வீடியோ கேம் – இறப்பு ஏன்?

அண்மையில் இளவாலை பகுதியில் இளைஞர் ஒருவன் வீடியோ கேம் ஆன “பப்ஜி” இற்கு அடிமையான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது சமூக ஆர்வலரிடையே பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இவ்வாறான சம்பவங்கள் உலகின் பல இடங்களில் முன்னரும் நடைபெற்றுள்ளன. இப்பதிவில் வீடியோ கேம் பாவனையானது அதனை பாவிப்பவர்களிடத்து குறிப்பாக இளைஞரிடத்து எவ்வாறு மரணங்களை ஏற்படுத்துகின்றது பற்றி விளக்குகின்றது.

Player Unknown’s Battle grounds (PUBG) என்பதே தமிழில் “பப்ஜி” என்றழைக்கப்படுகின்றது. இந்த வீடியோ கேமில் பலர் தனியான தீவு ஒன்றில் பாராசூட் மூலம் தரை இறக்கப்படுவார்கள் அவர்கள் அத்தீவில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி அங்குள்ளவர்களை கொல்ல வேண்டும். இந்த விளையாட்டிற்கு அடிமையாகியவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அதில் விளையாடவே செலவு செய்வார்கள் இதன் காரணமாக உணவு, தனி நபர் சுகாதாரம்,கல்வி, தொழில், குடுப்ப உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் விளையாட்டின் காரணமாக குறைந்தளவு நேரமே உறங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உண்டாகும். அடுத்து இவ்வாறு கைத்தொலை பேசி அல்லது கணனியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்துள்ளார்கள் என பார்ப்போம்

1. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் குறித்த ஒரு காரணத்தினால் தொடர்ச்சியாக குறித்த வீடியோ கேம் இணை விளையாட முடியாத சூழ்நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உதாரணமாக பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு, இணைய வசதியினை பெற போதிய பணம் இன்மை….

2. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருசிலர் குறித்த வீடியோ கேம் இணை விளையாடியதன் பலனாக ஏற்பட்ட அதீத  மனஅழுத்தம் மற்றும் சிலவகை வீடியோ கேமில் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படும் கட்டளைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

3. மேலும் சிலர் குறித்த வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தமது தொழிலில் ஒழுங்கான முறையில் ஈடுபட முடியாமையினால் கடன், அதீத வேலைச்சுமை போன்றவற்றினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

4. மேலும் வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் குறைந்த அளவிலான நீரினை நாளாந்தம் உள்ளெடுப்பதினால் அவர்களின் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டும் சோடியம் பொட்டாசியம் போன்ற அயன் பற்றாக்குறை ஏற்பட்டும் இறப்பு ஏற்பட்டுள்ளது .

5. ஏற்கனவே மூளையின் இரத்த குழாய்களில் பலவீனமான அமைப்பினை உடையவர்கள்(AV malformation/ aneurysm)  வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கேம் விளையாடும் பொழுது அதிகளவு அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த இரத்த குழாய் வெடித்து மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இதனையே பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூளை நரம்பு வெடித்து இறப்பு ஏற்படுவதாக செய்தி இடுகின்றன.

6. மேலும் சிலர் இவ்வாறு கேம் விளையாடியவண்ணம் வீதியினை கடத்தல், வாகனம் செலுத்துதல், உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் நிற்றல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது விபத்துக்களை சந்தித்து மரணத்தினை தழுவியுள்ளனர்

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்” எனவே அளவுக்கு அதிகமான வீடியோ கேம் பாவனையினை குறைப்போம் மற்றும் அடிமையாதலையும் தடுப்போம்.

நன்றி

இனி வரும் காலங்கள்…

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு வயது சிறுமி ஒருத்தியை தாயார் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் அழைத்து வந்திருந்தார். சிறுமியின் முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளில் ஆழமான பாரிய இன்றி காயம் காணப்பட்டது. எவ்வாறு தீக்காயம் ஏற்பட்டதுஎன்று வினாவிய பொழுது, அழைத்து வந்திருந்த போலீசார் மின்சார தடையின் பொழுது சிறுமி எரிந்து கொண்டிருந்த விளக்கின் மீது தவறுதலாக விழுந்ததன் காரணமாகவே இந்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறினார் எனினும் தனக்கு சந்தேகம் வேறு இருப்பதாகவும் கூறினார்.
தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் அதிகரித்த நேரத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்னிரவில் ஏற்படுத்தப்படும் மின்சார தடை காரணமாக பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை ஒளியேற்ற மண்ணெண்னை மற்றும் தேங்காய் எண்ணெய் விளக்குகளேயே பயன்படுத்துகின்றனர். இவற்றினை பயன்படுத்தும் பொழுது தீ விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது இதன் காரணமாக அநியாயமாக காயங்கள், உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் ஏற்படுகின்றன.
எவ்வாறு நாம் இவ்வாறன குப்பி விளக்குகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

