கோவிலுக்கு கார்பெட் வீதி நல்லதா ?

தற்பொழுது தேர்தல் காலம் நெருங்குவதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல உறுப்பினர்கள் தமக்கு நிதியினை கொண்டு கோவில்களின் வெளி வீதிக்கு தார் ஊற்றி கார்ப்பெட் வீதியாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் ஏற்படும் சுகாதார சம்பந்தமான பிரச்சனைகளை இப்பதிவு ஆராய்கிறது. முக்கியமான சிலபிரச்சனைகளை இங்கு பார்ப்போம்

  1. இயற்கையில் ஒவ்வொரு சூழல் தொகுதியிலும் காணப்படும் பல்வேறுபட்ட நுண்ணங்கிகளே அங்கு சேரும் கழிவுகளை உக்கி அவற்றினை சூழலில் இருந்து அகற்றுகின்றது. நாம் சாதாரணமாக கோவிலின் வெளிவீதியில் இருக்கும் மணலிலான வீதியினை அகற்றிவிட்டு தார் ஊற்றும் பொழுது மணலில் உள்ள நுண்ணங்கிகள் இல்லாமல் போகும். இதனால் தாரின் மேற்பரப்பில் தங்கும் கழிவுகள் அதிக காலத்தின் பின்னரே உக்கி அழிவடையும். இதன் காரணமாக தாரின் மேற்பரப்பில் நாய் போன்ற மிருகங்களின் மலக்கழிவுகள் கழிவுகள், தாவரங்களின் இலை போன்ற கழிவுகள், மனிதர்களால் போடப்படும் போன்ற கழிவுகள் கழிவுகள் நீண்டகாலமாக தங்கி நிற்கும். இவை வெளி வீதியில் அங்க பிதிஷ்டை செய்யும் அடியவர்களின் உடலினை அடையும் சந்தர்ப்பம் அதிகமாகும். சாதாரணமாக நல்லூரில் வெளிவீதியில் போடப்படும் மணல் வீதியில் இருந்தே நாய் மற்றும் பூனை ஆகியவற்றின் மலத்தில் இருக்கும் ஒட்டுண்ணி புழு ஆனது வெளி வீதியில் அங்க பிரதிஸ்டை செய்த அடியவர்களை தாக்கி நோய் நிலையினை உண்டாக்கிய சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  2. போடப்படும் தார் கறுப்பு நிறத்திலேயே இருக்கும். அதனால் இப்பொழுது என்ன பிரச்சனை? கறுப்பு நிறமானது குறைந்த நேரத்தில் அதிகளவு வெப்பத்தினை உறிஞ்சும் அதேவேளை உறிஞ்சிய வெப்பத்தினை அதிகளவில் காலும் தன்மையுடையது. இந்த பௌதீகவியல் விளக்கம் பௌதீகவியல் படித்த யாவரும் அறிந்ததே. இதனால் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் அதிகளவு வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாவர். மேலும் நீர் அடித்து வீதியினை குளிர்மை படுத்த முயன்றால் மணல் வீதி மாதிரி நீர் தரையினுள் உள்ளிறங்காது, மேற்பரப்பில் தங்கிநிற்கும்பொழுது ஏற்கனவே உள்ள மலக்கழிவுகள் அதில் கரைந்து அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் ஆகியோரில் படிவடையும்.111
  3. திருவிழாக்காலங்களில் மாலை நேரங்களில் சிறுவர்கள் பொதுவாக வெளிவீதியில் ஓடி விளையாடுவார்கள். இவ்வாறு மணல் விளையாடும் பொழுது சிறுவர்கள் பலசந்தர்ப்பங்களில் சறுக்கி விழுந்த சந்தர்ப்பங்கள் உண்டு. மணலில் இவ்வாறு விழும் பொழுது பொதுவாக காயம் வராது ஆனால் தார் வீதியில் விழும் பொழுது காலில் பலத்த உரசல் காயம் ஏற்பட சாத்தியக்கூறு உண்டு.
  4. மாலை நேரங்களில் வெளிவீதியில் அதுவும் மணலில் குந்தி இருந்து கதைத்த கதைகளை சாதாரண மனிதன் ஒருவனால் மறக்க முடியாது. அதிக வெப்பம் காரணமாக தார் வெளிவீதியில் குந்தி இருக்க கூட முடியாத நிலை ஏற்படும். அவ்வாறே சிறுவர்கள் மணலில் சிற்பம் அல்லது சிலை போன்றவற்றினை செய்து காட்சிப்படுத்துவதும் காலப்போக்கில் இல்லாமல் போகும்.

ஒட்டு மொத்தத்தில் தார் வீதி இடுவதினால் அல்லது சீமெந்து தரை இடுவதினால் ஏற்படும் நன்மைகளை விட பல்வேறுபட்ட தீமைகளே ஏற்படும். அத்துடன் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.

11 பேரினை பலிகொண்ட …..

அண்மையில் இலங்கையில் மீரிகம பகுதியில் கசிப்பு அருந்திய பலர் கசிப்பு விசமானதன் காரணமாக இறந்துள்ளனர். தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 11 இணை எட்டியுள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.

முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல்   (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால்  என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.

நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.

கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி  போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது.  ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.

ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு  உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.

உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.

இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

03

அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால்  கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.

இது தொடர்பான இன்னொரு பதிவு

கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்

நம்பிய காலம் மலை ஏறிவிட்டதா?

அண்மையில் இரத்னபுரி மேல் நீதிமன்றினால் வைத்தியர் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 2016ம் ஆண்டு 16 வயது சிறுவனும் காலில் காயமடைந்த நிலையில் அவனது சகோதரனுடன் வைத்தியசாலைக்கு மருந்து கட்டிட சென்றான். அப்பொழுது குறித்த வைத்தியர் தனது விடுதியில் இருந்துள்ளார். அவரின் அறிவுறுத்தல்கள் படி வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அச்சிறுவனை வைத்தியரின் விடுதிக்கு அனுப்பியுள்ளார். அங்கு அக்குறித்த வைத்தியர் அச்சிறுவனை தனது அறையில் வைத்து காயத்திற்கு கட்டுப்போடும் சாக்கில் அவனது ஆடைகளை களைந்து பாலியல் துஸ்பிரயோகத்திர்ற்கு உட்படுத்த முயன்ற வேலை அவரின் பிடியில் இருந்து சிறுவனும் சகோதரனும் தப்பி ஓடி, போலீசாரிடம் முறையிட்டனர் அதனைத்தொடர்ந்து மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு இலங்கையில் மேலும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன உதாரணத்திற்கு 2007ம் ஆண்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரினால் 23வயது நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு 6ம் மாடியில் இருந்து தள்ளி விழுத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தவிர நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன.

