அது ஓர் வீதி விபத்து ஒன்றின் பொழுது இறந்த நபர் ஒருவரின் மரணவிசாரணை, இறந்த நபரின் மனைவி தனது கணவனை வாகனத்தின் மூலம் மோதி கொலை செய்து விட்டதாக அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். விசாரணைக்கு வந்திருந்த போலீசார் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் நின்றிருந்தார்.
அவள் ஓர் பட்டதாரி ஆசிரியை இறந்த அவளின் கணவர் ஓர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். அவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள். அவளின் கணவன் எப்பொழுதுமே அதீத வேகத்தில் தான் மோட்டர் சைக்கிளை செலுத்துவார். அத்தோடு மட்டும் அல்லாது ஆபத்தான முறையில் வாகனங்களினை முந்துதல் மற்றும் ஆபத்தான வளைவுகளில் கவனம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்துதல் போன்ற தவறுகளை அடிக்கடி செய்வார். திருமணமான ஆரம்பத்தில் அவள் மிக்க பயத்துடனேயே அவனுடன் மோட்டர் சைக்கிளில் பின்னிருந்தவாறு பயணிப்பாள். அவளின் அறிவுக்கு எட்டியவரை இவ்வாறான நடவடிக்கைகள் போக்குவரத்து விதி மீறல் என உணர்ந்து பல தடவைகள் கணவனுக்கு சுட்டி காட்டியிருந்தாள். இதன்காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்புக்கள் தான் ஏற்பட்டதே ஒழிய அவன் திருந்திய பாடில்லை. அன்றும் அவ்வாறே அவன் அலுவலகம் செல்லும் பொழுது ஓர் பேருந்தினை முந்திச்செல்லும் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனம் அவனை மோதித்தள்ளியது. விபத்தின் பின்னர் அவனது எலும்பு மற்றும் தசை குவியலினைபொறுக்கித்தான் எடுக்க முடிந்தது.

இன்றைய காலப்பகுதியில் பல பெண்கள் நன்றாக படித்திருந்தாலும் கணவர் பிழையான காரியங்களில் ஈடுபடும் பொழுது தட்டி கேட்கவும் திருத்தவும் தயங்குகின்றார்கள் அல்லது அவ்வாறு செய்ய முற்படுவதில்லை. பலர் இவ்வாறு செய்வதன் மூலம் பல விதமான குடும்ப பிரச்சனைகள் ஏற்படும் என பயப்படுகின்றனர் வேறு சிலர் கணவருக்கு மனைவி புத்தி மதி கூறுவதா என பின்னிற்கின்றனர். இதன்காரணமாக சிறிது காலத்தில் ஏற்படும் பாதக விளைவுகளையும் அவர்கள் அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகின்றது. எனவே ஆண் ஒருவன் அதீத மது பாவனை, போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்யும் பொழுது அவன் மட்டும் அல்ல அவனது குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
முற்றும்














