இறந்தவர் உயிர்த்தெழுந்தாரா???

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் எனக்கருதி வைத்திய சாலையின் பிரேத அறைக்கு அவரின் சடலம் அனுப்பப்பட்டது. அங்கு அவரின் உறவினர்கள் அவரின் சடலத்தினை பார்வையிட சென்ற பொழுது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது அதனை தொடர்ந்து அவர் மீளவும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான சம்பவங்கள் பல உலகில் இடம்பெற்றுள்ளன. ஏன் இவ்வாறு நடைபெற்றது என்பது பற்றிய விளக்கமே இப்பதிவு ஆகும்.


மருத்துவ உலகில் இவ்வாறு நடைபெறுவதினை SUSPENDED ANIMATION (APPARENT DEATH) என்றழைப்பர். அதாவது சில செயற்பாடுகளின் பொழுது எமது இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் மேற்படி செயற்பாடுகள் நடைபெறும். சாதரணமாக ஓர் நபரில் இறப்பினை உறுதிப்படுத்தும் மருத்துவ முறைகளினால் இச்சந்தர்ப்பத்தில் இறப்பினை உறுதிப்படுத்த முடியாது, இதன் காரணமாக வைத்தியர்கள் குறித்த நபர் இறந்து விட்டதாக தவறுதலான முடிவினை எடுப்பர்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் மேற்படி நடைபெறும்.
1. யோகா பயிற்சியின் பொழுது
2. ஒரு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில்
3. நீரில் மூழ்கி இறக்கும் தறுவாயில்
4. மின்சார தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது
5. அதீத குளிர் அல்லது வெப்பத்திற்கு உள்ளாகும் பொழுது
6. பொது மயக்க மருந்து கொடுத்தலின் பொழுது
7. வலிப்பு வரும் பொழுது
9. பாம்பு கடித்தலின் பொழுது
10. நஞ்சினை அல்லது சிலவகையான போதை பொருட்களை உட்கொள்ளும் பொழுது
11. உடல் ஏதாவது ஓர் காரணத்தினால் அதிர்ச்சிக்கு (Shock) உள்ளாகும் பொழுது- உதாரணமாக வயிற்றோட்டம், வாந்தி போன்றவற்றினால் அதிக நீரிழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில்

மேற்குறித்த சந்தர்ப்பங்களில் குறித்த நபரில் இறப்பு ஏற்பட்டுள்ளதா? என வைத்தியர்கள் கவனமாக பரிசோதிக்க வேண்டும் அத்துடன் குறித்த நபருக்கான உயிர் காப்பு சிகிச்சை முறையினை குறிப்பிட்ட மணி நேரத்திற்கு கொண்டு நடாத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மீளவும் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகள் மீளவும் சாதாரண நிலைமைக்கு வரலாம்.
ஓர் நபருக்கு மேற்குறித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கட்டாயம் SUSPENDED ANIMATION (APPARENT DEATH) என்ற நிலைமை வரும் என்றில்லை, குறித்த சில நபர்களுக்கே இந்த நிலைமை உண்டாகும். இதன் காரணமாகவே முன்னைய காலங்களில் இறந்த நபரின் உடலினை 02 மணித்தியாலங்களாக வைத்திய சாலையின் விடுதியில் வைத்திருந்த பின்னரே வெளியில் கொண்டுசெல்ல அனுமதிப்பர். ஆனால் தற்காலத்தில் நவீன முறைகள் மூலம் மரணம் உறுதிப்படுத்த படுவதினால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது அரிது.
முற்றும்

தேங்காய் எண்ணெய் புற்று நோயினை உண்டாக்குமா?

கடந்த சில தினங்களாக இலங்கையில் சகல பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் அடிபடும் விடயமே புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தங்களினை கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அதன் அவற்றின் தகுதி சான்றிதழ் வெளியாகும் முன்னரே சுங்கத்தில் இருந்து அவை விடுவிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே. இவ்வாறு எல்லோரும் பயப்பட காரணம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணையில் aflatoxin என்ற புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தம் இருந்தமையே ஆகும். இவ்வாறே இரு வருடங்களுக்கு முன்னர் aflatoxin அடங்கிய செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
இயற்கையாகவே தேங்காயின் கொப்பராவில் aflatoxin இணை உற்பத்தி செய்யும் Aspergillus flavus, Aspergillus parasiticus , Aspergillus nomius போன்ற பங்கசுக்கள் வளரும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக இயற்கையாகவே தேங்காய் எண்ணையில் aflatoxin காணப்படும். எனவே இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயிலும் aflatoxin காணப்படலாம். கொப்பரா உற்பத்தியின் பொழுது உரிய சுகாதார முறைகளை கைக்கொள்ள தவறுவதால் இவ்வாறு alfatoxin தேங்காய் எண்ணையில் சேர்வடைகின்றது. ஒவ்வொரு உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்களும் தமக்கு உரிய தரக்கட்டுப்பாடு அளவினை கொண்டுள்ளன உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனுமதிக்கப்படும் அதி அளவு மொத்த aflatoxin 4 μg/kg மற்றும் aflatoxin B1 2 μg/kg ஆகும்.