சாதாரண பொதுமக்களில் பலருக்கு வைத்தியர்கள் தவறு செய்ய மாடடார்கள் என்ற அதீத நம்பிக்கையும், வைத்திய பரிசாதனைகள் பற்றிய அடிப்படை அறிவு இன்மையுமே இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற காரணமாக அமைந்து விடுகின்றன.

This slideshow requires JavaScript.

வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் பொழுது பொதுவாக ஆண் நோயாளியாயின் ஆண் உதவியாளர் (Chaperone) ஒருவரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளர் ஒருவரும் துணை இருத்தல் வேண்டும். இங்கு உதவியாளர் என்பவர் பொதுவாக வைத்தியசாலை ஊழியர் ஒருவராக இருப்பார் அவ்வாறு இல்லாத பட்ஷத்தில் நோயாளியுடன் கூட வருபவர் வைத்தியரின் அனுமதியுடனும் நோயாளியின் அனுமதியுடனும் உதவியாளராக செயற்படலாம்.

அந்தரங்கமான வைத்திய பரிசோதனைகளை (intimate medical examinations) உதாரணமாக இனப்பெருக்க உறுப்புக்களை பரிசோதித்தல் மற்றும் மார்பகங்களை பரிசோதித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும்பொழுது ஆண் நோயாளி ஆயின் ஆண் உதவியாளரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளரும் கூட இருத்தல் கட்டாயமானதாகும். மேலும் இவ்வாறான பரிசோதனைகள் ஓர் மறைவான இடத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் வேறு வைத்திய சாலை ஊழியர்கள் பிரசன்னமாயிருப்பின் அவர்களை அப்பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூற நோயாளிக்கு முழு உரிமையும் உண்டு. நோயாளி அவ்வாறு கூறுவாராயின் வைத்தியர்கள் அக்கூற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிலவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னர் நோயாளிகள் குறித்த வைத்தியருடன் எவ்வாறான சோதனைகளை எவ்வாறு மேற்கொள்ளுவீர்கள் என கேட்டறிந்து கொள்ள முடியும். அவ்வாறு நோயாளி கேட்கும் பொழுது வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும். அண்மையில் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கட்டு ஒன்றுடன் வைத்திய பரிசோதனைக்கு சென்ற பொழுது வைத்தியர் போதிய விளக்கங்கள் கொடுக்காமல் அவரின் மார்பங்களை பரிசோதனை செய்து பெரும் சர்ச்சையில் மாட்டினார். உண்மையில் மருத்துவ ரீதியாக அவ்வைத்தியர் மார்பில் ஏதாவது கட்டி இருக்கின்றதா எனவும், அது கழுத்து பகுதிக்கு பரவியதா எனவும் அறியவே அப்பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நோயாளிக்கு வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.

சாதாரண வைத்திய பரிசோதனைகளை விட சட்ட வைத்திய பரிசோதனைகள் (Medico – legal examination) மேற்கொள்ளப்படும் பொழுது போலீசாரே, இராணுவத்தினரோ அல்லது சிறைக்காவலரோ சோதனை மேற்கொள்ளப்படும் நபரின் அருகில் இருக்க அனுமதிப்பதில்லை.

இது தவிர வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினை நோயாளிக்கு கொடுப்பதுவும், தொழில் முறையற்ற ரீதியில் உரையாடல்களை மேற்கொள்ள முனைவதும் தொழில்முறை துஸ்பிரயோகமே.

வைத்தியசாலை தவிர வைத்தியரின் விடுதி, வீதியோரங்கள், வைத்தியரின் வாகனம் அல்லது வீடு அல்லது போலீசாரின் வாகனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகள் மிகவும் சர்ச்சைக்கு உரியவை. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

யாழிற்கு புதிய அச்சுறுத்தல்

கடந்த வாரத்தில் யாழ் குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் குளவியின் தாக்கம் காரணமாக இருவர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி தாயும் ஒருவர். அவரின் சிசுவும் இறந்த நிலையில் பிறந்தது. இது தவிர பலர் காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். முன்னைய காலங்களில் பொதுவாக மலையக தேயிலைத் தோட்டங்களை அண்டியும் சிகிரியா போன்ற காட்டுப்புறங்களிலுமே இத்தகைய காட்டுக்குளவியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இப்பொழுது யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு குளவிகளின் தாக்கம் பரவியுள்ளது.
இப்பதிவில் இக்குளவியின் தாக்கத்திர்ற்கு உள்ளான ஒருவர் ஏன் இறக்க வேண்டும் என்பது பற்றி சட்ட மருத்துவ ரீதியில் அலசுவோம்.

பல நோயாளிகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் பொழுது வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதில்லை உதாரணமாக முதலில் தேனீ தான் குத்தியது  என்பார்கள் சிறிது நேரத்தில் உறவினருடன் கைத்தொலைபேசியில் கதைத்து விட்டு கூறுவார்கள் டொக்டர் தேனீ அல்ல குளவியே குத்தியது என்பார்கள். கீழே உள்ள படமானது தேனிக்கும் குளவிக்கும் உள்ள உருவவியல் அடிப்படை வேறுபாடுகளை விளக்குகின்றது.

பொதுவாக தேனீயானது மனிதன் ஆனவன் அதன் கூட்டினை கலைக்கும் பொழுது தான் தாக்கும் . ஆனால் குளவியானது மனிதனை தேடிச்சென்று தாக்கும் இயல்பு உடையவை.குளவியானது மனிதனை தாக்கும் போது தேனீயினை விட அதிகளவு நச்சினை உட்செலுத்தும் அத்துடன் அதன் நச்சானது மிக்க வீரியம் கூடியது. எனவே சிகிச்சை அளிக்கும் வைத்தியர்ளுக்கு என்ன குத்தியது என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். குளவியானது வாயினால் கடித்தும் உடலின் பின்புறத்தில் உள்ள கொடுக்கு (A sting is delivered by a posterior, tapered, needle like structure designed to inject venom). மூலமும் மனித உடலில் நச்சிணை உட்செலுத்துகின்றன.

