மருத்துவ தவறா?

அண்மை காலங்களில் பத்திரிகை, இணையத் தளங்கள் மற்றும் முக நூல் பதிவுகளில் வைத்தியர்களின் அலட்சிய போக்கினால் பல உயிர்கள் பறிக்க படுள்ளதாக குற்ற சாட்டுகள் பல்வேறு பட்ட தரப்புகளினால் வைக்கபட்டு வருகின்ற நிலையில் உண்மைத்தன்மையை ஆராயும் முகமாக இப்பதிவு இடம்பெறுகின்றது.

“மருத்துவ தவறு” சரியான சொற்பதமா?

சில காலங்களுக்கு முன்பு “மருத்துவ கொலை” என்ற தலைப்பில் ஒரு சில பதிவுகள் வந்தன. கொலை என்பது சட்ட ரீதியாக கொலையாளியின் மன ரீதியான உத்வேகத்தினை வைத்தே முடிவு செய்யப் படுகினறது. இங்கு மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதால் ” மருத்துவ கொலை” என்ற சொற் பதம் பொருத்தம் அற்றதே.

ஒருவன் ஒரு செயலினை தெரிந்து செய்தால் அது “தப்பு” என்றழைக்கப் படுகிறது. அவ்வாறே ஒரு செயலினை தெரியாமல் செய்தல் “தவறு” என்றழைக்கப் படுகின்றது.

மருத்துவ தவறு என்றழைக்கப்படும் பொழுது  எல்லா தவறுகளும் ஏதோ தெரியாமல் இழைக்க படுவதாக எண்ண தோன்றும்.

உண்மையில் மருத்துவ தவறுகள் யாவும் மருத்துவ துறை சார்ந்த வைத்தியர்கள், தாதியர், மற்றும் எனையோர்களின் அலட்சிய போக்கினால் தான் ஏற்படுகின்றது. இதனாலேயே ஆங்கிலத்தில் medical negligence அதாவது மருத்துவ அலட்சியம் என்று அழைப்பதே சாலா சிறந்தது .

மருத்துவ அலட்சியம் என்பதும் ஓர் சட்ட சொல் ஆகும். எனவே ஒரு சம்பவம் நடைபெற்ற உடனேயே நாம் மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ தவறு என்று கூற முடியாது. வழக்கு விசாரணையின் பின்பே நடைபெற்ற சம்பவம் மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ தவறு என்று தீர்மானிக்க படும்.

மருத்துவ அலட்சியம் என்றால் என்ன?

மருத்துவ துறை சார்ந்தவர்களின் அதாவது வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப வியலாளர்கள் … போன்றவர்களின் கடமை தவறிய அலட்சிய போக்கினால் (breech of duty of care) நோயாளி ஒருவருக்கு சேதாரம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் நிலை மருத்துவ அலட்சியம் என்று அழைக்கபடும். இங்கு மருத்துவ துறை சார்ந்தவர்கள் ஒரு செயற்பாடினை செய்வதன் மூலமாக உதாரணமாக தவறான அளவில் ஊசி மருந்தினை போடுவதால்  அல்லது உரிய செயன்முறையினை செய்யாமல் விடுவதன் காரணமாக உயிரிழப்பு அல்லது சேதாரம் ஏற்படுகிறது. உதரணமாக பிறந்த குழந்தைக்கு போர்வையினை போர்க்காமல் குளிருக்கு வெளிக்காட்ட  இடம் அளிப்பதன் மூலம் உயிரிழப்பு ஏற்படலாம்.

இலங்கையில் மருத்துவ அலட்சியம்

இலங்கையின் அரச மற்றும் தனியார் மருத்துவ துறையில் மருத்துவ அலட்சியம் ஒன்றும் நடைபெறவில்லை என்று கருத்து சார்ந்து வரும் செய்திகள் யாவும் ஒருவிதத்தில் பிழையானவை ஆகும். உண்மையில் இலங்கையில் இது சம்பந்தமான தரவுகள் எதுவும் இல்லை என்பதால் அப்படி ஒன்றும் இல்லை என்றே பலர் நினைக்கின்றனர்.

மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடான ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவ அலட்சியமே  அதிக மரணங்களை விளைவிக்கும் காரணி ஆகும். இந்நிலையில் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் மருத்துவ அலட்சியம் காரணமாக உண்டாகும் மரணங்கள் மற்றும் சேதாரங்கள் உண்மையில் மிக அதிகமாகும்.

மேலும் சில உண்மைகள்

050416-MedicalErrors

  1. இலங்கையில் மருத்துவ அலட்சியத்தினை அடையாளப்படுத்தி இனம் காணும் பொறிமுறை ஒன்றும் இல்லை (notification system).
  2. பொதுவாக சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் தமது நோயாளி திடீர் என்று இறந்தால், அவர்கள் என்ன காரணத்துக்காக நோயாளி இறந்தார் என்று அறிந்து கொள்ள விரும்புவதில்லை. உதாரணமாக நோயாளி ஒருவர் வைத்தியரின் தவறான சிகிச்சையினால் இறந்தார் என்றால் அதுசம்பந்தமாக அவர்கள் மேலதிக தகவல்களை பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவதில்லை. விதிவிலக்காக இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் சம்பந்தமாக பல்வேறு வைத்திய நிபுணர்கள் கலந்துரையாடும் வழக்கம் உள்ளது. பல மேற்கத்தேய நாடுகளில் நோயாளியொருவர் திடீர் மரணம் அடையும் இடத்து பல வைத்திய நிபுணர்கள் ஒன்றுகூடி ஆராய்வார்கள் அதன் பொழுது அவர்கள் விட்ட தவறுகள் விஞ்ஞான ரீதியில் அடையாளம் காணப்பட்டு எதிர்காலத்தில் நிகழாதவண்ணம் தடுக்கப்படும். சில நாடுகளில் நோயாளிக்கு இழப்பீடு வழங்கப்படுவதோடு உரிய வைத்தியர்கள் தண்டிக்க படாது அவர்களுக்கு மேலதிக பயிற்சி வழங்கப்படும்
  3. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்ட வைத்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் கிடைக்கும் மருத்துவ அலட்சியம் சம்பந்தமான தகவல்களை உறவினர்களுக்கு விளங்க படுத்துவர் ஆனால் உறவினர்கள் அவற்றினை விளங்க முடியாத நிலையில் இருப்பர். சிலர் மிக தெளிவான விளக்கத்துடன் இருப்பர். இவ்வாறு தெளிவான விளக்கத்துடன் இருப்பவர்களும் சட்ட தரணிகளுக்கு அதிகளவு பணம் கொடுக்க வேண்டி வருவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ள படுவர்.
  4. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டதரணிகள் இது சம்பந்தமாக குறைந்த அளவு அனுபவம் மற்றும் அறிவு உள்ள காரணத்தினால் வழக்கினை சிறந்த முறையில் எடுத்துச்செல்ல மாட்டார்கள்.
    மேலும் சில சட்ட தரணிகள் குறித்த வைத்தியருக்கு அல்லது வைத்திய சாலைக்கு எதிராக வாதாட தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை.
    பல சந்தர்ப்பங்களில் மரணம் நிகழ்ந்த தனியார் வைத்திய சாலை மதம் சம்பந்தமான வைத்தியசாலை எனில் அம்மதத்தினை சேர்ந்த சட்டதரணிகள் அவ்வைத்திய சாலைக்கு எதிராக வாதாட தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை
  5. சில சந்தர்ப்பங்களில் சட்ட வைத்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் கிடைக்கும் மருத்துவ அலட்சியம் சம்பந்தமான தகவல்களை சக வைத்தியர்களுக்காக மூடிமறைப்பர்.

தொடரும்

“மப்பு” எவ்வளவு மணித்தியாலங்களில் இல்லாமல் போகும்?