Coconut halves affected by mold fungi on a white backgroun… | Flickr


Aflatoxin மட்டும் 18 வகையான உப வகைகள் உண்டு. இதில் aflatoxin b1 என்பதே மிகவும் ஆபத்தானது, இது class 1 என்ற carcinogen  (புற்று நோயினை உருவாக்கும் காரணி )  ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது class 1 என்றால் இந்த பதார்த்தம் அடங்கிய உணவு பொருட்களை உட்கொண்டால் நிச்சயமாக புற்று நோய் உண்டாகும் சாத்தியம் உள்ளது. முக்கியமாக ஈரல் புற்று நோய் உருவாகும். இந்த aflatoxin ஆனது வெப்பத்தினால் அழிவடையாது அதன்காரணமாக சமைத்த பின்னரும் இரசாயன ரீதியில் உயிர்ப்பாக காணப்படும். மேலும் இவ்வாறு aflatoxin இனால் பழுதடைந்த உணவுகளை உட்கொண்ட பசுக்களின் பாலில் aflatoxin b1 இன் பக்க விளைபொருள் ஆகிய  aflatoxin m1 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து aflatoxin எவ்வளவு ஆபத்தானது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
முக்கியமாக Aspergillus flavus என்ற பங்கசு தானியங்களான சோளம், கச்சான், கொப்பரா , அரிசி, மிளகு, செத்தல் மிளகாய் போன்றவற்றில் இயற்கையாக வளரும். முக்கியமாக மேற்குறித்த தானியங்களினை வெப்பமான ஈரலிப்பான இடங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பொழுதும், மழை நாட்களில் அறுவடை செய்யும் பொழுதும்  இந்த பங்கசு தொற்றி கொள்ளும்.
இவ்வகையான தொற்றுதல் அடைந்த உணவுகளை உண்பதினால் என்ன சுகாதார சீர்கேடுகள் உண்டாகும்? Aflatoxin இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உண்டாகும் நிலை  aflatoxicosis என்றழைக்கப்படும். இந்நிலையினால்  ஈரல் புற்று நோய், ஈரல் அழற்சி (cirrhosis and Reye’s syndrome), உணவுகள் சமிபாடு அடையாத்தனமை,  போன்றன ஏற்படும்.
இவ்வாறு இந்த பங்கசு  பாதித்த உணவுகளை அடையாளம் காணுவது? மிளகாயில் கறுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள் , கச்சானில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பருப்புகள், சோளத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி, தேங்காய் கொப்பராவின் பழுதடைந்த  கறுப்பு நிறமாக பகுதி, வெங்காயம் மற்றும் உள்ளியில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி ஆகியன பங்கசினால் பாதிக்கபட்ட பகுதிகள் ஆகும் இவற்றினை மக்கள் உண்பதினை தவிர்ப்பது நல்லது.
எவ்வாறு இந்த பங்கசு தொற்றினை தவிர்ப்பது? நாம் மேற்குறித்த உணவுகளை களஞ்சிய படுத்தும் பொழுது உலர்ந்த, இரலிப்பற்ற இடங்களில் களஞ்சிய படுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லை. எம்மில் எத்தனை பேர் சமைக்கும் பொழுது பங்கசு  தோற்றிய உணவு பகுதிகளை அகற்றி விட்டு சமைக்கின்றோம்  என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
முற்றும்

சிறுவன் ஏன் உயிர் இழந்தான்?

மோட்டார் வண்டியில் இருந்த பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஒருசில நாட்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம், தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தில் தம்புள்ளை – வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி கற்கும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் நேற்று மதியம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை முகர்ந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து மயக்கமடைந்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Petition · Actively work towards increasing awareness of volatile substance  abuse, the dangers of taking part and the products used · Change.org

எம்மில் பலருக்கு இவ்வாறு பெற்றோலிய பொருட்களின் வாசனையினை அதிகளவில் முகர்ந்தால் சடுதியாக மரணம் ஏற்படும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு பெற்றோல், மண்ணெண்ணெய், டிசல், டின்னர், தேர்ப்பன்டைன், ஒயில் பெயிண்ட் போன்ற பெற்றோலிய பொருட்களை மற்றும் சில சேதன கரைப்பான்களை (organic solvents) அதிகளவு நுகரும் பொழுது சடுதியாக சடுதியாக மரணம் சம்பவிக்கும். ஒருசிலர் இவ்வாறன பாதார்த்தங்களினை விரும்பி முகர்வர். இவ்வாறு முகரும் பொழுது அவர்களுக்கு அவர்களுக்கு இனம் புரியாத சந்தோச உணர்வு ஏற்படுவதே (distortion of consciousness) ஆகும். காலப்போக்கில் இச்செயற்பாட்டுக்கு அவர்கள் அடிமையாகும் தன்மை ஏற்படும் (volatile substance abuse).