04
அடுத்து குளவி குத்தி மரணம் எவ்வாறு நிகலுகின்றது என்பது பற்றி பார்ப்போம். உண்மையில் மரணமானது உட்செலுத்தப்பட்ட நச்சானது உடலில் ஏற்படுத்தும் ஒவ்வாமை தாக்கத்தினாலும் அதன் நச்சியல் இயல்பினாலும் ஏற்படுகின்றது. அதாவது சில மரணங்கள் ஒவ்வாமையினால் மட்டுமே ஏற்படும் சில மரணங்கள் நச்சியல் தாக்கத்தினால் மட்டுமே ஏற்படும். ஆனால் பல இறப்புக்கள் மேற்கூறிய இரண்டினதும் சேர்க்கைகள் காரணமாகவே ஏற்படுகின்றது.
ஒவ்வாமைத் தாக்கம் எனப்படும் பொழுது சாதாரணமாக தோலில் ஏற்படும் எரிவு, வீக்கம் (local allergic reaction) போன்றவற்றில் இருந்து சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும் தாக்கம் ( anaphylatic shock) வரை இருக்கும். இங்கு ஒவ்வாமையினால் மரணம் நிகழும் பொழுது உட்செலுத்தப்பட்ட கொடுக்குகளின் எண்ணிக்கை அதாவது குத்திய குளவிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்காது. ஒருசில குளவிகள் குத்தினாலே மரணம் சம்பவிக்கும்.

03
மாறாக குளவியின் நச்சின் (Toxic effect) இயல்பால் மரணம் நிகழ வேண்டும் எனில் குறிப்பிடத்தக்க அளவில் குளவிகள் குற்ற வேண்டும். உதாரணமாக மனிதனை 500 தொடக்கம் 1200 வரையான தேனீக்கள் குற்றினாலே செலுத்தப்பட்ட நஞ்சின் விளைவாக மரணம் சம்பவிக்கலாம் (The human LD50 for honey bee stings has been estimated to be between 500-1200 stings)
இவ்வாறு அதிகளவு குளவிகள் குற்றும் பொழுது அதிகளவு நஞ்சேற்றல் (mass envenomation) ஏற்பட்டு உடனடியான சிறுநீரக செயலிழப்பு (acute kidney injury), தசைகளில் ஏற்படும் அழற்சி (rhabdomylysis),  மற்றும் இரத்தம் அழிவடைதல் (Haemolysis) போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு குளவியனது குற்றும் பொழுது அவர்களுக்கு புதிதாக மாரடைப்பு அல்லது இருதய துடிப்பில் ஒழுங்கின்மை (arrhythmia) போன்றன ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
இது தவிர குளவியானது கலைத்து கலைத்து குத்தும்  பொழுது மனிதர்கள் விபத்துக்கு உள்ளாகி அல்லது கிணறு போன்ற குழிகளில் விழுந்து அல்லது பனை போன்ற உயரமான மரங்களில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு.
குளவிகள் குற்றின் நோயாளியை வீட்டில் வைத்து குற்றிய இடத்திற்கு சுண்ணாம்பு அல்லது புளி பூசுதல் அல்லது விச கடி வைத்தியர்களின் சிகிச்சை போன்ற பாரம்பரிய முறைகளின் மூலம் சிகிச்சை அளித்தல் பல சந்தர்ப்பங்களில் உயிர் ஆபத்தினை உண்டு பண்ணியுள்ளது. ஏனெனில் நான் இங்கு விஞ்ஞான ரீதியில் உடலியல் தொழில் பாடுகளை கண்காணிக்க முடியாமையே ஆகும். மேலும் இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகள் காரணமாக வைத்தியசாலையில் காலதாமதமாகவே அனுமதிக்கப்படுவர் இதன் காரணமாக அவர்கள் உயிர் ஆபத்திணை எதிர்நோக்குவர்.

மேலும் சிறுவர்களும் வயோதிபர்களும் குளவி கலைத்து குத்தும் பொழுது அவர்களால் இலகுவில் தப்பி ஓட முடிவதில்லை இதன் காரணமாக குளவிகளின் தாக்குதலினால் இவர்களே அதிக பாதிப்பினை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

தாயே தனது குழந்தைகளை கொலை செய்தால்???

பத்து மாதங்களே நிரம்பிய இரு பெண் குழந்தைகளை அண்மையில் பெற்ற தாயாரினால் அவர்களின் வீட்டின் கழிப்பறையில் வைத்து கழுத்து அறுக்கப் பட்டு கொலை செய்யப்பட்டனர். கொலை செய்தபின்னர் தாயார் தான் செய்தவற்றினை அதாவது தானே குழந்தைகளின் கழுத்தினை அறுத்து கொன்றதாக கணவனுக்கு கூறிய நிலையில் விடயம் மேலும் பரபரப்பாகியது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது தாயானவள் ஏற்கனவே ஒரு மனநோயாளி எனவும் அவரது மகன் ஒருவர் கடந்த ஆண்டு சலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததினை தொடர்ந்து அவரின் மனநிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்ததாகவும் அவர் உரிய மருத்துவ வசதிகளை பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெற்ற தாயே பச்சிளம் பாலகர்களை கொல்லும் சம்பவங்கள் முன்பும் அரிதாக நடைபெற்றுள்ளன. இவ்வாறு மனநிலை பாதிக்கப் பட்ட குழந்தைகளை பெற்ற தாய் (biological mother ) தனது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொல்லுதல் “infanticide” என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். முக்கியமாக இங்கு தாயானவள் ஏற்கனவே மனநோயாளியாக இருக்கலாம் அல்லது குழந்தை பேற்றின் காரணமாக / பாலூட்டுவதன் காரணமாக அவர் மனநோயாளியாக (unsound mind and disturbed)  இருக்க வேண்டும். இவ்வாறு மனநிலை குழம்பியதன் காரணமாகவே தாய் இவ்வாறான செயல்களை செய்வார். இது தவிர அவரின் மனதில் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற மனா உந்துதல் பொதுவாக இருப்பதில்லை.

