பாலியல் குற்றங்களைத்தடுக்க ஆண்மைநீக்கம் செய்தல் ஒரு தீர்வா?

பாலியல் குற்றங்கள் உலகளாவிய ரீதியில் மிகக் கடுமையான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் மற்றும் சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் நபர்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகள், பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனநலத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான பல்வேறு சட்ட, மருத்துவ மற்றும் உளவியல் அணுகுமுறைகள் உலக நாடுகளில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக ஆண்மை நீக்கம் செய்தல் என்ற மருத்துவ அணுகுமுறை கருதப்படுகிறது. பாலியல் ஆசை மற்றும் பாலியல் உந்துதல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் மீண்டும் குற்றம் செய்வதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வருகிறது.

பாலியல் குற்றங்கள் என்றால் என்ன?

ஒருவரின் சம்மதமின்றி அல்லது சட்டபூர்வமான சம்மதம் வழங்க இயலாத நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் நடவடிக்கைகள் அனைத்தும் பாலியல் குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

பாலியல் குற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன?

பாலியல் குற்றங்கள் ஒரே காரணத்தால் ஏற்படுவதில்லை. பல காரணிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

உயிரியல் காரணிகள்

சில நபர்களில்:

  • அதிக பாலியல் உந்துதல்
  • டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அதிக தாக்கம்
  • மூளையின் முன்பகுதி செயல்பாட்டுக் குறைபாடு
  • நரம்பியல் நோய்கள்

போன்றவை காணப்படலாம்.

உளவியல் காரணிகள்

  • சமூக விரோத ஆளுமைக் கோளாறு
  • மனவெறுப்பு சார்ந்த ஆளுமைப் பண்புகள்
  • பாலியல் வக்கிரங்கள் (Paraphilias)
  • குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு
  • ஆதிக்க மனப்பான்மை
  • கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணங்கள்

போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமூக காரணிகள்

  • சிறுவயது துஷ்பிரயோகம்
  • குடும்ப வன்முறை
  • போதைப்பொருள் பயன்பாடு
  • மதுபானப் பழக்கம்
  • சமூக தனிமை
  • பெண்களை இழிவாகக் கருதும் மனப்பான்மை

போன்றவை குற்ற நடத்தைக்கு வழிவகுக்கலாம்.

சூழ்நிலை காரணிகள்

  • மதுபான போதை
  • கண்காணிப்பு இல்லாமை
  • பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அணுகும் வாய்ப்பு
  • அதிகார துஷ்பிரயோகம்

போன்ற காரணிகளும் குற்ற நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆண்மை நீக்கம் செய்தல் என்றால் என்ன?

ஆண்மை நீக்கம் செய்தல் என்பது உடலில் உள்ள ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் செயல்பாட்டை குறைப்பதன் மூலம் பாலியல் ஆசை மற்றும் பாலியல் உந்துதல்களைக் கட்டுப்படுத்தும் மருத்துவ முறையாகும்.

இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது:

  1. இரசாயன ஆண்மை நீக்கம் செய்தல்
  2. அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்தல்

இரசாயன ஆண்மை நீக்கம் செய்தல்

இது அறுவைச் சிகிச்சை இல்லாத மருத்துவ முறையாகும். சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை குறைத்து பாலியல் ஆசையைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

பயன்படுத்தப்படும் மருந்துகள்

  • Cyproterone Acetate
  • Medroxyprogesterone Acetate
  • Leuprolide
  • Triptorelin

இது எவ்வாறு செயல்படுகிறது?

இந்த மருந்துகள்:

  • டெஸ்டோஸ்டிரோன் சுரப்பைக் குறைக்கின்றன.
  • பாலியல் ஆசையை குறைக்கின்றன.
  • பாலியல் கற்பனைகளை குறைக்கின்றன.
  • பாலியல் தூண்டுதலைக் குறைக்கின்றன.
  • விறைப்புத் தன்மையைக் குறைக்கக்கூடும்.

அறிவியல் ஆய்வுகள் கூறுவது

பல ஆய்வுகளின்படி:

  • பாலியல் ஆசை கணிசமாகக் குறைகிறது.
  • பாலியல் வக்கிர சிந்தனைகள் குறைகின்றன.
  • சில குற்றவாளிகளில் மீண்டும் குற்றம் செய்வதற்கான அபாயம் குறைகிறது.

ஆனால் மருந்து நிறுத்தப்பட்டால், சில மாதங்களில் ஹார்மோன் அளவுகளும் பாலியல் ஆசையும் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.

அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்தல்

இது நிரந்தரமான மருத்துவ முறையாகும். இரு விதைப்பைகளும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன. இதன் காரணமாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மிகவும் குறைகிறது.

விளைவுகள்

  • பாலியல் ஆசை குறிப்பிடத்தக்க அளவில் குறைகிறது.
  • பாலியல் கற்பனைகள் குறைகின்றன.
  • பாலியல் உந்துதல்கள் குறைகின்றன.
  • விறைப்புத் திறன் பாதிக்கப்படலாம்.

குற்றத்தை குறைக்குமா?

பல ஆய்வுகளில்:

  • மீண்டும் பாலியல் குற்றம் செய்வோரின் விகிதம் குறைந்துள்ளது.
  • குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் குற்றவாளிகளில் நல்ல விளைவுகள் பதிவாகியுள்ளன.

எனினும், அனைத்து வகையான பாலியல் குற்றங்களையும் இது தடுக்காது.

ஆண்மை நீக்கம் செய்தல் பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுக்குமா?

இல்லை. ஏனெனில் அனைத்து பாலியல் குற்றங்களும் பாலியல் ஆசையால் மட்டும் ஏற்படுவதில்லை. சில குற்றங்கள்:

  • ஆதிக்கம் செலுத்தும் நோக்கம்
  • கோபம்
  • பழிவாங்கும் எண்ணம்
  • வன்முறை மனப்பான்மை
  • பாலியல் சாடிசம்

போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன. எனவே ஹார்மோன் அளவு குறைந்தாலும் சில நபர்கள் ஆபத்தான நடத்தைகளைத் தொடரலாம்.

ஆண்மை நீக்கம் செய்தலை நடைமுறைப்படுத்தும் நாடுகள்

சில நாடுகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த முறையை பயன்படுத்துகின்றன.

ஆசியா

  • தென் கொரியா
  • இந்தோனேசியா

ஐரோப்பா

  • போலந்து
  • ஜெர்மனி
  • டென்மார்க்
  • சுவீடன்
  • செக் குடியரசு

வட அமெரிக்கா

  • அமெரிக்காவின் சில மாநிலங்கள்

இந்த நாடுகளில் பெரும்பாலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றவாளிகள் அல்லது மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கே இந்த நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்மை நீக்கம் செய்தலின் பக்க விளைவுகள்

இந்த மருத்துவ முறைகளுக்கு சில முக்கியமான பக்க விளைவுகள் உள்ளன.

  • எலும்பு அடர்த்தி குறைதல்
  • உடல் எடை அதிகரித்தல்
  • தசை வலிமை குறைதல்
  • சோர்வு
  • மனச்சோர்வு
  • பாலியல் செயலிழப்பு
  • இதய நோய் அபாயம் அதிகரித்தல்
  • நினைவாற்றல் குறைபாடு
  • மலட்டுத்தன்மை

இதனால் மருத்துவ கண்காணிப்பு அவசியமாகிறது.

துறவிகள் அல்லது திருமணம் ஆகாதவர்கள் பயன்படுத்தலாமா?

சாதாரண ஆரோக்கியமான நபர்களுக்கு, பாலியல் ஆசையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்மை நீக்கம் செய்தல் பரிந்துரைக்கப்படுவதில்லை.ஏனெனில்:

  • பாலியல் ஆசை ஒரு இயல்பான உயிரியல் செயல்பாடு.
  • அது ஒரு நோயல்ல.
  • தேவையற்ற ஹார்மோன் ஒடுக்கம் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பல துறவற மரபுகள்:

  • தியானம்
  • ஆன்மீகப் பயிற்சிகள்
  • ஒழுக்கமான வாழ்க்கை
  • மனக்கட்டுப்பாடு

போன்ற வழிமுறைகள் மூலம் பாலியல் உணர்வுகளை நிர்வகிக்கின்றன.

மருத்துவ நெறிமுறை என்ன கூறுகிறது?

ஒரு ஆரோக்கியமான நபருக்கு மருத்துவத் தேவையின்றி ஹார்மோன் ஒடுக்கும் சிகிச்சைகளை வழங்குவது பல நாடுகளில் நெறிமுறை சார்ந்த விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது.

மருத்துவ நிபுணர்கள் பொதுவாக:

  • தெளிவான மருத்துவத் தேவை
  • அறிவுபூர்வ சம்மதம்
  • மனநல மதிப்பீடு
  • நீண்டகால பின்தொடர்தல்

ஆகியவை அவசியம் எனக் கருதுகின்றனர்.

தடயவியல் மருத்துவ பார்வை

தடயவியல் மருத்துவத்தின் பார்வையில், ஆண்மை நீக்கம் செய்தல் சில வகையான பாலியல் குற்றவாளிகளில் பாலியல் ஆசை மற்றும் பாலியல் வக்கிர சிந்தனைகளை குறைத்து மீண்டும் குற்றம் செய்வதற்கான அபாயத்தை குறைக்கக்கூடும். ஆனால் இது தனித்து ஒரு தீர்வாக இல்லை. சிறந்த விளைவுகள் கிடைப்பது:

  • உளவியல் சிகிச்சை
  • நடத்தை மாற்று சிகிச்சை
  • மனநல மதிப்பீடு
  • சமூக கண்காணிப்பு
  • மறுவாழ்வு திட்டங்கள்

ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும் போது மட்டுமே.

மனித உரிமைகள் மற்றும் சமூக விவாதங்கள்

ஆண்மை நீக்கம் செய்தல் தொடர்பாக உலகளவில் மனித உரிமை விவாதங்களும் இடம்பெறுகின்றன.

ஆதரவாளர்கள்:

  • குழந்தைகளைப் பாதுகாக்க உதவும்
  • மீண்டும் குற்றம் செய்வதை குறைக்கும்

என்று வாதிடுகின்றனர்.

எதிர்ப்பாளர்கள்:

  • உடல் சுயாதீனத்தை பாதிக்கிறது
  • மனித உரிமை கேள்விகளை எழுப்புகிறது
  • அனைத்து குற்றங்களுக்கும் பொருந்தாது

என்று குறிப்பிடுகின்றனர்.

ஆண்மை நீக்கம் செய்தல் என்பது பாலியல் ஆசை மற்றும் பாலியல் உந்துதல்களைக் குறைக்கும் மருத்துவ முறையாகும். சில வகையான பாலியல் குற்றவாளிகளில் மீண்டும் குற்றம் செய்வதற்கான அபாயத்தை குறைக்க உதவினாலும், இது அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் முழுமையான தீர்வாகாது. பாலியல் குற்றங்கள் உயிரியல், உளவியல், சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான விளைவாக உருவாகின்றன. எனவே சட்டம், மருத்துவம், உளவியல் சிகிச்சை, கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பாலியல் குற்றங்களை நீண்டகால அடிப்படையில் குறைக்க முடியும்.

ஸ்மோக்கிங் பிஸ்கட்—புகைமயக்கத்தில் ஒளிந்திருக்கும் மரணம்

இன்றைய உலகில் சமூக வலைதளங்கள் மனித வாழ்க்கையை ஆழமாக பாதிக்கின்றன. அவற்றில் தோன்றும் ஒவ்வொரு “ட்ரெண்டும்” மக்களை, குறிப்பாக குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்கிறது. இதுபோன்ற ஒரு ட்ரெண்டாக “ஸ்மோக்கிங் பிஸ்கட்” அல்லது “டிராகன் பிரெத்” என்று அழைக்கப்படும் உணவுப் பண்டம் தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது. வாயிலிருந்து “டிராகன் போல் புகை வருகிறது” என்ற காட்சி குழந்தைகளை மிகவும் கவர்கிறது. ஆனால் இந்த புகை மாயத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் மரண ஆபத்தை பெரும்பாலான பெற்றோரும் குழந்தைகளும் அறிவதில்லை.