  1. குப்பி விளக்கு ஆகட்டும், மெழுகுதிரி ஆகட்டும் எந்தவொரு விளக்கும் சிறுவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்கப்பட வேண்டும். முன்னைய காலத்தில் அரிக்கன் லாம்புகள் வீட்டின் கூரையில் இருந்து தொங்கும் கம்பியில் தான் தொங்க விடப்பட்டன.
  2. சிறுவர்களுக்கு இவ்வாறான விளக்குகளுக்கு அண்மையாக செல்லக்கூடாது எனவும் அவ்வாறு சென்றால் தீக்காயம் ஏற்படும் எனவும் அறிவுறுத்த (?பயமுறுத்த) வேண்டும்.
  3. குப்பிவிளக்குகள் தயாரிக்க பயன்படும் போத்தல்கள் ஒடுங்கிய வாய் ஓடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் சரிபடும் பொழுது உள்ளே இருக்கும் மண்ணெண்ணெய் அதிகளவில் சடுதியாக வெளியேறாமல் இருக்கும்.
  4. குப்பிவிளக்குகள் தயாரிக்க பயன்படும் போத்தல்கள் கட்டையானதாகவும் உயரம் குறைந்தனவாகவும் அதன் தொடுகையுறும் அடிப்பரப்பு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதன் காரணமாக குறித்த போத்தலின் புவியீர்ப்பு மையம் உயரம் குறைவானதாக இருக்கும் இதன் காரணமாக குறித்த போத்தல் இலகுவில் சரிந்து விழுந்து விடாது.
பாதுகாப்பான குப்பி விளக்கு ஓர் ஓப்பீடு
  1. குப்பி விளக்குகளை மேசையில் அல்லது தரையில் வைத்து படிக்கும் பொழுது பெற்றோரின் அவதானிப்பு கட்டாயம் தேவை. பல சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் நித்திரை காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்கள் உண்டு.
  2. குப்பி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அல்லது சூடாக இருக்கும் பொழுது அதனுள் மண்ணெண்ணெய் நிரப்புதல் கூடாது. மேலும் மண்ணெண்ணெய் கொள்கலன்கள் தெளிவாக அடையாளம் காண தக்கவாறு இருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மண்ணெண்ணையிற்கு பதிலாக பெற்றோல் நிரப்பப்பட்டு பாரிய தீ விபத்துக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் நடைபெற்றுள்ளன.
  3. இவ்வாறான குப்பி விளக்குகளுக்கு பதிலாக LED பல்ப்புக்களிலாலான சார்ஜர் லைற்றுக்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
  4. மேலும் குப்பிவிளக்குகளின் மூடியில் இருந்து உலோக குழாய் (வால்வு கட்டை) வைத்து சிறிதளவு உயரத்தில் தான் திரியானது எரிய வேண்டும் அதன் பொழுதுதான் வெப்பமானது கீழே இருக்கும் தாங்கியினை சென்றடைவது குறைவாக இருக்கும்
    முற்றும்

இளம் தம்பதியினர் ஹோட்டலில் மரணம்!! நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற தம்பதியர் ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தயிருந்தது. அவர்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.
அவர்கள் முந்திய இரவுப் பொழுதில் விருந்தில் BBQ முறையில் இறைச்சியை சுட்டு சாப்பிட்டிருக்கின்றனர் அதன் பின்னர் குளிர் அதிகமாக இருக்கவே அரைகுறையாக எரிந்து மீதமிருந்த BBQ உபகரணத்தினை தமது அறைக்கு எடுத்து சென்று குளிரினை போக்கிய பின்னர் நித்திரைக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் காலையில் வேறு அறையில் தங்கியிருந்த உறவினர்கள் தம்பதியினர் வெளியில் வராமையினை கண்டு கதவினை உடைத்து உட்சென்று பார்த்த பொழுது தான் அவர்கள் ஏற்கனவே இறந்திருந்தமை கண்டறியப்பட்டது. இச்சம்பவம் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சியினையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து நடாத்தப்பட்ட மரண விசாரணை மற்றும் உடற்கூராய்வு பரிசோதனை போன்றவற்றின் முடிவில் குறித்த தம்பதியினர் இறந்தமைக்கான காரணம் எரிந்து மீதமிருந்த BBQ உபகரணத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மொனோக்சைட்டு (Carbon monoxide) வாயுவினை அவர்கள் சுவாசித்தமையே காரணம் என்று கண்டறியப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கையிலும் இவ்வாறான மரணங்கள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்பன் மொனோக்சைட்டு வாயு ஆனது பொதுவாக குறை தகனம் நிகழும் பொழுது வாகனகளில் இருந்து வெளியேறும் ஓர் மணம், நிறம் அற்ற வாயு ஆகும். இது ஓர் சுவாசிக்க தகுந்த அல்லாத ஓர் நச்சு வாயு ஆகும். இது சாதாரணமாக வழிமணடலத்தில் இருந்து நாம் உள்ளெடுக்கும் ஒக்சிசன் விட இது 200 மடங்கு எமது இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறத்திற்கு காரணமான ஈமோகுளோபினுடன் நிரந்தரமாக இணையும் திறன் உள்ளது. இதன் காரணமாக  ஒக்சிசன் எமது உடலில் உள்ள அங்கங்களுக்கு கடத்தப்படாது. இதன்காரணமாக மூளை மற்றும் இருதயம் ஆகியன இறக்கும் அதனை தொடர்ந்து அம்மனிதனும் இறப்பான். மேலும் கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசிக்கும் பொழுது மனிதன் அதனை உணர்வதில்லை ஏன்னெனில் அதற்கு மணம் மற்றும் நிறம் இல்லை மேலும் தொடர்ச்சியாக சுவாசிக்கும் இடத்து குறித்த நேரத்தின் பின்னர் மனிதன் சுய நினைவினை இழந்து விடுவான் இதன் காரணமாக ஆபத்தில் இருந்து மனிதன் விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

