிரகாரம் இவ்வாறான இருமல் பாணி மருந்துகள் கொடுக்கப்படல் சிறந்தது.

நன்றி

உயிருக்கு போராடுகின்றவரை வைத்தியசாலையில் அனுமதிக்க பின்னிற்கலாமா?

அண்மையில் பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விபத்து ஒன்றின் பொழுது தலையில் காயமடைந்த சிறுமி ஒருவரினை பலர் வைத்தியசாலையில் அனுமதிக்க தயக்கம் காட்டிய நிலையில் சிறுமி அதிக இரத்த போக்கு காரணமாக இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஒரு விபத்தில் அல்லது ஒரு தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பலர் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் வருவதில்லை.
மாறாக வேடிக்கை பார்ப்பார்கள். இவ்வாறு ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது அனுமதித்தவர் ஏதாவது விசாரணை ஒன்றிற்கு முகம்கொடுக்க வேண்டுமா என்பது பற்றி பலருக்கு சரியான விளக்கம் இல்லை. அதனை தெளிவுபடுத்தும் நோக்குடன் சட்ட வைத்திய அதிகாரியின் பார்வை நோக்கில் இப்பதிவினை பதிவிடுகிறேன்.

இவ்வாறு அனுமதிக்கபடும் நோயாளி உயிர் பிழைப்பார் எனில்,
அவரின் உடல்நிலை ஓரிரு நாட்களில் முன்னேற்றமடைந்ததும் அவர் பொலிசாருக்கு அவரை இந்நிலைக்கு இட்டுச்சென்ற சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது பற்றி வாக்குமூலம் ஒன்றினை வழங்குவார். அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி மேலதிக தகவல்களை பெற்று தனது சட்ட வைத்திய பரிசோதனையை செய்வார். இங்கு அந்த நோயாளியை அனுமத்திதவர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஆனால் துரதிஸ்டவசமாக அந்த நோயாளி இறப்பார் என்றால் நோயாளியை அனுமத்திதவர் ஓரிரு கடமைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.  அனுமதித்தவர் எவ்வாறான சூழ்நிலையில் மரணித்தவருக்கு காயம் ஏற்பட்டது என்பதை பொலிசாருக்கு விளக்கி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். அரிதான சிலசந்தர்ப்பங்களில் பிரேத பரிசோதனை நடைபெறும் பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகம் சென்று இறந்தவரினை காயமடையும் நிலைமைக்கு இட்டு சென்ற சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். மேலும் மரணித்தவருக்கு உறவினர் யாரும் இல்லை எனில் அவரின் உடலத்தினை பொலிஸாருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கும் அடையாளம் காண்பதற்கு உதவி புரிய வேண்டும். மேற்கூறிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஓரிரு மணித்தியாங்கள் செலவாகும்.
சிலர் ஏன் இந்தச் செயற்பாடுகள் என்று கேட்கலாம்.
அதற்கான காரணத்தை அறியலாமா?

1. பல சந்தர்ப்பங்களில் அதாவது விபத்து, கொலை போன்ற மரணம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மனித உடலில் ஏற்படும் காயங்களின் தன்மை ஒரே மாதிரி இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் இறந்தவரினை அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

2. சில வேளைகளில் குறிப்பிட்ட நோயாளி சுய நினைவு இழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சுய நினைவு மீளாமல் இறக்க நேரிடும். அந்த வகையில் வைத்தியசாலையில் அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

3. பல நேரங்களில் இரு நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவார்கள். போதை தலைக்கு ஏறியதும் சண்டை போட்டு காயப்படுத்தி கொள்வார்கள். படுகாயம் அடைந்த நண்பனை தாக்கியவனே வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு , மேல்மாடியில் இருந்து விழுந்ததாக OPD பிரிவில் சொன்ன பல சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.

4. கொழும்பு போன்ற பாரிய நகரங்களில் கணிசமானோர் தெருக்களில் வசிக்கின்றனர். இவ்வாறன ஒருவர் இறக்கும் பொழுது பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வைத்திய சாலையில் அனுமதித்தவரிடம் இருந்து மேலதிக தகவல்களை அறிய முயல்வர்.

5. சில சமயங்களில் விசாரணை செய்யும் பொலிஸார் பிழையான தகவல்களை சட்ட வைத்திய அதிகாரிக்கு வழங்கி அவரை தவறாக வழிநடத்த முற்படுவர். இச்சந்தர்ப்பத்தில் சாட்சியின் வாக்கு மூலம் முக்கியமானது.

6. நடைபெற்றது கொலை எனில் வைத்திய சாலையில் அனுமதித்தவர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் பொழுது ஏனைய சாட்சிகளுடன் சேர்ந்து சாட்சி கொடுக்க வேண்டும். இதற்கு நீதி மன்றத்தினால் அழைப்பாணை அனுப்பபடும்.

பின்பற்றப்படும் நடைமுறைகள் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏற்றமாதிரி வேறுபடும் உதாரணமாக உறவினர்கள் அல்லது பலர்  ஒன்றாக பயணிக்கும் பொழுது  (பேருந்தில் அல்லது மோட்டார் சைக்கிளில்) ஏற்படும் விபத்தின் பொழுது சக பிரயாணிகளே  கண்கண்ட சாட்சிகள் அவர்களே வாக்குமூலத்தினை வழங்குவார்கள். எனவே இவ்வாறான விபத்தின் பொழுது காயமடைந்த நபரினை வைத்தியசாலையில் அனுமதிக்க தயக்கம் வேண்டாம்      

தமிழர்களில் பெரும்பான்மையினர் நீதி மன்றம் மற்றும் போலீஸ் நிலையம் செல்வதை அவமரியாதையான செயலாக கருதுவதாலும் தாங்கள் ஏதோ குற்றவாளிகள் போன்று அச்சபடுவதாலும் இவ்வாறு உதவி செய்யவும் வாக்கு மூலம் அளிக்கவும் பின்னிற்கின்றனர். விபத்து ஒன்று நடைபெறும் நேரங்களில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற எம்மவர்கள் பின்னடிக்க இதுவே காரணம்.

நன்றி

ஆபத்தினை விளைவிக்கும் தீ சாகச விளையாட்டுக்கள்

அண்மைக்காலமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோவில் திருவிழாக்கள் குறிப்பாக சூரன்போர் போன்றன நடைபெறும் பொழுது அல்லது வேறு திருவிழாக்களில் பல இளைஞர்கள் வாயினுள் மண்ணெண்னையிணை வைத்து அதனை தீப்பந்தம் மேல் ஊதி தீயினால் சாகச விளையாட்டினை மேற்கொள்கின்றார்கள். இந்த விளையாட்டினால் ஏற்படும் தீக்காயம் தவிர்ந்த ஏனைய உடற் தீங்குகள் பற்றி  இப்பதிவு விளக்குகின்றது.

மண்ணெண்ணெயின் எரிபற்று நிலை பெற்றோல் போன்றவற்றினை விட உயர்ந்தது என்பதினால் இது இலகுவில் தீப்பற்றி விபத்தினை உண்டாக்காத போதிலும் பின்னரும் உடலுக்கு தீங்கான விளைவுகளை உண்டாக்கும்.

