கட்டப்பஞ்சாயத்து

இந்தியாவின் கிராமங்கள் தோறும் நடைமுறையில் இருக்கும் கட்டப்பஞ்சாயத்து முறைமை யாவரும் அறிந்ததே . இதில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் பெரும்பாலான தீர்ப்புக்கள் நகைப்புக்குரியதாகவும் இலகுவாக சவாலுக்கு உட்படுத்த கூடியதாகவும் உள்ளது. எனினும் கிராம மக்களின் சிறுசிறு பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் இடமாக கட்டப்பஞ்சாயத்து முறைமை இருப்பதினால் பெருமளவிலான மக்கள் அதன் மூலம் பயன் பெறுவதோடு அந்த முறைமை நீடித்து நிற்கின்றது.
இலங்கையில் அரசமைப்பு ரீதியாக இவ்வாறான ஓர் முறைமை இல்லை. பொதுவாக சமூகத்தில் அதிக அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது வேறு நபர்கள் தனிப்பட்டவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதினை “கட்டப்பஞ்சாயத்து” தீர்ப்பு என கூறுவர்.
இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறான ஓர் புதிய கலாச்சாரம் உருவெடுத்து வருகின்றது. முக்கியமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிலும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் நடைபெறும் பொழுது அதனை நடைமுறையில் இருக்கும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் அதற்கு வெளியிலேயே தீர்வு காணும் நடவடிக்கைகள் நடைபெறுவத்தினை அவதானிக்க கூடியதாக உள்ளது.
யார் தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்? குறிப்பாக பாடசாலை அதிபர்கள், போலீசார், கிராமசேவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மத தலைவர்கள்போன்றோரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய நோக்கமே இவ்வாறான சம்பவத்தினை வெளி உலகத்திற்கும் நீதிமன்றிற்கும் தெரியாமல் மறைப்பது தான். இவர்கள் குற்றம் புரிந்த தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு ஆகியோரிடம் கலந்துரையாடி ஒருசில பயமுறுத்தல்களுடன் குற்றம் புரிந்த தரப்பிற்கு சார்பான தீர்ப்பொன்றினை திணிப்பர். இதன் பொழுது பாதிக்கப்பட்டவருக்கு பணம், ஆடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடமைப்பு உதவிகள் போன்றன வழங்கப்படும்.
இவ்வாறான கட்டப்பஞ்சாயத்து முறையினால் சமூக ரீதியில் பல தாக்கங்கள் ஏற்படும், அவற்றில் ஒரு சில

  1. குறிப்பாக பாதிக்கப்பட நபர்களிற்கு உரிய நியாயமான தீர்வு கிடைக்காது மேலும் அதுகுறித்து அவர்கள் முறையிடாது இருக்க பயமுறுத்தப்படுவர்.
  2. குறித்த துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இதன் காரணமாக பாதிப்பட்ட நபர் வன்முறையான முறையில் தீர்வினை காண விளையலாம் அல்லது இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.
  3. மேற்படி மாவட்டங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் அவர்களிடத்து கடுமையான கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும்.
  4. பாலியல் குற்றம் புரிந்தவர் சுதந்திரமாகவும் பாதிப்பட்ட நபர் அடங்கி வாழவும் நேரிடும் இதன் காரணமாக இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெறும்.
  5. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற மறுப்பதினால் அவர் தொடர்ச்சியான உடல் மற்றும் உள தாக்கங்களுக்கு உட்படுவர்.
கட்டப்பஞ்சாயத்து - Home | Facebook

மக்களும் இவ்வாறான முறைமைகளை நாட பல்வேறு காரணிகள் எதுவாக அமைந்து விடுகின்றன. அவற்றில் ஒருசில வருமாறு

1.பல்வேறு காரணங்களினால் இலங்கையின் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனம்.

2. நீதிமன்றில் தீர்ப்புக்கள் வழங்க பலவருடங்கள் காலதாமதம் ஆகின்றமை.

3. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு சமூகத்தில் கிடைக்கும் அவமரியாதைகள் மற்றும் அசௌகரியங்கள்.

4. உரிய நீதியினை பெற அதிக செலவீனங்கள் ஏற்படுகின்றமை

எனவே நாம் இவ்வாறான பல தீமைகளை ஏற்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதினை ஊக்குவிக்க கூடாது.

முற்றும்

பெற்றால்தான் பிள்ளையா?

