வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?

அண்மைய செய்திகளில் இலங்கையில் சிறுநீரக வியாபாரம் அதாவது மனிதன் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு சட்ட விரோதமான முறையில் சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரகம் மாற்றீடு செய்யப்படுவதாக இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் பிரகாரம் உலகில் நாளொன்றுக்கு சராசரியாக 60 பேர் அவயவ மாற்று சிச்கிசைக்கு உள்ளாகின்றனர். அதேவேளை 13 பேர் உரிய உறுப்பு கிடைக்காமை காரணமாகக் இறக்கின்றனர். இலங்கையின் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டில் 400பேர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட வேளையில் ஏறத்தாழ 2000 பேர் உரிய சிறுநீரகம் கிடைக்காமல் மரணத்தினை தழுவினர். இதன் காரணமாகவே சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்றீடு சிகிச்சைக்காக பலர் அரச வைத்திய சாலையில் காத்து இருக்கின்றனர். இவ்வாறு உரிய உறுப்புகள் கிடைக்கமையே பல்வேறுபட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கின்றது. சாதாரணமாக முற்று முழுதாக சிறுநீரகம் பழுதடைந்த ஒரு நோயாளி தனக்குரிய சிறுநீரகத்தினை பின்வரும் வழிமுறைகளில் பெற்று கொள்ளலாம்

  1. இறந்த ஒரு நபரின் உடலில் இருந்து
  2. மூளை இறப்பு ஏற்பட்ட ஒரு நபரின் உடலில் இருந்து
  3. உயிர் உள்ள ஓர் நபரின் உடலில் இருந்து

இப்பொழுது பேசு பொருளாக இருப்பது இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட பிரதேசங்களில் இருந்து இளவயது இளஞர்களின் உடலில் இருந்துசிறுநீரகம் பலவந்தமாக அல்லது ஏமாற்று முறையில் அகற்றப்படுவது பற்றியதே.

இலங்கையில் இவ்வாறு ஒரு மனிதனின் இருந்து இன்னொரு மனிதருக்கு அவயவங்களினை மாற்றீடு செய்யும் பொழுது அவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது Transplantation of Human tissues act No 48 of 1987 (certified on 11th December 1987) என்ற சட்டம் ஆகும் அத்துடன் சுகாதார அமைச்சின் சில சுற்றறிக்கைகள் Director General Health (DGHs) circulars of Ministry of health ஆகும்.

இங்கு முக்கியமாக உயிர் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து எவ்வாறு சிறுநீரகம் போன்ற அங்கங்கள் இன்னொருவருக்கு மாற்றீடு செய்யப்படுகின்றது என்பது பற்றி பார்ப்போம். பல்வேறுபட்ட காரணகளினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் பொழுது நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் அப்பொழுது சிகிச்சை அளிக்கும் வைத்தியர் நோயாளிக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் சிறுநீரக மாற்றீடு செய்வதால் வரும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்து கூறுவார் அத்தோடு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக மேற்கொள்ளும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையின் சாதக பாதகங்களை எடுத்து கூறுவார் அதன் பின்னரே நோயாளி தனக்கு எந்தவிதமான சிகிச்சை வேண்டும் என்பதை தீர்மானித்து சிகிச்சையை பெறுவார். இங்கு வைத்தியர் உரிய மற்றும் தேவையான தகவல்களை தெரிவிக்க முடிவெடுப்பது நோயாளிதான்.

அடுத்த கட்டமாக நோயாளி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு விரும்பினால் அவர்தான் தனக்குரிய சிறுநீரக வழங்குநரை கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிடில் அவரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர் முளை இறப்பு அடைந்த ஒருவரின் சிறுநீரத்திற்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருப்பது என்பது நிச்சயமாக ஒருசில நாட்களோ மாதங்களோ அல்ல. நிச்சயமாக ஒருசில வருடங்கள் செல்லும் அந்த காலப்பகுதியில் நோயாளி ஒழுங்கான முறையில் வாரத்தில் ஒருசில தடவைகள் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். நோயாளி பல்வேறு காரணங்களினால் இறப்பினை சந்திக்கவும் நேரும். இவ்வாறான பாதக விளைவுகளை தவிர்க்கவே நோயாளி ஒருவர் தனது பழுதடைந்த சிறுநீரகத்திற்கு மாற்று சிறுநீரகத்தினை தேடுவர்.

முதலில் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவரும் கொடுக்க முயற்சி செய்வார்கள். அது சரிவராது பட்சத்தில் வேறு ஓருவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்யவார் அப்பொழுதுதான் பிரச்சினைகள் எழுவதற்கு ஆரம்பிக்கும். இலங்கையில் தற்பொழுது உள்ள சட்டத்தின் பிரகாரம் உயிர் உள்ள ஒருவர் அல்லது இறந்து ஒருவரின் பின்னுருத்தாளிகள் வியாபார நோக்கம் கருதி உடல் உறுப்புக்களை விற்பனை செய்ய முடியாது. அன்பின் அல்லது பாசத்தின் காரணமாவே உறுப்புக்களை தானம் செய்யாலாம். எனவே வெளி நபர் ஒருவருக்கு பணத்தினை அல்லது வேறு பெறுமதியான பொருட்களை கொடுத்து அவரின் பூரண சம்மதத்துடன் அவரின் சிறுநீரகத்தின் பெறுவார்கள். இவ்வாறு சிறுநீரகம் போன்ற உறுப்புக்களினை பெறல் organ trafficking என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். இவ்வாறு சிறுநீரகத்தினை பெற பத்திரிகைகள் மூலம் விளம்பர படுத்துவார்கள் அல்லது இதற்கான தரகர்களை அனுகுவார்கள்.

  1. எவ்வாறான மனிதர்கள் தமது சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை தானம் செய்வார்கள் ?

மிகவும் வறுமையில் இருப்பவர்கள் தமது வறுமையினை போக்க நினைத்து தமது சிறுநீரகத்தினை வழங்குவர் மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முளை வளர்ச்சி குறைந்தவர்கள் போன்றவர்கள் இவ்வாறு பணத்திற்காக வழங்க முற்படலாம். இதுபோன்றே சில பெண்கள் வாடகை தாயாக செயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட வெளிவந்த செய்திகளின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்கள் என்று ஒருவர் கூட இலங்கை போலீசில் முறைப்பாடு செய்யவில்லை.

  1. ஏன் இதுவரை சட்ட நடவடிக்கைகளை பெருமளவில் எடுக்க முடியாது உள்ளது?

இங்கு கவனிக்கத்தத்தக்க விடயம் என்னெவெனில் இவர்கள் யாவரும் 18 வயதினை அடைந்தவர்களே மேலும் இவர்கள் சுயவிருப்பதின் பேரில் சிறுநீரகத்தினை வழங்குவதால் பொலிஸாரினால் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கமுடியாமல் போகும். பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தானம் செய்யபவர்கள் உரிய பணத்தினை கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு அவற்றிலும் அவர்கள் போலீசில் முறைப்பாடு செய்வதில்லை. மேலும் இவ்வகையான செயற்பாடுகளில் பல உயர் அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் ஈடுபடுவதினால் அவர்களை பொலிஸாரினால் இலகுவில் அடைய முடியாது.

  1. வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?

ஒரு சிறுநீரக செயலிழப்பு நோயாளி சிறுநீரக வழங்குநர் ஒருவரினை பலத்த சிரமத்தின் மத்தியில் அழைத்து வரும் பொழுது மருத்துவ நிபுணர்கள் வழங்குனரின் குருதி வகை, அவருக்கு எயிட்ஸ், ஹெப்பட்டைட்டிஸ் போன்ற பல நோய்கள் இருக்கின்றதா என பரிசோதிப்பார்(சிறுநீரகத்தினை மாற்றும் பொழுது ஒத்துபோகுமா என அறிய பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்). அவற்றில் பிரச்சனைகள் எதுவும் இல்லை எனில் தொடர்ந்து சத்திர சிகிச்சை நிபுணரிடம் சிபாரிசு செய்யப்படும். இலங்கையில் உள்ள பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரில் பெரும்பாலானோருக்கு போதிய மருத்துவ அறிவின்மையாலும், உரிய தீர்மானம் எடுக்கும் திறன் இன்மையாலும் வைத்தியரின் முடிவினையே ஏற்கின்றனர். மேலும் குறித்த வைத்தியருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் (success rate) நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே இவற்றினை கருத்தில் கொண்டு அவர் ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரினை சிபாரிசு செய்வார். தொடர்பாடல் முறைகளில் ஏற்பட்ட தவறுகளினால் (Communication error) தான் பெரும்பாலான மக்கள் சிபாரிசு செய்யும் வைத்தியர்கள் ஆதாயம் அடைவதாக நினைக்கின்றார்கள். அது உண்மையில் தவறான எண்ணம் ஆகும்.

  1. உண்மையில் உறுப்பு மாற்றீடு சிகிச்சை முறையில் தவறுகள் நடக்கவில்லையா?

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியர் சிலர் இலங்கையில் வந்து சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு இலங்கையரின் சிறுநீரகமே பொறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணைகளின் பின்பு இலங்கையில் வெளிநாட்டவரின் உறுப்பு மாற்று சிகிச்சை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை பெறுவதற்காக காத்திருப்பிப்போர் பட்டியலில் உள்ளோர் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்கினை பாவித்தும், வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கி விரைவாக சத்திர சிகிச்சை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் நடந்துள்ளன. ஆதாரங்கள் இன்றி குற்றசாட்டுகளினை சுமத்துவது இறுதியில் எதுவும் அறியா நோயாளிகளினையே இறுதியில் பாதிக்கும்.

கொலையும் தற்கொலையும்

அண்மைய காலப்பகுதியில் இலங்கையில் கொலை – தற்கொலை என்ற வகை மரணங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பெற்ற தாயே தனது குழந்தைகளுக்கு நஞ்சினை கொடுத்து அவர்களின் உயிரினை மாய்த்தும் தானும் நஞ்சினை அருந்தி உயிரிழக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ரயில் தண்டவாளத்தில் குழந்தைகளுடன் குதித்தல் மற்றும் கிணற்றில் குதித்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

7899

இவ்வாறான கொலை – தற்கொலை சம்பவங்களில் பெரும்பாலும் பலியாகுவோர் ஏதும் அறியா அப்பாவி சிறுவர்களும் பெண்களுமே. பெரும்பாலான இச்சம்பவங்களுக்கு கடன் தொல்லை , மற்றும் கணவன் மனைவி இடையே உள்ள தீரா பிரச்சினைகளே காரணமாகக் அமைகின்றன. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் சில குடும்பங்கள் முற்று முழுதாக கருவறுக்கப்பட்டு இல்லாமல் போனமை மனதினை நெருடவே செய்கின்றது. உண்மையில் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சினைக்கு அவர்களில் ஒருவரை பழி வாங்குவதற்காக அப்பாவி சிறுவர்கள் பலி எடுக்கப்டுகின்றனர்.
சட்ட மருத்துவத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் நடைபெறும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெறும் புலனாய்வு முக்கியமானது ஆகும். இதன் மூலம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மிக இலகுவாக மரணம் சம்பவித்த சூழ்நிலை மற்றும் மரணம் ஏற்பட்ட காரணம் என்பவற்றினை கண்டறிந்து விடுவார். இவ்வாறான சம்பவங்கள் அல்லது ஒரு இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்படும் பொழுது அவற்றினை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாரிணை அழைக்கவேண்டும்.

https://www.youtube.com/watch?time_continue=91&v=gXXxJ8EY1C8

https://www.youtube.com/watch?time_continue=33&v=2v-McLtd5dE

பேஸ் புக் பார்ட்டி (Facebook party)

இந்த நூற்றாண்டின் வியத்தகு கண்டுபிடிப்புகளில் ஒன்றே முகநூல். முகநூலை பாவிப்பதினால் நன்மையா, தீமையா என்ற விவாதம் நீண்ட காலமாகக் நடைபெற்று வருகின்றது. உண்மையில் நன்மையோ தீமையோ தீர்மானிப்பது பாவிப்பவர்கள் தான். இன்றைய இளைஞர் சமுகத்தில் பலர் முகநூலை பல்வேறு தீமையான விடயங்களுக்காக பாவிப்பவர்களும் உள்ளார்கள். அவற்றில் ஒன்றே இந்த Facebook party என்பது. முகநூலில் உள்ள ஒத்த கருத்துடைய பெரும்பாலும் ஒரே வயதுடைய, குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அதுவும் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த Facebook party இல் ஒன்று கூடுகிறார்கள் . இலங்கையில் அண்மைக்காலங்களில் இவ்வாறு ஒன்று கூடிய பல பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப் பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
உண்மையில் இந்த Facebook party இல் என்னதான் நடக்கிறது என்று ஆராய்ந்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் .

முக்கியமாக இந்த வகை பார்ட்டிகள் இளைஞர் குழு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்படும். அவர்கள் முதலில் இவ்வாறு நடைபெற்ற பார்ட்டிகளில் எடுக்கப்பெற்ற கவர்ச்சிகரமான படங்களை முதலில் முகநூலில் பதிவேற்றி வாடிக்கையாளர்களினை சேர்ப்பார்கள். பின்பு அவர்கள் உரிய இடத்தினை தெரிவு செய்வார்கள் அது பெரும்பாலும் கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டல் ஆக அல்லது காட்டு பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் ஆக இருக்கும். இவற்றில் மாலை தொடக்கம் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் ஒன்று சேர்வர். இரவானதும் மதுபானத்துடன் தொடங்கும் பார்ட்டி போகப்போக போதைப்பொருள் ஐஸ் போன்றவற்றின் பாவனையுடனும் பெரும்பாலும் பாலியல் உறவுடனும் அடுத்தநாள் அதிகாலை முடிவுறும்.

இப்பொழுது இந்த வகை பார்ட்டிகளினால் என்னதான் பிரச்சனை? ஒவ்வொன்றாக பார்ப்போம்
1. இலங்கையில் தற்பொழுது அதிகளவு இளைஞர்கள் ஐஸ் என்ற methamphetamine என்ற போதைப்பொருளினை இங்குதான் பாவிக்க தொடங்குகின்றார்கள். சாதாரண பார்ட்டி தான் என்று முதலில் அழைக்கப்டும் மாணவர்கள் மற்றைய நண்பர்களின் வற்புறுத்தினால் போதைக்கு அடிமையாக தொடங்குகின்றனர்.மேற்குறித்த போதைப்பொருளினை தவிர சிகரெட் , மதுபானம் போன்ற பல்வேறுபட்ட போதைப்பொருள் பாவனையினை ஆரம்பிக்க இவ்வகையான பார்ட்டிகள் உதவுகின்றன.
2. இங்கு மேலும் குறிப்பிட தக்க விடயம் யாதெனில் பெண்கள் அதுவும் பாடசாலை மாணவிகள் இதனை பாவிக்க தொடங்கு கின்றார்கள்
3. உண்மையில் இவ்வகையான பார்ட்டிகள் போதைப்பொருள் வியாபாரிகள் , பாலியல் தொழில் செய்பவர்களின் போன்றோரின் மறைமுக அனுசரணையுடன் தான் நடைபெறுகின்றது. அவர்களின் நோக்கமே புதிய வாடிக்கையார் களை கண்டு பிடிப்பதே.
4. சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இவ்வாறான பார்ட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்கள் மூலம் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றலாம்
5. முக்கியமாக இவ்வகையான பார்ட்டிகளில் பொதுவாக யார் பங்குபெறுகின்றார்கள் என்று ஆராய்ந்தால் கிராமப்புறங்களில் இருந்து தொழில் மற்றும் கல்வி போன்றவற்றிக்காக நகர்ப்புறங்களிற்கு வரும் இளைஞர்களே.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறன பார்ட்டிகள் சிறிய அளவில் நடைபெற தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. எனவே விழிப்போடு இருந்து எதிர்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்

ஒரு முத்தம் ஒரு தப்பா?

அன்று காலையிலேயே எனது அலுவலகத்தின் முன்னால் வழமைக்கு மாறாக அதிகளவு மக்கள் கூட்டமாக நின்றார்கள். அவர்களை விலத்தியவாறு ஒருவாறு உள்நுழைந்தேன். அலுவலக உதவியாளர் தயங்கியபடி கூறினார், சேர் உங்களை சந்தித்து கதைக்க குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலையோடு சம்பந்தமானவர்கள் வந்திருக்கின்றனர் என்றார். அது வடமாகாணத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள ஓர் பாடசாலை அங்கு கடந்த வாரத்தில் அங்கு நடைபெற்ற ஓர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பாகவே அவர்கள் கதைக்க வந்திருப்பது தெரிந்தது. உடனே அலுவலக உதவியாளருக்கு கூறினேன் நான் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவியினை பரிசோதித்து விட்டேன். இது சம்பந்தமாக அவர்களுடன் கதைக்க வேண்டிய தேவையில்லை அவர்களை வெளியே அனுப்பும்படி கூறினேன். அலுவலக உதவியாளர் நீண்ட பகீர பிராயத்தனதின் பின்னர் அவர்களை வெளியே அனுப்பிய பின்னர் என்னிடம் கூறினார் சேர் இது அவர்களுக்கு ஒரு சின்ன கேஸாம் அதாவது அவர்கள் சம்பத்தப்பட்ட பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு முத்தமிட்டது தொடர்பானது. குறித்த ஆசிரியர் மிகவும் நல்லவராம் அத்துடன் பாடசாலை அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றவராம். எனவே மருத்துவ அறிக்கையினை வடிவாக பார்த்து அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்து சென்றனர். மேலும் நான் எனது உதவியாளர் மூலம் அறிந்து கொண்டது யாதெனில் முத்தம் கொடுத்தல் என்பது பாலியல் துஷ்பிரயோகங்களில் பாரதூர மற்ற சாதாரண விடயம் எனவே இவ்வாறான விடயங்களை பெரிதாக்கவும் கூடாது, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கூடாது என்பதே.

இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் முத்தம் இடல், கட்டியணைத்தல் போன்ற பல்வேறு உடல் தொடுகைகளுடனான துஸ்பிரயோகம் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் (Grave sexual abuse) என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாய்க்குள் அல்லது குதத்தினுள் அல்லது உடலின் வேறு எந்தப்பாகத்தினுள் எவரெனும் ஆள் தனது ஆண் உறுப்புக்களை அல்லது வேறு ஏதேனும் உடற்பாகத்தை பயன்படுத்தி பாலியல் திருப்தியை அடையச்செய்யும் செயலில் ஈடுபட்டால் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்தவராகின்றார். (பிரிவு-365ஆ- குற்றவியல் கோவை)

இங்கு பாலியல் துஸ்பிரயோகத்தின் தன்மையினை விட அப்பெண்ணிற்கு இவ்வாறான சமூக, கலாச்சார விடயங்களுக்கு ஒவ்வாத செயற்பாடு மூலம் ஏற்படும் உளத்தாக்கம் அளவிடமுடியாது. இதன்காரணமாக பல ஆண்டுகள் கழித்தும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் அதன் தாக்கத்தினை அனுபவிப்பர். மேலும் குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையும் விசேடமாக கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறன சந்தர்ப்பத்தில் பெண்ணின் மனநிலையானது விசேட மனநல வைத்தியர் ஒருவரினால் அலசி ஆராயப்படும். பாதுகாப்பான காவல் உள்ள இடங்களில் (custodial place ) அதாவது சிறுவர் அல்லது பெண் ஒருவர் வேறு ஒருவரின் அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் இடங்களான பாடசாலை, சிறைச்சாலை, புனர்வாழ்வு முகாம்… போன்றவற்றில் ஒருவர் தனது அதிகாரத்தினை பாவித்து அச்சுறுத்தி செய்யும் பாலியல் துஸ்பிரயோகங்கள் மிகவும் பாரதூரமானவை.

இறுதியாக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் என்றாலே எல்லாம் பாரதூரமானவை தான். அவற்றில் மன்னிக்க கூடியது அல்லது மன்னிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. மேலும் இவ்வாறான குற்ற சாட்டுக்கள் எழும் பொழுது பாடசாலை நிர்வாகம் பூரணமான நடுநிலைமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஈரல் கறி  நல்லதா?

நம்மில் பலர் ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவற்றினை இறைச்சிக்காக வெட்டும் பொழுது ஈரலினை வேறாக எடுத்து கறி வைப்பார்கள். இவ்வாறே தற்பொழுது சூப்பர் மார்க்கெட்டுகளில் கோழியின் ஈரல் மற்றும் உள் அவயவங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் ஏனைய விலங்குகளின் ஈரல் போன்றவை விற்பனைக்காக வந்துள்ளன. நம்மவர் விலங்குகளின் ஈரலினை சிறுவர்களுக்கும், இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கும் மிக்க சத்து நிறைந்தது என்று விசேட கறி கொடுப்பார்கள். உண்மையில் ஈரல் விற்றமின் மற்றும் கனியுப்புக்கள் நிறைந்தது. குறிப்பாக விற்றமின் A,B,E மற்றும் K போன்றனவும் கனியுப்புக்களான இரும்பு, பொசுபரசு, செம்பு மற்றும் மக்னிசியமும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் மனிதன் விலங்குகளின் ஈரலின் தொழில் என்னவென்றால் சமிபாட்டுத்தொகுதியில் இருந்து உடலில் உறிஞ்சுப்பட்டு வரும் உணவில் உள்ள எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றினை வடிக்கட்டி பித்தம் மூலம் மீளவும் சமிபாட்டுத்தொகுதிக்கு அனுப்பி அவற்றினை மலம் மூலம் உடலினை விட்டு வெளியேற்றுதலே ஆகும் (The liver  detoxifies chemicals and metabolizes drugs). இந்நிலையில் விலங்குகளின்  ஈரல் ஆனது எவ்வாறு மனித நுகர்விற்கு உகந்ததாக அல்லாமல் மாறியது என்பதே தற்போதைய கேள்வி ஆகும்.  மனிதன் எப்பொழுது வர்த்தக நோக்கம் கருதி கோழி, ஆடு மற்றும் ஏனைய விலங்குகளை உற்பத்தி செய்ய தொடங்கினானோ, அன்று தொடக்கம் இப்பிரச்சனை தொடங்கிவிட்டது. குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை அதாவது இலாபத்தினை பெறும் முகமாக மனிதனால் இவ்வாறு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் உணவாகவும் மருந்தாகவும் கொடுக்கப்படுகின்றன.  தற்போதைய காலகட்டத்தில் எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன ஈரலில் தேங்கி அதிக அளவில் உள்ளதால் அவை மனித நுகர்வுக்கு உகந்ததா என்ற கேள்வி எழுகின்றது.  அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் புரொயிலர் கோழிகளின் மற்றைய உறுப்புகளை விட ஈரலில் ஆசனிக்கு என்ற பார உலோகம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  வர்த்தக நோக்கம் கருதி வளர்க்கப்படும் விலங்குகளின் ஈரலில் எவ்வாறு மனிதனுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன சேர்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.

  1. விலங்குகளின் குறிப்பாக வர்த்தக நோக்கத்தில் வளர்க்கப்படும் கோழிகளின் ஈரலில் உணவுச்சங்கிலி மூலமாகவும், வழங்கப்படும் உணவுகள் மூலமும் ஆசணிக் , கட்மியம் போன்ற பார உலோகங்கள் செறிவடைகின்றன. இவ்வாறே நீர்கொழும்பின் கடல்நீரேரியில் உள்ள மீன்களிலும், உள்ளூரில் விளைந்த சில அரிசி இனங்களிலும் மேற்குறித்த அதிகளவு பார உலோகங்கள் இருப்பது கன்டுபிடிக்கப்படுள்ளது.
  2. விலங்குகளுக்கு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயினை குணப்படுத்தவும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் அதிகளவில் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாவிக்கப்படும் மருந்துகளின் பக்கவிளை பொருட்கள் (metabolic products ) அதிகளவில் ஈரலில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக levamisole (drugs used to treat parasitic worms) என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் புரொயிலர் கோழியின் ஈரலில் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் விலங்கு இறைச்சி அதிலும் ஈரல் மூலம் மனிதனை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
  3. குறிப்பாக பன்றி மற்றும் ஏனைய மிருக வளர்ப்புகளில் அவற்றில் கொழுப்பின் அளவினை குறைத்து தசையின் அளவினை அதிகரிப்பதற்காக பல்வேறுபட்ட ஹோர்மோன் வகைகள் பாவிக்கப்படுகின்றன. முக்கியமாக zeranol என்ற செயற்கை ஹோர்மோன் மற்றும்  17β-oestradiol என்ற இயற்கையாக காணப்படும் ஹோர்மோன்கள் உள்ளடங்கும். முக்கியமாக இவை விலங்குகளின் ஈரல் மூலம்  மனிதனை அடைந்து புற்று நோய் உட்பட்ட பல்வேறுபட்ட தாக்கங்களினை விளைவிக்கும் (Studies have shown that growth hormone residues in animal liver adversely affect human health including neurobiological, genotoxic and carcinogenic effect).
  4. விலங்குகளின் ஈரலில் அதிகளவு விற்றமின் A உள்ளது இதன் காரணமாக அதிகளவில் மற்றும் அடிக்கடி விலங்கு ஈரலினை உணவாக உட்கொள்ளுபவர்கள் விற்றமின் A நச்சாக்கத்திற்கு உட்பட்டதினை மருத்துவ அறிக்கைகள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார் இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அவர்களின் கருப்பையில் இருக்கும் குழந்தையும் விற்றமின் A நஞ்சாக்கத்தினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு. மேலும் கொலஸ்ரோல் அதிகம் உள்ளவர்களும் விலங்கு ஈரல் உணவினை தவிர்ப்பது நல்லது.

இறுதியில், ஈரல் கறி சாப்பிடலாமா அல்லது சாப்பிட கூடாதா என்னதான் முடிவு? விடை இதுதான், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.  

கோவிலுக்கு கார்பெட் வீதி நல்லதா ?

தற்பொழுது தேர்தல் காலம் நெருங்குவதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல உறுப்பினர்கள் தமக்கு நிதியினை கொண்டு கோவில்களின் வெளி வீதிக்கு தார் ஊற்றி கார்ப்பெட் வீதியாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் ஏற்படும் சுகாதார சம்பந்தமான பிரச்சனைகளை இப்பதிவு ஆராய்கிறது. முக்கியமான சிலபிரச்சனைகளை இங்கு பார்ப்போம்

  1. இயற்கையில் ஒவ்வொரு சூழல் தொகுதியிலும் காணப்படும் பல்வேறுபட்ட நுண்ணங்கிகளே அங்கு சேரும் கழிவுகளை உக்கி அவற்றினை சூழலில் இருந்து அகற்றுகின்றது. நாம் சாதாரணமாக கோவிலின் வெளிவீதியில் இருக்கும் மணலிலான வீதியினை அகற்றிவிட்டு தார் ஊற்றும் பொழுது மணலில் உள்ள நுண்ணங்கிகள் இல்லாமல் போகும். இதனால் தாரின் மேற்பரப்பில் தங்கும் கழிவுகள் அதிக காலத்தின் பின்னரே உக்கி அழிவடையும். இதன் காரணமாக தாரின் மேற்பரப்பில் நாய் போன்ற மிருகங்களின் மலக்கழிவுகள் கழிவுகள், தாவரங்களின் இலை போன்ற கழிவுகள், மனிதர்களால் போடப்படும் போன்ற கழிவுகள் கழிவுகள் நீண்டகாலமாக தங்கி நிற்கும். இவை வெளி வீதியில் அங்க பிதிஷ்டை செய்யும் அடியவர்களின் உடலினை அடையும் சந்தர்ப்பம் அதிகமாகும். சாதாரணமாக நல்லூரில் வெளிவீதியில் போடப்படும் மணல் வீதியில் இருந்தே நாய் மற்றும் பூனை ஆகியவற்றின் மலத்தில் இருக்கும் ஒட்டுண்ணி புழு ஆனது வெளி வீதியில் அங்க பிரதிஸ்டை செய்த அடியவர்களை தாக்கி நோய் நிலையினை உண்டாக்கிய சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  2. போடப்படும் தார் கறுப்பு நிறத்திலேயே இருக்கும். அதனால் இப்பொழுது என்ன பிரச்சனை? கறுப்பு நிறமானது குறைந்த நேரத்தில் அதிகளவு வெப்பத்தினை உறிஞ்சும் அதேவேளை உறிஞ்சிய வெப்பத்தினை அதிகளவில் காலும் தன்மையுடையது. இந்த பௌதீகவியல் விளக்கம் பௌதீகவியல் படித்த யாவரும் அறிந்ததே. இதனால் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் அதிகளவு வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாவர். மேலும் நீர் அடித்து வீதியினை குளிர்மை படுத்த முயன்றால் மணல் வீதி மாதிரி நீர் தரையினுள் உள்ளிறங்காது, மேற்பரப்பில் தங்கிநிற்கும்பொழுது ஏற்கனவே உள்ள மலக்கழிவுகள் அதில் கரைந்து அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் ஆகியோரில் படிவடையும்.111
  3. திருவிழாக்காலங்களில் மாலை நேரங்களில் சிறுவர்கள் பொதுவாக வெளிவீதியில் ஓடி விளையாடுவார்கள். இவ்வாறு மணல் விளையாடும் பொழுது சிறுவர்கள் பலசந்தர்ப்பங்களில் சறுக்கி விழுந்த சந்தர்ப்பங்கள் உண்டு. மணலில் இவ்வாறு விழும் பொழுது பொதுவாக காயம் வராது ஆனால் தார் வீதியில் விழும் பொழுது காலில் பலத்த உரசல் காயம் ஏற்பட சாத்தியக்கூறு உண்டு.
  4. மாலை நேரங்களில் வெளிவீதியில் அதுவும் மணலில் குந்தி இருந்து கதைத்த கதைகளை சாதாரண மனிதன் ஒருவனால் மறக்க முடியாது. அதிக வெப்பம் காரணமாக தார் வெளிவீதியில் குந்தி இருக்க கூட முடியாத நிலை ஏற்படும். அவ்வாறே சிறுவர்கள் மணலில் சிற்பம் அல்லது சிலை போன்றவற்றினை செய்து காட்சிப்படுத்துவதும் காலப்போக்கில் இல்லாமல் போகும்.

ஒட்டு மொத்தத்தில் தார் வீதி இடுவதினால் அல்லது சீமெந்து தரை இடுவதினால் ஏற்படும் நன்மைகளை விட பல்வேறுபட்ட தீமைகளே ஏற்படும். அத்துடன் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.

இது அதற்கு சரிப்பட்டு வருமா?

அவர் அரச உத்தியோகத்தில் அதிகாரமிக்க பதவியில்  உள்ளவர். அவருக்கு சிறுவயது முதலே சலரோகம் உள்ளது. அதாவது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சலோரகம் உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் வரவில்லை. ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக அவருக்கு நீண்டகாலமாக சலரோகம் இருந்ததன்காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் வரத்தொடங்கியது. காலில் கிருமித்தொற்று, சிறுநீரில் கிருமித்தொற்று.. என்றவாறு பல்வேறு பட்ட பிரச்சனைகள், அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதியாகி தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிர்ப்பந்தம்.

இவ்வாறு அவர் ஒருமுறை நான் வேலை செய்யும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பொழுது எனது உறவினர் ஒருவர் அவரினை போய்ப்பார்த்து வரும்படி வேண்டுகோள் விடுத்தார். வைத்தியராக வேலை செய்யும் பொழுது இவ்வாறன அன்புக்கோரிக்கைகள் சிலவேளைகளில் தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.

நான் அவரினை பார்வையிட சென்ற பொழுது வைத்தியசாலையின் கட்டிலின் அருகில் உள்ள சிறு அலுமாரியின் மேல் புதிய ஏழு நெஸ்டோமோல்ட் டின்கள் அடுக்கப்பட்டிருந்தன. நானும் என்னை அறிமுகப்படுத்தி அவரினை சுகம் விசாரிக்கும் பொழுது கேட்டேன். நீங்கள் நெஸ்டோமோல்ட் பாவிக்கக் கூடாது தானே என்று. அடுத்து அவர் கூறிய பதில் தான் ஆச்சரியத்தினை தந்தது. புதிதாக உள்ள நெஸ்டோமோல்ட் அனைத்தும் அவரது உறவினர்களும் மற்றும் அவரது அலுவலகத்தில் வேலை செய்யபவர்களும் தான் கொண்டுவந்தவை.  மேலும் அவர் கூறியதாவது தான் அவற்றினை பாவிப்பதில்லை என்றும் இவ்வாறு தன்னை பார்க்க வருபவர்கள் தருபவற்றினை தான் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மனிதனாக பிறந்துவிட்டால் நோய்வாய்ப்படுவதும் காயங்களுக்கு உள்ளாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளே. இவ்வாறே மனிதன் ஒருவன் வாழ்நாளில் ஒருமுறையாவது வைத்தியசாலை செல்லவேண்டிய தேவை ஏற்படும்.

எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை பார்வையிட செல்லும் பொழுது எவ்வாறான உணவு பொருட்களை அல்லது பால்மாவகைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவதில்லை. பலர் ஏனொதானோ என்ற வகையில் வெறுமனே கடமைக்காக எதாவது ஒரு பொருளினை வாங்கிக்கொண்டு செல்வார்கள். வேறுசிலர் இலகுவாக எந்த பொருள் கிடைக்கின்றதோ அதனை வாங்கிக்கொண்டு செல்வார்கள். சிலர் கணக்கு பார்த்து வாங்குவார்கள். மேலும் சிலர் பழவகை போன்றவற்றினை வாங்கிச்செல்ல அது கௌரவக்குறைவு என்று நினைக்கின்றனர். பெரும்பாலான  சந்தர்ப்பங்களில் நான் வாங்கிக்கொடுக்கும் உணவு அல்லது பொருட்களை நோயாளி பயன்படுத்துவாரா? என்று கூட நாம் சித்திப்பதில்லை. இதனால் நாம் செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராகவே போகும். தகுந்த பொருட்களை தெரிவுசெய்ய நாம் அதிகம் படித்திருக்க தேவையில்லை. நோயாளியின் நோய் பற்றி அறிந்திருந்தாலே போதுமானது. தேவையேற்படின் நோயாளியினை அல்லது அவர்களின் உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களின் தேவையினை கண்டறிந்துகொள்ளலாம்.

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

குறிப்பு – மேற்குறித்த நிறுவனங்களின் உற்பத்தியினை அல்லது நற்பெயரினை பாதிக்கும் நோக்கில் இப்பதிவு இடப்படவில்லை.

வீட்டிற்குள்ளும் வந்தது 5G

தற்போதைய தொழில் நுட்ப உலகில் இணையத்தின் வேகம் அதிகம் இருந்தால் மட்டுமே அதிக விடயங்களை இலகுவாக சாதிக்கலாம். இதன் பொருட்டு காலகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றில் இறுதியாக தொலைத்தொடர்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததே 5G தொழில்நுட்பம் ஆகும். தற்பொழுது இதனை விட மேலான மேலான தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் மிகவும் அதிக தூரம் இடையூறு இன்றி பயணம் செய்யும் ஆற்றல் அற்றவை. இதன் காரணமாகவே மேற்குறித்த 5G அலைகளை கடத்தும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மிக குறைந்த இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வலைகள் தொடர் மாடித்தொகுதிகளினுள் குறைவாகவே உட்செல்லும் அதன்காரணமாக பெரும்பாலான நேரங்களில் தொடர் மாடிகளில் வசிக்கும் மக்கள் குறைந்தளவான coverage இணை பெற்றுக்கொள்வர். இவ்வாறன பகுதிகளில் எமது கைத்தொலை பேசி வேலை செய்யும் பொழுது அதிகளவான கதிர்வீச்சினை காலும். இவற்றினை நிவர்த்தி செய்ய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தொடர் மாடிப்பகுதிகளில் அல்லது coverage குறைந்த பகுதிகளில் அதனை கூட்டும் முகமாக கருவி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வீடுகளில் உள்ளும் மக்கள் தங்கு தடையின்றி 5G வசதியினை அனுபவிக்க முடியும்.

இலங்கையில் தற்பொழுது 4.5G தொழில் நுட்பத்தினை வழங்கும் முகமாகவே இலங்கையின் பல பல பிரதேசங்களில் smart pole என்ற சிறிய கோபுரங்கள் நாட்டப்பட்டுள்ளன. கீழே உள்ள படங்களில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களை காணலாம்.

facebook_15624903826149118478306109136995.jpg

இவ்வாறான smart pole திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சூழலியல்வாதிகள் ஆகியோர் இலங்கையின் நகர்ப்புறங்களில் தொடர் மாடிகளின் மேற்பகுதியில் அதுவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு எதிராக ஒருபொழுதும் குரல் எழுப்பியதில்லை. கீழே உள்ள படத்தில் கொழும்பின் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை காணலாம்.

20190516_1809331477561231918233699.jpg

உயிரினை பறித்த ஊஞ்சல்

பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் சாதாரண ஊஞ்சல் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உயிர்களை பறித்துவிடும். இருதினங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஓர் துயர சம்பவம் பொகவந்தலாவ பிரதேசத்தில் நடைபெறுள்ளது. குறிப்பாக பெரியவர்கள் யாரும் அற்ற நிலையில் தனியே ஊஞ்சல் ஆடிய சிறுமியை இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் வருடம் ஒன்றில் சில சிறுவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவையே. ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன , எவ்வாறு இந்த சம்பவங்களை தடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.. ஊஞ்சல் ஆடுதல் என்பது தமிழரின் வாழ்வியலோடு இரண்டற கலந்த விடயம் ஆகும். தமிழரின் கடவுள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடியிருப்பர். வித்தியாசம் பாவித்த பொருட்கள் மாத்திரமே. எம்மில் பலர் அம்மாவின் சேலை, மாடு கட்டும் நைலான் கயிறு, பொச்சு கயிறு போன்றவற்றினை பாவித்து ஊஞ்சல் ஆடியிருப்போம். இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி எவ்வாறு இவ்மரணங்கள் நிகழுகின்றது? என்பதே.

சட்ட மருத்துவத்தில் இவ்வாறு நடைபெறும் மரணங்கள் தற்செயலாக தூங்கிய மரணங்கள்(accidental hanging) என்ற வகைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. உலகத்தில் இவ்வாறு பல மரணங்கள் சம்பவித்துள்ளமையினை உரிய விஞ்ஞான அறிக்கைகள் மூலம் அறியலாம். முக்கியமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பின்னணியினை பார்த்ததால் சிலவிடயங்கள் எமக்கு புலனாகும். அவையாவன
1. நீண்ட கயிற்றில் ஊஞ்சல் ஆடல் – ஊஞ்சல் கயிறு இலகுவாக முறுக்கி கழுத்தினை சுற்றுவதற்கான சந்தர்ப்பம் உண்டு
2. மேலும் கீழுமாய் (pendulum movement) ஆடாமல் ஒரே இடத்தில் இருந்து சுற்றுதல் – ஒரே இடத்தில் சுற்றுவதால் ஊஞ்சல் கயிறு இலகுவாக சுற்றுப்படும் மேலும் ஊஞ்சல் ஆடுபவரும் தலை சுற்றல் ஏற்பட்டு விழ அல்லது கயிற்றில் அகப்பட சாத்தியக்கூறு அதிகம் உண்டு

3. பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி அதிக நேரம் ஊஞ்சல் ஆடுபவர்கள்.

4. ஊஞ்சலில் இருக்காமல் நின்றுகொண்டு அல்லது படுத்திருந்து ஊஞ்சல் ஆடுபவர்கள்

5. முக்கியமாக இங்கு கழுத்தினை சுற்றி முடிச்சு வருவதில்லை மாறாக கயிறானது முறுக்கி இறுக்குவதே காரணம் ஆகும்.

இவ்வாறு ஊஞ்சல் ஆடும் பொழுது தன்னிச்சையாக கயிறு திரிந்து சிறுவர்களின் கழுத்து போன்ற பகுதிகளை இறுக்குவதை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்
1. ஊஞ்சலில் இருக்கை பகுதி கதிரை போன்றவற்றினால் அல்லது மரப்பலகையினை குறுக்காக வைத்து செய்தல் – இதன் காரணமாக கயிறு சிறுவர்களை நெருக்காது.
2. ஊஞ்சலில் மேலே கட்டிடப்படும் கயிறுகள் இரண்டும் குறித்த தூரத்தில் இருக்கத் தக்கவாறு கட்டல் அல்லது ஊஞ்சலில் மேற்பகுதியில் கயிறுகள் இரண்டுக்குக்கும் இடையில் பலகை ஒன்றினை வைத்து கயிறுகள் இரண்டினையும் ஒன்று சேராது தவிர்த்தல்.

3. பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளை ஊஞ்சல் விளையாட விடல்.
4. சிறுவர் பூங்காக்களில் காணப்படும் ஊஞ்சல் போன்று இரும்பு சங்கிலியால் ஆன ஊஞ்சலில் சிறுவர்களை விளையாட விடல்.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது சிறுவன் ஒருவனின் கழுத்து பகுதியானது இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்கள் இறுக்கப் பட்டு இருந்தாலே மூளை இறப்பு (hypoxic brain death) ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

எனவே சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடும் பொழுது பெரியவர்கள் ஆகிய நாம் அவதானமாய் இருப்போம், அநியாய உயிரிழப்புக்களை தடுப்போம் .

நன்றி

11 பேரினை பலிகொண்ட …..

அண்மையில் இலங்கையில் மீரிகம பகுதியில் கசிப்பு அருந்திய பலர் கசிப்பு விசமானதன் காரணமாக இறந்துள்ளனர். தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 11 இணை எட்டியுள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.

முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல்   (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால்  என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.

நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.

கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி  போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது.  ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.

ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு  உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.

உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.

இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

03

அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால்  கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.

இது தொடர்பான இன்னொரு பதிவு

கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்