 குரல்வளை மூடி அல்லது குரல்வளை மூடுதளம் என்பது  தொண்டையில் உள்ள ஒரு சிறிய மூடி போன்ற அமைப்பு ஆகும், இது உணவு உட்கொள்ளும் போது மூச்சுக் குழாய்க்குள் உணவும் தண்ணீரும் செல்வதைத் தடுக்கிறது. சாதாரணமாக ஆரோக்கியமான நபர் ஒருவர் உண்ணும் பொழுது அல்லது தனது வாய்க்குழியினுள் திரவம் அல்லது உணவுகளை வைத்திருக்கும் போது அல்லது உண்ணும் பொழுது அல்லது அருந்தும் பொழுது  குரல்வளை மூடி திரவம் அல்லது உணவு சுவாச குழாயான வாதநாழியினுள் உட்செல்ல விடாமல் தடுக்கின்றது. சாதாரணமாக ஓர் மனிதனில் உணவு அல்லது திரவம் பாதுகாப்பான முறையில் விழுங்கப்படுவதினை (மறுதலையாக புரைக்கேறுவதினை தடுக்கும் முகமாக) ஒன்றிற்கு மேற்பட்ட மூளை நரம்புகள் (Glossopharyngeal Nerve (CN IX), Vagus Nerve (CN X), Facial Nerve (CN VII), Hypoglossal Nerve (CN XII)) தொழில்படுகின்றன

ஒருவர் உணவு உண்ணும் பொழுது அல்லது திரவம் ஒன்றினை அருந்தும் போது சிரிக்க அல்லது உரையாட அல்லது வேறு வேலைகளில் ஈடுபட முற்படுவார்களாயின் மேற்குறித்த நரம்புகளின் ஒருங்கிணைத்த தொழில்பாடு அற்று போகும் நிலையில் அவர்களின் சுவாச தொகுதியினுள் உணவு அல்லது திரவம் உட்செலும் இதன்காரணமாக குறித்த நபருக்கு புரைக்கேறுதல் (Aspiration) நடைபெறும் மேலும் சில நரம்பு சம்பந்தமான நோயாளிகள், தலையில் பாரிய காயங்களுக்கு உள்ளானவர்கள், வலிப்பு ஏற்படும் பொழுது இவ்வாறு புரைக்கேறுதல் நடைபெறும்.

இவ்வாறு மண்ணெண்ணெய் போன்ற அருந்த தகாத அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தினை வாயினுள் வைத்திருக்கும் பொழுது அது சிறிய அளவில் சுவாச குழாயினுள் (வாதநாளியினுள்) உட்செல்லும் இதனை சட்டமருத்துவத்தில் Micro Aspirations என்றழைப்பர். இதன் பொழுது குறித்த நபருக்கு புரைக்கேறியதற்கான உடனடியான அறிகுறிகள் பெருமளவில் ஏற்படாது. ஆனால் சுவாசத்தொகுதியினுள் உட்சென்ற மண்ணெண்ணெய் நுரையீரலினுள் அழற்சியினை (chemical pneumonitis) ஏற்படுத்தும் இதன் காரணமாக இருமல், காச்சல், நெஞ்சுநோ, சுவாசப்பதில் சிரமம் என்பன ஏற்படும். மேலும் உட்சென்ற மண்ணெண்ணெய் ஆனது நுரையீரலின் சிற்றறைகளினை அழிக்கும் இவ்வாறு அழிக்கப்பட்ட  சிற்றறைகள் நீண்ட காலப்போக்கில் நார்களினால் பிரதியிடப்படும். இதனை மருத்துவத்தில் lung fibrosis என்றழைப்பர். இதன்காரணமாக நீண்ட கால சுவாச பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் முக்கியமாக Bronchiectasis, Bronchiolitis obliterans,  lung destruction and respiratory failure போன்ற நோய்கள் ஏற்படும். மேலும் நுரையில் நோய் காரணமாக (Pulmonary Hypertension and Heart Failure)இருதய செயலிழப்பு ஏற்படலாம்.  மேலும் வாயினுள் வைத்திருக்கும் மண்ணெண்ணெய் ஆவியாகி மூக்கின் ஊடாகவும் நுரையீரலுக்கு சென்று மேற்குறித்த விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் வாயினுள் புண்கள் காணப்படும் பொழுதும், வாய்க்குழியின் மென்சவ்வின் ஊடாகவும் மண்ணெண்ணெய் ஆனது உடலினுள் உறிச்சப்படும் ஆபத்தும் உள்ளது.

மேலும் ஒருவருக்கு நுரையீரல் அழற்சி அவரின் நுரையீரலினுள் செல்லும் மண்ணெண்ணெய்யின் அளவில் தங்கியுள்ளது எனினும் சிறிதளவிலான  மண்ணெண்ணெய் இவ்வாறான நுரையீரல் அழற்சியினை ஏற்படுத்த போதுமானது. சிலரில்  மண்ணெண்ணெய் ஆவி ஒவ்வாமை காரணமாகவும் நுரையீரல் அழற்சி ஏற்படலாம். சிறுவர்களில் 01 மில்லி லிட்டர் இற்கு குறைவான மண்ணெண்ணெய் இவ்வாறு நுரையீரல் அழற்சியினை ஏற்படுத்த போதுமானது (ஆதாரம் https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6996713/#:~:text=Aspiration%20of%20even%20small%20amounts,common%20symptoms%20of%20aspiration%20pneumonitis.) எனவே இது குறித்து சிறுவர்கள் மற்றும் ஏனையோர் அவதானமாக இருக்க வேண்டும். பலர் கூறுவது என்னவென்றால் தான் ஒருசில முறைகள் இவ்வாறு செய்தும் எவ்விதமான உடல் தீங்குகள் வரவில்லை என்பது தான். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் பொழுது சில சந்தர்ப்பதில்  மேற்குறித்த நோய்நிலைகள் ஏற்படுவதில்லை ஆனால் நீண்ட காலப்போக்கில் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மேலும் இன்னொரு அபாயகரமான சாகச விளையாட்டு, மேற்குறித்த நிகழ்வுகளில் நடைபெறுவது என்னவெனில் எரியும் தீப்பந்தத்தினை வாயினுள் செலுத்துதல் ஆகும். எமது மனித உடலில் உட்செல்லும் காற்றானது எமது நாசிக்குழியில் பிசிர்களினால் வடிகட்டபட்டு தூயதாக்கப்பட்டு மேலும் உடல் வெப்பநிலைக்கு மாற்றப்பட்டு சுவாசத்தொகுதியினுள் உட்செல்லும் ஆனால் இவ்வாறான செயற்பட்டுகளில் அவ்வாறு நிகழ்வதில்லை இவ்வாறு புகை நிரம்பிய சூடான காற்றினை சுவாசிப்பதினால் சுவாச தொகுதியில் ஏற்படும் காயங்கள்   சட்ட மருத்துவத்தில் smoke inhalation injury என்றழைக்கப்படும். இதன் காரணமாக சாதாரணமான சுவாசத்தொகுதியின் மேலணியில் ஏற்படும் காயத்தில் இருந்து நுரையிரல் அழற்சி வரையான பார தூரமான நோய் நிலைமைகள் ஏற்படலாம் அத்துடன் இறப்பும் சம்பவிக்கலாம். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் குறித்த நபருக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லை என்பதே ஆகும்.    

மேலும் குறித்த நபர்கள் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு மேற்குறித்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறு கூடுதலாக உள்ளது.