பெண் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர், நடுத்தர வயதுடைய ஓர் பெண்மணி அவரின் இரட்டை பிள்ளைகளுடனும் மற்றைய அவரின் இரு பிள்ளைகளுடனும் சகிதம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஏன் அவர்கள் வந்தார்கள் என்று விசாரித்த பொழுது தான் விடயம் தெரிய வந்தது. அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் DNA பரிசோதனைக்காக இரத்தத்தினை வழங்கும் பொருட்டு வந்திருந்தனர். பெண்மணியின் கணவர் போதைக்கு அடிமையானவர் அத்துடன் தனது மனைவியின் நடத்தை மீது ஒருசில வருடங்களாகசந்தேகம் கொண்டு நாளாந்தம் சண்டை இடுபவர். இறுதியில் கொடுமை தாங்காத மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றினை நாட, அங்கு கணவன் தரப்பு விவாதத்தினை கேட்ட நீதிமன்றம் DNA பரிசோதனை செய்யுமாறு கட்டளையிட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே அவர்கள் வந்திருந்தனர.
வந்ததில் இருந்து அந்த பெண் அழுத்தவண்ணமே இருந்தாள். அவளிடம் வைத்தியர் தகவல்களை பெறுவது என்பது மிகக் கடினமானதாகவே இருந்தது. இவ்வாறான உணர்ச்சிமயமான சூழ்நிலைகளில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மிக ஆதரவோடும் பரிவோடும் கதைத்து தகவல்களை பெற்றுவிடுவார்கள், அவர்களை இந்த விடயத்தில் கில்லாடிகள் என்றே சொல்லவேண்டும். இங்கும் இவ்வாறே ஓர் பெண் ஊழியர் தகவல்களை பெற்றார்.

dna testக்கான பட முடிவுகள்


மேலும் அந்த பெண்மணி வைத்தியரிடம் ஓர் வேண்டுகை விடுத்தார். அது யாதெனில் இரட்டை குழந்தைகளில் ஒருவரான ஆண் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதே, அதனை தொடர்ந்து அவர் கூறிய தகவல் ஆச்சரியம் தருவதாய் இருந்தது. அந்த பெண் 2008 ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தில் திருமணம் செய்தார். 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் குறித்த பெண்ணின் கணவர் மட்டும் இராணுவ கட்டுப்பாட்டிற்கு செல்ல அவள் மட்டும் தனியே தங்கி விட்டாள். யுத்தத்தின் காரணமாக அவள் எவ்விதமான தாய் சேய் கிளினிக்குக்கோ வேறு பரிசோதனைகளுக்கோ செல்லவில்லை, இவ்வாறக இருந்த அவள் 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுது தான் அந்த சம்பவம் நடைபெற்றது. அவள் தங்கியிருந்த கட்டிலின் அருகே இருந்த காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை காயங்களினால் மோசமடையத்தொடங்கியது அதனை தொடர்ந்து வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை பிரசவித்தனர், தூரதிஷ்டாவசமாக அந்த குழந்தையின் தாயார் மரணித்து விடுகின்றார். அதனைத் தொடர்ந்து சில நாட்களில் இந்த பெண்மணிக்கும் குழந்தை பிறக்கின்றது. அந்த இரு குழந்தைகளையும் தனது குழந்தைகளாக பதிவு செய்து வளர்த்து வருகின்றாள். இந்த விடயம் கணவனுக்கு கூட தெரியவில்லை மேலும் யுத்தத்தின் காரணமாக உறவினர் ஒருவரும் வைத்திய சாலையில் தங்கியிருக்கவில்லை அதன் காரணமாக இந்த சம்பவம் பற்றி அவளைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியவில்லை. இவ்விடயம் காரணமாகவே அவள் பயமும் கவலையும் கொண்டிருந்தாள். இறுதியாக போலீஸ் உத்தியோகத்தரின் அறிக்கையின் படி கடைசி பிள்ளையின் பிறப்பு சம்பந்தமாகவே கணவர் கணவர் சந்தேகம் கொண்டிருந்தார் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அக்குறித்த பிள்ளையின் இரத்த மாதிரியினை பெற்று அதற்கு மட்டும் DNA பரிசோதனை செய்வது என தீர்மானிக்கப்பட்டு அதன் பிரகாரம் இரத்த மாதிரிகள் குறித்த போலீசாரிடம் DNA பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. குறித்த பெண்மணி தனது எல்லா பிள்ளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றபயம் காரணமாகவும் வைத்தியரிடம் உண்மை கூறவேண்டும் என்பதாலுமே இவ்விடயத்தினை கூறவேண்டி வந்திருக்கலாம். DNA பரிசோதனைகள் பல குடும்பங்களை பிரித்தும் சில குடும்பங்களை சேர்த்தும் வைத்துள்ளன.

முற்றும்

ஆயுததாரி மாட்டியது எவ்வாறு?

அந்த கிராமம் முல்லை மாவட்டத்தின் காடுகளை அண்டிய படியே அமைந்திருக்கும் ஓர் கிராமம். வழமையாக போலீசார் யாருமே பிரச்சனை என்று கிராமத்தினுள் வருவதில்லை. அன்று இரவு 8 மணியிருக்கும் அந்த குடும்பத்தலைவர் வயலில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை, வீதியிலே இனம் தெரியாத ஆயுத தாரியின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி அந்த இடத்திலேயே  மரணம் அடைந்தார். அடுத்தநாள் அந்த கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பு. மக்கள் யார் தான் இந்த கொடூர செயலை செய்தார்கள் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். தடயவியல் போலீசார், சட்ட வைத்திய நிபுணர், மாஜிஸ்திரேட் ஆகியோர் இது சம்பந்தமான விசாரணைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

புலன் விசாரணையில் இறந்தவர் ஓர் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியினால் சுடப்பட்டே இறந்தமை தெரியவந்தது. மேலும் நடந்த புலனாய்வில் துப்பாக்கியின் குண்டு தயாரிப்பின் பொழுது சக்கையாக (wad) பயன்படுத்தப்பட்ட பேப்பர் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அது கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டு 8 இற்குரிய தமிழ் புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட ஓர் கடதாசியினால் செய்யப்பட்ட சக்கை ஆகும். அதன் பின்னர் போலீசார் மிக இலகுவாக ஆயுத தாரியினை அடையாளம் கண்டனர். அவர் வேறுயாரும் அல்ல ஒரு சில தினங்களுக்கு முன்னர் இறந்தவருடன் கள்ளு தவறணையில் முரண்பட்ட இறந்தவரின் நண்பரே ஆவார் .

