“இளம் கன்று பயம் அறியாது”

அவனுக்கு இரண்டரை வயது தான். அவன் சராசரி குழந்தைகளை விட அதிக நிறை உள்ளவன். அவன் குடுகுடு என்று ஓடிவரும் அழகே தனி அழகு தான். அவனது தகப்பன் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர். தாய் ஓர் ஆசிரியர் அவளுக்கு ஓர் பெண் பிள்ளை அதாவது அவனுக்கு ஓர் தங்கை கிடைத்து இப்ப தான் 2 மாதங்கள் ஆகிறது. அன்று மதியம் பெண் பிள்ளைக்கு பாலூட்டி கொண்டு இருந்தாள். அவன் வீட்டின் முன் விறாந்தயில் தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தான் . அவனது தகப்பனார் வேலையால் வீடு திரும்பவில்லை. அவனது வீட்டின் முன் பகுதியில் உயர்ந்த இரு பூச்சாடிகள் உண்டு.  அவனின் தகப்பனார் அவற்றில் வழமையாக நீர் நிறைத்து சில வளர்ப்பு மீன்களை வளர்த்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் தகப்பனார் அவனை தூக்கி வைத்து அம்மீன்களை காட்டுவார். அவனும் பார்த்து ரசிப்பான். அவனுக்கு அவற்றினை பார்த்து இரசிப்பதில் கொள்ளை விருப்பம். அன்று இரவு நேரத்தில் விழித்து இருந்ததன் காரணமாக தாய் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விட்டாள் . சிறிது நேரத்தில் கண்விழித்து தேடிய பொழுது அவன் விளையாடி கொண்டிருந்த இடத்தில் இல்லை. வெளியே பார்த்த கணம் அவள் திகைத்து விட்டாள். அந்த சீமேந்தினால் செய்யப்பட்டுள்ள பூச்சாடி அவன் மீது  விழுந்து இருந்தது. அவனது தலையில் பாரிய காயம் அதிலிருந்து இரத்தம் கொட்டிய படி இருந்தது, அவன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் கிடந்தான்.

அவள் உதவி கோரி கத்தினாள் சிறிது கன நேரத்தில் பலர் கூடினர் அவனை வைத்திய சாலையில் அனுமதித்தனர். தூரதிஸ்ட வசமாக அவன் வெளிநோயாளர் பிரிவில் இறந்து இருந்தான்.

(மேலுள்ள படத்தில் சிதறிய நிலையில் வீழ்ந்து கிடக்கும் மலர் சாடியினை கவனிக்கவும்)

இங்கு அவனின் மேல் விழுந்த சாடி 3 அடி உயரத்தில் சிமேந்தினால் ஆனது அத்துடன் கிட்டத்தட்ட 24 kg நிறை உடையது. இங்கு சாடியின் அடியானது மெல்லிய தண்டு (stem) மூலம் மேற்பகுதியில் உள்ள சாடியுடன் இணைக்க பட்டிருந்தது மேலும் இச்சாடியாணது நான்கு பகுதிகள் ஆக இருந்தது. இதனால் அது நிலத்தில் உறுதியாக நிற்காது. மேலும் மேற்புறத்தில் நீர் இருக்கும் போது அது இலகுவில் ஆடி சாடி விழுவதற்கான சாத்தியம் அதிகம் ஆகும். இந்த நிலையில் விளையாடிய குழந்தை அதனை பிடித்து ஆடியதன் காரணமாகவே அது அவன் மீது வீழ்ந்தது.

முக்கியமாக 1 தொடக்கம் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பல்வேறுபடட உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் விபத்துக்களை நாம் சாதாரணமாக வசிக்கும் வீட்டில் சந்திக்கும் சாத்தியம் உள்ளது. இது சம்பந்தமாக இப்பதிவு உள்ளது.

மேற்குறிபபிட்ட வயதுடைய குழந்தைகள் மிக துடிப்பு மிக்க வர்கள் இவர்கள் இவ்வாறு பொருட்களை இழுத்து பார்ப்பது வழமை . இதன் பொழுது இவ்வாறன அவர்களின் உடல் மீது வீழ்ந்து சாதாரண உயிர் ஆபத்து அற்ற காயங்கள் முதல் உயிர் ஆபத்து மிக்க காயங்களையும் அநியாய மரணங்களையும் ஏற்படுத்தும். மேலும் இவ்வகை வயதுடைய சிறுவர்கள் வீட்டின் உயரமான இடங்களுக்கு ஏறி அதிலிருந்து தவறுதலாக வீழ்தல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை அருந்துதல், முக்கியமாகக் கிராம புறங்களில் மண்ணெண்ணெய் ஆனது பச்சை நிற குளிர்பான போத்தலகளில் உள்ள பொழுதும் சிறுவர்களின் கைக்கு எட்ட கூடிய இடத்தில் உள்ள பொழுதும் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மண்ணெண்ணெய்யின் நீல அல்லது ரோஸ் நிறம் கூட ஒருவிதத்தில் சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இவ்வயதுடைய சிறுவர்கள் வீட்டினுள் அமைந்த கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றில் வீழ்ந்தும் மரணமடைந்த சம்பவங்கள் நிறைய உண்டு. இது தவிர சமையலறையில் உயரத்தில் உள்ள அல்லது அடுப்பில் உள்ள நீர் , கறி அல்லது பால் நிறைந்த சூடான பாத்திரங்களை தம் மேல் இழுத்து வீழ்த்தி எரி காயங்களுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. வீட்டில் உள்ள ரோல் பிளக்கில் (Role plug) கைவிட்டு மின்சார தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. மேலும் வயது வந்தவர்கள் பாவிக்கும் மருந்துகளை தவறுதலாக உண்ட மற்றும் குழந்தைகளுக்கான பாணி மருந்தினை அளவுக்கு அதிகமாக பருகிய குழந்தைகளும் உண்டு.

