இலங்கையில் மீட்கப்பெற்ற எலும்பு கூடுகளை அடையாளம் காண்பது சாத்தியமா?

அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகளின் மூலம் பல நூற்றுக்கணக்கான மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மக்களின் முன்னால் உள்ள இது தொடர்பான  பல கேள்விகளில் பிரதானமானதும் முக்கியமானதுமான கேள்வி யாதெனில் இவ்  எலும்பு கூடுகளுக்கு உரியவர்கள் இனம் காணப்படுவார்களா? அதாவது இவ்வாறு எலும்பு கூடாக உள்ளவர்கள் யார்? என்பதே. எவ்வெலும்பு கூடுகளை அடையாளம் காண்பது என்பது சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரணமாக சட்ட மருத்துவத்தில் இவ்வாறு கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகள்  இருவிதமான அடையாள படுத்தலுக்கு உட்படுத்த படுகின்றது. அவையாவன

  1. பொதுவான அடையாளம் காணல் (Tentative identification)
  2. தனித்துவமான அடையாளம் காணல் (Specific/positive identification)

பொதுவான அடையாளம் காணல்

பொதுவான அடையாளம் காணலில் கிடைத்த எலும்பு கூடுகளில் இருந்து அவற்றின் மண்டையோடு,தாடை எலும்பு , இடுப்பு வளையம்  மற்றும் ஏனைய எலும்புகளின் உருவ தோற்றமைப்புகளை (Antropological and morphological measurements) ஆராய்ந்து ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ள இயல்புகளுடன் ஓப்பிட்டு ஆராய்வதன் (Comparative analysis) மூலம் அவ்வெலும்பு கூட்டிற்கு உரியவரின் பால்(ஆண் /பெண்), வயது, உயரம் மற்றும் இனம் என்பன கண்டறியப்படும். இங்கு இனம் என்பது மனிதனில் உள்ள பின்வரும் உபஇனங்களை கூறிக்கும்

  • Caucasoid (White) race.
  • Negroid (Black) race.
  • Mongoloid (Oriental/ Amerindian) race.

சில சந்தர்ப்பங்களில் கிடைத்த எலும்புக்கூட்டில் அம்மனிதன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள், எலும்பு முறிவுக்கு செய்ய பட்ட சத்திர சிகிச்சையின் பொழுது வைக்க பட்ட உலோக தகடுகல்  மற்றும் ஆணிகளின் விபரங்கள், பற்களுக்கு அளிக்க பட்ட சத்திர சிகிச்சைகளின் விபரங்கள் முக்கியமாக பிடுங்க பட்ட , நாட்டப்பட்ட பற்களின் விபரங்கள் என்பவற்றினை ஓப்பிட்டு நோக்குவதன் மூலம் அவ்வெலும்பு  கூடுகள் யாராக இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வரலாம் . ஓரே விதமான சிகிச்சையினை பல மனிதர்களுக்கு அளிக்க படுவதனால் இவ்வாறு அடையாளம் காண்பதுவும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிக்கும். மேலும் இங்கு பால், வயது, உயரம் மற்றும் இனம் என்பன சரியாக கணிக்கப்பட்டாலும்  ஒரு குறித்த சமூகத்தில் பல மனிதர்கள் ஒரே வயது, பால்  மற்றும் உயரம் என்பதை கொண்டிருப்பதால், ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளம் காணமுடியாது. எனவே இவ்வாறு பல மனித எலும்புக்கூடுகள் அல்லது மனித உடல்கள் ஒரே சமயத்தில் மீட்கப்படும் பொழுது நாம் அவற்றிற்குரிய மனிதர்களை அடையாளம் காண தனித்துவமான அடையாளம் காணும் முறைகளை பிரயோகிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுவான அடையாளம் காணலுக்கு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் தரவுகள் (Missing persons data) பெருமளவில் தேவைப்படும். அதாவது இங்கு தரவு என்று குறிப்பிடும் பொழுது அவர்களின் வயது, பால், உயரம், கடைசியாக அணிந்து இருந்த ஆடைகள், ஆபரணங்கள் பற்றிய விபரம், அவர்களுக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பற்றிய விபரங்கள், அவர்களுக்கு இருந்த நோய்கள் பற்றிய விபரங்கள் ….போன்ற விபரங்கள் ஆகும். இவ்விபரங்களை கிடைத்த எலும்பு கூடுகளின் விபரங்களுடன் ஓப்பிட்டே பொதுவான அடையாளம் காணப்படும். அதன் பின்னரே தனித்துவமான அடையாளம் காணப்படும்.

இலங்கையில் இவ்வாறு காணாமல் போனோரின் தரவுகள் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அராசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சில நிறுவனங்களிடம் இருந்தாலும் அது முழுமை பெறாத ஒன்றே.

மேலும் போர் நிறைவடைந்து ஏறத்தாழ 10 வருடங்கள் கழிந்த நிலையில் பல காணாமல் போனோரின் நெருங்கிய உறவினர்கள் தமது சொந்தங்களை தேடியே இறந்து விட்டார்கள் இதனால் இனிவரும் காலங்களில் காணாமல் போனோரின் மிகச்சரியான அடையாளம்காணலுக்குரிய தரவுகளை பெறுவது எட்டா கனியே. மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பயம் காரணமாக சரியான தகவல்களை வெளியிட தயங்குவார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

தனித்துவமான அடையாளம் காணல்

மனிதர்களில் தனித்துவமான அடையாளம் காணும் முறைகளாக பின்வரும் முறைகளை FBI, Interpol போன்ற பிரபல்யமான புலனாய்வு நிறுவனங்கள் கருதுகின்றன

  1. கைரேகை மூலம் அடையாளம் காணும் முறை
  2. பற்களின் தனித்துவமான அமைப்பு மூலம் முறை
  3. DNA மூலம் அடையாளம் காணும் முறை

இவற்றில் DNA மூலம் அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்தது. மேலும் இங்கு  காணாமல் போனோரின் உறவுகள் இறந்தமையாலும் மற்றும் வெளிநாடு சென்றமையாலும் உரிய DNA மாதிரிகளை பெறுவதும் கடினமே. ஓட்டு மொத்தத்தில் கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகளுக்கு பொதுவான மற்றும் தனித்துவமான அடையாளம்காணலை மேற்கொள்வது என்பது கடினமானதே.

மனித புதைகுழிகள் ஆராயப்படவேண்டுமா?

தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒருசில தோண்ட படுகின்றன. யுத்தம் நிலவிய பிரதேசங்களில் இவ்வாறு புதைகுழிகள் கண்டுபிடிக்க படுகின்றமை உலக வழமையே.  பெரும்பாலான மக்களிற்கு இவை ஏன் தோண்டப்படவேண்டும்? இவை தொடர்பாக ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும்? யார் யார் இவற்றில் ஈடுபடுகின்றனர்? இவ்ஆராய்ச்சியினால் என்ன பிரயோசனம் போன்ற விடயங்கள் தெளிவாக தெரிவதில்லை. அவற்றினை சிறிதளவாவது தெளிவுபடுத்தும் நோக்குடன் இது எழுதப்படுகின்றது. இங்கு மனித புதைகுழி என்பது பொதுவாக போர்  அல்லது  இயற்கை அனர்தங்களினால் இறந்த பல மனிதர்களின் உடல்கள் புதைக்கபட்டுள்ள இடமாகும். நடந்த சம்பங்கள் தொடர்பாக இணையதத்தளங்கள் மற்றும் முகநூல் பதிவுகளில் வந்ததினை  இங்கு நினைவு கூறலாம்

  1. போர் உக்கிரமாக நடந்த போர்முனையில் ஒருசில மனித எலும்பு கூடுகள் மீட்க படுகின்றன. அவை எவ்விதமான அடையாளம் காணலும் இன்றி அதேயிடத்தில் வைத்து எரித்து அழிக்கபடுகின்றன (இணையதத்தள செய்தி).
  2. வடமாகாணத்தின் ஒரு பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தின் கட்டுமான வேலை நடைபெற்ற பொது ஒருசில மனித எலும்பு கூடுகள் அத்திவாரம் தோண்டப்பட்ட பொழுது வெளிவந்தன.  மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தம்காரணமாக அவை அப்படியே போடப்பட்டு அதன் மேல் கலாச்சார மண்டபம் எழுப்பபட்டுள்ளது. இவ்வாறே மன்னாரிலும் தேவாலயம் ஒன்றின் புனரமைப்பின் பொழுதும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பொழுதும் பொறுப்பான குருவானவர் அதனை மூடிமறைத்து தேவாலய கட்டுமான பணியினை முன்னெடுத்து முடித்துள்ளார் (இணையதத்தள செய்தி)
  3. அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் தீவகத்தில் பல கிணறுகளில் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்(இணையதத்தள செய்தி).
  4. ஒரு அரசியல்வாதி தனது முகநூல் பதிவில் மனித புதைகுழிகளினை ஆராய்வதன் மூலம் நாம் “இனப்படுகொலை” யினை நிரூபிக்க முடியாது என்ற தொனிப்பட கருத்து தெரிவித்து இருந்தார்.
  5. ஒரு ஆசிரியர் தனது முகநூல் பதிவில் மனித புதைகுழிகளினை தோண்டுவதால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனவும் அது இறந்த மனிதர்களை மேலும் அவமரியாதைக்கு உட்படுத்தும் செயல் என விபரித்து இருந்தார்.

உண்மையில் புதைகுழிகள் தோண்டி ஆராய வேண்டுமா என்று யாரவது கேட்டால், நிச்சயமான பதில் “ஆம்” என்பதே ஆகும். புதைகுழிகள் யாரால் உண்டாகியவை , எக்காலப்பகுதியில் உண்டாகியவை, பாதிக்கப்பட்ட நபர்கள் யார் போன்ற அரசியல் இலாபம் தரும் விடயங்களை கருத்தில் கொள்ளாது மனித புதைகுழிகள் யாவும் பின்வரும் காரணங்களுக்காக விரிவாக ஆராயப்படவேண்டியவை.

  1. இறந்த மனிதர்களை மரியாதை செய்வதற்காக, அவர்கள் மிருகங்களிலும் கேவலமாகவே கொல்லப்பட்டு எவ்விதமான சமய சடங்குகளும் இன்றி புதைக்கப்படார்கள். அவர்களின் உறவினர்களுக்கு இறந்த தமது உறவினர்களை தமது சமய மற்றும் கலாச்சார முறைப்படி உரிய மரியாதை செய்வதற்கு சகல உரிமைகளும் உண்டு.
  2. இன்று அணுஅணுவாக வேதனைகளை அனுபவித்த வண்ணம் தமது உறவுகளை கண்டு பிடித்து தரும்படி வேண்டுகோள் விடுக்கும் காணாமல் ஆக்கப்படோரின் உறவினர்களுக்கு  இவ்வாறன நிலையில் எவ்விதமான விசாரணைகளும்  இன்றி மரண சான்றிதழ் அல்லது காணாமல் ஆக்க பட்டோர் சான்றிதழ் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை அல்ல. எனவே இவ்வாறன நிலையில்  புதைகுழி ஆராய்ச்சி அவசியம்.
  3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தம் உறவுகள் ஏன் இறந்தார்கள்? எவ்வாறு இறந்தார்கள்? அவர்கள் செய்த குற்றம் என்ன? … போன்றவற்றினை அறிவதற்கு முழு உரிமையும் உண்டு.
  4. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தம் உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது இறந்து விட்டனரா? என்பதை அறிவதற்கு முழு உரிமையும் உண்டு
  5. மனித புதைகுழிகள் மற்றும் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மனித எச்சங்கள் மீடகப்படும் பொழுது அவர்கள் ஏன் இறந்தார்கள் (Cause of dead) என்பதினை போல் அவர்கள் யார் (Identification) என்பதுவும் மிக முக்கியமானது.
  6. இறப்பு சான்றிதழினை பெற, இதன்மூலமே இறந்தவரின் வங்கி கணக்கினை மூடி மீதமுள்ள பணத்தினை பெறலாம் மேலும் காப்புறுதி , மாதாந்த வேதனம் என்பவற்றினை பெறலாம்.
  7. இறப்பு சான்றிதழினை பெற்ற பின்னரே பரம்பரை சொத்துக்களை உறவினர்களுக்குக்கிடையே பிரித்து கொள்ளலாம்.
  8. இவற்றினை தாண்டிய மிக முக்கியமான விடயம்தான் இப்படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் ஆகும். 

கார்பன் டேட்டிங் என்றால் என்ன?

கார்பன் டேட்டிங் (கதிரியக்கக் கார்பன்  காலக்கணிப்பு/ ரேடியோ கார்போன் டேட்டிங்/ Radio Carbon Dating) என்றால் என்ன?