சாதாரணமாக பிள்ளைப்பேற்றின் பின்னர் உடலில் சடுதியாக ஏற்படும் ஹோர்மோன் மாற்றம் காரணமாவும் பிள்ளை பேற்றினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாகவும் மேலும் பாலூட்டுவதன் காரணமாகவும் இதுவரை சாதாரணமாக இருந்த பெண்ணின் மனதில் பல்வேறு பட்ட மாற்றங்கள் நிகழும் அதன்காரணமாகவே அவர்கள் மனம் குழம்பிய நிலைக்கு உள்ளாகின்றனர். இந்த மனக்குழப்பம் ஆனது ஓரிரு நாள் நிலைத்து நிற்கும் சாதாரண மனக்குழப்பத்தில் (Postpartum Blues) இருந்து தீவிரமான மனநோய் (Postpartum Psychosis) வரை இருக்கலாம்.

சாதாரணமாக கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் இவ்வாறு ஹோர்மோனில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் மிக எளிதாக மனதில் மனதில் தைரியம் அற்றவர்களாக மாற்றம் அடைந்து விடுவார்கள். பொதுவாகவே சிறுசிறு குடும்ப சண்டைகளுக்கு எல்லாம் விபரீதமாக முடிவெடுக்க முனைவார்கள். விஞ்ஞான ஆய்வுகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அண்மையில் பிள்ளைப்பேற்றிக்கு உள்ளான பெண்கள் ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆபத்திற்கு உரியவர்கள் (risk population for suicide) என்று வகைப்படுத்துகின்றன.

963

இதன் காரணமாகவே எமது முன்னோர்கள் ஓர் பெண் கர்ப்பிணி ஆகும் பொழுது அவளை தனது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு , பிள்ளைப்பேற்றின் பின்னர் குறித்த காலத்தின் பின்னரே கணவனின் வீட்டிற்கு திரும்பவும் அழைப்பார்கள். இதன் மூலம் பெண் ஆனவள் தற்காலிகமா மாமியார் கொடுமையில் இருந்து விடுபடவும், அந்நியமான சூழ்நிலையில் இருந்து தனக்கு பழக்கமான சூழ்நிலையில் வாழவும், பெற்றோரின் மற்றும் சகோதரர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்க வழி ஏற்படும். இதன் காரணமாக பெண்ணிற்கு திடமான மனநிலை உண்டாகும் இதனால் மேற்குறிய ஆபத்தான நிலைகள் தடுக்கப்படும். தற்காலத்தில் இவை சாத்தியப்படாத பொழுது கணவர்மார் தமது மனைவியர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் மனைவி ஏற்கனவே மனநோயாளி என்றால் அவரின் நோய் நிலை அதிகரிக்க வாய்ப்புண்டு அதனால் வைத்திய ஆலோசனை கட்டாயம் பெறவேண்டும்

தற்பொழுது இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறு மனநிலை குழம்பிய தயாரினால் ஏற்படுத்தப்படும் மரணங்களுக்கு பொதுவாக கொலைக்குற்ற சாட்டு செய்யப்படுவதில்லை ஆனால் தாயானவள் கணிசமான காலம் மனநல வைத்திய சாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற நேரிடும். இவ்வாறன வழக்குகளில் சட்ட வைத்திய மனநல வைத்தியர்களினதும் (forensic psychiatrist) சட்ட வைத்தியர்களினதும் (forensic psychologist) பங்கு அளப்பெரியது. (Under the law it can be considered as a culpable homicide not amounting to murder. Exception 5 of Section 294 of the Penal code)

இது ஒரு கொலை அல்ல! ஏன்?

நீர் நிலை ஒன்றில் இருந்து ஓர் பெண்ணின் உடல் எடுக்கப் பட்டால் எவ்வாறு மரணம் ஏற்பட சூழ்நிலை கண்டறியப்படுகின்றது என்பதை பற்றிய விளக்கமே இப்பதிவாகும். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது கொலை, தற்கொலை, விபத்து மற்றும் இயற்கை மரணம் என்பதினை குறிக்கும்.
முதலில் “கொலை” என்பது நீதிமன்ற விசரணைகளின் முடிவிலேயே நீதிபதி அவர்களினால் தீர்மானிக்கப் படும். “கொலை” என்ற சொற்பதத்தினை மற்றையவர்கள் கையாளும் பொழுது மிக்க அவதானம் தேவை . நீர் நிலை ஒன்றில் பெண்ணின் சடலம் காணப்படும் பொழுது அதுவும் கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு காணப்படும் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுவது வழமையே. “கொலை ” என்பது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலனாய்வு முடிவுகள் (crime scene investigation), உடற் கூராய்வு பரிசோதனை முடிவுகள்(postmortem investigation), ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் (ancillary investigations), சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் (circumstantial evidence), நேரில் கண்ட மற்றும் உறவினர்களின் சாட்சியங்கள் (witnesses) என்பனவற்றின் அடிப்படையிலேயே நீதிபதி அவர்களினால் தீர்மானிக்கப்படும்.

மேலும் முக்கியமாக குற்றவியல் வழக்கு விசாரணையின் பொழுது குற்றமானது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நீருபிக்கப் படவேண்டும். நம்மவர்களில் பெரும் சந்தோஷமான செயற்பாடு ஒன்றுதான் எதுவிதமான ஆதாரங்களும் இன்றி குற்றசாட்டுகளை சுமத்தி மற்றவர்களை மனவேதனையில் ஆழ்த்துவதுதான்.

இனி ஒவ்வொரு விடயத்தினையும் தனித்தனியாக பார்ப்போம். குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலனாய்வு முடிவுகள் (crime scene investigation) எனப்படும் பொழுது கொலை நடந்த பிரதேசத்தில் காணப்படும் DNA சான்றுகள், இரத்த கறைகள் (Bloodstain Pattern Analysis -BPA), கொலையாளி பயன்படுத்திய ஆயுதங்கள், கொலையாளி பயன்படுத்திய வேறு பொருட்கள், கொலையாளின் கைரேகை, பாத ரேகை (Foot print ) போன்றன பெறப்படும்.