நாம் வீட்டில் பாவிக்கும் வாகனத்தில் சிக்கிய குழந்தைகளும் உண்டு. இது சம்பந்தமாக இன்னொரு பதிவில் விபரமாக குறிப்பிடுகின்றேன்.  எனவே முக்கியமாக 1 வயது தொடக்கம் 5 வயது வரை உள்ள வீட்டில் பெற்றோர் குழந்தைகள் தொடர்பில் கவனமாக இருப்பதன் மூலம் அநியாயமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

வருட இறுதியில் வருட இறுதியினையும் புது வருட பிறப்பினையும் கொண்டாடும் முகமாக பல்வேறுபட்ட வியாபார நிறுவனங்கள் வெவ்வேறு சலுகைகளினை வழங்குவதுண்டு. நகர்ப்புறங்களில் உள்ள கிளப்புகள் மற்றும் சில ஹொட்டேல்கள் போன்றன இவ்வாறு சலுகைகளினை வழங்குவதுண்டு. இவற்றில் முக்கியமானது வருட இறுதி நாளான்று அதாவது டிசம்பர் 31 திகதி இரவு நடக்கும் விருந்துபசாரங்கள். இவ்வாறன ஒரு விருந்து உபசாரத்திலே தான் அவன் கடைசியாக பங்குபற்றியிருந்தான்.    இவ்விருந்து உபசாரத்தில் அளவு கணக்கு இன்றி குறிப்பிட்ட வகை மதுபானம் வழங்கப்பட்டது. அவனும் அவனது நண்பர்களும் குறிப்பிட்ட விருந்தில் பெரும் தொகை பணத்தினை செலவழித்து பங்குபற்றி இருந்தனர். இதன்போதுதான் அச்சம்பவம் நடைபெற்றது. அவன் நிறைபோதையில் கோழி பொரியலினை (பைட்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இல்லை விழுங்கிக் கொண்டிருந்தான் என்றே சொல்லவேண்டும். அப்பொழுது அவனது தொண்டையில் கோழியின் எலும்பு ஒன்று சிக்கிய மாதிரி இருந்தது, ஆனால் அவன் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை மேலும் மதுவினை அருந்தியும் பாட்டுக்களினை பாடியும் விருந்தினை களித்து  வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நாள் தொடக்கம் அவனுக்கு கடுமையான தொண்டை நோ அவன் மாலை தனியார் வைத்தியசாலைக்கு  ஒன்றிற்கு சென்று வைத்தியர் நிபுணர் ஒருவரினை சந்தித்தான். அவரும் சில குளிசைகளினை கொடுத்து ஓர் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால் அவனுக்கு சுகம் வந்த பாடில்லை. திரும்பவும் இரண்டு நாட்களின் பின்னர் அதே வைத்தியரினை சந்தித்து தனது தனது உடல் நிலையில் மாற்றம் இல்லை என்று சொன்னான். அவரும் அவனை அரசாங்க வைத்தியசாலையில் தனது வாட்டில் அனுமத்தித்தார். அங்கு அவனுக்கு இரத்தம் இரத்தமாக சத்தி வந்தது அத்துடன் மலமும் கடும் கறுப்பு நிறத்தில் போனது இது பற்றி விடுதி வைத்தியரிடம் கூறியபொழுது அவர் சொன்னார் பெரிய டொக்டர்  வந்து பார்ப்பார் என்று ஆனால் அவர் வருவதற்கு முதலேயே அவனது உயிர் அவனை விட்டு பிரிந்து இருந்தது.

இறுதியில் அவனது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது அவனது சமிபாட்டு தொகுதி முழுவதும் அவனது இரத்தத்தினால் நிறைந்து இருந்தது. மேலும் அவனது இரைப்பையின் உட்பகுதி பல்வேறு இடங்களில் உள்ளே சிக்குப்பட்டிருந்த கோழியின் எழும்பினால் கிழிக்க பட்டு அதில் இருந்து இரத்தம் வந்தபடி இருந்தது.

இங்கு இரண்டாவது படம் அவரின் இரைப்பையில் இருந்து எடுக்க பட்ட 1.5kg நிறையுடைய இரத்த கட்டியினை காட்டுகின்றது

நாம் உணவு விழுங்கும் செயற்பாடானது எமது மூளையினால் கட்டுப்படுத்தபடுகின்றது. இதில் பல மூளையின் நரம்புகள் பங்குபற்றுகின்றன (Eating and swallowing are complex neuromuscular activities consisting essentially of three phases, an oral, pharyngeal and esophageal phase. Each phase is controlled by a different neurological mechanism). மூளையின் செயற்பாடு மந்த நிலையில் உள்ள நிலையில் அதாவது அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பாவித்த அல்லது மதுபானம் அருந்திய நிலையில் நாம் உணவு உண்ணும் பொழுது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலையில் பலர் உணவு புரைக்கேறி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகஅவதானமாக நாம் உணவு அருந்த வேண்டும்.

ஆபத்தாக மாறிய நீச்சல் பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் வசிப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் நீச்சல் பயிற்சிக்காக செல்வதினை வழக்கமாக கொண்டுள்ளனர். சில வசதிமிக்க பாடசாலைகளில் இவர்களுக்கு விசேட  நீச்சல் பாடநெறியுடன் கூடிய நீச்சல் பயிற்சி உண்டு. இதற்கெல்லாம் விசேட கட்டணங்கள் அறவிடப்படும். இதனைவிட தனியாரின் பல ஸ்போர்ட்ஸ் கிளப்புகள் நீச்சல் வசதியுடன் உண்டு. இவற்றில் பெருமளவு பணத்தினை கட்டி உறுப்பினர் ஆகினால் நீச்சல் தடாகங்களை பயன்படுத்தலாம். இவ்வாறே கடந்த வாரத்தில் கொழும்பின் பிரபலமான தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நீந்திய 12 வயதுமிக்க நான்கு சிறுவர்கள் அதிகளவான குளோரின் வாயுவினை உட்சுவாசித்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ஒரு சிறுமிக்கு இரு நுரையீரல்களும் செயல் இழந்ததால் Extracorporeal membrane oxygenation (ECMO) என்ற உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க நேரிட்டது.

அதிகளவானோர் நீச்சல் தடாகங்களை பயன்படுத்தும் பொழுது அவர்களின் உடலில் இருந்து வியர்வை, எச்சில், மயிர், சிறுநீர்.. போன்றன நீரில் கலப்பட சாத்தியம் உள்ளது. இதனால் அங்குள்ள நீர் ஆனது கிருமி நீக்கம் செய்யவேண்டியுள்ளது. மேலும் வெயில் காலங்களில் நீச்சல் தடாகங்களுக்கு நீர் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி நீர் ஆனது கிருமி நீக்கம் செய்யவேண்டியுள்ளது. சாதாரணமாக நீச்சல் தடாகத்தில் உள்ள நீரானது  ஆனது குளோரின் வாயுவினால் சுத்திகரிக்கப்படும். இச்செயற்பாடானது மனிதர்கள் மூலோமோ அல்லது இயந்திரங்கள் மூலோமோ நடைபெறும். இதன் பொழுது குளோரின் வாயுவானது நீருடன் தாக்கம் புரிந்து hypochlorous acid (HOCl), அல்லது  sodium or calcium hypochlorite (NaOCl or Ca(OCl)2 போன்றவற்றை தோற்றுவிக்கும். இவ்வாறு தோன்றும் hypochlorous acid (HOCl) தான் கிருமிகளை தொற்றுநீக்கம் செய்ய உதவுகின்றது. இவ்வாறு நீச்சல் தடாகம் குளோரின் வாயுவாக மற்றும் சோடியம் அல்லது கல்சியம் உப்பாக (ஹைப்போ குளோரைடு) பாவிக்கப்பட்டே சுத்திகரிக்கபடும். இங்கு இரசாயனத் தாக்கம் மூலம் தோன்றும் ஹைப்போ குளோரைடு தான் ஓட்ஸியேற்றம் மூலம் கிருமிகளை கொல்லவும் தடாகத்தில் உள்ள ஏனைய சேதன கழிவுகளை இல்லாமல் செய்யவும் பயன்படும். இவ்வாறு ஹைப்போ குளோரைடு  சேதன கழிவுகளை இல்லாமல் செய்யும் பொழுது பல்வேறுபட்ட கேடு விளைவிக்க கூடிய இரசாயன பொருட்கள் உருவாகும் இவை disinfection by-products (DBPs) என்றழைக்கப்படும். இவ்வாறு உண்டாகிய DBPs உம் குளோரினும் மனிதனினுள் சுவாசம், தோல் மற்றும் வாய்  மூலம் உட்செல்லும்.