நன்றி   

Mephedrone என்ற புதிய போதைப்பொருள் ஆபத்தானதா?

Mephedrone என்ற புதிய வகை போதைப்பொருளானது அண்மையில் இலங்கையின் பலஇடங்களில் கைப்பேற்றப்பட்ட போதைப்பொருளில் இருப்பது அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு இலங்கையில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இப்போதைபொருளானது மிகமிக ஆபத்தானது என்ற வகையில் செய்திகள் வந்துள்ள நிலையில் இப்போதைப்பொருள் ஏன் ஆபத்தானது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

Mephedrone ஆனது 4-methylmethcathinone என்ற இரசாயன பெயரினால் அழைக்கப்படும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட cathinone வகையினை சேர்ந்த போதைப்பொருளாகும். போதைப்பொருட்கள் எமது உடலில் இருவகையான மாற்றங்களை உண்டுபண்ணும்

1. நரம்புத்  தொகுதியின் செயற்பாட்டினை மந்தமாக்கும் போதை பொருட்கள்  – முக்கியமாக ஹெராயின், ஓபியம் போன்றன இவற்றில் அடங்கும்

2. நரம்புத்தொகுதியில் கிளர்ச்சியினை ஏற்படுத்தும் போதைப்பொருட்கள் – இவற்றில் ஐஸ் (மெத்தமிட்டாமின், அம்மீட்டமின்) மற்றும் கொக்கைன் போன்றன இவற்றில் அடங்கும்.

Mephedrone ஆனது எமது நரம்பு தொகுதியில் கிளர்ச்சியினை அல்லது உற்சாகத்தினை ஏற்படுத்தும் ஓர் போதை மருந்தாகும். இது  drone,M-CAT, white magic, meow meow, bubble போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இது முதன் முதலாக 1929ம் ஆண்டு செயற்கையாக தொகுக்கப்பட்டது எனினும் 2000ம் ஆண்டுவரை இதன் பயன்பாடு அறியப்படவில்லை. அதன் பின்னரே இது போதை தரும் பொருளாக பாவிக்கப்பட ஒவ்வொரு நாடுகளினாலும் போதைப்பொருளாக வரையறுக்கப்பட்டு பாவனை, உற்பத்தி, கையிருப்பில் வைத்திருத்தல் மற்றும் கடத்துதல் என்பன குற்றங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருளானது பொலிஸாரினால் கைப்பேற்றப்பட்டது தவிர எவ்வளவு தப்பி சென்றது என்பது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் பொதுமக்கள் இது பற்றி அவதானமாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த போதைப்பொருள் பவுடர் வடிவத்தில் அல்லது பளிங்கு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவத்தில் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

Mephedrone ஏன் ஆபத்தானது என்பது பற்றி பார்ப்போம்

1. சடுதியான இறப்பு

இது ஓர் செயற்கையாக தயாரிக்கப்படும் ஓர் போதைப்பொருள். இதனை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒருபோதுமே தரசான்றிதழ் பெற்றவை அல்ல. எனவே இவை தயாரிக்கும் போதைப்பொருளில் உண்மையான போதைப்பொருள் அளவு அதாவது தூய போதைப்பொருளின் அளவு (variable potency ) எப்போதும் மாறுபடும் இதன் காரணமாக முதல் பாவித்த அளவில் நபர் ஒருவர் தொடர்ந்து பாவிக்கும் பொழுது சடுதியான நஞ்சாதல் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும். மற்றைய செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்பொருட்களிலும் இவ்வாறு ஏற்படும்.

2.  கடுமையான உடல் பாதிப்புக்கள்

இப்போதைப்பொருள் ஆனது எமது உடலில் உள்ள இரத்த நாடிகளை சுருங்க வைக்கும் (vaso constriction) தன்மையுள்ளது இதன் காரணமாக சடுதியான மாரடைப்பு, கை மற்றும் கால்களின் விரல்கள் அழுகுதல் (dry gangrene), மூக்கின் ஊடாக நுகர்பவர்களில் மூக்கு  சவ்வு (Nasal septum) அழிவடைதல் போன்றன ஏற்படும். மேலும் எமது உடலில் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி வலிப்பு, சிறுநீரக செயலிழப்பு என்பவற்றினை ஏற்படுத்த வல்லது.

3. மீண்டும் மீண்டும் பாவிக்க தூண்டி அடிமையாக்கும் தன்மை

இந்த போதைப்பொருளானது மனித உடலில் 30-60 நிமிடங்கள் மாற்றத்தினை உண்டுபண்ணும் அதன் பின்னர் அதன் விளைவு படிப்படியாக அற்று போகும். இதன் காரணமாக நீண்ட நேர விளைவினை விளைவினை விரும்புபவர்கள் மற்றும் இப்போதைபொருளினை பாவித்ததினால் ஏற்பட்ட விளைவில் இருந்து தப்பிக்க அடிக்கடி பாவிக்க வேண்டி இருக்கும். எனவே மற்றைய போதைப்பொருட்கள் மாதிரி இதுவும் அடிமையாக்கும் (Addictive) தன்மை உடையது.

4. மேலும் இந்த போதைப்பொருள் எமது நரம்புத்தொகுதியில் பாலியல் நடத்தை மாற்றத்தினை ஏற்படுத்த வல்லது. பொதுவாக இந்த வகை போதைப்பொருளானது அதீத பாலியலினை தூண்டும் மேலும் வழமையாக ஒரு இன பாலியல் உறவினை மேற்கொள்பவர்கள் இதனை பாவித்து கொள்வார்கள். இவ்வாறு போதை பொருட்களினை பாவித்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுதலை chemsex என்றழைப்பர். இந்த பாலியல் நடவடிக்கையில் methamphetamine (ICE), mephedrone,  ketamine போன்ற வகை போதைப்பொருட்கள் பாவிக்கப்டுகின்றன.

நேற்றைய தினம்  mephedrone என்ற போதைப்பொருள் முதன் முதலாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உடன் மக்களுக்கு அறியத்தந்தவர்கள் எவருமே இந்த போதைபொருள் ஏன், எந்த வகையில் ஆபத்தானது (மனிதனை போதைக்கு அடிமையாக்குவதிலா, திடீர் இறப்பினை ஏற்படுத்துவத்திலா அல்லது உடல் தீங்கான பக்கவிளைவினை ஏற்படுத்துவத்திலா ) என்பது குறித்து குறிப்பிடவில்லை. நேற்றைய செய்திகளை வாசித்த போதைப்பொருள் பாவனையாளர்கள் மாறி சிந்திக்கவும் வாய்ப்புண்டு அதாவது ஐஸ், ஹெராயின், கஞ்சா போன்றவை குறைந்த அளவில் உடலுக்கு தீங்கினை ஏறப்டுத்தும் என்று. உண்மையில் இந்த போதைப்பொருட்களில் குறைந்த அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் என்று ஒன்றுமே இல்லை. எல்லா போதைப்பொருளுமே மனித உடலுக்கு பாரிய தீங்கினை ஏற்படுத்த கூடியவை. முக்கியமாக ஹெராயின் மனிதனை போதைக்கு அடிமையாக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது.

நன்றி

சனநெரிசலில் இறப்புக்கள் ஏற்படுவது ஏன்?