இவ்வாறு கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசித்து மரணம் ஏற்படும் வேறுசில சந்தர்ப்பங்கள் வருமாறு

  1. மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த சிறிய இடத்தில் இயக்கப்படும் வாகனம் அல்லது ஜெனறேற்றர் போன்றவற்றின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  2. மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த சிறிய இடத்தில் இயக்கப்படும் BBQ இயந்திரத்தின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  3. ஆழ் கிணறுகளின் உள்ளே எரிபொருள் மூலம் இயக்கப்படும் நீர்ப்பம்பிகளின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  4. மூடப்பட்ட வாகனம் இயங்கு நிலையில் இருக்கும் பொழுது வாகனத்தின் புகை போக்கியில் இருந்து வாகனத்தின் உள்ளே புகை கசிவு ஏற்படும் பொழுது
    எனவே இவற்றினை அறிந்து கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசிப்பதினால் ஏற்படும் மரணங்களை தடுப்போம்
    முற்றும்

எனக்கொரு girl/boy friend வேண்டும்

அன்று விடுமுறையாகயாகவிருந்தும் பாடசாலை சிறுமி ஒருத்தியை அவளது பெற்றோர் சகிதம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அந்த மாணவி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்த பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி கற்று வருகின்றாள்.

அவள் தினமும் பாடசாலைக்கு உந்துருளியிலேயே செல்லும் வழக்கமுடையவள். அவளது சிநேகிதிகளும் அவ்வாறே செல்வார்கள். அவளது வகுப்பில் எல்லோருமே பதின்ம வயதுடையவர்கள் என்பதினால் என்றுமே வகுப்பு கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் இருக்கும். அவர்களது பாடசாலைக்கு முன்பாக உள்ள ஓட்டோ தரிப்பிடத்திலேயே குறித்த இளைஞனும் தனது முச்சக்கர வண்டியினை நிறுத்திவைத்து சேவையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு 26 வயது ஆகியிருந்ததுடன் அவன் ஒரு பிள்ளையின் தகப்பனும் கூட. அத்துடன் அவன் போதைக்கு வேறு  அடிமையாகி இருந்தான்.

ஏறத்தாழ ஒரு வருடங்களுக்கு முன்னர் அவளது வகுப்பில் படிக்கும் அவளது ஒரு நண்பியினை பார்த்து வீதியோரத்தில் அவன் அடிக்கடி சிரிப்பான், அவளது நண்பியும் மெலிதாக சிரிப்பாள். ஓர் குறித்த நாளின் பின்னர் அவளின் நண்பி பாடசாலைக்கு வரவில்லை. அவள் விசாரித்து பார்த்ததில் குறித்த நண்பி அந்த ஓட்டோ சாரதியினை திருமணம் செய்துவிட்டதாக கேள்விப்பட்டாள். ஆனால் ஒருசில மாதங்களின் பின்னர் குறித்த ஓட்டோ சாரதி மீண்டும் அதே இடத்தில் வேலைக்கு வந்து நின்றான். ஆனால் அவளது நண்பி மட்டும் மீண்டும் பாடசாலைக்கு வரவில்லை, இவள் பல முறை தொடர்பு கொண்டும் பதில் ஏதும்மில்லை. இம்முறையும். அவன் குறித்த மாணவியின் வகுப்பிற்கு ஒருதரம் குறைவாக படிக்கும் மாணவி ஒருத்தியினை நோக்கி அவன் சிரிப்பான் சிலசில கதைகள் சொல்வான். காலப்போக்கில் அவள் அறிந்து கொண்டால் குறித்த மாணவி அந்த ஓட்டோ சாரதியை காதலிப்பதாக, முன்பு நடந்தவாறே இந்த மாணவியும் திடீர் என்று பாடசாலை வருவதினை நிறுத்தி விட்டாள், விசாரித்த பொழுது குறித்த மாணவி அந்த ஓட்டோ சாரதியை திருமணம் செய்து கொண்டதாக. இவ்வாறே மேலும் சில மாதங்கள் உருண்டோடின திடீர் என குறித்த ஓட்டோ சாரதி மீண்டும் ஓர்நாள் தென்பட்டான்.