JaypeeDigital | eBook Reader

நாட்டுத்துப்பாக்கி மற்றும் Smooth Bore Weapon (SBW)/ Shot Gun போன்றவற்றில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவையில் இவ்வாறான சக்கைகள் பயன்பயனாடுத்தப்படுகின்றன. நாட்டுத்துப்பாக்கியில் பலரும் இதனை கடதாசி, காட்போட் போன்றவற்றினை பயன்படுத்தி தயாரிப்பர். Shot Gun போன்றவற்றில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட சக்கை பயன்படுத்தப்படும். சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் இந்த சக்கைகள் கூட அடையாளம் காணத்தக்க விதத்தில் காயங்களினை ஏற்படுத்தும்.

Cards & wads for black powder cartridges - Track of the Wolf

Plastic Forever: Shoot Your Wad

மேலே உள்ள படங்களில் வெவேறு வித்தியாசமான வடிவங்களில் உள்ள கடதாசியினால் மற்றும் பிளாஷ்டிக்கினால் செய்யப்பட்ட சக்கைகளை காணலாம்
முற்றும்

திருமணம் ஆகாமலே….

அண்மையில் ஓர் பெண் திருமணம் ஆகியிராத நிலையில் பிரசவித்த சிசு ஆனது பேர்த்தியினால் கொல்லப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டமை பலரும் அறிந்தமையே. இவ்வாறான சம்பவங்களை நாம் முற்று முழுதாக எம்மால் தடுத்து விடமுடியாது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு பல்வேறுபட்ட காரணிகள் ஏதுவாயுள்ளன. அவற்றில் சில

1. தொடர்ச்சியான வறுமை நிலைமை

2. கருத்தடை சாதனங்கள் பற்றிய அறிவின்மை

3. இளவயது திருமணமும் விவாகரத்துக்களும்

4. கணவன் வெளிநாட்டில் உள்ளமை

5. பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய அறிவின்மை 

6. திருமணம் ஆகாமல் கருத்தரித்தல் 

இவ்வாறான காரணங்களில் முக்கியமானது  “பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய அறிவின்மை” என்பதாகும். இங்கு பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் என்பது இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தல், சட்ட ஆலோசனைகள் வழங்கல், தேவை ஏற்படின் DNA பரிசோதனை செய்தல், உளவள ஆலோசனைகள் வழங்கல்   போன்றன அடங்கும்.

சில சந்தர்ப்பங்களில் குறித்த  பெண் ஆனவள் இவ்வாறு தனக்கு பிறக்கும்  குழந்தையினை தத்து கொடுக்க விரும்பினால் அதற்கான வசதியினை ஏற்படுத்தி கொடுத்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்காலிக வதிவிடம் வழங்கல், உடை மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கல், பிள்ளை பேற்றிற்கான வசதிகள் வழங்கல், பிறக்கும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் வழங்கல், சட்ட ரீதியாக தத்து கொடுக்க உதவிசெய்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான தொழில் பயிற்சிகள், வாழ்வாதார உதவிகள்  போன்றன உள்ளடங்கும்.

மேற்குறித்த சேவைகள் யாவும்  அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் கூட இச்சேவைகளை பெறக்கூடியதாக உள்ளது. இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் கிடைக்கும் இச்சேவைகள் பற்றி பலருக்கும் தெரியாது என்பதே ஆகும். அத்துடன் இங்குள்ள விசேடம் என்னவெனில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்பதே அத்துடன் இவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு வெளியார் யாரும் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு பல்வேறுபட்ட தொழில் வல்லுநர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் புனர்வாழ்விற்கு உரிய ஆலோசனைகளும் உதவிகளும் வழங்குவர்.

மேலும் சில மதரீதியான நிறுவனங்களும் இவ்வாறான சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது பிரதேச செயலகத்தினை அணுகுவதன் மூலம் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் … போன்றோர் மூலமாக) அல்லது சட்ட வைத்திய அதிகாரிகளை அணுகுவதன் மூலம் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

கூட்டு பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் புனர்வாழ்வு தொடர்ப்பாக அரச அதிகாரிகளுடனும் குறித்த பெண்ணுடனும் இவ்வாறான ஓர் சேவை வழங்கும் நிலையத்தில் கலந்துரையாடல் (Multi-disciplinary case conference) நடைபெறுவதினை மேற்குறித்த படத்தில் காணலாம்.

