கோவிலுக்கு கார்பெட் வீதி நல்லதா ?

தற்பொழுது தேர்தல் காலம் நெருங்குவதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல உறுப்பினர்கள் தமக்கு நிதியினை கொண்டு கோவில்களின் வெளி வீதிக்கு தார் ஊற்றி கார்ப்பெட் வீதியாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் ஏற்படும் சுகாதார சம்பந்தமான பிரச்சனைகளை இப்பதிவு ஆராய்கிறது. முக்கியமான சிலபிரச்சனைகளை இங்கு பார்ப்போம்

  1. இயற்கையில் ஒவ்வொரு சூழல் தொகுதியிலும் காணப்படும் பல்வேறுபட்ட நுண்ணங்கிகளே அங்கு சேரும் கழிவுகளை உக்கி அவற்றினை சூழலில் இருந்து அகற்றுகின்றது. நாம் சாதாரணமாக கோவிலின் வெளிவீதியில் இருக்கும் மணலிலான வீதியினை அகற்றிவிட்டு தார் ஊற்றும் பொழுது மணலில் உள்ள நுண்ணங்கிகள் இல்லாமல் போகும். இதனால் தாரின் மேற்பரப்பில் தங்கும் கழிவுகள் அதிக காலத்தின் பின்னரே உக்கி அழிவடையும். இதன் காரணமாக தாரின் மேற்பரப்பில் நாய் போன்ற மிருகங்களின் மலக்கழிவுகள் கழிவுகள், தாவரங்களின் இலை போன்ற கழிவுகள், மனிதர்களால் போடப்படும் போன்ற கழிவுகள் கழிவுகள் நீண்டகாலமாக தங்கி நிற்கும். இவை வெளி வீதியில் அங்க பிதிஷ்டை செய்யும் அடியவர்களின் உடலினை அடையும் சந்தர்ப்பம் அதிகமாகும். சாதாரணமாக நல்லூரில் வெளிவீதியில் போடப்படும் மணல் வீதியில் இருந்தே நாய் மற்றும் பூனை ஆகியவற்றின் மலத்தில் இருக்கும் ஒட்டுண்ணி புழு ஆனது வெளி வீதியில் அங்க பிரதிஸ்டை செய்த அடியவர்களை தாக்கி நோய் நிலையினை உண்டாக்கிய சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  2. போடப்படும் தார் கறுப்பு நிறத்திலேயே இருக்கும். அதனால் இப்பொழுது என்ன பிரச்சனை? கறுப்பு நிறமானது குறைந்த நேரத்தில் அதிகளவு வெப்பத்தினை உறிஞ்சும் அதேவேளை உறிஞ்சிய வெப்பத்தினை அதிகளவில் காலும் தன்மையுடையது. இந்த பௌதீகவியல் விளக்கம் பௌதீகவியல் படித்த யாவரும் அறிந்ததே. இதனால் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் அதிகளவு வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாவர். மேலும் நீர் அடித்து வீதியினை குளிர்மை படுத்த முயன்றால் மணல் வீதி மாதிரி நீர் தரையினுள் உள்ளிறங்காது, மேற்பரப்பில் தங்கிநிற்கும்பொழுது ஏற்கனவே உள்ள மலக்கழிவுகள் அதில் கரைந்து அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் ஆகியோரில் படிவடையும்.111
  3. திருவிழாக்காலங்களில் மாலை நேரங்களில் சிறுவர்கள் பொதுவாக வெளிவீதியில் ஓடி விளையாடுவார்கள். இவ்வாறு மணல் விளையாடும் பொழுது சிறுவர்கள் பலசந்தர்ப்பங்களில் சறுக்கி விழுந்த சந்தர்ப்பங்கள் உண்டு. மணலில் இவ்வாறு விழும் பொழுது பொதுவாக காயம் வராது ஆனால் தார் வீதியில் விழும் பொழுது காலில் பலத்த உரசல் காயம் ஏற்பட சாத்தியக்கூறு உண்டு.
  4. மாலை நேரங்களில் வெளிவீதியில் அதுவும் மணலில் குந்தி இருந்து கதைத்த கதைகளை சாதாரண மனிதன் ஒருவனால் மறக்க முடியாது. அதிக வெப்பம் காரணமாக தார் வெளிவீதியில் குந்தி இருக்க கூட முடியாத நிலை ஏற்படும். அவ்வாறே சிறுவர்கள் மணலில் சிற்பம் அல்லது சிலை போன்றவற்றினை செய்து காட்சிப்படுத்துவதும் காலப்போக்கில் இல்லாமல் போகும்.

ஒட்டு மொத்தத்தில் தார் வீதி இடுவதினால் அல்லது சீமெந்து தரை இடுவதினால் ஏற்படும் நன்மைகளை விட பல்வேறுபட்ட தீமைகளே ஏற்படும். அத்துடன் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.

இது அதற்கு சரிப்பட்டு வருமா?

அவர் அரச உத்தியோகத்தில் அதிகாரமிக்க பதவியில்  உள்ளவர். அவருக்கு சிறுவயது முதலே சலரோகம் உள்ளது. அதாவது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சலோரகம் உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் வரவில்லை. ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக அவருக்கு நீண்டகாலமாக சலரோகம் இருந்ததன்காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் வரத்தொடங்கியது. காலில் கிருமித்தொற்று, சிறுநீரில் கிருமித்தொற்று.. என்றவாறு பல்வேறு பட்ட பிரச்சனைகள், அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதியாகி தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிர்ப்பந்தம்.