இனி நாம் குளோரின்  வாயு எமது உடலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி பார்ப்போம். முக்கியமாக குளிரின் வாயு ஆனது எமது சுவாசத் தொகுதி மற்றும் கண் என்பவற்றினை தாக்கி கடுமையான எரிவினை ஏற்படுத்தும். மேலும் உடசுவாசிக்கும் பொழுது உட் சென்று  நுரையிரலில் கடுமையான அலற்சியினை  ஏற்படுத்தி உயிரிழப்பினை ஏற்படுத்தும். பாவிக்கும் குளோரின் ஆனது நீரினுள் சுயாதீனமாகவோ அல்லது அதனோடு இணைந்த உப்பாகவோ இருக்கும். கடுமையான வெப்பநிலை மற்றும் அளவுக்கு அதிகமான பாவனை என்பவற்றின் மூலம் குளோரின் வாயு நிலையில் நீர்ப்பரப்பின் மேல் இருக்கும். இவ்வாறு இருக்கும் வாயு ஆனது சுவாசம் மூலம் மனிதனை அடையும் இதனால் அவர்கள் கடுமையான இருமல், தொண்டை நோ, சுவாசிக்க கடினமான தன்மை என்பவற்றினால் அவதியுறுவர். மேலும் நுரையிரலில் pneumonitis என்ற கடுமையான அலற்சியினை  ஏற்படுத்தி உயிரிழப்பினை ஏற்படுத்தும்.

X-ray-findings-of-resolving-the-acute-pneumonitis-A-follow-up-chest-X-ray-showed-a

குளோரின் வாயு ஆனது  உலக மகா யுத்த காலப்பகுதியில் இரசாயன ஆயுதமாக பாவிக்க பட்டது எனினும் உடனடியாக கொல்லும் திறனற்றமையினாலும் வேறு பல வினைத்திறனான வாயுக்கள் கண்டுபிடிக்க பட்டமையாலும்  படிப்படியாக யுத்த பயன்பாட்டில் இருந்து இல்லாமல் போனது.

தலைக்கவசம் உயிர்க்கவசமாகுமா? (பகுதி 1)

அவர்கள் இருவரும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும்  போலீஸ் உத்தியோகத்தர்கள்.  அன்று இருவரும் கடமை முடித்து விட்டு போலீஸ் நிலையம் திரும்பும் வழியில் சிறிதளவு மதுபானம் அருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளில்  திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்களை எதிரே வந்த கார் மோதித் தள்ளியது. மோட்டார் சைக்கிளினை  செலுத்தியவர் சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டார். பின்னிருந்த நண்பன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் விழுந்து கிடந்தான். அவர்கள் இருவரும் சம்பவம் நடைபெற்ற பொழுது தலைக்கவசம் அணிந்து இருந்தனர்.

இதன் பின்னர் சுய நினைவு அற்ற நிலையில் அவன் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டான். வைத்தியர்கள் அவனின் மனைவிக்கு “அவனுக்கு உடம்பில் வெளிக் காயம் ஒன்றும் இல்லை. ஆனால் மூளையின் முன் பகுதியில் இரத்த கசிவு இருப்பதாகவும் அதனால் ஒப்பரேசன் ஒன்று செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்,  அவளும் சம்மதித்தாள். ஒபரேசனும் முடிந்தது அவனுக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. சில மாதங்களில் அவன் இறந்துவிட்டான். அவனது மனைவியும் ஓர் போலீஸ் அதிகாரி தான். அவளின் மனது கேட்கவில்லை. அதாவது அவளுக்கு எவ்வாறு  வெளியில் காயம் இல்லாமல் உள்ளே மூளையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்று அவளுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது . இறுதியாக அவள் குற்ற புலனாய்வு பிரிவுவில் சட்ட வைத்திய அதிகாரிக்கும் வழக்கினை விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கும் எதிராக மேலதிக விசாரணையினை கோரி ஓர் முறைப்பாட்டினை  மேற்கொண்டாள் .

அவர்களின் விசாரணையும் அதுவும் தலைக்கவசம் அணிந்த நிலையில், தலையில் வெளிப்பகுதியில் காயம் ஏற்படாத பொழுது அதுவும் உள் பகுதியில் உள்ள  மூளையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்றே அமைந்தது. அது எவ்வாறு சாத்தியம்? என்பதுவும் அவர்களின் முக்கிய கேள்வி ஆகும்

இன்று மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பல்வேறு வகையான தலைக் கவசங்களை பாவிக்கின்றனர்.தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்த வேண்டும் என்பது நாட்டின் சட்டம் ஆகும். இந்நிலையில் பலர் நினைக்கின்றனர் தலைக்கவசம் அணிந்துவிட் டால் எவ்வகையான விபத்தில் இருந்தும் உயிர் தப்பி விடலாம் என்று, உண்மையிலே தலைக்கவசம் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பினையே வழங்குகின்றது. அதாவது சாதரணமாக பாவிக்கும் தலைக்கவசம் ஆனது மண்டை ஓட்டின் (Skull) வெளிப்புறம் காயங்கள் வராமல் பாதுகாப்பதோடு முகத்தில் உள்ள முக்கிய அங்கங்களான கண், மூக்கு, காது, வாய் போன்றவற்றிற்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கின்றது.

சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் நாம் பிரயாணம் செய்யும் பொழுது எமது தலையும், அதனுள் அமைந்த மூளை மற்றும் அதனை சூழவுள்ள நீர்ப்பாயம் என்பன மோட்டார் சைக்கிளின் வேகத்திலேயே செல்லும், வழமையாக விபத்தின் பொழுது வாகனத்தின் வேகம் அமர்முடுகல் காரணமாக குறித்த கணநேரத்தில் பூச்சிய நிலைக்கு வரும், ஆனால் மூளை மற்றும் அதனை சூழவுள்ள நீர்ப்பாயம் என்பனவற்றின் வேகம்  சிறிது கண நேர தாமதத்தின் பின்னர் தான் பூச்சிய நிலைக்கு வரும்.