அடுத்து மிக முக்கியமான உடற் கூறாய்வு பரிசோதனை பற்றி பார்ப்போம். முதலில் இறந்தவரின் உடலில் இருந்து நிகத்தின் நுனிப்பகுதி, பெண்ணுறுப்பு பகுதி , மலவாசல் பகுதி , கடிகாயங்கள் , காணப்படும் இரத்த மற்றும் ஏனையவற்றில் இருந்து சான்று பொருட்கள் எடுக்கப்படும். அடுத்து அவரில் உள்ள வெளிக்காயங்கள் மற்றும் உட்காயங்கள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசப்படும். முக்கியமாக காயங்கள் காணப்படும் பொழுது அவை உயிர் ஆபத்தினை அல்லது மனிதனை தொழில்படா நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை உடையவையா (whether injuries are sufficient to cause to death or incapacitate the person) என்று சட்ட மருத்துவ ரீதியில் அலசப்படும். மேலும் காயங்கள் எவ்வகையான செயற்ப்பாட்டின் பொழுது உருவானது என்பது பற்றியும் ஆராயப்படும். மேலும் இறந்தவருக்கு ஏதாவது இயற்கையான நோய் நிலைகள் இருந்ததா எனவும், இறந்தவரின் இரைப்பையில் அதாவது நஞ்சு மற்றும் சாராயம் உள்ளதா என பார்க்கப்படும். பெண்களுக்கு குறிப்பாக அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்களா என்று ஆராய விசேட முறைகள் (pelvic dissection) கையாளப்படும். ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் (ancillary investigations) எனப்படும் பொழுது இறந்தவரின் இரத்தம், மூத்திரம், பித்தம், இரைப்பையின் உள்ளடக்கம் போன்றவற்றில் ஏதாவது நச்சு அல்லது மனிதரை சுயநினைவில்லாமல் ஆக்கும் மருந்துகள் உள்ளனவா என்று ஆராயப்படும்.
சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் (circumstantial evidence) எனப்படும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் காணப்படும் CCTV பதிவுகள், இறந்தவரின் தொலைபேசி உரையாடல்கள் போன்றன தேவை கருதி ஆராயப்படலாம்.

இவற்றிக்கு மேலதிகமாக நேரில் கண்ட மற்றும் உறவினர்களின் சாட்சியங்கள் (witnesses) பொலிஸாரினால் பதியப்படும். நீதிமன்றில் குறுக்கு விசாரணை நடைபெற்று சாடசியங்களின் நம்பகத்தன்மை (credibility) பரீட்ச்சிக்கப்படும். தேவையேற்படும் பொழுது இறந்தவர்களின் உறவினரிடத்து இறந்தவர் இறுதியாக என்ன மன நிலையில் இருந்தார் என அறிய விஞ்ஞா ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட psychological autopsy போன்றனவும் செய்யப்படலாம்.

மேலும் வழக்கு விசாரணையின் பொழுது போலீசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் நம்பகத்தன்மையும் பரீட்ச்சிக்கப்படும். இறுதியில் நீதிபதி மேற்குறிய எல்லாவற்றிலும் ஓர் ஒத்திசைவுத்தன்மை (corroboration) இருக்கும் பட்சத்தில் மாத்திரமே கொலை என்று தீர்மானிக்கப்படும்.

முக்கியமாக முன்னைய காலங்களை போலல்லது தற்பொழுது விஞ்ஞா ரீதியான ஆதாரங்கள் (scientific evidence) குற்றங்களை உறுதி செய்ய பெரிதும் உதவுகின்றன மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் அதிகமாகும்.

இவற்றினை எல்லாம் விடுத்து கைகளை கட்டி கிணத்தில் தள்ளிவிட்டால் அது தற்கொலையா? உடலில் காயங்கள் இல்லாமல் ஒருவரை அரைமயக்கத்துக்கு கொண்டு வந்த பின்னர் கைகளை கட்டி கிணத்துக்குள் தூக்கிப்போட்டிருக்கலாம் தானே? (இவ்வாறு போட்டிருந்தால் இறந்தவரின் இரத்தம், மூத்திரம், பித்தம், இரைப்பையின் உள்ளடக்கம் போன்றவற்றில் ஏதாவது நச்சு அல்லது மனிதரை சுயநினைவில்லாமல் ஆக்கும் மருந்துகள் நிச்சயம் காணப்படும்)
அப்படி செய்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இல்லையா? (சாத்தியக்கூறு எனப்படும் பொழுது குற்றவியல் வழக்கில் அது 100% மாக இருக்க வேண்டும்) என்று முகநூலில் பதிவுகள் பல இடலாம் . ஆனால் நிஜத்தில் நீதிமன்றிலோ அல்லது திறந்த மரண விசாரணையின் பொழுதோ சாத்தியகூறினை நீருபிப்பது கடினமாகும் அவை நிச்சயம் நிராகரிக்கப்படும்.

கொலையா? தற்கொலையா?

அண்மையில் வடமராட்சி பகுதியில் கிணற்றினுள் இருந்து கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து நடந்த உடற் கூறாய்வு பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பலர் தற்பொழுது அது கொலை எனவும் எவ்வாறு ஒருவர் தனக்குத்தானே பின்பக்கமாக கைகளை கட்டுபோடலாம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலில் நாம் சிக்கலான தற்கொலைகள் (complex suicide) பற்றி பார்ப்போம். சிக்கலான தற்கொலை என்பது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப்பாவித்து ஒருவர் தற்கொலை செய்துகொள்வது ஆகும். இவர்கள் தங்களின் மரணத்தினை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தும் முகமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை தெரிவு செய்கின்றார்கள். உதாரணமாக நஞ்சினை உண்ட பின்பு தூக்கில் தொங்கல் அல்லது நீரில் மூழ்கல். சிக்கலான தற்கொலையில் இருவகை உண்டு

  1. திட்டமிடப்படாத சிக்கலான தற்கொலைகள் (unplanned complex suicides) – இதில் தற்கொலை செய்பவர் முதலில் ஒரு முறையினை பாவிப்பார் அதில் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்து தனது முயற்சியில் அதாவது இறக்கும் வரை பலமுறைகளை பாவிப்பார்.

உதாரணமாக ஒருவர் பூட்டிய அறையில் தனது மணிக்கட்டினை பிளேட்டினால் அறுப்பார், உடனடியாக இறப்பு நிகழாது அவர் இரத்தம் ஒழுக ஒழுக நடந்து திரிந்துவிட்டு, மேசையில் லாச்சியில் உள்ள இரு காட் பனடோல்களை விழுங்குவார். அப்பொழுதும் இறப்பு உடனடியாக நிகழாது, இறுதியாக கூரையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கொள்வார்.