அவன் ஹயஸ் வான் ஒன்றின் உரிமையாளர் ஆவார். அவன் வழமையாக யாழ் கொழும்பு பிராயணங்களில் இடுபடுவான். அன்றும் வழமை போன்று வெளிநாடு ஒன்றில் இருந்து வந்திருந்த குடும்பம் ஒன்றினை யாழில் இருந்து வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கினான். வழமையாக இவ்வாறு இறக்கிய பின்பு யாராவது விமான நிலையத்தில் இருந்து யாழ் செல்ல விரும்பினால் ஏற்றி செல்வான். ஆட்கள் இல்லாவிடில் கொழும்பு வந்து ஒருசில நாட்கள் தங்கி இருந்து மீண்டும் பயணிகளுடன் யாழ் நோக்கி செல்வான். அன்றும் அவ்வாறே குடும்பம் ஒன்றினை விமான நிலையத்தில் காலை 5 மணிக்கு இறக்கி விட்டு பிரதான வீதியில் வாகனத்தினை செலுத்தினான் திடீரென்று வந்த போக்குவரத்து பொலிஸார் அவனை மறித்து சோதனை இட்டனர். பின்னர் அவனை சாராயம் குடித்து இருப்பதாக கைது செய்து அருகி உள்ள வைத்தியசாலையின் OPD பிரிவில் உள்ள ஒரு பெண் வைத்தியரிடம் நண்பகல் 12 மணியளவில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவ்வைத்தியார் அவன் மது போதையில் (under influence of alcohol) இருப்பதாக அறிக்கை இட்டார். இதனை தொடர்ந்து அவன் நீதி மன்றத்தில் நிறுத்த பட்டான். அவனுக்கு ஒரு தொகை பணம் அபராதமாக விதிக்க பட்டது. அவனிடம் உடனடியாக காசு இல்லை என்பதால் இரு நாட்கள் சிறையில் தள்ளபட்ட நிலையில் வெளிவந்தான்.

  அவன் இச்சம்பவ நடைபெற்ற முதல் நாள் மாலை 3 மணிக்கு நண்பர்களுடன் இணைந்து அவன் 2 போத்தல் பியர் ( Lion strong 8.8% ) அருந்தி இருந்தான். மேலும் அவர்களின் கருத்துப்படி அவன் அதன் பிறகு வேறு எந்த சாராயம் அல்லது போதை பொருட்களோ பாவிக்க வில்லை.

சாதாரணமாக நாம் அருந்தும் மதுபானம் ஆனது அரை மணி நேரத்தில் உடலில் இருந்து உறிஞ்சபட தொடங்கும். இரத்தத்தில் ஒரு மணி நேரத்தில் மதுபான அளவு உச்சத்தில் இருக்கும். எமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவானது உறிஞ்சப்படும் வீதத்திற்கும் வெளியேற்றப்படும் வீதத்திலும் தங்கியுள்ளது. பெரும்பாலும் 12 மணிநேரத்தில் மதுபானம் ஆனது சிறுநீர் மூலம் வெளியேற்ற பட்டு விடும் அதாவது உடலில் இருந்து முற்றாக நீங்கி விடும். இங்கு வைத்தியர் ஏறத்தாழ 20 மணித்தியாலங்களின் பின்பே அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவ்வைத்தியரிடம் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக வினவியபொழுது அவர் இது சம்பந்தமாக அறிவியல் ரீதியான (no scientific explanation) விளக்கமொன்றையும் தரவில்லை.

tmp458_thumb_thumb

அவனுக்கும் அது சம்பந்தமான அறிவும் இல்லை. அவன் பிடித்த வழக்கு அறிஞர் அவர்களுக்கும் அது சம்பந்தமான அறிவும் இல்லை. அவர் இவனை குற்றதினை ஓப்புகொள்ள சொன்னார். இவனும் வழக்கிற்காக செலவு செய்ய பணம் மற்றும் நேரம் வேண்டும் என்பதால் வேறு வழி இன்றி  குற்றத்தினை ஒப்புக்கொண்டு உரிய பணத்தினை செலுத்தினான்.

  இவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் கொலை, திடீர் இறப்பு, விபத்து மரணம் , பாலியல் துஸ்பிரயோகம், அடித்து காயமேற்படுத்துதல் போன்ற பல்வேறு சம்பவங்களில் பொதுமக்களுக்கு சட்ட மருத்துவ சம்பந்தமன அறிவு தேவை. அது அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் குற்றங்களினை விசாரணை செய்யும் அதிகாரிகளினால் இலகுவில் ஏமாற்றபடுவர். பொதுமக்களை தவிர அவர்கள் சார்பில் வாதாடும் சட்ட தரணிகளுக்கு கட்டாயம் சட்ட மருத்துவ சம்பந்தமான அறிவு தேவை. இதனை கருத்தில் கொண்டே அவர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி ஒன்று கொழும்பு மற்றும் ஜெயவர்தன பல்கலை கழக மருத்துவ பீடங்களில் நடத்தபடுகின்றது. சில வேளைகளில் சாதாரண பொதுமக்களுக்கும் ஒரு சில சட்ட தரணிகளுக்கும் இவ்விடயம் தெரிய வருவதால் ஒருசில குற்றவாளிகள் தப்பிக்க சாத்தியம் உள்ளது. ஆனால் ஆயிரம் குற்ற வாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு சுற்றவாளி தண்டிக்கபட கூடாது என்ற தத்துவ அடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் சட்ட மருத்துவ சம்பந்தமான அறிவு எல்லோருக்கும் தேவையானது.

மன்னார் புதைகுழி – சில உண்மைகள்

  1. இரும்பு 500 வருடமாக துரு பிடிக்காமல் இருக்குமா?

முதலில் கண்டெடுக்கப்பட்ட உலோகம் ஆனது இரும்பு தானா? என்பதை உறுதி செய்யவேண்டும். பொன், வெள்ளி , செம்பு மற்றும் பித்தளை போன்ற கலப்பு உலோகங்கள் பல நூற்றான்டுகள் சென்றாலும் மிக மிக சிறிதளவே துரு பிடிக்கும் அல்லது துரு பிடிக்காமலே இருக்கும். இனி இரும்பானது எவ்வாறு துரு பிடிக்கின்றது என்பதை இரசாயன ரீதியில் பார்ப்போம். இரும்பானது புதைக்கப்படும் பொழுது மண்ணில் உள்ள ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடன் தாக்கமடையும். இதன் பொழுது Fe2O3, FePO4, Fe2(OH)3 போன்ற கனியுப்புக்கள் கொண்ட படைகள்(layers) உருவாகும். மேலும் இவை புதைக்கபட்ட இரும்பின் மீது படிவதன் காரணமாக ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடனான மேலதிக தொடுகை தடுக்க படும் இதன் காரணமாக மேலதிகமான துருப்பிடித்தல் தடுக்கப்படும். மேலும் மண்னில் உலோகம் ஆனது அசைவற்ற நிலையில் காணப்படுவதால் இவ்வாறு தோன்றிய படைகள் இலகுவில் உலோகத்தில் இருந்து விடுபடாது. சாதாரணமாக வீட்டில் நாம் பாவிக்கும் கத்தி போன்றன துரு பிடித்த நிலையில் உள்ள பொழுது, துருவினை நாம் நீக்குவோம் அல்லது பாவிக்கும் பொழுது தானாகவே இல்லாமல் போகும் இதன் காரணமாக துருபிடித்தல் மேலும் அதிகரிக்கும்.

  1. பல்லானது 500 வருடமாக உக்காமல் இருக்குமா?

பல்லானது எனாமல் என்ற பதார்த்தத்தினால் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வெப்பநிலை, கடும் குளிர் போன்றவற்றினை தாங்கி இலகுவில் அழிவடைந்து போகாது. இதன் காரணமாகவே குண்டு வெடிப்பு, விமான விபத்து மற்றும் மனித புதைகுழி சமபந்தமான புலனாய்வுகளில் பல்லானது பாவிக்கப்படுகின்றது.

116228-004-804F6391

3. மனித பல்லினை வைத்து கொண்டு மனிதன் எப்பொழுது புதைக்கப்பட்டான் என்பதை கூற முடியுமா?

மனித பல்லினை வைத்து கொண்டு மனித எலும்பு கூட்டின் வயதினை அதாவது அம்மனிதன் எப்பொழுது பிறந்தான் என்பதை கூற முடியுமே தவிர அவன் எப்பொழுது கொன்று புதைக்கப்பட்டான் என்பதை கூற முடியாது. இது சம்பந்தமான படிப்பு Forensic odontology ஆகும். (Forensic odontology is the application of dental science to legal investigations, primarily involving the identification of the offender by comparing dental records to a bite mark left on the victim or at the scene, or identification of human remains based on dental records) மற்றும் இறந்த மனிதனை அடையாளம் காண அவனது பல்லின் விபரங்கள் உதவி புரியும்.