இவ்வாறு அவர் ஒருமுறை நான் வேலை செய்யும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பொழுது எனது உறவினர் ஒருவர் அவரினை போய்ப்பார்த்து வரும்படி வேண்டுகோள் விடுத்தார். வைத்தியராக வேலை செய்யும் பொழுது இவ்வாறன அன்புக்கோரிக்கைகள் சிலவேளைகளில் தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.

நான் அவரினை பார்வையிட சென்ற பொழுது வைத்தியசாலையின் கட்டிலின் அருகில் உள்ள சிறு அலுமாரியின் மேல் புதிய ஏழு நெஸ்டோமோல்ட் டின்கள் அடுக்கப்பட்டிருந்தன. நானும் என்னை அறிமுகப்படுத்தி அவரினை சுகம் விசாரிக்கும் பொழுது கேட்டேன். நீங்கள் நெஸ்டோமோல்ட் பாவிக்கக் கூடாது தானே என்று. அடுத்து அவர் கூறிய பதில் தான் ஆச்சரியத்தினை தந்தது. புதிதாக உள்ள நெஸ்டோமோல்ட் அனைத்தும் அவரது உறவினர்களும் மற்றும் அவரது அலுவலகத்தில் வேலை செய்யபவர்களும் தான் கொண்டுவந்தவை.  மேலும் அவர் கூறியதாவது தான் அவற்றினை பாவிப்பதில்லை என்றும் இவ்வாறு தன்னை பார்க்க வருபவர்கள் தருபவற்றினை தான் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மனிதனாக பிறந்துவிட்டால் நோய்வாய்ப்படுவதும் காயங்களுக்கு உள்ளாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளே. இவ்வாறே மனிதன் ஒருவன் வாழ்நாளில் ஒருமுறையாவது வைத்தியசாலை செல்லவேண்டிய தேவை ஏற்படும்.

எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை பார்வையிட செல்லும் பொழுது எவ்வாறான உணவு பொருட்களை அல்லது பால்மாவகைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவதில்லை. பலர் ஏனொதானோ என்ற வகையில் வெறுமனே கடமைக்காக எதாவது ஒரு பொருளினை வாங்கிக்கொண்டு செல்வார்கள். வேறுசிலர் இலகுவாக எந்த பொருள் கிடைக்கின்றதோ அதனை வாங்கிக்கொண்டு செல்வார்கள். சிலர் கணக்கு பார்த்து வாங்குவார்கள். மேலும் சிலர் பழவகை போன்றவற்றினை வாங்கிச்செல்ல அது கௌரவக்குறைவு என்று நினைக்கின்றனர். பெரும்பாலான  சந்தர்ப்பங்களில் நான் வாங்கிக்கொடுக்கும் உணவு அல்லது பொருட்களை நோயாளி பயன்படுத்துவாரா? என்று கூட நாம் சித்திப்பதில்லை. இதனால் நாம் செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராகவே போகும். தகுந்த பொருட்களை தெரிவுசெய்ய நாம் அதிகம் படித்திருக்க தேவையில்லை. நோயாளியின் நோய் பற்றி அறிந்திருந்தாலே போதுமானது. தேவையேற்படின் நோயாளியினை அல்லது அவர்களின் உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களின் தேவையினை கண்டறிந்துகொள்ளலாம்.

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

குறிப்பு – மேற்குறித்த நிறுவனங்களின் உற்பத்தியினை அல்லது நற்பெயரினை பாதிக்கும் நோக்கில் இப்பதிவு இடப்படவில்லை.

வீட்டிற்குள்ளும் வந்தது 5G

தற்போதைய தொழில் நுட்ப உலகில் இணையத்தின் வேகம் அதிகம் இருந்தால் மட்டுமே அதிக விடயங்களை இலகுவாக சாதிக்கலாம். இதன் பொருட்டு காலகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றில் இறுதியாக தொலைத்தொடர்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததே 5G தொழில்நுட்பம் ஆகும். தற்பொழுது இதனை விட மேலான மேலான தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் மிகவும் அதிக தூரம் இடையூறு இன்றி பயணம் செய்யும் ஆற்றல் அற்றவை. இதன் காரணமாகவே மேற்குறித்த 5G அலைகளை கடத்தும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மிக குறைந்த இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வலைகள் தொடர் மாடித்தொகுதிகளினுள் குறைவாகவே உட்செல்லும் அதன்காரணமாக பெரும்பாலான நேரங்களில் தொடர் மாடிகளில் வசிக்கும் மக்கள் குறைந்தளவான coverage இணை பெற்றுக்கொள்வர். இவ்வாறன பகுதிகளில் எமது கைத்தொலை பேசி வேலை செய்யும் பொழுது அதிகளவான கதிர்வீச்சினை காலும். இவற்றினை நிவர்த்தி செய்ய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தொடர் மாடிப்பகுதிகளில் அல்லது coverage குறைந்த பகுதிகளில் அதனை கூட்டும் முகமாக கருவி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வீடுகளில் உள்ளும் மக்கள் தங்கு தடையின்றி 5G வசதியினை அனுபவிக்க முடியும்.

இலங்கையில் தற்பொழுது 4.5G தொழில் நுட்பத்தினை வழங்கும் முகமாகவே இலங்கையின் பல பல பிரதேசங்களில் smart pole என்ற சிறிய கோபுரங்கள் நாட்டப்பட்டுள்ளன. கீழே உள்ள படங்களில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களை காணலாம்.

facebook_15624903826149118478306109136995.jpg

இவ்வாறான smart pole திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சூழலியல்வாதிகள் ஆகியோர் இலங்கையின் நகர்ப்புறங்களில் தொடர் மாடிகளின் மேற்பகுதியில் அதுவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு எதிராக ஒருபொழுதும் குரல் எழுப்பியதில்லை. கீழே உள்ள படத்தில் கொழும்பின் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை காணலாம்.