பொதுவாக இச்சம்பவத்தினை பார்வையிடும் சாதாரண பொதுமகன் ஒருவர் இரத்த கறையினை பார்த்து இது கொலை என்றே கூறுவார்கள்.

2. திட்டமிடப்பட்ட சிக்கலான தற்கொலைகள் (planned complex suicides) இதில் தற்கொலையாளி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை ஒரே நேரத்தில் பாவிப்பர். உதாரணமாக அதிகளவு நித்திரை குளிசைகளை விழுங்கிய பின்னர் அவர் உயரமான கட்டிடங்களில் இருந்து விழுதல்

இங்கு நடைபெற்றதுவும் அவ்வாறான ஓர் சம்பவமாக இருக்கலாம்.

0272920-2008

மேலுள்ள படமானது Planned complex suicide இணை விளக்குகின்றது இங்கு அவர் penetrating captive-bolt gunshot மூலமும் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளார். (penetrating captive-bolt gunshot இணை பற்றி அறிய பின்வரும் லிங்கினை பின்தொடரவும் சத்தமின்றி ஒரு வேட்டு )

.இனி தனக்குத்தானே கைகளை எவ்வாறு கட்டலாம் என்பதை சற்று பார்ப்போம். முதலில் உருவு தடம் மூலம் மணிக்கட்டில் நூலினை கட்டுதல் பின்னர் நூலின் மறுநுனியில் இன்னோர் உருவு தடத்தினை உருவாக்குதல். அதனை ஏற்கனவே கடுப்போட்ட கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலினால் பிடித்தல் பின்னர் கைகள் இரண்டினையும் உடலின் பின்பக்கம் கொண்டு சென்று, உருவு தடத்தினுள் மற்றைய கையினையும் கொழுவுதல். பின்னர் இரு கைகளையும் ஆட்டும் பொழுது கட்டுக்கள் இரண்டும் இறுகும். இது தவிர கைகளை பின்புறமாக தனக்குத்தானே கட்டிட பல்வேறு முறைகள் உண்டு.

நீரில் மூழ்கி ஒருவர் இறக்கும் பொழுது இவ்வாறு மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை எவ்வாறு வேறுபடும் என்பதை கீழ்வரும் லிங்கில் உள்ள பதிவு விளக்கின்றது

நடிகை ஸ்ரீதேவியின் மர்மமரணம்

https://wp.me/p9r9t3-7V

யாழில் முதியோர் துஸ்பிரயோகம்

அண்மையில் காரைநகர் பிரதேசத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வயோதிபர் ஒருவர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்க பட்டார் என்பதை முகநூல் வாயிலாக அறிய முடிந்தது. முதியோர் எனப்படுபவர் யார் என்று பார்ப்போமானால் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 65வயதினை கடந்தவர்கள் என்று வரைவிலக்கணப் படுத்த படுகின்றனர். எனினும் நாட்டிக்கு நாடு இது வேறுபடலாம். சில நாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோர் முதியராக கருதப்படுவதுண்டு.

1.முதியோர் துஸ்பிரயோகம் என்றால் என்ன?

முதியவர் ஒருவரினை கவனிப்பவரினால் அல்லது அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களினால் வேண்டும் என்றே செய்யப்படுகின்ற ஓர் நடவடிக்கையினால் அல்லது உரிய செயற்பாடு ஒன்றினை செய்யாது விடுவதன் காரணமாக முதியவர் ஒருவருக்கு தீங்கு அல்லது தீங்கு ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுமாயின் அது முதியோர் துஸ்பிரயோகம் எனப்படும்.

 2. ஏன் முதியோர் துஸ்பிரயோகம் பற்றி நாம் கவலைப்பட அல்லது அக்கறைப்பட வேண்டும்?

 சிறுவர்களை போன்றே முதியவர்களும் மற்றையோரில் தங்கி வாழ்வதன் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடிவெடுக்க முடியாது போவதாலும் அவர்கள் துஸ்பிரயோகத்திர்ற்கு உட்பட கூடிய சாத்தியக்கூறு அதிகம் உள்ளவர்கள். இவ்வாறான பல்வேறு காரணங்களால் முதியோர் துஸ்பிரயோகம் பற்றி அக்கறைப்பட வேண்டியதாயிருக்கின்றது.

3. முதியோர் துஸ்பிரயோகம் மிக அண்மைக்காலத்தில்தான் ஆரம்பித்ததா ?

தமிழ்ச் சமுதாயத்தில் முதியோர் துஸ்பிரயோகம் ஆனது முந்திய காலத்தில் மிக குறைவாகவே இருந்தது. முன்பு இருந்த கூட்டுக்குடும்ப முறை மற்றும் தமிழரின் சமய கலாச்சாரங்களின் இறுக்கம் காரணமாக முந்திய காலத்தில் மிக குறைவாகவே இருந்தது. போரின் பொழுதான இடம் பெயர்வுகள் போரின் பின்னரான காலப்பகுதியில் உள்ள தமிழரின் சமய கலாச்சாரங்களின் தளர்வுகள் முதியோர் துஸ்பிரயோகம் அதிகரிக்க பெரிதும் காரணமாக அமைகின்றன.

4. முதியோர் துஸ்பிரயோகம் எவ்வாறு நடைபெறுகின்றது?

முதியோர் துஸ்பிரயோகமானது பின்வரும் வழிகளில் நடைபெறுகின்றது

  • உடலியல் ரீதியான துன்புறுத்தல்கள் (Physical Abuse)

இதன்பொழுது முதியோருக்கு அடித்தல், நுள்ளுதல் போன்ற உடலை வேதனையாக்கும் செயற்பாடுகள் இடம்பெறும். மேலும் இதனுள் முதியோரின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் முகமாக கட்டிப்போடுதல் போன்றவையும் உள்ளடங்கும்.

  • பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் (Sexual Abuse or Abusive Sexual Contact)

இலங்கையில் இவ்வகையான துஸ்பிரயோகங்கள் நடப்பது குறைவாகும்.