Image titled Know That Your Boyfriend Really Loves You Step 1

இந்த முறை குறித்த ஓட்டோ சாரதி இவளை பார்த்து சிரித்தான் எதோ கதைக்க முற்பட்டான், இவள் ஏனைய இரு மாணவிகளின் கதையினை அறிந்திருந்தவள் என்பதினால் முதலில் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனினும் நாட்கள் செல்ல செல்ல அவன் அவளினை பின்தொடர்வதுவும் கதைக்க முற்படுவதும் அதிகமாகின. அவளின் வகுப்பு தோழிகளும் குறித்த ஓட்டோ சாரதியை காதலிக்கும் படி வற்புறுத்தினார்கள். மேலும் அவளது வகுப்பு தோழிகள் ஒவ்வொருவரும் ஓர் ஆண் நண்பனை அல்லது காதலனை வைத்திருக்கும் பொழுது தான் மட்டும் எதோ தனியாக இருப்பது பிழையாக அவளுக்கு தென்பட்டது. மேலும் சினிமா படங்களும் வீட்டில் பார்க்கும் மெகா சீரியல்களும் தன்னை போன்ற பாடசாலை மாணவர்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதினை தப்பாக பிழையான கண்ணோட்டத்தில் காட்டவில்லையே என்ற எண்ணம் அவளின் மனதில் படிப்படியாக வளர்ந்தது  . ஓர் நாள் பாடசாலை விட்டு வெளியேறி ஆள் நடமாட்டம் குறைந்த ஒழுங்கையில் செல்லும்  பொழுது குறித்த ஓட்டோ சாரதி, அவளினை வழிமறித்தான். ஒருசில கணங்களில் கையில் வைத்திருந்த பிளேட்டினால் தனது கழுத்தினை சரசரவென அறுத்து கொண்டான். பயத்தில் இவள் உறைந்து நிற்க அவன் கூறினான் நீ காதலிக்காவிட்டால் நான் தற்கொலை செய்வேன் என்று, இவளும் குறித்த ஓட்டோ சாரதி தற்கொலை செய்துகொண்டால் தன்னை போலீசார் விசாரிப்பார்கள் என்ற பயத்தில் உடனே சம்மதித்து விட்டாள். ஒரு சில வாரங்களின் பின்னர் குறித்த ஓட்டோ சாரதியுடன் அவளினை கூட்டி சென்று திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு 16 வயதிற்கு குறைவு என்பதினாலும் பெற்றோர் தேடியதினாலும் அவளை பல கிலோமீட்டர் தள்ளி உள்ள ஓர் கிராமத்திலேயே குறித்த ஓட்டோ சாரதி தங்க வைத்திருந்தான். அந்த வாழ்க்கை ஒரு சில நாட்களே இனித்தது அவளுக்கு.  மாலை நேரத்தில் வேலை முடிந்து நிறை போதையில் வந்து நிற்பான் அவன் அத்துடன் பெரும்பாலான நேரத்தில் கைகலப்பு நடக்கும். இது தவிர இரவு நேரத்தில் அதீத செக்ஸ் வெறி. இவற்றினால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவள் ஓர் நாள் தானும் தனது மணிக்கட்டினை  பிளேட்டினால் அறுத்து கொண்டாள் அதனை தொடர்ந்து வைத்திய சாலையில் அனுமதிக்கபடுகின்றாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பொழுது அவள் கர்ப்பிணி என வைத்தியர்கள் கண்டறிகின்றனர். இனியும் அவளின் எதிர்காலம் பற்றி கூற வேண்டுமா?

முற்றும்

      

வாழ்க்கையும் வேதனையும்

எமது மனித வாழ்க்கையில் பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் வேதனையினை அதாவது நோவினை  அனுபவித்து இருக்கின்றோம். சிறுவயதில் விளையாடி தவறுதலாக வீழ்ந்து காயப்படுவதில் ஏற்பட ஆரம்பிக்கும்   நோ ஆனது மரணம் வரை பல்வேறுபட்ட வழிகளில் ஏற்படுகின்றது. குறிப்பாக நாற்பது வயதின் பின்னர் எமது எலும்புத்தொகுதியில் உள்ள மூட்டுக்கள் அதிகம் தேய்மானம் அடைவதன்  காரணமாக அவற்றில் பொதுவாக நோ ஏற்பட ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர்  இவ்வாறு அதிகரித்த அளவில் மூட்டுக்களில் நோ ஏற்படும்.

சிலர் அதிகளவிலான நோவினையும் தாங்கும் திறமை உடையவராக இருப்பர் மறுபுறத்தில் பலர் சிறிதளவிலான நோவினையும் தாங்கும் சக்தி அற்றிருப்பர். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் நோவு காரணமாக பலரின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் பாதிக்கப்படுவதினை நாம் அன்றாடம் காண்கின்றோம். 

இவ்வாறு அதிகரித்த நோ காரணமாக ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளவயதில் செய்த சில காரியங்களை செய்ய முடியாமல் இருக்கும். மேலும் சிலர் படுத்த படுக்கையிலேயே  வாழ்க்கையை கடத்த வேண்டி இருக்கும். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் நோ ஆனது பலரின்  வாழ்க்கையினை புரட்டி போட்டிருக்கும்.

சில சந்தர்பங்களில் நோவின் வேதனை தாங்க முடியாத நிலைக்கு வரும் பொழுது சிலர் தற்கொலை கூட செய்து கொள்ள தயங்க மாட்டார்கள். நோவு என்பது மனிதனின் மனதிற்கு ஏற்படும் ஓர் சந்தோசம் அற்ற உணர்ச்சி ஆகும். இதன்காரணமாக அவ் உணர்சியினை நீக்க பல்வேறுபட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்வார் அதற்கு அவர்கள் அதிகளவு பணமும் செலவிட தயங்க மாட்டார்கள்.பொதுவாக எம்மில் பலர் நோவிற்கு தாங்களே சுய  வைத்தியம் செய்துகொள்வார்கள். இவ்வாறு சுய  வைத்தியம் செய்து கொள்வதினால் ஏற்படும் சில பிரச்சனைகளை இப்பதிவு விளக்குகின்றது

1. எம்மில் பலர் வைத்தியர் ஒருவரிடம் சிகிசசை பெறும் பொழுது தாம் ஏற்கனவே வலிநிவாரணி (pain killers) மருந்துகளை பாவிப்பதினை தெரிவிக்க மாடடார்கள். இதன் காரணமாக மீண்டும் மீண்டும் வைத்தியர்கள் ஒரே வகையான வலிநிவாரணி மருந்துகளை பரிந்துரை செய்வர், இறுதியில் வலிநிவாரணி மருந்துகளை பாவிக்கும் நோயாளியே பாதிப்புக்களாவர்.