இந்தக் கட்டுரை அந்த ஆபத்தை விஞ்ஞான நோக்கிலும், தடயவியல் மருத்துவ  (Forensic Pathology) நோக்கிலும் விரிவாக விளக்கி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் நடந்த சம்பவங்கள்

கர்நாடகா, தாவன்கேரே (2024): ஒரு சிறுவன் மேளாவில் “ஸ்மோக்கிங் பிஸ்கட்” சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான வயிற்று வலியில் துடித்தான். அவனது துயரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்தான் தமிழ்நாடு அரசு திரவ நைட்ரஜன் உணவிலிருந்து தடை விதிக்க காரணமாக அமைந்தது.

தமிழ்நாடு, திருச்சி: திருச்சியில் ஒரு விற்பனையாளர் “ஸ்மோக்கிங் பிஸ்கட்” விற்றதற்காக உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். சென்னை வர்த்தக கண்காட்சியிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மலேசியா: ஒரு இளைஞன் “டிராகன் பிரெத்” இனிப்பு உட்கொண்டபோது, கையில் திரவ நைட்ரஜன் பட்டு கடுமையான புண்கள் மற்றும் விரல்களில் திசு அழிவு ஏற்பட்டது.

அமெரிக்கா, பென்சகோலா: 14 வயது சிறுமி “டிராகன் பிரெத்” உண்ட பிறகு கட்டை விரலில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

இந்த சம்பவங்கள் இது வெறும் “ஒரு தொலைதூர நாட்டில் நடந்த கதை” அல்ல என்பதை தெளிவாக உணர்த்துகின்றன.

ஸ்மோக்கிங் பிஸ்கட் என்றால் என்ன?

“ஸ்மோக்கிங் பிஸ்கட்” என்பது திரவ நைட்ரஜன் (Liquid Nitrogen – LN₂) என்ற வேதிப்பொருளில் தோய்க்கப்பட்ட அல்லது அதனோடு சேர்த்து பரிமாறப்படும் ஒரு சாலையோர உணவு. பிஸ்கட், வேஃபர், ஐஸ்கிரீம், புட்டு, பானி பூரி என பல வடிவங்களில் இது விற்கப்படுகிறது. இதனை சாப்பிடும்போது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் புகை வருவதுபோல் தெரியும். இந்த காட்சி Reels, YouTube Shorts போன்ற வீடியோக்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான குழந்தைகளை கவர்ந்து இழுக்கிறது.

சந்தைகளில், மேளாக்களில், பள்ளி அருகே உள்ள கடைகளில் “வெறும் 20 ரூபாயில் டிராகன் போல் புகை உமிழலாம்!” என்ற விளம்பரத்துடன் இது விற்கப்படுகிறது. புகை வருவது ஒரு வேடிக்கை என்று நினைக்கும் குழந்தைகள் உண்மையில் தங்கள் உடல் உறுப்புகளை சீரழிக்கும் ஒரு வேதிப்பொருளை விழுங்குகிறார்கள்.

திரவ நைட்ரஜன் விஞ்ஞான உண்மைகள்

திரவ நைட்ரஜன் என்பது −196 டிகிரி செல்சியஸ் (அல்லது −321 டிகிரி பாரன்ஹீட்) குளிர்நிலையில் திரவமாக இருக்கும் ஒரு வேதிப்பொருள். இது ஆவியாகும்போது நைட்ரஜன் வாயுவாக மாறி காற்றில் கலக்கிறது, அப்போது ஏற்படும் வெப்பநிலை மாற்றம்தான் அந்த “புகை” காட்சியை உருவாக்குகிறது.

தொழிற்சாலைகளில் திரவ நைட்ரஜன் உணவுகளை விரைந்து உறைய வைக்க, மருத்துவத்தில் கலங்களை பாதுகாக்க (cryopreservation), தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க (cryotherapy) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் கட்டுப்பாட்டான சூழலில், பயிற்சி பெற்றவர்களால் கையாளப்படும் வழக்கங்கள்.

திரவ நைட்ரஜன் ஆவியாகும்போது அதன் கனவளவு சுமார் 700 மடங்கு விரிவடைகிறது. அதாவது, ஒரு சிறிய துளி திரவம் கூட உடலுக்குள் நுழைந்தால் அது ஒரு பெரிய வாயுக்குமிழாக மாறி உள்ளுறுப்புகளை வெடிக்கவைக்கும் அளவிற்கு அழுத்தம் ஏற்படுத்தும். இது வெறுமனே “குளிர்ந்த பொருள்” அல்ல — இது ஒரு உயிர்க்கொல்லி கருவி.

உடலில் என்ன நடக்கும்?

1. வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் பாதிப்பு (Oral and Pharyngeal Injury)

திரவ நைட்ரஜன் முழுமையாக ஆவியாகாத நிலையில் சாப்பிட்டால், அது வாயிலுள்ள மென்மையான திசுக்களை உடனடியாக உறைய வைக்கும். இது “கிரையோஜெனிக் பர்ன்” (Cryogenic Burn) என்று அழைக்கப்படுகிறது — வெப்பத்தால் தீக்காயம் போல் தோன்றினாலும், இது குளிர்ச்சியால் ஏற்படும் திசு அழிவு. நாக்கு, இதழ்கள், வாய்ப்பகுதி ஆகியவை கருமையாகி, கொப்புளங்கள் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும். சில நேரங்களில் திசுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.

2. உணவுக்குழாய் மற்றும் இரைப்பை துளை (Esophageal and Gastric Perforation)

வாயிலிருந்து வயிற்றிற்கு செல்லும் பாதையில் உணவுக்குழாய், இரைப்பை (வயிறு), சிறுகுடல் ஆகிய உறுப்புகளில்  திரவ நைட்ரஜன் நேரடியாக பட்டால் அவை துளையிடப்படலாம். வயிற்றில் ஒரு சிறிய துளை போதும் வயிற்றிலுள்ள அமிலங்களும் உணவும் வெளியே கசிந்து அடிவயிற்றில் (Peritoneum) பரவும். இந்த நிலை “Peritonitis” என்று அழைக்கப்படுகிறது.  இது விரைந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தான நிலை.

3. இரைப்பை வெடிப்பு Gastric Barotrauma

திரவ நைட்ரஜன் அதிக அளவு வயிற்றிற்குள் சென்றால், அது வாயுவாக மாறும்போது ஏற்படும் 700 மடங்கு விரிவாக்கம் வயிற்றை உண்மையிலேயே வெடிக்கவைக்கலாம். இந்நிலை “Gastric Barotrauma” எனப்படும். இது உடனடியான அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் உயிர் அச்சுறுத்தும் நிலை. பல நிமிடங்களுக்குள் நோயாளி இறந்துவிடலாம்.

4. மூச்சுத்திணறல் Asphyxia

திரவ நைட்ரஜன் ஆவியாகும்போது நைட்ரஜன் வாயு காற்றிலுள்ள ஆக்சிஜனை இடம் பிடித்துகொள்கிறது. ஒரு மூடிய அல்லது சிறிய இடத்தில் அதிக நைட்ரஜன் வெளியிட்டால் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும். இந்த நிலையில் நபர் திடீரென சுயநினைவு இழந்து விழுவார். மூளைக்கு ஆக்சிஜன் போகாமல் சில நிமிடங்களிலேயே மூளை செல்கள் இறந்துவிடும். இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்களில் வெளிப்பார்வைக்கு பெரிய காயங்கள் எதுவும் தெரியாது — ஆனால் உள்ளே பேரழிவு நடந்திருக்கும்.

5. தோல் மற்றும் விரல்களில் பாதிப்பு

திரவ நைட்ரஜன் நேரடியாக தோலில் பட்டால் உடனடியாக தோல் திசுக்கள் உறைந்து அழிந்துவிடும். இது “Frostbite” என்று அழைக்கப்படும். மலேசியாவில் நடந்த சம்பவத்தில், ஒரு இளைஞன் கையில் திரவ நைட்ரஜன் பட்டதால் விரல்களில் கடுமையான புண்கள் மற்றும் திசு அழிவு ஏற்பட்டது.

தடயவியல் மருத்துவ  நோக்கில் ஒரு ஆழமான பார்வை

திரவ நைட்ரஜன் மரணங்களில் பெரும் சவால் என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில் உடல் பரிசோதனையில் தெரியும் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாகவும் குறைவாகவும் இருக்கும். இது “Unremarkable Autopsy” என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, நடந்த இடம் பரிசோதனை (Scene Investigation), சாட்சிகள் வாக்குமூலம், மற்றும் நச்சியல் பரிசோதனை ஆகிய மூன்றும் சேர்ந்தே காரண காரியங்களை நிரூபிக்க வேண்டியிருக்கும்

நச்சியல் (Toxicology) பரிசோதனையில்,  இரத்தத்தில் நைட்ரஜன் அளவை கண்டுபிடிக்க GC-MS (Gas Chromatography – Mass Spectrometry) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு வழக்கில் இறந்தவரின் இரத்தத்தில் நைட்ரஜன் அளவு 85% வரை காணப்பட்டது — இயல்பான அளவு வெறும் 78% மட்டுமே. இந்த சிறிய வித்தியாசமே மரண காரணத்தை நிரூபிக்கும் ஒரே ஆதாரமாக அமைகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நியம சட்டம் 2006 (FSSAI Act) மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருட்கள் தரங்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்) விதிமுறைகள் 2011-ன்படி, திரவ நைட்ரஜன் நேரடி உட்கொள்ளலுக்காக உணவில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 2024 ஏப்ரல் மாதம் இது குறித்து கடுமையான உத்தரவு பிறப்பித்தது: “திரவ நைட்ரஜன் உணவிலிருந்து முழுமையாக ஆவியாகாத நிலையில் உணவு பரிமாறப்படக்கூடாது.” இந்த விதியை மீறும் உணவு வியாபாரிகள் கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு ஆளாவார்கள்.

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதா?

திரவ நைட்ரஜன் கலந்த “ஸ்மோக்கிங் பிஸ்கட்” விற்பனையை இலங்கையில் தடை செய்யும் குறிப்பிட்ட சட்டம் எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை என்றாலும், இலங்கை உணவுச் சட்டம் எண் 26, 1980-ன் பிரிவு 2(அ)-ன் படி, “உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் கொண்ட உணவை விற்பனை செய்வது அல்லது பரிமாறுவது” கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது — இந்த பொதுவான விதியின் கீழ், முழுமையாக ஆவியாகாத திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை விற்பனை செய்வது சட்டவிரோதமான செயலாகவே கருதப்படும். இந்தியாவில் FSSAI சட்டம் 2006 மற்றும் தமிழ்நாடு அரசு ஏப்ரல் 2024 உத்தரவு மூலம் இதற்கு நேரடியான தடை விதிக்கப்பட்டிருக்கும்போது, இலங்கையில் இதுபோன்ற குறிப்பிட்ட அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது ஒரு சட்டக் குறைபாடாகவே உள்ளது. எனினும், இலங்கையின் சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் (Director General of Health Services) என்பவர் நாட்டின் உணவு பாதுகாப்பு நிர்வாகத்தின் உச்சநிலை அதிகாரியாக இருப்பதால், பொது சுகாதார ஆய்வாளர்கள் (Public Health Inspectors) இப்போதே இந்த விற்பனையை நிறுத்த சட்ட அதிகாரம் பெற்றுள்ளனர். ஆகவே, இலங்கையிலும் இந்தப் போக்கு அதிகரிக்கும் முன்பே, இந்தியாவைப் போல் ஒரு தெளிவான அரசாங்க அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுரை

பெற்றோர்களுக்கு: உங்கள் குழந்தைகளிடம் இதுபோன்ற உணவுகளின் ஆபத்தை தெளிவாக, பயமுறுத்தாமல் விளக்குங்கள். “புகை வருகிறது, கவர்ச்சியாக இருக்கிறது” என்பது உண்மையில் ஆபத்தான வேதிவினையின் அடையாளம் என்று சொல்லுங்கள். மேளாக்களிலும் சாலையோர கடைகளிலும் இதுபோன்ற உணவுகளை வாங்கி தர வேண்டாம்.