நேற்றைய தினம் தமிழ் நாட்டின் கரூரில் நடிகர் விஜய் அவர்களின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். பலருக்கு ஏன் சன நெரிசலின் பொழுது இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கமின்மை நிலவுகின்றது அத்தோடு சனநெரிசலில் இருந்து எவ்வாறு உயிர் தப்புவது என்ற அறிவும் குறைவாக உள்ள நிலையில். அதனை போக்கும் முகமாக இந்த பதிவு அமைகின்றது.


பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் சிறிய, மூடிய கட்டிடங்களில் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக குறுகிய பாதையினுடாக/வாசலினுயூடாக அதிகளவான மக்கள் வெளியேறும் பொழுது அல்லது உள் நுழையும் பொழுது ஏற்படுகின்றது. மேலும் குறித்த கட்டிடம் அல்லது இடமானது தாங்கக்கூடிய சனத்தொகையினை விட அதிகளவு மனிதர்கள் கூடும் பொழுதே ஏற்படுகின்றது. திறந்த வெளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது அரிது.
இவ்வாறான சம்பவத்தின் பொழுது compressive or restrictive asphyxia என்பதே பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்து விடுகின்றது. compressive or restrictive asphyxia என்றால் என்ன? நாம் சாதாரண நிலைகளில் சுவாசிக்கும் பொழுது அதாவது உட்சுவாசம் செய்யும் பொழுது முறையே எமது நெஞ்சறையானது வெளிநோக்கி மற்றும் மேல்நோக்கி அசையும் அவ்வாறே வெளிச்சுவாசம் செய்யும் பொழுது முறையே உள்நோக்கி மற்றும் கீழ்நோக்கி அசையும். மேலும் நாம் வலிந்த சுவாசம் (Forced respiration) செய்யும் பொழுது எமது கைகளில் உள்ள சில தசைகளும் வேலை செய்யும். சனநெரிசலின் பொழுது பிரயோகிக்கப்படும் பொழுது வெளிப்புற விசைகள் காரணமாக மிகுந்த சனநெரிசல் ஓர் குறுகிய மூடிய பிரதேசத்தில் ஏற்படும் பொழுது அங்கு கூடியிருக்கும் மனிதர்களின் சுவாச அசைவுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக சனநெரிசலில் சிக்கி உள்ளவர்களில் சுவாசம் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக இரத்தத்தில் காபனீர்ஓட்ஸைட்டின் அளவு அதிகரித்து ஓட்ஸிசன் அளவு குறைவடையும் இதன்காரணமாக மயக்கம் அல்லது இறப்பு ஏற்படும். மேலும் மனிதர்கள் காற்றோட்டம் குறைந்த இடத்தில் கை மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் நிமிர்ந்த நிலையில் நிற்கும் பொழுது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடையும் இதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படும்.
மயக்கம் ஏற்பட்டு ஒருவர் விழும் பொழுது சனநெரிசலில் “domino effect” காரணமாக மேலும் பலர் விழுவார்கள். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் விழும் பொழுது மேலும் நசிபடுவர்களினால் தொடர்ந்து சுவாசிக்க முடியாது இறப்பு ஏற்படும்.


மேலே உள்ள படமானது டோமினோ விளைவு எவ்வாறு சனநெரிசலில் ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை காட்டுகின்றது.

மேலும் ஒருவர் மயக்கம் அடைந்து விழும் பொழுது பதட்டமடையும் அருகில் உள்ளவர்களினால் இந்த நிலை மோசமடையும். மேலும் விழுந்தவர்களின் மேல் மற்றைய மனிதர்கள் ஏறி நிற்கும் பொழுது இந்த நிலை மேலும் மேலும் மோசமடையும் அத்துடன் அவர்களின் உள்அவயவங்கள் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் உண்டு.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூடிய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தும் மின்சார கம்பிகள் அறுந்து வீழ்ந்து மின்சாரம் பாய்ந்தும் இறப்பு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. இது தவிர இவ்வாறான நெருக்கடியில் நெரிபடுபவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்டு இயற்கை நோய்களான மாரடைப்பு, இரத்தத்தில் சீனி அதீதமாக குறைவடைதல், காக்கைவலி, ஆஸ்துமா  மற்றும் மூளையில் இரத்த கசிவு என்பன ஏற்பட்டும் இறப்பு ஏற்படலாம். மேலும் இவ்வாறன சனநெரிசலில் சிக்கும் இருதய நோயாளிகள் போன்றோர் தமது நோய் நிலைமை மோசமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
மக்களுக்கு இவ்வாறு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் நிகழ்வினை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்கள் மீதே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறு கூட்டம் ஒன்றில் சன நெரிசலினை குறைக்கலாம்

1. நிகழ்ச்சி ஒருங்கமைப்பு  – நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே நன்றாக திட்டமிடவேண்டும் குறிப்பாக நுழைவாயில், வெளிச்செல்லேம் வழி, பங்குபற்றும் நபர்களின் எண்ணிக்கை என்பன குறித்து திட்டமிடவேண்டும். நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் எல்லோரையும் உடனே வெளியேற அனுமதிக்க கூடாது. வெளிச்செல்லும் வாசல் எப்பொழுதும் அகலமானதாக இருக்க வேண்டும். சன நெருக்கடியான வேளைகளில் தற்காலிக வெளிச்செல்லும் வாசல்களை ஏற்படுத்த வேண்டும். அனுபம் மிக்க ஊழியர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும்.

2. கூட்ட அடர்த்தியைக் கண்காணிக்கவும் நெரிசலைக் கணிக்கவும் AI-இயங்கும் கண்காணிப்பு கருவிகள் , ட்ரோன்கள் மற்றும் CCTV தரவு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். மேலும் நிகழ்நேர கூட்டக் கண்காணிப்புக்கு RFID (Radio Frequency Identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும்.

3. கூட்டத்தில் பங்குபற்றுபவர்களுக்கு சனநெருக்கடியான நேரத்தில் தெளிவான, இலகுவில் விளங்கக்கூடிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சாதாரண நெரிசல்கள் இவ்வாறான தொடர்பாடல் பிரச்னைகள் காரணமாக மோசமடைந்தமைக்கான சான்றுகள் நிறையவே உண்டு. மேலும் இவ்வாறான சனநெருக்கடியான நேரத்தில் தொலைபேசிகள் பொதுவாக இயங்க முடியாத நிலைக்கு சென்றுவிடும் ஏனெனில் குறித்த பிரதேசத்தில் அதிகளவு கைத்தொலைபேசி பாவனை வலைத்தள நெருக்கடிகாரணமாக ஆகும். எனவே ஒலிபெருக்கிகள் தான் சிறந்த தொடர்பாடல் முறை ஆகும்.