2. நோவினை தாங்குவதில் எமது மனோ திடகாத்திரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் காரணமாகவே பலர் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விபத்து அல்லது வேறு ஏதாவது ஓர் காயம் அடைந்த சம்பவத்துக்கு இன்றும் வலி நிவாரணிகளை பாவித்துக் கொண்டிருக்கின்றோம்.

3. எம்மில் பலர் உடம்பில் நோவு என்றவுடன்  தனியார் மருந்தகங்களில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்படும் புருவன் (brufen) போன்ற NSAID வகையினை சேர்ந்த வலி நிவாரணி மருந்துகளை வைத்தியரின் எவ்விதமான அறிவுரையும் இன்றி பல நாட்களுக்கு பாவிக்கின்றோம். இதன் காரணமாக இறுதியில் பாதிப்படைவது நாமே.

4. புருவன் (brufen) போன்ற NSAID மருந்துகளை கட்டுப்பாடு இன்றி பாவிப்பவர்கள் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயிற்கு உள்ளாகும் (chronic kidney disease) சந்தர்ப்பம் அதிகமாகும். மேலும் எமது பிரதேசத்தில் நிலவும் அதிக வெப்பநிலை, நீரில் அதிகம் காணப்படும் கல்சியம் மற்றும் கிருமிநாசினிகள் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பினை துரிதப்படுத்த வல்லன.

5. எம்மில் பலரும் நினைக்கின்றனர் நோவு என்றால் அது எமது தசை, நரம்பு மற்றும் எலும்பு போன்றவற்றில் இருந்து தான் வருகின்றது என்று. அண்மையில் நாற்பது வயதுடைய ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெஞ்சு நோவினை பல தைலங்கள் பூசி  சுய வைத்தியம் செய்தார். பலனளிக்காத நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படடார். அப்பொழுது அவருக்கு ஈசிஜி பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்திருந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சில மணித்தியாலங்களில் அவர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியிருந்தார்.  எனவே இவ்வாறு நெஞ்சு நோ, அதிக தலையிடி போன்றவற்றுக்கு சுய வைத்தியம் செய்வது ஆபத்தில் முடியும், ஏனெனில் இந்த குணம் குறிகள் ஆபத்தான நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

எனவே எமக்கு நோவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய வைத்திய ஆலோசனை பெற்று உரிய அளவில் வலி நிவாரணிகளை பாவிப்போம். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இலங்கையின் ஒரு சில வைத்திய சாலைகளிலும் இவ்வாறு  நோவிற்கு என தனியான சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் தற்போதைய நவீன காலத்தில் நோவிற்கு மருந்து மாத்திரை தவிர பல்வேறு பட்ட சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

முற்றும் 

மதுபானம் + கண் = விபத்து

உலகளாவிய ரீதியில் நடைபெறும் வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபான பாவனையின் காரணமாகவே நடைபெறுகின்றது என்றால் மிகையல்ல. ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு 52 நிமிடங்களுக்கும் ஒரு நபர் மதுபானத்தினால் ஏற்படும் வீதி விபத்தினால் இறக்கின்றனர். மதுபானம் ஆனது வெவ்வேறு செறிவுகளில் மனித உடலில் வெவ்வேறு உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் உள்ள ஆகக் கூடிய மதுபான (எதைல் ஆல்கஹால்) அளவினை வெவ்வேறு அளவில் வரையறுத்து உள்ளன. சில நாடுகள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் இருக்க வேண்டிய மதுபான அளவினை பூச்சியமாகவே வைத்துள்ளன. இலங்கையில் ஒருவர் வாகனத்தினை வீதியில் செலுத்தும் பொழுது அவரது உடலில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய மதுபானத்தின் அளவு 80mg/100ml ஆகும். அதாவது மதுபானத்தின் அளவு 80mg/100ml இணை விட கூடுதலாக இருந்தால் அவர் வீதி போக்குவரத்து சட்ட திட்டங்களின் பிரகாரம் அவர் குற்றவாளி ஆகின்றார். விபத்து கட்டாயம் நடைபெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் நடைபெறும் வீதி விபத்துக்களுக்கு பெரும்பாலானவை மதுபான பாவனையினால் ஏற்படுகின்றது என்றால் அது மிகையல்ல. ஆனால் எம்மில் பலருக்கு எவ்வாறு மதுபானம் ஆனது எமது கண்ணினை அதாவது பார்வையினை பாதித்து வீதி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி தெரிவதில்லை. இப்பதிவானது மதுபானம் அருந்திய ஒருவரின் கண்ணில்  மதுபானம் ஆனது எவ்வாறான விளைவுகளை உண்டுபண்ணி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றது 

ஒருவர் மதுபானத்தினை அருந்தி ஒருசில மணித்தியாலங்களில் பின்வரும் மாற்றங்கள் கண்களில் ஏற்படும்

1. மதுபானம் ஆனது எமது கண்ணினை தாங்கி கண்ணின் அசைவுகளுக்கு உதவும் தசைகளை பலவீனப்படுத்தி  ஒருங்கமைந்த அசைவுகளை பாதிக்கும்      இதன் காரணமாகபொருட்கள் தெளிவற்றதாகவும் சில சந்தர்ப்பங்களில் இரட்டை பொருட்களாவும் (double vision) தென்படும். சில சந்தர்ப்பங்களில் வீதியின் கரையோரங்களில் இருக்கும் அல்லது பயணிக்கும் வாகனங்கள் தெரிவதில்லை. இவ்வாறான நிலை tunnel vision என்றழைக்கப்படும். இது ஓர் ஆபத்தான நிலை ஆகும் இதனால் விபத்துக்கள் நிச்சயம் ஏற்படும். மேலும் மதுபான பாவனையின் பின்னர் கண் ஆனது கட்டுப்பாடு இன்றி அசையும் நிலையும் (Nystagmus) ஏற்படலாம் இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.  