முற்றும்

மரணித்தோருக்கு மரியாதை


இது அவளுக்கு இரண்டாவது கர்ப்பம். பல வருட இடைவெளியின் பின்னர் உருவாகிய பிள்ளை என்பதினால் அவள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் பிரசத்திற்காக காத்திருந்தாள். எதிர்பாராத விதமாக அவளது குழந்தை பிரசத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே கருப்பையினுள் இறந்து விடுகின்றது. இச்சம்பவம் அவளுக்கும் அவளின் கணவருக்கும் பேரிடியாக அமைந்து விடுகின்றது. பலத்த சிரமத்தின் மத்தியில் இறந்த குழந்தை பிறப்பிக்க படுகின்றது அதன் பின்னர் பிரசவ வேதனையிலும் அவள் வைத்திய சாலை ஊழியரிடம் இறந்த தனது குழந்தையினை காட்டிடுமாறு கேட்கின்றாள். அப்பொழுது ஊழியர் தனது ஓர் கையினால் ஓர் கடதாசி பெட்டியில் ஓர் இறந்த குழந்தையினை இலையான் மொய்த்த வண்ணம் உள்ளபோது காண்பித்தார். இறந்த விலங்குகளின் குட்டி மாதிரி தனது பிள்ளையினை அம்மணமாக காட்டியது அவளின் மனஅழுத்தத்தினை மேலும் அதிகமாகியது, என்னவென்றாலும் பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையல்லவா. அவள் ஊழியரிடம் கூறினாள் குழந்தைக்கு வாங்கிய உடுப்புகள் உள்ளன அவற்றினை உடலிற்கு அணிவித்து விடுமாறு மன்றாடினாள் . இது இறுதியில் வாய்த்தர்க்கத்தில்தான் முடிந்தது. அவளின் மனநிலை காரணமாக குழந்தையின் உடலினை உறவினர்களினால் வீட்டிற்கு கொண்டுபோக முடியவில்லை. ஒரு சில வாரங்களின் பின்னர் அவளின் விருப்பத்தினை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் நிவர்த்தி செய்தனர். அதன் பின்னரே அவளினால் அந்த இழப்பில் இருந்து விரைவாக மீண்டெழ முடிந்தது.


ஓர் நபர் தனது வாழ்நாளில் எமக்கு நண்பனாக இருந்திருக்கலாம் அல்லது பரம எதிரியாக இருந்திருக்கலாம் ஆனால் குறித்த நபர் மரணம் அடைந்த பின்னர் அவரின் உடலுக்கு அல்லது அவரிற்கு மரியாதை செலுத்துவது என்பது வளர்ச்சியடைந்த நாகரீகம் ஒன்றின் பண்பாகும். இறந்த ஒருவருக்கு மரியாதை அல்லது கணம் செலுத்துதல் என்பது பல்வேறு விடயங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில வருமாறு

  1. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் இறுதி விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் இன , மத மற்றும் மொழி பண்பாடுகளுக்கு அமைய அடக்கம் செய்தல்.
  2. இறந்தவர்களின் நினைவாக நினைவிடங்கள் போன்றன அமைத்தலும் அவர்களினை நினைவு கூரலும்.
    இவற்றினை பொதுவாக சகல மதங்களும் பண்டைக்காலம் தொட்டு போதித்து வருகின்றன. உதாரணமாக துட்டகைமுனு மன்னன் தனது எதிரியான எல்லாள மன்னனை போரில் வென்ற பின்னர் அவனுக்கு சமாதி அமைத்த பின்னர் அச்சமாதி அமைந்துள்ள வீதி வழியாக செல்லும் சகலரையும் அதற்கு மரியாதை செய்யுமாறு பணித்தான். ஆனால் இன்று துட்டகைமுனுவின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்பவர்கள் இவற்றினை கடைப்பிடிப்பதில்லை. அத்துடன் பெரும்பாலான வைத்தியசாலை ஊழியர்களும் கடைப்பிடிப்பதில்லை என்பது கவலை தரும் விடயமாகும்
    முற்றும்

கொரோனா – உயிரிழப்பு எண்ணிக்கை உண்மையானதா?

வேகமாக பரவி வரும் கோரோனோவின் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையும் குறுகிய காலப்பகுதியில் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் பல செய்திகளில் இவ்வாறு இறக்கும் நோயாளர்கள் மாரடைப்பு, சலரோகம் , இருதய வருத்தம் போன்ற நாடப்பட்ட நோய்களை பல வருடங்களாக கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் அவ்வாறான நோய் நிலைமை காரணமாகவே இறந்தார்கள் எனவும் கொரோனா (கோவிட் 19) நோய்த்தொற்றால் அல்ல எனவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் நோயாளர் ஏன் மரணம் அடைந்தனர் என்பது பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் மரணம் அடையும் பொழுது அவரின் மரணத்திற்கான காரணம் (cause of death) உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சுவிற்கு அமைந்த வகையில் சிகிச்சை அளித்த மருத்துவரினால் அல்லது உடற் கூராய்வு பரிசோதனை செய்த மருத்துவரினால் வெளியிடப்படும். அதன் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

Improving the accuracy of death certification [CMAJ - May 19, 1998]

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் 1a என்பது உடனடியான மரணத்திற்கான காரணம் (immediate cause of death) 1b மற்றும் 1c என்பன உடனடியான மரணத்திற்கான காரணத்தினை ஏற்படுத்திய காரணிகள் (Antecedent causes) ஆகும். பகுதி 11 (part 11) என்பது மரணத்திற்கு பங்களிப்பு செய்த காரணிகளை குறிப்பதாகும்.
இனி விடயத்திற்கு வருவோம் PCR ரிப்போர்ட் பொசிட்டிவாக வரும் நோயாளி ஒருவர் பின்வரும் சந்தர்ப்பங்களில் இறக்கலாம்