4. மக்களுக்கு அறிவுட்டல் – கூட்டம் நடைபெறும் இடத்தின் அமைவிடம், வெளிச்செல்லும் வாசல்களின் அமைவிடம் போன்றவற்றினை மக்களுக்கு கூட்டம் தொடங்கும் முன்னரே அறிவிக்க வேண்டும். கூட்டத்தின் அமைவிடம் உரிய மக்களின் எண்ணிகையினை அடைந்ததும் எக்காரணம் கொண்டும் மேலதிக மக்களை அனுமதிக்க கூடாது. மேலும் இவ்வாறான பாரிய கூட்டம் நடைபெறும் இடங்களில் முதலுதவி படைகளை வாடகைக்கு அமர்த்தல் வேண்டும் 

எவ்வாறு உயிர் தப்பித்து கொள்வது

  1. மற்றையவர்களின் மேல் விழாமல் தனது சொந்தக்காலில் இறுதிவரை நிக்க முயற்சிக்க வேண்டும்
  2. சனத்திரல் அசையும் திசையில் அசைய வேண்டும். எதிர் திசையில் ஒருபோதும் அசையக்கூடாது.
  3. நெஞ்சிற்கு குறுக்காக கைகளை கட்டி கொள்ள வேண்டும் இதன் காரணமாக சுவாசிக்க நெஞ்சின் அசைவு ஏற்பட வழி உண்டாகும்.
  4. கைப்பாசைகள் மூலமே தொடர்புகொள்ளவேண்டும். கத்தி குளறுவதன் மூலம் உடலில் இருந்து சக்தி இழப்பு ஏற்படும்
  5. சுவர் மற்றும் தூண்களுடன் தற்காலிகமாக தொடர்பில் இருப்பதன் மூலம் சனத்திரளின் ஒட்டத்தில் அள்ளுப்பட்டு, நெரிபட்டு  போகாமல் தப்பிக்கலாம்     

முற்றும்

அதீத மதுப்பாவனையும் குடலில் ஏற்படும் இரத்த போக்கும்

அண்மையில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  இறந்தமை யாவரும் அறிந்த விடயம். அவர் இறந்தவுடன் பல சமூக ஊடகங்கள், மற்றும் தனிநபர்களின் முக நூல்கள் அவர் பல்வேறுவிதமான நோய்களினால் இறந்தார் என முகநூலில் கருத்து தெரிவித்திருந்தனர். அவற்றில் பலரின் கருத்துக்கள் தற்போதைய மருத்துவ அறிவிற்கு பொருத்தமானதாக தெரியவில்லை. இவ்வாறு கருத்து தெரிவித்தவர்கள் அவர் மஞ்சள் காமாலை நோய், சிரோசிஸ் (Cirrhosis), குடலில் ஏற்பட்ட குருதி பெருக்கு (gastrointestinal bleeding), உள் அவயவங்களின் செயலிழப்பு ( multi organ failure), ஈரலில் கொழுப்பு படிந்தமை ( fatty liver), GORD (Gastro-Oesophageal Reflux Disease ) என்றவாறு பல்வேறு நோய் நிலைமைகளினால்  இறந்தார் என விபரித்து இருந்தனர். இதன் உண்மைத்தன்மை பற்றி இப்பதிவு ஆராய்கின்றது.

முதலாவதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலையின் பொறுப்புவாய்ந்த அதிகாரி கூறுகையில் அவருக்கு குடலினுள் இரத்த போக்கு  ஏற்பட்டு அவயவங்கள் செயலிழந்தமை (massive gastrointestinal bleed and multiorgan dysfunction secondary to a complex abdominal condition) மற்றும் வயிற்றுனுள் உள்ள சிக்கலான நிலைமைகள் காரணமாக இறப்பு ஏற்பட்டதாக உத்தியோகபூர்வமாக கூறினார். மனிதரின் இறப்புக்கான காரணம் மருத்துவ ரீதியாக அனைவரினாலும் இலகுவாக விளங்க கூடியதாகவும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும் இதன் காரணமாகவே உலக சுகாதார நிறுவனம் (World Health organization) மரணத்திற்கான காரணத்தினை சர்வதேச நியமம் (WHO format for Medical Certificate of Cause of Death – MCCD) ஒன்றில் வழங்க கூடியதாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இனி ஒவ்வொரு நோய் நிலைமைகளும் மரணத்தினை ஏற்படுத்துமா என பார்ப்போம்

1. மஞ்சள் காமாலை நோய் (Jaundice )

இது மனிதனின் ஈரல் செயலிழந்துள்ளமையினை வெளியில் தெரிவிக்கும் நோயின் குணங்குறி (sign/symptoms) ஆகும். மருத்துவ ரீதியாக இது ஓர் நோய் நிலைமை அல்ல மாறாக நோயின் அறிகுறி. எனவே அவரின் மரணத்திற்கான காரணம் மஞ்சள் காமாலை  என கூறுவது மருத்துவரீதியில் பொருத்தம் அற்றது

2. ஈரலில் கொழுப்பு படிந்தமை (Fatty liver)

இவ்வாறு ஈரலில் கொழுப்பு படிக்கின்றமையை மருத்துவத்தில் fatty liver என்று அழைப்பர். Fatty Liver அதாவது கொழுப்பு ஈரல் (கல்லீரல்) என்பது ஈரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதாகும். இது பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படலாம் (Alcoholic fatty liver) அல்லது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் (nonalcoholic fatty liver) ஏற்படலாம். முறையற்ற உணவுப் பழக்கம், உடலுழைப்பின்மை, உடல் பருமன், நீரிழிவு போன்ற காரணங்களால் இது பெரும்பாலும் வருகிறது. இது ஈரலை பாதித்து, நீண்ட காலப்போக்கில் சிரோசிஸ் (cirrhosis), ஈரல்  செயலிழப்பு (liver failure) போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இறுதியில் இறப்பு  இழைநார் வளர்ச்சி (cirrhosis) , ஈரல்  செயலிழப்பு (liver failure) ஆகியற்றினால்த்தான் ஏற்படும். இறப்பு ஏற்படும் பொழுது அவருக்கு fatty liver என்ற நோய் நிலைமை இருக்காது. எனவே அவரின் மரணத்திற்கான காரணம் கொழுப்பு ஈரல் என கூறுவது மருத்துவரீதியில் பொருத்தம் அற்றது

3. GORD (Gastro-Oesophageal Reflux Disease) 

இரைப்பையும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு இறுக்கி (spincter) காணப்படுகிறது.  இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்.  இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது. இந்த நோய் நிலைமை  மிக அரிதாகவே இரைப்பையினுள் இரத்த பெருக்கினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. சிரோசிஸ் (Cirrhosis)

சிரோசிஸ் (Cirrhosis) என்பதன் தமிழ் அர்த்தம் ஈரல் இழைநார் வளர்ச்சி ஆகும். இது கல்லீரல் திசுக்களில் வடு (scar)ஏற்படுவதைக் குறிக்கும் ஒரு ஈரல் நோயாகும், இது ஈரலின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. ஈரலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் (நீண்டகால ஹெபடைடிஸ், மது அருந்துதல், கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவை) சிரோசிஸ் ஏற்பட காரணமாகலாம். ஈரலின் சாதாரன செல்கள் அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் வடு திசுக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஈரலின் தொழில்பாடு படிப்படியாக குறைவடைந்து செல்லும்.

இயற்கையாகவே எமது ஈரல் தன்னில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீளும் தன்மையுள்ளது ஆனால் ஒருவர் மது அருந்துதல் போன்ற ஈரலுக்கு ஊறு விளைவிக்கும் செயற்பாட்டினை மேற்கொள்வாராயின் இறுதியில் ஈரலின் புத்துஉயிர்க்கும் தன்மை அற்று போகும். அந்தநிலையில் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி மற்றும் வீக்கம், கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், அரிப்பு, சோர்வு போன்றவை ஏற்படலாம். ஒருநிலையில் இறப்பு ஏற்படும்.