How-Does-Carbon-Dating-Work

சாதாரணமாக மனித புதைகுழிகளில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்படும் பொழுது அம்மனிதர்கள் எக்காலத்தில் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டார்கள் என்பதினை கண்டறிய நாடாத்த படும் ஒரு பரிசோதனையே கார்பன் டேட்டிங் ஆகும். சாதாரணமாக உலகத்தில் உள்ள ஒவ்வொரு முலகத்திர்ற்கும் சமதானி உண்டு அவ்வாறே கார்பன் மூலகத்திர்ற்கும் 14/6C என்றகதிரியக்கமுடைய (Radioactive) சமதானி உண்டு. இச்சமதானியே டேட்டிங் இல் பயன்படுவதால் இச்செயறபாடு ரேடியோ கார்பன் டேட்டிங் (கதிரியக்கக் கார்பன்  காலக்கணிப்பு)  என்றழைக்கப்படும்.

கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு நுட்பம், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி என்பவராலும் அவரது உடன்பணியாளர்களினாலும் 1949 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மாற்றீடு செய்யப்படக்கூடிய கார்பன் -14 (14C) இன் சீரான கதிரியக்கச் செறிவு (steady state radioactivity concentration), ஒரு கிராம் கரிமத்தில், ஒரு நிமிடத்துக்கு 14 அழிவுகளாக இருக்கும் எனக் கணிப்பிட்டார். 1960 ஆம் ஆண்டில், கரிமம்-14 (14C) காலக் கணிப்பு முறைக்காக லிப்பிக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

 கார்பனுக்கு நிலையான, கதிரியக்கமற்ற இரண்டு சமதானி உண்டு (கார்பன் -12 (12C), கார்பன் -13 (13C)). அத்துடன் புவியில் மிகக் குறைந்த அளவிலான கதிரியக்கம் உள்ள கார்பன் -14 (14C) னும் காணப்படுகின்றது. கதிரியக்கம் காரணமாகப் படிப்படியாக அழிகின்ற கார்பன் -14 இன் அரைவாழ்வுக் காலம்  (அதாவது ஒரு மூலகம் கதிரியக்கம் காரணமாக அம்மூலகம்  ஆனது இயற்கையான கதிரியக்கம் காரணமாக அழிவடைந்து அரைவாசியாக மாற எடுக்கும் காலம் ஆகும்)  5730 ஆண்டுகளாகும். அண்டக் கதிர்கள், வளிமண்டலத்தில் உள்ள நைதரசன் மீது தாக்கிப் புதிதாகக் கார்பன் -14 அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நிகழாவிட்டால், கார்பன் -14 எப்பொழுதோ முற்றாக அழிந்துபோயிருக்கும்.

கார்பனுக்கு 14C என்கிற ஒரு கதிரியக்கமுடைய சமதானி  உள்ளது. வளியிலுள்ள நைதரசனுடன் நியூத்திரன் வினைப்பட்டு கார்பன் -14 ஐத் தோற்றுவிக்கிறது.

இந்த தாக்கம் பின்வருமாறு குறிக்கப்படும்:

radiocarbon

இந்த தாக்கதிற்கு தேவையான நியூட்ரான்கள், அண்டக் கதிர்கள் வளிமண்டலத்தையடையும் போது வளிமூலக்கூறுகளில்  தாக்கம் பட்டு பெறப்படுகிறது. இந்த கதிரியக்கமுடைய கார்பன் 14 உயிர்ப்புள்ள மரம், செடிகொடிகளால் ஏற்றுக்கொள்ளபடுகிறது. இது CO2 நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் குறைந்த அளவே இருக்கும் கார்பன் 14 இன் அளவு நாள்கள் செல்லச் செல்ல கூடுகிறது. கதிரியக்கம் காரணமாக இது குறைவு படவும் செய்கிறது. ஒரு நிலையில் கார்பன் 14 இன் அளவு நிலையானதாக, கதிரியக்கச் சமநிலையினை அடைகிறது. ஆனால் இந்த மரம் வெட்டப்பட்டோ அல்லது உயிர் இழந்த நிலையில் கார்பன் 14 லின் அளவு, கதிரியக்கம் காரணமாக குறைந்து கொண்டே இருக்கும். கார்பன் 14 இன் அரை வாழ்நாள் 5600 ஆண்டுகளாகும். அரை வாழ்வு நாள் என்பது 14 கார்பன் ஆனது கதிரியக்கம் காரணமாக தனது தனது ஆரம்ப அளவில் இருந்து சரி அரைவாசி அளவாக மாறுவதற்கு எடுக்கும் காலப்பகுதி ஆகும்

இதனைப் பயன்படுத்தி பழைய மரத்தின் துண்டிலிருந்து அல்லது மனித எலும்பின் பழமையினைக் கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

பயன்படும் நுட்பங்கள்

கார்பன் 14 உள்ளடக்கம் அளவிட பயன்படும் மூன்று முக்கிய நுட்பங்கள் உள்ளன-

  1. Gas proportional counting
  2. Liquid scintillation counting,
  3. Accelerator mass spectrometry.(AMS)

இவற்றில் AMS ஒரு நவீன ரேடியோ கார்பன் டேட்டிங் முறையாகும், இது ரேடியோ கார்பன் உள்ளடங்கிய ஒரு மாதிரியை அளவிடுவதற்கு மிகவும் திறமையான வழி என்று கருதப்படுகிறது.

ரேடியோ கார்பன் டேட்டிற்கான சிறந்த முறையைத் தேர்ந்தெடுப்பது கிடைக்கக்கூடிய மாதிரி அளவைப் பொறுத்தது அல்லது விலையுயர்ந்த பொருட்களின் விஷயத்தில், எவ்வளவு அழிக்கப்பட முடியும் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, AMS, முறையில் மாதிரி பொருளின் ஒரு பகுதி எரிந்து அழியும்.

அணுகுண்டு கார்பன் விளைவு (Bomb carbon effect) என்றால் என்ன?

