உயிரை பறித்த மின்சார வேலி!

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நிலமட்டத்தில் இருந்த யானை வேலி கம்பியிலிருந்து வந்த மின்சாரம் தாக்குதலே மேற்குறித்த இருவரின் மரணத்திற்கும் காரணமாய் அமைந்தது. அத்துடன் மின்சார வேலியில் அகப்பட்டவரை காப்பாற்ற சென்ற நபரே மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார்.

இலங்கையில் மின்சார வேலி (Electric Fence) விபத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. குறிப்பாக மனித-யானை மோதல் (Human-Elephant Conflict – HEC) காரணமாக அமைக்கப்படும் சட்டவிரோதமான மின்சார வேலிகளே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. இலங்கையில் நிகழும் மொத்த மின்சார விபத்து மரணங்களில் (Electrocution), சுமார் 40% முதல் 45% வரை காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலிகளாலேயே ஏற்படுகின்றன. 2023-இல் மட்டும் 488 யானைகள் உயிரிழந்துள்ளன. இது வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். இதில் சுமார் 72 யானைகள் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளன.

மின்சார வேலிகள் உயிரைக் கொல்லும் நோக்கம் கொண்டவை அல்ல, அவை எச்சரிக்கை செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு உயிர் இழப்பு ஏற்படுகிறது என்றால், அந்த வேலி முறையாக அமைக்கப்படவில்லை அல்லது விதிகளுக்குப் புறம்பாக நேரடியாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். மின்சார வேலி (விபத்துக்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான முக்கியமான தகவல்கள் இதோ:

1. சான்றளிக்கப்பட்ட எனர்ஜைசரை(Energizer) பயன்படுத்துங்கள்

மின்சார வேலியை ஒருபோதும் வீட்டின் நேரடி மின்சாரத்துடன் (AC Mains) இணைக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட Fence Energizer கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்தக் கருவி மின்சாரத்தை “பல்ஸ்” (Pulse) முறையில், அதாவது விட்டு விட்டு மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கும். இது ஒருவரைத் தூக்கி எறிய உதவுமே தவிர, மின்சாரத்தோடு ஒட்டிக்கொள்ளச் செய்யாது.

2. முறையான புவித்தொடுகை  (Grounding/Earthing)

புவித்தொடுகை  சரியாக இல்லாவிட்டால், மின்சாரம் தேவையற்ற இடங்களில் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தும். குறைந்தது 3 மீட்டர் ஆழத்திற்கு முறையாக ‘எர்த்’ (Earth) கம்பிகளை அமைக்க வேண்டும். இது மின்சுற்றை ஒழுங்குபடுத்தி, தேவையற்ற விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும்.

3. எச்சரிக்கைப் பலகைகள் கட்டாயம் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)

வேலியில் மின்சாரம் இருப்பதை மற்றவர்கள் அறியச் செய்வது அவசியம். ஒவ்வொரு 10 மீட்டருக்கும் ஒருமுறை “அபாயம் – மின்சார வேலி” என்ற எச்சரிக்கை வாசகம் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) எழுதப்பட்டிருக்க வேண்டும். மஞ்சள் நிறப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்களுடன் மின்னல் குறியீடு இருக்க வேண்டும். இது குழந்தைகள் மற்றும் வழிப்போக்கர்கள் தெரியாமல் வேலியைத் தொடுவதைத் தடுக்கும்.   

4. கம்பி வகை மற்றும் தளர்வு

வேலியில் முட்கம்பிகளை (Barbed wire) பயன்படுத்தக் கூடாது. மென்மையான கம்பிகளை (Plain wire) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் முட்கம்பி ஒருவரின் உடையில் அல்லது உடலில் சிக்கிக்கொண்டால், மின்சார அதிர்ச்சியில் இருந்து அவர் விடுபட முடியாமல் போக வாய்ப்புள்ளது.

5. உயரம் மற்றும் அமைப்பு

குடியிருப்பு பகுதிகளில், மின்சாரம் பாயும் கம்பிகள் தரையிலிருந்து குறைந்தது 1.5 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும். இது சிறிய குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகள் தெரியாமல் தொடுவதைத் தவிர்க்கும்.

யாராவது மின்சாரத்தில் சிக்கியிருந்தால் என்ன செய்வது?

  1. நேரடியாகத் தொடாதீர்கள்: உங்கள் கைகளால் அவர்களைத் தொட்டால் உங்களுக்கும் மின்சாரம் பாயும்.
  2. மின்சாரத்தை நிறுத்துங்கள்: முதலில் மெயின் சுவிட்ச் அல்லது எனர்ஜைசரை அணைக்கவும்.
  3. மரக்கட்டையைப் பயன்படுத்துங்கள்: மின்சாரம் பாயாத உலர்ந்த மரக்கட்டை அல்லது பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு அவர்களை வேலியில் இருந்து விலக்கி விடவும்.

சட்ட நிலைப்பாடு

  1. இலங்கையில் பலர் மின்சார வயர்களை நேரடியாக 230V மெயின் லைனில் இணைக்கிறார்கள். இது மனிதர்களையும் யானைகளையும் உடனடியாகக் கொல்லும் இவ்வாறு வீட்டின் மெயின் மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்துவது மின்சாரசபை சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் சட்டப்படி குற்றமாகும்.( Sri Lanka Electricity Act, No. 20 of 2009)
  2. தாவர விலங்கினப் பாதுகாப்புச் சட்ட (Fauna and Flora Protection Ordinance – No. 02 of 1937 & Act No. 22 of 2009) பிரகாரம் யானை போன்ற விலங்குகள் இவ்வாறு அமைக்கப்பட்ட வேலியில் சிக்கி உயிரிழந்தால் அது பிணையில் வெளிவரமுடியாத பாரிய குற்றமாக கருதப்படுகின்றது

எனர்ஜைசர்கள்  (Energizer) இலங்கையில் 20,000 ரூபாயில் இருந்து விற்பனையாகின்றன. இவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு வழங்கும் தூரம், சோலார் வசதி என்பவற்றினை பொறுத்து விலை வேறுபாடடையும். இவற்றினை வாங்கி பொருத்துவதன் மூலம் நாம் பிறரின் உயிரினை பாதுகாக்கலாம் அத்துடன் எம்மையும் சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கலாம்.

நன்றி

குளவியின் தாக்குதலும் மனித உயிரிழப்புக்களும்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளது. அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (53 வயது) அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டு. இப்பதிவில் இக்குளவியின் தாக்கத்திர்ற்கு உள்ளான ஒருவர் ஏன் இறக்க வேண்டும் என்பது பற்றி சட்ட மருத்துவ ரீதியில் அலசுவோம். பல நோயாளிகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் பொழுது வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதில்லை உதாரணமாக முதலில் தேனீ தான் குத்தியது  என்பார்கள் சிறிது நேரத்தில் உறவினருடன் கைத்தொலைபேசியில் கதைத்து விட்டு கூறுவார்கள் டொக்டர் தேனீ அல்ல குளவியே குத்தியது என்பார்கள். கீழே உள்ள படமானது தேனிக்கும் குளவிக்கும் உள்ள உருவவியல் அடிப்படை வேறுபாடுகளை விளக்குகின்றது.

தேனீ மற்றும் குளவிக்கு இடையே உள்ள முக்கிய தோற்ற மற்றும் பண்பு வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • உடல் அமைப்பு: தேனீக்கள் பருமனான மற்றும் உருண்டையான உடல் அமைப்பைக் கொண்டவை. குளவிகள் மெலிந்த உடலையும், மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் மிகக் குறுகிய “இடுப்பு” (narrow waist) பகுதியையும் கொண்டுள்ளன.
  • உடல் முடி (Fuzziness): தேனீக்களின் உடல் முழுவதும் மென்மையான முடிகள் (fuzzy) காணப்படும். குளவிகள் பொதுவாக முடி இல்லாமலும், பளபளப்பான மென்மையான தோலுடனும் (shiny/smooth) காணப்படும்.
  • நிறம்: தேனீக்கள் பொதுவாக பழுப்பு கலந்த மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். குளவிகள் பிரகாசமான மஞ்சள் மற்றும் கருப்பு நிற வரிகளுடன் (bright yellow bands) அதிக எடுப்பாகத் தெரியும்.
  • கால்கள்: தேனீக்களின் பின்னங்கால்கள் தட்டையாகவும், மகரந்தத்தைச் சுமந்து செல்ல “மகரந்தக் கூடை” (pollen basket) போன்ற அமைப்பைக் கொண்டும் இருக்கும். குளவிகளின் கால்கள் மெலிந்து, உருளை வடிவில் இருக்கும்.
  • கொடுக்கு (Stinger): தேனீக்கள் ஒருமுறை கொட்டியவுடன் அவற்றின் கொடுக்கு உடலிலிருந்து பிரிந்துவிடும், இதனால் அவை இறந்துவிடும். குளவிகள் தங்களது மென்மையான கொடுக்கைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பலமுறை கொட்டும் திறன் கொண்டவை.
  • உணவு: தேனீக்கள் பூக்களிலிருந்து தேன் மற்றும் மகரந்தத்தை மட்டுமே உண்ணும் “சைவ” பூச்சிகள். குளவிகள் மற்ற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் “அசைவ” பண்பு கொண்டவை.

பொதுவாக தேனீயானது மனிதன் ஆனவன் அதன் கூட்டினை கலைக்கும் பொழுது தான் தாக்கும் . ஆனால் குளவியானது மனிதனை தேடிச்சென்று தாக்கும் இயல்பு உடையவை.குளவியானது மனிதனை தாக்கும் போது தேனீயினை விட அதிகளவு நச்சினை உட்செலுத்தும் அத்துடன் அதன் நச்சானது மிக்க வீரியம் கூடியது. எனவே சிகிச்சை அளிக்கும் வைத்தியர்ளுக்கு என்ன குத்தியது என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும்.

தேனீயானது வாயின் கொடுக்கினால் குத்தும் அதேவேளை குளவி உடலின் பின்புறத்தில் உள்ள கொடுக்கு (A sting is delivered by a posterior, tapered, needle like structure designed to inject venom). மூலமும் மனித உடலில் நச்சிணை பலதடவை உட்செலுத்துகின்றன.

இலங்கையில் உள்ள மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குளவி இனங்கள்

அடுத்து குளவி குத்தி மரணம் எவ்வாறு நிகலுகின்றது என்பது பற்றி பார்ப்போம். உண்மையில் மரணமானது உட்செலுத்தப்பட்ட நச்சானது உடலில் ஏற்படுத்தும் ஒவ்வாமை தாக்கத்தினாலும் அதன் நச்சியல் இயல்பினாலும் ஏற்படுகின்றது. அதாவது சில மரணங்கள் ஒவ்வாமையினால் மட்டுமே ஏற்படும் சில மரணங்கள் நச்சியல் தாக்கத்தினால் மட்டுமே ஏற்படும். ஆனால் பல இறப்புக்கள் மேற்கூறிய இரண்டினதும் சேர்க்கைகள் காரணமாகவே ஏற்படுகின்றது.
ஒவ்வாமைத் தாக்கம் எனப்படும் பொழுது சாதாரணமாக தோலில் ஏற்படும் எரிவு, வீக்கம் (local allergic reaction) போன்றவற்றில் இருந்து சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும் தாக்கம் ( anaphylatic shock) வரை இருக்கும். இங்கு ஒவ்வாமையினால் மரணம் நிகழும் பொழுது உட்செலுத்தப்பட்ட கொடுக்குகளின் எண்ணிக்கை அதாவது குத்திய குளவிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்காது. ஒருசில குளவிகள் குத்தினாலே மரணம் சம்பவிக்கும். மாறாக குளவியின் நச்சின் (Toxic effect) இயல்பால் மரணம் நிகழ வேண்டும் எனில் குறிப்பிடத்தக்க அளவில் குளவிகள் குற்ற வேண்டும். உதாரணமாக மனிதனை 500 தொடக்கம் 1200 வரையான தேனீக்கள் குற்றினாலே செலுத்தப்பட்ட நஞ்சின் விளைவாக மரணம் சம்பவிக்கலாம் (The human LD50 for honey bee stings has been estimated to be between 500-1200 stings)
இவ்வாறு அதிகளவு குளவிகள் குற்றும் பொழுது அதிகளவு நஞ்சேற்றல் (mass envenomation) ஏற்பட்டு உடனடியான சிறுநீரக செயலிழப்பு (acute kidney injury), தசைகளில் ஏற்படும் அழற்சி (rhabdomylysis),  மற்றும் இரத்தம் அழிவடைதல் (Haemolysis) போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு குளவியனது குற்றும் பொழுது அவர்களுக்கு புதிதாக மாரடைப்பு அல்லது இருதய துடிப்பில் ஒழுங்கின்மை (arrhythmia) போன்றன ஏற்பட்டு இறப்பு ஏற்படும். மேலும் நாடி மற்றும் நாளங்களில் குருதி கட்டிப்படல், பாரிச வாதம், மூளையினுள் இரத்த கசிவு…..என பல்வேறு நோய் நிலைகளை குளவியின் நஞ்சானது உருவாக்க வல்லது மேலும் Kounis syndrome என்ற வகையில் புதிதாக மாரடைப்பு கூட வரலாம்.
இது தவிர குளவியானது கலைத்து கலைத்து குத்தும்  பொழுது மனிதர்கள் விபத்துக்கு உள்ளாகி அல்லது கிணறு போன்ற குழிகளில் விழுந்து அல்லது பனை போன்ற உயரமான மரங்களில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு.
குளவிகள் குற்றின் நோயாளியை வீட்டில் வைத்து குற்றிய இடத்திற்கு சுண்ணாம்பு அல்லது புளி பூசுதல் அல்லது விச கடி வைத்தியர்களின் சிகிச்சை போன்ற பாரம்பரிய முறைகளின் மூலம் சிகிச்சை அளித்தல் பல சந்தர்ப்பங்களில் உயிர் ஆபத்தினை உண்டு பண்ணியுள்ளது. ஏனெனில் நான் இங்கு விஞ்ஞான ரீதியில் உடலியல் தொழில் பாடுகளை கண்காணிக்க முடியாமையே ஆகும். மேலும் இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகள் காரணமாக வைத்தியசாலையில் காலதாமதமாகவே அனுமதிக்கப்படுவர் இதன் காரணமாக அவர்கள் உயிர் ஆபத்திணை எதிர்நோக்குவர். மேலும் சிறுவர்களும் வயோதிபர்களும் குளவி கலைத்து குத்தும் பொழுது அவர்களால் இலகுவில் தப்பி ஓட முடிவதில்லை இதன் காரணமாக குளவிகளின் தாக்குதலினால் இவர்களே அதிக பாதிப்பினை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

குளவியின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எவ்வாறு?

குளவி கடியைத் (Wasp Sting) தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் இதோ:

1. அமைதியாக இருத்தல்

  • பதற வேண்டாம்: உங்கள் அருகே குளவி வரும்போது கைகளை வீசுவதோ அல்லது அதை அடிக்க முயற்சிப்பதோ கூடாது. உங்கள் வேகமான அசைவுகள் குளவிக்கு அச்சுறுத்தலாகத் தெரியும், இதனால் அது உங்களைக் கொட்டும்.
  • மெதுவாக நகரவும்: குளவி உங்களைச் சுற்றி வந்தால், மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்.

2. ஆடை மற்றும் வாசனை திரவியங்கள்

  • நிறங்கள்: பிரகாசமான வண்ணங்கள் (மஞ்சள், சிவப்பு) மற்றும் பூக்கள் போட்ட ஆடைகளைத் தவிர்க்கவும். வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.
  • உடல் பாதுகாப்பு: தோட்டம் அல்லது புற்கள் நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது நீண்ட கை சட்டைகள் மற்றும் காலணிகளை (Shoes) அணியுங்கள்.

3. சுற்றுப்புறப் பாதுகாப்பு

  • குப்பைத் தொட்டி: குப்பைத் தொட்டிகளை எப்போதும் மூடி வைத்திருங்கள்.
  • கூடுகளைத் தொடாதீர்கள்: உங்கள் வீட்டின் ஓரத்திலோ அல்லது மரத்திலோ குளவிக் கூடு இருப்பதைக்கண்டால், அதை நீங்களே அகற்ற முயல வேண்டாம். தொழில்முறை நிபுணர்களை அணுக வேண்டும்

4. இயற்கை வழிமுறைகள்

  • புதினா எண்ணெய்: புதினா (Peppermint oil) அல்லது யூகலிப்டஸ் எண்ணெயைத் தெளிப்பது குளவிகளை அந்த இடத்திற்கு வரவிடாமல் தடுக்கும்.
  • செடிகள்: உங்கள் வீட்டின் அருகில் துளசி, புதினா அல்லது சிட்ரோனெல்லா (Citronella) செடிகளை வளர்ப்பது குளவிகளை விரட்ட உதவும்.

நன்றி

அறிவோம் தெளிவோம்

பல மிகைப்படுத்தப்பட்ட விஞ்ஞானரீதியான அல்லாத தகவல்கள் சமூகத்தில் பரவிவரும் நிலையில், வீதி ஓரத்தில் நெல் காயவிடப்படுவதினால் ஏற்படுகின்ற தீங்கான சுகாதார விளைவுகள் என்ன,  விஞ்ஞான ரீதியாக சாத்தியமா என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

1. Polycyclic (Poly Aromatic) Hydrocarbons – PAHs என்றால் என்ன ?

போலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHகள்) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணைந்த பென்சீன் வளையங்களால் ஆன ஒரு பெரிய கரிம சேர்மக் குழுவாகும். அவை முக்கியமாக கரிமப் பொருட்களின் முழுமையற்ற எரிப்பின் போது உருவாகின்றன. இவற்றின் முக்கிய இயல்புகள்  தட்டையான, இராசயன ரீதியில் நிலையான வளைய அமைப்புகள்,  தண்ணீரில் குறைவாகவும் , கொழுப்புகளில் அதிகளவில்  கரையக்கூடியது. நிலையான மாசுபடுத்திகள் அதாவது  காற்று, மண், உணவு மற்றும் திசுக்களில் நீண்ட காலம் இருக்கும்.

2.  PAH குழுவில் அடங்கியிருக்கும் இரசாயன பொருட்கள் யாவை? இவை யாவும் புற்று நோயினை உண்டு பண்ணுமா?

இல்லை. அனைத்து PAH-களும் புற்று நோயினை ஏற்படுத்துவன  அல்ல.

👉 உயர் மூலக்கூறு எடையுடைய (High molecular weight) PAH-களே முக்கியமாக புற்றுநோய் உண்டாக்குகின்றன.

காரணம்:

•          PAH-கள் உடலில் Cytochrome P450 மூலம் மாற்றம் அடைந்து

•          Reactive diol-epoxide உருவாக வேண்டும்

•          அவை DNA-வுடன் இணைந்தால் மட்டுமே புற்றுநோய் ஏற்படும்.

PAH  இல் பல இரசாயன பொருட்கள் இருக்கின்றன (படத்தினை பார்க்கவும்) இவற்றில் முக்கியமானது Benzo[a]pyrene என்ற சேர்வை ஆகும். இது வகுப்பு 01 வகையினை சேர்ந்த புற்று நோயாக்கியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER

🔴 Group 1 – Carcinogenic to humans  (நிச்சயமாக புற்று நோயினை உருவாக்கும்) உதாரணம் –  Benzo[a]pyrene

🟠 Group 2A – Probably carcinogenic (மனிதர்களில் வரையறுக்கப்பட்ட சான்றுகள் இருக்கின்றன ஆனால்  சோதனை விலங்குகளில் போதுமான சான்றுகள் இருக்கின்றன அத்துடன்  மனித புற்றுநோய்க்கான முக்கிய பண்புகளை தரவுகள்  வலுவாகக் காட்டுகின்றன. உதாரணம் – Dibenz[a,h]anthracene

🟡 Group 2B – Possibly carcinogenic (ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே உறுதியான அளவிற்கு உள்ளது.  வரையறுக்கப்பட்ட மனித சான்றுகள், அல்லது போதுமான விலங்கு சான்றுகள், அல்லது வலுவான தரவு  சான்றுகள், ஆனால் 2A ஐப் போல இணைந்து அல்ல. இது பொதுவாக 2A ஐ விட பலவீனமான அல்லது அதிக நிச்சயமற்ற ஆதாரங்களை பிரதிபலிக்கிறது). உதாரணம் – Benz[a]anthracene, Benzo[b]fluoranthene, Benzo[k]fluoranthene, Indeno[1,2,3-cd]pyrene

🟢 Group 3 – Not classifiable (மனிதர்களிடம் கிடைக்கும் சான்றுகள் போதுமானதாக இல்லாதபோதும், விலங்குகளிடம் உள்ள சான்றுகள் போதுமானதாக இல்லாதபோதும் அல்லது குறைவாகவே இருக்கும் போதும், தரவு சான்றுகள் ஒரு முடிவை எடுக்க போதுமானதாக இல்லாதபோதும் பயன்படுத்தப்படுகிறது. இது “பாதுகாப்பானது” என்று அர்த்தமல்ல; தற்போதைய தரவுகள் முகவரை புற்றுநோய் காரணி அபாயமாக வகைப்படுத்த போதுமானதாக இல்லை என்று அர்த்தம்.

உதாரணம் – Naphthalene, Phenanthrene, Anthracene

அனைத்து பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) புற்றுநோய் உண்டாக்குவதில்லை. 4–7 அரோமேட்டிக் வளையங்கள் கொண்ட உயர் மூலக்கூறு எடையுடைய PAH-கள், குறிப்பாக benzo[a]pyrene, புற்றுநோய் உண்டாக்குபவை ஆகும்; குறைந்த மூலக்கூறு எடையுடைய PAH-கள் பொதுவாக புற்றுநோய் உண்டாக்காதவை.

3. PAH சூழலில் இருந்து மனிதனை அடையும் வழிகள் (Routes of exposure)

1️⃣ மூச்சு வழி (Inhalation) – மிக முக்கியம் அத்துடன்  மிக அதிக ஆதாரம் உள்ள வழி (High scientific evidence)

உதாரணம் – சிகரெட் புகை, தீ விபத்து புகை,வாகன புகை, தொழிற்சாலை புகை, நிலக்கரி புகை, விறகு, பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள்  எரியும் பொழுது உருவாகும் புகை

ஏற்படும் புற்று நோய்கள் – நுரையீரல் புற்றுநோய் (மிக முக்கியம்), குரல்வளை புற்றுநோய்

2️⃣உணவு வழி (Ingestion) –  அதிகளவு விஞ்ஞாரீதியான ஆதாரம் இல்லை (moderate scientific evidence)

உதாரணம் – சுட்ட / கருகிய உணவுகள்

ஏற்படும் புற்று நோய்கள் – வயிறு, குடல், கல்லீரல்

3️⃣ தோல் வழி (Dermal exposure) – விஞ்ஞான மற்றும் வரலாற்று ஆதாரம் நிறைய உண்டு

உதாரணம் -Chimney sweepers ஏற்படும் விதைப்பை புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய்

4. ஏன் PAH இணை உன்பதினை விட சுவாசிப்பது  அதிக புற்றுநோயை உண்டாக்கும்?

PAHகள் புகை மற்றும் நுண்ணிய துகள்களில் உள்ளன, சுவாச சிற்றறையினை  நேரடியாக அடையும். சுவாச சிற்றறை அதிகளவு மேற்பரப்பு உடையது இதன் காரணமாக இரத்தத்தில் விரைவான உறிஞ்சுதல் நடைபெறும் இறுதியில் நுரையீரல் திசுக்களில் வலுவான DNA சிதைவினை உண்டுபண்ணி புற்று நோயினை உருவாக்கும். பென்சோ[a]பைரீன் IARC குழு 1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெளிவான டோஸ்- விளைவு  (dose – response relationship ) உறவுமுறை நீருபிக்கப்பட்டுள்ளது

5. PAH உணவுச் சங்கிலியில் (Food chain) தேங்குமா?

ஆம், PAH உணவுச் சங்கிலி வழியாக செல்லும். ❌ ஆனால் தானியங்களில் (grains) முக்கியமாக தேங்காது. காரணம்:

  • PAH-கள் lipophilic (கொழுப்பு விரும்பும்)
  • தானியங்களில் கொழுப்பு குறைவு
  • பெரும்பாலும் surface contamination மட்டும்

சங்கிலி வழியாக PAH அதிகமாக தேங்கும் உணவுகள்

  • மீன் (குறிப்பாக bottom-feeding fish)
  • மாமிசம்
  • பால், முட்டை
  • கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்
  • Smoked food

தார் வீதியில் உலர விடப்படும் நெல் மணிகளின் மேற்பரப்பில் நிச்சயம் PAH என்பது இருக்கும் ஆனால் உமியினை நீக்கும் பொழுது பெருமளவு (70-80%) நீக்கப்படும் மேலும் தீட்டும் பொழுது மேலும் கணிசமான அளவு PAH நீக்கப்படும். மேலும் உணவின் மூலம் சேரும் PAH இன் அளவு உடலில் தீங்கான விளைவுகளை ஏற்படுத்த வல்லதா என்பது கேள்விக்குறியே.

முக்கியமான விடயம் நெல் மணிகளினால் உடலில் சேரும் PAH அளவினை விட நாம் சிகரெட் புகைக்கும் பொழுதும், வீதியில் வாகன புகையினை சுவாசிக்கும் பொழுதும், குப்பைகள்/பிளாஸ்டிக் /டயர்  மற்றும் விறகினை எரிக்கும் பொழுது சுவாசிக்கின்றோம் என்பதே கசப்பான உண்மை  

6. Bitumen என்றால் என்ன? Bitumen புற்று நோயினை ஏற்படுத்துமா?

கச்சா எண்ணை சுத்திகரிப்பின் பொழுது இறுதியில் எஞ்சும் கருப்பு பொருள். வீதி தயாரிப்பில் பயன்படுகின்றது. (Coal tar ≠ Bitumen)

Bitumen (தின்ம நிலை) ❌ புற்றுநோய் உண்டாக்கும் என நிரூபிக்கப்படவில்லை. ஆனால் வீதி புனரமைப்பின் உருக்கப்படும் Bitumen இல் இருந்து வெளியேறும் Bitumen ஆவி (Bitumen fumes) அதாவது PAH இணை அதிகளவில் கொண்ட புகை மூக்கின் ஊடாக நுகரப்படும் பொழுது புற்று நோயினை உருவாக்கலாம் (Possibly carcinogenic)

IARC வகைப்பாடு:

•          Bitumen → Group 3

•          Bitumen fumes → Group 2B

📌 ஆபத்து: மூச்சு வழி

7. போடப்பட்ட தார் வீதியில் இருந்து எவ்வளவு காலத்திற்கு PAH வெளியேறும்? (Bitumen-இல் இருந்து PAH எவ்வளவு காலம் வெளியேறும்)

⏱️ காலப்பகுதி வாரியாக:

🔥 0–2 வாரங்கள் ⭐⭐⭐

  • மிக அதிக PAH வெளியிடப்படும்
  • வீதியிற்கு அண்மையில் போடப்பட்ட தார்
  • புற்று நோய் தாக்கம் அதிகம்

🌡️ 2 வாரம் 3 மாதம் ⭐⭐

  • PAH குறைகிறது
  • இன்னும் அளவிடக்கூடியது

🌧️ 3–12 மாதம்

  • UV, மழை, oxidation
  • காற்றில் PAH மிகக் குறைவு

🛣️ >1 ஆண்டு

  • காற்றில் PAH release இல்லை
  • Inhalation cancer risk இல்லை

📌 முக்கியக் கோட்பாடு

தார் வீதியில் இருந்து PAH சூழலுக்கு வெளியேறுவது என்பது வெப்பநிலையில் தங்கியுள்ளது. தார் ஆனது 150 – 180 வரையான செல்ஸியஸ் வெப்பநிலையில் உருக்கப்பட்டே ஊற்றப்படுகின்றது.  இந்நிலையில் மீண்டும் அது உருகி PAH இணை வெளியேற்றுவது விஞ்ஞான ஏறத்தாள ஒரு வருடத்தில் முற்றாக நின்று விடும்

8. வாகன புகையில் இருந்து வெளியேறும் பார உலோகங்களான கட்மியம் , ஈயம் போன்றன அரசியல் ஊடுருவுமா?

மேற்குறித்த பார உலோகங்கள் உணவு சங்கிலி வழியாகவே அரிசியில் சேர்கின்றன. வாகன புகை உமியினை துளைத்து சென்று அரிசியில் சேர்வதினை நீருபிப்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான சான்றுகளும் இல்லை. மேலும் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் நாட்பட்ட சிறுநீரக நோய் பாதித்த பிரதேசங்களில் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கு விளையும் அரிசி, தாமரைக்கிழங்கு, திலாப்பியா மீன் போன்றவற்றில் பார உலோகங்கள், பூச்சிநாசினிகள் .. போன்றன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

9. வீதியில் நெல் உலர விடுவதினால் ஏற்படும் ஏனைய சுகாதார பிரச்னைகள்?

விலங்குகளின் மலம் கலக்கப்படல் – வீதியின் மேற்பரப்பில்  நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மலைக்கழிவில் உள்ள கிருமிகள் இறந்து விடும். மேலும் நெல்லினை உடைக்கும் பொழுது மலத்தின் ஏனைய கழிவுகள் நீக்கப்படும். இறுதியாக சோறு ஆக்கப்படும் வெப்பநிலையில் ஓர் நோய்க்கிருமியும் சோற்றில் இருக்காது.

வீதி விபத்துக்கள் –  வீதியில் நெல் உலரவிடுவதன் காரணமாக  விபத்துக்கள் நடைபெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் உலர விட்டதன் காரணமாக மட்டுமே விபத்து நடைபெற்றது என்றால் அது உண்மை அல்ல. ஓர் விபத்திற்கு எப்பொழுதும் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

PAH, தார் , பார உலோகங்கள் கலக்கப்படுகின்றமை – ஒரேயொரு தடவை அதுவும் அண்ணளவாக 05 அல்லது 06 மணித்தியாலங்கள் என்ற குறுகிய நேரத்தில் உலர விடப்படுகின்றமை அதுவும் பழைய வீதிகளில், எவ்வாறு உடல் நலத்திற்கு தீங்கான அளவிற்கு மேற்படி பதார்த்தங்களை அரிசியில் சேர்க்கும் என்பது குறித்து முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இல்லை. மேலும் இயந்திரங்களில் உலர்த்தும் பொழுது மண்ணெண்ணை பாவிக்கப்படுகின்றது அதன் பொழுது உருவாகும் PAH நெல்லில் கலக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன, நெல்லினை அவிக்கும் பொழுது எரியும் விறகில் இருந்து உருவாகும் PAH நெல்லில் கலக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன

 10. ஏன் இப்பொழுது தான் இந்த பிரச்சனை?

2009 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் பொருளாதார தடை காரணமாக மிக குறைந்தளவு விளைச்சல் கிடைத்தது. ஆனால் இன்று அவ்வாறல்ல பல மடங்கு அதிக விளைச்சல் ஓர் ஏக்கரில் இருந்து கிடைக்கின்றது. இதன் காரணமாக உலர விட போதிய தளங்கள் இல்லை. மேலும் மனிதக்கூலி, வாகன கூலி  அதிகமாக உள்ளதன் காரணமாக மக்கள் கார்ப்பட் வீதிகளை பயன்படுத்துகின்றனர்.

இலகுவான சுருக்கம்

நச்சியலில் (toxicology) பயன்படுத்தபடும் சில தத்துவங்களை விளங்கிக்கொண்டால் நாம் மேற்குறித்த விடயத்தினை மேலும் இலகுவாக விளங்கலாம்

  • ஒரு பொருள் விஷமா இல்லையா என்பதை தீர்மானிப்பது அதன் அளவுதான் (“The dose makes the poison”)
  • விஷப் பொருளுடன் தொடர்பு இருந்தாலே விஷ விளைவு வரும் என்பது இல்லை (“Not all exposure leads to toxicity”)
  • உடலுக்குள் நுழையும் வழி விஷ விளைவைக் தீர்மானிக்கும் (“Route determines toxicity”)
  • இரசாயன கட்டமைப்பு உடலியல் விளைவுகளை தீர்மானிக்கும் (“Chemical structure determines biological effect”)
  • கொழுப்பில் கரையும் பொருட்கள் உடலில் தேங்கும் (“Lipophilic substances bioaccumulate”)
  • ஒரு பொருள் விஷமாக மாறுவதற்கு அனுசேபம்  தேவைப்படலாம் (“Toxicity depends on metabolism) (PAH தானாக விஷமல்ல ஆனால் நுரையீரல் மற்றும் ஈரலில்  CYP450  இனால் diol-epoxide ஆக மாற்றப்படுகின்றது, diol-epoxide DNA சேதாரத்தை உண்டு பண்ணி புற்று நோயினை உருவாகின்றது)
  • வெப்பநிலை விஷ வெளியீட்டை மாற்றும் (“Temperature influences toxicity”)

ஆக்கம்

Dr.K.Vaasuthevaa

MBBS, DLM, MD in Forensic Medicine (Special interest in Toxicology), PGD in toxicology

உசாத்துணை

1. IARC Monograph Vol. 92

2. IARC Monograph Vol. 103

3. “Evaluation of the Health Risks of PAHs in Food” – WHO publication

4. Agency for Toxic Substances and Disease Registry – Toxicological Profile for Polycyclic Aromatic Hydrocarbons (PAHs)

5. Reddy’s Essentials of Forensic Medicine & Toxicology

6. Klaassen – Casarett & Doull’s Toxicology

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில்  மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.

சுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல்  வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும் ஆனால் சூழல் வெப்பநிலை குறித்த நிலையினை விட குறையும் பொழுது உடல் வெப்பநிலையும் குறையும் அதன் காரணமாக உடல் மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படும்.

உடல் வெப்பக்குறைவு (Hypothermia) ஏற்படுவதற்கு சுற்றுப்புற வெப்பநிலை உறைநிலைக்கு (0°C) கீழ் இருக்க வேண்டும் என்பதில்லை. 15°C (60°F) க்கும் குறைவான சுற்றுப்புற வெப்பநிலையிலேயே பாதிப்புகள் தொடங்கலாம். மேலும் உடல் வெப்பநிலை குறைவினால் ஏற்படும் மரணங்கள் கட்டாயம் பனி விழும் பிரதேசங்களில் தான் நடக்கும் என்றில்லை.

ஆபத்தான சுற்று சூழல்  வெப்பநிலை

  • 10°C முதல் 15°C (50°F – 60°F): இது மிதமான குளிர் என்றாலும், மழையில் நனைந்தாலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ உடல் வெப்பம் வேகமாக குறையும்.
  • 0°C முதல் 5°C (32°F – 41°F): பெரும்பாலான நகரப்புற உயிரிழப்புகள் இந்த வெப்பநிலை வரம்பில்தான் நிகழ்கின்றன. நீண்ட நேரம் வெளியில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.
  • -15°C (5°F) க்குக் கீழே: இந்த வெப்பநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இங்கு சருமம் நேரடியாகக் காற்றில் பட்டால் சில நிமிடங்களிலேயே உறைபனி காயம் (Frostbite) ஏற்படும்.

நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக வெப்பத்தைக் கடத்தும் எனவே ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை நிலவும் காலங்களில் குளிர் நீரில் நீராடுவது அல்லது மழையில் நனைவது உடலுக்கு தீங்கானதாக மாறலாம். சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் மிக விரைவாக வெளியேறும். உதாரணமாக, சுற்று சூழல் வெப்பநிலை 5°Cஆக இருந்து, காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆக இருந்தால், உங்கள் உடல் உணரக்கூடிய வெப்பநிலை  -7°C ஆக இருக்கும்.

குறைந்த சூழல் வெப்பநிலைக்கு மனித உடல் வெளிக்காட்டிடப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள்

1. உடனடி உடல் எதிர்வினைகள்(Acute Responses)

உடல் குளிர்ச்சியடையும் போது, வெப்பத்தைத் தக்கவைக்க இரண்டு முக்கிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது:

  • இரத்த நாளச் சுருக்கம் (Vasoconstriction): தோலின் மேற்புறம் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், உட்புற உறுப்புகளுக்கு (Core) இரத்த ஓட்டம் திருப்பி விடப்படுகிறது. இதனால் கை, கால் விரல்கள் மரத்துப்போகும்.
  • நடுக்கம் (Shivering): மூளை தசைநார்களை வேகமாகச் சுருங்கச் செய்வதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

2. முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • இதயம்: இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும், இது மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • சுவாசம்: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும். இது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
  • மூளை: உடல் வெப்பநிலை 35°C (95°F) க்கும் கீழே குறையும் போது, சிந்தனைத் திறன் மந்தமாகும், குழப்பம் ஏற்படும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். 

3. குளிரால் ஏற்படும் நோய்கள்(Cold-Related Illnesses)

  • பனிப்புண் (Frostbite): மிகக் கடுமையான குளிரால் தோலின் திசுக்கள் உறைந்து இறந்துவிடும் நிலை. இது பெரும்பாலும் மூக்கு, காது மற்றும் விரல் நுனிகளில் ஏற்படும்.
  • ட்ரெஞ்ச் ஃபுட் (Trench Foot): நீண்ட நேரம் ஈரமான மற்றும் குளிர்ந்த நிலையில் கால்கள் இருக்கும்போது திசுக்கள் அழுகத் தொடங்கும் நிலை. 

உடலின் வெப்பநிலை குறைவடையும் பொழுது முதலில் பாதிக்கப்படும் அங்கம் மூளை ஆகும். இதன் காரணமாக குளிரினை எதிர்கொள்பவர். அசாதாரண நடத்தைகளை காண்பிப்பார் (Abnormal Behavioral Signs) உதாரணமாக

  • முரண்பாடான ஆடை களைதல் (Paradoxical Undressing): அதிக குளிர் நிலவிலும், மரணத்திற்கு முன் ஏற்படும் மாய வெப்ப உணர்வால் பாதிக்கப்பட்டவர் தன் ஆடைகளைத் தானாகவே கழற்றி எறிந்துவிடுவார்.
  • பதுங்கும் நடத்தை (Terminal Burrowing): ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவது போல, கட்டிலுக்கு அடியிலோ அல்லது குறுகிய இடங்களிலோ உடலை மறைத்துக்கொண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்படலாம்.

சூழல் வெப்பநிலைக் குறைவினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் நபர்கள்

பின்வரும் நபர்கள் சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது உயிராபத்தினை எதிர்நோக்குவார்கள். இவர்கள் அதிக கவனத்தினை எடுக்க வேண்டும்.

  1. முதியவர்கள்: வயதானவர்களுக்குக் குளிரை உணரும் திறன் (Nerve sensitivity) குறைவாக இருக்கும். மேலும், உடலில் வெப்பத்தை உருவாக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) குறைவாக இருப்பதாலும், போதிய உடல் கொழுப்பு இல்லாததாலும் இவர்கள் விரைவில் பாதிக்கப்படுகிறார்கள்.
  2. குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: இவர்களின் உடல் பரப்பளவு எடையை விட அதிகமாக இருப்பதால், வெப்பம் மிக வேகமாக வெளியேறும். இவர்களுக்கு நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்கும் திறன் குறைவாக இருக்கும்.
  3. மதுபானம் அருந்துபவர்கள்: இது மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் (Vasodilation), ஒருவருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும், ஆனால் உண்மையில் உடலின் முக்கிய வெப்பம் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கும்.
  4. சில மருந்துகள் பாவிப்பவர்கள்: சில வகை மனநல மருந்துகள் (Antidepressants, Antipsychotics) மற்றும் தூக்க மாத்திரைகள் உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் திறனைப் பாதிக்கும்.
  5. தைராய்டுகுறைபாடு(Hypothyroidism) உள்ளவர்கள்: தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் வெப்பம் உருவாவது குறையும்.
  6. நாள்பட்டநோய்கள் உள்ளவர்கள்: நீரிழிவு (Diabetes), இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவை ரத்த ஓட்டத்தைப் பாதித்து உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதைக் கடினமாக்குகின்றன.
  7. மனநலப் பாதிப்புகள்: நினைவாற்றல் குறைபாடு (Dementia) உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியாமல் வெளியே செல்வதால் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
  8.  சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகள்
  • வீடற்ற நிலை (Homelessness): போதிய தங்குமிடம் மற்றும் போர்வைகள் இல்லாத நிலையில் வெளிப்புறக் குளிரில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.
  • நீரில் மூழ்குதல்: காற்றை விட நீரில் உடல் வெப்பம் 25 மடங்கு வேகமாக வெளியேறும். எனவே, குளிர்ந்த நீரில் விழுவது உடனடி மரணத்தை விளைவிக்கும்.
  • சமூகத் தனிமை: தனியாக வசிக்கும் முதியவர்கள், உதவிக்கு ஆள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

மரணம் எவ்வாறு நிகழும் (Mechanism of Death)

உடல் வெப்பக்குறைவினால் (Hypothermia) மரணம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள உடலியல் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. உடல் வெப்பநிலை குறையும் போது, உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கின்றன. அதன் நிலைகள் பின்வருமாறு:

1. அனுசேபச்சிதைவு  (Metabolic Breakdown)

உடல் வெப்பநிலை 35°C (95°F) க்குக் கீழே குறையும் போது, உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் வெப்பநிலை 30°C (86°F) க்குக் கீழ் செல்லும் போது, இந்த அனுசேப செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. கலங்கள் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன.

2. இதயச் செயலிழப்பு (Cardiac Failure) – மிக முக்கியக் காரணம்

குளிர் அதிகரிக்கும் போது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன:

  • இரத்த அடர்த்தி: குளிர்ச்சியால் இரத்தம் தடிமனாகிறது (Hemoconcentration), இதனால் இதயத்தால் இரத்தத்தை அழுத்தித் தள்ள முடிவதில்லை.
  • இதயத் துடிப்பு மாற்றம் (Arrhythmia): வெப்பநிலை 28°C (82°F) க்குக் குறையும் போது, இதயத் துடிப்பு சீரற்றதாகிறது (Atrial/Ventricular Fibrillation). இறுதியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது.

3. சுவாசச் செயலிழப்பு (Respiratory Depression)

ஆரம்பத்தில் குளிர் காரணமாக சுவாசம் வேகமாக இருக்கும், ஆனால் வெப்பநிலை குறையக் குறைய மூளையில் உள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையம் (Respiratory center) மந்தமடைகிறது. சுவாசம் மிகவும் மெதுவாகி, இறுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் (Hypoxia) மரணம் நிகழ்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

உடல் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பின்வரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

  • உடல் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க தலை, கழுத்து மற்றும் கைகளை முழுமையாக மூடவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை மூடி வைப்பதும் அவசியம். முக்கியமாக கழுத்து பகுதியினை மூடி வைக்க வேண்டும் ஏனெனில் அப்பகுதியில் தோலிற்கு கீழாக பாரிய இரத்த குழாய்கள் காணப்படுவதினால் வெப்ப இழப்பு இலகுவாக நடைபெறும் அதனை தடுப்பதற்காகவே ஆகும்
  •  கடும் குளிரில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் ஏற்படும் வியர்வை ஆடைகளை நனைத்து, உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்துவிடும்.
  • ஒரே கனமான ஆடைக்கு பதிலாக, பல அடுக்குகளாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். கம்பளி (Wool) அல்லது பாலியஸ்டர் துணிகள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவும்.
  • ஆடைகள் நனைந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடவும். ஈரமான ஆடை உடல் வெப்பத்தை 25 மடங்கு வேகமாக கடத்திவிடும்.
  • உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. எனவே, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.
  • மதுவைத் தவிர்க்கவும் ஏனெனில் மது அருந்துவது தற்காலிகமாக வெப்பமாகத் தெரிந்தாலும், அது உண்மையில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றிவிடும்.
  • போதிய அளவு தண்ணீர் மற்றும் சூடான பானங்களை அருந்துங்கள்.

நன்றி

ஓர் நொடியில் கருகிய மலர்கள்

நேற்று முன்தினம் நான் தற்பொழுது கடமையாற்றும் நாட்டில் ஓர் பாரிய வாகன விபத்து, பாடசாலை மாணவர்களை அதுவும் புதுவருடத்தின், முதல் பாடசாலை நாள் அன்று மாணவர்களை ஏற்றி சென்ற வான் ஓன்று மற்றைய வாகனங்களை முந்தி செல்லும் பொழுது எதிரே வந்த பாரத்துடன் மெதுவாக வந்த பாரிய டிப்பர் ஒன்றுடன் மோதியது. ஸ்தலத்திலேயே 12 மாணவர்கள் பலியாகினர் மேலும் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் பலியாகினர்.

இவ்வாறே கடந்த வாரமும் கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட பஸ் மற்றும் கார் விபத்தில் 4 பேர் பலியாகினர். இப்பதிவில் அதிக பாரத்துடன் வரும் வாகனங்களுடன் சிறிய வாகனங்கள் மோதும் பொழுது ஏன் அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றது என்பது பற்றி பௌதீகவியல் ரீதியான விளக்கம் தரப்படுகின்றது 

குறைந்த வேகத்தில் சென்றாலும், அதிக எடையுடன் (Loaded) வரும் லொரி , பஸ், டிப்பர் போன்ற வாகனங்களுடன்  மோதும்போது ஏற்படும் விபத்து மிகவும் ஆபத்தானது.இதன் பின்னணியில் உள்ள பௌதீகவியல் காரணங்கள் இதோ

1. பௌதீகவியல் விதிகளின்படி, ஒரு பொருளின் உந்தம் அதன் நிறை (Mass) மற்றும் திசைவேகத்தை (Velocity) பொறுத்தது.(உந்தம் = வாகனத்தின் பாரம் X வேகம்)

    ஒரு சாதாரண கார் 1.5 டன் எடை கொண்டது, ஆனால் லோடு ஏற்றிய டிப்பர் 30 முதல் 40 டன் வரை எடை கொண்டிருக்கலாம். டிப்பர் மெதுவாக (உதாரணத்திற்கு 20 கி.மீ வேகத்தில்) வந்தாலும், அதன் அபாரமான எடையால் அதன் உந்தம் மிக அதிகமாக இருக்கும். இந்த உந்தம் மோதலின் போது கார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    2. இயக்க ஆற்றல் (Kinetic Energy ) 

    ஒரு பொருள் இயக்கத்தில் இருக்கும்போது கொண்டிருக்கும் ஆற்றல் அதன் நிறையைப் பொறுத்து அதிகரிக்கும். பாரம் ஏற்றிய டிப்பரில் உள்ள அதிகப்படியான நிறை, அந்த டிப்பர்க்கு மிகப்பெரிய இயக்க ஆற்றலைத் தருகிறது.

    நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, ஒரு லாரியும் டிப்பரும் மோதும்போது, கார் டிப்பர் மீது எவ்வளவு விசையை (Force) செலுத்துகிறதோ, அதே அளவு விசையை டிப்பரும் கார் மீது செலுத்தும். இங்கு விசை சமமாக இருந்தாலும், அந்த விசையைத் தாங்கும் திறன் இரண்டு வாகனங்களுக்கும் வெவ்வேறாக இருக்கும். டிப்பர் வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், விசையினை தாங்கும் திறன் உடையதாக இருக்கின்றது. ஆனால் அதே விசை முழுவதும் சிறிய கார் மீது மாற்றப்படும் பொழுது . கார் அல்லது வான்  விசையினை தாங்க முடியாமல் எளிதில் நசுங்கிவிடும்.

    3. நியூட்டனின் இரண்டாம் விதி (முடுக்கம் மற்றும் நிறை) 

    ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் நிறை மற்றும் முடுக்கத்தின் பெருக்கற்பலனுக்கு சமம். இதனை மாற்றியமைத்தால்: முடுக்கம் (Acceleration/Deceleration) = விசை / நிறை  

    குறைந்த நிறை = அதிக முடுக்கம்: மோதலின் போது இரண்டு வாகனங்கள் மீதும் சமமான விசை செயல்பட்டாலும், காரின் எடை (Mass) டிப்பரினை விட மிகக் குறைவு. எனவே, கார் மிக அதிக முடுக்கத்துடன் (திடீர் வேகம் குறைதல் அல்லது பின்னோக்கித் தள்ளப்படுதல்) பாதிக்கப்படும்.

    அதிக நிறை = குறைந்த முடுக்கம்: டிப்பர் அதிக எடையுடன் இருப்பதால், அதன் இயக்க நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது (குறைந்த முடுக்கம்).

    பாதிப்பு: காரில் இருப்பவர்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மிகப்பெரிய வேக மாற்றத்தை (High Deceleration) சந்திக்கிறார்கள். இந்தத் திடீர் வேகம் குறைதல் மனித உடலின் உள் உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும்

    4. நிலைமம் (Inertia) 

    நியூட்டனின் முதல் விதிப்படி, ஒரு பொருள் அதன் இயக்க நிலையிலேயே இருக்க முயலும். அதிக எடை கொண்ட டிப்பரினை திடீரென நிறுத்த முடியாது. பிரேக் போட்டாலும், அதன் அதிகப்படியான ‘நிலைமம்’ காரணமாக அது காரைத் தள்ளிக்கொண்டு முன்னேற முயலும். இதனால் காரில் இருப்பவர்கள் மிகக் கடுமையான அதிர்வையும் (Jerk) பாதிப்பையும் சந்திக்கிறார்கள். 

    5. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு (Structural Mismatch) 

    • உயர வித்தியாசம் (Underride): டிப்பரின் அடிப்பகுதி உயரமாக இருப்பதால், மோதலின் போது கார் டிப்பரின்   அடியில் சிக்கிக்கொள்ளும் (Underride accident). காரின் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக்குகள் (Airbags) மற்றும் கிரம்பிள் பகுதிகள் (Crumple Zones) இதனால் வேலை செய்யாமல் போகலாம்.
    • திடமான சட்டகம்: லாரிகள் இரும்பாலான வலிமையான சட்டகங்களைக் கொண்டவை. மோதலின் போது லாரி சேதமடையாது, ஆனால் அந்த முழு சக்தியும் காரை உருக்குலைத்துவிடும். 

    சுருக்கமான ஒப்பீடு: 

    அம்சம் லோடு ஏற்றிய டிப்பர்சாதாரண கார்
    நிறை (Mass)மிக அதிகம்குறைவு
    விசை (Force)சமம் (டிப்பரின் மீது கார் செலுத்துவது)சமம் (காரின் மீது டிப்பர் செலுத்துவது)
    வேக மாற்றம் (Deceleration)மிகக் குறைவுமிக அதிகம்
    பாதிப்புகுறைவான சேதம்கடுமையான சேதம்/உயிரிழப்பு

    வேகம் குறைவாக இருந்தாலும், டிப்பரின்  அதிகப்படியான எடை” (Mass) தான் இங்கு மிகப்பெரிய ஆபத்துக் காரணி. ஒரு யானை மெதுவாக நடந்து வந்து உங்கள் மீது மோதினால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்றதுதான் குறைந்த வேகத்தில் வரும் டிப்பரின் மோதலும்.

     எனவே, வேகம் குறைவாக இருந்தாலும் டிப்பரின்  அதிகப்படியான நிறை (Mass) காரின் மீது செயல்படும் அதே சமமான விசையை மிக ஆபத்தான திடீர் வேக மாற்றமாக (Acceleration/Deceleration) மாற்றிவிடுகிறது.

    நன்றி

    குடிநீரில் மலக்கழிவு !!

    அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன்  என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli  பக்டீரியா இருந்தமையே  ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும்  ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும்

    நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது.

    தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும்

    யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன. 

    E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது.

    நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது. அவற்றின் விபரம் வருமாறு

    வகைநோய் முக்கியத்துவம்
    ETECநீர் வயிற்றுப்போக்குநீரிழப்பு மரணம்
    EPECகுழந்தைகளில் வயிற்றுப்போக்குகுழந்தை மரணம்
    EHEC (O157:H7)இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS)திடீர் மரணம்
    EAECநீடித்த வயிற்றுப்போக்குஊட்டச்சத்து குறைபாடு

    மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினேரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம்.

    E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின்  குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது.

    E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும்.

    நன்றி

    பிரசவத்தின் பொழுது மரணம் ஏன்?

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரசவத்தின் பொழுது கர்ப்பிணி தாயார் ஒருவர் திடீர் என மரணத்தினை தழுவி இருந்தார். இதன் காரணமாக பல சர்ச்சைகள் உருவாகி இருந்தன. இந்நிலையில் இவ்வாறான மரணங்களுக்கு காரணமான “நுரையீரலில்  இரத்தம் கட்டிபடல்” நோய் பற்றி இந்த பதிவு விரிவாக விளக்குகின்றது. இரத்தக்கட்டிஅடைப்பு (Thromboembolism) என்பது இரத்தக் குழாய்களின்  உட்புறத்தில் இரத்தம் ஜெல் போன்ற வடிவத்தில் உறைந்து, இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் ஒரு தீவிர மருத்துவ நிலையாகும். 

    1. இரத்தக் கட்டி அடைப்பு எவ்வாறு உருவாகிறது?

    • த்ரோம்போசிஸ் (Thrombosis): இரத்தக் குழாயின் உட்பகுதியிலேயே இரத்த உறைவு உருவாவதாகும்.
    • எம்பாலிசம் (Embolism): ஓரிடத்தில் உருவான இரத்தக் கட்டி தளர்ந்து, இரத்த ஓட்டம் வழியாகப் பயணித்து உடலின் மற்றொரு பகுதியில் உள்ள குறுகிய இரத்த நாளத்தை அடைப்பதாகும்.
    உடற் கூராய்வு பரிசோதனை ஒன்றின் பொழுது அகற்றப்பட்ட இரத்த கட்டி ஒன்று

    2. முக்கிய இடங்கள் மற்றும் பாதிப்புகள்

    இரத்தக் கட்டி எங்கு அடைப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து பாதிப்புகள் மாறுபடும்

    • நுரையீரல் (Pulmonary Embolism): கால்களில் இருந்து நகரும் கட்டிகள் நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
    • மூளை (Stroke): மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.
    • இதயம் (Heart Attack): இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு உண்டாகிறது.
    • கால்கள் (DVT): கால்களின் ஆழமான நரம்புகளில் ரத்தம் உறைவதால் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது

    3. கர்ப்பிணிகளில் இரத்த கட்டி உருவாக்குவதற்கான காரணங்கள்?

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களே இரத்தக் கட்டி (Blood Clot) உருவாவதற்கான முக்கிய காரணங்களாகும். இது சாதாரண பெண்களை விட கர்ப்பிணிகளுக்கு 5 மடங்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

    • இரத்தம் உறைதல் திறன் அதிகரிப்பு (Hypercoagulability): பிரசவத்தின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க, இயற்கையாகவே கர்ப்பிணிகளின் உடலில் இரத்தத்தை உறைய வைக்கும் புரதங்கள் (Clotting factors) அதிகரிக்கின்றன. இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்றாலும், தேவையற்ற நேரங்களில் இரத்த நாளங்களுக்குள் கட்டிகள் உருவாக இது வழிவகுக்கிறது.
    • இரத்த ஓட்டம் மெதுவடைதல் (Venous Stasis): வளரும் கருப்பை (Uterus), இடுப்புப் பகுதியில் உள்ள இரத்த நாளங்களை அழுத்துவதால், கால்களில் இருந்து இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் மெதுவாகிறது. இரத்தம் தேங்கி நிற்பதால் கட்டிகள் எளிதில் உருவாகின்றன.
    • இரத்த நாளக் காயங்கள் (Endothelial Injury): பிரசவத்தின் போது (சாதாரணப் பிரசவம் அல்லது சிசேரியன்) இடுப்புப் பகுதி மற்றும் கருப்பைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் சிறிய காயங்கள் இரத்தக் கட்டிகள் உருவாகக் காரணமாகின்றன.
    • அசையாமை (Immobility): நீண்ட கால படுக்கை ஓய்வு (Bed rest), அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடமாட்டம் குறைதல் அல்லது நீண்ட தூரப் பயணங்கள் இரத்த ஓட்டத்தைக் குறைத்து ஆபத்தை அதிகரிக்கின்றன.
    • பிற காரணிகள்:
      • 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பம்.
      • அதிக உடல் எடை (Obesity).
      • மரபணு ரீதியான இரத்தம் உறைதல் குறைபாடுகள் (Thrombophilia).
      • இரட்டையர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் சுமப்பது. 

    இந்த காரணங்களால் கால்களில் உருவாகும் இரத்தக் கட்டிகள் (DVT), பிரிந்து நுரையீரலுக்குச் செல்லும்போது உயிருக்கு ஆபத்தான “நுரையீரல் இரத்தக்கட்டிஅடைப்பு ” ஏற்படுகிறது. 

    4. முக்கிய அறிகுறிகள்:

    இந்த நிலையின் அறிகுறிகள் அடைப்பின் அளவைப் பொறுத்து மாறுபடும்: 

    • மூச்சுத் திணறல்: திடீரென ஏற்படும் மூச்சு விடுவதில் சிரமம்.
    • மார்பு வலி: ஆழமாக மூச்சை உள்ளிழுக்கும்போது அல்லது இருமும்போது கூர்மையான வலி ஏற்படுதல்.
    • இருமல்: சில நேரங்களில் இருமலில் இரத்தம் வெளிப்படுதல்.
    • இதயத் துடிப்பு: இதயம் மிக வேகமாக அல்லது சீரற்றுத் துடித்தல்.
    • மயக்கம்: திடீர் இரத்த அழுத்தக் குறைவால் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படுதல்.
    • கால் வீக்கம்: பொதுவாக காலில் உள்ள நரம்புகளில் (DVT) உருவான இரத்தக் கட்டி நுரையீரலுக்குச் செல்வதால், காலில் வலி அல்லது வீக்கம் காணப்படலாம்.

    5. சட்ட மருத்துவ முக்கியத்துவம் (Medico-legal Significance)

    கர்ப்பிணி மரணங்களில் நுரையீரல் இரத்தக்கட்டிஅடைப்பு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், இது பெரும்பாலும் சட்ட மருத்துவ உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது

    • திடீர் மரணம்: ஆரோக்கியமாக இருந்த ஒரு கர்ப்பிணி அல்லது பிரசவித்த பெண் திடீரென மரணமடையும் போது, அது ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என சந்தேகிக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு (Autopsy) உத்தரவிடப்படலாம்.
    • மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிதல்: மரணத்திற்கான காரணம் அம்னியோடிக் திரவ அடைப்பா (Amniotic Fluid Embolism) அல்லது இரத்தக் கட்டி அடைப்பா என்பதை உறுதி செய்ய முறையான திசுவியல் (Histopathology) ஆய்வுகள் அவசியம். 

    6. நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு  ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சடுதியான மரணம் ஏற்படுமா?

    நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு (Pulmonary Embolism) ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சடுதியான மரணம் ஏற்படுவதில்லை. இருப்பினும், இது ஒரு மிக ஆபத்தான மருத்துவ நிலை என்பதால் உடனடி சிகிச்சை அவசியமாகும். இதன் பாதிப்பு மற்றும் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறித்த முக்கியத் தகவல்கள்:

    • சடுதியான மரணம்: நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 25% பேருக்கு மட்டுமே முதல் அறிகுறியே சடுதியான மரணமாக இருக்கும்.
    • சிகிச்சையின் முக்கியத்துவம்: சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் உயிரிழப்பு விகிதம் 30% வரை உயர்கிறது. ஆனால், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால், இந்த ஆபத்து 2% முதல் 8% வரை பெருமளவு குறைகிறது.
    • அடைப்பின் அளவு: இரத்தக் கட்டி மிகச் சிறியதாக இருந்தால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் மருந்துகள் மூலம் குணப்படுத்தப்படலாம். மாறாக, ‘ பாரிய நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு (Massive PE)’ எனப்படும் பெரிய அளவிலான அடைப்பு ஏற்படும்போது மட்டுமே இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு திடீரென நின்று மரணம் நிகழ வாய்ப்புள்ளது.
    • தடுக்கும் காலம்: பெரும்பாலான உயிரிழப்புகள் அறிகுறிகள் தோன்றிய முதல் சில மணிநேரங்களிலேயே நிகழ்கின்றன.

    7. எவ்வாறு திடீர் மரணம் நிகழுகின்றது?

    நுரையீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய தமனி (Main Pulmonary Artery) இரண்டாகப் பிரியும் இடத்தில் (Bifurcation), ஒரு பெரிய இரத்தக் கட்டி குறுக்காக மாட்டிக்கொள்வதையே ‘சேணத் த்ரோம்போ எம்பாலிசம்’ (Saddle thrombo embolism) என்கிறோம். இது ஒரே நேரத்தில் இரண்டு நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ தடுக்கக்கூடும். இது ஒரு மருத்துவ அவசரநிலை (Medical Emergency). இது இதயத்தின் வலது பக்கம் அதிக அழுத்தத்தை (Right Heart Strain) ஏற்படுத்தி, திடீர் இதய செயலிழப்பு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும். எவ்விதமான அறிகுறிகளும் இல்லாமல் சடுதியாக மரணம் நிகழும்.

    8. எவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவ கவனக்குறைவு (Medical Negligence) எனக்கொள்ளப்படலாம்?

    சட்ட ரீதியாக, ஒரு நோயாளி அல்லது அவரது குடும்பத்தினர் பின்வரும் காரணங்களுக்காக மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது வழக்கு தொடர வாய்ப்புள்ளது:

    • அறிகுறிகளை அலட்சியப்படுத்துதல்: மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி போன்ற இரத்தக் கட்டி அடைப்பு க்கான அறிகுறிகளை ‘சாதாரண கர்ப்பகால அசதி’ என்று தவறாகக் கருதி பரிசோதிக்கத் தவறுதல்.
    • தடுப்பு மருந்து வழங்காமை: அதிக ஆபத்துள்ள நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு (எ.கா: உடல் பருமன், முந்தைய ரத்த உறைவு பாதிப்பு) இரத்தம் கட்டிபடுதலை தடுக்கும் மருந்துகளை (Prophylaxis) வழங்கத் தவறுதல்.
    • தவறான நோயறிதல்: தகுந்த பரிசோதனைகளை (CTPA அல்லது V/Q scan) மேற்கொள்ளாமல் நோயைக் கண்டறியத் தாமதிப்பது ‘சிகிச்சை தரக் குறைபாடு’ (Standard of Care breach) எனக் கருதப்படலாம். 
    • மருத்துவக் கவனக்குறைவு நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

    9. இந்த நோய் நிலைமையினை முற்கூட்டி அறிந்து தடுக்கும் வசதி உண்டா?

    ஆசிய நாட்டு பெண்களிடம் இந்த நோய் மிக அரிதாகவே இருக்கும் எனினும் கர்ப்பகால முதல் கிளினிக் வருகையின் பொழுது வைத்தியர்கள் குறித்த பெண்ணிற்கு கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின் பொழுது அல்லது பிரசவத்தின் பின்னர் நுரையீரல் இரத்தம் கட்டி படும் சாத்தியம் உண்டா என ஆராய்வார்கள். இவ்வாறு இருக்கும் நிலையில் உரிய தடுப்பு மருந்துகளை வழங்குவார்கள். எனினும் சில பெண்களிடம் பிறப்பில் இருந்தே சில குறைபாடுகள் (Antithrombin III, Protein C , Protein S பற்றாக்குறை …) காரணமாக இந்த நுரையீரல் இரத்தம் கட்டி படும் நோய் உருவாகும். வழமையாக இவ்வாறன குறைபாடுகளை ஆராய்ந்து பரிசோதிப்பது நடைமுறையில் இல்லை.

    நன்றி

    பில்டர் சிகரெட் பாதுகாப்பானதா?

    எம்மில் பலரும் தப்பாக விளங்கி வைத்திருக்கும் விடயம் சுருட்டு மற்றும் பீடி போன்றவற்றினை விட சிகரெட் பாதுகாப்பானது ஏனெனில் சிகரெட்டில் பில்டர் எனப்படும் வடிக்கும் பஞ்சு உள்ளது என்பதே ஆகும். விஞ்ஞா ரீதியாக உண்மையில் அவ்வாறல்ல. இலங்கையில் சிகரெட் பில்டர்கள் (Cigarette Filters) தொடர்பாக மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) 2026 ஆம் ஆண்டு எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று தான். இலங்கையில் சிகரெட் பில்டர்களை முற்றாகத் தடை செய்ய NATA முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புகையிலை கட்டுப்பாட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட சர்வதேச முடிவுகளுக்கு இணங்க, ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன

    இதற்கான முக்கிய காரணம் இலங்கையில் தினசரி சுமார் 60 லட்சம் முதல் 1 கோடி சிகரெட் பில்டர்கள் சூழலில் வீசப்படுவதாக NATA தெரிவித்துள்ளது. இவை உக்கி அழிவதற்கு நீண்ட காலம் எடுப்பதாலும், நீர் நிலைகளை மாசுபடுத்துவதாலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் சிகரெட் பில்டர்களை முற்றாகத் தடை செய்ய NATA அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அவை உலகளவில் அதிகம் காணப்படும் குப்பைகளில் ஒன்றாகும். சிகரெட் துண்டுகள் உலகளாவிய கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் குப்பைகளில் முதலிடத்தில் உள்ளன.

    சிகரெட் பில்டர்கள் ‘செல்லுலோஸ் அசிடேட்’ (Cellulose Acetate) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை காகிதம் அல்லது பருத்தி போலத் தோன்றினாலும், அவை பிளாஸ்டிக் என்பதால் இயற்கையில் எளிதில் சிதைவதில்லை. சிகரெட் பில்டர்கள் உக்கி அழிவதற்கு  எடுத்துக்கொள்ளும் காலம் சூழலைப் பொறுத்து மாறுபடும். இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகளின்படி, இதன் சிதைவு காலம் குறித்த விவரங்கள் இதோ:

    • சாதாரண சூழலில்: ஒரு சிகரெட் பில்டர் முழுமையாக மட்குவதற்கு பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகிறது.
    • சூழல் மாறுபாடு: மண்ணின் ஈரப்பதம், சூரிய ஒளி மற்றும் பாக்டீரியாக்களின் அளவைப் பொறுத்து, சில இடங்களில் இது 18 மாதங்களில் சிதையத் தொடங்கலாம்; ஆனால் கடுமையான சூழலில் இது 30 ஆண்டுகள் வரை கூட அழியாமல் இருக்கும்.

    பில்டர்கள் உக்கி அழிவடையும் பொழுது  அவை முழுமையாக மறைந்து போவதில்லை. மாறாக, அவை பல்லாயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் இழைகளாக (Microfibers), நுண்ணிய பிளாஸ்டிக் (Microplastics) ஆக  உடைந்து மண் மற்றும் நீர் நிலைகளில் கலந்து விடுகின்றன.

    சிகரெட் பில்டர்களின் அமைப்பு மற்றும் வகைகள்

    1. செல்லுலோஸ் அசிடேட் பில்டர்கள்: 95% க்கும் அதிகமான வணிக ரீதியான சிகரெட் பில்டர்கள் பிளாஸ்டிக் செல்லுலோஸ் அசிடேட் இழைகளால் ஆனவை. இவை மெல்லிய இழைகளால் ஆனவை மற்றும் தார் (tar) மற்றும் நிகோடின் போன்ற சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் குறைக்க முற்றாக நீக்க அல்ல என்று வடிவமைக்கப்பட்டுள்ளன.
    2. ஆக்டிவேட்டட் சார்கோல் (Activated Charcoal) பில்டர்கள்: இந்த பில்டர்களில் செல்லுலோஸ் அசிடேட்டுடன் ஆக்டிவேட்டட் சார்கோல் சேர்க்கப்பட்டிருக்கும். சார்கோல் புகையிலுள்ள சில வாயு நிலை இரசாயனங்களை உறிஞ்சுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    3. பேப்பர் (கார்போர்டு) பில்டர்கள்: இவை பெரும்பாலும் கையால் சுருட்டப்படும் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நுரை பில்டர்களை விட வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன மற்றும் பல வடிவங்களில் (கிளாசிக், கிங் சைஸ், கூம்பு வடிவம்) கிடைக்கின்றன.
    4. மற்ற வகைகள்: கண்ணாடி பில்டர்கள் போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய விருப்பங்கள், நுரை பில்டர்கள் மற்றும் பயோ டீகிரேடபிள் (biodegradable) பில்டர்கள் போன்றவையும் கிடைக்கின்றன.

    தவறான புரிதல்

    பில்டர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், இவை எவ்விதமான கூடுதல் பாதுகாப்பையும் வழங்காது மற்றும் , இது புகையிலை நிறுவனங்களின் ஒரு வகையான ஏமாற்று வேலைஆகும். இவை  புகையிலிருந்து சில இரசாயனங்களை வடிகட்ட உதவுகின்றன. இருப்பினும், அவை புகைபிடிப்பதை பாதுகாப்பானதாக மாற்றுவதில்லை. அதாவது பில்டர்கள் சில இரசாயனங்களை வடிகட்டினாலும், அவை புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைக் கணிசமாகக் குறைப்பதில்லை. பில்டர் உள்ள சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்பது ஒரு தவறான கருத்து ஆகும்.

    • உண்மையில், பில்டர்கள் புகையை மென்மையாக்குவதால், புகைப்பிடிப்பவர்கள் அதை மிக ஆழமாக உள்ளிழுக்க உதவுகின்றது மேலும் புகையிலை துண்டுகள் வாயில் நுழைவதைத் தடுப்பது மற்றும் சில தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டுவதன் மூலம் புகைபிடிப்பது “பாதுகாப்பானது” என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
    • ஈடுசெய்யும் புகைபிடித்தல் (Compensatory Smoking): பில்டர்கள் நிக்கோடின் அளவைக் குறைப்பதாகத் தோன்றினாலும், உடல் தனக்குத் தேவையான நிக்கோடினைப் பெற புகைப்பிடிப்பவரை அதிக முறை அல்லது அதிக அழுத்தத்துடன் புகையை இழுக்கத் தூண்டுகிறது. உண்மையில், பில்டர்கள் புகையை மென்மையாக்குவதால், புகைப்பிடிப்பவர்கள் அதை மிக ஆழமாக உள்ளிழுக்க நேரிடுகிறது, இது நுரையீரலின் உட்பகுதிகளில் புற்றுநோய் (Adenocarcinoma) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
    • பயன்படுத்தப்பட்ட பில்டர்களில் ஆர்சனிக், காரீயம் (Lead) போன்ற நச்சுப் பொருட்கள் படிந்திருக்கும். இவை மண்ணிலும் நீரிலும் கலந்து மனித ஆரோக்கியத்திற்கு மறைமுகமாகப் பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
    • மேலும் சிகரெட் புகைக்கும் பொழுது விரல் மற்றும் உதடுகளில் சுடாமல் இருக்க இந்த பில்டர் உதவுகின்றது அத்துடன் இந்த பில்டரில் தான் சிகரெட்டுக்குரிய சுவை ஊட்டிகள் கலக்கப்பட்டிருக்கும்.

    எனவே, பில்டர் வைத்திருப்பதன் மூலம் புகைபிடித்தல் பாதுகாப்பானது என்று கருதுவது தவறு. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரே வழி புகைபிடித்தலை முற்றாக நிறுத்துவது மட்டுமே.

    சிகரெட் பில்டர் மற்றும் நீர் மாசுபடுதல்

    சிகரெட் துண்டுகள் (Cigarette butts) மற்றும் பில்டர்கள்  உலகளவில் நீர் நிலைகளை மாசுபடுத்தும் முதன்மையான பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவை நீர் நிலைகளில்  ஏற்படுத்தும் பாதிப்புகள் பின்வருமாறு

    1. பிளாஸ்டிக் மாசுபாடு (Cellulose Acetate)

    சிகரெட் ஃபில்டர்கள் பஞ்சால் ஆனவை என்று பலர் தவறாக நினைக்கிறார்கள், ஆனால் அவை உண்மையில் செல்லுலோஸ் அசிடேட் (Cellulose acetate) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. வெயில் மற்றும் அலையினால் இவை சிதைந்து நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாக (Microplastics) மாறி நீர் நிலைகளில் கலந்து விடுகின்றன.

    2. நச்சு இரசாயனங்கள் கசிதல்

    ஒரு சிகரெட் துண்டில் நிகோடின், ஆர்சனிக், காரீயம் (Lead), காட்மியம் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற 7,000-க்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. மழையினால் அடித்துச் செல்லப்படும் சிகரெட் துண்டுகள் ஆறுகள் மற்றும் கடல்களில் சேரும்போது, அதிலுள்ள நச்சுகள் சில மணிநேரங்களிலேயே நீரில் கசியத் தொடங்குகின்றன. ஆய்வுகளின்படி, ஒரு லிட்டர் நீரில் ஒரு சிகரெட் துண்டு இருந்தால் கூட, அதில் இருக்கும் மீன்கள் 96 மணிநேரத்திற்குள் இறந்துவிடும் அபாயம் உள்ளது.

    3. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து

    மீன்கள், ஆமைகள் மற்றும் கடற்பறவைகள் சிகரெட் துண்டுகளை அவற்றின் சிறிய அளவு மற்றும் மிதக்கும் தன்மையால் உணவு என்று நினைத்து உட்கொள்கின்றன. இவை விலங்குகளின் செரிமானப் பாதையை அடைத்து, பசி எடுக்காமல் செய்து இறுதியில் பட்டினியால் இறக்க நேரிடும்.

    4. மனித ஆரோக்கியம்

    மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் உட்கொள்ளும் நுண்ணிய பிளாஸ்டிக் மற்றும் நச்சுகள், உணவுச் சங்கிலி (Food chain) வழியாக மீண்டும் மனிதர்களையே வந்தடைகின்றன. இது மனிதர்களுக்கு நாளமில்லா சுரப்பி பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

    இந்த மாசுபாட்டைத் தடுக்க, சிகரெட் துண்டுகளை நீர் நிலைகளிலோ அல்லது தெருக்களிலோ வீசாமல் முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்.

    நன்றி

    கசிப்பு உயிரை பறித்தது ஏன்?


    வென்னப்புவ பகுதியில் சட்ட விரோத மதுபானமாகிய கசிப்பினை அருந்திய ஏழு பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.

    முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல்   (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால்  என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.

    நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.

    கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி  போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது.  ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.

    ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு  உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.

    உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.

    இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

    அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால்  கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.
    நன்றி

    நாய் இறைச்சி கண்டறிவது எவ்வாறு??

    அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியில் இரு நாய்கள் கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் எச்சங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பரவலான சந்தேகங்கள் எழுந்தன அதாவது குறித்த நாய்களின் இறைச்சி புதுவருட கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட வேறு இறைச்சிகளுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்பட்டிருக்கலாம் என்று. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

    இதனை ஒத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது. அதாவது பசுக்கன்று ஒன்று இறைச்சி ஆக்கப்பட்டுள்ளது என வதந்தியான தகவல் பரவியத்தினால் ஏற்பட்ட கலவரத்தில் ஒருசிலர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் துண்டுகளாக்கப்பட்ட இறைச்சியின் தோற்ற இயல்புகளை வைத்து இது இன்ன மிருகத்தின் இறைச்சி என்று கண்டு பிடிப்பது மிகமிக கடினம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இறைச்சி போன்றவற்றிற்கு DNA பரிசோதனை செய்யப்படும். மேலே விபரிக்கப்பட்ட இந்தியாவில் நடந்த சம்பவத்தில் குறித்த இறைச்சி மாதிரிகள் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அது ஆட்டின் இறைச்சி என நிரூபிக்கபட்டது.

    ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அல்லது இதனை ஒத்த சம்பவங்கள்  நிகழ்வது அதிகம். அதாவது தடைவிதிக்கப்பட்ட, அரிதான விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடல், உறுப்புக்களுக்காக விலங்குகளை கொல்லல் முக்கியமாக கொம்பிற்காக காண்டா மிருகம் (Rhino), செதில்களுக்காக எறும்பு தின்னிகள் (Pangolins) போன்றன சட்ட விரோதமான முறையில் கொல்லப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேட்டைகாரர்கள் அல்லது கடத்தல் காரர்கள் அவ்விலங்குகளின் இறைச்சிகளை சிறிய துண்டுகளாகவே கடத்துவார்கள் அல்லது காண்ட மிருக கொம்பு /எறும்பு தின்னியின் செதில் போன்றவற்றினை சிறு துகள்களாக அல்லது பவுடர் ஆகவே கடத்துவார்கள். ஏனெனில் இலகுவாக இனம் காண்பதினை தடுப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப ஆகும். மேலும் இவ்வாறன சட்ட விரோத செயற்பாடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளும் என்பது வெளிப்படையான விடயம்.

    எனவேதான் மேற்குறித்த நாடுகளில் இவ்வாறன விலங்கு எச்சங்களை DNA பரிசோதனை செய்து அது எந்த விலங்கு, எந்த இனத்திற்கு உரியது போன்ற (உதாரணம் கறுப்பு காண்டா மிருகம், வெள்ளை காண்டா மிருகம், இந்திய காண்டா மிருகம்) போன்ற தகவலைகளை எல்லாம் கண்டு பிடித்து, தப்பிக்க முடியாதபடி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குகின்றனர்.

    RhODIS, அல்லது காண்டாமிருக DNA குறியீட்டு அமைப்பு என்பது  தனிப்பட்ட காண்டாமிருகங்களை விவரக்குறிப்பு செய்வதன் மூலம் காண்டாமிருக வேட்டையாடுதலை எதிர்த்துப் போராடுவதற்காக பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் கால்நடை மரபியல் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தடயவியல் DNA தரவுத்தளமாகும். சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதல் வழக்குகளில் உயிரியல் மாதிரிகளிலிருந்து இனங்கள், தோற்றம் மற்றும் தனிநபர்களை அடையாளம் காண்பதன் மூலம் வனவிலங்கு தடயவியலில் DNA  சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கருக்கள் அல்லது சிதைந்த எச்சங்கள் போன்ற உருவவியல் அடையாளம் தோல்வியடையும் போது இது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை வழங்குகிறது. இலங்கையில் மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ இவ்வாறன DNA தரவுத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

    நன்றி