20190516_1809331477561231918233699.jpg

உயிரினை பறித்த ஊஞ்சல்

பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் சாதாரண ஊஞ்சல் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உயிர்களை பறித்துவிடும். இருதினங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஓர் துயர சம்பவம் பொகவந்தலாவ பிரதேசத்தில் நடைபெறுள்ளது. குறிப்பாக பெரியவர்கள் யாரும் அற்ற நிலையில் தனியே ஊஞ்சல் ஆடிய சிறுமியை இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் வருடம் ஒன்றில் சில சிறுவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவையே. ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன , எவ்வாறு இந்த சம்பவங்களை தடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.. ஊஞ்சல் ஆடுதல் என்பது தமிழரின் வாழ்வியலோடு இரண்டற கலந்த விடயம் ஆகும். தமிழரின் கடவுள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடியிருப்பர். வித்தியாசம் பாவித்த பொருட்கள் மாத்திரமே. எம்மில் பலர் அம்மாவின் சேலை, மாடு கட்டும் நைலான் கயிறு, பொச்சு கயிறு போன்றவற்றினை பாவித்து ஊஞ்சல் ஆடியிருப்போம். இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி எவ்வாறு இவ்மரணங்கள் நிகழுகின்றது? என்பதே.

சட்ட மருத்துவத்தில் இவ்வாறு நடைபெறும் மரணங்கள் தற்செயலாக தூங்கிய மரணங்கள்(accidental hanging) என்ற வகைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. உலகத்தில் இவ்வாறு பல மரணங்கள் சம்பவித்துள்ளமையினை உரிய விஞ்ஞான அறிக்கைகள் மூலம் அறியலாம். முக்கியமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பின்னணியினை பார்த்ததால் சிலவிடயங்கள் எமக்கு புலனாகும். அவையாவன
1. நீண்ட கயிற்றில் ஊஞ்சல் ஆடல் – ஊஞ்சல் கயிறு இலகுவாக முறுக்கி கழுத்தினை சுற்றுவதற்கான சந்தர்ப்பம் உண்டு
2. மேலும் கீழுமாய் (pendulum movement) ஆடாமல் ஒரே இடத்தில் இருந்து சுற்றுதல் – ஒரே இடத்தில் சுற்றுவதால் ஊஞ்சல் கயிறு இலகுவாக சுற்றுப்படும் மேலும் ஊஞ்சல் ஆடுபவரும் தலை சுற்றல் ஏற்பட்டு விழ அல்லது கயிற்றில் அகப்பட சாத்தியக்கூறு அதிகம் உண்டு

3. பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி அதிக நேரம் ஊஞ்சல் ஆடுபவர்கள்.

4. ஊஞ்சலில் இருக்காமல் நின்றுகொண்டு அல்லது படுத்திருந்து ஊஞ்சல் ஆடுபவர்கள்

5. முக்கியமாக இங்கு கழுத்தினை சுற்றி முடிச்சு வருவதில்லை மாறாக கயிறானது முறுக்கி இறுக்குவதே காரணம் ஆகும்.

இவ்வாறு ஊஞ்சல் ஆடும் பொழுது தன்னிச்சையாக கயிறு திரிந்து சிறுவர்களின் கழுத்து போன்ற பகுதிகளை இறுக்குவதை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்
1. ஊஞ்சலில் இருக்கை பகுதி கதிரை போன்றவற்றினால் அல்லது மரப்பலகையினை குறுக்காக வைத்து செய்தல் – இதன் காரணமாக கயிறு சிறுவர்களை நெருக்காது.
2. ஊஞ்சலில் மேலே கட்டிடப்படும் கயிறுகள் இரண்டும் குறித்த தூரத்தில் இருக்கத் தக்கவாறு கட்டல் அல்லது ஊஞ்சலில் மேற்பகுதியில் கயிறுகள் இரண்டுக்குக்கும் இடையில் பலகை ஒன்றினை வைத்து கயிறுகள் இரண்டினையும் ஒன்று சேராது தவிர்த்தல்.

3. பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளை ஊஞ்சல் விளையாட விடல்.
4. சிறுவர் பூங்காக்களில் காணப்படும் ஊஞ்சல் போன்று இரும்பு சங்கிலியால் ஆன ஊஞ்சலில் சிறுவர்களை விளையாட விடல்.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது சிறுவன் ஒருவனின் கழுத்து பகுதியானது இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்கள் இறுக்கப் பட்டு இருந்தாலே மூளை இறப்பு (hypoxic brain death) ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

எனவே சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடும் பொழுது பெரியவர்கள் ஆகிய நாம் அவதானமாய் இருப்போம், அநியாய உயிரிழப்புக்களை தடுப்போம் .

நன்றி

11 பேரினை பலிகொண்ட …..

அண்மையில் இலங்கையில் மீரிகம பகுதியில் கசிப்பு அருந்திய பலர் கசிப்பு விசமானதன் காரணமாக இறந்துள்ளனர். தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 11 இணை எட்டியுள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.

முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல்   (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால்  என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.

நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.

கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி  போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது.  ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.

ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு  உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.

உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.

இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

03

அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால்  கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.

இது தொடர்பான இன்னொரு பதிவு

கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்

நம்பிய காலம் மலை ஏறிவிட்டதா?