கார்பன் டேட்டிங் முறையில்     வளிமண்டலத்தில் கார்பன் 14  உலகளாவிய அளவு காலப்போக்கில் மாறவில்லை என்பதே ஒரு அனுமானமாகும். 1950 கள் மற்றும் 1960 களில் அணுசக்தி சோதனை காரணமாக  1965 ஆம் ஆண்டின் மொத்த அளவிலான வளிமண்டல கார்பன் 14 உள்ளடக்கத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டது. 1963 மற்றும் 1965 ஆண்டுகளுக்கு இடையில் குவாண்டம் கார்பன் அளவு 100% அதிகமாக இருந்தது. வடக்கு அரைக்கோளம் 1963 இலும், தெற்கு அரைக்கோளம் 1965 இலும் 14 கார்பன் உச்சநிலையை அடைந்தது. இந்த நிகழ்வு பொதுவாக குண்டு விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.

இப்போதெல்லாம் விஞ்ஞானிகள் காலவரையறையை தங்கள் ரேடியோ கார்பன் ஆண்டு முடிவுகளை காலண்டர் ஆண்டாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் கார்பன் 14 உலகளாவிய அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்து கொள்கின்றார்கள், இதில் ஒன்று அணு ஆயுத சோதனை ஆகும். இதன் மூலம் மனித எலும்பு மாதிரி பொருள் புதைக்கப்பட்ட காலப்பகுதியினை மிக தெளிவாக மற்றும் குறிப்பாக (more accuracy) அறிந்து கொள்ளலாம்.

புதைகுழி மர்மத்தின் முடிச்சு அவிழ வேண்டுமெனில் முதலில் அறியப்பட வேண்டியது இவ் என்புகள் எப்போது புதைக்க பட்டவை என்பதாகும். அதற்கு உள்ள ஒரே முறை  ரேடியோ கார்போன் டேட்டிங் முறையாகும் இது செய்யப்படாமல் ஊகங்கள் அடிப்படையில் கதைப்பது ஆரோக்கியமானது இல்லை.

அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயும்..

 இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள்
• இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
• இன்றுவரைக்கும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
• வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• ஏறத்தாழ 8000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர்.
• இந்நோயானது வடமத்திய மாகாணம், ஊவாமாகாணம், வடமேல் மாகாணம், கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி, வவுனியா மாவட்டத்தின் தென்பகுதி மற்றும் அம்பாந்தோட்டை என்பவற்றை பாதித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் என்றால் என்ன?
அளவுக்கு அதிகமான உரப்பாவனை, பீடை கொல்லிப்பாவனை நடைபெறும் பிரதேசங்களில் உள்ள மக்கள் அங்குள்ள நீர்நிலைகளை தமது அன்றாட தேவைகளிற்காக பயன்படுத்தும் போது, நீண்ட காலப் போக்கில் அவர்களது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சிறிது சிறிதாக நிறுத்திக் கொள்ளல் ஆகும்.
வழமையாக இந்நோயானது உயர் குருதி அழுத்தம், சலரோகம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களையே அதிகம் தாக்கும். ஆனால் விவசாயிகளில் காணப்படும் இந்நோயானது அவர்களிற்கு வேறு எந்த நோய்களும் இல்லாத பட்சத்திலேயே ஏற்படுகின்றது. (chronic kidney diseases of multi-factorial origin) or (chronic kidney disease of unknown etiology -CKDu.) இந்நோயானது ஏற்படுவதற்க அச்சூழலில் காணப்படுமு; பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்க செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும்.

இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து கூடியவர்கள்

• இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள்.
•விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள்
• சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள்.
• குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள்
• கடினத்தன்மையான (Hardness of the water) நீரினை அருந்தும் மக்கள்.
• கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள்.
• இந்நோயானது 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.
• பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும்.
• இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள்.

விவசாயிகளுக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

1. ஆசனிக்கு, கட்டியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல்
மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன.
அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம்
குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்டியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆ) உணவுச்சங்கிலி மூலம்
நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும்.

2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல்
சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (Neonicotinoids) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும்.
குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும்.
உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது.

3. களை கொல்லிகள் ((Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால்
புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது.

முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது.

4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water)
உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது.

மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன.
• கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை
• உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை
• அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen)   போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை.

ஏன் வடமாகாண மக்களாகிய நாம் இந்நோயினையிட்டு  கவலைப்பட வேண்டும்?

1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது.

2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள்.

3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் கடந்த 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும்.

4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழகை;கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும்.

5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீருக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம்.

6. கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen)  போன்ற (NSAIDs) வலி நிவாரணிகளை  வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும்.
7. போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் வடமாகாணம் ஆனது விவசாயத்தில் தன்னிறைவ பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் மரக்கறிவகைகள், பழவகைகள் வெளி மாகாணங்களில் இருந்து கொண்டு வரப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது தக்காளி, கோவா, உருளைக் கிழங்கு முதலான மரக்கறிகள் பிரதானமாக தம்புள்ள சந்தையில் இருந்தே கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. தம்புள்ள என்பது வடமத்திய மாகாணத்தில் உள்ள பிரபல்யமான மரக்கறி கொள்வனவு செய்யப்படும் இடம் ஆகும். இங்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள் பொரும்பாலும் அம்மாகணத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இம் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படடுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும்.

உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் :

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன.
1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல்.
2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல்.
3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்கு பதிலாக இயற்கயான முறைகள் மூலம் அல்லது உயி ரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல்.
4) விவசாயிகளுக்கு போதிய அறிவூட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினி களை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல்.
குறிப்பாக வடமாகாண சபையின் விவசாய அமைச்சு மற்றும் சுகாதார அமைச்ச என்பவை இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். உள்ளுரில் இயற்கையான பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைக் மற்றும் பழவகைகளின் விற்பனையை ஊக்குவித்தல்.