இதன் காரணமாக மூளையானது மண்டையோட்டின் உட்பகுதியில் (Base of the Skull) உரசுப்பட மூளையினுள்  பாரிய இரத்த கசிவு காயங்கள் (contre-coup injury ) உண்டாகும் (coup injury occurs under the site of impact with an object, and a contre-coup injury occurs on the side opposite the area that was hit). இக்காயங்கள் பொதுவாக வெளிப்புறத்தில் விசை தாக்கிய பக்கத்தின் எதிர்பக்கம் உள்ள மூளையின் பகுதியில் உருவாகும். இக்காயங்கள் (contre-coup injury) என்று அழைக்கப்படும். பொதுவாக இவ்வகையான காயங்களுக்கும் வாகனத்தின் வேகத்திற்கும் விஞ்ஞானரீதியான தொடர்பு இல்லை.

ஒருவர் தலைக்கவசம் அணிந்த நிலையில் வெளிப்புறம் காயம் ஏற்படாது. ஆனால் மூளையின் உட்புறத்தில் இவ்வாறான காயங்கள் ஏற்படுவதினை தவிர்க்க முடியாது. மேலும் இக்காயங்கள் வெளிப்புற காயங்களினை விட மிக ஆபத்து உள்ளவையாக (more severity) இருக்கும்.

DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் தற்கொலைக் குண்டுதாரியின் தாயாரான வகீர் மொஹமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கி, குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் DNA அறிக்கை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடதியவர் அஹமட் முகத் அலாவுதீன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது சட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இவ்வாறே சங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது மொஹமட் சஹ்ரான்தான் என்பது DNA பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன. சஹ்ரானின் மகளிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி, சங்கரில்லா ஹோட்டலில் மீட்கப்பட்ட சஹ்ரானுடையது என கருதப்பட்ட உடல் பாகம் என்பவற்றை DNA பரிசோதனைக்குட்படுத்தியபோது இந்த முடிவு கிட்டியது.

தற்பொழுது பலரினதும் கேள்வி ஒரு தாயார் தனது மகனின் தலையினை பார்த்து முக தோற்ற இயல்புகளை வைத்து அவர்தான் தனது மகன் என்று அடையாளம் காட்டியபோதும் ஏன் DNA பரிசோதனை செய்யப்பட்டது என்பதுதான். அனர்த்தம் எனப்படும் பொழுது அதற்கு பல்வேறு பட்ட வரைவிலக்கணங்கள் வெவ்வேறு பாடத்திட்டங்களில் வெவ்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது. சட்ட மருத்துவத்தில் ஒரு சம்பவத்தில் 12 பேருக்கு அதிகமானோர் இறக்க நேரிடும் பொழுது அது அனர்த்தம் (Disaster) ஆக கருதப்படும். இங்கு அனர்த்தம் என்பது இயற்கையால் ஏற்படும் அழிவுகளையோ மனிதனால் ஏற்படும் அழிவுகளான குண்டு வெடிப்பு மற்றும் போர் அழிவுகளை குறிக்கும். இவ்வாறு அனர்த்தம் ஒன்றில் இறந்தவரினை விஞ்ஞான ரீதியில் சரியாக அடையாளம் (Disaster victim Identification – DVI) காண சர்வதேச போலீசான இன்டர்போல் (https://www.interpol.int/en/How-we-work/Forensics/Disaster-Victim-Identification-DVI)

பின்வரும் முறைகளை அங்கீகரித்துள்ளது

  1. கைரேகை மூலம் (finger print)
  2. பற்களின் பரிசோதனை மூலம்
  3. DNA மூலம்

மேற்குறிய முறைகளில் DNA மூலம் இறந்த ஓர் மனிதனை அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்த முறையாகும். மேலும் முகத்தோற்றம் அல்லது உடல் அமைப்புக்களை வைத்து ஓர் அனர்த்தத்தில் இறந்த மனிதனை இனம் காண்பது என்பது ஓர் விஞ்ஞான ரீதியான முறையாக அங்கீகரிக்க படவில்லை. இதனால் எதிர்காலத்தில் விடை காணமுடியாத சர்ச்சைகள் ஏற்படும். ஓர் இறந்த மனிதனை அடையாளம் காணல் என்பது காணாமல் போனவரின் உறவினரின் ஓர் அடிப்படை உரிமை ஆகும்.

கருக்கலைப்பு மாத்திரையும் சனத்தொகையும்….

முதலில் நாம் சில சொற்பதங்கள் சம்பந்தமான விளக்கங்களை பார்ப்போம்

  1. கருத்தடை மாத்திரைகள் – இவ்வகையான மாத்திரைகள் பெண்ணின் இனப்பெருக்க தொகுதியில் பலவிதமான மாற்றங்களை உண்டுபண்ணி அப்பெண்ணானவள் கருத்தரிக்க விடாமல் செய்யும் ஆற்றல் கொண்டவை. பெண்ணின் இனப்பெருக்க தொகுதியினுள் ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பெண்ணின் முட்டையுடன் இணைவதன் மூலமே கரு உருவாகும்.
  2. கருக்கலைப்பு மாத்திரைகள் – இவ் வகை மாத்திரைகள் பெண்ணின் கருப்பையில் ஏற்கனவே உருவாகியுள்ள கருவினை இல்லாமல் செய்யும். பலசந்தர்ப்பங்களில் இவ்வகை மாத்திரைகள் சாதாரண பிள்ளைப்பேறின் போது பிரசவத்தினை தொடங்கவும் அதீத குருதிபோக்கினை தடுக்கவும் பயன்படும்.
  3. இனப்பெருக்க வீதம் (total fertility rate -TFR)- ஓர் பெண்னின் இனப்பெருக்கத்திற்க்குரிய காலப்பகுதியில் அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையினை குறிக்கும். இங்கு இனப்பெருக்கத்திற்குரிய காலப்பகுதியென அதாவது குழந்தைகளை பெறக்கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட வயது எல்லை 14 தொடக்கம் 44/49 வரையாகும்.