இனி ஏன் அவர்களுக்கு இவ்வாறு சடுதியாக மரணம் சம்பவிக்கின்றது என பார்ப்போம்

  1. இங்கு முகரப்படும் சேதன கரைப்பான்கள் எமது இருதயத்தில் தாக்கமடைந்து இருதயத் தசையினை எமது உடலில் உள்ள அட்ரினலின் மற்றும் நோர் அட்ரினலின் ஆகியவற்றின் இலகுவான தாகத்திற்கு உள்ளாக்கும். இதன் காரணமாக எமது இருதயத் துடிப்பின் ரிதம் மாற்றம் அடையும் அதன் காரணமாக சடுதியான இறப்பு ஏற்படும்.( Any of the solvents appears to have the ability to sensitize the myocardium to the action of catecholamines,)
  2. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான பெற்றோலிய பொருட்கள் மனிதனின் இருதயத்தில் கணிசமான அளவு நோய்த்தாக்கத்தினை (chemical mediated myocarditis) ஏற்படுத்தியும் இறப்பினை ஏற்படுத்தியுள்ளன.
  3. பல சந்தர்ப்பங்களில் பலர் பொலித்தீன் பைகளில் இவ்வாறான திரவங்களினை இட்டு முகருகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் அதிக செறிவில் தொடர்ச்சியாக அந்த பெற்றோலிய பொருளினை முகருவத்தினாலும் மூச்சு திணறல் ஏற்படுவதினாலும் சடுதியான இறப்பு ஏற்படும். மேலும் குறித்த நேர இடைவெளியின் பின்னர் சுயநினைவு மாற்றம் அடைவதன் காரணமாக அவர்களை நெருங்கும் ஆபத்தில் இருந்து அவர்களால் விலக முடிவதில்லை. இவ்வாறு பரிதாபகரமாக மரணத்தினை தழுவிக்கொள்கின்றனர் (plastic bag asphyxia).
  4. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு சுயநினைவு இழந்து இருக்கும் சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்க நேரிடும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் வாந்தியானது சுவாச குழாயினுள் இறங்கி மூச்சுத்திணறலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

எனவே இவ்வாறான ஆபத்தான பழக்க வழக்கங்களினை விரும்பியோ அல்லது தற்செயலாகவோ கைக்கொள்ளாமலே எமது உயிரினை பாதுகாப்போம்
முற்றும்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழத்தல் ஏன்?

அண்மைகாலமாக இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதன் காரணமாக இள வயதினரே அதிகளவில் மரணத்தினை தழுவுவதோடு மட்டும் அல்லாது அதிகளவிலான இளவயதினர் பாரதூரமான காயங்களுக்கும் உள்ளாகின்றனர். அதிகளவு காலம் வைத்திய சாலையில் தங்கிநின்று சிகிச்சை பெற நேரிடுகின்றது இதனால் உறவினர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவதோடு காயம் அடைந்தவர் பல சந்தர்ப்பங்களில் ஊனம் அடையவும் நேரிடுகின்றது. இந்த பதிவு எழுதப்படும் பொழுதும் இவ்வாறான ஓர் விபத்தில் மன்னார் மாவட்டத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறான மோட்டார் சைக்கிள் விபத்துக்களுக்கு பிரதான காரணம் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரம் உள்ள மரங்கள் மற்றும் மதில் போன்றவற்றில் மோதுதல் ஆகும். பலரும் இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழப்பதற்கு வேகம் தான் முக்கிய காரணம் என்று கருதுகின்றனர். அது உண்மை தான் என்றாலும் வேகம் தவிர பல்வேறு காரணிகள் இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழக்க ஏதுவாகின்றது. அவற்றில் முக்கியமானவை வருமாறு

  • வீதியின் அமைப்பும் வீதியின் மேற்பரப்பு தன்மையும்
    நேரிய நீண்ட வீதியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது குறைவு மாறாக அதி வேகத்தில் பயணிக்கும் பொழுது வீதியில் திடீரென எதிர்ப்படும் கல், கிடங்குகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றில் மோதுவதினை தடுக்கும் முகமாக வேறுதிசைக்கு மோட்டார் சைக்கிளினை திருப்பும் பொழுது இவ்வாறு ஏற்படுகின்றது. அதிக வேகத்தில் பிரயாணிக்கும் பொழுது வீதியின் வளைவில் அல்லது சந்தியில் சடுதியாக மோட்டார் சைக்கிளினை திருப்பும் பொழுது பொதுவாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடினை இழந்து விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம். வீதியின் மேற்பரப்பில் கிரவல் கற்கள் அல்லது ஈரலிப்பு (மழை அல்லது அதிக பனி ) காணப்படும் பொழுது இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடினை இழக்கும் சந்தர்ப்பம் அதிகம் ஆகும்.
  • வேகம்
  • அதிக வேகம் ( 50km /h ) இற்கும் அதிகமான வேகத்தில் செல்லும் பொழுதுதான் இத்தகைய விபத்துக்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது. வேகமானது 60km /h இணை நெருங்கும் பொழுது இவ்வாறு கட்டுப்பாட்டினை இழத்தல் இரு மடங்காக அதிகரிக்கும். மேலும் குறித்த வேகத்தில் நேர் வீதியில் இருந்து வளைவிற்கு செலுத்தும் பொழுதும் கட்டுப்பாடினை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
  • மோட்டார் சைக்கிளின் அமைப்பு
    இன்றைய உலகில் வாடிக்கையாளரின் தேவை கருதி பல்வேறு பட்ட வடிவமைப்புகளில் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வகையானவை இவ்வாறு இலகுவாக கட்டுப்பாட்டினை இழந்துவிபத்துக்களாகும் தன்மை உடையவை. மேலும் டயர்களில் உள்ள தவாளிப்பு தேய்ந்து இருக்கின்றமையும் இவ்வாறு விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கும்.
12 Different Types of Motorcycles (Guide) | Different types of motorcycles, Motorcycle  types, Enduro motorcycle
  • விபத்து நடைபெறும் காலப்பகுதி
    தற்பொழுதுள்ள தரவுகளின் பிரகாரம் இவ்வாறு கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளதால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலேயே அதிகளவு நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து குறைவாக இருப்பதன் காரணமாக மோட்டார் சைக்கில் ஓட்டிகள் அதிகளவு வேகத்தில் பயணிப்பதே காரணம் ஆகும்.
  • மதுபானத்தின் அளவு
    நாம் அருந்தும் மதுபானம் பல்வேறுவித உடலியல் மற்றும் மனோவியல் மாற்றங்களினை ஏற்படுத்தும். குறித்த செறிவில் இரத்தத்தில் உள்ள பொழுது மோட்டார் சைக்கிளோட்டிகள் ஆபத்தான தீர்மானங்களினை அல்லது முடிவுகளினை வெறுமனே துணிந்து எடுப்பர் (taking high risk behavior) இதுவும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்கு உள்ளாவதற்கு ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
    முற்றும்