சிரோசிஸ் ஏற்படும் பொழுது ஈரலிற்கு உணவு கால்வாய் தொகுதியில் இருந்து போசணைப்பொருட்கள் அடங்கிய குருதியை வழங்கும் தொகுதிப்பெருநாடியில் குருதி அழுத்தம் அதிகரிக்கும் இதன் காரணமாக உணவுக்கால்வாய் தொகுதியில் வெரிகோஸ் ஏற்பட்டு இரத்த குழாய் வெடிப்பினால் இரத்த போக்கு ஏற்படும். இவ்வாறு இரத்த போக்கு ஏற்படும் பொழுது நோயாளிக்கு எந்த வலியும் இருக்காது மேலும் குறித்த அளவு இரத்தம் வெளியேறிய பின்னரே களைப்பு, மயக்கம், அதிகளவு வியர்த்தல், நெஞ்சு படபடப்பு என்பன ஏற்படும். மேலும் இரத்த வாந்தி, மலம் தார் போன்று  கறுப்பாக வெளியேறல் போன்றன ஏற்படும். மேலும் குருதி அதிகளவு வெளியேறும் பொழுது உடலின் முக்கிய அவயவங்களுக்கு செல்லும் குருதியின் அளவு குறைவடையும் இதன் காரணமாக மூளை, சிறுநீரகம்.. போன்ற அங்கங்கள் செயலிழக்கும் இவ்வாறு செயலிழத்தலினை மருத்துவத்தில் multiorgan dysfunction/ Failure என்றழைப்பர். இவ்வாறு பல  அங்கங்கள் செயலிழந்த நோயாளியினை அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வழமையாக சிகிச்சை அளிப்பர். அவர்களின் உடல் நிலையினை பொறுத்து அவர்களின் விதி தீர்மானிக்கப்படும்.  

சாதாரணமாக சிரோசிஸ் ஏற்பட்ட உடனேயே இறப்பு ஏற்படாது ஏனெனில் ஈரல் தன்னால் இயன்ற அளவு வேலைகளை இறுதி வரைக்கும் (Compensated liver cirrhosis) செய்யும் குறித்த நபர் மதுபானம் போன்றவற்றினை தொடந்து பாவிக்கும் நிலையில் ஈரலின் தொழில்பாடு முற்றாக பாதிக்கப்படும் இந்நிலை மருத்துவத்தில் decompensated liver cirrhosis  என்றழைக்கப்படும் இதன் பின்னரே மரணம் ஏற்படும். சிரோசிஸ் ஏற்பட்ட பின்னர் மேற்குறித்த முறை தவிர வேறு முறைகளிலும் ( mechanisms of death) இறப்பு ஏற்படலாம். 

நன்றி 

சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறை ஏன்??

இலங்கையின் நீதிமன்றங்களில்  இதுவரை காலமும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகள் திறந்த நீதிமன்றத்திலேயே பெரும்பாலும் நடைபெற்றுவந்தன, ஒருசில வழக்குகள் மட்டுமே நீதிவானின் பிரத்தியேக அறையில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் கடந்தவாரம் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சாட்சியம் அளிக்கவென பிரத்தியேகமான சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறை இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக கண்டி மேல் நீதிமன்றில் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான விசேட வசதிகள் கொண்ட அறைகள் நாடு பூராகவும் உள்ள நீதி மன்றங்களில் எதிர்வரும் காலத்தில் தாபிக்கப்படவுள்ளன.

சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறைகள் ஏன் அவசியமானவை அவற்றின் பயன்பாடுகள் பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.

பாரம்பரிய திறந்த நீதிமன்ற அறை ஒரு சாட்சிக்கு, குறிப்பாக ஒரு சிறுவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழலாக அமையலாம். இது அவர்களின் சாட்சியம் அளிக்கும் திறனைப் பாதிப்பதோடு, கடுமையான உணர்ச்சி ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் , குழந்தை சாட்சியங்களுக்கான சிறப்பு அறைகளைப் பயன்படுத்துவதை அதிகரித்து வருகின்றன. இந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடங்கள், குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், சட்ட செயல்முறையின் நேர்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பல நன்மைகளையும் பலன்களையும் வழங்குகின்றன.

சிறுவர்களுக்கான சாட்சிய அறைகளின் முக்கிய நன்மைகளை மூன்று முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்: குழந்தையின் உளவியல் நலம், அவர்களின் சாட்சியத்தின் தரம் மற்றும் துல்லியம் மற்றும் நீதித்துறை செயல்முறையின் ஒட்டுமொத்த மேம்பாடு.

1. குழந்தையின் உளவியல் நலனைப் பாதுகாத்தல்

சிறுவர்களுக்கான சாட்சிய அறைகளின் முதன்மையான நன்மை, குழந்தை சாட்சிகளுக்கு ஏற்படும் மன அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் கணிசமாகக் குறைப்பதாகும். ஒரு தனிப்பட்ட, நேயமிக்க இடமாக சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறைகள் இடம் பின்வரும் உளவியல் நன்மைகளை வழங்குகிறது:

  • குறைக்கப்பட்ட பயம் மற்றும் அச்சுறுத்தல் ( Reduced Fear and Intimidation) :

இந்த அறைகள் நீதிமன்றத்தின் கடுமையான சூழலிலிருந்து மாறுபட்டு, வசதியான மற்றும் வயதுக்கு ஏற்ற தளபாடங்களுடன், அமைதியான சூழ்நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிறுவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது.

  • குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாதுகாப்பு:

சிறுவர்  சாட்சிகளுக்கு இருக்கும் ஒரு முக்கிய பயம், குற்றம் சாட்டப்பட்டவரை நேருக்கு நேர் சந்திப்பதாகும். CCTV  or one-way mirrors போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குழந்தை குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒரே அறையில் இல்லாமல் சாட்சியம் அளிக்க இந்த அறைகள் உதவுகின்றன. இந்த பிரிப்பு, குழந்தை மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாவதைக் குறைக்கிறது.

  • உணர்ச்சி ரீதியான ஆதரவு (Emotional Support: ):

இந்த அறைகளில், இடைநிலையாளர்/ சமூக சேவகர் (Child psychologist or child counselor or social worker ) அல்லது சாட்சியமளிக்காத குடும்ப உறுப்பினர் போன்ற ஒரு ஆதரவான நபர் குழந்தையுடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார். இது சாட்சியமளிக்கும் செயல்முறை முழுவதும் குழந்தைக்கு ஆறுதலையும் உறுதியையும் அளிக்கிறது.

  • இரண்டாம் நிலை உளவியல் ரீதியாக பாதிப்பைத் தடுத்தல் (Prevention of Secondary Victimization): நீதிமன்றத்தின் கடுமையான சூழலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் மூலம், சாட்சிய அறைகள் இரண்டாம் நிலை உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன. அதாவது, சட்ட செயல்முறையே குழந்தைக்கு மேலும் உணர்ச்சி ரீதியான தீங்கை ஏற்படுத்துவதைத் தவிர்க்கிறது.