இனி விடயத்திற்கு வருவோம் அதாவது அண்மைய காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான மருந்துவகைகள் கைப்பெற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் கருக்கலைப்பு மாத்திரைகளான மெஸோப்ரோஸ்டால் (Misoprostol) மாத்திரைகளும் உள்ளடங்கும். இந்நிலையில் சில வைத்தியர்கள் இவை கருக்கலைப்பு மாத்திரைகள் தான் இவற்றின் மூலம் கர்ப்பத்தடையினை அல்லது மலட்டுத்தன்மையினை ஏற்படுத்த முடியாது என்றும் மேலும் இது குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மேற்குறித்த மாத்திரைகள் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகையினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

சாதாரணமாக 14 வயது தொடக்கம் 49 வயது வரையுள்ள பெண்னொருத்தி விரும்பியோ விரும்பாமலோ  கருத்தரித்துள்ள பொழுது மேற்குறித்த மாத்திரைகளை பார்மசிகளில் அதிக விலையில் வாங்கி பாவிப்பதன் மூலம் தங்கியுள்ள கருவினை அழித்துக்கொள்ளலாம். இவ்வாறு ஒருமுறை சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்த பெண்  தொடர்ந்து விரும்பியோ விரும்பாமலோ பின்வரும் காரணங்களினால் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்

  1. மேலுள்ள மாத்திரைகள் பெரும்பாலும் சட்ட விரோத கருக்கலைப்பிற்கே பயன்படும், இந்நிலையில் சட்ட விரோத கருக்கலைப்பில் உள்ள உயிராபத்தான நிலைமை காரணமாக பெண் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.
  2. சட்ட விரோத கருக்கலைப்பிற்கு செலவழித்த ஆயிரக்கணக்கான பணத்தினை இட்டு மீண்டும் கருத்தரிக்க பெரும்பாலான பெண்கள் விரும்பமாட்டார்கள். சட்ட விரோத கருக்கலைப்பில் சில நூறு பெறுமதியான மாத்திரைகள் பல ஆயிரம் பெறுமதிக்கு விற்கப்படும். அத்துடன் இவ்வகையான மாத்திரைகள் மருத்துவர் அல்லாதோரினால் சிபாரிசு செய்யப்படுவதால் அவர்கள் சரியான அளவு, பாவிக்கும் முறை, இரத்த போக்கின் பொழுது செயற்பட வேண்டிய முறை மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றினை கூறமாட்டார்கள் இதன் காரணமாக பெரும்பாலும் அவர்கள் முதலில் கருக்கலைப்பில் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் பல ஆயிரங்களை செலவழிக்க நேரிட்டிருக்கும். சிலசமயங்களில் ஒரு லட்ச்சத்தினை தாண்டியிருக்கும். இவ்வாறான நிலையில் மீண்டும் ஓர் பெண் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.
  3. பல சந்தர்ப்பங்களில் சட்ட விரோத கருக்கலைப்பினால் ஏற்பட்ட உடல் பாதிப்பினை விட உள பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஏற்பட்ட உள பாதிப்பினால் பெண் ஆனவள் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள். சில வேளைகளில் இப்பெண் கணவனுடன் கூட உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இவ்வாறு திருமண முறிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களை தொழில் வாழ்க்கையில் கண்டுள்ளேன்.img587c9257980a8
  4. இவ்வாறு ஒருமுறை சட்ட விரோத கருக்கலைப்பு செய்தபின் மீண்டும் கருத்தரிக்க நினைக்கும் பொழுது அவளுக்கு வயது போயிருக்கும் அத்துடன் குழந்தை பெறவும் விருப்பம் இல்லாமல் இருக்கும் இதனால் அவள் கருத்தரிக்காமலே வாழ்க்கையினை கழிக்க நேரிடும்.
  5. இவ்வாறு ஒருமுறை சட்ட விரோத கருக்கலைப்பு செய்தபின் மீண்டும் கருத்தரிக்க நினைக்கும் பொழுது அவளின் குடும்ப பொருளாதார சூழ்நிலை இன்னொரு குடும்ப பொருளாதார நிலை புதிய குடும்ப உறுப்பினரை ஏற்க முடியாத நிலையில் இருக்கும், இதனால் அவள் கருத்தரிக்காமலே வாழ்க்கையினை கழிக்க நேரிடும்
  6. சட்ட விரோத கருக்கலைப்பின் பொழுது ஏனையோரினால் பெண்ணானவள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. இதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் மீண்டும் ஓர் பெண் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.

இவ்வாறு பல காரணங்களினால் ஓர் பெண் குறித்த வயதில் கர்ப்பம் அடைவதினை மறைமுகமாக தடுக்கலாம், இதன் மூலம் ஓர் சமூகத்தில் ஓர் பெண்ணுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையினை குறைக்க முடியும். இதன் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகை நீண்ட காலப்போக்கில் குறைவடையலாம்.

 

 

 

உயிருக்கு போராடியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் ….

ஒரு விபத்தில் அல்லது ஒரு தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பலர் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் வருவதில்லை.
மாறாக வேடிக்கை பார்ப்பார்கள். இவ்வாறு ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது அடுத்து என்ன நடக்கும் என்று பலருக்கு சரியான விளக்கம் இல்லை.அதனை தெளிவுபடுத்தும் நோக்குடன் சட்ட வைத்திய அதிகாரியின் பார்வை நோக்கில் இப்பதிவினை பதிவிடுகிறேன்.

 

இவ்வாறு அனுமதிக்க படும் நோயாளி உயிர் பிழைப் பார் எனில்,
அவரின் உடல்நிலை ஓரிரு நாட்களில் முன்னேற்றமடைந்ததும் அவர் பொலிசாருக்கு அவரை இந்நிலைக்கு இட்டுச்சென்ற சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது பற்றி வாக்குமூலம் ஒன்றினை வழங்குவார். அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி மேலதிக தகவல்களை பெற்று தனது சட்ட வைத்திய பரிசோதனையை செய்வார். இங்கு அந்த நோயாளியை அனுமத்திதவர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஆனால் துரதிஸ்டவசமாக அந்த நோயாளி இறப்பார் என்றால் நோயாளியை அணுமத்திதவர் ஓரிரு கடமைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.  அனுமத்தித்தவர் எவ்வாறான சூழ்நிலையில் மரணித்தவருக்கு காயம் ஏற்பட்டது என்பதை பொலிசாருக்கு விளக்கி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். மேலும் பிரேத பரிசோதனை நடைபெறும் பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகம் சென்று உண்மையான காரணம் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். மேலும் மரணித்தவருக்கு உறவினர் யாரும் இல்லை எனில் அவரின் உடலத்தினை பொலிஸாருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கும் அடையாளம் காண்பதற்கு உதவி புரிய வேண்டும்.
மேற்கூறிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஓரிரு மணித்தியாங்கள் செலவாகும்.
சிலர் ஏன் இந்தச் செயற்பாடுகள் என்று கேட்கலாம்.
அதற்கான காரணத்தை அறியலாமா?

1. பல சந்தர்ப்பங்களில் அதாவது விபத்து, கொலை போன்ற மரணம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மனித உடலில் ஏற்படும் காயங்களின் தன்மை ஒரே மாதிரி இருக்கும். இச்சந்த்ப்பத்தில் அனுமத்திதவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

2. சில வேளைகளில் குறிப்பிட்ட நோயாளி சுய நினைவு இழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சுய நினைவு மீளாமல் இறக்க நேரிடும். அந்த வகையில் வைத்தியசாலையில் அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

3. பல நேரங்களில் இரு நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவார்கள். போதை தலைக்கு ஏறியதும் சண்டை போட்டு காயப்படுத்தி கொள்வார்கள். படுகாயம் அடைந்த நண்பனை தாக்கியவனே வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு , மேல்மாடியில் இருந்து விழுந்ததாக OPD பிரிவில் சொன்ன பல சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.

