மருத்துவ துறையில் பல நோய் நிலைமைகளை வைத்தியர்கள் விபரிக்கையில் அந்த நோய் நிலைமை ஓர் “நேர வெடி குண்டு(Time bomb)” என விபரிப்பார்கள் ஏனெனில் அந்த நோய் நிலைமை குணம் குறிகள் அற்று இருக்கும். திடீரென்று அந்த நோய் நிலைமை மோசமாகி குறித்த நபரினை திடீர் இறப்பு நிலைமைக்கு இட்டு செல்லும். இவ்வாறான ஓர் நோய் நிலைமை தான் இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் ஏற்படும் அடைப்பு. தமிழில் பொதுவாக கொலஸ்ட்ரோல் புளொக்/ அடைப்பு என்று சொல்வார்கள் (இருதயத்தின் வால்வுகளில் ஏற்படும் சுருக்கம், இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் ஏற்படும் அடைப்பு என்பன இரண்டு வெவ்வேறான நோய் நிலைமைகள் , இரண்டும் ஒன்றல்ல). அண்மையில் கூட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபொழுது அவருக்கு இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றில் வழக்ககறிஞர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்தில் எமது இருதயத்திற்கு இரத்தம் வழங்கும் முடியுரு நாடிகளில் ஏற்படும் கொலஸ்ட்ரோல் படிவுகள் atherosclerotic plaque என்றழைக்கப்படும். இவ்வாறு முடியுரு நாடியினை ஏறத்தாழ முற்றாக அடைத்த atherosclerotic plaque இணை கீழ்வரும் படம் விளக்குகின்றது

இவ்வாறு உருவாகிய atherosclerotic plaque குறித்த நாடியின் ஊடாக செல்லும் இரத்த ஒட்டத்தினை மட்டுப்படுத்தும் இதன் காரணமாக குறித்த நபருக்கு வேலை செய்யும் பொழுது நெஞ்சு வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். திடீரென்று ஓர் நாள் குறித்த atherosclerotic plaque ஆனது வெடிக்கும் இதன் காரணமாக atherosclerotic plaque இன்னுள்ளே இருந்த பதார்த்தங்கள் நாடியினுள் விடுவிக்கப்படும் இதனை தொடர்ந்து குருதியில் உள்ள குருதி சிறுதட்டுக்கள் இவ்விடத்தில் சேர்த்து முழுமையான அடைப்பினை ஏற்படுத்தும் அதனை தொடந்து முடியுரு நாடியினுடாக செல்லும் இரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
பொதுவாக 70% மேற்பட்ட வகையில் atherosclerotic plaque இனால் அடைப்பு இருந்தால் குறித்த நபருக்கு எந்த நேரமும் மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உள்ளது. இதனால் தான் வைத்தியர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள சிபாரிசு செய்வார்கள்.
இந்த atherosclerotic plaque எப்பொழுது வெடித்து (rupture ) மாரடைப்பினை உண்டாக்கி மரணத்தினை ஏற்படுத்தும் என யாராலும் எதிர்வு கூறமுடியாது. இவ்வாறு atherosclerotic plaque கடுமையாக உள்ள நோயாளிகள் கட்டாயம் மாரடைப்பு நோய் வந்துதான் இறக்கவேண்டும் என்றில்லை. இவ்வாறான நோயாளிகள் விபத்தில் அல்லது வேறு இயற்கையான நோய் நிலைமைகளினால் இறந்துள்ளனர் வேறுசிலர் தற்கொலை செய்துகூட உள்ளனர். மாறாக இவ்வாறு atherosclerotic plaque கடுமையாக உள்ள நோயாளிகள் atherosclerotic plaque வெடித்து மாரடைப்பு வந்து இறந்தும் உள்ளனர்.
மேற்குறித்த நோய் நிலமை தவிர கீழ்வரும் நோய் நிலைமைகள் கூட “நேர வெடி குண்டு(Time bomb)” என்று அழைக்கப்படும் உதாரணமாக பெருநாடி அனீரிசிம் (Aortic Aneurysm), உயர் குருதி அழுத்தம், Melioidosis (Vietnamese Time Bomb)… ஏனெனில் குறித்த நோய் நிலைமைகள் எப்பொழுது மோசமடைந்து உயிர் ஆபத்தினை விளைவிக்கும் என்று யாருக்கும் தெரியாது.
நன்றி






