  1. மனித எலும்பானது 500 வருடங்களாக உக்காமல் இருக்குமா?

சாதாரணமாக புதைக்கப்பட்ட எலும்பானது உக்கி அழிவடைந்து போதல் என்பது அவ்வெலும்பு புதைக்கப்பட்ட சூழலில் தங்கி உள்ளது. அதிக வெப்பநிலை, குறைந்த மழை வீழ்ச்சி(மன்னார் மாவட்டமே இலங்கையில் அதிகுறைந்த மழை வீழ்ச்சி பெறும் இடம்), அதிக காற்றோடடம், உப்புத்தன்மை மிகுந்த மண் என்பன மண்ணில் உள்ள நுண்ணங்கிகளின் தொழில்பாட்டினை குறைக்கும். இதன்காரணமாக 500 வருடங்களாக எலும்புகள் உக்காமல் இருந்தமை என்பது ஆச்சரிய படக்கூடிய விடயம் அல்ல.

மேலும் கிடைக்க பெற்ற எலும்பு கூடுகள் கடுமையாக உக்கிய நிலையிலேயே கிடைக்க பெற்றன. அவை சிறிதளவு விசைக்கு கூட உடைந்து விடும் நிலையில் காணப்பட்டன. இவ்வாறே இரும்பும் மிகவும் துரு பிடித்து தும்பு மிட்டாசு போன்றே காணப்பட்டது.

5. தலையில் வாள்வெட்டு காயங்கள் காணப்பட்டனவே?
மண்டை ஓடு ஆனது நீண்ட காலமாக மண்ணில் புதையுண்ட நிலையில் இருக்கும் போது ஏற்படும் உக்கல் செயற்பாடு காரணமாக வெளிப்புறத்தில் மட்டுமே வெடிப்புகள் தோன்றும் இவை சட்ட மருத்துவ அறிவு இல்லாதவர்கள் இவற்றினை பார்வை இடும் பொழுது அவர்களுக்கு அது வாளால் வெடியதினை போன்று தோன்றும். அனுபவம் மிக்க சட்ட வைத்தியர் மிக இலகுவாக இவற்றினை அடையாளம் காண்பார்.

download.jpeg

6. புதைகுழிகளில் மம்மி தோற்றம் பெற்றது உண்மையா?
புதைக்கப்படும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு துளி நீரும் முற்றாக இழக்கபட்டு மனித உடலில் தசையும் எலும்புகளும் எஞ்சும் நிலையே மம்மி நிலை ஆகும். அதாவது உடல் கருவாடு மாதிரி வருதல் ஆகும். இவ்வாறு தோன்றும் மம்மி பல வருடங்களாக பளு தடையாமல் இருக்கும். இங்கு இவ்வாறு கிடைக்க பெற்ற எலும்பு கூடுகளில் மம்மி நிலை தோற்றம் பெறவில்லை.

7. மலிபன் உறை மூலம் சம்பவம் நடை பெற்ற காலத்தினை கூறமுடியுமா?
ஒரு மனித புதைகுழியில் அகழ்வு நடை பெறும் பொழுது இவ்வாறு பல பொருட்கள் கிடைப்பது வழமையான ஒன்றே. சட்ட மருத்துவ துறையில் இவற்றின் மதிப்பு குறைவானது ஏனெனில் இவை அகழ்வு நடைபெறும் பிரதேசத்தில் வேண்டும் என்றோ அல்லது தற்செயலாக வோ கலக்கப் ப டலாம். மேலும் உற்பத்தி திகதியினை வைத்து புதைகுழி யின் காலத்தினை கணிப்பது தவறாக அமையும். உதாரணமாக 2000 ஆண்டில் அமைக்கப்பட்ட புதைகுழியில் ஆங்கிலேய காலத்து நாணயக்குற்றி காணப்பட்டால் நாம் அதனை ஆங்கிலேய காலத்தில் அமைக்க பெற்றது என்று கூறமுடியாது. மேலும் இம்முறையானது அறிவியல் ரீதியில் அமைந்தது அல்லது எனவே பொதுவாக நீதி மன்றம் பொதுவாக இவ்வாறன சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

8. கார்பன் பரிசோதனையில் கால இடைவெளி 1499- 1700 வரை அதாவது இரு நூ்றாண்டுகளுக்கு இடைபட்ட தாக குறிப்பிட்டு உள்ளர்களே இது எவ்வாறு?

சாதாரணமாக கிடைக்கப்பெறும் எலும்புகள் முதலில் nuclear bomb effect மூலம் கால கணிப்புக்கு உட்படுத்த படும் அப்போது கதிரியக்க கார்பன் அணுக்கள் மிக குறைந்த அளவில் காணப்படுவது காரணமாக AMS முறையில் காலம் கணிக்கபடும். AMS முறையில் தொல்பொருட் களுக்கு காலம் கணிக்க படும் பொழுது இவ்வாறு நீண்ட கால இடைவெளியே வரும். Nuclear bomb effect மூலம் 10 வருட இடைவெளியில் காலத்தினை கணிக்கலாம். ஒரு பொருளில் அதிகளவு கதிரியக்க கார்பன் காணப்படும் பொழுதே nuclear bomb effect முறையினை பயன்படுத்தலாம்.

9. கார்பன் டேட்டிங் முறையில் தவறுகள் ஏற்படாதா?
சட்ட மருத்துவத்தில் பரிசோதனைக்காக எடுக்கப்பட ஒரு மாதிரிப் பொருள் உரிய பரிசோதனை கூடத்தின மாற்றம் அடையாது சென்றடைந்தல் முக்கியமானது. இது chain of custody என்றழைக்கப்படும். மனித புதைகுழியில் எலும்பு கூடுகள் ஒரு படையில் அல்லது பல படைகளில் காணப்படும். பல படைகளில் காணப்படுவதன் காரணம் அவை பல்வேறுபட்ட சந்தர்பங்களில் புதைக்க பட்ட மையே ஆகும். இறுதி யாகப் புதைக்கப்பட வை மேலும் முதலில் புதைக்கப் பட்டவை அடியிலும் இருக்கும். எனவே மாதிரிகள் அடியில் உள்ள படையில் இருந்து எடுக்க பட் டால் அவை பிழையான முடிவினையே காட்டும். மேலும் இவ்வாறு எலும்பு மாதிரிகளை சேகரிப்பவர் forensic archaeology துறையில் நிபுணத்துவம் மிக்கவராக இருத்தல் அவசியம்.

15525613984107241823873080178175.jpg

10. இவ்வாறன பிழைகளை எவ்வாறு எதிர்காலத்தில் திருத்தலாம்?
சாதாரணமாக இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த மனிதப் புதை குழி அகழ்வு நடைபெறும் பொழுது காணாமல் போனோர் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உரிய துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் forensic archaeologist/anthropologist  பங்கு பெறுவதன் மூலம் இவ்வாறு பிழைகள் ஏற்படுவதினை குறைக்கலாம்.

கார்பன் டேட்டிங் நம்பத்தகுந்ததா ?

சாதாரணமாக ஒரு இடத்தில் அகழ்வு நடைபெறும் பொழுது  ஒன்று அல்லது பல மனிதர்களின் எலும்புக்கூடுகள் காணப்படும் பொழுது அவை எக்காலத்திற்குரியவை? அதாவது மனிதர்கள் எக்காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதே மிக முக்கியமான கேள்வி இக்கேள்விக்கான பதிலினை பொறுத்தே மிகுதி புலன் விசாரணைகள் நடைபெறும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக இவ்எலும்பு கூடுகள் 50 வருடத்திற்கு உட்பட்ட காலப்பகுதியினுள் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 50 வருடங்களுக்கு மேலாக இருந்தால் அவை பொதுவாக தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதப்படும். இக்கேள்விக்கான பதில் நிச்சயம் விஞ்ஞா ரீதியில் அல்லது வரலாறு ரீதியில்   பொதுவா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறான சந்தர்ப்பக்கங்களில் எவ்வாறான முறைகள் நடைமுறையில் உள்ளது என்பதை பற்றியே இப்பதிவு ஆகும்.