  • மனரீதியான துஸ்பிரயோகம் (Emotional or Psychological Abuse)

முதியோரினை தகாத வார்த்தைகளை பிரயோகித்து திட்டுவதினால் அவர்களுக்கு உண்டாகும் மனவேதனை, மனப்பயம், மனக்கிலேசம் போன்றவற்றினை இவ்வகையான துஸ்பிரயோகம் உள்ளடக்கின்றது. இலங்கையில் இவ்வகையான துஸ்பிரயோகங்கள் அதிகளவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • கவனிப்பாரற்று விடுத்தல் (Neglect )

எம்மை பெற்று வளர்த்து பெரியவர்களாக்கிய பெற்றோருக்கு உரிய மருத்தவ வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு, உடை, நீர் … போன்றவற்றினை வேண்டும் என்றே அளிக்காமல் விடுதல். இவ்வகையான துஸ்பிரயோகம் இலங்கையை அதிகளவில் தற்பொழுது நடைபெறுகின்றது. இதன் காரணமாகவே அதிகளவு முதியோர் இல்லங்களும் தோற்றம் பெற்றுள்ளன.

  • நிதி ரீதியான துஸ்பிரயோகம் Financial Abuse or Exploitation)

முதியவர் ஒருவருக்குரிய பணத்தினை அல்லது சொத்தினை முறையற்ற விதத்தில் அல்லது அதிகாரமற்ற விதத்தில் அவரின் பின்னுருத்தாளி செலவு செய்தலினை இது குறிக்கும். பல இடங்களில் முதியவர்களின் ஓய்வூதியம் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுவது வழமை.

5. முதியோர் துஸ்பிரயோக சம்பவங்களை முகநூல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பிரசுரிக்கலாமா?

இல்லை . முதியோர் துஸ்பிரயோகம் என்பது முதியோரின் உறவினர் மற்றும் பிள்ளைகளினால் வேண்டும் என்றே செய்யப்படும் ஒரு செயற்பாடு,  இவ்வாறு நடைபெற்றதினை நாம் ஊடகங்களில் பிரசுரித்து அவரின் உறவினர்களுக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திய பின்பு முதியவரினை நாம்  அவரின் உறவினர்களுக்கு முதியவரினை பராமரிக்கும் படி கையளிக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் அது முதியவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தப்படலாம் மரணம் கூட சம்பவித்த சம்பவங்கள் உண்டு. இவற்றுக்கு மேலதிகமாக முதிவரினை நாம் அவரும் ஓர் மனிதர் என்று கணம் பண்ண வேண்டும். சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் மாதிரியே இவ்வாறான சம்பவங்களினை நாம் கையாள வேண்டும்.

80

சத்தமின்றி ஒரு வேட்டு

கடந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பினை தொடர்ந்து இலங்கையில் காலகாலமாக நடைபெற்று வந்த வேள்வி மீதான தடை சட்ட ரீதியாக அகற்ற ப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலர் சமூக வலைத்தளங்களில் வேள்விக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலைத்தேச நாடுகளில் எவ்வாறு விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும். மேலைத்தேச நாடுகளில் ஆடு, பன்றி  மற்றும் மாடுகள் போன்றவற்றினை அவை வலி, வேதனை அனுபவிக்காதவாறு கொல்ல  பல்வேறுபட்ட முறைகள் பாவிக்கப்பட் டாலும் Captive bolt pistol என்ற துப்பாக்கி தான் பொதுவாக பாவிக்க படுகின்றது. இது பொதுவாக பின்வரும் பெயர்களில் அழைக்கப் படுகின்றது cattle gun, stunbolt gun, bolt gun, or stunner. இது பொதுவாக மிருகத்தினை உடனடியான மயக்க நிலைக்கு கொண்டு சென்று இறப்பினை ஏற்படுத்த உதவுகின்றது. இங்கு துருப்பிடிக்காத உலோகத்தினால் ஆன கம்பியே வழமையான துப்பாக்கியின் சன்னதிற்கு பதிலாக பாவிக்கப்படுகின்றது. இங்கு உலோகக் கம்பி துப்பாக்கியில் மறைந்த நிலையில் இருக்கும் சாதாரண துப்பாக்கி போன்றே trigger இணை அழுத்த உலோக கம்பி விடுவிக்கப்படும். இங்கு துப்பாக்கி ரவையில் வெடி மருந்துக்கு பதிலாக உலோக கம்பியானது வாயு மூலம் அல்லது ஸ்பிரிங் மூலம் அமுக்கப்பட்ட உலோக கம்பி விடுவிக்கப்படும். சிலவேளைகளில் அரிதாக blank round இல் வெடி மருந்து பாவிக்கப்பட்டு அமுக்கம் உண்டாக்கப்பட்டு (explosive)உலோக கம்பி விடுவிக்கப்படும்.

இவற்றில் பொதுவாக 3 வகைகள் உண்டு

  1. penetrating – இதில் பாவிக்கப்படும் உலோக கம்பியானது கொல்லப்படவிருக்கும் விலங்கின் மண்டையோட்டினுள் பாயும் தன்மை உடையது.
  2. non-penetrating – இதில் பாவிக்கப்படும் உலோக கம்பியானது நுனிப்பகுதியில் காளான் போன்று விரிந்து இருப்பதால் கொல்லப்படவிருக்கும் விலங்கின் மண்டையோட்டினுள் பாயும் தன்மை அற்றது ஆனால் கடுமையான விசையினை கொடுப்பதால் விலங்கு இறக்கும். இது பொதுவாக வினைத்திறன் குறைந்த உபகரணம் ஆகும்.

மேற்குறிய இருவகையிலும் நாம் உலோக கம்பியினை மீளப்பெற்று பயன்படுத்த முடியும்.