கட்டப்பஞ்சாயத்து

இந்தியாவின் கிராமங்கள் தோறும் நடைமுறையில் இருக்கும் கட்டப்பஞ்சாயத்து முறைமை யாவரும் அறிந்ததே . இதில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் பெரும்பாலான தீர்ப்புக்கள் நகைப்புக்குரியதாகவும் இலகுவாக சவாலுக்கு உட்படுத்த கூடியதாகவும் உள்ளது. எனினும் கிராம மக்களின் சிறுசிறு பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் இடமாக கட்டப்பஞ்சாயத்து முறைமை இருப்பதினால் பெருமளவிலான மக்கள் அதன் மூலம் பயன் பெறுவதோடு அந்த முறைமை நீடித்து நிற்கின்றது.
இலங்கையில் அரசமைப்பு ரீதியாக இவ்வாறான ஓர் முறைமை இல்லை. பொதுவாக சமூகத்தில் அதிக அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது வேறு நபர்கள் தனிப்பட்டவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதினை “கட்டப்பஞ்சாயத்து” தீர்ப்பு என கூறுவர்.
இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறான ஓர் புதிய கலாச்சாரம் உருவெடுத்து வருகின்றது. முக்கியமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிலும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் நடைபெறும் பொழுது அதனை நடைமுறையில் இருக்கும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் அதற்கு வெளியிலேயே தீர்வு காணும் நடவடிக்கைகள் நடைபெறுவத்தினை அவதானிக்க கூடியதாக உள்ளது.
யார் தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்? குறிப்பாக பாடசாலை அதிபர்கள், போலீசார், கிராமசேவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மத தலைவர்கள்போன்றோரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய நோக்கமே இவ்வாறான சம்பவத்தினை வெளி உலகத்திற்கும் நீதிமன்றிற்கும் தெரியாமல் மறைப்பது தான். இவர்கள் குற்றம் புரிந்த தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு ஆகியோரிடம் கலந்துரையாடி ஒருசில பயமுறுத்தல்களுடன் குற்றம் புரிந்த தரப்பிற்கு சார்பான தீர்ப்பொன்றினை திணிப்பர். இதன் பொழுது பாதிக்கப்பட்டவருக்கு பணம், ஆடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடமைப்பு உதவிகள் போன்றன வழங்கப்படும்.
இவ்வாறான கட்டப்பஞ்சாயத்து முறையினால் சமூக ரீதியில் பல தாக்கங்கள் ஏற்படும், அவற்றில் ஒரு சில

  1. குறிப்பாக பாதிக்கப்பட நபர்களிற்கு உரிய நியாயமான தீர்வு கிடைக்காது மேலும் அதுகுறித்து அவர்கள் முறையிடாது இருக்க பயமுறுத்தப்படுவர்.
  2. குறித்த துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இதன் காரணமாக பாதிப்பட்ட நபர் வன்முறையான முறையில் தீர்வினை காண விளையலாம் அல்லது இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.
  3. மேற்படி மாவட்டங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் அவர்களிடத்து கடுமையான கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும்.
  4. பாலியல் குற்றம் புரிந்தவர் சுதந்திரமாகவும் பாதிப்பட்ட நபர் அடங்கி வாழவும் நேரிடும் இதன் காரணமாக இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெறும்.
  5. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற மறுப்பதினால் அவர் தொடர்ச்சியான உடல் மற்றும் உள தாக்கங்களுக்கு உட்படுவர்.
கட்டப்பஞ்சாயத்து - Home | Facebook

மக்களும் இவ்வாறான முறைமைகளை நாட பல்வேறு காரணிகள் எதுவாக அமைந்து விடுகின்றன. அவற்றில் ஒருசில வருமாறு

1.பல்வேறு காரணங்களினால் இலங்கையின் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனம்.

2. நீதிமன்றில் தீர்ப்புக்கள் வழங்க பலவருடங்கள் காலதாமதம் ஆகின்றமை.

3. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு சமூகத்தில் கிடைக்கும் அவமரியாதைகள் மற்றும் அசௌகரியங்கள்.

4. உரிய நீதியினை பெற அதிக செலவீனங்கள் ஏற்படுகின்றமை

எனவே நாம் இவ்வாறான பல தீமைகளை ஏற்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதினை ஊக்குவிக்க கூடாது.

முற்றும்

பெற்றால்தான் பிள்ளையா?