  1. உருவ தோற்றவியல் (Bone Morphology) மூலம்

மிக அண்மை காலப்பகுதியில் புதைக்கப்பட்ட எலும்புகளில் தசை மற்றும் இணையங்கள் இணைந்து இருக்கும். மேலும் எலும்புகள் பாரமாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். கூடவே நாற்றமும் இருக்கும். பொதுவாக மேற்குறித்த இயல்புகள் 6 மாதம் வரையே இருக்கும்.

2. அகழ்வின் பொழுது எடுக்கப்படும் வேறு பொருட்கள் (Circumstance evidence) மூலம்

உதாரணமாக எலும்புகளுடன் கிடைக்கும் பத்திரிகை துண்டுகள், நாணய குற்றிகள் மற்றும் வேறுபொருட்கள். இவற்றில் உள்ள திகதி  மூலம் மூலம் காலத்தினை கணிக்கலாம். ஆனால் இம்முறையில்  பெரும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இம்முறை பொதுவாக சட்ட நடவடிக்கைகளுக்குகாக ஏற்று கொள்ளப்படுவதில்லை.

3. Luminal முறை

இம்முறையில் Chemiluminescence (CL) டெஸ்ட் பயன்படுகின்றது. இம்முறை மிக செலவு குறைந்தது அத்துடன் மிக இலகுவாக செய்யலாம்.   ஆனால் இம்முறையில் உணர்திறன்(sensitivity) குறைவு என்பதால் பொதுவாக ஏற்று கொள்ளப்படுவதில்லை. sensitivity  என்பது நோய் நிலைமையைக் கொண்டிருக்கும் நோயாளிகளை சரியாகக் கண்டறியும் திறனின் திறனை  குறிக்கிறது. specificity என்பது ஒரு நிபந்தனையின்றி ஆரோக்கியமான நோயாளிகளை சரியாக நிராகரிப்பதற்கான சோதனை திறனைக் குறிப்பிடுகிறது. அவ்வாறே specificity யும் குறைவாகவே உள்ளது.

525px-Sensitivity_and_specificity.svg.png

  1. Oxford histology index முறை

இம்முறையில் எலும்பானது காலப்பகுதியுடன் அழிவடையும் பொழுது அவற்றில் ஏற்படும் மாற்றங்களை நுணுக்கு காட்டியின் ஊடாக பரிசோதிப்பதன் மூலம் எலும்பின் காலப்பகுதி அறவிடப்படும். இம்முறையில் பல குறைபாடுகள் இருப்பதால் பொதுவாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை.

  1. வேறு முறைகள்

இங்கு சூழவுள்ள மண்ணில் மற்றும் எலும்பில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை அடிப்படையாக கொண்டு காலத்தினை அளவிடும் முறை ஆகும். இம்முறையும் காலத்தினை சரியாக கணிக்க பெரிதளவில் உதவாது.

  1. கார்பன் டேட்டிங் முறை

இம்முறையே நவீன செலவு மிக்க முறை ஆகும். இதில் sensitivity அண்ட் specificity  கூடவாக உள்ளதால் தெளிவாக காலத்தினை கணிக்கலாம். இங்கு அணுகுண்டு கார்பன் விளைவு (Bomb carbon effect) மூலம் முதலில் எலும்புகள் 1950 இற்கு பிந்தியது அல்லது முந்தியதா என்று கணிக்கப்படும். 1950 இற்கு பிந்தியது எனில் 10வருட துல்லிய கால இடைவேளையில் காலத்தினை கணிக்கலாம. 1950 இற்கு பிந்தியது எனில் Accelerator mass spectrometry.(AMS) முறை மூலம் ஓரளவு பெரிதான கால இடைவெளியில் தான் காலத்தினை கணிக்க முடியும். 1950இற்கு பிந்தியது எனில் அது தொல்பொருளியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மனித எலும்புகள் 500 ஆண்டுகளாக புதைகுழியில் இருக்குமா?

மன்னார் மனித புதை குழி சம்பந்தமான கார்பன் டேட்டிங் ரிப்போர்ட் வெளியாகி பலத்த சர்ச்சையினை கிளம்பியுள்ள நிலையில் பலர் 500 வருட காலமாக மனித எலும்புகள் உக்காமல் இருக்குமா? எலும்பு கூடுகளுடன் உலோகங்கள் 500வருடகாலமாக உக்காமல் இருக்குமா? என்பது பற்றி மூளையினை கசக்கி பிழிந்தவண்ணம் உள்ளனர். மனிதன் இறந்த பின்பு மண்ணில் புதைக்கப்பட்டால்  அவனது எலும்பு கூடுகளுக்கு என்ன நிகழும் என்பது பற்றிய படிப்பே FORENSIC TAPHONOMY ( Forensic taphonomy is the study of these postmortem changes to human remains caused by soil, water, and the interaction with plants, insects, and other animals)

சாதாரணமாக புதைக்கப்பட்ட மனித உடலானது மண்ணுடனும், மண்ணில் உள்ள நீருடனும் அல்லது நீர் நிலைகளில் உள்ள நீருடனும், மண்ணில் உள்ள உரினங்களுடனும் மண்ணில் மேல் உயிர் வாழும் தாவரங்களுடனும் இடைத்தாக்கமடையும். இவ்வாறு இடைத்தாக்கமடைந்து படிப்படியாக உக்கி அழிவடையும். மனிதனோடு கூடவே புதைக்க பட்ட உலோகங்கள் மற்றும் ஏனைய ஆபரனங்களும் இவ்வாறே இடைத்தாக்கமடையும். இவ்வாறு மனித உடல் காலத்துடன் உக்கும் வீதம் (decomposition rate) பல்வேறுபட்ட காரணிகளில் தங்கி உள்ளது. அவையாவன எனில்

  1. சூழல் காரணிகள் (Environmental factors)
  2. மனித காரணிகள் (Human factors)

சூழல் காரணிகளை எடுத்து கொண்டால் உக்கும் வீதமானது பின்வருவனவற்றில் தங்கி உள்ளது

  1. சூழலின் வெப்பநிலை – அதிக வெப்பநிலையானது உக்கும் வீதத்தினினை அதிகரிக்கும். மாறாக வெப்பநிலை 120F இணை தாண்டும் பொழுது நுண்ணங்கிகளின் தொழில்பாடு இல்லாமல் போவதன் காரணமாக உக்கல் நடைபெறாது. அவ்வாறே 32F இணை விட குறைவாக வரும் பொழுதும் நடைபெறாது.
  2. ஈரப்பதன் (Moisture) – ஈரப்பதன் அதிகமாக இருக்கும் பொழுது மனித உடல் உக்கும் வீதமானது அதிகமாக இருக்கும் காரணம் அதிகரித்த பற்றீரியாக்களின் தொழில்பாடே ஆகும். உதாரணமாக நீரில் இருந்து மீட்கப்படும் உடல் மிக விரைவில் உக்கி பழுதடையும்.
  3. காற்றுக்கு வெளிப்படல் (Expose to air) – உடல் ஆனது காற்றுக்கு வெளிப்பட்டு இருந்தால் மிக விரைவில் உக்கி பழுதடையும். காரணம் பற்றீரியாக்களின் தொழில் பாட்டிற்கு தேவையான அளவு ஓட்ஸிசன் வாயு கிடைக்கின்றமையே ஆகும். இதேவேளை உடனடியாகவே ஆழ் கிடங்குகளில் புதைக்கப்பட்டால் கிடைக்கும்  ஓட்ஸிசன் அளவு குறைவு காரணமாக உக்கும் வீதம் குறைவடையும்.
  4. வெளிப்பட்ட மனித உடல்கள் (Exposed body to environment) – மனித உடலானது சூழலுக்கு வெளிக்காட்ட பட்ட நிலையில் இருக்கும்பொழுது அவை மிருகங்களின் தாக்குதல்களுக்கு மற்றும் இலையான் ஏனைய பூச்சி வகைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். இவ்வாறு உள்ளாகும் உடல்கள் வெகுவிரைவில் உக்கி மண்ணாகும்.