4. கொழும்பு போன்ற பாரிய நகரங்களில் கணிசமானோர் தெருக்களில் வசிக்கின்றனர். இவ்வாறன ஒருவர் இறக்கும் பொழுது பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வைத்திய சாலையில் அனுமதித்தவரிடம் இருந்து மேலதிக தகவல்களை அறிய முயல்வர்.

5. சில சமயங்களில் விசாரணை செய்யும் பொலிஸார் பிழையான தகவல்களை சட்ட வைத்திய அதிகாரிக்கு வழங்கி அவரை தவறாக வழிநடத்த முற்படுவர்.
இச்சந்த்ப்பத்தில் சாட்சியின் வாக்கு மூலம் முக்கியமானது.

6. நடைபெற்றது கொலை எனில் வைத்திய சாலையில் அனுமதித்தவர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் பொழுது ஏனைய சாட்சிகளுடன் சேர்ந்து சாட்சி கொடுக்க வேண்டும்.
இதற்கு நீதி மன்றத்தினால் அழைப்பாணை அனுப்ப படும்.

தமிழர்களில் பெரும்பான்மையினர் நீதி மன்றம் மற்றும் போலீஸ் நிலையம் செல்வதை அவமரியாதையான செயலாக கருதுவதாலும் தாங்கள் ஏதோ குற்றவாளிகள் போன்று அச்சபடுவதாலும் இவ்வாறு உதவி செய்யவும் வாக்கு மூலம் அளிக்கவும் பின்னிற்கின்றனர்.
விபத்து ஒன்று நடைபெறும் நேரங்களில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற எம்மவர்கள் பின்னடிக்க இதுவே காரணம்.

வவுனியாவில் விஷவாயு தாக்குதல்

கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஒருவர் மயக்கமுற்ற நிலையில் குழியினுள் விழுந்துள்ளார். இந்நிலையில் அவரைக் காப்பாற்றச் சென்ற ஏனைய மூவரும் மயக்கமுற்று குழியினுள் விழுந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த நால்வரையும் காப்பாற்ற காவலாளி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நால்வரையும் குழியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள் என்பன உக்கி அழிவடையும் பொழுது பல்வேறுபட்ட வாயுக்கள் இயற்கையாகவே வெளியேற்றபடும். உக்கி அழிவடைதல் (Decomposition) என்ற செயற்பாடு உலகில் இயற்கை சமநிலையினை பேண மிகமுக்கியமானதொன்றாகும். இவ்வாறு நடைபெறும் பொழுது பல நச்சு (Toxic)மற்றும் நச்சு அல்லாத வாயுக்கள்(non toxic) வெளியேற்றப்படும்.

இலங்கையில் கொல்களங்களில் இருந்து வெளியேற்றப்படும் கொல்லப்பட் ட மிருகங்களின் கழிவுகள் ஏறத்தாழ முற்றாக அடைக்கபட்ட நிலக்கீழ் அமைந்த பெரிய குழிகளில் சேகரிக்க பட்டு குறித்த கால இடைவெளிகளில் அப்பிரதேசங்களிற்கு பொறுப்பான உள்ளுராட்ச்சி சபைகளினால் gully பவுசர் மூலம் வெளியேற்றப்படும். இங்கு தொழிலார்களின் இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது? என்று பார்ப்போம்.

நச்சு வாயுக்கள் எனப்படும் பொழுது இவை மனிதனால் உட்சுவாசிக்க படும் பொழுது அவை நுரை ஈரலில் மனித இரத்தத்துடன் கலந்து சாதாரணமாக உடலில் நடைபெறும் ஓட்ஸிசன் காவும் செயற்பாட்டினை பாதிப்பன உதாரணமாக Hydrogen Sulphide, Nitrogen dioxide, Sulphur dioxide, carbon monoxide போன்ற வாயுக்கள். நச்சு அல்லாத வாயுக்கள் எனப்படும் பொழுது இவை சாதாரணமாக குறைந்த செறிவில் இருக்கும் பொழுது எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது. ஆனால் அதிக செறிவில் உயிராபத்தினை விளைவிக்கும். உதாரணமாக Methane ,Ammonia, Carbon-dioxide போன்றனவாகும். இவ்வாறு கழிவுத்தொட்டியில் காணப்படும் வாயுக்கள் Sewer gas என்று அழைக்கப்டும்.

கழிவுகளுடன் நீரும் சேர்க்க படுவதன் காரணமாக இவ்வகையான வாயுக்கள் அதிக அளவில் நொதித்தல் (fermentation) மூலம் உருவாகும். இவை பொதுவாக கழுவுத்தொட்டியின் உள்ளே கழிவுகளின் மேற்பரப்பில்தான் அதிக செறிவில் காணப்படும், மேலும் இவை வளியில் உள்ள ஓட்ஸிசனை இடம்பெயர்த்து காணப்படுவதால் கழிவுத்தொட்டியின் உள்ளே ஒப்பிட்டளவில் ஓட்ஸிசன் பற்றாக்குறை காணப்படும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (21)

625.0.560.320.160.600.053.800.700.160.90 (23)

இவ்வாறான இறப்புக்களினை எவ்வாறு தடுக்கலாம்

  1. கழிவுகளை அதிக நாட்களுக்கு விடாமல், குறைந்த நாட்களில் அகற்றுவதன் மூலம். இதன்போது வாயுக்கள் குறைந்த அளவிலேயே தோற்றம் பெற்றிருக்கும்
  2. கழிவுத்தொட்டிகளினால் குளோரின் போன்ற கிருமிக்கொல்லிகளை போடுவதன் மூலம் இவ்வாயுக்கள் தோற்றம் பெறுவதினை குறைக்கலாம்.
  3. மேலும் கழிவுகளை அகற்ற முதல் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கழிவுத்தொட்டியின் மூடிகளை திறந்து விடுவதன் மூலம். இதனால் இவ்வாயுக்கள் வெளியேறும்.
  4. பொதுவாக தொழிலார்கள் தொட்டியினுள் இருக்கும் திண்ம கழிவுகள் நீர்க்குழாயினை அடைக்கும் பொழுது தொழிலார்கள் தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்யும்பொழுதுதான் அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமாக தொழிலார்கள் குழியினுள் இறங்காமல் அதிசக்தி வாய்ந்த நீரினுள் வேலைசெய்யும் (High power Submersible Water Pump) நீர்பம்பிகளை பாவிக்க வகைசெய்ய வேண்டும்.
  5. மனிதன் ஒருவன் இவ்வாயுக்களினை சுவாசிக்கும் பொழுது அவனுக்கு மயக்கம் மற்றும் தலைச்சுற்று போன்றன வந்து அவன் நினைவிழந்து கழிவு நீரினுள் வீழ்வதன் காரணமாக அதாவது நீரில் மூழ்கியே (Drowning) இறப்பு ஏற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பொழுது சகதொழிலாளர் உணர்ச்சி வசப்பட்டு தொட்டியினுள் குதிக்காமல் புத்தி சாதுரியமாக செயற்படவேண்டும்.
  6. தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது உரிய முகமூடிகள் மற்றும் ஏனைய தனி நபர் பாதுகாப்பு சாதனங்களை (Personal protective equipment) அணிவதன் மூலமும் அநியாய இறப்பினை தடுக்கலாம். இவை கணிசமான விலை கூடியவை மற்றும் இவற்றின் வினைத்திறன் கேள்விக்குரியது.