ஆசிரியர்களுக்கு: பள்ளி அருகில் உள்ள கடைகளில் இது விற்கப்படுவதை கவனியுங்கள். மாணவர்களுக்கு விஞ்ஞான வகுப்பில் திரவ நைட்ரஜனின் குணங்களை எடுத்துச்சொல்லி, அதன் ஆபத்தை புரியவையுங்கள்.

குழந்தைகளுக்கு: சமூக வலைதளங்களில் “கூல்” என்று தெரிவது எல்லாம் நல்லது அல்ல. ஒரு சில நிமிட வீடியோ வேடிக்கைக்காக உங்கள் உயிரை இழக்க வேண்டாம். நண்பர்கள் சாப்பிட்டாலும் நீங்கள் மறுக்கும் தைரியம் வையுங்கள் . அது உண்மையான துணிவு.

ஒரு தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர் சமூகத்தின் எதிர்காலம். அந்த எதிர்காலம் ஒரு 20 ரூபாய் “டிராகன் புகை” வேடிக்கைக்காக அழிந்துவிடக்கூடாது. “ட்ரெண்டி” என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்தை அடையாளம் காண்பதுதான் இன்றைய பெற்றோரின் கடமை. விஞ்ஞான உண்மைகளை அறிந்து, அவற்றை குழந்தைகளிடம் பகிர்ந்து, அவர்களுக்கு சரியான முடிவெடுக்கும் ஆற்றலை கொடுப்பதுதான் உண்மையான அன்பு. திரவ நைட்ரஜன் ஒரு ஆபத்தான வேதிப்பொருள். அது உணவல்ல. அதை உணவாக பரிமாறுவோர் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர். அவர்களிடமிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

                                               “புகை கண்ணை கவரலாம் ஆனால் உயிரை மாய்க்கும்.”

குழந்தை பாலியல் வழக்குகளில் சாட்சிய முரண்பாடுகள் எப்படி தீர்ப்பை மாற்றுகின்றன?

13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெளத்த பிக்கு சீதாவக்க சோரத தேரரை இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆலய வாசஸ்தலத்தில் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், வழக்கின் முக்கிய ஆதாரம் அந்த சிறுவனின் சாட்சியமாக இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சாட்சியத்திற்கும், ஆரம்பத்தில் பொலிஸாருக்கும், தடயவியல் மருத்துவ அதிகாரிக்கும் (JMO) வழங்கப்பட்ட வாக்குமூலங்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சம்பவத்தின் அடிப்படை விளக்கங்களிலேயே மாற்றங்கள் இருந்ததால், முழு சாட்சியத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குள்ளாகிறது என நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன் அடிப்படையில், 10 ஆண்டு சிறைத்தண்டனையும் இழப்பீட்டு உத்தரவும் ரத்து செய்யப்பட்டன.

இந்த வழக்கு, குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில்

  • சாட்சியின் நம்பகத்தன்மை,
  • JMO வின் ஆவணப்படுத்தல்,
  • மனஅழுத்தத்தின் தாக்கம்,
  • மற்றும் நீதிமன்றத்தில் சாட்சியங்களின் தொடர்ச்சித்தன்மை

எவ்வளவு முக்கியமானவை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

இலங்கையின் சட்டத்தில் பாலியல் குற்றங்கள்

இலங்கையின் தண்டனைச் சட்டம் (Penal Code), பாலியல் குற்றங்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்துகிறது:

  • பாலியல் வல்லுறவு  — பிரிவு 363
  • நெருங்கிய உறவினர்களுக்கிடையேயான பாலியல் குற்றம் — பிரிவு 364A
  • இயற்கைக்கு மாறான குற்றங்கள் — பிரிவு 365
  • மிகவும் இழிவான ஆபாசச் செயல்கள் — பிரிவு 365A
  • கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் — பிரிவு 365B
  • பாலியல் தொல்லை — பிரிவு 345

இவற்றில் பொதுமக்களால் குறைவாகப் புரிந்துகொள்ளப்படுவது பிரிவு 365B ஆகும். இது 1995 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது.

“கடுமையான பாலியல் துஷ்பிரயோகம்” என்றால் என்ன?

பிரிவு 365B இன்படி

  • உடல் உறுப்புகள்,
  • உடலின் வேறு பகுதி,
  • அல்லது ஏதேனும் கருவி

மற்றொரு நபரின் உடல் ஓட்டையிலோ அல்லது உறுப்பிலோ பயன்படுத்தப்பட்டால் — அது பாலியல் வல்லுறவு   சட்ட வரையறைக்குள் வராவிட்டாலும். அது “கடுமையான பாலியல் துஷ்பிரயோகம்” ஆக கருதப்படும். பின்வரும் சூழ்நிலைகளில் இது குற்றமாகும்:

  • சம்மதமில்லாமல்,
  • மிரட்டல் அல்லது அச்சுறுத்தலுடன்,
  • 16 வயதிற்குட்பட்டவர்களிடம்,
  • காவல் அல்லது கட்டுப்பாட்டு சூழலில்,
  • போதை அல்லது மனநிலை பாதிப்பில் உள்ளவரிடம்.

இந்த குற்றத்திற்கு:

  • 7 முதல் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல், அபராதம், மற்றும் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

“கடுமையான பாலியல் துஷ்பிரயோகம்” வழக்குகளில் உள்ள சிக்கல்கள்

1. உடல் சான்றுகள் குறைவாக இருக்கும் தன்மை

கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில், குறிப்பாக குழந்தைகள் தொடர்பான வழக்குகளில், பல நேரங்களில் உடல் சான்றுகள் குறைவாக இருக்கும். அதனால்:

“பாதிக்கப்பட்டவரின் குரலே வழக்கின் மைய ஆதாரம்” ஆக மாறுகிறது.

ஆனால் குழந்தைகள் பயம், வெட்கம், மனஅழுத்தம், குடும்ப அழுத்தம், சமூக அவமானம், குற்றவாளியுடன் உணர்ச்சி சார்பு போன்ற காரணங்களால் சம்பவத்தை ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி விவரிக்க முடியாமல் போகலாம்.

காயம் இல்லை என்றால் பாலியல் தாக்குதல் இல்லை என அர்த்தமா?

இல்லை. இதுவே பாலியல் நீதிமருத்துவத்தின் மிக முக்கியமான உண்மை.

பல கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில்:

  • உடல் காயங்கள் இருக்காது,
  • காயங்கள் குணமாகி இருக்கும்,
  • தாமதமான பரிசோதனையில் சான்றுகள் மறைந்திருக்கும்.

குறிப்பாக:

  • விரல் ஊடுருவல் (Digital penetration),
  • மென்மையான பாலியல் தாக்குதல் (Kissing, touching, squeezing….)
  • குழந்தை உடலின் காயங்கள் விரைவான குணமடைதல்

போன்ற காரணங்களால் உடல் சான்றுகள் இல்லாமல் போகலாம்

2. சீருடை பயம் (“Uniform Fear”)

இது நீதிமருத்துவ துறையில் மிகவும் முக்கியமான உளவியல் கருத்தாகும்.

காவல்துறை சூழல்:

  • அச்சமூட்டக்கூடியது,
  • அதிகார மையமுடையது,
  • விசாரணை தன்மை கொண்டது.

இதனால் குழந்தைகள்:

  • உண்மையை மறைக்கலாம்,
  • சில விபரங்களை விடுத்துவிடலாம்,
  • சம்பவ வரிசையை மாற்றிச் சொல்லலாம்.

ஆனால் JMO அறை:

  • மருத்துவ சூழல்,
  • தனிமை,
  • குறைந்த அழுத்தம்,
  • இரக்கமான அணுகுமுறை

என்பதால், குழந்தைகள் மருத்துவரிடம் அதிக விபரங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

3. காவல்துறை வாக்குமூலம் Vs JMO வரலாறு (History)

இது பல பாலியல் வழக்குகளில் வழக்கின் திருப்புமுனையாக மாறுகிறது.

உதாரணமாக:

காவல்துறையில்: “அவர் என்னை தவறாக தொட்டார்”

JMO யிடம்: “அவர் விரலை நுழைத்தார்”

என்று கூறப்பட்டால், பாதுகாப்பு தரப்பு:

  • “சாட்சி மாற்றப்பட்டுள்ளது”
  • “புதிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன”
  • “நம்பகமற்ற சாட்சி”

என்று வாதிடும். இந்த வழக்கிலும் இதேபோன்ற முரண்பாடுகள் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.

கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில்  தடயவியல் மருத்துவ அதிகாரியின் (JMO)  பங்கு

JMO வெறும் “காயம் பார்ப்பவர்” அல்ல.

அவர்:

  • மருத்துவர்,
  • நீதிமன்ற நிபுணர்,
  • உளவியல் கவனிப்பாளர்,
  • மற்றும் மருத்துவ-சட்ட இணைப்பாளர்.

தடயவியல் மருத்துவ அதிகாரி என்ன செய்கிறார்?

  • வரலாறு / வாக்குமூலத்தினை பதிவு செய்கிறார்
  • உடல் பரிசோதனை செய்கிறார்
  • MLEF தயாரிக்கிறார்
  • காயங்கள் அல்லது காயமின்மையை பதிவு செய்கிறார்
  • உளவியல் தாக்கங்களை கவனிக்கிறார்
  • தேவையானால் மனநல மதிப்பீட்டுக்கு அனுப்புகிறார்
  • மேலும் JMO தன்னிடம் பாதிக்கப்பட்ட நபரினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தினை அல்லது வரலாற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, தவறவிடப்படும் தகவல்களை சரி செய்ய முடியும்

உடல் சான்றுகள் இல்லாதபோது JMO எப்படி உதவுகிறார்?

உடல் காயங்கள் இல்லாதபோதும் JMO பாலியல் துஸ்பிரயோகத்தினை தொடர்ந்து ஏற்படும் பின்வரும் மனரீதியான பாதிப்புக்களான  PTSD, மனச்சோர்வு, பயம்,நடத்தை மாற்றங்கள்,மனஅழுத்த அறிகுறிகள் போன்றவற்றை பதிவு செய்ய முடியும். மேலும் உளவியல் மதிப்பீடு, மனநல மருத்துவர் கருத்து போன்றவற்றும் வழக்கில் முக்கிய மறைமுக ஆதாரங்களாக மாறலாம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சட்ட அணுகுமுறை

இந்த வழக்கில் நீதிமன்றம் எடுத்த அடிப்படை நிலைப்பாடு:

“சாட்சியின் முக்கிய அம்சங்களிலேயே முரண்பாடுகள் இருந்தால், குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை.”

இது:

  • “குற்றம் நடக்கவில்லை” என்று நிரூபிப்பதல்ல,
  • ஆனால் “சட்ட ரீதியாக உறுதியாக நிரூபிக்க முடியவில்லை” என்பதே.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கொள்கை:

“சந்தேகம் இருந்தால் அதன் பலன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கே வழங்கப்பட வேண்டும்.”

குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், மருத்துவ ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மிகவும் சிக்கலானவை. உடல் காயங்கள் இல்லாமை, தாமதமான வெளிப்படுத்தல், மனஅழுத்தம், சமூக அவமானம் மற்றும் சாட்சிய முரண்பாடுகள் ஆகியவை வழக்கின் முடிவை தீர்மானிக்கக்கூடியவை.

சீதாவக்க சோரத தேரர் வழக்கு, குறிப்பாக

  • காவல்துறை வாக்குமூலம்,
  • JMO வரலாறு,
  • நீதிமன்ற சாட்சி

இவைகளுக்கிடையேயான ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு இறுதியாக நமக்கு நினைவூட்டுவது, என்னவெனில் “பாதிக்கப்பட்டவரின் மனஅழுத்தத்தை புரிந்துகொள்ளாத நீதிமுறை உண்மையை தவறவிடும்; ஆனால் சாட்சிய நம்பகத்தன்மையை பரிசோதிக்காத நீதிமுறை தவறான தண்டனைகளுக்கும் வழிவகுக்கும்.” இந்த இரண்டிற்கும் இடையில் சமநிலை காக்கப்படுவதுதான் உண்மையான நீதி.