பின்வரும் மனித காரணிகள் உக்கும் வீதத்தில் செல்வாக்கு செலுத்தும்

  1. வயது – உடன் பிறந்த குழந்தைகளில் குடலில் நுண்ணங்கிகள் குறைவாக இருப்பதன் காரணமாக அவற்றில் உக்கும் வீதம் குறைவாகவே இருக்கும்.
  2. உடற் பருமன் – பருத்த உடல் கொண்ட நபரின் உடலில் அதிகளவு நீர் காணப்படுவதனால் அவ்வுடல் இலகுவில் உக்கும் . மாறாக மெல்லிய உடல் பருமன் உள்ளவர்களின் உடலில் குறைந்தளவு நீர் காணப்படுவதனால் அவ்வுடல் இலகுவில் உக்காது.
  3. மரணத்திர்கான காரணம் (Cause of dead) – ஒருவர் செப்டிசீமியா போன்ற கிருமித் தொற்றின் காரணமாக இறப்பாராக இருந்தால் அவரின் உடலில் உள்ள கிருமிகள் காரணமாக உடல் விரைவில் உக்கி அழிவடையும். ஒருவர் ஆசனிக்கு மற்றும் பாதரசம் போன்ற நஞ்சு பொருட்களினால் நச்சூட்டப்பட்டு இறப்பாராக இருந்தால் அவரின் குறைந்த வீதத்திலேயே  உக்கி அழிவடையும்.

ஆக மொத்தத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட உடலானது உக்கி அழிவடையத்தான் வேண்டும். ஆனால் அழிவடையும் அல்லது உக்கும் வீதமானது மேற்கூறப்பட்ட பல்வேறு காரணிகளில் தங்கி உள்ளது. அதன்காரணமாகவே சில பிரதேசங்களில் மனித எலும்பு கூடுகள் பல நூற்றான்டுகள் சென்றும் முழுதாக கிடைக்கின்றன. மாறாக சில பிரதேசங்களில் மனித எலும்பு கூடுகள் ஒருசில வருடங்களிலேயே அல்லது மாதங்களிலிலேயே முற்றாக உக்கி அழிவடைந்து விடுகின்றன. இவ்வாறே மனித உடலோடு கூடவே புதைக்க பட்ட உலோகங்களின் இருக்கையும் தீர்மானிக்க படுகின்றது. மேலும் மிக பெரிய ஒரு மனித புதை குழியினை அமைக்கும் பொழுது மனித உடலினை கை மற்றும்  கால் என்பவற்றினை நூலினால் அல்லது கம்பியினால் பிணைத்த பின்னர் தூக்கி உள்ள நோக்கி வீசுவார்கள்.

பஸ்ஸில் உங்கள் ஆசனம் பாதுகாப்பானதா?

அவள் முதன் முதல் கொழும்பு பல்கலைகழகம் செல்வதற்காக தனது தாயாருடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தாள். அவளின் தாயார் பஸ்ஸின் சாரதி இருக்கைக்கு நேரடி பின்னாகவும் அவள் தாயாரின் அருகிலும் அமர்ந்திருந்தாள். அவள் தாயாருடன் தனது எதிர்கால படிப்பு சம்பந்தமாகவும் தனது விடுதி வசதி தொடர்பாகவும் உரையாடியவண்ணம் இருந்தாள் . தாயாரும் தனது பங்குக்கு அவளுக்கு அறிவுரைகள் கூறியவண்ணம் இருந்தாள். பஸ்ஸானது ஆணையிறவினை தாண்டி யாழ் – கண்டி வீதியில் கடும் இருட்டினுள் மிகவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று பாரிய சப்தம்   அதனை தொடர்ந்து அவளுக்கு என்ன நடந்தது என்னெவென்று தெரியவில்லை. அவள் கண் விழித்தபொழுது வைத்தியசாலையில் இருந்தாள். அவளின் தாடை எலும்பு மற்றும் பற்கள் உடைந்து இருந்தன. தாயாரும் படு காயத்திற்கு உள்ளாகி இருந்தார்.

கடந்த மாதத்தில் மட்டும் யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் 3 பஸ்கள் விபத்துக்குள்ளாகி இருந்தன. இதனால் ஒருசில உயிரிழப்புக்களும் பல பேர் படுகாயங்களுக்கும் உள்ளார்கள். இப்பதிவில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை அன்றி எவ்வாறு ஒரு பாதுகாப்பான இருக்கையினை பஸ்ஸில் தெரிவு செய்வது பற்றி சட்ட மருத்துவ அடிப்படையில் ஆராயப்படுகின்றது.

பெரும்பாலான விபத்துகள் நடைபெறும் பொழுது பஸ்சின் முகப்பு பக்கத்திலேயே அதிக விசை தாக்கும் (head on collision/front impact) இதன் காரணமாக தற்பொழுது சொகுசு பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய முகப்பு (Windscreen) கண்ணாடி, ஏனைய அதனோடிணைந்த பொருட்கள் மற்றும் நம்மவர்களால் பொறுத்தப்பட்ட கடவுள் படங்கள், சிலைகள் மற்றும் தொலைக்காடசி என்பன பலத்த விசையுடன் உள்நோக்கி நகரும் அதேவேளை சாரதி, சாரதிக்கு பக்கத்தில் இருப்பவர் அல்லது மிதிப்பலகையின் நின்று கொண்டிருப்பவர் ஆகியோரும் முன்னோக்கி நகர அவர்களுக்கு கடுமையான காயங்கள் மற்றும்  சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும். இவ்வாறே சாரதிக்கு பின்னான இருக்கையில் இருப்பவர்களுக்கும் எதிர் நிரையில் முதலாவதாக இருப்பவர்களுக்கும் கடுமையான காயங்கள் மற்றும்  சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும். பஸ்சின் முற்பகுதிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் தடுப்பு இருந்தாலும் கணிசமான விசை தாக்கும். மேலும் கண்ணாடியிலான அல்லது தகட்டிலான தடுப்பு இருந்தால் அவை உடைந்து அதிக காயங்களை ஏற்படுத்தும்.

vehicle_safetyseats_bus

பஸ்சின் பின் நிரையில் இருப்பவர்களில் நடுவில் இருப்பருக்கு முன்பாக எவ்விதமான தடுப்பும் இல்லை. இதன் காரணமாக விபத்தின் பொழுது வாகனத்தின் மிகக்குறைந்த நேரத்தில் வேகம் சடுதியாக பூச்சியமாக வரும் (Deceleration) இதன் காரணமாக அவர் தூக்கி வீசப்பட்டு அதிக காயங்களுக்கு உள்ளவார்.

மேலும் பஸ்ஸானது நிறுத்த பட்டிருக்கும் பொழுது பின்பக்கமாக வரும் வாகனம் மோதும் பொழுது பஸ்சின் பின் நிரையில் இருப்பவர்கள் அதிக காயங்களுக்கு உள்ளவார். குறிப்பாக பஸ்ஸின் பின் பக்கத்தில் எதுவித இரும்பாலான குறுக்கு சட்டங்களும் (Iron cross bars) இல்லாததினால் விசையானது நேரடியாக தாக்கி அதிக சேதாரங்களை ஏற்படுத்தும்.

மேலும் பஸ்சின் எரிபொருள் தாங்கி உள்ள இடத்திற்கு மேலே உள்ள இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்தின் காரணமாக தீ ஏற்பட்டால் அவருக்கு அதிக காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் விபத்தின் காரணமாக எரிபொருள் தாங்கி வெடிக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

மேலும் சாரதி இருக்கையின் பின்னாக உள்ள நிரையில் உள்ளவர்கள் எதிர் பக்கத்தில் இருந்து வரும் வாகனம் வேக கட்டுப்பாடினை இழந்து மோதும் பொழுது அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படும் (side impact) சாத்திய கூறு உண்டு. எனினும் இரும்பாலான குறுக்கு சட்டங்கள்  (Iron cross bars) இருப்பதன் காரணமாக காயங்கள் குறைவாக இருக்கும்.

தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட…

காலை 10 மணியளவில் எனதுஅலுவலகம் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். ஓர் பல்கலை கழக புதுமுக மாணவியை பெண் போலீசார் அழைத்து வந்திருந்தனர். போலீசார் கூறினார்கள்        ” சேர், பல்கலை கழகத்தில் நடைபெற்ற ராக்கிங்கின் பொழுது இவ்மாணவியின் கையினை சிரேஷ்ட மாணவிகள் வெட்டியுள்ளார்கள்”. மேலும் அவர்கள் இச்சம்பவம் மீடியாக்களில் வந்து பிரச்சனையாக இருப்பதாகவும், நீங்கள் இம்மாணவியினை பரீட்சிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நானும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு பெண் பரிசாரகரின் முன்னிலையில், பொலிஸாரினால் குறிப்பிடடசம்பவம் பற்றி      என்ன நடந்தது? எவ்வாறு நடந்தது ? பாவிக்க பட்ட ஆயுதம் என்ன? போன்ற விபரணங்களை கேட்டேன். அம்மாணவி கூறிய சம்பவம் இதுதான், “தான் விடுதியில் உள்ள குளியறையில் குளித்து கொண்டிருக்கும் பொழுது இரவு சிரேஷ்ட மாணவிகள் சிலர் அத்துமீறி உள்ளே புகுந்து தனது இடது கையில் பிளேடினால் பலமுறை வெட்டியதாகவும் அதன் பின்னர் தான் மயங்கி வீட்டதாகவும், மீண்டும் விழித்த பொழுது தான் விடுதி அறையில் உள்ள கட்டிலில் படுத்து இருந்ததாகவும்” கூறினார். மேலும் அவர் தனது சக மாணவிகள் இது பற்றி பல்கலை கழக நிர்வாகத்தில்  முறையிடத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். அவரின் காயங்களின் இயல்புகளை பார்த்த உடனேயே எனக்கு விளங்கி விட்டது அதேபோல் அருகில் நின்ற அனுபவம் மிக்க பெண் பரிசாராருக்கும் விளங்கி விட்டது அதாவது இக்காயம் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டது (Deliberate self-harm (DSH), self- inflicted injury (SII), nonsuicidal self-injury (NSSI)). நான் அம்மாணவியிடம் எனது கருத்துக்களை கூறி ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டேன். அம்மாணவி அதனை முற்றாக மறுத்து தனக்கு சிரேஷ்ட மாணவிகள்  இடது கையில் பிளேடினால் பலமுறை வெட்டியதாக உறுதியாக கூறினார். பெண் என்ற ரீதியில் அருகில் நின்ற சிரேஷ்ட பரிசாராரும் எனது மேலதிகாரியும் ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டனர். அவள் அம்மாணவி மீண்டும் மீண்டும் சம்பவத்தினை மறுத்தாள் . இறுதியாக அவள் கடும் மன உளைச்சலில் இருப்பதனால் அவளை உளவள ஆலோசனைக்கு அனுப்பிவைத்தேன். பொலிஸாருக்கு அம்மாணவியில் காணப்பட்ட காயங்கள் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டதால் ஏற்பட்டது என்று அறிக்கையிட்டேன். சில வாரங்களின் பின்னர் வேறு அலுவலாக வந்த போலீஸ் அதிகாரி கூறினார், கடைசியில் மாணவி எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டார் பின்னர் நடைபெற்ற விசாரணைகள் முடிவுறுத்த பட்டுள்ளன என்று.

எம்மில் பலர் மன நெருக்கீடான நேரங்களில் எம்மை நாமே காயப்படுத்தும் வழக்கத்தினை கொண்டுள்ளனர். வேறு சிலர் சில சம்பங்களில் இருந்து தப்பிவிக்கவும், சம்பவங்களை திசைதிருப்பவும் இவ்வாறு செய்கின்றனர். சிலர் சிலரிடம் இருந்து அனுதாபத்தினை பெறவும் அல்லது அவர்களை பயப்படுத்தவும் இவ்வாறு செய்கின்றனர். ஓர் சட்ட வைத்திய அதிகாரி இக்காயங்களில் காணப்படும் பின்வரும் இயல்புகளை கொண்டு அவற்றினை இலகுவாக இனம் காணுவார்.

  • பொதுவாக பெண்களே இவ்வகையான காயங்களை தமக்கு தானே ஏற்படுத்துவார்கள்.
  • காயங்கள் பொதுவாக தனது கைகளுக்கு எட்ட கூடிய இடங்களான கையின் முற்புறம், தொடையின் முற்புறம், வயிறு மற்றும் நெஞ்சின் முற்புறம் என்பவற்றில் காணப்படும்.
  • காயங்கள் அநேகமாக வெட்டு காயமாக இருக்கும், இதேவேளை அவை தோலின் ஆழத்திற்கே காணப்படும் மேலும் காயங்கள் ஒன்றுக்கு ஒன்று சமாந்தரமாக காணப்படும்
  • மேலும் இவர்களை பரீட்சிக்கும் பொழுது முன்பு ஏற்படுத்திய இவ்வகையான காயங்களின் தழும்புகள் காணப்படும்
  • இக்காயங்கள் காணப்படும் ஆண்கள் சிலவேளைகளில் போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள்.
  • சிலர் ஒருவித மனநோயினால் பாதிக்க பட்டவர்களாக இருப்பார்கள்.

மார்ச் 1ம் திகதி உலகளாவிய ரீதியில் இவ்வகையான காயங்களை குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாகும்.

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

அறிமுகம்

முன்பொருபோதும் இல்லாதவாறு பாலியல் துஸ்பிரயோக, கொலை  மற்றும் ஏனைய குற்றவியல் வழக்குகள் நடைபெறும்போது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுசனங்கள் இடையிலும்  DNA   பரிசோதனை முடிவுகள் சம்மந்தமாக பெருமளவு கதைக்கப்படுக்குகின்றது. DNA பரிசோதனை முடிவானது தகுந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் சந்தேகநபர்கள் தண்டனையில் இருந்து விடுதலை பெறவும் உதவும். DNA பரிசோதனை சரியான முறையில் மேற் கொள்ளப்பட்டால் எத்தகைய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினாலும் அவ்வழக்கில் வெற்றி பெறுவது சவாலானது.

DNA என்றால் என்ன?

Deoxyribo Nucleic Acid என்பதன் சுருக்க பதமே DNA ஆகும். மனித உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் தமது கருவினுள் மேற்படி பதார்த்தத்தினை கொண்டிருக்கும். DNA ஆனது சாதரணமாக உமிழ்நீர் மயிர், இரத்தம், என்பு மற்றும் விந்து என்பவற்றில் காணப்படும்.

சாதரணமாக குற்றம் ஒன்று நடைபெறும் பொது மேற்படி பொருட்களின் பரிமாற்றம் பாதிக்கப்பட்ட நபர்,  சந்தேகிக்கப்படும் நபர் அல்லது குற்றவாளி  மற்றும் குற்றம் நடைபெற்ற பிரதேசம் என்பவற்றுக்கிடை யில் பரிமாற்றப்படும். இதன் மூலம் குற்றவாளி அல்லது சந்தேகநபர் ஆனவர் குற்றம் நடைபெற்ற பிரதேசத்துடன் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியான தொடர்பில் இருந்துள்ளார் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படும்.

DNA பரிசோதனை ஏன் தனித்துவமானது?

பின்வரும் காரணஙகளுக்காக DNA பரிசோதனையானது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது

  1. ஒவ்வொரு மனிதர்களும் கொண்டிருக்கும் DNA ஆனது தனித்துவமானது. அதாவது ஒரு மனிதனில் இருக்கும் DNA ஆனது இன்னொரு மனிதனில் காணப்படாது. விதிவிலக்காக ஒத்த இரட்டையரில் (Identical twins) ஒரே மாதிரியான DNA காணப்படும்.
  2. DNA ஆனது வயதுடனோ அல்லது வேறு எந்த செயன்முறை மூலமோ மாற்றம் அடையாது. பிறப்பில் இருந்து இறக்கும் வரை ஒரே வகையான DNA காணப்படும்.
  3. DNA பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் மாதிரி பொருட்களை பல வருடங்களுக்கு இலகுவாக சேமித்து வைத்திருக்க முடியும்.
  4. சில வளர்ச்சி அடைந்த நாடுகளில் அந்நாட்டின் சகல பிரசைகளினதும் DNA ஆனது சேகரித்துவைக்கபட்டிருக்கும் (Combined DNA Index System – CODIS). அத்தரவுகளில் இருந்து குற்றவாளியினை இலகுவாக கண்டுபிடித்து விடலாம் .