 

உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணாதே…

அன்று விடுமுறை தினம் என்பதால் வைத்தியசாலை செல்லவில்லை. அன்று மாலை தொடக்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர், வைத்தியசாலை போலீசார் மற்றும் ஏனைய வைத்தியர்கள் பலதடவை எனக்கு தொலைபேசியில் அழைத்து சொன்ன விடயம் “சேர், குடும்பம் ஒன்றின் உணவில் நஞ்சு சேர்க்கப்பட்டுள்ளது, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்” இது சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று. நான் உடனேயே தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர் மற்றும் தாதியர் ஆகியோரினை தொடர்பு கொண்டு அவர்களின் வாந்தி, சிறுநீர் மற்றும் இரத்தம் எனபவற்றினை உரிய முறையில் சேகரிக்க அறிவுறுத்தினேன். அடுத்த நாள் காலையில் வீட்டின் தலைவியிடம் இது சம்பத்தமாக விசாரித்த பொழுது தெரியவந்ததாவது

அவள் மிதி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் தான் வேலை செய்கிறாள். அவள் ஓர் முன்னாள் போராளி என்பதாலும் ஆயுதங்கள் பற்றிய அறிவு போதுமாக இருந்ததும் அவள் இந்த வேலைக்கு இலகுவாக தெரிவுசெய்யப்பட்டாள். அது பங்குனி மாதம் என்பதால் அதிக வெயில். அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்து காலை மற்றும் மதிய உணவுகளை தயார் செய்து வைத்துவிட்டு 5.30 மணிக்கு வேலைக்கு செல்லவேண்டும். இறுதி யுத்தத்தில் கணவன் காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து அவள் தான் குடும்ப சுமையினை சுமந்து வருபவள். முதல் இரு பிள்ளைகளும் பெண் பிள்ளைகள். கடைக்குட்டி 4 வயதுடைய ஆண் பிள்ளை. அவன் மீது அதிக பாசம் அவளுக்கு ஏன்னெனில் அவன் உரிச்சு வைச்சு அவனின் கணவன் அச்சுதான். அன்று அவள் வரும்பொழுது வயதானவர் ஒருவர் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். இவள் எது நல்ல காய் என்று தேடிய பொழுது அவர் ஓர் வெடித்த காயினை எடுத்து கொடுத்து இது முத்திய காய் அதனால் தான் வெடித்து உள்ளது என சிபாரிசு செய்தார். இவளும் அவரிடம் சிறிய வெள்ளரிக்காயினை வாங்கி வந்து பிள்ளைகள் எல்லோருக்கும் ஊட்டிவிட்டாள். மாலையாகியதும் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே வயிற்றோடமும் சத்தியும் ஆரம்பித்தன. அவர்கள் மிக களைத்த நிலையில் அயலவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டார்கள். அவள் கடைக்குட்டிக்கு அதிகளவு ஊட்டியதால் அவன் மிகவும் சோர்வடைந்து இருந்தான்.

அவனது சிறுநீரகம் தற்காலிகமாக செயலிழந்து (Acute Kidney Injury) இருந்தது. குழந்தை வைத்திய நிபுணர் மிக அக்கறையாக சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். நான் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து போலீசாரின் உதவியுடன் அவர்களின் வீடிற்கு சென்றேன். அது ஒரு ஓலையால் வேயப்பட்ட சிறிய வீடு.   அவளின் வீட்டின் சமையலறை சிறிய ஒரு குடில் மட்டுமே. அதனுள் நாய் மற்றும் பூனை என்பன போகாதவாறு தகரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி இலகுவாக உள்ளே செல்வதற்கு பல ஓட்டைகள் இருந்தன. வேறு மனிதர்கள் கூட இலகுவாக உள்நுழையலாம்.

இதன் காரணமாகத்தான் அவள் உணவில் நச்சு கலக்கப்பட்டதாக போலீசில் தெரிவித்து இருந்தாள் என நினைத்தேன். மேலும் அவளின் குடிசையில் இருந்த மீதமிருந்த சமைத்த உணவு பொருட்களின் மீதியினை சேகரித்து இருந்தேன்.

இறுதியாக இவ்வாறு சேகரித்த எல்லாவற்றினையும் உரிய முறையில் சீல் செய்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தேன். ஓரிரு நடிகைள் அவர்களின் அறிக்கையும் வந்தது அதில் அவர்கள் வெள்ளரிக்காயில் கார்போபியூரான் என்ற கொடிய பூச்சி கொல்லி (Carbofuran is one of the most toxic carbamate pesticides) இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

போலீசாரும் வழமையினை விட தீவிரமாக விசாரித்ததன் பலனாக இறுதியில் உரிய விவசாயினை கண்டறிய முடிந்தது. அவன் தான் பழங்களை பிடுங்குவதற்கு முதல் நாள் குறித்த வகையான பூச்சிக்கொல்லி மருந்து விசிறியதினை ஓப்புக்கொண்டார். அவர் மேலும் கூறினார் தான் வெள்ளரிக்காய் வெடித்து இருந்ததினை கவனிக்கவில்லை என்று. இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளினால் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் பாவிக்கபடுவதினால் உணவு நஞ்சாதல் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோவா, லீக்ஸ் போன்ற மரக்கறி வகைகள் இலகுவாக நஞ்சடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றது. எனவே அவற்றினை நுகரும் பொழுது அவதானமாக இருக்க வேண்டும்.

 

கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 7500லிட்டர் தூய எதனோல் அதிரடிப்படையினரால் கலப்படம் செய்யப்பட இருந்த நிலையில் கைப்பெற்ற பட்டது. கடந்த இரு வருடங்களாக திக்கம் வடிசாலையில் உற்பத்தியாகும் பனம் சாராயத்துடன் இவ்வாறு கலப்படம் நடைபெற்றுள்ளதா? என்பதை சந்தேகிக்க இச்சம்பவம் வைத்துள்ளது. சாதாரணமாக பனம் சாராயம் ஆனது கள்ளில் இருந்தே பலபடி முறைகளுக்கூடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. வருடத்தின் குறித்த சில மாதங்களில் கள்ளு உற்பத்தி குறைவாக இருப்பதன் காரணமாக பனம் சாராயம் உற்பத்தி குறைவடையும். இதனால் வாடிக்கையாளரின் நுகர்வுத்தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறான கலப்படம் நடைபெற வாய்ப்புள்ளது. இது  தவிர சாதாரண செயன் முறையின் படி பனம் சாராயத்தினை உற்பத்தி செய்ய அதிகளவு பணம் செலவாகும் (உற்பத்தி செலவு ). ஆனால் செயற்கை முறையில் தூய எதனோலுக்கு நீர் மற்றும் உரிய நிறமூட்டிகள் மற்றும் வாசனை பொருட்களை சேர்த்து உருவாகும் பொழுது  உற்பத்தி செலவு மிக குறைவாகும். இதனால் பெருமளவு இலாபம் கிடைக்கும். உதாரணமாக பனம் சாராயத்தில் எதனொலின் செறிவு 30% எனில் தூய ஒரு லிட்டர் எதனோலில் இருந்து ஏறத்தாழ 33 லிட்டர் பனம் சாராயத்தினை தயாரிக்க முடியும்.  இதனால் பெருமளவு இலாபம் கிடைக்கும்.