இலங்கையில் பாதுகாப்பின்றி வாழும் முதியவர்கள் — மௌனமாக வெடிக்கும் பேராபத்து!

சமீபத்திய வாரங்களில், இலங்கை தொடர்ச்சியான பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களால் உலுக்கப்பட்டுள்ளது: யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் தனித்து வாழ்ந்த ஒரு முதியவர்; டிக்கோயா பகுதியில் ஒரு முதிய தம்பதியினர்; சீதுவையில் ஒரு பெண் தங்களது சொந்த வீடுகளிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை ஏதோ தற்செயலாக நடந்த தனிப்பட்ட சோகங்கள் அல்ல. வேகமாக முதிர்ச்சியடைந்து வரும் மக்கள் தொகை, சிதைந்து வரும் குடும்பக் கட்டமைப்புகள், போதிய பாதுகாப்பின்மை மற்றும் நம்மிடையே உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எதிராக மாறிவரும் ஒரு விரோதமான சூழல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் முறையான நெருக்கடியின் எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

நம் முதியவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து நாம் தெளிவாக, கூட்டுப் பொறுப்புடன் மற்றும் அவசரமாகப் பேச வேண்டிய நேரம் இது.

இலங்கையின் அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகை

தெற்காசியாவிலேயே மிக வேகமாக முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. 2024 மிக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் இதனை நாம் புறக்கணிக்க முடியாதவாறு காட்டுகின்றன.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,781,800 ஆகும். இதில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் மக்கள் தொகை தற்போது மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாக உள்ளது, இது தோராயமாக 3.9 மில்லியன் மக்களைக் குறிக்கிறது.

இது ஒரு புதிய போக்கு அல்ல; பல தசாப்தங்களாக உருவாகி வரும் ஒரு போக்கின் தீவிர வளர்ச்சியாகும். 1981 இல், முதியவர்கள் மக்கள் தொகையில் வெறும் 6.6 சதவீதமாக மட்டுமே இருந்தனர். 2012 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கை 12.4 சதவீதமாக உயர்ந்தது. 2024 ஆம் ஆண்டளவில், அது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த நான்கு தசாப்தங்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இலங்கையின் சராசரி வயது (median age) 35 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது, இது 2012 கணக்கெடுப்பை விட சுமார் ஐந்து ஆண்டுகள் அதிகமாகும்.

தற்போது ‘முதுமையடைதல் குறியீடு’ (Ageing Index) 87 ஆக உள்ளது, அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொரு 100 குழந்தைகளுக்கும் 87 முதியவர்கள் உள்ளனர். முதியோர் சார்ந்திருக்கும் வீதம் (Old-Age Dependency Ratio) 29.4 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது, இது முதியவர்களை ஆதரிப்பதற்கான ஒரு பெரிய சுமையை உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையின் மீது சுமத்துகிறது.

முதியோர் பாதுகாப்பு என்ற பின்னணியில் 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து வெளிவந்த மிகவும் ஆபத்தான புள்ளிவிபரம் இதுதான்: இலங்கையில் 640,704 குடும்பங்கள் ஒரு நபர் மட்டுமே தனித்து வாழும் வீடுகளாக உள்ளன. இவற்றில், 370,229 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மேலும் இவ்வாறு தனித்து வாழும் முதியவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் ஆவர்.

இலங்கையின் மொத்த கருவுறுதல் வீதமும் (fertility rate) 1981 இல் 3.3 இலிருந்து 2024 இல் 1.8 ஆக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, அதாவது வயதான பெற்றோரைப் பராமரிக்கக் குறைவான குழந்தைகளே பிறக்கின்றனர். மக்கள் தொகையியலாளர்களின் கணிப்புப்படி, 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையர்களில் நால்வரில் ஒருவர் முதியவராக இருப்பார். நாடு வெறுமனே வயதாகி வரவில்லை — மாறாக அதன் மூத்த குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அமைப்புகள், கொள்கைகள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் ஏதுமின்றியே முதுமையை நோக்கி நகர்கிறது.

இலங்கை முதியவர்கள் ஏன் தனித்து வாழ்கிறார்கள்?

முதுமையில் தனித்து வாழ்வது என்பது எப்போதும் ஒரு சுயவிருப்பத் தெரிவாக இருப்பதில்லை. பல இலங்கை முதியவர்களுக்கு, இந்தத் தனிமையானது ஒரு தலைமுறையாகக் குடும்ப வாழ்க்கையின் நிலப்பரப்பையே மாற்றியமைத்த சமூக, பொருளாதார மற்றும் புள்ளிவிபரக் காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவாகும்.

  • பிள்ளைகளின் புலம்பெயர்வு: பொருளாதாரக் கஷ்டங்கள் இளைய குடும்ப உறுப்பினர்களை வேலை தேடி வெளிநாடுகளுக்கோ அல்லது நகர்ப்புற மையங்களுக்கோ செல்லத் தூண்டுகின்றன. வெளிநாட்டிலிருந்து பணம் வீட்டிற்கு வரலாம், ஆனால் பராமரிக்கும் ஒரு உறவினரின் நேரடி இருப்பு அங்கு இருப்பதில்லை. டிக்கோயாவைச் சுற்றியுள்ள மலைநாட்டுத் தோட்டப் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள வட மாகாணம் உட்பட பல கிராமப்புற மற்றும் தோட்டச் சமூகங்களில் — வளர்ந்த பிள்ளைகள் கொழும்பு, மத்திய கிழக்கு அல்லது மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றுவிட்டதால், ஒரு காலத்தில் சலசலப்புடன் இருந்த வீடுகளில் பெற்றோர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.
  • விதவை நிலை: இலங்கையின் பாலின விகிதம் 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் என்ற அளவில் உள்ளது, முதியவர்களிடையே இந்த இடைவெளி மேலும் விரிவடைகிறது. பெண்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கின்றனர், மேலும் விதவைகள் — குறிப்பாக மறுமணம் அரிதாக அல்லது அவதூறாகக் கருதப்படும் சமூகங்களில் — தங்களின் இறுதிக் காலங்களைத் தனிமையிலேயே கழிக்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், யுத்த இழப்புகள் கூட்டாளிகள் அல்லது குடும்பத்தினர் இன்றி வாழும் முதிய பெண்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளன.
  • கூட்டுக் குடும்ப முறையின் சிதைவு: முதியவர்கள் வீட்டிலேயே பராமரிக்கப்படும் பாரம்பரிய இலங்கை கூட்டுக் குடும்ப முறை, நகரமயமாக்கல், மாறிவரும் சமூக நெறிமுறைகள் மற்றும் நவீன பொருளாதார வாழ்க்கையின் அழுத்தங்களால் சிதைந்து போயுள்ளது. தனிக்குடித்தனங்கள், சிறிய வீடுகள் மற்றும் இருதரப்பு வருமானத் தேவைகள் (கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லுதல்) ஆகியவை முதிய உறவினர்களைத் தம்மோடு வைத்துப் பராமரிப்பதைத் தற்போதைய குடும்பங்களுக்குக் கடினமாக்கியுள்ளன.
  • வடக்கின் போருக்குப் பின்னரான இடப்பெயர்வு: யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், பல தசாப்த கால உள்நாட்டு மோதல்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தன. பல குடும்பங்கள் நிரந்தரமாகப் பிரிந்தன. அங்கேயே தங்கியிருந்த அல்லது மீளத் திரும்பிய முதியவர்கள் பெரும்பாலும் குடும்பக் கட்டமைப்புகள் இல்லாமலேயே வாழ வேண்டியதாயிற்று.
  • அணுகக்கூடிய முதியோர் பராமரிப்பு நிலையங்கள் இல்லாமை: இலங்கையின் தேவைகளுடன் ஒப்பிடும்போது முதியோருக்கான நிறுவன ரீதியான பராமரிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மலிவு விலையிலான, தரமான முதியோர் இல்லங்கள் அல்லது சமூகம் சார்ந்த ஆதரவுச் சேவைகள் இல்லாததால், குடும்பத்துடன் வாழ முடியாத பலருக்குத் தனித்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை — இதனால் அவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தனித்து வாழும் முதியவர்களுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறைகளுக்கான ஆபத்துக் காரணிகள்

சண்டிலிப்பாய், டிக்கோயா மற்றும் சீதுவை ஆகிய இடங்களில் நடந்த கொலைகள், தெற்காசியா முழுவதும் குற்றவியல் நிபுணர்கள் மற்றும் முதியோர் நல ஆர்வலர்கள் ஆவணப்படுத்திய ஒரு மாதிரியுடன் ஒத்துப்போகின்றன: தனித்து வாழும் முதியவர்கள், பெரும்பாலும் பெண்கள், தங்களின் வீடுகளிலேயே இலக்கு வைக்கப்படுகிறார்கள்  பொதுவாகப் சொத்துக்கள், நகைகளுக்காக அல்லது அவர்கள் தனிமையில் இருப்பதால் எளிதாக வன்முறையை ஏவ முடியும் என்ற காரணத்திற்காக இது நிகழ்கிறது.

இதற்கான முக்கிய ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு:

  • உடல் ரீதியான பலவீனம் மற்றும் எதிர்க்கும் திறன் இல்லாமை: வயது முதிர்வால் ஏற்படும் உடல் வலிமை, நடமாட்டம் மற்றும் புலன் உணர்வு குறைபாடுகள் முதியவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவோ, தப்பியோடவோ அல்லது தாக்குதலின் போது உதவிக்கு அழைக்கவோ முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகள் இதனை நன்கு அறிவர்.
  • தனிமை மற்றும் சாட்சிகள் இல்லாமை: தனித்து வாழ்பவர்கள் பல நாட்களாக அண்டை வீட்டாரால் பார்க்கப்படாமலோ அல்லது அவர்கள் பேசுவது கேட்கப்படாமலோ இருக்க வாய்ப்புண்டு. இது குற்றத்தைச் செய்ய வழிவகுப்பது மட்டுமல்லாமல், குற்றம் கண்டுபிடிக்கப்படுவதையும் தாமதப்படுத்துகிறது, இதனால் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. டிக்கோயா போன்ற தோட்டச் சமூகங்கள் அல்லது சீதுவையில் உள்ள கிராமப்புற குடியிருப்புகள் போன்ற பகுதிகளில், வீடுகளுக்கு இடையே கணிசமான தூரம் இருக்கலாம்.
  • செல்வத்தின் வெளிப்படையான அறிகுறிகள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள்: வழக்கமாக அணியும் தங்க நகைகள், வங்கிகள் மீதான அவிநம்பிக்கை அல்லது அணுகல் குறைபாடு காரணமாக வீட்டில் வைக்கப்படும் பணம் மற்றும் கால்நடைகள் அல்லது சொத்துக்கள் ஆகியவை குற்றவாளிகளை ஈர்க்கின்றன. வடக்கில் உள்ள தமிழ் சமூகங்களிலும், மலைநாட்டுத் தோட்டத் தமிழ் சமூகங்களிலும், தங்க நகைகள் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, இதனால் முதிய பெண்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய இலக்குகளாக மாறுகிறார்கள்.
  • வீட்டில் பணம் வைத்திருக்கும் வழக்கம்: பல இலங்கை முதியவர்கள் வங்கி முறைகளை நம்புவதில்லை அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்கான நடமாட்டமும் கல்வியறிவும் அற்றவர்களாக உள்ளனர். வீட்டில் சேமிக்கப்படும் பணமும் தங்கமும் திருட்டுக்கு ஆளாகின்றன — மேலும் இந்தத் திருட்டு வன்முறையாக மாறக்கூடும்.
  • அறிவுசார் வீழ்ச்சி மற்றும் குறைந்து வரும் தீர்ப்புத்திறன்: ஆரம்பக் கட்ட மறதி நோய் (Dementia) அல்லது அறிவாற்றல் குறைபாடு உள்ள முதியவர்கள், உதவியாளர்கள், உறவினர்கள் அல்லது அதிகாரிகள் போல நடித்து வருபவர்களால் எளிதில் ஏமாற்றப்பட்டு, வன்முறையாளர்களுக்குத் தங்களது கதவுகளைத் திறந்து விடுகின்றனர்.
  • தொடர்பு தொழில்நுட்பமின்மை அல்லது அதைப் பயன்படுத்தும் திறன் இல்லாமை: பல முதியவர்கள், குறிப்பாகக் கிராமப்புறங்களில், மொபைல் போன்களைக் கொண்டிருக்கவில்லை, அல்லது அவற்றைப் பயன்படுத்தத் தெரியாது, அல்லது பலவீனமான சமிக்ஞை (poor connectivity) உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் பொருள் அவசர காலத்தில் அவர்களால் விரைவாக உதவியை அழைக்க முடியாது என்பதாகும்.
  • போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள்: இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளும் சிறு குற்றங்களும் கடுமையாக அதிகரித்துள்ளன. போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் உள்ளவர்கள் அல்லது போதைப்பொருளுக்குப் பணம் தேடுபவர்கள் முதியவர்களை இலக்கு வைக்கும் பல குற்றங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதிரி தோட்டப் பகுதிகளிலும் நகர்ப்புற எல்லைகளிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
  • குடும்பக் கண்காணிப்பு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிதல்: ஒரு சிறிய சமூகத்தில் ஒரு முதியவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் அல்லது வெகு தொலைவில் வாழ்கிறார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியவரும்போது (இது பெரும்பாலும் சிறிய கிராமங்களில் எளிதாகத் தெரிந்துவிடும்), குற்றம் கண்டுபிடிக்கப்படும் அபாயம் குறைவு என்று கணக்கிடுபவர்களுக்கு அந்த முதியவர் ஒரு சுலபமான இலக்காக மாறுகிறார்.
  • இலக்கு வைப்பதன் வரலாற்று வடிவங்கள்: இலங்கையில் உள்ள ஆய்வுகள் மற்றும் நீதிமன்றப் பதிவுகள், குற்றவாளிகள் தனித்து வாழும் முதிய பெண்களைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துக் குற்றங்களைச் செய்த தொடர் சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளன. உதாரணமாக, 40 வயதிற்கு மேற்பட்ட தனித்து வாழும் பெண்களைக் குறிவைத்து, பல மரணங்களை ஏற்படுத்திய பின்னர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வழக்கு இதற்குச் சான்றாகும்.