  1. கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் (இங்கு நோயாளிக்கு வேறு எதுவிதமான நோய்களும் இல்லை ). இலங்கையில் இதுவரை இறந்த கொரோனா நோயாளிகளின் தரவுகளின் படி இவ்வாறு இறப்பவர்களின் மிக எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  2. வேறு நாட்பட்ட நோய்களின் தாக்கத்தினால் அதாவது கொரோனா நோயாளி ஒருவருக்கு இருதய வருத்தம், நீரிழிவு … போன்ற நோய்கள் காணப்படுமாயின் அவை கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் அல்லது அளிக்கப்படும் சிகிச்சையின் காரணமாக மோசமடையலாம். இதுவரை வெளியாகிய தகவல்களின் பிரகாரம் இவ்வாறு நாட்பட்ட நோயாளிகள் அதிகளவில் இறப்பதாக தெரிய வந்துள்ளது.
    இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது இவ்வாறு ஒரு நாட்பட்ட நோய்களுடன் உள்ள ஓர் கொரோனா தொற்றாளர் இறக்கும் பொழுது சிகிச்சை அளித்த வைத்தியரே குறித்த நோயாளி கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் இறந்தாரா? அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நாட்பட்ட நோய்கள் மோசமடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பதை தீர்மானிப்பார். இதன்பொழுது அவர் நோயாளியில் காணப்பட்ட நோயின் அறிகுறிகள், உடற் பரிசோதனை முடிவுகள், ஆய்வுகூட அறிக்கைகள் போன்றவற்றினை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார். இதனையே பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கொரோனா நோயாளி மாரடைப்பினால் இறந்தார் என்று செய்தி வெளியிடுகின்றன.
    இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயியல் உடற் கூராய்வு (Pathological postmortem examination) பரிசோதனை இத்தகைய தீர்மானத்திற்கு மிக இலகுவில் உதவும். இந்த நிலையில் இவ்வகையான மரணங்கள் எதனால் ஏற்பட்டது என தீர்மானிப்பது ஓர் விஞ்ஞான ரீதியான செயற்பாட்டினை கொண்டிருக்காது. மேலும் இவ்வாறு மரணம் ஏற்பட்ட காரணத்தினை மாற்றி அமைக்க முடியும். சில உலக நாடுகள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களை இவ்வாறு மாற்றி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே உள்ள படத்தில் இருந்து கொரானாவினால் நாடப்பட்ட நோய்களை உடையவர்கள் எவ்வாறு தீவிரமான முறையில் தாக்கத்திற்கு உட்பட்டார்கள் என்பதினை அறிந்துகொள்ளலாம்
  1. PCR பொசிட்டிவாக உள்ள நோயாளி ஒருவர் தற்கொலை செய்து அல்லது விபத்தின் பொழுது அல்லது மனிதர்களின் தாக்குதலின் பொழுது இறப்பாராயின், அவ்வகையான மரணங்கள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களாக கொள்ளப்பட மாட்டாது.
  2. இலங்கையில் ருக்கும் முதியவர் ஒருவர் தனது வசிப்பிடத்தில் இயற்கையான முறையில் (natural)மரணத்தினை தழுவினால் பெரும்பாலும் அவரது உடல் எதுவிதமான மரண விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் ஏதும் இன்றி அடக்கம் செய்யப்படலாம். இந்நிலையில் அவர் கோவிட் 19 தொற்றினால் மரணத்தினை தழுவினாரா என்பது குறித்து தீர்மானிக்க முடியாது. இலங்கையில் கடந்த சில தினங்களில் இவ்வாறு வசிப்பிடங்களில் மரணத்தினை தழுவிய ஒருசில முதியவர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலமே, அவர்கள் ஏன் இறந்தனர் என்பதினை அதாவது அவர்கள் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்திற்கு உட்பட்டு இறந்தனர் என்பதினை கண்டு பிடிக்க முடிந்தது.
  3. மேலும் இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை மூலம் கோவிட் 19 வைரசுவின் தொற்றுக்கு உள்ளவர்களை வினைத்திறனான முறையில் அடையாளம் காண முடியாது. இப்பரிசோதனை மூலம் மூன்றில் இரண்டு பங்கு நோயாளரினை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாக இருந்தாலும் அதாவது நோயாளிக்கு கோவிட் 19 வைரசுவின் தாக்கம் இல்லை என்றாலும் அவர்களின் உடல்கள் தனிமைப்படுத்தற் சட்டத்தின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான காரணங்களினால் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை மிக சரியான முறையில் கணிப்பிட முடியாது உள்ளது என்பதே உண்மை ஆகும். முற்றும்

மோட்டார் சைக்கிளோட்டி தீயில் கருகியது ஏன்?

அண்மையில் முள்ளியவளைப் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் தீயில் முற்றாக கருகி மரணம் அடைந்தது பலரும் அறிந்ததே. இச்சம்பவத்தில் 21 வயதான ஒருவரே பரிதாபகரமான முறையில் பலியானவர் ஆவார் .