 

தூய எதனோல் பின்வரும் வகைகளில் கிடைக்க பெறுகின்றது

  1. 200 Proof Alcohol: Contains 100% Ethanol
  2. 190 Proof Alcohol: Contains 95% Ethanol.
  3. 160 Proof Alcohol: Contains 80% Ethanol.
  4. 140 Proof Alcohol: Contains 70% Ethanol

இவற்றில் நச்சு பொருட்களான மெத்தனால் (கசிப்பு ), அசட்டோன் (acetone ) போன்றன அதிக அளவில் காணப்படும்

இவ்வாறு சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தினை அருந்துவதினால் ஏற்படும் தீங்கான சுகாதார விளைவுகளை நோக்குவோம். சாதாரணமாக அதிக போதையினை உண்டாக்கும் முகமாக இங்கு அதிக செறிவில் (லேபிலில் குறிப்பிட்ட செறிவினை விட ) எதனோல் ஆனது இருக்கும். இதனால் அதிகளவில் வீதி விபத்துகள், அகால மரணங்கள் உண்டாகும். மேலும் சாதாரண மதுபாணத்தினை பாவிப்பவர்களினை விட இவ்வகையான மதுபானத்தினை பாவிப்பவர்கள் குறுகிய காலத்தினுள் ஈரல் அழற்சி போன்ற நீண்ட காலமாக மதுபானம் அருந்துபவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு உள்ளாவர்.

இவற்றுக்கு மேலதிகமாக  இவ்வகையான மதுபானத்தினை பாவிப்பவர்கள் இலகுவில் எதனோல் நஞ்சாதல் (ACUTE ETHANOL TOXICITY) என்ற நோய் நிலைக்கு உட்பட்டு திடீர் என்று மரணமடைவார். சாதாரணமாக இரத்தத்தில் 300mg /dl என்ற அளவினை எதனோல் தாண்டும் பொழுது திடீர் என்று மரணமடைவார்.  இன்றைய காலகட்டதில் நுகர்வோரின் தேவையினை ஈடுசெய்யும் முகமாக பல மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் செயற்கையாக எதனோலினை பயன்படுத்தியே மதுபானத்தினை உற்பத்தி செய்கின்றனர் பெரும்பாலும் இவர்கள் சிறந்த நியம அளவினை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறைவாக இருக்கும். மாறாக எவ்வித நியம அளவும் இல்லாமல் கைக்கணக்கில் கலப்படம் செய்தால் ஏற்படும் தீங்கான விளைவுகளும் அதிக அளவில் இருக்கும்.

போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

அன்று காலை எனது அலுவலக அறையினுள் வெலிக்கடை சிறை காவலர்கள் இருவர் 50 வயது மதிக்கதக்க ஒருவரை கைத்தாங்கலாக தூக்கி வந்து எனக்கு முன்னாள் நிறுத்தினார்கள். என்ன பிரச்சனை என்று விசாரித்த பொழுது அவர்கள் சொன்னார்கள் “இவன் மரணதண்டனை கைதி, இவனுக்கு மெடிக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது”. நான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவனிடம் கேட்டேன் யார் அடித்தார்கள்? என்று அவன் சொன்னான் ஒருவரும் அடிக்கவில்லை. நான்  பயப்படவேண்டாம் என்று சொல்லி மீண்டும் கேட்டேன், யார் அடித்தார்கள்? என்று, அவன் சொன்னான் சேர் ஒருத்தரும் அடிக்கவில்லை. என்னால் நடக்க முடியாது. தயவு செய்து கிட்ட வந்து ஒருக்கா பாருங்கள் என்றான். அவனும் நின்றபடியே தனது சாரத்தினை மெதுவாக அவிழ்த்து காட்டினான். ஒருகணம் நான் திகைத்து விட்டேன். அவனுக்கு இரண்டு பக்கமும் ஹேர்னியா வந்து அவனது விதைப்பை தேங்காய் அளவு வீங்கி இருந்தது. அவன் தொடர்ந்து நடந்ததால் அது தேய்ப்பட்டு புண்ணாகி சீழ் பிடித்து மணத்தது. நான் கேட்டேன் உந்த ஹேர்னியா எவ்வளவு காலமாக இருக்கின்றது என்று? அவன் கூறினான் 6 வருடமாக. மேலும் அவரிடம் தொடந்து வினவிய பொழுது அவர் கூறினார் தான் முன்பு மெனிங்க் மீன் மார்க்கெட்டில் நாளாந்த கூலிக்கு மீன் வெட்டியதாகவும் வழமையாக வேலை முடிந்து வரும் பொழுது அவ் மார்க்கெட்டில் முதலாளியாக இருக்கும் ஒருவரின் முச்சக்கரவண்டியில் வந்து தனது வீட்டிக்கு அருகாமையில் இறங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் சிகரெட் பாவிப்பதினை தவிர வேறு வகையான போதைப்பொருள் மற்றும் மதுபானம் ஒன்றுமே பாவிப்பதில்லை என்றார். அவ்வாறே ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்பு மாலை முச்சக்கரவண்டியில் வரும்பொழுது போலீசார் தமது வாகனத்தினை நிறுத்தி சோதனையிட்ட பொழுது போதைப்பொருள் இருந்ததாக தன்னையும் அம்முதலாளியினையும் கைதுசெய்ததாகவும் கூறினார். தொடந்து அவர் கூறுகையில் கைதினை தொடர்ந்து அம்முதலாளியினால் பலலட்சங்கள் போலீசாருக்கு கொடுக்க பட்டத்தினை தொடர்ந்து அப்போதைபொருளினை கொண்டுவந்ததாக தன்மேல் குற்றம் சுமத்தப்பட்டு, முதலாளியினாலும் போலீசாராலும்  தனக்கு எதிராக சாட்சி வழங்க பட்டதினை தொடர்ந்து தான் சிறையில் உள்ளதாக தெரிவித்தார்.இவ்வாறு கைதுசெய்யபடும் பெரும்பாலான குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் யாவரும் தம்மிடம் பிழை எதுவும் இல்லை என்றே கடைசிவரை சொல்வார்கள் என்பது வேறுவிடயம்.