தடுப்பு உத்திகள்

தடுப்பு நடவடிக்கையானது குடும்ப மட்டத்திலிருந்து தேசியக் கொள்கை வரை ஒவ்வொரு மட்டத்திலும் எடுக்கப்பட வேண்டும்.

குடும்பங்களுக்கு

  • வேறு வழியே இல்லை என்றால் ஒழிய, வயதான உறவினர்களை முற்றிலும் தனியாக விட்டுவிடாதீர்கள். முழுநேரமும் ஒன்றாக வாழ முடியாவிட்டால், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அல்லது அண்டை வீட்டாருக்கு இடையே சுழற்சி முறை வருகை அட்டவணைகளை (rotating visit schedules) ஆராயுங்கள்.
  • வயதான குடும்ப உறுப்பினர்களிடம் வேலை செய்யும் மொபைல் போன் இருப்பதையும், அவசர அழைப்புகளை மேற்கொள்வதற்காவது அதை அவர்களுக்குப் பயன்படுத்தத் தெரிந்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமான எண்களை ஸ்பீட் டயலில் (speed dial) சேமித்து வைக்கவும்.
  • தினசரி தொடர்பு கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். தினமும் காலையில் ஒரு சிறிய தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி உயிரைக் காக்கும். தொடர்பு கொள்ள முடியாவிட்டால், விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்.
  • செல்வத்தின் வெளிப்படையான அடையாளங்களைக் குறைக்கவும். வயதான உறவினர்களை வீட்டில் அதிகளவு பணம் அல்லது தங்கம் வைத்திருக்க வேண்டாம் என்று ஊக்குவியுங்கள், முடிந்தவரை வங்கிகள் அல்லது சேமிப்புச் சங்கங்களைப் பயன்படுத்தச் செய்யுங்கள்.
  • எளிமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவவும். கதவு தாழ்ப்பாள்கள், ஜன்னல் பூட்டுகள் மற்றும் அசைவுகளைக் கண்டறிந்து ஒளிரும் விளக்குகள் (motion-sensor lights) ஆகியவை குறிப்பாகக் கிராமப்புற வீடுகளில் மலிவான மற்றும் பயனுள்ள தடுப்பு முறைகளாகும்.
  • நம்பகமான அண்டை வீட்டாரை அறிமுகப்படுத்துங்கள். ஒரு முதியவரைத் தெரிந்த மற்றும் அவர்களைக் கவனித்துக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படும் ஒரு அண்டை வீட்டார் சமூகப் பாதுகாப்பின் முக்கிய அங்கமாவார். இது வெறும் அனுமானமாக இல்லாமல், ஒரு தெளிவான ஏற்பாடாக இருக்க வேண்டும்.

சமூகங்களுக்கு

  • கிராம அலுவலர் (Grama Niladhari) மட்டத்தில் முதியோர் நலக் குழுக்களை உருவாக்குங்கள். முதியவர்களைப் பார்வையிடுவது, ஆபத்தில் உள்ளவர்களைக் கண்டறிவது மற்றும் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வக் குழுக்களை தற்போதுள்ள சமூகக் கட்டமைப்புகள் மூலம் முறைப்படுத்தலாம்.
  • முதியவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் அண்டை வீட்டு கண்காணிப்பு அமைப்புகளை (neighbourhood watch systems) உருவாக்குங்கள். ஒவ்வொரு வீதியிலும் அல்லது கிராமத்திலும் எந்தெந்த வீடுகளில் முதியவர்கள் தனியாக வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.
  • இலங்கையில் சமூக வாழ்க்கையில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்களைக் கண்டறிந்து ஆதரிப்பதற்கான முறையான பொறுப்பை ஏற்க வேண்டும், மேலும் கட்டமைக்கப்பட்ட வருகைத் திட்டங்களை எளிதாக்கலாம்.
  • புலம்பெயர்ந்த சமூகங்கள் (Diaspora), இலங்கையில் விட்டுச் செல்லப்பட்ட வயதான உறவினர்களுக்கான பாதுகாப்பு மேம்பாடுகள், அவசரத் தொலைபேசிகள் மற்றும் வழக்கமான வருகைகளுக்கு நிதியளிப்பதற்காக முறையான நலன்புரி அறக்கட்டளைகள் அல்லது சமூக நிதியங்களை நிறுவ வேண்டும்.

அரசாங்கம் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு

  • வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடாமல், ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பு இல்லங்கள், சமூகம் சார்ந்த பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முதியோருக்கான மனநல ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தேசிய முதியோர் பராமரிப்பு கொள்கையை உருவாக்கி நிதியளித்தல் வேண்டும்.
  • முதியோர் வீடுகளுக்கான பொலிஸ் சமூக அணுகல். பொலிஸ் நிலைய மட்டத்தில் அதிகாரிகள் தங்களது எல்லைக்குள் தனித்து வாழும் முதியவர்களின் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும் மற்றும் அவ்வப்போது நலன்புரி விஜயங்களை மேற்கொள்ள வேண்டும். இது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளதுடன், குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் ஆகிய இரண்டிலும் அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • வறுமைக் கோட்டின் கீழ் தனித்து வாழும் முதியவர்களுக்குக் குறிப்பிட்ட பாதிப்புக்கொடுப்பனவுகளை உள்ளடக்கும் வகையில் சமுர்த்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்துதல்.
  • இலங்கை பொலிஸாரிற்குள் முதியோர் துஷ்பிரயோகம் மற்றும் முதியோர் குற்றங்களுக்கான ஒரு பிரத்யேகப் பிரிவை உருவாக்குதல். தற்போது, முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் பொதுவான குற்றவியல் விசாரணைகளுக்குள்ளேயே கையாளப்படுகின்றன — ஒரு சிறப்புப் பிரிவு இதற்குத் தேவையான நிபுணத்துவத்தையும் கவனத்தையும் கொண்டு வரும்.
  • சுகாதார ஊழியர்கள், சமூக சேவை அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் முதியவர்களுக்கு ஏற்படும் புறக்கணிப்பு அல்லது ஆபத்து குறித்து சட்டப்பூர்வமாகப் புகாரளிப்பதைக் கட்டாயமாக்கும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துங்கள்.
  • கிராமப்புற முதியவர்களுக்கான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மொபைல் போன் அணுகல் ஆகியவற்றில் முதலீடு செய்தல், அத்துடன் மலிவு விலையிலான சிம் பதிவு மற்றும் அவசரச் சேவைகளுக்கான அணுகலை வழங்குதல்.

இலங்கையின் 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு நமக்குத் தரவுகளை வழங்கியுள்ளது. சண்டிலிப்பாய், டிக்கோயா மற்றும் சீதுவை ஆகிய இடங்களில் நடந்த கொலைகள் நமக்கு மனித உயிர்களின் இழப்பை உணர்த்தியுள்ளன. இரண்டும் சேர்ந்து நமக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகின்றன: நாம் நமது மூத்த குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

இது தொடர்பான இன்னொரு பதிவு

ஆட்டுக்கறி உயிரைக் காவுகொள்ளுமா?

சமீபத்தில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் இரவு ஆட்டுக்கறி (மட்டன்) சாப்பிட்ட சில மணி நேரங்களில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஆட்டுக்கறி சாப்பிட்டதால் சளி ஏற்பட்டு மூச்சுத் திணறி இறந்துவிட்டார்” என்று பொதுமக்களிடையே ஒரு தவறான கருத்து பரவி வருகிறது.ஆனால், அவரது பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கையில், அவர் மாரடைப்பால் (Heart Attack) தான் மரணமடைந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவயதில் இப்படி நடப்பது சாத்தியமா? ஆட்டுக்கறிக்கும் மாரடைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

1. ஆட்டுக்கறி சாப்பிட்டால் சளிபிடித்து மரணம் ஏற்படுமா?

நம்மூரில் ஒரு பொதுவான வதந்தி உண்டு; ஆட்டுக்கறி சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடித்தாலோ அல்லது இரவில் மட்டன் சாப்பிட்டாலோ அது “நெஞ்சுச் சளியாக” மாறி, மூச்சை அடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். இது முற்றிலும் அறிவியல் பூர்வமற்ற கருத்து. உணவு செரிமான மண்டலத்திற்குச் (Digestive System) செல்கிறது; சளி என்பது சுவாச மண்டலம் (Respiratory System) சார்ந்த விஷயம். எனவே, மட்டன் சாப்பிடுவதால் உடனடியாக சளி பிடித்து யாரும் இறப்பதில்லை.

2. அப்படியானால் அன்று இரவே மாரடைப்பு வரக் காரணம் என்ன?

இந்த மரணத்திற்கு ஆட்டுக்கறி மட்டுமே நேரடி காரணம் அல்ல. ஆனால், ஏற்கனவே உடலில் இருந்த சில மறைமுகப் பிரச்சினைகளை அந்த கனமான உணவு (Heavy Meal) தூண்டியிருக்கலாம்

  • அதிகப்படியான கொழுப்பும் இரத்த ஓட்டமும்: ஒரே நேரத்தில் அதிக கொழுப்பு மற்றும் மசாலா நிறைந்த உணவை (குறிப்பாக இரவு நேரத்தில்) அதிகமாகச் சாப்பிடும் போது, அதைச் செரிமானம் செய்ய நம் வயிற்றுப் பகுதிக்கு வழக்கத்தை விட அதிகமான இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது.
  • இதயத்திற்கு ஏற்படும் அழுத்தம்: செரிமானத்திற்காக இரத்தம் வயிற்றை நோக்கிப் பாயும்போது, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறையலாம். இதனால் இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் (Blood Pressure) திடீரென அதிகரிக்கும்.
  • ஏற்கனவே இருந்த அடைப்பு (Silent Block): அந்த இளைஞருக்கு இதயத்தின் இரத்த நாளங்களில் ஏற்கனவே 70% முதல் 80% வரை ‘சைலண்ட்’ ஆக அடைப்பு இருந்திருக்கலாம். 28 வயது என்பதால் அவருக்கு எந்த அறிகுறியும் தெரிந்திருக்காது. இந்த நிலையில், கனமான உணவு கொடுத்த கூடுதல் அழுத்தத்தால் அந்த அடைப்பு முழுமையாகி மாரடைப்பு (Myocardial Infarction) ஏற்பட்டிருக்கலாம்.