2. சாட்சியத்தின் தரம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துதல் (Enhancing the Quality and Accuracy of Testimony)

பாதுப்பாகவும் பதற்றம் குறைவாகவும் இருக்கும் சூழ்நிலையில் சிறுவர் , தனக்கு நடந்த நிகழ்வுகளைப் பற்றி தெளிவான, ஒத்திசைவான மற்றும் துல்லியமான விவரங்களைக் கொடுக்கும் வாய்ப்பு அதிகம். சாட்சிய அறைகளின் அம்சங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களின் தரத்தை மேம்படுத்த நேரடியாக பங்களிக்கின்றன:

  • மேம்படுத்தப்பட்ட தகவல் பெறல்:

குறைந்த மன அழுத்தம் உள்ள சூழலில், குழந்தைகளால் கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு பதிலளிக்க முடிகிறது. பெரும்பாலும், சிறுவர்களுடன்  வயதுக்கு ஏற்றவாறு தொடர்புகொள்வதில் பயிற்சி பெற்ற ஒரு இடைநிலையாளர் இதற்கு உதவுகிறார். அவர் சிக்கலான சட்டச் சொற்களை எளிதாக்கி, சிறுவர்கள்  கேட்கப்படுவதைப் புரிந்துகொள்வதை உறுதி செய்கிறார். மேலும் இடைநிலையாளர் சிறுவர்களின் அங்க மொழித்தொடர்பான விளக்கத்தினையும் நீதி மன்றிற்கு விளங்கப்படுத்த கூடிய சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது. பல சந்தர்ப்பத்தில் சிறுவர்களுக்கு வாய் மூலமான சொற்கள் வருவதில்லை. இச்சந்தர்ப்பத்தில் அவர்களின் உடல் மொழி முக்கியமானது

  • அதிகரித்த கவனம் (Increased Focus and Concentration):

சாட்சிய அறையின் அமைதியான மற்றும் தனிப்பட்ட அமைப்பு கவனச்சிதறல்களைக் குறைத்து, சிறுவர்  தனது சாட்சியத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

  • சாட்சி மிரட்டலைக் குறைத்தல்(Mitigation of Witness Intimidation):

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நேரடிப் பார்வையிலிருந்து சிறுவர்களை அகற்றுவதன் மூலம், சாட்சிய அறைகள் சாட்சிகளை மிரட்டும் அபாயத்தைக் குறைக்கின்றன. இல்லையெனில், சிறுவர்கள் பயத்தின் காரணமாக தனது சாட்சியத்தை மாற்றக்கூடும் அல்லது மறைக்கக்கூடும்.

3. நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துதல்

சிறுவர்  சாட்சிய அறைகளின் பயன்பாடு குழந்தைக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், சட்ட நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த நேர்மையையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது:

  • சிறந்த ஆதாரத்தைப் பெறுதல் (Obtain best evidence):

ஒரு சிறுவன் திறம்பட தொடர்புகொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம், நீதிமன்றம் முடிந்தவரை “சிறந்த ஆதாரத்தைப்” பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். இது ஒரு நியாயமான மற்றும் தகவலறிந்த முடிவை எட்டுவதற்கு முக்கியமானது.

  • குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாத்தல் (Upholding the Rights of the Accused):

சிறுவர் சாட்சியைப் பாதுகாக்கும் அதே வேளையில், நேரடி வீடியோ இணைப்பு போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, குற்றம் சாட்டப்பட்டவரின் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை உட்பட, ஒரு நியாயமான விசாரணைக்கான உரிமையை உறுதி செய்கிறது. நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறுவர்களின்  சாட்சியத்தை நிகழ்நேரத்தில் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

  • சிறுவர்களிகளின் பங்கேற்புக்கான அதிகரித்த வாய்ப்பு: இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் கிடைப்பது, சிறுவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அறிந்து, மேலும் பல சிறுவர்கள்  முன்வந்து நீதி அமைப்பில் பங்கேற்க ஊக்குவிக்கும்.

சிறுவர் சாட்சிய அறைகள் ஒரு நவீன, குழந்தை நேயமிக்க நீதி அமைப்பின் இன்றியமையாத அங்கமாகும். சிறுவர்களின்  உளவியல் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்த சிறப்பு வசதிகள் மேலும் அதிர்ச்சியடைவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு சிறுவர்களின் குரல் தெளிவாகவும் திறம்படவும் கேட்கப்படுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இறுதியில் நியாயமான மற்றும் நேர்மையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன.

நன்றி

பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை

அண்மையில் ஓர் தாயார் எனது அலுவலகம் வந்திருந்தார், கூடவே அவருடன் அவரின் மகனும் வந்திருந்தார். வந்திருந்த தாயார் மகனை அலுவலகத்தின் வெளியே இருக்க சொல்லிவிட்டு என்னிடம் உரையாட தொடங்கினார். அவர் கூறிய விடயங்களாவது தனது 24 வயதுடைய மகனின் நடத்தையில் அண்மைக்காலமாக வித்தியாசம் தெரிவதாக கூறினார்.  குறிப்பாக அடிக்கடி கோபப்படுவதாகவும், வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அந்த தாயார் குறிப்பிடுகையில் பிளாஸ்டிக் சோடா போத்தல் ஒன்றினுள் தண்ணீர் விட்டு குழாய் ஒன்றினை அதனுள் செலுத்தி அதன் மறுமுனையினை வாயில் வைத்து குமுழி விளையாடுவதாகவும் கூறினார். மேலும் நான் தொடர்ந்து வினாவுகையில் குறிப்பாக மாலை வேளைகளில் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார் மேலும் மகனின் அறையில் அதிகளவான பாவித்த சொக்லட் அலுமினிய பேப்பர் இருப்பத்தினையும் தாயார் அவதானித்தாக கூறினார். இதன் பிற்பாடு அவரின் மகனை அழைத்து நான் போதைப்பொருள் பாவனை தொடர்பாக வினாவிய பொழுது அவர் தான் எந்த விதமான போதைப்பொருள் பாவனையும் செய்யவில்லை என கூறிய நிலையில் அவரின் சிறுநீர் மாதிரியினை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அதன் பிற்பாடு தான், அவர் போதைப்பொருள் பாவிப்பதினை ஒத்துக்கொண்டார். இவ்வாறு பல பெற்றோர், மனைவிமார் தங்கள் பிள்ளைகள் அல்லது கணவர் வீட்டில் போதைப்பொருள் பாவிப்பதினை அறியாமல் உள்ளனர்.

Drug paraphernalia என்பதன் தமிழ் அர்த்தம் போதைப் பொருட்களைத் தயாரிக்க, மறைக்க அல்லது பயன்படுத்த உதவும் உபகரணங்கள் அல்லது பொருட்கள் என்பதாகும். இது போதைப் பொருள்களை  உபயோகிக்க உதவும் எந்தவொரு கருவியையும் குறிக்கும். உதாரணமாக, போதைப் பொருட்களை உள்ளிழுக்க உதவும்  அல்லது செலுத்தும் குழாய்கள், சூடாக்க உதவும் சிறிய உலோக  கரண்டிகள் அல்லது போத்தல்களின்  உலோக மூடிகள் , சோதனை குழாய்கள், பின்பக்கம் அகற்றப்பட்ட தங்குதன் (tungsten-halogen bulb) மின்குமிழ்கள்  சிறிய பைகள் அல்லது வெற்றுப் பெட்டிகள், தீப்பெட்டி, லைட்டர், தராசுகள், உடலினுள் மருந்து செலுத்த உதவும் ஊசிகள், இரத்தத்தினை துடைக்கும் பஞ்சு/ துண்டுகள், கையினை கட்டிட உதவுவம் நூல் (tourniquet)  போன்றவை இதில் அடங்கும்.