அண்மையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதை பொருள் ஓழிப்பு வாரத்தினை அறிவித்து இலங்கை ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் பொழுது போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு  மரணதண்டனை வழங்கும் தனது முடிவில் மாற்றம் இல்லை தெரிவித்தார். எமது நாட்டில் போலீசாரின் நடுநிலைமையான செயற்பாடு யாவரும் அறிந்ததே. இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும்.    மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பொலிஸாரினால் மனித உரிமை மீறல்கள் நிகழ சாத்திய கூறுகள் உண்டு. இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம்  ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர்.

வினையாகிய விளையாட்டு..

அன்றும் மதியம் வரை அலுவலக வேலைகள் அமைதியாக நடைபெற்றன. மதியம் இரண்டு மணியளவில் எனது மேல் அதிகாரி என்னிடம் ஓர் குழந்தையின் இறப்பு சம்பந்தமாக உடற்கூராய்வு நடாத்தும் படி உத்தரவு ஒன்றினை பிறப்பித்து சென்றார். நானும் முதல் கட்டமாக குழந்தையின் பெற்றோர் என்று கூறப்படும் பெண் மற்றும் ஆண் ஆகியோரிடம் என்ன நடந்தது? என்று வினவினேன். அவள் சொன்னாள் தான் வீட்டின் கீழ் பகுதியில் வேலை செய்ததாகவும் கணவன் மேல் தட்டில் குழந்தையுடன் தங்கி இருந்த வேளை குழந்தை அழுத பொழுது கணவன் குழந்தையினை உலுக்கி தாலாட்டியதாகவும் அதன் பின்னர் குழந்தை சோர்வடைந்து காணப்பட்ட வேளை குழந்தையை அடுத்த நாள் காலையில் சிறுவர் வைத்தியசாலயில் அனுமதித்த பொழுது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர் கூறியதாக கூறினார். மிகுந்த கனத்த மனதுடன் உடற்கூராய்வு இணை மேற்கொண்ட பொழுது குழந்தையில் வெளிக்காயம் ஒன்றும் காணப்படவில்லை. அது ஒரு நான்கு மாத வயதுள்ள ஆண் குழந்தை. உடல்நிறையும் பிரச்சனை இல்லை. குழந்தையின் மூளையினை சூழ வுள்ள சவ்வுகளுக்கு இடையில் (sub dural haematoma) பாரிய அளவில் இரத்த கசிவு காணப் பட்டது. இது சம்பதமாக போலீஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை நடத்திய போது அப்பெண் விபச்சாரம் செய்பவள் என்றும் அவள் கீழ் பகுதியில் வேலை செய்யும் போது கணவன் எனப்படுபவன் குழந்தையை தூக்கி தூக்கி எறிந்து விளையாடி சத்தம் போடாமல் பார்த்ததாகவும் கூறினார். மேலும் கணவன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக இருப்பவர் என்றும் கூறினார். இவ்வாறு பலமாக உலுக்கியதால் குழந்தை பாதிக்கப் படும் நிலை shaken baby syndrome என்று அழைக்கப் படுகின்றது. இது குழந்தையின் மூளையினை சூழவுள்ள சவ்வுகளுக்கு இடையில் (sub dural space) உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால் (படத்தினை பார்வை இடவும்) அதனூடாக செல்லும் சிறிய இரத்த குழாய்கள் பலமாக குழந்தையின் தலை ஆட்டுபடும் பொழுது கிழிபடுவதனால் மிகவும் ஆபத்தான இரத்த கசிவு மூளையில் ஏற்படும். குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பலமான முறையில் உலுக்குதல், குலுக் குதல், தூக்கி எறிந்து விளையாடல் போன்றவை அதிகம் தவிர்க்க வேண்டும்.


குறிப்பு – மருத்துவ உலகில் பல்வேறு வகையான மருத்துவர்களிடம் shaken baby syndrome இக்கான காரணங்களில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் எனது தொழில் முறை வாழ்கையில் இவ்வாறான பலமான முறையில் உலுக்குதல், குலுக்குதல், தூக்கி எறிந்து விளையாடல் போன்றவை மேற்குறிப்பிட்ட நிலையினை தோற்றுவிக்கும் என நான் கருதுகிறேன்.

உயிர் கொடுத்த சிற்பியினையே கொல்ல நினைத்த சிலை

Gillian Genser என்ற கனேடிய பெண்மணி உயிரோட்டமான சிற்பங்களை செய்வதில் பிரபல்யமானவர். சாதாரணமாக சிற்பிகள் கருங்கல், மண், சீமெந்து போன்றவற்றில் சிற்பங்கள் செய்யும் பொழுது இப்பெண்மணி இறந்த விலங்குகளின் மண்டை ஓடுகள், இதர எலும்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களான சிப்பி, சங்கு போன்றவற்றின் ஓடுகள் என்பவற்றினை பயன்படுத்துவார். மேலும் இவர் செய்யும் சிற்பங்களில் உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் இயற்கையாக உள்ளது போலவே செய்யப்பட்டிருத்தல் மேலதிக சிறப்பு அம்சமாகும்.

இவர் கடந்த 15 வருடங்களாக உலகின் முதலாவது மனிதன் என நம்பப்படும் “ஆதாம்” (ADAM) இன் சிற்பத்தினை செதுக்குவதில்  ஈடுபட்டுருந்தார். முக்கியமாக இவர் கடலில் இருந்து எடுக்கப்படும் ஒருவகையான சிப்பியின் கோதுகளை இச்சிற்பம் செய்ய பெருமளவு பாவித்தார். வழமையாக இங்கு சிப்பியின் கோதுகள் மினுமினுப்பு தன்மையினை அடைவதற்காக பலதடவைகள் உரிய உபகரணங்கள் முக்கியமாக சிறிய மின்சாரவாள் கொன்டு அழகுகூடப்படும்.  இச்சிற்பம் இறுதி கட்டத்தினை அடையும் நிலையில் Gillian Genser தீடிரென்று நோய்வாய்பட்டார். அவர் தலையிடி, தசைப்பிடிப்பு, மூட்டு நோ, உடல் பலவீனம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றினால் அவதியுற்ற நிலையில் சாதாரண வைத்தியர்களினால் அவரின் நோயநிலையினை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக விசேட மருத்துவ நிபுணர்கள் அவரினை பரிசோதித்த பொழுது அவர் பார உலோகங்களின் நச்சுத்தன்மையினால் அவதியுறுவதாக கண்டுபிடித்தார்கள். மேலும் அவர்கள் ஏன் இவர்  பார உலோகங்களின் நச்சுத்தன்மையினால் அவதியுற காரணம் என்ன என்று ஆராய்ந்த பொழுது அதிச்சிகரமான விடயம் தெரியவந்தது யாதெனில் அவர் அதிகம் பயன்படுத்திய சிப்பியின் கோதுகளில் பார உலோகங்கள் அதிகளவில் இருந்தமையும் அவை அரியப்படும் பொழுது உண்டாகும்  நுண் துகள்கள் மூச்சு காற்று மூலம் அவரின் உடலை அடைந்தமையும் ஆகும் (Heavy metal toxicity). உலகில் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளில் உள்ள பார உலோகங்களான ஈயம், செப்பு, அச்சாணிக்கு, பாதரசம் போன்றன     ஆறுகள் மூலம் அல்லது நேரடியாகவோ கடலில் கலக்கப்படுகின்றன. இவை இறுதியாக உணவுச் சங்கிலி மூலம் சிப்பி, குறித்த சிலவகை மீன்கள் என்வற்றில் செரிவாக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட சம்பவம் நாட்பட்ட நஞ்சாதல் சம்பவத்திற்கு (Chronic or slow poisoning) ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்