3.  free bolt – இது சாதாரண துப்பாக்கி போன்றது.

captivebolt.placements

இவ்வகையான துப்பாக்கிகளை பயன்படுத்தி   மனிதர்களை கொல்ல முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் விடை ஆம் என்பதே. ஊடகவியலாளர் லசந்த விக்ரம துங்கவும் இவ்வாறான ஒருவகையான துப்பாக்கியினால் தான் கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர மேலைத்தேசத்தில் பல்வேறு நபர்கள் இவ்வகையான துப்பாக்கியினால் கொல்லப்பட்தாக சான்றுகள் உள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் மர்மமரணம்

கடந்த வருடம் பிரபல நடிகை ஸ்ரீ தேவி டுபாயில் உள்ள ஓர் விடுதியில் திடீர்ரென்று இறந்தார். அவரது உடல் குளியறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்தே மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த மரண விசாரணையின் பொழுது அவர் மாரடைப்பின் காரணமாகவே இறந்தார் என்று கூறப்பட்டது. இவ்வாறு பிரபலங்கள் அகால மரணம் அடைந்த பொழுதெல்லாம் பல்வேறு பட்ட சர்ச்சைகள் எழுவது வழமை. பலரும் தங்களை பெரும் புலனாய்வார்களாக உருவகித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்புவார்கள். இவ்வாறே கடந்த வாரமும் கேரளத்தினை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஸ்ரீ தேவி அவர்கள் கொலை செய்யப்பட்டே இறந்தார் எனக்கூறி பெரும் பரபரப்பினினை ஏற்படுத்தியிருந்தார். அவர் மேலும் கூறியதாவது ஸ்ரீ தேவி அதிகமாக குடித்து விட்டு நீர்த்தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார் என்பது ஏற்க முடியாதது அப்படி அவர் அதிகமாக குடித்து இருந்தாலும் அவரினால் 1 அடி தண்ணீரில் அவரினால் மூழ்க முடியாது, அவரது தலையினை யாராவது ஒருவர் பலவந்தமாக நீரில் அமிழ்த்தியே சாகடித்தனர் என்று பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

இப்பதிவின் நோக்கம் ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது எவ்வாறு மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் அவர் இறந்த சூழ்நிலை (Circumstance of Death) எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை ஆராய்வதே ஆகும்.

ஒவ்வொன்றாக ஆராய்வோம்

  1. ஒருவர் நீர் நிலையில் உள்ள பொழுது அல்லது அதற்கு அருகாமையில் உள்ள பொழுது அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமையானது தீவிரமடையலாம் உதாரணமாக இயற்கையாக ஏற்படும் நோய்களான மாரடைப்பு, காக்கை வலிப்பு , குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் உடலில் சடுதியான குளுகோஸின் குறைவு (Hypoglycemic attack) போன்றன ஏற்படலாம். ஏற்கனவே ஆரோக்கியமானவர் ஏன்று கருதப்படுவருக்கு மாரடைப்பு போன்றன முதன்முறையாகவும் ஏற்படலாம். உண்மையில் இவர்களுக்கு இந்நோய் குணம்குறி அற்று இருந்திருக்கும். இவ்வாறு ஏற்படும் நோய் நிலையினால் அவர்கள் இறந்து நீரில் விழலாம் அல்லது நீரில் வீழ்ந்து இறக்கலாம்.
  2. நீர் நிலை ஒன்றில் பொதுவாக கடல், குளம் , ஆறு போன்றவற்றில் நீச்சல் தெரியாத ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்.
  3. நீர் நிலை ஒன்றில் பொதுவாக கடல், குளம் , ஆறு போன்றவற்றில் நீச்சல் தெரிந்த ஒருவர் நீச்சலில் ஈடுபடும் பொழுது அவர்கள் சுழி , கடுமையான நீரோட்டம் போன்றவற்றில் அகப்பட்டு தற்செயலாக மரணமடையலாம். இவ்வாறே கடற்கரையில் நிக்கும் ஒருவர் பாரிய அலையில் இழுபட்டு சென்று மரணமடையலாம்
  4. நீச்சல் தெரியாத ஒருவரை வேறு ஒருவர் நீர் நிலையினுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்யலாம். அவ்வாறே நீச்சல் தெரிந்த ஒருவருக்கு அதிகளவு மதுபானம் அல்லது போதைப்பொருள் போன்றவற்றினை கொடுத்து அல்லது தலை போன்றவற்றில் காயங்களை ஏற்படுத்தி அவரினை செயற்படாத நிலைக்கு கொண்டுவந்த பின்னர் நீர் நிலையில் தள்ளி விழுத்தியிருக்கலாம்.

நாம் மதுபானம் அருந்தும் பொழுது அதன் அளவு எமது இரத்தத்தில் அதிகரித்து செல்லும், இவ்வாறு அதிகரித்து செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் (Blood alcohol concentration – BAC) அது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களை உண்டுபண்ணும். இவ்வாறு உடலில் வெவ்வேறு செறிவுகளில்/ அளவுகளில் மதுபானம் உள்ள பொழுது ஏற்படும் மாற்றங்களை பின்வரும் அட்டவனை காட்டி நிற்கின்றது

bac-graph

இதன் பிரகாரம் எமது இரத்தத்தில் 160 – 300 mg/dl வரை மதுபானம் காணப்படும் பொழுது நாம் வழமையான மனிதர்கள் போன்று செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் அதாவது எமக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றும் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்று போகும். பல சந்தர்ப்பங்களில் அறிவு இல்லாமல் போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவரினை மிக இலகுவாக எவ்விதமான எதிர்ப்புகளும் இன்றி கொலை செய்த சம்பவங்கள் உண்டு. மதுபானத்தின் அளவு இரத்தத்தில் மேலும் அதிகரித்து 300 – 450 mg/dl என்ற செறிவு நிலையினை அடையும் பொழுது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அதாவது அவர் பெரும்பாலும் சுயநினைவு அற்ற நிலைக்கு தள்ளப்படுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருசில அங்குல உயரத்திற்கு நீர் தங்கி இருந்தாலே போதுமானது. அதாவது ஒருவர் முகம் குப்புற சிறிய அளவிலான நீரில் வீழும் பொழுது அவ்நீரானது உயிரிழப்பினை ஏற்படுத்த கூடியது.
5. குளியலறையின் குளியல் தொட்டியில் நீந்தும் பொழுது சில சந்தர்ப்பங்களில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகலாம்
6.நபர் ஒருவர் ஒருவரினை கொலை செய்துவிட்டு அவரின் உடலினை நீர் நிலை ஒன்றினுள் போடலாம். இதன்மூலம் அவர் நீரில் மூழ்கியே இறந்தார் என்று காட்டிட முற்படுவர்.
7. சில சந்தர்ப்பங்களில் ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடும் பொழுது அங்குள்ள முதலைகள் போன்ற உயிரினங்கள் தாக்கி மனித உயிரிழப்புக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் நிறைய உண்டு.

இவ்வாறு ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் அவர் இறந்த சூழ்நிலை (Circumstance of Death) பல்வேறுபட்டவாறு வேறுபடுகின்றது.