பெண் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர், நடுத்தர வயதுடைய ஓர் பெண்மணி அவரின் இரட்டை பிள்ளைகளுடனும் மற்றைய அவரின் இரு பிள்ளைகளுடனும் சகிதம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஏன் அவர்கள் வந்தார்கள் என்று விசாரித்த பொழுது தான் விடயம் தெரிய வந்தது. அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் DNA பரிசோதனைக்காக இரத்தத்தினை வழங்கும் பொருட்டு வந்திருந்தனர். பெண்மணியின் கணவர் போதைக்கு அடிமையானவர் அத்துடன் தனது மனைவியின் நடத்தை மீது ஒருசில வருடங்களாகசந்தேகம் கொண்டு நாளாந்தம் சண்டை இடுபவர். இறுதியில் கொடுமை தாங்காத மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றினை நாட, அங்கு கணவன் தரப்பு விவாதத்தினை கேட்ட நீதிமன்றம் DNA பரிசோதனை செய்யுமாறு கட்டளையிட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே அவர்கள் வந்திருந்தனர.
வந்ததில் இருந்து அந்த பெண் அழுத்தவண்ணமே இருந்தாள். அவளிடம் வைத்தியர் தகவல்களை பெறுவது என்பது மிகக் கடினமானதாகவே இருந்தது. இவ்வாறான உணர்ச்சிமயமான சூழ்நிலைகளில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மிக ஆதரவோடும் பரிவோடும் கதைத்து தகவல்களை பெற்றுவிடுவார்கள், அவர்களை இந்த விடயத்தில் கில்லாடிகள் என்றே சொல்லவேண்டும். இங்கும் இவ்வாறே ஓர் பெண் ஊழியர் தகவல்களை பெற்றார்.

dna testக்கான பட முடிவுகள்


மேலும் அந்த பெண்மணி வைத்தியரிடம் ஓர் வேண்டுகை விடுத்தார். அது யாதெனில் இரட்டை குழந்தைகளில் ஒருவரான ஆண் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதே, அதனை தொடர்ந்து அவர் கூறிய தகவல் ஆச்சரியம் தருவதாய் இருந்தது. அந்த பெண் 2008 ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தில் திருமணம் செய்தார். 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் குறித்த பெண்ணின் கணவர் மட்டும் இராணுவ கட்டுப்பாட்டிற்கு செல்ல அவள் மட்டும் தனியே தங்கி விட்டாள். யுத்தத்தின் காரணமாக அவள் எவ்விதமான தாய் சேய் கிளினிக்குக்கோ வேறு பரிசோதனைகளுக்கோ செல்லவில்லை, இவ்வாறக இருந்த அவள் 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுது தான் அந்த சம்பவம் நடைபெற்றது. அவள் தங்கியிருந்த கட்டிலின் அருகே இருந்த காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை காயங்களினால் மோசமடையத்தொடங்கியது அதனை தொடர்ந்து வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை பிரசவித்தனர், தூரதிஷ்டாவசமாக அந்த குழந்தையின் தாயார் மரணித்து விடுகின்றார். அதனைத் தொடர்ந்து சில நாட்களில் இந்த பெண்மணிக்கும் குழந்தை பிறக்கின்றது. அந்த இரு குழந்தைகளையும் தனது குழந்தைகளாக பதிவு செய்து வளர்த்து வருகின்றாள். இந்த விடயம் கணவனுக்கு கூட தெரியவில்லை மேலும் யுத்தத்தின் காரணமாக உறவினர் ஒருவரும் வைத்திய சாலையில் தங்கியிருக்கவில்லை அதன் காரணமாக இந்த சம்பவம் பற்றி அவளைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியவில்லை. இவ்விடயம் காரணமாகவே அவள் பயமும் கவலையும் கொண்டிருந்தாள். இறுதியாக போலீஸ் உத்தியோகத்தரின் அறிக்கையின் படி கடைசி பிள்ளையின் பிறப்பு சம்பந்தமாகவே கணவர் கணவர் சந்தேகம் கொண்டிருந்தார் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அக்குறித்த பிள்ளையின் இரத்த மாதிரியினை பெற்று அதற்கு மட்டும் DNA பரிசோதனை செய்வது என தீர்மானிக்கப்பட்டு அதன் பிரகாரம் இரத்த மாதிரிகள் குறித்த போலீசாரிடம் DNA பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. குறித்த பெண்மணி தனது எல்லா பிள்ளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றபயம் காரணமாகவும் வைத்தியரிடம் உண்மை கூறவேண்டும் என்பதாலுமே இவ்விடயத்தினை கூறவேண்டி வந்திருக்கலாம். DNA பரிசோதனைகள் பல குடும்பங்களை பிரித்தும் சில குடும்பங்களை சேர்த்தும் வைத்துள்ளன.

முற்றும்

ஆயுததாரி மாட்டியது எவ்வாறு?