மேலே உள்ள படங்களில் பெற்றோல் எவ்வாறு பரவி தீப்பிடித்தது என்பதனையும் பெற்றோல் தாங்கியின் மூடி பல மீற்றர் தூரத்தில் காணப்படுவதினையும் காணலாம்.

அவர் விபத்துக்குள்ளான சீன தயாரிப்பான மோட்டார் சைக்கிளினை ஒருசில மணித்தியாலங்களுக்கு முன்னரே இன்னொரு நபரிடம் இருந்து கொள்வனவு செய்த நிலையிலேயே விபத்து ஏற்பட்டது. இனி விடயத்திற்கு வருவோம், எவ்வாறு மோட்டார் சைக்கிளில் தீ பற்றியது? இளைஞன் மோட்டார் சைக்கிளினை செலுத்திய பொழுது முன்னே சென்ற உழவு இயந்திரத்தின் பெட்டியில் மோதி வீதியில் கீழே சரிந்து வீழ்ந்தான். அந்த மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தாங்கியின் மூடி இறுக்க மூடாதபடி பழுதடைந்திருந்தது, இது தவிர தாங்கியில் கணிசமான அளவு பெற்றோல் இருப்பில் இருந்தது (அண்ணளவாக 4L தொடக்கம் 5L ). இதன் காரணமாக சரிந்து வீழ்ந்த இளைஞன் மீதும் வீதியிலும் பெற்றோல் சிந்தியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த புளக் இற்கும் பாதுகாப்பு கவசம் போடப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக ஒருசில செக்கன்களில் தீயின் நாக்குகள் அவனை சூழ்ந்து கொண்ட நிலையில் அவனால் தப்பி ஓட முடியவில்லை. பரிதாபகரமான முறையில் மரணத்தினினை தழுவினான். கீழே உள்ள படங்களில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் அமைந்த plug இணை நாம் காணலாம்

எம்மில் பலருக்கு நாம் செலுத்தும் மோட்டார் சைக்கிள் எப்பொழுது, எவ்வாறான சந்தர்ப்பங்களில் தீப்பற்றும் என்பது பற்றி தெரியாது. அவற்றில் சிலவற்றினை பார்ப்போம்.

  1. மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அல்லது சீற்றின் அடியில் நாம் பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற இலகுவில் தீப்பற்றும் திரவங்களை கொண்டு செல்லும் பொழுது அவை கசிவடைந்தது சூடான என்ஜின் மீது அல்லது சைலன்சரின் மீது விழும் பொழுது.
  2. சிலவகை மோட்டார் சைக்கிளில் காபரேட்டறில் தங்கும் மேலதிக பெற்றோலினை வெளியேற்றும் குழாய் மோட்டார் சைக்கிளின் பிளக் இற்கு மிக அருகாமையில் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளின் அக்ஸிலேட்டரினை அதிகம் முறுக்கி சடுதியாக குறைக்கும் பொழுது தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
  3. அதி வேகமாக செல்லும் பொழுது ஏற்படும் விபத்துகளின் பொழுது சில சந்தர்ப்பங்களில் பெற்றோல் தாங்கியில் இருந்தது இன்ஜினீற்கு பெற்றோலை கொண்டு செல்லும் குழாய் கழன்று விடுவதன் காரணமாக பெற்றோல் இன்ஜின் மீது சிந்தி தீ விபத்து ஏற்படுகின்றது.
  4. பாதுகாப்பு கவசம் அற்ற புளக் உள்ள மோட்டார் சைக்கிளினை நிறுத்தாது பெற்றோல் தாங்கியில் பெற்றோல் நிரப்பும் சந்தர்ப்பங்களில்.
  5. அரிதாக மோட்டார் சைக்கிளில் ஏற்படும் மின் ஒழுக்கின் காரணமாகவும் தீ விபத்து ஏற்படலாம்
    முற்றும்

யானையா? கரடியா?

அண்மைக்காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காட்டு விலங்குகளின் தாக்குதலினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு காட்டு விலங்கு ஒன்றின் தாக்குதலினால் இறந்த ஒருவரின் உடலமானது மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்கள் அவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகியே மரணித்ததாக செய்திகளை வெளியிட்டன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களை அடிப்டையாகக் கொண்டு அவர் யானையின் தாக்குதலினாலேயே இறந்ததாக முடிவெடுக்கப்பட்டது.
இப்பொழுது என்னதான் பிரச்சனை? யானையோ அல்லது கரடியோ தாக்கி ஒருவர் உயிர் இழந்துவிட்டார், இனி அதனை கதைத்து அல்லது ஆராய்ந்து என்னதான் பிரயோசனம் ? இவ்வாறு ஆராய்ந்து எந்த விலங்கின் தாக்குதலினால் இறந்தார் என கண்டறிந்தால் மட்டுமே நாம் மேலும் இவ்வாறான விலங்குகளின் தாக்குதல்களினை தடுக்க முடியும். ஒவ்வோர் விலங்குகளின் தாக்குதல்களையும் தடுப்பதற்கான வழிமுறைகள் தனித்துவமானவை. இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறு ஒருவர் காட்டு விலங்கின் தாக்குதலினால் இறப்பார் எனில் அவரது மரணம் சம்பந்தமாக மரண விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு உடற் கூராய்வு பரிசோதனையும் மேற்கொள்ளபட வேண்டும்.