3. பொதுமக்கள் ஏன் இதைசளி மரணம்என்று தவறாக நினைக்கிறார்கள்?

தடய மருத்துவக் கண்ணோட்டத்தின்படி (Forensic Pathology), திடீர் மாரடைப்பு அல்லது சடுதியான  இதயச் செயலிழப்பு (Acute Heart Failure) ஏற்படும் போது, இதயத்தின் இடது இதய  அறை (Left Ventricle) தனது பம்பிங் திறனை உடனடியாக இழக்கிறது; இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தைச் செலுத்த முடியாமல் போவதால், நுரையீரலில் இருந்து இதயத்திற்கு வரவேண்டிய இரத்தம் முன்னோக்கிச் செல்ல முடியாமல் பின்னோக்கித் தேங்கி, அங்குள்ள நுண் இரத்த நாளங்களில் (Pulmonary Capillaries) அழுத்தம் மிகக் கடுமையாக உயர்கிறது. இந்த அதீத அழுத்தத்தின் காரணமாக, இரத்த நாளங்களின் சுவர்களைத் தாண்டி அதிலிருக்கும் திரவப் பகுதியும் (Plasma) சில இரத்தச் சிவப்பணுக்களும் நுரையீரலின் காற்றுப் பைகளுக்குள் (Alveoli) கசிந்து தேங்கத் தொடங்குகின்றன, இதையே மருத்துவ உலகத்தில் “நுரையீரல் வீக்கம்” (Pulmonary Edema) என்று அழைக்கிறோம்.

மரணத்தின் இறுதி நிமிடங்களில் அந்த நபர் உயிர் பிழைக்க வேண்டி தீவிரமாக சுவாசிக்கப் போராடும் போது, காற்றுப் பைகளுக்குள் கசிந்த இந்தத் திரவம், அங்கு எஞ்சியிருக்கும் காற்று மற்றும் உடலின் இயற்கையான புரதங்களுடன் (Proteins) அதிவேகமாகக் கலந்து, சோப்பு நீர் போல வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு (Pinkish) நிற நுரையாக (Froth) மாறுகிறது; இந்த நுரையானது மூச்சுக்குழாய் (Trachea) வழியாக மேலேறி, மரணத்திற்கு முன்னரோ அல்லது மரணித்த உடனேயோ வாய் மற்றும் மூக்கு துவாரங்களின் வழியே வெளியே கசிகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அறிவியல் பின்னணியை அறியாத பொதுமக்கள், வெளியேறும் இந்த திரவ அமைப்பைக் கண்டு “நெஞ்சுச் சளி முற்றி, மூச்சை அடைத்து இறந்துவிட்டார்” என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்; ஆனால், பிரேதப் பரிசோதனையின் (Autopsy) போது தடயவியல் மருத்துவர்கள் அந்த நபரின் சுவாசப் பாதையில் எந்தவிதமான சளித் தொற்றோ (Infection) அல்லது அடைப்போ இல்லை என்பதையும், மாறாக நுரையீரல்கள் சாதாரண எடையை விட இரு மடங்கு கனமடைந்து, தண்ணீரில் நனைத்த பஞ்சு போல நீர் கோர்த்து இருப்பதையும், இதயத் தமனிகளில் கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்து, இது சளியால் வந்த மரணம் அல்ல, இதயச் செயலிழப்பால் ஏற்பட்ட நுரையீரல் வீக்கமே (Pulmonary Edema) காரணம் என்பதைத் துல்லியமாக உறுதி செய்கிறார்கள்.

4. 28 வயதில் மாரடைப்பா? சாத்தியமா?

“அவனுக்கு வயசு வெறும் 28 தான், எப்படி ஹார்ட் அட்டாக் வரும்?” என்பது பலரின் கேள்வி. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்புக்கு வயது ஒரு தடையே இல்லை.

  • அளவுக்கு மிஞ்சிய மனஅழுத்தம் (Stress)
  • உடற்பயிற்சியற்ற வாழ்வியல் முறை (Sedentary Lifestyle)
  • உடனடி துரித உணவுகள் மற்றும் அதிகப்படியான சிகரெட்/மது பழக்கம்
  • மரபணு காரணங்கள் (Genetics)

போன்றவற்றால் 20, 30களிலேயே இதய நாளங்களில் கொழுப்பு படிந்து (Atherosclerosis) விடுகிறது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிகாட்டுதல்கள்:

  • இரவு நேர உணவில் கட்டுப்பாடு: இரவு நேரங்களில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பதே சிறந்தது. மட்டன், பிரியாணி போன்ற கனமான உணவுகளை மதிய உணவாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. இரவில் சாப்பிட நேர்ந்தால் மிகக் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.
  • சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லாதீர்கள்: கனமான உணவு சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் செல்வது இதயத்திற்கும், செரிமானத்திற்கும் பெரும் அழுத்தத்தைத்தரும். குறைந்தது 2 மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும்.
  • அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்: அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் என்று நினைக்கும் பல அசௌகரியங்கள் சில நேரங்களில் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இடது கை, தாடை அல்லது முதுகில் பரவும் வலி, காரணமில்லாத வியர்வை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
  • முறையான பரிசோதனை: அமெரிக்க இதயக் கழகம் (AHA – American Heart Association) மற்றும் அமெரிக்க இருதயவியல் கல்லூரி (ACC) ஆகியவை 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களும் தங்களின் இதய நோய் ஆபத்தைக் கண்டறிய 4 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிப்படை கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile) செய்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இளவயதிலேயே கொழுப்பு படிதல் (Atherosclerosis) தொடங்குவதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க இது உதவுகிறது.

வதந்திகளை நம்பி, மாரடைப்புக்கான உண்மையான காரணங்களை நாம் மூடி மறைக்கக் கூடாது. இந்த இளைஞரின் மரணம் ஆட்டுக்கறியால் வந்த “சளி” அல்ல; அது நவீன வாழ்வியல் முறை நமக்குள் விதைத்திருக்கும் “மாரடைப்பு”. விழிப்புணர்வுடன் இருப்போம், உயிரைக் காப்போம்!

” உணர்ச்சியை விட அறிவியலைக் கேட்க வேண்டிய நேரம்!”

காவல் நிலையத்தில் இருந்து  பிரேத அறை வரை….

மனஅழுத்தம், அச்சம் மற்றும் திடீர் மரணம் பற்றிய தடவியல் மருத்துவ ஆய்வு

காவல், கைது, விசாரணை அல்லது சிறை வாழ்க்கையின் போது ஒருவர் அனுபவிக்கும் கடுமையான மனஅழுத்தம் சில நேரங்களில் உயிரிழப்பிற்கே வழிவகுக்கக்கூடும். இது வெறும் “பயம்” அல்லது “மனஅழுத்தம்” என்ற உளவியல் உணர்வு மட்டுமல்ல. மாறாக, உடலின் நரம்பியல், ஹார்மோன் மற்றும் இதய செயல்பாடுகளில் ஏற்படும் தீவிர உடலியல் மாற்றங்களின் விளைவாக இது உருவாகிறது. குறிப்பாக காவல் வன்முறை, உடல் கட்டுப்படுத்தல், அச்சுறுத்தல், அவமானப்படுத்தல், மரண அச்சம் மற்றும் நீண்டகால விசாரணை போன்ற சூழ்நிலைகள் மனித உடலில் உயிருக்கு ஆபத்தான மாற்றங்களைத் தூண்டக்கூடும்.

தடவியல் மருத்துவத்தில் இது மிகவும் சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பல நேரங்களில் வெளிப்படையான கடுமையான காயங்கள் இல்லாமலேயே மரணம் நிகழக்கூடும். மேலும் பிரேதப் பரிசோதனையில் காணப்படும் மாற்றங்கள் மிகவும் நுண்ணியதாக இருக்கலாம். எனவே தடயவியல் மருத்துவர் ஒருவர் உடலியல் மாற்றங்கள், மனஅழுத்தத்தின் விளைவுகள், உடல் கட்டுப்படுத்தல் முறைகள் மற்றும் சட்ட ரீதியான காரண விளைவுகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

உடலில் என்ன நடக்கிறது?

மிகுந்த பயம், கட்டுப்படுத்த முடியாத மனஅழுத்தம், மரண அச்சம் அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் மனித உடல் தன்னிச்சையாக “அவசர பாதுகாப்பு நிலை”க்கு மாறுகிறது. இதனை “போராடு அல்லது தப்பிச் செல் செயற்பாடு” என்று குறிப்பிடலாம். இந்த நிலையில் நரம்பு மண்டலம் மற்றும் ஹார்மோன் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு பல உயிரியல் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்த மாற்றங்கள் குறுகிய காலத்திற்கு உடலை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவானாலும், மிக அதிகமாக அல்லது நீண்ட நேரம் நீடித்தால் அவை உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

1. அட்ரினலின் அதிகரிப்பு

காவல், அடிதடி, உடல் கட்டுப்படுத்தல் அல்லது திடீர் அச்சம் ஏற்பட்டால் உடலில் அட்ரினலின் மற்றும் நோரட்ரினலின் போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. இது உடலை அவசர நிலைக்கு தயார்படுத்தும் இயற்கையான பாதுகாப்பு செயல்பாடாகும்.

இந்த ஹார்மோன்களின் அதிகரிப்பால்:

  • இதய துடிப்பு அதிகரிக்கிறது
  • இரத்த அழுத்தம் உயர்கிறது
  • இதய தசைகளின் ஆக்சிஜன் தேவைகள் அதிகரிக்கின்றன
  • இதய இரத்த நாளங்களில் திடீர் சுருக்கம் ஏற்படலாம்
  • இதயத்தின் மின்சார செயல்பாடு பாதிக்கப்படலாம்

இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தான இதயத் துடிப்பு கோளாறுகள் மற்றும் திடீர் இதயநிறுத்தம் ஏற்படலாம்.

2. மனஅழுத்த ஹார்மோன்கள் மற்றும் கோர்டிசோல்

நீடித்த மனஅழுத்தத்தின் போது உடலின் ஹார்மோன் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பட்டு கோர்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக

  • உடலில் அழற்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன
  • உடலின் உப்புச்சத்து மற்றும் தாதுச் சமநிலை பாதிக்கப்படுகிறது
  • இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்
  • நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது
  • இதயத்தின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது

குறிப்பாக நீண்டகால காவல், தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் போன்ற சூழ்நிலைகளில் இந்த மாற்றங்கள் உடலின் இயல்பான சமநிலையை சீர்குலைக்கக்கூடும்.

3. திடீர் பயத்தால் இதயம் நின்று போதல்

சில நபர்களில் மிகுந்த பயம் அல்லது “இப்போதே நான் இறந்து விடுவேன்” என்ற தீவிர மனஅதிர்ச்சி உடலின் வேறு ஒரு நரம்பியல் செயற்பாட்டைத் தூண்டக்கூடும். இதன் விளைவாக:

  • இதய துடிப்பு திடீரென குறையலாம்
  • இரத்த அழுத்தம் கடுமையாக குறையலாம்
  • இதயம் திடீரென நிற்கலாம்
  • திடீர் மரணம் ஏற்படலாம்

இந்த நிலை “மனஅதிர்ச்சி காரணமான திடீர் மரணம்” என்று குறிப்பிடப்படுகிறது. மிகுந்த அச்சம், உதவியற்ற நிலை மற்றும் கடுமையான உணர்ச்சி பாதிப்பு போன்ற சூழ்நிலைகளில் இது நிகழலாம்.