அந்த கிராமம் முல்லை மாவட்டத்தின் காடுகளை அண்டிய படியே அமைந்திருக்கும் ஓர் கிராமம். வழமையாக போலீசார் யாருமே பிரச்சனை என்று கிராமத்தினுள் வருவதில்லை. அன்று இரவு 8 மணியிருக்கும் அந்த குடும்பத்தலைவர் வயலில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை, வீதியிலே இனம் தெரியாத ஆயுத தாரியின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி அந்த இடத்திலேயே  மரணம் அடைந்தார். அடுத்தநாள் அந்த கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பு. மக்கள் யார் தான் இந்த கொடூர செயலை செய்தார்கள் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். தடயவியல் போலீசார், சட்ட வைத்திய நிபுணர், மாஜிஸ்திரேட் ஆகியோர் இது சம்பந்தமான விசாரணைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

புலன் விசாரணையில் இறந்தவர் ஓர் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியினால் சுடப்பட்டே இறந்தமை தெரியவந்தது. மேலும் நடந்த புலனாய்வில் துப்பாக்கியின் குண்டு தயாரிப்பின் பொழுது சக்கையாக (wad) பயன்படுத்தப்பட்ட பேப்பர் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அது கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டு 8 இற்குரிய தமிழ் புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட ஓர் கடதாசியினால் செய்யப்பட்ட சக்கை ஆகும். அதன் பின்னர் போலீசார் மிக இலகுவாக ஆயுத தாரியினை அடையாளம் கண்டனர். அவர் வேறுயாரும் அல்ல ஒரு சில தினங்களுக்கு முன்னர் இறந்தவருடன் கள்ளு தவறணையில் முரண்பட்ட இறந்தவரின் நண்பரே ஆவார் .

JaypeeDigital | eBook Reader

நாட்டுத்துப்பாக்கி மற்றும் Smooth Bore Weapon (SBW)/ Shot Gun போன்றவற்றில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவையில் இவ்வாறான சக்கைகள் பயன்பயனாடுத்தப்படுகின்றன. நாட்டுத்துப்பாக்கியில் பலரும் இதனை கடதாசி, காட்போட் போன்றவற்றினை பயன்படுத்தி தயாரிப்பர். Shot Gun போன்றவற்றில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட சக்கை பயன்படுத்தப்படும். சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் இந்த சக்கைகள் கூட அடையாளம் காணத்தக்க விதத்தில் காயங்களினை ஏற்படுத்தும்.

Cards & wads for black powder cartridges - Track of the Wolf

Plastic Forever: Shoot Your Wad

மேலே உள்ள படங்களில் வெவேறு வித்தியாசமான வடிவங்களில் உள்ள கடதாசியினால் மற்றும் பிளாஷ்டிக்கினால் செய்யப்பட்ட சக்கைகளை காணலாம்
முற்றும்

திருமணம் ஆகாமலே….

அண்மையில் ஓர் பெண் திருமணம் ஆகியிராத நிலையில் பிரசவித்த சிசு ஆனது பேர்த்தியினால் கொல்லப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டமை பலரும் அறிந்தமையே. இவ்வாறான சம்பவங்களை நாம் முற்று முழுதாக எம்மால் தடுத்து விடமுடியாது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு பல்வேறுபட்ட காரணிகள் ஏதுவாயுள்ளன. அவற்றில் சில

1. தொடர்ச்சியான வறுமை நிலைமை

2. கருத்தடை சாதனங்கள் பற்றிய அறிவின்மை

3. இளவயது திருமணமும் விவாகரத்துக்களும்

4. கணவன் வெளிநாட்டில் உள்ளமை

5. பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய அறிவின்மை 

6. திருமணம் ஆகாமல் கருத்தரித்தல் 

இவ்வாறான காரணங்களில் முக்கியமானது  “பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய அறிவின்மை” என்பதாகும். இங்கு பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் என்பது இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தல், சட்ட ஆலோசனைகள் வழங்கல், தேவை ஏற்படின் DNA பரிசோதனை செய்தல், உளவள ஆலோசனைகள் வழங்கல்   போன்றன அடங்கும்.

சில சந்தர்ப்பங்களில் குறித்த  பெண் ஆனவள் இவ்வாறு தனக்கு பிறக்கும்  குழந்தையினை தத்து கொடுக்க விரும்பினால் அதற்கான வசதியினை ஏற்படுத்தி கொடுத்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்காலிக வதிவிடம் வழங்கல், உடை மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கல், பிள்ளை பேற்றிற்கான வசதிகள் வழங்கல், பிறக்கும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் வழங்கல், சட்ட ரீதியாக தத்து கொடுக்க உதவிசெய்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான தொழில் பயிற்சிகள், வாழ்வாதார உதவிகள்  போன்றன உள்ளடங்கும்.

மேற்குறித்த சேவைகள் யாவும்  அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் கூட இச்சேவைகளை பெறக்கூடியதாக உள்ளது. இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் கிடைக்கும் இச்சேவைகள் பற்றி பலருக்கும் தெரியாது என்பதே ஆகும். அத்துடன் இங்குள்ள விசேடம் என்னவெனில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்பதே அத்துடன் இவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு வெளியார் யாரும் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு பல்வேறுபட்ட தொழில் வல்லுநர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் புனர்வாழ்விற்கு உரிய ஆலோசனைகளும் உதவிகளும் வழங்குவர்.

மேலும் சில மதரீதியான நிறுவனங்களும் இவ்வாறான சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது பிரதேச செயலகத்தினை அணுகுவதன் மூலம் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் … போன்றோர் மூலமாக) அல்லது சட்ட வைத்திய அதிகாரிகளை அணுகுவதன் மூலம் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

கூட்டு பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் புனர்வாழ்வு தொடர்ப்பாக அரச அதிகாரிகளுடனும் குறித்த பெண்ணுடனும் இவ்வாறான ஓர் சேவை வழங்கும் நிலையத்தில் கலந்துரையாடல் (Multi-disciplinary case conference) நடைபெறுவதினை மேற்குறித்த படத்தில் காணலாம்.