Animals attack human | Scary animals, Animal attack, Funny elephant


பொதுவாக யானை ஆனது பொதுவாக மனிதனை தனது தும்பிக்கையினால் தூக்கி எறியும் அல்லது தூக்கி அடிக்கும் அதன் பின்னர் காயம் அடைந்திருக்கும் மனிதனை கால்களினால் தூக்கி மிதிக்கும், இதன் காரணமாக இறந்த மனிதனில் ஏற்படும் காயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட விலா எலும்புகளில் ஏற்படும் முறிவு (multiple rib fracture) கை மற்றும் கால்கள் போன்ற (long bone fracture) அவயவங்களில் ஏற்படும் எலும்பு முறிவு, முள்ளந்தண்டில் ஏற்படும் (compression/burst fracture) எலும்பு முறிவு மற்றும் உடல் உள் அங்கங்களில் ஏற்படும் மிக மோசமான சிதைவுகள் (including acceleration and deceleration injuries) போன்றன மூலம் ஓர் திறமையான சட்ட வைத்திய வைத்திய அதிகாரி இனம் கண்டுகொள்ளவர்.

UPDATE: Russian man 'in bear attack' was actually Kazakhstani suffering  from severe psoriasis | Daily Mail Online

கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மேற்குறித்த வகையான காயங்கள் காணப்படாது. இறுதியாக இவ்வாறான உடற்கூராய்வு பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தி இவ்வாறு விலங்குகளினால் ஏற்படும் உயிர் இழப்புக்களினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்றும்

மலசலகூடத்தில் தீ!!!

நாம் அன்றாடம் பாவிக்கும் மலசக்கூடத்தினை பல்வேறுபட்ட சுத்தம் செய்யும் திரவங்கள் (toilet cleaner ) மற்றும் தொற்று நீக்கிகள் (Disinfectant) கொண்டு சுத்தம் செய்வோம். எம்மில் பலர் அதில் அடங்கியிருக்கும் இரசாயணப் பதார்த்தங்களின் தீங்கு விளைவிக்கும் தன்மை பற்றி அறிவதில்லை.
எம்மில் பலர் மலசக்கூடத்திற்கு சென்று மறைந்து இருந்து தான் சிகரெட்/ பீடி அல்லது சுருட்டினை புகைப்பார்கள். பலருக்கு இவ்வாறு புகைத்தால் தான் இலகுவாக மலம் கழிக்க முடியும் என்பது வேறுவிடயம். இன்னும் சிலர் பொது மலசல கூடங்களை பாவிக்கும் பொழுது புகைப்பிடிப்பர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த மலசல கூடங்கள் அதிக நாற்றம் அடிக்கின்றமையே என்பதாகும். எது எவ்வாறு எனினும் பலர் புகைப்பிடித்த பின்னர் மீதமுள்ள சிகரெட் துண்டினை மலசல கூடத்தில் வீசியெறிவார்கள் அல்லது அதன் யன்னல் ஓரத்தில் எவ்வித பிரயோசனமும் இன்றி சேமித்து வைப்பார்கள்.
இவ்வாறே மலசல கூடங்களினை சுத்தம் செய்ய பயன்படுத்திய திரவங்கள் அடங்கிய போத்தல்களை மலசலகூடத்தின் உள்ளே ஓர்மூலையில் அல்லது கொமட்டின் நீர்த்தொட்டியின் மேற்புறத்தில் சேகரித்து வைப்பார்கள். அவர் 75 வயது நிரம்பிய முதியவர், அவரும் அவ்வாறே தனது பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய இவ்வாறான போத்தல்களை பாவித்து பாதி, பாவிக்காதது பாதி என்ற வகையில் மலசலகூடத்தின் உள்ளே ஓர்மூலையில் சேகரித்து வைத்திருந்தார். புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய அவர் அன்றும் வழமைபோல் மலசக்கூடத்தில் அமர்ந்து இருந்து புகைப்பிடித்த பின்னர் எஞ்சிய துண்டினை இவ்வாறான போத்தல்கள் இருக்கும் பகுதியில் வீசி எறிந்தார். உடனே பாரிய சத்தத்துடன் வெடிபோசையினை தொடர்ந்து அப்பகுதி பற்றி எரிய ஆரம்பித்தது. அவர் சுதாகரித்து வெளியேறுவதற்கு முதல் தீயின் நாக்குகள் அவரின் உடலினை பதம் பார்த்தன. உடல் 90% மேல் எரிந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவர் ஒருசில மணித்தியாலங்களில் மரணத்தினை தழுவிக்கொண்டார்.
நாம் பொதுவாக மலசல கூடங்களினை சுத்தம் செய்ய பாவிக்கும் திரவங்கள் தீப்பற்றும் தன்மை அற்றவை. ஆனால் சில வகை திரவங்கள் உலோகத்தினால் ஆன போத்தலில் சாதாரண முறையில் அல்லது உயர் அமுக்கத்தில் அடைக்கப்பட்டிருக்கும். இவ்வகையான போத்தல்களில் காலாவதி திகதி கடக்கும் பொழுது அவரின் உட்புறத்தில் இருக்கும் பூச்சு தானாகவே சிதைவடையும் அதன் காரணமாக உள்ளே இருக்கும் திரவம் உலோக போத்தலில் தொடுகையுறும் இதன் பொழுது ஏற்படும் இரசாயன தாக்கத்தின் பொழுது ஐதரசன் வாயு வெளியேறும் அது அப்போத்தலின் உள்ளே அதிக அமுக்கத்திலும் செறிவிலும் இருக்கும் மேலும் வெளிச்சூழலில் குறைந்த செறிவில் இருக்கும். இவ்வாறான நிலையில் நாம் வீசும் எரிகின்ற தீக்குச்சி அல்லது சிகரெட் துண்டு காரணமாக ஐதரசன் வாயு வெடித்தலுடன் பற்றி எரியும்.