2. மேலும் மதுபானம் ஆனது கண்ணில் இருந்து மூளைக்கு கணத்தாக்கசெய்தி  கடத்தப்படும் நேரத்தினை அதிகரிக்கும் இதன்காரணமாக மதுபானம் அருந்திய சாரதி உடனடியாக (ஒரு சில மில்லி செக்கன்களில்) திறம்பட செயற்பட மாட்டார்.

3. மேலும் மதுபானம் அருந்திய சாரதியின் கருவிழியானது (Iris ) உடனடியாக சுருங்கி  தொழிற்பட மாட்டாது இதன் காரணமாக மதுபானம் அருந்திய சாரதி அதிக வெளிச்சத்திற்கு உட்படும்  அவரின் கருவிழியானது உடனடியாக தொழில் படாது இதன்காரணமாக எதிரே வரும் பொருளினை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை (accommodation reflex) ஏற்படும். இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.

4. பார்வை திறன் குறைவடைவதன் காரணமாகவும் (decreased visual acuity) மதுபானம் எமது மூளையில் சோர்வினை உண்டு பண்ணுவதாலும் வாகன சாரதியினால் மிக திறம்பட செயற்பட முடியாது. இதன் காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கும்.

5. சிலருக்கு அதிகளவு மதுபானம் அருந்திய பின்னர் அவர்களின் கண் மடலானது துடிக்கும் (myokymia) இதன் காரணமாக பார்வை சடுதியாக மறைக்கப்படுவதினால் விபத்து ஏற்படும்.

6. மேலும் மதுபானம் ஆனது கண்ணின் கண்ணீர் சுரப்பினை குறைக்கும் இதன் காரணமாக மதுபான பாவனையின் பின்னர் கண் இலகுவில் வரட்சியடையும் இதனால் சாரதியானவர் இலகுவில் கண்யர்ந்து விடுவார்.   

Alcoholic Eyes

இது தவிர நீண்ட காலமாக மதுபானத்திற்கு அடிமையான ஒருவருக்கு விழித்திரையில் மற்றும் கண்ணின் நரம்பு (Optic neuropathy ) பகுதிகளில் மதுபானமானது பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணி பார்வையினை குறைக்கும். மேலும் நீண்ட காலமாக குடிப்பவர் ஒருவருக்கு விட்டமின் B1 மற்றும் விட்டமின் A  போன்ற குறைபாடுகள் ஏற்படும் இதன் காரணமாகவும் அவர்களின் பார்வை குறைவடையலாம்.

முற்றும்

சர்ச்சைக்கு உள்ளாகும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள்

அண்மைக்காலங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் பின்னர் மரணம் அடைந்தவர்களின் மரணத்திற்கான காரணங்கள் மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலைகள் ஆகியன பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.

எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் பின்னர் மரணம் அடைபவர்கள் குறித்த நோயின் காரணமாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ இறத்ததாகவே நினைப்பார்கள். பெரும்பாலானவர்கள் மருத்துவ தவறின் காரணமாக ஒருவர் இறக்கலாம் என்பதினை மறந்து விடுகின்றனர். சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் இறப்பார் எனில் அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றினை பார்ப்போம்

1. ஒருவருக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலை சத்திர சிகிச்சையின் பின்னர் மோசமடைதல் காரணமாக இறப்பு ஏற்படலாம் . உதாரணமாக மாரடைப்பு வந்த நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சையின் பிற்பாடு மாரடைப்பு வந்து இறப்பு ஏற்படலாம்.

2. வைத்தியசாலையில் தங்கி இருக்கும் பொழுது டெங்கு, கொரோனா போன்ற புதிதாக  தொற்று நோய்கள் ஏற்பட்டு சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம்.

3. சத்திர சிகிச்சையின் பொழுது ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள் காரணமாக இறப்பு ஏற்படலாம். உதாரணமாக சில சத்திர சிகிச்சைகளின் பொழுது ஏற்படும் அதீத குருதி பெருக்கு ஏற்பட்டு சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம். இவ்வாறு உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும்  சத்திர சிகிச்சைகள் பொதுவாக அரசாங்க வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் தனியார் வைத்திய சாலைகளில் இவ்வாறான சத்திர சிகிச்சைகள் வருமானம் கருதி மேற்கொள்ளப்படுகின்றது என்பது பலருக்கு தெரிவதில்லை.

4. சத்திர சிகிச்சையின் பொழுது ஏற்படும் மருத்துவ தவறுகள் காரணமாக சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம்.

5. சத்திர சிகிச்சையின் பொழுது வழங்கப்படும் உணர்வு அழிவியல் சிகிச்சை காரணமாகவும் சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம். இதன் காரணமாகவே குறித்த நோயாளி குறித்த வகையான  உணர்வு அழிவியல் சிகிச்சை முறைக்கு தகுதி வாய்ந்தவரா என சத்திர சிகிச்சைக்கு முன்னர் வைத்திய நிபுணர்கள் ஆராய்வார்கள்.

6. சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த நோயாளி நீண்ட காலம் படுத்த படுக்கையாகவும் அறிவற்ற நிலையிலும், செயற்கை சுவாச உதவியுடனும் காணப்படும் பொழுது ஏற்படும் சிக்கல் நிலைமைகள் (Complications) காரணமாக இறப்பு ஏற்படலாம்.

7. காயங்களுக்கு உள்ளாகி சத்திர சிகிச்சை பெற்ற நபர் அந்த காயங்களின் விளைவு காரணமாகவும் இறக்க நேரிடலாம்.

8. சத்திர சிகிச்சையின் பொழுது வழக்கப்படும் மருத்துகள் ஒவ்வாமையின் ஏற்படுத்துவத்தினாலும்  சத்திர சிகிச்சையின் பொழுது அல்லது அதன் பின்னர் இறப்பு ஏற்படலாம்.

Post-surgical death more likely after hospital discharge - UPI.com

எனவேதான் சத்திர சிகிச்சைக்கு பின்னரான இறப்புக்களில் ஏன் இவ்வாறான இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயவேண்டிய தேவை உள்ளது. இதனை விடுத்து சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள் எல்லாம் இயற்கையான நோய் நிலைகளினால் அல்லது காயங்களினால் ஏற்படும் என்று எண்ணுவது தவறு. பல சந்தர்ப்பங்களில் வைத்தியர்கள் இவ்வாறு சத்திர சிகிச்சைக்கு பின்னராக ஏற்படும் மரணங்களை ஆராய விரும்புவதில்லை. அதன் காரணமாக “இவரின் மரணத்தில் சந்தேகம் இல்லை” என உறவினரிடம் கையெழுத்து வாங்கி இறந்தவரின் உடலை விடுவிப்பார்கள். இது முற்றிலும் ஓர் தவறான செயற்பாடு ஆகும். மேலும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள் சத்திர சிகிச்சையின் பொழுது அல்லது பின்னரான ஒரு மாதத்தில் கூட நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் இவ்வாறு மருத்துவ தவறு காரணமாக சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் இறப்புக்கள் குறித்து தெளிவான எந்தவொரு புள்ளி விபரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

உயிரை பறிக்கும் சட்ட விரோத கருக்கலைப்புகள்

இலங்கையின் சட்டங்களின் படி பெண்ணொருவர் தனது கருவினை நினைத்த மாத்திரத்தில் மற்றைய நாடுகளில் நடைபெறுவது போல் இலகுவில் கலைத்து விட முடியாது. இலங்கையில் தாயாரின் உயிருக்கு ஆபத்து என வைத்தியர்கள் சிபாரிசு செய்யும் இடத்து மட்டுமே அரசாங்க வைத்திய சாலைகளில் சட்ட ரீதியாக கருக்கலைப்பினை மேற்கொள்ள முடியும். ஆனால் சட்ட விரோதமான ரீதியில் கருக்கலைப்புக்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் நாளாந்தம் 650 தொடக்கம் 1000 வரையான இவ்வாறான கருக்கலைப்புகள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாரால் இவ்சட்ட விரோத கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது? பெரும்பாலும் வைத்தியர்கள், தாதியர், வைத்திய சாலை சிற்றுளியர் போன்றோரினாலும் பாரம்பரிய வைத்தியர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள ஒருசில ?அனுபவம் வாய்ந்த நபர்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் சட்ட விரோத கருக்கலைப்பினால் (பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்) கணிசமான அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. வருடந்தோறும் 73 மில்லியன் கருக்கலைப்புகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றன, இவற்றில் ஒவ்வொரு 100,000 கருக்கலைப்புக்களுக்கும் 30 பெண்களின் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் வடமாகாணத்தில் குறிப்பிடத்தக்க இவ்வாறானஉயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன அது தவிர சட்ட விரோத கருக்கலைப்பினால் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல பெண்கள் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளனர்.

Inside the illegal abortion market - The Namibian


சட்டவிரோத கருக்கலைப்பின் பொழுது அதீத குருதி பெருக்கு மற்றும் கருப்பை கழுத்து அதிகம் விரிவடையும் பொழுது இருதய துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடனடியான உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இது தவிர கிருமித்தொற்று காரணமாகவும் உடலில் ஏனைய அங்கங்கள் செயலிழப்பதினாலும் பிந்திய உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இவை தவிர நீண்ட காலப்போக்கில் குறித்த பெண் மீண்டும் கருத்தரிக்க தவறுகின்றமை மற்றும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றமை ஆகியவை ஏற்படுகின்றன.
இலங்கை போன்ற நாட்டில் சட்ட ரீதியான கருக்கலைப்பு நடைமுறையில் இல்லை என்பதினால் இவ்வாறு சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சட்டவிரோத கருக்கலைப்பினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு கருத்தடை சாதனங்களை பாவித்து கருவானது உருவாகாமல் இருக்கச் செய்வதே சிறந்த செயற்பாடு ஆகும்.

முற்றும்

தற்கொலை தீர்வாகுமா?

இன்றைய நாட்களில் தமிழர் பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு தற்கொலை மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் பதின்ம வயதினர் தொடக்கம் முதியவர்கள் வரை உள்ளடங்குகின்றனர். தற்கொலை முயற்சியின் பொழுது பலர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  தற்கொலை செய்யும் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் காரணங்கள் பெரும்பாலும்  அற்பத்தனமானவை.  ஒருவர் தற்கொலை செய்தவுடன் சமூக ஊடகங்கள், உற்றார் மற்றும் உறவினர் குறித்த காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கருதுவார்கள். இங்குதான் நாம் தோல்வி அடைகின்றோம் அல்லது பிழையான திசையில் பயணிக்கின்றோம் ஏனெனில் ஓர் தற்கொலைக்கு   பல்வேறுபட்ட ( தனிநபர், சமூக, கலாச்சார மற்றும் குடும்ப) காரணிகள்  ஏதுவாகின்றன அவ்வாறான நிலையில் நாம் காரணி  ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு திருப்தி அடைகின்றோம். மேலும் ஓர் தற்கொலை மரணம் நிகழும் இடத்து அதனை விரிவாக ஆராய்ந்து அவ்வாறான தற்கொலை  மரணங்களை தடுக்கும் பொறிமுறை ஒன்று இலங்கையில் உருவாக்கப்படவில்லை இவ்வாறான காரணங்களினால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் எதிர்காலத்தில் அதிகரித்து செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவேதான் நாம் சிறுவர் பராயத்தில் இருந்தே அவர்களின் மனதில் மனவைராக்கியத்தினை வளர்க்க வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர், மதகுருமார் , சமூகத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற  வேண்டும்.

How to Cope with Suicidal Thoughts | The Light Program

பெற்றோர்கள் சிறுவயதுமுதலே தமது பிள்ளைகளை சிறிதளவேனும்  கடின முயற்சிகளில்  ஈடுபட  விடல், விளையாட்டில் ஈடுபட அனுமதிப்பதன் மூலம் தோல்வியினை ஏற்கும் மனப்பாங்கினை வளர்த்தல் மற்றும் தோல்வியில் இருந்து மீண்டெழும் திறனை வளர்த்தல்  , மனநெருக்கடியான சூழ்நிலைகளில்  தகுந்த தீர்மானம் எடுக்கும் திறனை வளர்த்தல், நிஜ வாழ்க்கைக்கும் திரை வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டினை உணர வைத்தல், உறவினர் மற்றும் நண்பர்களிடையே உறவு கொண்டாடல், புகைத்தல்  மற்றும் போதை அற்ற வாழ்க்கை, பெற்றோரின் அன்பான அரவணைப்பு   போன்ற வாழ்க்கைக்கு தேவையான பல்வேறுவகையான திறன்களை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்வினை மேம்படுத்தலாம்.

எமது கலாச்சாரத்தில் பெண் அல்லது ஆண் ஒருவர் மிக்க துயரத்தில் இருக்கும் பொழுது அல்லது தான் தற்கொலை செய்ய உள்ளதாக கூறும் பொழுது எம்மில் பலர் அதனை கருத்தில் கொள்வதில்லை மேலும் சிலர் எள்ளி நகையாடவும் செய்வார்கள், நிச்சயம் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் தற்கொலைகளை தடுப்பதில் முக்கிய பங்காற்றவேண்டும். மேலும் தற்கொலை சம்பந்தமான செய்திகளை   வெளி   வெளியிடும் பொழுது உரிய ஊடக ஒழுக்கவியலை கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடவேண்டும். மாறாக தற்கொலைகளை தடுப்போம் என்ற தொனிப்பொருளில் தற்கொலைகளை தூண்டும் அல்லது முன்னுதாரணப்படுத்தும் செய்திகளை வெளியிடல் நன்றன்று.

 முற்றும்

அதிக தோப்புக்கரணங்கள் உயிரிழப்பினை ஏற்படுத்துமா?

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 13 வயது மாணவி பள்ளிக்குத் தாமதமாக வந்ததை காரணமாகக் கொண்டு, பள்ளி நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனையை வழங்கியது. அவர் சுமந்திருந்த புத்தகப் பையை முதுகில் வைத்தபடியே 100 முறை தோப்புக்கரணம் செய்ய பள்ளி கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியில் கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலியுடன் வீடு திரும்பிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் மரணத்தினை தழுவினார்.

இவ்வாறே சில வருடங்களுக்கு முன்னர் யாழ் குடாநாட்டு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர், மாணவன் ஒருவருக்கு 200 தடவைகள் தோப்புக்கரணம் போடும் படி தண்டனை வழங்கியமை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றது. பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது என்ன தண்டனை, நாம் போடாத தோப்புக்கரணமா என குசுகுசுத்து கொண்டனர். நாம் ஏன் இவ்வாறன அதிக உடலியல் ரீதியான தண்டனைகளை எதிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவு ஆராய்கின்றது. பல வருடங்களுக்கு முன்னர் பேராதனை பல்கலை கழக மாணவன் வரப்பிரகாஷ் என்பவர் இவ்வாறான ஓர் காரணத்தினாலேயே இறக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்மில் பலருக்கு அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக வழங்கும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.


அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் போடும் பொழுது அவர்களின் வன்கூட்டு தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK),  myoglobin (Heme/Iron) எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை.
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்களை தொடர்ச்சியாக போடும் பொழுது அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு எற்பட்டு இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

Understanding kidney failure caused by complications of muscle injuries -  Keio Research Highlights

மேலும் விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான தோப்பு கரணங்கள் தான் பாதுகாப்பானது அதனை மீறி அதிகரித்த எண்ணிக்கையில் செய்யும் பொழுதே சிறுநீரக பாதிப்பு வரும் என்று எவ்விதமான கணிப்பும் இல்லை.
இலங்கையில், கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவேதான் ஆசிரியர்கள் வேறுவழிகள் மூலம் மாணவரினை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

முற்றும்