உயிரிழப்புக்கு காரணமான ENO

அது தலைநகரின் மிக பிரபலமான ஆடை விற்பனை நிலையம் முதல் மூன்று மாடிகளும் விற்பனைநிலையங்களாக செயற்பட்ட  நிலையில், நான்காவது மாடி அதன் ஊழியர்கள் தங்குவதற்கு பயன்பட்டது. அதில் தான் 42 வயதான அவன் கடந்த 6 வருடங்களாக வசித்து வந்தான். பகல் முழுவதும் வேலை. இரவில் சமையல் படுக்கை. கிழமையில் இரண்டு அல்லது மூன்று தரமாவது அவனும் அவனது நண்பர்களும் பியர் அருந்துவார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மலையகத்தில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துவர செல்வான். கடந்த மூன்று மாதங்களாகவே அவனுக்கு ஒரே நெஞ்சு எரிவு மற்றும் களைப்பு. முக்கியமாக புடவைகளை எடுத்துக்கொண்டு மாடி படி ஏறிஇறங்கும் பொழுது மூச்சு வாங்குவான். இவனது இந்நிலையினை கண்ட முதலாளி கீழ் தளத்திலேயே  வேலை செய்ய சொன்னார் . அக்கடையில் வேலை பார்க்கும் இன்னோரு வயதுவந்தவர் அவனுக்கு அல்சர் (காஸ்ட்ரிக்) இருப்பதாக கூறி இனோ மற்றும் கவிஸ்கொன் போன்றவற்றினை பாவிக்குமாறு அனுபவமிக்க வைத்தியர் போன்று பரிந்துரைத்தார். அவரது சொல்லினை தெய்வ வாக்காக நம்பிய அவனும் அவற்றினை பாவிக்க தொடங்கினான். அன்று தான்  அவனது வாழ்வின் கடைசி நாள், அதிகாலை நான்கு மணிக்கே கடுமையான நெஞ்செரிவு கஷ்ட்டப்பட்டு பாயில் இருந்து எழும்பி இரண்டு இனோ பக்கற்றுகளினை கரைத்து குடித்து விட்டு, தான் வேலைக்கு தாமதமாக வருவேன் என்று கூறிவிட்டு  படுத்தவன் தான் எழும்பவே இல்லை. இறுதியில் அவனது உடலிற்கு உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொண்டபொழுது அவனது இருதயத்திற்கு குருதி வழங்கும் மூன்று நாடிகளும் 75 வீதத்திற்கு  மேற்பட்ட வகையில் கொலஸ்ரோல் இனால் அடைபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்றைய  காலகட்டதில் தமிழ் பேசும் மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் இந்திய தொலைக்காட்சி சேனல்களின் ஆட்சிதான். அவற்றில் பெரும்பாலும் கவிஸ்கொன் மற்றும் இனோ போன்ற இரைப்பை அல்சர் நோயிற்கான மருந்து விளம்பரங்கள் அடிக்கடி வந்துபோகும். மருத்துவ அறிவு அற்ற மக்கள் அவ்விளம்பரங்களை நம்பி வயதுவேறுபாடு இன்றி தமக்கு நெஞ்சு நோ அல்லது நெஞ்சு எரிவு போன்றன வரும் பொழுது இவற்றினை நம்பி வாங்கி பாவிக்கின்றனர். முக்கியமாக இவ்வகையான மருந்துகள் உரிய வைத்தியரின் சிபாரிசு எதுவும் இன்றி சாதாரண பார்மசிகளில் இருந்து சூப்பர் மார்க்கெட் வரை கிடைக்கும். உண்மையில் இவற்றிற்கு வைத்தியரின் சிபாரிசு எதுவும் இல்லை என்பது வேறுவிடயம் (Over-the-counter (OTC) drugs are medicines sold directly to a consumer without a prescription from a healthcare professional). நெஞ்சு நோ மற்றும் நெஞ்சு எரிவு என்பன கட்டாயம் அல்சர் நோயின் அறிகுறியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இக்குணம்குறிகள் மிகவும் பாரதூரமான மாரடைப்பின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். மாரடைப்பு நோயாளிகளின் குறிப்பிட்ட  வீதத்தினர் இவ்வாறு அல்சர் போன்றன நோயிற்கான குணம்குறிகளுடன் தோற்றம் அளிப்பர் (Atypical presentation of myocardial infraction). சாதாரணமாக 35 அல்லது 40 வயதிற்கு மேற்பட்ட நபர் ஒருவருக்கு நெஞ்சு நோ அல்லது அது போன்ற குணங்குறிகள் தென்பட்டால் கட்டாயம் ஈசிஜி (ECG) பரிசோதனை செய்து அவருக்கு நெஞ்சு நோவிற்கான காரணம் மாரடைப்பு இல்லை என்பதினை உறுதிப்படுத்திய பின்னரே இனோ மற்றும் அல்சர் நோயிற்கான மற்றைய மருந்துகள் பாவிக்க வேண்டும். மறுதலையாக 40 அல்லது 35 வயதிற்கு உட்பட்டவர் கூட மாரடைப்பினால் இறந்த சம்பவங்கள் உண்டு. எனவே எவ்வயதினராயினும் தகுந்த வைத்தியரின் ஆலோசனையின் பின்னரே மேற்கூறிய மருந்துகளை பாவிப்பது சாலச்சிறந்தது.