முற்றும்

மரணித்தோருக்கு மரியாதை


இது அவளுக்கு இரண்டாவது கர்ப்பம். பல வருட இடைவெளியின் பின்னர் உருவாகிய பிள்ளை என்பதினால் அவள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் பிரசத்திற்காக காத்திருந்தாள். எதிர்பாராத விதமாக அவளது குழந்தை பிரசத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே கருப்பையினுள் இறந்து விடுகின்றது. இச்சம்பவம் அவளுக்கும் அவளின் கணவருக்கும் பேரிடியாக அமைந்து விடுகின்றது. பலத்த சிரமத்தின் மத்தியில் இறந்த குழந்தை பிறப்பிக்க படுகின்றது அதன் பின்னர் பிரசவ வேதனையிலும் அவள் வைத்திய சாலை ஊழியரிடம் இறந்த தனது குழந்தையினை காட்டிடுமாறு கேட்கின்றாள். அப்பொழுது ஊழியர் தனது ஓர் கையினால் ஓர் கடதாசி பெட்டியில் ஓர் இறந்த குழந்தையினை இலையான் மொய்த்த வண்ணம் உள்ளபோது காண்பித்தார். இறந்த விலங்குகளின் குட்டி மாதிரி தனது பிள்ளையினை அம்மணமாக காட்டியது அவளின் மனஅழுத்தத்தினை மேலும் அதிகமாகியது, என்னவென்றாலும் பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையல்லவா. அவள் ஊழியரிடம் கூறினாள் குழந்தைக்கு வாங்கிய உடுப்புகள் உள்ளன அவற்றினை உடலிற்கு அணிவித்து விடுமாறு மன்றாடினாள் . இது இறுதியில் வாய்த்தர்க்கத்தில்தான் முடிந்தது. அவளின் மனநிலை காரணமாக குழந்தையின் உடலினை உறவினர்களினால் வீட்டிற்கு கொண்டுபோக முடியவில்லை. ஒரு சில வாரங்களின் பின்னர் அவளின் விருப்பத்தினை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் நிவர்த்தி செய்தனர். அதன் பின்னரே அவளினால் அந்த இழப்பில் இருந்து விரைவாக மீண்டெழ முடிந்தது.


ஓர் நபர் தனது வாழ்நாளில் எமக்கு நண்பனாக இருந்திருக்கலாம் அல்லது பரம எதிரியாக இருந்திருக்கலாம் ஆனால் குறித்த நபர் மரணம் அடைந்த பின்னர் அவரின் உடலுக்கு அல்லது அவரிற்கு மரியாதை செலுத்துவது என்பது வளர்ச்சியடைந்த நாகரீகம் ஒன்றின் பண்பாகும். இறந்த ஒருவருக்கு மரியாதை அல்லது கணம் செலுத்துதல் என்பது பல்வேறு விடயங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில வருமாறு

  1. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் இறுதி விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் இன , மத மற்றும் மொழி பண்பாடுகளுக்கு அமைய அடக்கம் செய்தல்.
  2. இறந்தவர்களின் நினைவாக நினைவிடங்கள் போன்றன அமைத்தலும் அவர்களினை நினைவு கூரலும்.
    இவற்றினை பொதுவாக சகல மதங்களும் பண்டைக்காலம் தொட்டு போதித்து வருகின்றன. உதாரணமாக துட்டகைமுனு மன்னன் தனது எதிரியான எல்லாள மன்னனை போரில் வென்ற பின்னர் அவனுக்கு சமாதி அமைத்த பின்னர் அச்சமாதி அமைந்துள்ள வீதி வழியாக செல்லும் சகலரையும் அதற்கு மரியாதை செய்யுமாறு பணித்தான். ஆனால் இன்று துட்டகைமுனுவின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்பவர்கள் இவற்றினை கடைப்பிடிப்பதில்லை. அத்துடன் பெரும்பாலான வைத்தியசாலை ஊழியர்களும் கடைப்பிடிப்பதில்லை என்பது கவலை தரும் விடயமாகும்
    முற்றும்

கொரோனா – உயிரிழப்பு எண்ணிக்கை உண்மையானதா?

வேகமாக பரவி வரும் கோரோனோவின் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையும் குறுகிய காலப்பகுதியில் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் பல செய்திகளில் இவ்வாறு இறக்கும் நோயாளர்கள் மாரடைப்பு, சலரோகம் , இருதய வருத்தம் போன்ற நாடப்பட்ட நோய்களை பல வருடங்களாக கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் அவ்வாறான நோய் நிலைமை காரணமாகவே இறந்தார்கள் எனவும் கொரோனா (கோவிட் 19) நோய்த்தொற்றால் அல்ல எனவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் நோயாளர் ஏன் மரணம் அடைந்தனர் என்பது பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் மரணம் அடையும் பொழுது அவரின் மரணத்திற்கான காரணம் (cause of death) உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சுவிற்கு அமைந்த வகையில் சிகிச்சை அளித்த மருத்துவரினால் அல்லது உடற் கூராய்வு பரிசோதனை செய்த மருத்துவரினால் வெளியிடப்படும். அதன் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