இவ்வாறு விஷவாயுக்களினால் இறப்பு நடந்த வேறு இரு சம்பவங்களினை இங்கு தருகின்றேன்.

காப்பாற்ற குதித்தவனும் மாண்ட கதை

ராகல (Ragala) குகையில் நடந்தது என்ன?

குண்டு வெடிப்பும் JMO உம்

முதலில் அண்மைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு இப்பதிவினை எழுத தொடங்குகிறேன். அண்மைய குண்டு வெடிப்பினை தொடர்ந்து பல சிதிலமடைந்த, உயிரிழந்த மனித உடல்கள் எனது அலுவலகத்திற்கு உடற் கூராய்வு பரிசோதனைக்குகாக கொண்டு வர ப்பட்டிருந்தன. இந்நிலையில் பலரிடம் இருந்து குறிப்பாக அரசியல் வாதிகள், சக வைத்தியர், மத தலைவர்கள், சக வைத்திய சாலை பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து அதிகமான தொலை பேசி அழைப்புகள் . அவர்கள் யாவரின் வேண்டுதலும் விரைவாக உடற் கூராய்வு பரிசோதனையை முடித்து தரும்படியே ஆகும். ஓர் அரச அதிகாரி கேட்டார் டாக்டர் உங்களுக்கு மரணத்திற்கான காரண தெரியும் தானே? நீங்கள்  ஏன் போஸ்ட் மொட்டம் செய்ய வேண்டும்? மரணத்திற்கு ஏதுவான காரணத்தை (Cause of dead) கொடுத்து உடலினை ரிலீஸாகக்கலாம் தானே என்று. இவ்வாறு பலர் நினைத்து கொண்டு உள்ளார்கள்.

 இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல மனித உயிர்கள் பறிக்கப்படும் சம்பவங்களில் குற்றவியல் புலன் விசாரணையின் (Criminal investigation) பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் (JMO – Judicial Medical Officer) பங்குகள் பற்றி விளக்குவதே இப்பதிவின் நோக்கம். மேலும் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறு ஓர் குற்றவியல் புலன் விசாரணை நடைபெறுகின்றது என்பதையும் இப்பதிவு விளக்குகின்றது.

  1. இவ்வாறன சம்பவங்கள் நடைபெற்ற உடனேயே சட்டவைத்திய அதிகாரி, இரசாயன பகுப்பு திணைக்களத்தின் குண்டுகள் தொடர்பான நிபுணர், போலீஸ் திணைக்கள விசாரணை அதிகாரிகள் போன்றோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைக்கபடுவர். இது ஒரு குழு வேலை ஆகும். இங்கு சட்ட வைத்திய அதிகாரி மனித தசைத் துண்டங்களின் குவியலுக்கிடையே தேவையான சான்று பொருட்களை தேடி சேகரிப்பர்.                                                                                                                              grid-search-pattern-130103-8392200இவர் வெடித்த குண்டின் சன்னங்கள், இறந்த மனிதர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான பொருட்கள் போன்ற வற்றை சேகரிப்பர். மனித மனதினை மிகவும் நிலை குலையவைக்கும் இவ்வாறன சம்பவங்களில் ஓர் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரால் தான் திறமையாக மனம் தளராமல் கடமையாற்ற முடியும். இங்கு சன்னங்கள் (Shrapnel) எனப்படும் பொழுது இரு வகைப்படும். முதலாவது வகை வெடிகுண்டு ஆக்க பயன்பட்ட உலோகம் மற்றும் அதனுள் அமைந்த உலோக குண்டுகள் ஆகும். இரண்டாவது வகை குண்டு கொண்டு வரப்பட்ட கொள்கலன் அல்லது பொருள் போன்றவற்றின் பகுதிகளை குறிக்கும். இவை மிக முக்கியமானவை எனெனில் இவை மூலம் வெடித்த குண்டு எது, அது எவ்வகையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளது, எதனுள் மறைத்து கொன்டு வரப்பட்டுள்து போன்றவர்றை கண்டுபிடிக்கலாம். மேலும் சட்ட வைத்திய அதிகாரி உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இவற்றினை கவனமாகக் சேகரிப்பார்.
  2. ஓர் குண்டு வெடிப்பு தாக்குதல் ஆனது சனநடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெறும் பொழுது இறுதியில் அவ்விடத்தில் தசைகளினதும் எழும்புகளினதும் ஓர் குவியலே எஞ்சும். இவற்றில் இருந்து எத்தனை மனிதர்கள் இறந்தார்கள்? அவர்கள் யார்? என்பதை கண்டு பிடிப்பதும் ஓர் சட்ட வைத்திய அதிகாரியின் பிரதான வேலை ஆகும். அவர்கள் முதலில் குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் உள்ள தனித்துவமான சான்றுபொருடகள் மூலம், கைரேகை, பற்களின் அமைப்பு (forensic odentology) மூலம் அடையாளம் காண முற்படுவார்கள். தேவை ஏற்படும் போது DNA தொழில் நுட்ப முறையும் பாவிக்கப்படும். இதுவே மிகவும் சரியான முறை ஆகும்.
  3. தற்கொலை குண்டு தாக்குதல்களில் இறந்த மனிதர்களில் யார் குண்டுதாரி என்று கண்டு பிடிப்பதும் சட்ட வைத்திய அதிகாரி அவர்களின் பணிகளில் ஒன்று. அவர் பொதுவாக இறந்தவர்களில் காணப்படும் காயங்களின் தன்மையை வைத்து கண்டறிவார். பொதுவாக தற்கொலை குண்டுதாரி குண்டுகளை ஜாக்கெட் வடிவில் நெஞ்சு, தொடை அல்லது வயிற்று பகுதிகளில் அணிந்து இருப்பர். மற்றும் இங்கு பயன்படுத்த படுவது சக்தி வாய்ந்த வெடிபொருள் என்பதால் குண்டுதாரியின் தலை கழுத்து பகுதியுடன் வேறாக்கபட்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் காணப்படும்.பல சமயங்களில் தலை பல மீட்டர் தூரம்  வீசப்பட்டு காணப்படும். அதிலிருந்து வெளித்தோற்ற இயல்பு, பற்களின் அமைப்பு மற்றும் DNA போன்ற வற்றின் மூலம் குண்டுதாரியை அடையாளம் காண்பர்.FB_IMG_1555921871844.jpg
  4. சட்ட மருத்துவத்தில் இவ்வாறு குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் குற்றம் எவ்வாறு நடைபெற்றது என்பதை மீண்டும் ஒருமுறை அறிவியல் ரீதியில் அமைத்து பார்த்தல் அதாவது reconstruction of the crime. இதன் மூலம் பாதுகாப்பு ஒட்டைகளினை கண்டு பிடித்து அவற்றினை சீர் செய்து எதிர் காலத்தில் அவ்வாறு நடைபெறாது தடுத்தல் ஆகும்.
  5. மேலும் இறந்தவர்களின் மற்றும் காயப்படவர்களின் உடல்களில் உள்ள காயங்களின் தன்மையை ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வகையான காயங்களை தடுக்கும் உபகரணங்களை உருவாக்க உதவுதல் ஆகும் (personal protective equipment)
  6. மேலும் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்று ஆராய்தல் ஆகும். சாதாரணமாக இவ்வாறு குண்டு வெடிப்பின் போது ஏற்படும் காயங்கள் காரணமாக பெரும்பான்மையானவர் இறப்பர். மேலும் அதிர்ச்சி காரணமாக ஏற்கனவே உள்ள இருதய நோய்கள் காரணமாகவும் இறப்பு ஏற்படலாம். மேலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து அதன் மூலமும், மேலும் மின்சாரத் தாக்குதல் மூலமும் இறப்பு ஏற்படலாம்.