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

பாலியல் வல்லுறவு அல்லது வேறு வகையான  பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறும் போது குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குற்றம் நடந்த பிரதேசம் என்பவற்றுக்கிடையில் சாட்சிய பொருட்களான  உமிழ்நீர், மயிர், இரத்தம், என்பு மற்றும் விந்து என்பவற்றின் பரிமாற்றம் நிகழும். DNA பரிசோதனையின் ஆரம்ப கட்டிடமாக சந்தேகநபர் அல்லது குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குற்றம்  நடந்த பிரதேசம் என்பவற்றில் இருந்து மாதிரி பொருட்களை சேகரிக்கவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின்    பிறப்பு உறுப்பு, மலவாசல், கடி காயங்கள், உள்ளாடைகள் மற்றும் விரலின் நகக்கண்  ஆகிய உடற்பகுதிகளில்  இருந்து  மாதிரி பொருட்களை சேகரிக்கவேண்டும்.

மாதிரி பொருட்களை உரிய முறையில், உரிய அளவில் சேகரிக்கவேண்டும்.அத்துடன் மாதிரி பொருட்களை சப்பவம் இடம்பெற்ற பின்பு இயலுமானளவு விரைவாக சேகரிக்கவேண்டும். ஏன்னெனில் மாதிரிபொருட்களின் உள்ள DNA வேறு பொருட்களுடன் கலக்கலாம் அல்லது இயற்கையாகவே அழிந்து போகலாம். மாதிரி பொருட்களை சேகரிக்கும் நபரினது மயிர், எச்சில் போன்றன மாதிரி பொருட்களில் கலக்கா வண்ணம் சேகரிக்கும் நபர் கையுறை, தலைக்கவசம் மற்றும் முகமூடி என்பவற்றை அணிந்துதிருப்பார்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து 72 மணித்தியாலங்களுக்குள் மாதிரிகளை சேகரித்தால் சிறந்த முடிவுகளை பெறமுடியும். 72 மணித்தியாலங்களிற்கு பிறகு சேகரிக்கப்படும் மாதிரிகளில் இருந்து பெறப்படும் முடிவுகள் எதிர்மறையானா முடிவாக இருப்பதற்கு சாத்தியக்கூறு கூட உண்டு. மாதிரி பொருட்களில் உள்ள DNA ஆனது வெப்பம் மற்றும் ஈரலிப்பு என்பவற்றால் அழிவடைந்து போகும் . எனவே இம்மாதிரி பொருட்கள் உலர்த்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மிகமிக சிறிதளவு DNA கிடைத்தாலும் நவீன தொழில் நுட்ப உதவிமூலம் (Polymerase Chain Reaction – PCR) எமக்கு தேவையான DNA இணை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் DNA ஆனது குற்றவாளியிடம் அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து பெறப்படும் DNA உடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு உண்மையான குற்றவாளி இனம்காணப்படுவர்.

இலங்கைல் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் (Section 122 of CPC amended by 14 of 2005 and Section 45 of the Evidence Ordinance) DNA சான்றானது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் இவ்வாறு DNA தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கோகண்டர வழக்கு, நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கு மற்றும் சிறுமி சேயா கொலை வழக்கு என்பவற்றை குறிப்பிடலாம். கூட்டு பாலியல் வல்லுறவு நடைபெறும் போதும், பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை என்று தெரியாதபோதும் DNA பரிசோதனை மூலம் குற்றவாளிகளை இலகுவாக இனம் காணலாம்.

DNA பரிசோதனையின் வெற்றியானது மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்ட நேரம், முறை, கழஞ்சிய படுத்தப்பட்ட முறை, பரிமாற்றம் செய்யப்பட்ட முறை (chain of custody) மற்றும் சேகரிப்பவரின் அனுபவம், திறமை என்பவற்றில் தங்கி உள்ளது.

 

காப்பாற்ற குதித்தவனும் மாண்ட கதை

அது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம். அவனின் தொழில் வீடு வீடாக சென்று மண்ணெண்ணெய்யில் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் கிணறுகளை துப்பரவாக்கி இறைத்து கொடுப்பதே. அவனுக்கு உதவியாள் என்று யாரும் இல்லை. போகும் இடத்தில் யாரையாவது உதவிக்கு அழைப்பான். அன்றும் வழமைபோலவே மாலைவேளை   70 அடி ஆழமான அக்கிணற்றினை இறைக்க ஆயத்தமாகினான். அக்காலப்பகுதி  சித்திரை மாதம் என்பதால் பெய்த சிறுமழையினால் கிணற்றில் கணிசமான அளவு நீர் நிறைந்து இருந்தது. அவனது மண்ணெண்ணெய்யில் வேலை செய்யும் இயந்திரதின் வலு நீரினை மேலிழுத்து இறைக்க போதாதது. அதனால் ஏறத்தாழ நடுவில் 30 அடி  ஆழத்தில் சீமெந்தினால் செய்யப்பட்டுள்ள தட்டு ஒன்று உள்ளது அதில் நீர் இறைக்கும் இயந்திரத்தினை இறக்கி அதனை இயக்கி தனது வேலையை ஆரம்பித்தான். அயலில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். ஏறத்தாழ நீர்முழுவதும் இறைத்து முடியும் நிலையில் இறங்கி கிணற்றினை சுத்த படுத்த தொடங்கினான். மேலே நின்ற  இளைஞன் ஒருவன் குப்பைகளை அள்ளி உதவி புரிந்தவண்ணம் இருந்தான். தீடீரென்று கிணற்றில் உள்ளே வேலைசெய்த வண்ணம் இருந்த நபர் வலிப்பு மாதிரி வந்த நிலையில் மயங்கி வீழ்கின்றான். அதனை தொடர்ந்து உதவி செய்த இளைஞன் கிணற்றின் உள்ளே இறங்குகின்றான். வீழ்ந்து கிடந்தவனை தூக்கி நிறுத்திய படி சொன்னான். தனக்கும் மயக்கம் மாதிரி வருகின்றது என்று சிலவினாடிகள் தான் தாமதம் இருவரும் தடாலடியாக மீண்டும் வீழ்ந்தனர்.  மேலே நின்றவர்கள் செய்வதறியாது கத்தினார்கள். அவர்களில் ஒருவன் மேலே இருந்து நீரினை ஊற்றி இயங்கிய வண்ணம் இருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தினை நிற்பாட்டினார்கள்.

ஏறத்தாழ 30 நிமிடங்களின் பின்னர் அவர்களின் உடலையே மேலே கொண்டுவர முடிந்தது. உறவினர்களிடம் விபரங்களினை பெற்ற பின்னர் உடற் கூராய்வு பரிசோதனையினை மேற்கொண்டேன்.  அவர்களின் சொண்டின் உள் பகுதி சிவந்திருந்தது. இரத்தமும் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது. அவர்களில் உயிர் ஆபத்தினை ஏற்படுத்த கூடிய காயங்கள் ஏதும் இல்லை. அவர்கள் இருவருமே இள வயதினர் என்பதினால் மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைகளும் காணப்படவில்லை. மேலும் நீரில் மூழ்கி இறந்தமைக்கான சான்றுகளும் இல்லை. இந்நிலையில் அவர்களின் இரத்தம் மற்றும் ஏனைய அவசியமானவற்றினை மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பகுப்பு ஆய்வு திணைக்களத்திற்கு அனுப்பினேன். முடிவில் அவர்களின் இரத்தத்தில் கார்பன் மொனோக்சைட்டு (Carbon monoxide) வாயு அளவுக்கு மீறி கலந்து இருப்பதாக முடிவு வந்திருந்தது.

கார்பன் மொனோக்சைட்டு வாயு ஆனது பொதுவாக குறை தகனம் நிகழும் பொழுது வாகனகளில் இருந்து வெளியேறும் ஓர் மணம், நிறம் அற்ற வாயு ஆகும். இது ஓர் சுவாசிக்க தகுந்த அல்லாத ஓர் நச்சு வாயு ஆகும். இது சாதாரணமாக வழிமணடலத்தில் இருந்து நாம் உள்ளெடுக்கும் ஒக்சிசன் விட இது 200 மடங்கு எமது இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறத்திற்கு காரணமான ஈமோகுளோபினுடன் நிரந்தரமாக இணையும் திறன் உள்ளது. இதன் காரணமாக  ஒக்சிசன் எமது உடலில் உள்ள அங்கங்களுக்கு கடத்தப்படாது. இதன்காரணமாக மூளை மற்றும் இருதயம் ஆகியன இறக்கும் அதனை தொடர்ந்து அம்மனிதனும் இறப்பான்.