Improving the accuracy of death certification [CMAJ - May 19, 1998]

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் 1a என்பது உடனடியான மரணத்திற்கான காரணம் (immediate cause of death) 1b மற்றும் 1c என்பன உடனடியான மரணத்திற்கான காரணத்தினை ஏற்படுத்திய காரணிகள் (Antecedent causes) ஆகும். பகுதி 11 (part 11) என்பது மரணத்திற்கு பங்களிப்பு செய்த காரணிகளை குறிப்பதாகும்.
இனி விடயத்திற்கு வருவோம் PCR ரிப்போர்ட் பொசிட்டிவாக வரும் நோயாளி ஒருவர் பின்வரும் சந்தர்ப்பங்களில் இறக்கலாம்

  1. கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் (இங்கு நோயாளிக்கு வேறு எதுவிதமான நோய்களும் இல்லை ). இலங்கையில் இதுவரை இறந்த கொரோனா நோயாளிகளின் தரவுகளின் படி இவ்வாறு இறப்பவர்களின் மிக எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  2. வேறு நாட்பட்ட நோய்களின் தாக்கத்தினால் அதாவது கொரோனா நோயாளி ஒருவருக்கு இருதய வருத்தம், நீரிழிவு … போன்ற நோய்கள் காணப்படுமாயின் அவை கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் அல்லது அளிக்கப்படும் சிகிச்சையின் காரணமாக மோசமடையலாம். இதுவரை வெளியாகிய தகவல்களின் பிரகாரம் இவ்வாறு நாட்பட்ட நோயாளிகள் அதிகளவில் இறப்பதாக தெரிய வந்துள்ளது.
    இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது இவ்வாறு ஒரு நாட்பட்ட நோய்களுடன் உள்ள ஓர் கொரோனா தொற்றாளர் இறக்கும் பொழுது சிகிச்சை அளித்த வைத்தியரே குறித்த நோயாளி கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் இறந்தாரா? அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நாட்பட்ட நோய்கள் மோசமடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பதை தீர்மானிப்பார். இதன்பொழுது அவர் நோயாளியில் காணப்பட்ட நோயின் அறிகுறிகள், உடற் பரிசோதனை முடிவுகள், ஆய்வுகூட அறிக்கைகள் போன்றவற்றினை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார். இதனையே பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கொரோனா நோயாளி மாரடைப்பினால் இறந்தார் என்று செய்தி வெளியிடுகின்றன.
    இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயியல் உடற் கூராய்வு (Pathological postmortem examination) பரிசோதனை இத்தகைய தீர்மானத்திற்கு மிக இலகுவில் உதவும். இந்த நிலையில் இவ்வகையான மரணங்கள் எதனால் ஏற்பட்டது என தீர்மானிப்பது ஓர் விஞ்ஞான ரீதியான செயற்பாட்டினை கொண்டிருக்காது. மேலும் இவ்வாறு மரணம் ஏற்பட்ட காரணத்தினை மாற்றி அமைக்க முடியும். சில உலக நாடுகள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களை இவ்வாறு மாற்றி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே உள்ள படத்தில் இருந்து கொரானாவினால் நாடப்பட்ட நோய்களை உடையவர்கள் எவ்வாறு தீவிரமான முறையில் தாக்கத்திற்கு உட்பட்டார்கள் என்பதினை அறிந்துகொள்ளலாம்
  1. PCR பொசிட்டிவாக உள்ள நோயாளி ஒருவர் தற்கொலை செய்து அல்லது விபத்தின் பொழுது அல்லது மனிதர்களின் தாக்குதலின் பொழுது இறப்பாராயின், அவ்வகையான மரணங்கள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களாக கொள்ளப்பட மாட்டாது.
  2. இலங்கையில் ருக்கும் முதியவர் ஒருவர் தனது வசிப்பிடத்தில் இயற்கையான முறையில் (natural)மரணத்தினை தழுவினால் பெரும்பாலும் அவரது உடல் எதுவிதமான மரண விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் ஏதும் இன்றி அடக்கம் செய்யப்படலாம். இந்நிலையில் அவர் கோவிட் 19 தொற்றினால் மரணத்தினை தழுவினாரா என்பது குறித்து தீர்மானிக்க முடியாது. இலங்கையில் கடந்த சில தினங்களில் இவ்வாறு வசிப்பிடங்களில் மரணத்தினை தழுவிய ஒருசில முதியவர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலமே, அவர்கள் ஏன் இறந்தனர் என்பதினை அதாவது அவர்கள் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்திற்கு உட்பட்டு இறந்தனர் என்பதினை கண்டு பிடிக்க முடிந்தது.
  3. மேலும் இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை மூலம் கோவிட் 19 வைரசுவின் தொற்றுக்கு உள்ளவர்களை வினைத்திறனான முறையில் அடையாளம் காண முடியாது. இப்பரிசோதனை மூலம் மூன்றில் இரண்டு பங்கு நோயாளரினை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாக இருந்தாலும் அதாவது நோயாளிக்கு கோவிட் 19 வைரசுவின் தாக்கம் இல்லை என்றாலும் அவர்களின் உடல்கள் தனிமைப்படுத்தற் சட்டத்தின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான காரணங்களினால் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை மிக சரியான முறையில் கணிப்பிட முடியாது உள்ளது என்பதே உண்மை ஆகும். முற்றும்