                       மேலும் அரிதாக குண்டுதாரி எய்ட்ஸ் அல்லது ஹெப்படைட்டிஸ் B போன்ற நோய்களால் பாதிக்கபட்டிருப்பின் அவர்களின் இரத்தம் மூலம் காயம் அடைந்தவர்களுக்கு அந்த நோய்கள் தோற்ற கூடிய அபாயம் உள்ளது. இவற்றினை கண்டறிவதும் சட்டவைத்திய அதிகாரி ஒருவரின் கடமை ஆகும்.

இவற்றிக்கு மேலதிகமாக இவ்வாறன திடீர்  மரணங்கள் நிகழும் பொழுது இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் கட்டாய உடற் கூராய்வு செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது.

தூக்கு தண்டனை கைதிக்கு வலிக்குமா?

நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய அந்த சம்பவம் நடந்து இன்றோடு 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2012 டிசம்பர் 16ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. டெல்லியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள முனிர்கா பகுதியில்தான் பேருந்தில் அந்த கூட்டு பலாத்காரம் நடந்தது. தனது நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டு இருந்த நிர்பயா கொடூரமான 6 பேர் கொண்ட குழுவால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். டெல்லியில் ஓடும் பேருந்தில் மிக மோசமாக நிர்பயா துன்புறுத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதன் பொழுது தூக்கு தண்டனை கைதிக்கு வலிக்குமா? என்பதை மருத்துவ ரீதியாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

454612101000100408611no

மரணத்திற்கான பொறிமுறையினை (mechanism of death) பொறுத்த மட்டில் சாதாரணமாக தூக்கில் தொங்கி இறப்பதற்கும், தூக்கு தண்டனை விதித்து இறப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

அதாவது சாதாரணமாக தூக்கில் தொங்கி இறக்கும் பொழுது அவர்களின் காலிற்கும் நிலத்திற்கும் ஒருசில அடிகள் உயரமே காணப்படும். மேலும் சிலவேளைகளில் அவர்களின் கால்கள் நிலத்தில் தொடுகையில் இருக்கலாம். இதன் பொழுது ஓப்பிட்டளவில் கணிசமான விசை அவர்களின் கழுத்தினை நெரிக்கும். இவ்வாறு தாக்கும் விசை அவர்களின் நிறை மற்றும் குதிக்கும் உயரம் (Potential energy = mass x gravity x height) என்பவற்றில் தங்கி இருக்கும்.

இதன் பொழுது கழுத்தில் உள்ள பிரதான இரத்த குழாய்கள்(carotid artery, great veins and vertebral artery) மற்றும் சுவாச குழாய்கள்(trachea) நசிபடும். இதன்காரணமாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஓட்ஸிசன் தடைப்பட மரணம் சம்பவிக்கும். இவ்வாறு நடைபெற 3 தொடக்கம் 5 நிமிடங்கள் செல்லும். முதலில் அவர்கள் மூச்சு எடுக்க கடினப்பட்டு வேதனை படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் தாமே சுருக்கினை நீக்க முற்படுவர். ஒருஇரு நிமிடங்களின் பின்பே சுய நினைவினை இழப்பார்கள் அதன் பின்னரே அவர்களுக்கு வலி வேதனை இருக்க மாட்டாது.

ஆனால் தூக்கு தண்டனை விதிக்கும் பொழுது மிக உயரத்தில் உள்ள தூக்கு மேடையில் இருந்து சடுதியாக தூக்கு தண்டனை கைதி கீழ்நோக்கி வீழ்த்தப்படுவர். இதன் பொழுது அவர்களின் கழுத்தில் உள்ள பிரதான இரத்த குழாய்கள் மற்றும் சுவாச குழாய்கள் நசிபடுவதோடு மேலதிகமாக கழுத்து பகுதியில் உள்ள முள்ளந்தண்டு உடைக்கப்பட (Hangman fracture) அதனுள்ளே அமைந்த முன்னான் மற்றும் முள்ளந்தண்டு என்பன சிதைக்கப்படும். இதன் பொழுது தூக்கு தண்டனை கைதி அதிர்ச்சி நிலைக்கு (spinal shock/ decerebrate state) உட்பட்டு உடனடியாகவே சுயநினைவினை இழப்பர். இதன் காரணமாக அவர்களுக்கு வலி மற்றும் வேதனை தெரியாது.சுயநினைவினை இழந்த பின்னரே அவர்களுக்கு மூளைக்கு ஓட்ஸிசன் பற்றா குறை காரணமாக வலிப்பு வரும்.

மேற்குறிய அவதானங்கள் யாவும் யூதர்களுக்கு எதிரான இன படுகொலையின் பொழுது நாசி படைகளுடன் சேர்ந்து பணியாற்றிய வைத்தியர்களினால் நேரடியாக அவதானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட் டன. இதன் காரணமாகவே பிற்காலத்தில் மருத்துவர்கள் இவ்வாறு மனித சித்திரவதைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவது மருத்துவ ஒழுக்கவியலுக்கு முரணானது என்று கருதப்படுகின்றது. இங்கு நான் உடல் ரீதியான (physical pain ) இணையே கருத்தில் கொண்டுள்ளேன், ஆனால் மரண தண்டனை கைதிகள் மன ரீதியான வேதனையில் (mental pain ) நிச்சயம் இருப்பார்கள்.