தடவியல் மருத்துவத்தில் மிகப்பெரிய சவால்

“பயத்தால் இறந்தார்” என்று நேரடியாக நிரூபிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் இந்த மரணங்களில் தெளிவான தனிப்பட்ட அடையாளங்கள் பெரும்பாலும் காணப்படாது. பல நேரங்களில்:

  • பிரேதப் பரிசோதனை இயல்பாக இருக்கலாம்
  • மிகச் சிறிய நுண்ணிய மாற்றங்கள் மட்டுமே காணப்படலாம்
  • முன்பிருந்த இதய நோய் இருக்கக்கூடும்
  • போதைப்பொருள் தாக்கம் இணைந்திருக்கக்கூடும்
  • உடல் கட்டுப்படுத்தல் மற்றும் மூச்சுத்திணறல் இரண்டும் பங்களித்திருக்கக்கூடும்

எனவே தடவியல் மருத்துவர் ஒருவர்:

  1. மற்ற அனைத்து இயற்கை மற்றும் விஷவியல் காரணிகளையும் நீக்க வேண்டும்
  2. நிகழ்வுகளின் நேர வரிசையை ஆராய வேண்டும்
  3. காணொளி பதிவுகள், சாட்சியங்கள் மற்றும் மருத்துவ பதிவுகளை இணைத்து மதிப்பிட வேண்டும்
  4. உடல் கட்டுப்படுத்தல் மற்றும் மனஅழுத்தம் மரணத்திற்கு எவ்வளவு பங்களித்தன என்பதை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும்

மேலும் நுண்ணாய்வு, விஷவியல் பரிசோதனை மற்றும் உடலியல் ஆய்வுகள் முக்கிய ஆதாரங்களாக இருக்கக்கூடும்.

சட்ட ரீதியான முக்கியத்துவம்

ஒருவர் காவலில் இருக்கும் போது, அவரின் பாதுகாப்பிற்கும் மருத்துவ நலத்திற்கும் அரசுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் உயர்ந்த பொறுப்பு உள்ளது. எனவே உடல் கட்டுப்படுத்தல், அச்சுறுத்தல், அளவுக்கு மீறிய வன்முறை அல்லது மருத்துவ உதவி தாமதம் போன்ற காரணிகளால் மரணம் ஏற்பட்டால் அது ஒரு முக்கியமான சட்ட மற்றும் மனித உரிமை பிரச்சினையாக மாறுகிறது. சில சூழ்நிலைகளில் உடல் கட்டுப்படுத்தல் அல்லது பயத்தால் தூண்டப்பட்ட உடலியல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மரணம் “பிறரின் செயல் காரணமாக ஏற்பட்ட மரணம்” என வகைப்படுத்தப்படலாம். இங்கு அதற்கான பொருள்

                                         “மற்றொருவரின் செயல் மரணத்திற்கு பங்களித்தது”

என்பதுதான். அது கட்டாயமாக திட்டமிட்ட கொலை என்று அர்த்தப்படுத்தாது. இருப்பினும் தடவியல் மருத்துவ கருத்தும் மருத்துவ ஆதாரங்களும் நீதிமன்ற தீர்ப்பில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

காவலில் மனஅழுத்தம் மற்றும் உணர்ச்சி அதிர்ச்சியால் ஏற்படும் மரணம் என்பது உடலியல், மனவியல், நீதிமருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய அனைத்தும் சந்திக்கும் மிக சிக்கலான துறையாகும். வெளிப்படையான காயங்கள் இல்லாமலிருந்தாலும், உடலின் மனஅழுத்தப் பதில் உயிருக்கு ஆபத்தான மாற்றங்களை உருவாக்கக்கூடும்.

எனவே காவல் மரண விசாரணை என்பது வெறும் பிரேதப் பரிசோதனையாக இருக்கக்கூடாது. மாறாக, சம்பவ சூழ்நிலை, உடல் கட்டுப்படுத்தல் முறை, மருத்துவ பதிவுகள், இழையவியல் பரிசோதனை, விஷவியல் பரிசோதனை மற்றும் காணொளி ஆதாரங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முழுமையான அறிவியல் ஆய்வாக இருக்க வேண்டும். ஒரு தடவியல் மருத்துவரின் கடமை யாருடைய தரப்பையும் ஆதரிப்பதல்ல; அறிவியல் உண்மையை கண்டறிந்து பாரபட்சமற்ற மருத்துவ கருத்தை வழங்குவதே அவரின் முதன்மை பொறுப்பாகும்.

இலங்கையின் நீச்சல் தடாகங்களில் அதிகரிக்கும் தடுக்கக்கூடிய உயிரிழப்புகள்!!!

சமீப மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள நீச்சல் தடாகங்களில்  மூழ்கி இறக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்துள்ளன. இவை தவிர்க்க முடியாத விபத்துகள் அல்ல; மாறாக பாதுகாப்பு தரநிலைகள், கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை குறைபாடுகளால் ஏற்பட்ட தடுக்கக்கூடிய மரணங்களாகும். சுற்றுலா விடுதிகளிலிருந்து சமூக விளையாட்டு மையங்கள் வரை பல இடங்களில் ஒரே மாதிரியான குறைகள் காணப்படுகின்றன: பாதுகாப்பு வசதிகளின் பற்றாக்குறை, பயிற்சி பெறாத பணியாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின்மை. இந்த சம்பவங்கள் தனித்தனியான விபத்துகள் அல்ல. நீச்சல் தடாக பாதுகாப்பை இலங்கை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதில் உள்ள அமைப்புசார் தோல்வியின் பிரதிபலிப்பாகும். இனி அனுதாபம் மட்டுமின்றி முன்கூட்டிய, கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

தற்போதைய நிலைமை

இலங்கையில் ஐந்து நட்சத்திர விடுதிகளிலிருந்து சிறிய சமூக நீச்சல் தடாகங்கள் மற்றும் பாடசாலைகள் வரை பல வகையான நீச்சல் தடாகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒரே மாதிரியான பாதுகாப்பு தரநிலைகளின் கீழ் இயங்குவதில்லை. நீச்சல் தடாகங்களில் உள்ள முக்கிய குறைபாடுகள்

1. சான்றளிக்கப்பட்ட உயிர்காக்கும் பணியாளர்கள் இல்லாமை

பல விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் சமூக மையங்களில் பயிற்சி பெற்ற lifeguard பணியில் இருப்பதில்லை. சில இடங்களில் சாதாரண ஊழியர்களே எந்தவித பயிற்சியும் இல்லாமல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

2. பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் ஆழக் குறியீடுகள் இல்லாமை

“Diving செய்ய வேண்டாம்”, நீரின் ஆழம், அவசர தொலைபேசி எண்கள் போன்ற அடிப்படை அறிவிப்புகள் பல இடங்களில் காணப்படுவதில்லை.

3. பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை

உயிர்காக்கும் வளையங்கள், மீட்பு கம்பிகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் அவசர அலாரங்கள் பல இடங்களில் இல்லாமையோ அல்லது பழுதடைந்த நிலையிலோ உள்ளன.

4. கட்டாய ஆய்வு முறைமையின்மை

பல நாடுகளில் போல வருடாந்திர பாதுகாப்பு ஆய்வுகள் இலங்கையில் கட்டாயமாக இல்லை.

5. மோசமான நீச்சல் தடாகங்கள் வடிவமைப்பு

வழுக்கும் தரைகள், கூர்மையான அடிப்பகுதி விளிம்புகள், பாதுகாப்பற்ற நீர்வெளியேற்ற அமைப்புகள் போன்றவை விபத்துகளை அதிகரிக்கின்றன.

6. நீச்சல் பாதுகாப்பு கல்வி இல்லாமை

பல குழந்தைகளும் பெரியவர்களும் நீச்சல் திறமையோ பாதுகாப்பு அறிவோ இல்லாமல் நீரில் இறங்குகின்றனர்.

7. அவசரநிலை நடவடிக்கை தாமதம் மற்றும் சட்ட அமலாக்க பலவீனம் ஆகிய காரணிகளுடன் தொடர்புடையவை.

ஒவ்வொரு நீச்சல் தடாகத்திலும் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

1. உயிர் பாதுகாப்பு (Lifeguards)

பொது மற்றும் ஹோட்டல் நீச்சல் தடாகங்கள் இயங்கும் நேரங்களில், சான்றிதழ் பெற்ற உயிர்காப்பாளர்கள் (Lifeguards) பணியில் இருப்பது சட்டப்படி கட்டாயமாகும்.

2. கட்டாய பாதுகாப்பு உபகரணங்கள்

ஒவ்வொரு குளத்திலும் 15 மீட்டர் கயிறுடன் lifebuoy , மீட்பு கம்பி , முதலுதவி பெட்டி , AED (பெரிய மையங்களில்) மற்றும் அவசர தொடர்பு சாதனம். இவை அனைத்தும் உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

3. எச்சரிக்கை பலகைகள்

 தடாகத்தின் ஆழம் (Depth Markings) ,“No Diving” எச்சரிக்கை ,அதிகபட்ச பயனாளர் எண்ணிக்கை, குழந்தைகள் கண்காணிப்பு அறிவிப்பு, அவசர எண் (1990)மற்றும் பாதுகாப்பு விதிகள் தெளிவாகத் தெரியும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

4. பாதுகாப்பு வேலி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு

குழந்தைகள் அணுகக்கூடிய அனைத்து நீச்சல் குளங்களும் குறைந்தது 1.2 மீட்டர் உயரமான வேலியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

5. Drain பாதுகாப்பு

மூழ்கல் மற்றும் உடல் சிக்குதல் ஏற்படாத வகையில் anti-entrapment drain covers கட்டாயமாக இருக்க வேண்டும்.

6. நீர்தரமும் வெளிச்ச வசதியும்

நீரின் அடிப்பகுதியை தெளிவாக பார்க்கக்கூடிய அளவிற்கு நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

7. அவசரநிலை செயல்திட்டம்

ஒவ்வொரு நிலையிலும் எழுதப்பட்ட Emergency Action Plan இருக்க வேண்டும்.

8. குழந்தைகளுக்கான தனிப்பிரிவு

சிறுவர்களுக்கான shalllow pool தனியாக அமைக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நீச்சல் தடாகங்களுக்கு சட்ட வழிகாட்டுதல் உள்ளதா?

ஆம். இலங்கையில் நீச்சல் தடாக வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவை நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA), உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ஆகியவற்றின் சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.

1. கட்டுமானத்திற்கான சட்ட கட்டமைப்பு (Construction Laws)

  • நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் (UDA Law): இலங்கையில் எந்தவொரு நீச்சல் தடாகத்தையும் அமைப்பதற்கு முன்னதாக, UDA அல்லது அந்தந்த பிரதேச மாநகர சபை/நகர சபையிடம் இருந்து அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தை (Development Permit) கட்டாயம் பெற வேண்டும்.
  • கட்டுமானத் தொழில் வளர்ச்சிச் சட்டம் (CIDA Act): தடாகத்தை அமைக்கும் ஒப்பந்ததாரர் (Contractor) இலங்கையின் கட்டுமானத் தொழில் வளர்ச்சி அதிகாரசபையில் (CIDA) பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • கட்டமைப்பு தரநிலைகள்: நீச்சல் தடாகத்தின் தரை மற்றும் சுவர்கள் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (Reinforced Concrete) மூலம் நீர்க்கசிவு ஏற்படாதவாறு அமைக்கப்பட வேண்டும். இதற்கான வரைபடங்கள் தகுதிவாய்ந்த பொறியியலாளர் (Chartered Engineer) ஒருவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2. பராமரிப்பு மற்றும் நீரின் தரம் (Maintenance & Water Quality)

சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் அல்லது பொது நீச்சல் தடாகங்களில் நீரின் தரத்தை பராமரிப்பது சட்டப்படி கட்டாயமாகும்:

  • இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) விதிமுறைகள்: வணிக ரீதியான நீச்சல் தடாகங்களின் நீரின் தரம் தினமும் குறைந்தது இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
  • இரசாயன அளவுகள்:
    • pH அளவு: நீரின் pH அளவு கண்டிப்பாக 7.4 முதல் 7.6 க்குள் இருக்க வேண்டும்.
    • குளோரின் (Chlorine) அளவு: நீரில் எஞ்சியிருக்கும் குளோரின் அளவு 0.5 ppm (Parts Per Million) என்ற அளவில் இருக்க வேண்டும்.
  • கழிவுநீர் அகற்றல்: தடாகத்தை சுத்தம் செய்யும்போது வெளியேறும் இரசாயனம் கலந்த கழிவுநீரை பொது வடிகால்களில் நேரடியாக விட முடியாது. அதை பிரத்யேக உறிஞ்சு குழி (Soakage Pit) மூலம் நிலத்தடிக்குள் செலுத்த வேண்டும்.