முக்கியமாக நீர் இறைக்கும் இயந்திரத்தினை வைத்திருந்த நபரின் உறவினர்கள் என்னிடம் கேட்டார்கள் முன்பும் இவ்வாறன சந்தர்ப்பங்களில் அவர் நீர் இறைப்பு வேலை செய்தது உண்டு. அவ்வாறு இருக்க ஏன் அன்று இத்துயர சம்பவம் நடைபெற்றது? என்று நான் அவர்களுக்கு பின்வருவனவற்றினை விளங்க படுத்தினேன்.

  1. இயந்திரத்தில் குறை தகனம் இயங்க ஆரம்பித்த உடனேயே நடைபெறாது. விதிவிலக்காக காபறேற்றில் பழுது இருந்தால் குறைதகனம் நடைபெறும்.
  2. இயந்திரம் நீண்ட நேரம் அதிக பளுவுடன் வேலை செய்யும் பொழுது குறைதகனம் நடைபெறும்.
  3. இயந்திரம் இயங்குவதற்கான ஒக்சிசன் கிணற்றின் ஆளப்பகுதியில் குறைவாக காணப்படும்பொழுது இயந்திரத்தில் குறை தகனம் நிகழும் சாத்தியக்கூறு அதிகம்.
  4. கிணற்றின் ஆளப்பகுதியில் ஒக்சிசன் குறைவாக காணப்படும்பொழுது கார்பன் மொனோக்சைட்டு வாயுவின் பாதிப்பு அதிகம்.
  5. மேலும் குறைதகனத்தின் பொழுது கார்பன் மொனோக்சைட்டு தவிர வேறு பல மனித சுவாசத்திற்கு உதவாத வாயுக்களும் வெளியேறி அவ்விருவரின் மரணத்தினையும் துரித படுத்தி இருக்கும்.
  6. மேலும் ஆழ் கிணறுகளில் மனிதனின் சுவாசத்திற்கு உதவாத மீதேன், கார்பன் டயோக்சிட் .. போன்ற வாயுக்கள் அதிகளவில் தேங்கி நிற்பதுவும் இத்தகைய மரணங்கள் ஏற்பட ஏதுவாகின்றது.

wp-15841865674796858912672646381447.jpg

நவீன காலத்தில் வலு கூடிய நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றின் வெளியில் வைத்தது பாவிப்பதன் மூலம் அல்லது நீரினுள்ளும் (Submersible water pump)  மின்சாரத்தினால் வேலை செய்யும் நீர் இறைக்கும் இயந்திரங்களை பாவிப்பதன் மூலம் இவ்வாறான அநியாய உயிரிழப்புகளை தடுக்கலாம்.

                                                              முற்றும்

சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

இலங்கையில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இறப்பின் பின்னர் உடற் கூராய்வு பரிசோதனை சட்ட வைத்தியர்களினால் நடாத்தப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்த நபரின் உறவினர்களுக்கு சட்ட வைத்தியரிடம் இருந்து எவ்வாறன தகவல்களை பெறலாம் என்பது தெரிவதில்லை. அவற்றினை தெளிவுபடுத்தும் நோக்குடன் இப்பதிவானது வெளியிடப்படுகின்றது.

  1. அவரின் மரணத்திற்கான காரணம் (Cause of dead) என்ன?
  2. மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்ன?
  3. மரணம் ஏற்பட்ட அண்ணளவான காலப்பகுதி (Time since dead) என்ன?
  4. காயத்தினால் ஏற்பட்ட மரணம் எனில் காயம் ஏற்படட பின்பு எவ்வளவு உயிர் வாழ்ந்தார் (Period of survival)?
  5.  அவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் எத்தனை?
  6. எவ்வகையான காயங்கள்(type of injuries) காணப்பட்டன?
  7. உடலில் எப்பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன?
  8. உடலின் உள் அங்கங்களில் காயங்கள்(internal injuries) காணப்பட்டனவா? எவ்வங்களில் காணப்பட்டன?
  9. கழுத்து, தலை, நெஞ்சு மற்றும் விதைப்பை ஆகியவற்றில் காணப்படட காயங்கள் யாவை? ஆண்களில் விதைப்பையில் காயம் காணப்பட்டதா என்று ஏன் விசாரிக்கவேண்டும் எனில் சில சந்தர்ப்பங்களில் விதைபையில் தாக்கும் பொழுது குறித்த நபர் மயக்கமடைவர் (Vasovagal syncope) அதன் பின்பு அவரினை அவர்கள் தூக்கில் தொங்கவிட்டு குறித்த நபர் தற்கொலை செய்ததாக சொல்வார்கள்
  10. மூளையில் எதாவது இரத்த கசிவு இருந்ததா (stroke) ?
  11. இருதயத்தின் முடியுரு இரத்த நாடியில் கொலெஸ்ட்ரோல் அடைப்பு (Coronary artery atherosclerosis) இருந்ததா? அது இறப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததா (Is it significant to cause to dead?) ? முக்கியமாக 70% விட அதிகமாக கொலஸ்ட்ரால் அடைப்பு இருக்கும் பட்சத்திலேயே மரணம் சம்பவிக்கும் சாத்தியக்கூறு அதிகம்
  12. இருதயத்தின் வால்வுகள் (Valves conditions – ? stenosis/ prolapse) என்ன நிலையில் இருந்தது? முக்கியமாக பலர் தவறாக புரிந்து கொண்டுள்ள விடயம் யாதெனில் இருதயத்தின் வால்வில் வரும் நோய்களுக்கும் (stenosis/ prolapse) முடியுரு குருதி நாடிகளில் வரும் கொலெஸ்ட்ரோல் அடைப்பு ஒன்று என்பதே
  13. உடலின் ஏனைய உள் அங்கங்களில் காணப்பட்ட இறப்பை ஏற்படுத்தும் நிலையில் காணப்படட நோய் நிலைமைகள் யாவை (Other significant pathological conditions)?
  14. என்ன மாதிரிகள் (இரத்தம், இரைப்பையின் உள்ளடக்கம், உடல் அங்கங்கள் ..) உடலில் இருந்து மேலதிக பரிசோதனைகளுக்காக (toxicological and histo pathological analysis) எடுக்கப் பட்டன? சில சமயத்தவர்  இப்பரிசோதனைகள் முடிந்த பின்பு இவ்வாறு பெறப்பட்டவரை மீள பெற்று உரிய சமய சடங்குகளை செய்வர் . அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு.
  15. அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (government analyst department and Medical research institute) போன்றவற்றிக்கு அனுப்பப்பட்ட  மாதிரிகள் யாவை? என்ன பரிசோதனைக்காக அனுப்பட்டன?
  16. அவரின் இரைப்பை , குடல் ஆகியவற்றில் இருந்த நஞ்சு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் பற்றிய விபரங்கள் யாவை ?
  17. பலசமயங்களில் வைத்திய தவறுகள் காரணமாக இறப்புகள் ஏற்படுகின்றன. உறவினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறையில் திருப்தி இல்லாவிடில் அவர்கள் இது பற்றி சட்ட வைத்திய அதிகாரி இடம் வினவலாம். குறிப்பாக அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள், ஏற்பட்ட பிரதிகூலமான விளைவுகள் (Complications) யாவை? இறந்தவரினை வேறு வசதியுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்து இருப்பாரா? போன்றவற்றினை தயக்கம் இன்றி கேட்கலாம்
  18. சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நீரிழிவு, இருதய நோய் போன்ற நோயநிலைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் விபத்தினால் அல்லது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமை ஏற்பட்ட காயம் காரணமாக தீவிரமடைந்து இறப்பு ஏற்படும். இவ்வாறன நிலைமைகளில் எதனால் மரணம் ஏற்பட்டது என்று (காயத்தினாலா/ ஏற்கனவே உள்ள நோயினாலா) சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும்.

மேற்கூறப்பட்டவற்றினை தவிர அவரின் இறப்பு சம்மந்தமாக உறவினர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் என்பவற்றினை  தயக்கம் இன்றி கேட்கலாம். கேட்கப்படும் கேள்விகளும் விடைகளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப   வேறுபடும் (case specific).