அண்மையில் இரத்னபுரி மேல் நீதிமன்றினால் வைத்தியர் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 2016ம் ஆண்டு 16 வயது சிறுவனும் காலில் காயமடைந்த நிலையில் அவனது சகோதரனுடன் வைத்தியசாலைக்கு மருந்து கட்டிட சென்றான். அப்பொழுது குறித்த வைத்தியர் தனது விடுதியில் இருந்துள்ளார். அவரின் அறிவுறுத்தல்கள் படி வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அச்சிறுவனை வைத்தியரின் விடுதிக்கு அனுப்பியுள்ளார். அங்கு அக்குறித்த வைத்தியர் அச்சிறுவனை தனது அறையில் வைத்து காயத்திற்கு கட்டுப்போடும் சாக்கில் அவனது ஆடைகளை களைந்து பாலியல் துஸ்பிரயோகத்திர்ற்கு உட்படுத்த முயன்ற வேலை அவரின் பிடியில் இருந்து சிறுவனும் சகோதரனும் தப்பி ஓடி, போலீசாரிடம் முறையிட்டனர் அதனைத்தொடர்ந்து மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு இலங்கையில் மேலும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன உதாரணத்திற்கு 2007ம் ஆண்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரினால் 23வயது நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு 6ம் மாடியில் இருந்து தள்ளி விழுத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தவிர நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன.

சாதாரண பொதுமக்களில் பலருக்கு வைத்தியர்கள் தவறு செய்ய மாடடார்கள் என்ற அதீத நம்பிக்கையும், வைத்திய பரிசாதனைகள் பற்றிய அடிப்படை அறிவு இன்மையுமே இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற காரணமாக அமைந்து விடுகின்றன.

This slideshow requires JavaScript.

வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் பொழுது பொதுவாக ஆண் நோயாளியாயின் ஆண் உதவியாளர் (Chaperone) ஒருவரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளர் ஒருவரும் துணை இருத்தல் வேண்டும். இங்கு உதவியாளர் என்பவர் பொதுவாக வைத்தியசாலை ஊழியர் ஒருவராக இருப்பார் அவ்வாறு இல்லாத பட்ஷத்தில் நோயாளியுடன் கூட வருபவர் வைத்தியரின் அனுமதியுடனும் நோயாளியின் அனுமதியுடனும் உதவியாளராக செயற்படலாம்.

அந்தரங்கமான வைத்திய பரிசோதனைகளை (intimate medical examinations) உதாரணமாக இனப்பெருக்க உறுப்புக்களை பரிசோதித்தல் மற்றும் மார்பகங்களை பரிசோதித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும்பொழுது ஆண் நோயாளி ஆயின் ஆண் உதவியாளரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளரும் கூட இருத்தல் கட்டாயமானதாகும். மேலும் இவ்வாறான பரிசோதனைகள் ஓர் மறைவான இடத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் வேறு வைத்திய சாலை ஊழியர்கள் பிரசன்னமாயிருப்பின் அவர்களை அப்பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூற நோயாளிக்கு முழு உரிமையும் உண்டு. நோயாளி அவ்வாறு கூறுவாராயின் வைத்தியர்கள் அக்கூற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிலவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னர் நோயாளிகள் குறித்த வைத்தியருடன் எவ்வாறான சோதனைகளை எவ்வாறு மேற்கொள்ளுவீர்கள் என கேட்டறிந்து கொள்ள முடியும். அவ்வாறு நோயாளி கேட்கும் பொழுது வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும். அண்மையில் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கட்டு ஒன்றுடன் வைத்திய பரிசோதனைக்கு சென்ற பொழுது வைத்தியர் போதிய விளக்கங்கள் கொடுக்காமல் அவரின் மார்பங்களை பரிசோதனை செய்து பெரும் சர்ச்சையில் மாட்டினார். உண்மையில் மருத்துவ ரீதியாக அவ்வைத்தியர் மார்பில் ஏதாவது கட்டி இருக்கின்றதா எனவும், அது கழுத்து பகுதிக்கு பரவியதா எனவும் அறியவே அப்பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நோயாளிக்கு வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.

சாதாரண வைத்திய பரிசோதனைகளை விட சட்ட வைத்திய பரிசோதனைகள் (Medico – legal examination) மேற்கொள்ளப்படும் பொழுது போலீசாரே, இராணுவத்தினரோ அல்லது சிறைக்காவலரோ சோதனை மேற்கொள்ளப்படும் நபரின் அருகில் இருக்க அனுமதிப்பதில்லை.

இது தவிர வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினை நோயாளிக்கு கொடுப்பதுவும், தொழில் முறையற்ற ரீதியில் உரையாடல்களை மேற்கொள்ள முனைவதும் தொழில்முறை துஸ்பிரயோகமே.

வைத்தியசாலை தவிர வைத்தியரின் விடுதி, வீதியோரங்கள், வைத்தியரின் வாகனம் அல்லது வீடு அல்லது போலீசாரின் வாகனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகள் மிகவும் சர்ச்சைக்கு உரியவை. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

யாழிற்கு புதிய அச்சுறுத்தல்

கடந்த வாரத்தில் யாழ் குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் குளவியின் தாக்கம் காரணமாக இருவர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி தாயும் ஒருவர். அவரின் சிசுவும் இறந்த நிலையில் பிறந்தது. இது தவிர பலர் காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். முன்னைய காலங்களில் பொதுவாக மலையக தேயிலைத் தோட்டங்களை அண்டியும் சிகிரியா போன்ற காட்டுப்புறங்களிலுமே இத்தகைய காட்டுக்குளவியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இப்பொழுது யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு குளவிகளின் தாக்கம் பரவியுள்ளது.
இப்பதிவில் இக்குளவியின் தாக்கத்திர்ற்கு உள்ளான ஒருவர் ஏன் இறக்க வேண்டும் என்பது பற்றி சட்ட மருத்துவ ரீதியில் அலசுவோம்.

பல நோயாளிகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் பொழுது வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதில்லை உதாரணமாக முதலில் தேனீ தான் குத்தியது  என்பார்கள் சிறிது நேரத்தில் உறவினருடன் கைத்தொலைபேசியில் கதைத்து விட்டு கூறுவார்கள் டொக்டர் தேனீ அல்ல குளவியே குத்தியது என்பார்கள். கீழே உள்ள படமானது தேனிக்கும் குளவிக்கும் உள்ள உருவவியல் அடிப்படை வேறுபாடுகளை விளக்குகின்றது.

பொதுவாக தேனீயானது மனிதன் ஆனவன் அதன் கூட்டினை கலைக்கும் பொழுது தான் தாக்கும் . ஆனால் குளவியானது மனிதனை தேடிச்சென்று தாக்கும் இயல்பு உடையவை.குளவியானது மனிதனை தாக்கும் போது தேனீயினை விட அதிகளவு நச்சினை உட்செலுத்தும் அத்துடன் அதன் நச்சானது மிக்க வீரியம் கூடியது. எனவே சிகிச்சை அளிக்கும் வைத்தியர்ளுக்கு என்ன குத்தியது என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். குளவியானது வாயினால் கடித்தும் உடலின் பின்புறத்தில் உள்ள கொடுக்கு (A sting is delivered by a posterior, tapered, needle like structure designed to inject venom). மூலமும் மனித உடலில் நச்சிணை உட்செலுத்துகின்றன.

04
அடுத்து குளவி குத்தி மரணம் எவ்வாறு நிகலுகின்றது என்பது பற்றி பார்ப்போம். உண்மையில் மரணமானது உட்செலுத்தப்பட்ட நச்சானது உடலில் ஏற்படுத்தும் ஒவ்வாமை தாக்கத்தினாலும் அதன் நச்சியல் இயல்பினாலும் ஏற்படுகின்றது. அதாவது சில மரணங்கள் ஒவ்வாமையினால் மட்டுமே ஏற்படும் சில மரணங்கள் நச்சியல் தாக்கத்தினால் மட்டுமே ஏற்படும். ஆனால் பல இறப்புக்கள் மேற்கூறிய இரண்டினதும் சேர்க்கைகள் காரணமாகவே ஏற்படுகின்றது.
ஒவ்வாமைத் தாக்கம் எனப்படும் பொழுது சாதாரணமாக தோலில் ஏற்படும் எரிவு, வீக்கம் (local allergic reaction) போன்றவற்றில் இருந்து சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும் தாக்கம் ( anaphylatic shock) வரை இருக்கும். இங்கு ஒவ்வாமையினால் மரணம் நிகழும் பொழுது உட்செலுத்தப்பட்ட கொடுக்குகளின் எண்ணிக்கை அதாவது குத்திய குளவிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்காது. ஒருசில குளவிகள் குத்தினாலே மரணம் சம்பவிக்கும்.

03
மாறாக குளவியின் நச்சின் (Toxic effect) இயல்பால் மரணம் நிகழ வேண்டும் எனில் குறிப்பிடத்தக்க அளவில் குளவிகள் குற்ற வேண்டும். உதாரணமாக மனிதனை 500 தொடக்கம் 1200 வரையான தேனீக்கள் குற்றினாலே செலுத்தப்பட்ட நஞ்சின் விளைவாக மரணம் சம்பவிக்கலாம் (The human LD50 for honey bee stings has been estimated to be between 500-1200 stings)
இவ்வாறு அதிகளவு குளவிகள் குற்றும் பொழுது அதிகளவு நஞ்சேற்றல் (mass envenomation) ஏற்பட்டு உடனடியான சிறுநீரக செயலிழப்பு (acute kidney injury), தசைகளில் ஏற்படும் அழற்சி (rhabdomylysis),  மற்றும் இரத்தம் அழிவடைதல் (Haemolysis) போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு குளவியனது குற்றும் பொழுது அவர்களுக்கு புதிதாக மாரடைப்பு அல்லது இருதய துடிப்பில் ஒழுங்கின்மை (arrhythmia) போன்றன ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
இது தவிர குளவியானது கலைத்து கலைத்து குத்தும்  பொழுது மனிதர்கள் விபத்துக்கு உள்ளாகி அல்லது கிணறு போன்ற குழிகளில் விழுந்து அல்லது பனை போன்ற உயரமான மரங்களில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு.
குளவிகள் குற்றின் நோயாளியை வீட்டில் வைத்து குற்றிய இடத்திற்கு சுண்ணாம்பு அல்லது புளி பூசுதல் அல்லது விச கடி வைத்தியர்களின் சிகிச்சை போன்ற பாரம்பரிய முறைகளின் மூலம் சிகிச்சை அளித்தல் பல சந்தர்ப்பங்களில் உயிர் ஆபத்தினை உண்டு பண்ணியுள்ளது. ஏனெனில் நான் இங்கு விஞ்ஞான ரீதியில் உடலியல் தொழில் பாடுகளை கண்காணிக்க முடியாமையே ஆகும். மேலும் இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகள் காரணமாக வைத்தியசாலையில் காலதாமதமாகவே அனுமதிக்கப்படுவர் இதன் காரணமாக அவர்கள் உயிர் ஆபத்திணை எதிர்நோக்குவர்.

மேலும் சிறுவர்களும் வயோதிபர்களும் குளவி கலைத்து குத்தும் பொழுது அவர்களால் இலகுவில் தப்பி ஓட முடிவதில்லை இதன் காரணமாக குளவிகளின் தாக்குதலினால் இவர்களே அதிக பாதிப்பினை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

தாயே தனது குழந்தைகளை கொலை செய்தால்???

பத்து மாதங்களே நிரம்பிய இரு பெண் குழந்தைகளை அண்மையில் பெற்ற தாயாரினால் அவர்களின் வீட்டின் கழிப்பறையில் வைத்து கழுத்து அறுக்கப் பட்டு கொலை செய்யப்பட்டனர். கொலை செய்தபின்னர் தாயார் தான் செய்தவற்றினை அதாவது தானே குழந்தைகளின் கழுத்தினை அறுத்து கொன்றதாக கணவனுக்கு கூறிய நிலையில் விடயம் மேலும் பரபரப்பாகியது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது தாயானவள் ஏற்கனவே ஒரு மனநோயாளி எனவும் அவரது மகன் ஒருவர் கடந்த ஆண்டு சலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததினை தொடர்ந்து அவரின் மனநிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்ததாகவும் அவர் உரிய மருத்துவ வசதிகளை பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெற்ற தாயே பச்சிளம் பாலகர்களை கொல்லும் சம்பவங்கள் முன்பும் அரிதாக நடைபெற்றுள்ளன. இவ்வாறு மனநிலை பாதிக்கப் பட்ட குழந்தைகளை பெற்ற தாய் (biological mother ) தனது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொல்லுதல் “infanticide” என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். முக்கியமாக இங்கு தாயானவள் ஏற்கனவே மனநோயாளியாக இருக்கலாம் அல்லது குழந்தை பேற்றின் காரணமாக / பாலூட்டுவதன் காரணமாக அவர் மனநோயாளியாக (unsound mind and disturbed)  இருக்க வேண்டும். இவ்வாறு மனநிலை குழம்பியதன் காரணமாகவே தாய் இவ்வாறான செயல்களை செய்வார். இது தவிர அவரின் மனதில் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற மனா உந்துதல் பொதுவாக இருப்பதில்லை.

சாதாரணமாக பிள்ளைப்பேற்றின் பின்னர் உடலில் சடுதியாக ஏற்படும் ஹோர்மோன் மாற்றம் காரணமாவும் பிள்ளை பேற்றினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாகவும் மேலும் பாலூட்டுவதன் காரணமாகவும் இதுவரை சாதாரணமாக இருந்த பெண்ணின் மனதில் பல்வேறு பட்ட மாற்றங்கள் நிகழும் அதன்காரணமாகவே அவர்கள் மனம் குழம்பிய நிலைக்கு உள்ளாகின்றனர். இந்த மனக்குழப்பம் ஆனது ஓரிரு நாள் நிலைத்து நிற்கும் சாதாரண மனக்குழப்பத்தில் (Postpartum Blues) இருந்து தீவிரமான மனநோய் (Postpartum Psychosis) வரை இருக்கலாம்.

சாதாரணமாக கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் இவ்வாறு ஹோர்மோனில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் மிக எளிதாக மனதில் மனதில் தைரியம் அற்றவர்களாக மாற்றம் அடைந்து விடுவார்கள். பொதுவாகவே சிறுசிறு குடும்ப சண்டைகளுக்கு எல்லாம் விபரீதமாக முடிவெடுக்க முனைவார்கள். விஞ்ஞான ஆய்வுகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அண்மையில் பிள்ளைப்பேற்றிக்கு உள்ளான பெண்கள் ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆபத்திற்கு உரியவர்கள் (risk population for suicide) என்று வகைப்படுத்துகின்றன.

963

இதன் காரணமாகவே எமது முன்னோர்கள் ஓர் பெண் கர்ப்பிணி ஆகும் பொழுது அவளை தனது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு , பிள்ளைப்பேற்றின் பின்னர் குறித்த காலத்தின் பின்னரே கணவனின் வீட்டிற்கு திரும்பவும் அழைப்பார்கள். இதன் மூலம் பெண் ஆனவள் தற்காலிகமா மாமியார் கொடுமையில் இருந்து விடுபடவும், அந்நியமான சூழ்நிலையில் இருந்து தனக்கு பழக்கமான சூழ்நிலையில் வாழவும், பெற்றோரின் மற்றும் சகோதரர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்க வழி ஏற்படும். இதன் காரணமாக பெண்ணிற்கு திடமான மனநிலை உண்டாகும் இதனால் மேற்குறிய ஆபத்தான நிலைகள் தடுக்கப்படும். தற்காலத்தில் இவை சாத்தியப்படாத பொழுது கணவர்மார் தமது மனைவியர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் மனைவி ஏற்கனவே மனநோயாளி என்றால் அவரின் நோய் நிலை அதிகரிக்க வாய்ப்புண்டு அதனால் வைத்திய ஆலோசனை கட்டாயம் பெறவேண்டும்

தற்பொழுது இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறு மனநிலை குழம்பிய தயாரினால் ஏற்படுத்தப்படும் மரணங்களுக்கு பொதுவாக கொலைக்குற்ற சாட்டு செய்யப்படுவதில்லை ஆனால் தாயானவள் கணிசமான காலம் மனநல வைத்திய சாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற நேரிடும். இவ்வாறன வழக்குகளில் சட்ட வைத்திய மனநல வைத்தியர்களினதும் (forensic psychiatrist) சட்ட வைத்தியர்களினதும் (forensic psychologist) பங்கு அளப்பெரியது. (Under the law it can be considered as a culpable homicide not amounting to murder. Exception 5 of Section 294 of the Penal code)

இது ஒரு கொலை அல்ல! ஏன்?

நீர் நிலை ஒன்றில் இருந்து ஓர் பெண்ணின் உடல் எடுக்கப் பட்டால் எவ்வாறு மரணம் ஏற்பட சூழ்நிலை கண்டறியப்படுகின்றது என்பதை பற்றிய விளக்கமே இப்பதிவாகும். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது கொலை, தற்கொலை, விபத்து மற்றும் இயற்கை மரணம் என்பதினை குறிக்கும்.
முதலில் “கொலை” என்பது நீதிமன்ற விசரணைகளின் முடிவிலேயே நீதிபதி அவர்களினால் தீர்மானிக்கப் படும். “கொலை” என்ற சொற்பதத்தினை மற்றையவர்கள் கையாளும் பொழுது மிக்க அவதானம் தேவை . நீர் நிலை ஒன்றில் பெண்ணின் சடலம் காணப்படும் பொழுது அதுவும் கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு காணப்படும் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுவது வழமையே. “கொலை ” என்பது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலனாய்வு முடிவுகள் (crime scene investigation), உடற் கூராய்வு பரிசோதனை முடிவுகள்(postmortem investigation), ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் (ancillary investigations), சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் (circumstantial evidence), நேரில் கண்ட மற்றும் உறவினர்களின் சாட்சியங்கள் (witnesses) என்பனவற்றின் அடிப்படையிலேயே நீதிபதி அவர்களினால் தீர்மானிக்கப்படும்.

மேலும் முக்கியமாக குற்றவியல் வழக்கு விசாரணையின் பொழுது குற்றமானது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நீருபிக்கப் படவேண்டும். நம்மவர்களில் பெரும் சந்தோஷமான செயற்பாடு ஒன்றுதான் எதுவிதமான ஆதாரங்களும் இன்றி குற்றசாட்டுகளை சுமத்தி மற்றவர்களை மனவேதனையில் ஆழ்த்துவதுதான்.

இனி ஒவ்வொரு விடயத்தினையும் தனித்தனியாக பார்ப்போம். குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலனாய்வு முடிவுகள் (crime scene investigation) எனப்படும் பொழுது கொலை நடந்த பிரதேசத்தில் காணப்படும் DNA சான்றுகள், இரத்த கறைகள் (Bloodstain Pattern Analysis -BPA), கொலையாளி பயன்படுத்திய ஆயுதங்கள், கொலையாளி பயன்படுத்திய வேறு பொருட்கள், கொலையாளின் கைரேகை, பாத ரேகை (Foot print ) போன்றன பெறப்படும்.

அடுத்து மிக முக்கியமான உடற் கூறாய்வு பரிசோதனை பற்றி பார்ப்போம். முதலில் இறந்தவரின் உடலில் இருந்து நிகத்தின் நுனிப்பகுதி, பெண்ணுறுப்பு பகுதி , மலவாசல் பகுதி , கடிகாயங்கள் , காணப்படும் இரத்த மற்றும் ஏனையவற்றில் இருந்து சான்று பொருட்கள் எடுக்கப்படும். அடுத்து அவரில் உள்ள வெளிக்காயங்கள் மற்றும் உட்காயங்கள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசப்படும். முக்கியமாக காயங்கள் காணப்படும் பொழுது அவை உயிர் ஆபத்தினை அல்லது மனிதனை தொழில்படா நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை உடையவையா (whether injuries are sufficient to cause to death or incapacitate the person) என்று சட்ட மருத்துவ ரீதியில் அலசப்படும். மேலும் காயங்கள் எவ்வகையான செயற்ப்பாட்டின் பொழுது உருவானது என்பது பற்றியும் ஆராயப்படும். மேலும் இறந்தவருக்கு ஏதாவது இயற்கையான நோய் நிலைகள் இருந்ததா எனவும், இறந்தவரின் இரைப்பையில் அதாவது நஞ்சு மற்றும் சாராயம் உள்ளதா என பார்க்கப்படும். பெண்களுக்கு குறிப்பாக அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்களா என்று ஆராய விசேட முறைகள் (pelvic dissection) கையாளப்படும். ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் (ancillary investigations) எனப்படும் பொழுது இறந்தவரின் இரத்தம், மூத்திரம், பித்தம், இரைப்பையின் உள்ளடக்கம் போன்றவற்றில் ஏதாவது நச்சு அல்லது மனிதரை சுயநினைவில்லாமல் ஆக்கும் மருந்துகள் உள்ளனவா என்று ஆராயப்படும்.
சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் (circumstantial evidence) எனப்படும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் காணப்படும் CCTV பதிவுகள், இறந்தவரின் தொலைபேசி உரையாடல்கள் போன்றன தேவை கருதி ஆராயப்படலாம்.

இவற்றிக்கு மேலதிகமாக நேரில் கண்ட மற்றும் உறவினர்களின் சாட்சியங்கள் (witnesses) பொலிஸாரினால் பதியப்படும். நீதிமன்றில் குறுக்கு விசாரணை நடைபெற்று சாடசியங்களின் நம்பகத்தன்மை (credibility) பரீட்ச்சிக்கப்படும். தேவையேற்படும் பொழுது இறந்தவர்களின் உறவினரிடத்து இறந்தவர் இறுதியாக என்ன மன நிலையில் இருந்தார் என அறிய விஞ்ஞா ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட psychological autopsy போன்றனவும் செய்யப்படலாம்.

மேலும் வழக்கு விசாரணையின் பொழுது போலீசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் நம்பகத்தன்மையும் பரீட்ச்சிக்கப்படும். இறுதியில் நீதிபதி மேற்குறிய எல்லாவற்றிலும் ஓர் ஒத்திசைவுத்தன்மை (corroboration) இருக்கும் பட்சத்தில் மாத்திரமே கொலை என்று தீர்மானிக்கப்படும்.

முக்கியமாக முன்னைய காலங்களை போலல்லது தற்பொழுது விஞ்ஞா ரீதியான ஆதாரங்கள் (scientific evidence) குற்றங்களை உறுதி செய்ய பெரிதும் உதவுகின்றன மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் அதிகமாகும்.

இவற்றினை எல்லாம் விடுத்து கைகளை கட்டி கிணத்தில் தள்ளிவிட்டால் அது தற்கொலையா? உடலில் காயங்கள் இல்லாமல் ஒருவரை அரைமயக்கத்துக்கு கொண்டு வந்த பின்னர் கைகளை கட்டி கிணத்துக்குள் தூக்கிப்போட்டிருக்கலாம் தானே? (இவ்வாறு போட்டிருந்தால் இறந்தவரின் இரத்தம், மூத்திரம், பித்தம், இரைப்பையின் உள்ளடக்கம் போன்றவற்றில் ஏதாவது நச்சு அல்லது மனிதரை சுயநினைவில்லாமல் ஆக்கும் மருந்துகள் நிச்சயம் காணப்படும்)
அப்படி செய்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இல்லையா? (சாத்தியக்கூறு எனப்படும் பொழுது குற்றவியல் வழக்கில் அது 100% மாக இருக்க வேண்டும்) என்று முகநூலில் பதிவுகள் பல இடலாம் . ஆனால் நிஜத்தில் நீதிமன்றிலோ அல்லது திறந்த மரண விசாரணையின் பொழுதோ சாத்தியகூறினை நீருபிப்பது கடினமாகும் அவை நிச்சயம் நிராகரிக்கப்படும்.

கொலையா? தற்கொலையா?

அண்மையில் வடமராட்சி பகுதியில் கிணற்றினுள் இருந்து கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து நடந்த உடற் கூறாய்வு பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பலர் தற்பொழுது அது கொலை எனவும் எவ்வாறு ஒருவர் தனக்குத்தானே பின்பக்கமாக கைகளை கட்டுபோடலாம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலில் நாம் சிக்கலான தற்கொலைகள் (complex suicide) பற்றி பார்ப்போம். சிக்கலான தற்கொலை என்பது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப்பாவித்து ஒருவர் தற்கொலை செய்துகொள்வது ஆகும். இவர்கள் தங்களின் மரணத்தினை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தும் முகமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை தெரிவு செய்கின்றார்கள். உதாரணமாக நஞ்சினை உண்ட பின்பு தூக்கில் தொங்கல் அல்லது நீரில் மூழ்கல். சிக்கலான தற்கொலையில் இருவகை உண்டு

  1. திட்டமிடப்படாத சிக்கலான தற்கொலைகள் (unplanned complex suicides) – இதில் தற்கொலை செய்பவர் முதலில் ஒரு முறையினை பாவிப்பார் அதில் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்து தனது முயற்சியில் அதாவது இறக்கும் வரை பலமுறைகளை பாவிப்பார்.

உதாரணமாக ஒருவர் பூட்டிய அறையில் தனது மணிக்கட்டினை பிளேட்டினால் அறுப்பார், உடனடியாக இறப்பு நிகழாது அவர் இரத்தம் ஒழுக ஒழுக நடந்து திரிந்துவிட்டு, மேசையில் லாச்சியில் உள்ள இரு காட் பனடோல்களை விழுங்குவார். அப்பொழுதும் இறப்பு உடனடியாக நிகழாது, இறுதியாக கூரையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கொள்வார்.

பொதுவாக இச்சம்பவத்தினை பார்வையிடும் சாதாரண பொதுமகன் ஒருவர் இரத்த கறையினை பார்த்து இது கொலை என்றே கூறுவார்கள்.

2. திட்டமிடப்பட்ட சிக்கலான தற்கொலைகள் (planned complex suicides) இதில் தற்கொலையாளி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை ஒரே நேரத்தில் பாவிப்பர். உதாரணமாக அதிகளவு நித்திரை குளிசைகளை விழுங்கிய பின்னர் அவர் உயரமான கட்டிடங்களில் இருந்து விழுதல்

இங்கு நடைபெற்றதுவும் அவ்வாறான ஓர் சம்பவமாக இருக்கலாம்.

0272920-2008

மேலுள்ள படமானது Planned complex suicide இணை விளக்குகின்றது இங்கு அவர் penetrating captive-bolt gunshot மூலமும் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளார். (penetrating captive-bolt gunshot இணை பற்றி அறிய பின்வரும் லிங்கினை பின்தொடரவும் சத்தமின்றி ஒரு வேட்டு )

.இனி தனக்குத்தானே கைகளை எவ்வாறு கட்டலாம் என்பதை சற்று பார்ப்போம். முதலில் உருவு தடம் மூலம் மணிக்கட்டில் நூலினை கட்டுதல் பின்னர் நூலின் மறுநுனியில் இன்னோர் உருவு தடத்தினை உருவாக்குதல். அதனை ஏற்கனவே கடுப்போட்ட கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலினால் பிடித்தல் பின்னர் கைகள் இரண்டினையும் உடலின் பின்பக்கம் கொண்டு சென்று, உருவு தடத்தினுள் மற்றைய கையினையும் கொழுவுதல். பின்னர் இரு கைகளையும் ஆட்டும் பொழுது கட்டுக்கள் இரண்டும் இறுகும். இது தவிர கைகளை பின்புறமாக தனக்குத்தானே கட்டிட பல்வேறு முறைகள் உண்டு.

நீரில் மூழ்கி ஒருவர் இறக்கும் பொழுது இவ்வாறு மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை எவ்வாறு வேறுபடும் என்பதை கீழ்வரும் லிங்கில் உள்ள பதிவு விளக்கின்றது

நடிகை ஸ்ரீதேவியின் மர்மமரணம்

https://wp.me/p9r9t3-7V