ஒரு இரவு உல்லாசம்… மறுநாள் சடலம்! விடுதிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

தங்கும் விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயது நபர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் ஹசலக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், அண்மையில் அறிமுகமான ஹங்குரன்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணுடன் தங்குவதற்காக மஹியங்கனை நகரிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் அறையை முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முடியும் வரை, சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணை மஹியங்கனை பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக விடுதிகளில் (Lodge/Guest house) தங்கியிருக்கும் நடுத்தர வயது நபர்கள் உடலுறவின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தடயவியல் மருத்துவ ரீதியாக, இது தற்செயலான மரணம் (Accident dead) அல்ல; மாறாக உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மருந்துகளின் தவறான பயன்பாடு ஆகியவற்றின் விளைவாகும். இவ்வாறான திடீர் மரணங்களுக்குரிய காரணங்கள் பின்வருமாறு

1. இதயமும் இரத்த அழுத்தமும் (Cardiovascular Strain)

உடலுறவு என்பது ஒரு தீவிரமான உடற்பயிற்சிக்குச் சமமானது. உச்சகட்ட நிலையை (Orgasm) அடையும் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140–180 வரை அதிகரிக்கலாம். அவ்வாறே இரத்த அழுத்தமும் சடுதியாக 200mmHg இணை தாண்டி அதிகரிக்கும். பலரில்  நீண்டகால இரத்த அழுத்தம் இதயத் தசைகளைத் தடிமனாக்கி, இரத்தக் குழாய்களைச் சுருக்குகிறது. இவ்வாறான நிலையில் இந்த திடீர் அழுத்தத்தை இதயம் தாங்க முடியாமல் போகும்போது மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.

இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் அறிமுகமில்லாத இடங்களில் அல்லது மறைமுகமான சந்திப்புகளின் போதே அதிகம் நிகழ்கின்றன. “பிடிபட்டு விடுவோமோ” என்ற பயமும், “திறமையை நிரூபிக்க வேண்டும்” என்ற பதற்றமும் உடலில் அட்ரினலின் (Adrenaline) ஹார்மோனை அதிகப்படியாகச் சுரக்கச் செய்கிறது. இது இரத்த அழுத்தத்தை அபாய கட்டத்திற்கு தள்ளுகிறது.

2. விரிவடைந்த இதயத் தசை நோய் (Dilated Cardiomyopathy)

பலவீனமான மற்றும் விரிவடைந்த இதயம் கொண்டவர்களுக்கு, உடலுறவின் போது ஏற்படும் அதிகப்படியான வேலைப்பளு இதயத்தை உடனடியாக செயலிழக்கச் செய்யும்.

3. பக்கவாதம் (Stroke)

உடலுறவின் போது ஏற்படும் அதீத இரத்த அழுத்த உயர்வால் மூளையிலுள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் வெடிக்கக்கூடும் (Subarachnoid Hemorrhage). இதனால் உடலுறவின் போதோ அல்லது முடிந்த உடனேயோ கடும் தலைவலி ஏற்பட்டு நபர் உயிரிழக்க நேரிடும்.

4. சில்டெனாபில் (Sildenafil/Viagra) மற்றும் மருந்து இடைத்தாக்கம்

பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் சில்டெனாபில் மாத்திரைகள் பல நேரங்களில் எமனாக மாறுகின்றன:

  • நைட்ரேட் மருந்துகளுடன் இடைத்தாக்கம்: ஏற்கனவே இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள், சில்டெனாபில் மாத்திரையைச் சேர்க்கும்போது இரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறைந்து மயக்கம் அல்லது மரணம் ஏற்படலாம்.
  • எச்சரிக்கை மணி முடக்கப்படுதல்: விறைப்புத்தன்மை குறைபாடு என்பது இதயம் பலவீனமாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும். அந்த இயற்கை எச்சரிக்கையை மாத்திரைகள் மூலம் மறைத்துவிட்டு உடலை வருத்தும்போது இதயம் “ஷார்ட் சர்க்யூட்” ஆகி நிக்கிறது.

5. உடலுறவுக்குப் பின் நிகழும் மாற்றம் (Post-Coitus Death)

மரணம் உடலுறவின் போது மட்டுமல்லாமல், முடிந்த சில நிமிடங்களிலும் நிகழலாம். உச்சகட்டத்திற்குப் பிறகு உடல் ஓய்வு நிலைக்குத் திரும்பும் போது ஏற்படும் திடீர் இரத்த அழுத்த மாற்றத்தை (Vasovagal response) பலவீனமான இதயம் தாங்கிக் கொள்ளாது.

தடயவியல் மருத்துவ  ஆய்வு

மரணத்திற்குப் பிறகு செய்யப்படும் சோதனைகளில் இதயத்தின் தமனிகளில் அதாவது முடியுரு நாடிகளில்  அடைப்பு உள்ளதா அல்லது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்று பார்க்கப்படுகிறது. மேலும்  இரத்தத்தில் சில்டெனாபில் அல்லது மதுவின் அளவு எவ்வளவு உள்ளது என்று நவீன LC-MS/MS கருவிகள் மூலம் கண்டறியப்படுகிறது.
உடல் தகுதியை மீறிய செயல்பாடும், முறையற்ற மருந்துப் பயன்பாடும் இத்தகைய “கட்டில் மரணங்களுக்கு” (Death in the saddle) முக்கியக் காரணமாகின்றன. 40 வயதைக் கடந்தவர்கள் முறையான இதயப் பரிசோதனை செய்து கொள்வது இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க உதவும்.

விடுதிகளில் நிகழும் திடீர் மரணங்கள் – மறைக்கப்பட்டிருக்கும் மருத்துவ அபாயங்கள்

தற்காலிக மகிழ்ச்சியை விட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்

1. இரத்த அழுத்தத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்

  • கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம்.
  • அறியப்படாத இதய நோய்கள் (உதாரணம்: இதயத் தசை வீக்கம் – Cardiomyopathy).

2. ஆபத்தான சுய மருத்துவத்தைத் தவிர்க்கவும்

  • சில்டெனாபில் (Sildenafil/Viagra) போன்ற மாத்திரைகளால் ஏற்படும் அபாயங்கள்.
  • மற்ற மருந்துகளுடன் (உதாரணம்: நைட்ரேட் மருந்துகள்) ஏற்படும் உயிருக்கு ஆபத்தான விளைவுகள்.

3. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணருங்கள்

  • அறிமுகமில்லாத இடங்களில் ஏற்படும் அதிகப்படியான பதற்றம்.
  • உடலில் திடீரென அதிகரிக்கும் அட்ரினலின் (Adrenaline) அளவு.

4. மருத்துவப் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்கவும்

  • ஆண்டுதோறும் இதயப் பரிசோதனை செய்தல் (குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்).
  • நாள்பட்ட நோய்களைச் சரியாக மேலாண்மை செய்தல்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.