குறிப்பாக போதைப்பொருள் புகையினை சேகரித்து நுகரும் வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலசந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தமது அறிவினையும் இணையத்தில் இருக்கும் விளக்கங்களையும் கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான உபகரணங்களை வடிவமைப்பர். 

மேலும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் பொருட்கள், மறைக்க உதவும் பொருட்கள் மற்றும் உபயோகிக்க உதவும் பொருட்கள் யாவும் Drug paraphernalia என்பதில் சட்ட ரீதியாக உள்ளடங்குகின்றது. இப்பொருட்களை தனித்தனியாக நோக்கும் பொழுது அவை பெரும்பாலும் வீட்டு உபயோக பொருட்களாகவே இருக்கும் எனினும் சேர்த்து நோக்கும் பொழுது தான் அவை என்ன நோக்கத்திற்காக பாவிக்கப்படுகின்றது என்பதினை கண்டு பிடிக்கலாம்.

அண்மையில் நடந்த இன்னோர் சம்பவத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் நாணயத்தாளினை சுருளாக சுற்றி போதைப்பொருள் நுகர்ந்தமை தெரியவந்துள்ளது. இன்றைய நிலைமையில் போதைப்பொருள் பாவனையானது எங்கும் பரவியுள்ளது மற்றும் சமூகத்தில் உள்ள பலரும் வேறுபாடுகளை களைந்து இந்த போதைப்பொருள் பாவனையாளர்களாகி அடிமையாளர்களாக மாறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உள்ளவர்கள் இவ்வாறன போதை நுகர உதவும் பொருட்கள் சம்பந்தமான அறிவினை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.

(சமூக நலன் கருதி விரிவான விளக்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)

நன்றி

போதைப்பொருள் பாவனையாளர்களின் திடீர் மரணம் – காரணம்??

சமீபத்திய காலங்களில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது மேலும் அண்மைக்காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் போதைப்பொருளினை பாவித்து கொண்டிருக்கும் பொழுதே அதாவது ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருக்கின்ற பொழுது அல்லது மூக்கின் ஊடாக நுகர்ந்துகொண்டிருக்கின்ற பொழுது  இறக்கின்ற நிகழ்வுகள் கூட சர்வசாதாரணமாகிவிட்டது. இப்பதிவில் ஏன் இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி விளக்கப்படுகின்றது

  1. போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஒருபொழுதும் தூய போதைப்பொருளினை விநியோகிக்க மாட்டார்கள். அவர்கள் பெருமளவு இலாபம் கருதி ஒரு போதைப்பொருளினுள் இன்னொரு போதைப்பொருளினை அல்லது வேறுவகையான பொருட்களை (cutting) கலந்து விற்பார்கள். இனி விடயத்திற்கு வருவோம் இவ்வாறு இலாப நோக்கம் கருதி கலக்கப்படும் பொருட்கள் (Adulterants) பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை உடையன சில சந்தர்ப்பங்களில் அவை பாவனையாளருக்கு கடுமையான ஒவ்வாமையினை (Anaphylactic shock) ஏற்படுத்தி இறப்பினை உடனடியாகவே ஏற்படுத்தும்.
  2.  மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை கலந்து பாவிக்கும் போது ஒன்றின் விளைவினை மற்றைய போதைப்பொருள் தூண்டும் இதன் காரணமாக போதையின் விளைவு அதிகமாகி இறப்பினை உடனடியாக ஏற்படுத்தும். உதாரணமாக பின்வரும் போதைப்பொருட்களின் சேர்க்கை தீங்கானதாக அமையும்     

மதுபானம் + ஓப்பியம்

கொக்கையின் +கெரோயின்

மதுபானம் + கொக்கையின்

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறித்த போதைப்பொருட்கள் குறைந்த அளவில் இருந்தாலும்  மற்றைய போதைப்பொருளின் ஒத்த தாக்கத்தினால் அதன் விளைவு கூட்டப்பட்டு இறப்பு ஏற்படும்.

3. எமது உடலில் ஒவ்வொரு போதைப்பொருளும் இரத்தத்தினுள் சென்று நரம்புத்தொகுதியில் அதற்குறிய உணர்வேற்பிகளில் (Receptors) இணைந்து தொழிற்படுவதன் காரணமாகவே எமது மனித உடலில் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. உணர்வேற்பிகளின் எண்ணிக்கை மனிதன் ஒருவனின் மருந்து அல்லது போதைப்பொருள் பாவனைக்கு ஏற்ப கூடும்  அல்லது குறைவடையும். மேலும் ஒருவர் போதைப்பொருளினை தொடர்ச்சியாக பாவிக்கும் போது அவரின் உடலில் உணரவேற்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதன் காரணமாக நீண்ட காலப்போக்கில் குறித்த அளவிலான போதைப்பொருள் மூலம் அவர் திருப்தியினை அடைய முடியாமல் இருக்கும் (Tolerence) இதன் காரணமாக அவர் சிறிதுசிறிதாக போதைப்பொருளின் அளவினை அதிகரிப்பார். இவ்வாறு காலப்போக்கில் ஒருவர் போதைப்பொருளிற்கு அடிமையாகிவிடுவார்

பல  சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருக்கும் பொழுது அவர்களின் உணர்வேற்பிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் (Receptor Down-Regulation) இந்நிலையில்  போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருந்து விட்டு திடீர் என்று முன்னைய அளவில் பாவிக்கும் பொழுது  குறித்த போதைப்பொருளானது அவர்களின் உடலில் நஞ்சாதலை (Toxicity) ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. போதைப்பொருட்களின் நேரடி விளைவின் காரணமாக உதாரணமாக ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் நேரடியாகவே மூளையின் உணரவேற்பிகளில் தொழிற்பட்டு எமது சுவாசத்தினை குறைக்கும் . மேலும் கொக்கைன் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் எமது இருதய சுற்றோட்டத்தொகுதியினை அளவுக்கு அதிகமாக தூண்டும் இதன் காரணமாக இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து சடுதியான இருதய செயலிழப்பு அல்லது மூளையில் இரத்த கசிவு  ஏற்படும். இதன் காரணமாக மரணம் சம்பவிக்கும்.

5. ஏற்கனவே கூறியவாறு போதைப்பொருட்களில் பல்வேறு விதமான பொருட்கள் கலக்கப்படும். பல சந்தர்ப்பத்தில் போதையினை மேலும் அதிகரிக்கும் முகமாக fentanyl போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட வீரியம் மிக்க ஓபியம் வகை மருந்துகள் அளவு கணக்கு இன்றி பாவனையாளருக்கு தெரியாத வகையில் சேர்க்கப்படும். இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படுகின்றது.  fentanyl என்பது மருத்துவ துறையில் பாவிக்கப்படும் ஓர் வலிநிவாரணி மருந்தாகும் அங்கு வைத்தியரின் கண்காணிப்பில், உரிய அளவில் பாவிக்கப்படுவதினால் இறப்புக்கள் ஏற்படுவது குறைவு. fentanyl  ஆனது ஹெரோயினை விட 30-50 மடங்கு வீரியம் மிக்கது அத்துடன் மோபினை (morphine) விட 100 மடங்கு வீரியம் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி