35000 கண்கள் பலவந்தமாக தோண்டி எடுக்கப்பட்டனவா?

அண்மையில் பாக்கிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மத நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரியூட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அந்த நாட்டினை சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் இலங்கையில் இருந்து தமது நாடு 35,000 கண்களை தானமாக பெற்றதாக தெரிவித்தார். இந்த கருத்தானது பல சர்ச்சைகளை கிளப்பியது. ?படித்த பலரும் இது எவ்வாறு இலங்கையினால் சாத்தியம் ஆனது என்று கேள்வி எழுப்பினார்கள். இன்னும் ஓர் சிலர் ஒருபடி மேலே சென்று தமிழர்களின் கண்கள் பலவந்தமாக தோண்டப்பட்டு இவ்வாறு விற்கப்பட்டதா? என்ற தோரணையில் கேள்விகளை எழுப்பினார்கள்.

7 THINGS YOU DIDN'T KNOW ABOUT EYE DONATION | Prasad Netralaya

இது சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் வருமாறு

1. இலங்கையின் வட கிழக்கு பகுதிகளை விட தென்னிலங்கையில் அதிகளவான மக்கள் கண்களை தானம் செய்கின்றனர். இதனை புள்ளிவிபரங்கள் மூலமும் வைத்திய துறை சார்ந்தவர்கள் மூலமும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக ஓர் நபர் இறப்பின் அவரிடம் இருந்து உறவினர்களின் சம்மதத்தினை பெற்று கண்களை தானமாக பெறலாம். தென்னிலங்கையின் சட்டவைத்திய அதிகாரி அலுவலகங்களில் இச்செயற்பாடு சர்வசாதாரணமாக நிகழும் ஆனால் வட இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அறவே நடைபெறுவதில்லை.

2. கண் தானத்தின் பொழுது கண் முழுவதுமாக தோண்டி எடுக்கப்படுவதில்லை மாறாக விழிவெண்படலம் என்ற பகுதியே எடுக்கப்படுகின்றது. இவ்வாறு எடுக்கப்படும் பொழுது கூட முகத்தில் விகாரம் ஏற்படாதவாறு கூடிய கவனம் எடுக்கப்படும்.

3.  கண் ஆனது தகுந்த பயிற்சி பெற்ற தொழில் நுட்பவியலாளர்களினால் தான் கண் தானத்திற்காக எடுக்கப்படும். சாதாரண நபர் ஒருவரினால் இது சாத்தியம் அற்றது.

4. இறந்த பின்னர் குறித்த சில மணி நேரங்களில் கண்களை தானமாக பெறவேண்டும் அத்துடன் அவற்றினை குறித்த இரசாயன பொருளில் இட்டு பாதுகாக்க வேண்டும்.

5. இலங்கையில் கண் தானத்தினை ஒழுங்கமைக்கும்  இலங்கை கண் தான சங்கம் ஆனது 1967 ஆண்டில் இருந்து 83200 விழிவெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது.இவற்றில் பெருமளவானவற்றை பாக்கிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது அதாவது 40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறே 35000 விழிவெண்படலங்களை பாக்கிஸ்தான் பெற்றது.

குறிப்பு: கடந்த காலத்தின் பொழுது இலங்கையின் பல பகுதிகளில் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சில சந்தர்ப்பங்களில் முண்டங்களாகவும் கண்கள் அற்ற நிலையிலும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

முற்றும்

போலீசாரினை கண்டதும்..


அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களில் வீதிப்பாவனையாளர்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஒட்டியான இளைஞர்கள் வீதிப்போக்குவரத்து விதிகளை மீறி பிரயாணம் செய்யும் சந்தர்ப்பங்களில் தீடீர் என்று போக்குவரத்து போலீசாரினை கண்டதும் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை அல்லது வாகனத்தினை செலுத்துகின்றனர். இதன்காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நிறுத்திவைக்கப்பட்ட வாகனம் அல்லது மரம் போன்றவற்றில் மோதி காயமடைகின்றனர் அல்லது பரிதாபகரமான முறையில் மரணம் அடைய நேரிடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் போலிஸாரினால் கைது செய்யப்பட்டு நைய புடைக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்களின் வாகனமும் பலத்த சேதம் அடைகின்றது. ஒட்டு மொத்தத்தில் இவ்வாறு ஏற்படும் இழப்பு ஆனது போக்குவரத்து விதி மீறலுக்காக செலுத்த வேண்டிய குற்ற பணத்தினை விட பல மடங்கு அதிகமானது ஆகும். இளைஞர்கள் இவற்றினை ஆராய்ந்து பார்க்க மறுப்பதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது. எனவே இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரினை கண்டதும் ஓட வேண்டியதில்லை.

போலீசாரின் சமிக்கையினை மீறி பயணம் செய்த இளைஞர் ஒருவன் போலீஸாரினால் தாக்கப்படும் காட்சி


பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு அகப்படும் இளைஞர்கள் குற்ற தொகையினை விட குறைவான பணத்தினை பொலிஸாருக்கு இலஞ்சமாக வழங்கி பிரச்சனைகளை முடித்துக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவேதான் நீங்கள் போக்குவரத்து விதியினை மீறி பயணிப்பவராயினும் போலீசாரினை கண்டதும் ஓடாதீர்.

முற்றும்

சிறுமியின் பரிதாப மரணம்

அந்த குழந்தைக்கு வயது இரண்டு  தான். அன்று மாலை அந்த சிறுமி அவளது உறவினர்கள் கொண்டுவந்திருந்த பலகாரங்களை உண்டு கொண்டிருந்த பொழுதுதான் அந்த விபரீத சம்பவம் நடைபெற்றது. அவள் உண்ணும் பொழுது பலகாரத்தின் துண்டு ஒன்று அவளது தொண்டையின் வாதநாளி (சுவாச குழாய் ) பகுதியில் இறங்கி சிக்கிக் கொண்டது. குழந்தை துடிதுடித்து அலறியது. உடனே உறவினர் ஒருவர் குழந்தையின் வாயினை பலவந்தமாக திறந்து தனது விரலினை உள்நுழைந்து சிக்கிய பலகாரத் துண்டினை எடுக்கும் முகமாக துளாவினார். துரதிஸ்ட்ட வசமாக பலகாரத் துண்டு வெளியில் வருவதற்கு பதிலாக மேலும் சுவாச குழாயினுள் சென்று செருகிக் கொண்டது. அடுத்து ஐந்து நிமிடங்களில் நடந்த துயர சம்பவங்களினை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இறுதியில் குழந்தை மரணத்தினை தழுவிக்கொண்டது.

சிறுவர்களின் நரம்புத் தொகுதி முற்றாக விருத்தி அடையாததன் காரணமாக அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவது வழமையே . எமது வாய்க்குழியில் உள்ள உணவை அரைத்து இரைப்பைக்கு கொண்டு செல்ல எமது நரம்பு தொகுதி உதவி செய்யும். உணவு புரைக்கு ஏறியவர் கதைப்பதத்திற்கு வெகுவாக சிரமப்படுவார் அல்லது கதைக்க மாட்டார், சுவாசிக் கடிமைப்படுவார் அல்லது சுவாசத்தின் பொழுது வித்தியாசமான சப்தம் கேட்கும், மேலும் அவர்கள் கடுமையாக இருமுவார்கள் அத்துடன் அவர்களது உதடு, விரல் நுனி போன்றவை நீலமாக அல்லது கறுப்பாக மாறிவிடும். எனவே இவ்வாறான அறிகுறிகளுடன் குழந்தைகள் தென்படும் இடத்து நாம் உரிய முதலுதவிகளை வழங்க வேண்டும் மாறாக பிழையாக மேற்கொள்ளப்படும் முதலுதவி குழந்தையின் உயிரினை பறிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சிறு குழந்தைகளுக்கு சில உணவுகள் புரைக்கேறுதலுக்கான சாத்தியத்தினை அதிகரிக்கும் எனவே சகல உணவுகளையும் பெரியவரின் மேற்பார்வையின் கீழேயே உண்ண அனுமதிக்க வேண்டும்

புரைக்கேறிய குழந்தை ஒன்றிற்கு எவ்வாறு சரியான முதலுதவியினை வழங்குவது என்பது பற்றி பார்ப்போம் (வளந்தவர்களுக்கான முதலுதவி வேறுபாடானது)    

1. குழந்தை சுவாசிக்க கூடிய நிலையில் இருமியவாறு காணப்பட்டால் அவர்களாகவே இருமி இறுகிய உணவு பொருளினை வெளியேற்றுவார்கள். குழந்தை மூச்சு அற்று இருந்திருந்தால் நாம் குழந்தையின்  கன்னத்தில் இறுக்கி தட்டி குழந்தையின் நினைவினை மீள கொண்டுவர முயற்சிப்பதுடன் உடனடியாகவே முதலுதவியினை ஆரம்பிக்க வேண்டும்.

2. குழந்தையினை முகம் கீழ் (நிலம்) நோக்கி பார்க்கும் வண்ணம் இடது  தொடையின் மீதும் இடது கையின் மீதும்  கிடத்த வேண்டும். அதன் பின்னர் உள்ளங்கையின் அடிப்பகுதியால் குழந்தையின் தோல்பட்டைகளுக்கு இடையில் ஐந்து முறை பலமாக தட்ட வேண்டும்.

3. குழந்தையினை மறுபக்கமாக திருப்பி விரலினை வாயில் உட் செலுத்தி விரல் நுனியால் வெளிவந்த உணவு பொருளினை பற்றி எடுக்க வேண்டும். விரலினால் துளாவ கூடாது (Do not sweep the mouth as this could push the object further down the throat)

4. பொருள் வரவில்லை எனில் குழந்தையின் முகம் மேல்நோக்கி இருக்கவாறு தொடையின் மீது கிடத்தி குழந்தையின் தலை மற்றும் கழுத்து பகுதியினை கையினால் ஆதாரம் கொடுத்த வண்ணம் மறு  கையின்  விரல் நுனியால் பொக்குளிர்ற்கு மேலாக ஐந்து முறை பலமாக தட்ட வேண்டும்.

5. விரலினை உட்செலுத்தி மறுபடியும் உணவு பொருளினை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறான முதலுதவி பயனளிக்காவிடின் அவசர நோயாளி சேவையை அழைக்க வேண்டும். சிறுவர்கள் எனில் கீழ் வரும் முறையில் (Heimlich Maneuver) வயிற்றினை அழுத்துவதன் மூலமும் சுவாச பாதையில் சிக்கி இருக்கும் பொருளினை வெளியேற்ற முடியும்

Choking: First aid

முற்றும்     

சிறுமி இஷாலினியின் மரண வாக்கு மூலம் ??

16 வயதான மலையக சிறுமி இஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, தந்தை, சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போலீசார் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியிடம் இருந்து உரிய வாக்குமூலத்தினை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பெறும் வாக்கு மூலம் “மரண வாக்குமூலம்” (Dying Declaration) என்றழைக்கப்படும். இப்பதிவில் மரண வாக்கு மூலத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்படுகின்றது.

1. மரண வாக்கு மூலம் என்றால் என்ன?

மரண வாக்குமூலம் (Dying Declaration) எனப்படுவது சட்டத்திற்குப் புறம்பான செயலின் விளைவால் இறக்கும் நிலையிலுள்ள மனிதரிடமிருந்து அவர் இறப்புக்குக் காரணமான தகவல்களை எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவோ பெறுவது ஆகும்.

2. மரண வாக்குமூலம் வாங்கும் முறை

சட்டத்தின் பிரகாரம் மரணத்தின் விளிம்பில் உள்ள ஒருவன் தனது மரணத்திற்கு இட்டு சென்ற நிகழ்வு பற்றி உண்மையே பேசுவான் எனக்கருதியே சட்டம் செயற்படுகின்றது.

முதலில் வாக்குமூலம் தருபவர் தெளிந்த மனநிலையில் (compos mentis) தான் இருக்கிறார் என மருத்துவர் சான்றளிக்க வேண்டும். எழுதும் நிலையில் இருந்தால் வாக்குமூலம் அளிப்பவரே வாக்குமூலத்தை எழுதலாம். இல்லாத நிலையில் மருத்துவரே எழுதலாம். வாக்குமூலம் தருபவரின் சொந்த வார்த்தைகளில் தான் வாக்குமூலம் எழுதப்பட வேண்டும். வாக்குமூலம் பெறுபவர் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாது. ஆம் இல்லை என விடைவரும் கேள்விகளையும் (leading questions) கேட்கக் கூடாது. ஒரு விடயம் தெளிவாக இல்லையென்றால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் கேட்கப்பட்ட கேள்வியையும் பெறப்பட்ட விடையையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும். இறுதியாக வாக்குமூலத்தை உரக்கப் படித்துக் காட்டி வாக்குமூலம் அளித்தவரின் பெருவிரல் ரேகை அல்லது கையெழுத்தைப் பெற வேண்டும். மருத்துவரும் இரு சுயாதீன சாட்சிகளும் கையொப்பமிட வேண்டும்.

Law related to Dying Declaration in Criminal matters or Dying Declaration  law

வாக்குமூலத்தில் இது நடந்தது என்ற தகவல்களே இடம் பெற வேண்டும். இது நடந்திருக்கலாம் எனும் ஊகக்கருத்து கூடாது. வாக்களிப்பவருக்கு அப்படி ஓர் ஊகம் இருக்குமாயின் அவ்வூகம் ஏற்படக் காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். 

3. யார் யார் மரண வாக்கு மூலத்தினை பதிவு செய்யலாம்?

யார் வேண்டுமானாலும் மரண வாக்கு மூலத்தினை பதிவு செய்யலாம்  ஆனால் மருத்துவரால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிக மதிப்பு உண்டு. அதனை விட நீதிபதியால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிகபட்ச மதிப்பு உண்டு.

இலங்கையில் வழமையாக பொலிஸாரினால் அல்லது சிகிச்சை அளிக்கும் வைத்தியரினால் மரண வாக்கு மூலம் பதியப்படும்

4. எவ்வாறான நோயாளிகளில் வழமையாக மரண வாக்கு மூலம் பதியப்படும்?

பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் மரணங்களுக்கு உரிய நோயாளிகளின் மரண வாக்குமூலம் பதியப்படும். உதாரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகிய பெண், நஞ்சு அருந்திய பெண்,  கடும் காயங்களுடன்  வீதியில் அநாதரவாக இருந்தவர் போன்றோரிடம் இருந்து மரண வாக்கு மூலம் பெறப்படும். இங்கு மரணம் ஏற்பட்ட சூழ்நிலையினை மரண வாக்கு மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சிறுமி இசாலினியிடம் இவ்வாறன ஓர் மரண வாக்கு மூலத்தினை போலீசாரோ அல்லது வைத்தியர்களோ பெறவில்லை இதன் காரணமாக சிறுமியின் மரணம் பல சர்ச்சசைகளுக்கு வித்திட்டுள்ளது.

முற்றும்

ஆத்ம திருப்தி

அன்றும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒருபுறம் நோயாளர் விடுதிகளில் இருந்து வந்திருந்த நோயாளர்கள் மறுபுறம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக உறவினர்களும் போலீசாரும் வந்திருந்தனர். பலரின் மத்தியில் இளவயது பெண்மணி ஒருத்தி இடுப்பில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒருத்தியுடனும் மறுகையில் ஓர் துணிப்பையுடனும் நுழைந்து வைத்தியரின் அறைக்கு வருகின்றாள், அங்கு அவள் குறித்த வைத்தியரின் பெயரினைக்குறிப்பிட்டு நீங்கள் தான் அவரா? என கேட்கின்றாள், வைத்தியரும் ஆம் என பதிலளிக்க, அவள் மீண்டும் தன்னை தெரிகின்றதா? என வினவுகின்றாள். வைத்தியரும் சில பெயர்களை கூறி நீங்கள் அவர்தானே எனக்கேட்க, இல்லை என பதிலளிக்கின்றாள். சில வினாடிகளில் வைத்தியர் தலையில் கைவைத்து சொறிய அவள் தனது பெயரினை கூறுகின்றாள். அவளின் பெயரினை கேட்டவுடன் வைத்தியர் ஒருகணம் கதிரையில் எழும்பி இருக்கின்றார்.
ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்னர் அவள் கணவனினால் கொடூரமாக கத்தியினால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறாள். பலமணி நேர சத்திர சிகிச்சையின் உயிர் தப்புகின்றாள். அதன் பின்னர் சட்ட வைத்திய பரிசோதனை, பொலிஸாரின் விசாரணை, நீதிமன்ற விசாரணை என பலவற்றிற்கு முகம் கொடுக்கின்றாள். இவை தவிர கையில் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்ட்டிக் சத்திர சிகிச்சை பெற கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த அவள் யாரின் துணை இன்றி கொழும்பு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். அவளின் கல்வித்தகமை ஆண்டு எட்டு வரையுமே. அவளுக்கு மொத்தம் 43 காயங்கள் அதில் 8 காயங்கள் பாரதூரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான குடும்ப வன்முறைகளினால் மனம் சோர்வுற்றிருந்த அவள் சட்ட வைத்திய அதிகாரி கொடுத்த மனத் தைரியத்தினாலும் பெண்கள் உரிமை அமைப்பு ஒன்று வழங்கிய வழிகாட்டலினாலும் வீறுகொண்டெழுந்து, தனது கணவனுக்கு எதிராக நீதிமன்றில் போராடினாள். சில வருடங்களின் இறுதியில் அவள் அதில் வெற்றியும் பெற்றாள்.

வைத்திய சாலையில் ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட குறித்த பெண்ணின் புகைப்படம்


சில மாதங்களில் மாற்றலாகி சென்ற சட்ட வைத்தியருக்கு பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி தெரியவில்லை. எனினும் அவள் வைத்திய சாலைக்கு வரும் பொழுது எல்லாம் குறித்த வைத்தியரினை பற்றி வைத்தியசாலை ஊழியரிடம் விசாரிப்பாள். அன்றும் அவ்வாறு விசாரித்த பொழுது குறித்த வைத்தியர் அயலில் உள்ள மாவட்டத்தில் வேலை செய்வது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவள் வைத்தியருக்கு பயணத்தடை காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று நினைத்தோ ஒரு கையில் அரிசிப் பையுடன் வந்திருந்தாள்.
இறுதியாக எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்து கொண்டிருத்த அலுவலக பெண் ஊழியருக்கு மனம் குறுகுறுத்தது, அவளும் வெட்கத்தினை விட்டு கேட்டு விட்டாள், மடியில் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றி. பெண்ணும் வெட்கத்துடன் அது வந்து சேர், வந்து சேர் … என முகம் குனிந்து நாணினாள். அவளது வாழ்வில் மறுமணம் தென்றலாக வீச தொடங்கி விட்டது என்பது மட்டும் சட்ட வைத்திய அதிகாரிக்கு நிச்சயமாக தெரிந்தது. அவர் ஆத்ம திருப்தியுடன் தனது கடமைகளை தொடர்ந்தார்.

முற்றும்

ஊமத்தம் பூவிற்கு ஏனிந்த ஆசை!!

ஊமத்தை இலங்கையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் நாம் அதிகமாக காணலாம். உம்மத்தை, ஊமத்தான், உன்மத்தம், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு. ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இயற்கை வைத்தியத்தில் ஊமத்தை ஆனது காதுவலி, மூட்டு வாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பாவிக்கப்டுகின்றது. சிலர் இதன் இலைகளை சுருட்டி புகைப்பிடிப்பர். இவ்வாறு செய்வதினால் சுவாச நோய்கள் நீங்கும் எனவும் நம்புகின்றனர். ஊமத்தையில் வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைகள் உண்டு.

Datura stramonium - Monaco Nature Encyclopedia
தாவரத்தின் தோற்றம்
Datura stramonium – Thornapple, Jimsonweed – Buy seeds at rarepalmseeds.com
ஊமத்தையின் விதைகள்

எம்மில் பலருக்கு ஊமத்தை ஆனது ஓர் நச்சு தாவரம் என தெரிய வருவதில்லை. Datura stramonium (thorn apple/ moon flower/ hell’s bells/ devil’s trumpet/devil’s weed/ tolguacha/Jamestown weed/ stinkweed) என்ற தாவரவியல் பெயரில் இது அழைக்கப்படுகின்றது. இத்தாவரத்தின் பூ, இலை மற்றும் காய் போன்றவை நச்சு தன்மையானவை. இவற்றில் atropine, hyoscyamine, scopolamine ஆகிய நச்சு பொருட்கள் அடங்கியுள்ளன. மேலும் இதன் விதைகள் மிக்க நச்சுத்தன்மையானவை ஒரு காயில் இருக்கும் விதைகளை ஒருவர் பூரணமாக உடகொள்வாரெனில் மரணம் நிச்சயமானது.
முற்றும்

கொரோனாவும் தற்கொலைகளும்

நாட்டில் கொரோனா நோயின் உச்சதாண்டவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 3000 பேர் PCR பரிசோதனை மூலம் கொரோனா நோயாளிகள் ஆக இனம் காணப்படுகின்றனர். மேலும் சராசரியாக 40 பேர் இறந்து கொண்டிருக்கின்றனர்.இது தவிர கொரோனாவினை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடு, தொழில் இன்மை  மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், கொரோனா நோய்ப்பரவல் செயற்பாடுகள் மூலம் பலர் தீவிர மனஉளைச்சல்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்கொலை செய்கின்றனர். இத்தகைய செய்திகள் பெரும்பாலும் பத்திரிகைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ வருவதில்லை. அவ்வாறு செய்தியாக வந்தாலும் தற்கொலைக்கு என்ன அடிப்படை காரணம் என்பது பற்றி தெரிய வருவதில்லை.

மருத்துவர்களும் இது பற்றி அலட்டிகொள்ளவதில்லை அவர்கள் பெரும்பாலும் நேரடியாக கொரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டே நோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது பற்றி விவாதிப்பார்கள். ஆனால் ஓட்டுமொத்தமாக கொரோனாவினால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ளும் பொழுது இவ்வாறு ஏற்பட்ட மரணங்களையும் நிச்சயம் கருத்தில் கொள்ளல் வேண்டும். 

வடமாகாணத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா பயணத்தடை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட சில தற்கொலை மரணங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு

1. 36 வயதான மீன் வியாபாரி ஒருவர் தனது வியாபார நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்த வாகனத்திற்குரிய லீசிங் கட்டனத்தினை முழுமையாக செலுத்தாததினால் மன உடைவிற்கு உள்ளாகி இருந்தார். அண்மைக்காலமாக குறித்த நபர் மதுவுக்கு அடிமையாகிய நிலையில் இருந்தார்.

2. கொரோனா தோன்றிவிடும் என்ற காரணத்தினால் பேரப்பிள்ளையினை வீதியில் கொண்டு உலாத்தி வருவதற்கு மகன் அனுமதிக்கவில்லை. இதன்  காரணமாக மனம் உடைந்த  பேரனார் தற்கொலை செய்து கொண்டார்.

3. தனிமையில் வசித்த 5 பிள்ளைகளின் தந்தையார் (இவரின் 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர் ) தனது கடைசி மகள்  கடந்த சில நாட்களாக தொலைபேசியில் கதைக்கவில்லை என்பதாலும், கடைசியாக கதைக்கும் பொழுது அவள் வேலை பார்க்கும் கொம்பனி கொரோனா காரணமாக அவளை வேலையில் இருந்து நிறுத்தி இருப்பதாகவும் கூறியதால் மிகவும் மனம் உடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

4. மனநோயாளி ஒருவர் பயணத்தடை காரணமாக வெளியேறி உலாத்த முடியாமையினால் தற்கொலை செய்துகொண்டார். இவர் வழமையாக பல்வேறு இடங்களுக்கு சென்றுவருவதையே தொழிலாக கொண்டவர்.

5.மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அவை கிடைக்காமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.    

மேற்குறித்த சம்பவங்களில் இருந்து கொரோனா நோய் எவ்வாறு தற்கொலைக்கு வழிவகுக்கின்றது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சில மனிதர்களே இவ்வாறு தற்கொலை செய்கின்றனர் அல்லது செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் “அதிக  ஆபத்தானவர்கள்   (High risk persons for suicide  )” என வகைப்படுத்தபடுவர். இவர்கள்  யாரெனில் குறித்த பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் தற்கொலை செய்ய அதிக சாத்தியம் உள்ளவர்களே. 

யார் அதிக ஆபத்தானவர்கள்

1. போதைப்பொருள் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள்

2. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மன நோயாளிகள்

3. பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் காரணமாக தொழில் மற்றும் வருமானத்தினை இழந்தவர்கள்

4. மாற்றுத்திறனாளிகள் போன்ற மற்றையவர்களில் முற்றுமுழுதாக தங்கி வாழ்பவர்கள்.

5. பெற்ற பிள்ளைகள் புலத்தில் வசிக்கும் நிலையில் ஈழத்தில் தனிமையில் உள்ள பெற்றோர். 

6. அதிகளவு குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள்.

7. தொழில் ரீதியாக அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சுகாதார சேவை ஊழியர்கள்.

8. கொரோனா நோயின் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்தவர்கள்

9. கொரோனா நோய் தனக்கு அல்லது குடும்பத்தினருக்கு  வந்துவிடுமோ என அதீத பயம் கொண்டவர்களும் கொரோனா நோய் வந்தமை காரணமாக உறவினர்களாலும் சமூகத்தினாலும் ஒதுக்கப்படுபவர்கள்.

10. லீசிங் மற்றும் ஏனைய கடன்களை செலுத்த முடியாதவர்கள். 

11. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “சமூக இடைவெளி” ” முக கவசம் அணிதல்”… போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அதீத மனா உளைச்சலுக்கு உள்ளாபவர்கள்.

12. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமது திருமணம், பரீட்சை போன்ற முக்கியமான நிகழ்வுகளை இடைநிறுத்தியவர்கள்.

13. தாய் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி  தவிப்போர் 

எனவே இவ்வாறன தற்கொலை செய்ய அதிகம் சாத்தியக்கூறு கொண்ட மக்களின் பிரச்சனைகளை நாம் அன்போடும் பரிவோடும் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் மேற்குறித்த மக்களுக்கு எம்மால் ஆன  உதவிகளை வழங்கலாம் அல்லது உதவி பெறும் வழிமுறைகளை காட்டிட வேண்டும். மேலும் உளவள ஆலோசனை தேவைப்படுபவர்கள் 1926 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உரிய உளவள ஆற்றுப்படுத்தலைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

முற்றும்

மட்டு- இளைஞன் பொலிஸாரினால் கொல்லப்பட்டாரா?

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவர் போலீஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த இளைஞர் கைது செய்யப்படும் பொழுது பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் அத்தாக்குதலில் விளைவாக ஏற்பட்ட காயங்களின் காரணமாகவே குறித்த இளைஞர் இறந்ததாகவும் போலீசார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த இளைஞனின் உடற் கூராய்வு பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் குறித்த இளைஞன் அதிகளவு ஐஸ் என்ற போதை பொருளினை உட்கொண்டதனால் தான் மரணம் அடைய நேர்ந்தது என்று இணையத்தள செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

Methamphetamine Use and Cardiovascular Disease | Arteriosclerosis,  Thrombosis, and Vascular Biology

மெத்அம்பிற்றமைன் என்ற போதைப்பொருளே இவ்வாறு ஐஸ், Black Beauties, L.A. Ice, Speed , Crystal … போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.இப்பதிவில் ஐஸ் என்றழைக்கப்டும் போதைப்பொருளானது எவ்வாறு சடுதியான மரணத்தினை விளைவிக்கும் என பார்ப்போம்.

  1. இந்த ஐஸ் போதைப்பொருளானது தொடர்ச்சியாக பல வருடங்களாக பாவித்து வரும் பொழுது அவை இருதயத்திற்கு குருதியினை வழங்கும் முடியுரு நாடிகளில் கொலஸ்டரோல் படிவினை தூண்டும் (accelerated atherosclerosis) இதன் காரணமாக குறித்த நபர் மிகவிரைவாக மாரடைப்பு ஏற்பட்டு இறப்பினை தழுவுவார்.
  2. மேலும் ஒரு நபர் பலவருடங்களாக ஐஸ் போதைப்பொருளை பாவிக்கும் பொழுது அது அவரின் முடியுரு நாடிகளில் (coronary artery spasm) சுருக்கத்தினை ஏற்படுத்தும், இதன் காரணமாக குறித்த நபர் தீடீர் மரணத்தினை தழுவ நேரிடும்.
  3. இது தவிர ஐஸ் போதைப்பொருளானது நீண்ட நேரத்திற்கு இருதய துடிப்பில் ஒழுங்கற்ற தன்மையினை கொண்டுவரும் (refractory ventricular fibrillation) இதன் காரணமாகவும் சடுதியான மரணம் சம்பவிக்கலாம்.
  4. மேலும் நீண்டகால ஐஸ் பாவனையாளர் ஒருவர் dilated cardiomyopathy என்ற இருதய நோய் நிலைமைக்கு உட்பட்டும் சடுதியாக மரணத்தினை தழுவ நேரிடலாம்.
  5. இது தவிர ஐஸ் பாவனையாளர் ஒருவர் கடுமையாக வேலை செய்யும் பொழுது அல்லது அதிக மனக்கிலேசத்திற்கு (physical/ mental strain) உள்ளாகும் பொழுது அவரின் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும், இதன் காரணமாகவும் இருதய துடிப்பில் ஒழுக்கற்ற ரிதம் உருவாகி சடுதியான இறப்பு ஏற்படும். பொதுவாக பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது இவ்வாறு தான் இறப்பு ஏற்படுகின்றது.
  6. மேலும் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது தமது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருளினை மிக அவசரமாக விழுங்கி விடுவார்கள். இவ்வாறு உட்கொள்ளப்பட்ட போதைப்பொருளானது அவர்கள் ஒருதடவை பாவிக்கும் போதைப்பொருளின் அளவினை விட கூடுதலாக இருக்கும் பொழுதும், போதைப்பொருள் சுற்றப்பட்ட உறை எமது சமிபாட்டு தொகுதியில் கரையும் பொழுதும் அதில் அடங்கியிருந்த அதிகளவான போதைப்பொருள் சமிபாட்டு தொகுதியினுள் வெளியேற்றப்பட்டு உடலினுள் அகத்துறிஞ்சப்படும். இதன் காரணமாக குறித்த நபர் சடுதியான நஞ்சாதலுக்கு உள்ளாவர் (Acute Intoxication ) இதன் காரணமாக அவர் சடுதியாக மரணத்தினை தழுவ நேரிடும்.
  7. ஐஸ் பாவனையின் பொழுது சடுதியாக எமது உடலில் குருதி அழுத்தம் அதிகரிக்கும் இதன் காரணமாகவும் மூளையில் இரத்த கசிவு ஏற்படல் (intra cerebral haemorrhage) மற்றும் இருதய நோய் போன்றவற்றினாலும் சடுதியான மரணம் சம்பவிக்கலாம்
    மேற்குறித்தவாறு ஐஸ் போதைப்பொருளானது நபர் ஒருவரில் சடுதியான மரணத்தினை விளைவிக்கும்.
Why Methamphetamine Changes a Person's Physical Appearance - Family First  Intervention

இனி முக்கிய விடயத்திற்கு வருவோம் பொலிஸார் தாக்கியதால் தான் ஒருவர் இறந்தார் என்பதினை எவ்வாறு சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் எவ்வாறு உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார்? உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது உடலில் வெளியில் தெரியும் காயம், மற்றும் அதற்கு கீழே உள்ள உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயம் என்பன பற்றி ஆராயப்படும். சாதாரணமாக மனித உடலில் ஏற்படுத்தப்படும் சகல காயங்களும் மரணத்தினை விளைவிக்காது. மரணத்தினை விளைவிக்கும் காயங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அம்மரணமானது காயத்தினால் ஏற்பட்ட மரணம் எனக்கொள்ளப்படும்.

பொதுவாக போலீசார் கைது செய்வதற்கு முன்னரே போதைப்பொருள் பாவனையாளர் அவற்றினை விழுங்கி விடுவார்கள். மேலும் இவர்கள் இவ்வாறு விழுங்கியதை வெளியில் சொல்லுவதில்லை. இதன்காரணமாக அவர்கள் போலீஸ் நிலையத்தில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவ நேரிடுகின்றது. இவ்வாறான சம்பவங்களின் பொழுது அரசியல்வாதிகள் மற்றும் சட்டதரணிகள் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையினை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே கருத்து தெரிவிப்பது நன்று. அவர்கள் தமது சுயலாபம் கருதி செயற்படுவார்களாயின் அச்செயற்பாடு ஏற்கனவே சிதைந்து போயுள்ள நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையீனத்தினை மேலும் அதிகரிக்கும்.
முற்றும்

  1. https://wordpress.com/post/tamilforensic.wordpress.com/71
  2. https://wordpress.com/post/tamilforensic.wordpress.com/1381

தமிழ் பெண்களும் ஆபாச படங்களும் (பகுதி 2)

அண்மைக்காலமாக இலங்கையினை சேர்ந்த பல பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தலங்கள் மற்றும் இணையத்தில் வெளியாகி பலரினையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் பலரும் அறிந்தமையே. அண்மைக்காலமாக இவ்வாறு சமூக ஊடகங்களில் இவ்வாறு நடைபெறும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2018ம் ஆண்டு 2505 ஆக இருந்த சம்பவங்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு 14500 ஆக பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட பெண்கள் எவருமே இது பற்றி பொலிஸாரிடமோ அல்லது வேறு தரப்பிடமோ முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சந்தர்ப்பங்களில் பெண்ணின் சம்மதத்துடன் தானோ இவ்வாறான சம்பவம் நடைபெற்றது எனவும் எண்ண தோன்றுகின்றது. குறித்த பெண்ணின் சம்மதம் இன்றி படங்களையோ வீடியோவினையோ எடுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவ்வாறே ஒருவரின் அனுமதி இன்றி நாம் அவர்களின் படங்களை அல்லது வீடியோக்களை பகிர முடியாது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வாறு முறையிடாத காரணத்தினாலும் இவ்வாறான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களினால் முறையிடாது விடுகின்றனர். மேலும் பெண்கள் இவ்வாறான சம்பவம் குறித்து எங்கே, எவ்வாறு முறையிடுவது என்று குறித்து தெரியாத காரணத்தினாலும் முறையிடாது விடுகின்றனர்.


இப்பதிவில் பாதிக்கப்பட்ட பெண் இலங்கையில் எவ்விடங்களில் முறைப்பாட்டினை மேற்கொண்டு தீர்வினை பெறலாம் விளக்கப்படுகின்றது.

  1. பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனில் அவர் சைபர் கிரைம் டிவிசன் (Cyber Crimes Division – CCD) இல் முறையிடலாம். இப்பிரிவானது கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ளது. (Criminal Investigations Department – CID). அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது தொலை பேசி இலக்கம் 011 232 6979 ஊடாகவோ முறையிடலாம்.
  2. பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு குறைந்தவர் எனில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தொடர்பு இலக்கமான 1929 மூலம் முறைப்பாட்டினை மேற்கொள்ளலாம்.
  3. இலங்கையின் இலத்திரனியல் குற்றங்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை மேற்கொள்ளும் the Sri Lanka Computer Emergency Readiness Team (SLCERT) அவர்களிடம் பின்வரும் தொலைபேசி இலக்கம் மூலம் 011 2 691 692 முறைப்பாடு மேற்கொள்ளலாம்.
  4. அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவிலும் முறையிடலாம்.
  5. பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோரிடம் முறையிடலாம் அவர்கள் தகுந்த வழிகாட்டல்களை வழங்குவார்கள்.
  6. அரச சார்பற்ற நிறுவனமான WIN (Women In Need ) போன்றவற்றின் தொடர்பிலக்கமான 077 5676 555 போன்றவற்றிற்கும் முறையிடலாம்.
  7. பகுதி ஒன்றினை பார்வையிட தமிழ்ப்பெண்களும் ஆபாசப் படங்களும் (பகுதி 01)
    முற்றும்

முல்லைத்தீவில் நால்வரினை பலி கொண்ட…

கடந்த மாதத்தில் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற மின்னல் தாக்குதல்களின் பொழுது நான்கு பேர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியமை பலருக்கும் தெரியாமல் இருக்கும். இவ்வாறான பரிதாபகரமான அகால மரணங்கள் நிச்சயம் தடுக்கப்பட கூடியவையே. மக்களிடையே விழிப்புணர்வு இன்மையும் அலட்சியமுமே இவ்வாறான மரணங்களுக்கு எதுவாக அமைந்து விடுகின்றன என்றால் அது மிகையாகாது. பொதுமக்கள் பலரும் கூறும் விடயம் யாதெனில் தாங்கள் பல வருடங்களாக இவ்வாறு விவசாயம் செய்யும் பொழுதும் வெளிகளில் நின்று வேறு வேலை செய்யும் பொழுதும் தங்களை இவ்வாறு மின்னல் தாக்கவில்லை என்பதுவும் மற்றும் தங்களுக்கு இவ்வாறு மின்னல்  தாக்கும் என்பது தெரியாது என்பதுவுமே.

Thunder, lightning

இனி நாம் திறந்தவெளியில் இருப்பின் மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

  1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
5. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
6. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
7. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது) .
8. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
9. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
10. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
11. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
12. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
13. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது.

Injuries and deaths from lightning | Journal of Clinical Pathology
மின்னல் தாக்குதலின் பொழுது இறந்த நபர் ஒருவரின் காலனி

இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்