wp-15909101002041942161585125582994.jpg

wp-1590910099953527957138435014007.jpg

மேலுள்ள படத்தில் இவ்வாறு தீப்பற்றி எரிந்த இடத்தினை காணலாம். கொமட்டின் நீர்த்தாங்கியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்து எவ்வாறு தீச்சுவாலை வீசியது என்பதினை தெளிவாக நாம் பார்க்கலாம்.
புகைத்தலை கைவிடும்படி சொன்னால் யார்தான் கேட்கப்போகின்றனர் எனவே நாம் இவ்வாறான போத்தல்களினை மலசலகூடத்தின் வெளிப்புறத்தில் சேமித்து வைப்பதன் மூலம் இவ்வாறான விபத்துக்களை தடுக்கலாம்.
முற்றும்

தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம்!!

இணையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் பதிவினை வாசிக்க நேர்ந்தது அதன் சாராம்சம் யாதெனில் தற்கொலை செய்பவர்கள் தாங்கள் தற்கொலை செய்ய முதல் அது சம்பந்தமாக ஓர் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்பதே அதாவது ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய நினைப்பவர்கள், அந்த நஞ்சினை ஓர் முறை அருந்தினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு பட்ட சிகிச்சைகள் வழங்கப்படும். உதாரணமாக வாயின் ஊடக இறப்பர் குழாய் ஒன்றினை உட் செலுத்தி பலவந்தமாக வாந்தி எடுக்க வைப்பார்கள். இவ்வாறு ஒவ்வோர் செயன் முறையின் பொழுதும் மற்றும் நஞ்சின் தாக்கத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். இதன்காரணமாக அவர்கள் எதிர் காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தினை கைவிட்டு விடுவார்கள் என்பதே அப்பதிவின் சாராம்சம்.
பலர் தாங்கள் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டலில் ஈடுபடும் பொழுதுதான் தவறுதலாக இறக்கின்றனர், என்பது பலருக்கு தெரியாத விடயம். சட்ட வைத்திய அதிகாரிகள் தமது கடமையின் பொழுது இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளிடம் உதாரணமாக நஞ்சு அருந்தியவரிடம் அல்லது தீயில் எரிந்து குற்றுயிராக இருப்பவரிடம், மரண வாக்குமூலத்தினை (Death declaration) பதிவார்கள். அப்பொழுது பலரும் சொல்லும் விடயம், சேர் “நான் மனைவியினை/ கணவனை/ பெற்றோரினை பயமுறுத்தவே செய்தென், தயவு செய்து காப்பாற்றி விடுங்கள்” என்பதே ஆகும். ஆனால் அது காலம் கடந்த ஞானமாகவே இருக்கும். மேலும் தற்கொலை செய்பவர்களின் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது தற்கொலை செய்து இறந்தவரின் கணவன்/ மனைவி/ பெற்றோர் கூறுவது யாதெனில் இறந்தவர் பயமுறுத்தவே இவ்வாறு செய்தார் என்பதாகும்.

Inkedviber_image_2020-07-27_20-59-10_LI

மேலுள்ள படத்தில் உள்ள நபர் தனது வெளிநாட்டில் உள்ள காதலியினை பயமுறுத்த தொலைபேசியில் வீடியோ அழைப்பினை எடுத்த வண்ணம் தற்கொலை முயற்சி செய்த பொழுது சுருக்கு கயிறு இறுகி தவறுதலாக இறந்தார். மேலும் நாம் நஞ்சினை அருந்தும் பொழுது சாதாரண மக்களுக்கு குறித்த நச்சின் மனிதனை சாகடிக்கும் அளவு ( Lethal dose) தெரியாது. அதன் காரணமாக அதிகளவு அருந்தலாம் மேலும் சில நச்சுகள் மிக சிறிதளவு அதாவது ஒரு சில மில்லி லிட்டர் அருந்தினாலே மனிதனை சாகடித்து விடும். அத்துடன் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பியவர்கள் பிற்காலத்தில் பல்வேறுபட்ட நோய் நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாம் மற்றவர் மீதுள்ள கோபத்தில் மற்றும் மன வெறுப்பில் இவ்வாறு மற்றவர்களை பயமுறுத்த தற்கொலை முயற்சி செய்வது பல சந்தர்ப்பத்தில் நிஜமாகி விடுவது உண்மையே. எனவே எம்மிடம் தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி அறவே வேண்டாம்.
முற்றும்