இது தவிர இலங்கையில் “Guidelines for Safe Pool Operations – Sri Lanka (GSPO–SL)” எனப்படும் தேசிய வழிகாட்டுதல் ஆவணம் உள்ளது. இது Sri Lanka Life Saving உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் பல இடங்களில் மேற்குறித்த சட்டங்கள் போதிய அளவில் அமுல்ப்படுத்தப்படுவதில்லை இதன் காரணமாகவே இவ்வாறான தடுக்கப்படக்கூடிய இறப்புக்கள் தொடர்கதையாக உள்ளன. இலங்கையில் இன்னும்:

  • தனித்த Swimming Pool Safety Act இல்லை
  • தேசிய Aquatic Safety Authority இல்லை
  • கட்டாய ஆண்டு ஆய்வு முறைமை இல்லை
  • அனைத்து நீச்சல் குளங்களுக்கும் ஒரே உரிமம் தரநிலை இல்லை
  • அலட்சியத்திற்கு எதிரான தெளிவான குற்றப்பொறுப்பு சட்டம் இல்லை

இதன் விளைவாக பல இடங்கள்:

  • விருப்பப்படி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகின்றன,
  • அல்லது முற்றிலும் பின்பற்றாமல் இயங்குகின்றன.

சர்வதேச அளவில் இன்று பயன்படுத்தப்படும் அடிப்படை சட்டக் கோட்பாடு “Foreseeable and Preventable Risk” அதாவது “முன்கூட்டியே எதிர்பார்க்கக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய ஆபத்து.” ஒவ்வொரு நீச்சல் குள மூழ்கி இறப்பும் ஒரு குடும்பத்தின் துயரமல்ல; அது சமூக பாதுகாப்பு அமைப்பின் தோல்வி. இலங்கை இன்னும் பாதுகாப்பை விருப்பத் தேர்வாகப் பார்க்கிறது. ஆனால் பாதுகாப்பு என்பது செலவு அல்ல. அது உயிரைக் காக்கும் அடிப்படை பொறுப்பு.

இன்று நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாளைய மரணங்கள் “விபத்து” அல்ல “முன்கூட்டியே தெரிந்த அலட்சியத்தின் விளைவு” என வரலாறு பதிவு செய்யும் போதிய பாதுகாப்பு வேலி இல்லாததாலோ அல்லது தெளிவற்ற நீரினாலோ தடாகத்தில் ஏதேனும் விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், சொத்தின் உரிமையாளர் மீது இலங்கை தண்டனைச் சட்டத் தொகுப்பின் (Penal Code) கீழ் அலட்சியக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ஆழ்கடலின் அமைதிக்குள் மறைந்த மரணம்!!!

மாலைதீவில் அண்மையில் இடம்பெற்ற ஆழ்கடல் நீர்மூழ்கல் விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50–60 மீட்டர் ஆழத்தில் உள்ள கடல்குகைகளை (Sea Caves) ஆராய்வதற்காகச் சென்ற ஐந்து இத்தாலிய நீர்மூழ்கல் வீரர்கள் காணாமல் போனதுடன், அவர்களின் உடல்களை மீட்க முயன்ற மாலத்தீவு இராணுவ மீட்பு நீர்மூழ்கல் வீரரும் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் ஒரு சாதாரண “மூழ்கி இறப்பு” (Simple Drowning) அல்ல. மனித உடலின் இயல்பான உடற்தொழிலியல் செயல்பாடுகள், கடலழுத்த மாற்றங்கள், சுவாச வாயு இயற்பியல், நரம்பியல் மாற்றங்கள் மற்றும் மனஅழுத்தப் பதில்கள் (Panic responses) ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து எவ்வாறு ஒரு பேரழிவை (Cascade Failure) உருவாக்குகின்றன என்பதற்கான மிக முக்கிய எடுத்துக்காட்டு இதுவாகும். ஒரு தடயவியல் நோயியல் நிபுணரின் (Forensic Pathologist) பார்வையில், இந்த மரணங்களைப் புரிந்துகொள்ள முதலில் “நீர்மூழ்கலின் போது மனித உடலில் இயல்பாக என்ன நடைபெறுகிறது?” என்பதை அறிவது அவசியமாகிறது.

நீர்மூழ்கல் நேரத்தில் மனித உடலில் இயல்பாக என்ன நடக்கிறது?

1. கடலழுத்தம் – நீர்மூழ்கலின் மைய அறிவியல்

நிலத்தின் மேற்பரப்பில் மனித உடல் ஒரு வளிமண்டல அழுத்தத்தில் (1 ATM – Atmosphere) இயங்குகிறது. ஆனால் கடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு 10 மீட்டர் ஆழத்திற்கும் சுமார் 1 ATM அழுத்தம் வீதம் அதிகரிக்கிறது.

  • மேற்பரப்பு: 1 ATM
  • 10 மீட்டர்: 2 ATM
  • 20 மீட்டர்: 3 ATM
  • 30 மீட்டர்: 4 ATM
  • 50 மீட்டர்: 6 ATM

இதன் அடிப்படையில், 50–60 மீட்டர் ஆழத்தில் மனித உடல் சாதாரண நிலத்தை விட ஆறு மடங்கு அதிகமான அழுத்தத்திற்குள் செயல்பட வேண்டியிருக்கும். இந்த அதிகரித்த அழுத்தமானது நுரையீரல், காதுகள், இரத்தத்தில் கரையும் வாயுக்கள், இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட உடலின் அனைத்துப் பாகங்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.

2. Scuba Regulator உயிரைக் காப்பாற்றுவது எப்படி?

மனிதன் நேரடியாக ஆழ்கடலில் சுவாசிக்க முடியாது; காரணம், வெளிப்புற நீரழுத்தம் நுரையீரலைச் சுருக்கிவிடும். இதனைத் தடுப்பதற்காகவே Scuba Regulator எனப்படும் அழுத்தச் சீராக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவி சுற்றியுள்ள நீரழுத்தத்திற்குச் சமமான அழுத்தத்தில் காற்றை வழங்குகிறது. (உதாரணமாக, 30 மீட்டர் ஆழத்தில் 4 ATM அழுத்தத்தில் காற்றை வழங்கும்). இதனால் நுரையீரல் இயல்பாக விரிவடைந்து சுவாசம் சாத்தியமாகிறது.

ஆனால் ஆழம் அதிகரிக்கும் போது காற்று மிகவும் அடர்த்தியாக (Dense) மாறுவதால், சுவாசிப்பதற்கு அதிக தசை உழைப்பு தேவைப்படும். இதனால் கார்பன் டைஆக்சைடு (CO2) உடலில் தேங்கி, மூச்சுத்திணறல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3. நைட்ரஜன் உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள்

நாம் சுவாசிக்கும் காற்றில் சுமார் 21% ஆக்சிஜனும் 79% நைட்ரஜனும் உள்ளன. நிலப்பரப்பில் நைட்ரஜன் ஒரு மந்த வாயுவாக (Inert gas) உள்ளது. ஆனால், ஹென்றி விதியின் (Henry’s Law) படி, ஆழ்கடலின் அதிக அழுத்தத்தினால் நைட்ரஜன் இரத்தத்திலும் கொழுப்புத் திசுக்களிலும் மிக அதிகமாகக் கரையத் தொடங்குகிறது.

Diver பாதுகாப்பாகவும் மெதுவாகவும் மேலே வந்தால், இந்த நைட்ரஜன் மீண்டும் வாயுவாக மாறி நுரையீரல் வழியாகப் பாதுகாப்பாக வெளியேறும். ஆனால் மிக வேகமாக மேலே ஏறினால், அது குமிழிகளாக மாறி ஆபத்தை விளைவிக்கும்.

4. உடலின் இயற்கை பாதுகாப்பு முறை (Mammalian Diving Reflex )

குளிர்ந்த நீரில் முகம் மூழ்கும்போது உடலில் ஒரு இயற்கை பாதுகாப்பு செயல்முறை தொடங்குகிறது. இதன் போது இதயத் துடிப்பு குறைகிறது (Bradycardia), இரத்த ஓட்டம் மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே திருப்பப்படுகிறது, மற்றும் ஆக்சிஜன் சேமிக்கப்படுகிறது. இருப்பினும் மிக ஆழமான மற்றும் ஆபத்தான சூழல்களில் இந்த பாதுகாப்பு முறை போதுமானதாக இருப்பதில்லை.

5. காதுகள் மற்றும் உடலழுத்த சமநிலை (Ear Equalization)

நீருக்குள் இறங்கும் போது காதுக்குள் உள்ள காற்று சுருங்குகிறது. இதனால் divers மூக்கை அடைத்து ஊதுதல் (Valsalva Maneuver) அல்லது விழுங்குதல் மூலம் அழுத்தத்தை சமப்படுத்துகின்றனர். இந்த சமநிலை ஏற்படவில்லை என்றால், கடுமையான காதுவலி, நடுச்செவி இரத்தக்கசிவு அல்லது காது திரை கிழிதல் (Tympanic Membrane Perforation) ஏற்படலாம்.

6. உடல் வெப்பநிலை மாற்றங்கள் (Hypothermia)

நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சுகிறது. இதனால் உடல் வெப்பம் மிக வேகமாக குறையக்கூடும் (Hypothermia). இது தசைச் செயல்பாட்டைக் குறைப்பதுடன், சிந்தனைத் திறனை மந்தமாக்கி, சோர்வை அதிகரிக்கும்.

மாலைதீவு சம்பவத்தில் ஏன் உயிரிழப்புகள்??

1. ஆழ்கடல் குகை Diving (Cave Diving)

50–60 மீட்டர் ஆழத்தில் குகை diving செய்வது சாதாரண பொழுதுபோக்கு diving அல்ல. இத்தகைய மிகவும் அபாயகரமான சூழலில்:

  • ஆபத்து ஏற்பட்டால் நேரடியாகச் செங்குத்தாக மேலே வர முடியாது (No Overhead Clearance).
  • குகைக்குள் வழி தவற வாய்ப்பு அதிகம்.
  • நீர்மூழ்கி வீரர்களின் துடுப்புகள் மோதி குகை மண்படிவுகள் கலங்குவதால் பார்வைத் திறன் (Visibility) திடீரென முற்றிலும் பூஜ்ஜியமாகலாம்.

2. Nitrogen Narcosis (நைதரசன் மயக்கம்) – “ஆழத்தின் மயக்கம்”

40 மீட்டருக்குக் கீழ் செல்லும் போது, திசுக்களில் கரைந்த நைட்ரஜன் மூளையில் ஒரு மயக்க விளைவை (Anesthetic effect) ஏற்படுத்துகிறது. இது “Martini Effect” என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் சரியான தீர்மான திறன் குறையும், குழப்பம், திசைமாறுதல் மற்றும் காரணமற்ற பயம் அல்லது மிதமிஞ்சிய மகிழ்ச்சி (Euphoria) ஏற்படும். அனுபவமுள்ள diver கூட இதனால் தவறான முடிவுகளை எடுத்து, காற்று அளவைக் கண்காணிக்கத் தவறி வழிதவறக்கூடும்.

  • குறிப்பு: இந்த நிலையை உடற்கூற்றுப் பரிசோதனையில் (Autopsy) நேரடியாகக் கண்டறிய முடியாது.

3. ஆக்சிஜன் நச்சுத்தன்மை (Oxygen Toxicity)

ஆழத்தில் ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் (Partial Pressure) 1.4 – 1.6 ATM வைத் தாண்டும் போது, அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். இதனால் நீருக்குள் திடீர் வலிப்பு (Seizures) மற்றும் நினைவிழந்த நிலை ஏற்படும். நீருக்குள் வலிப்பு ஏற்பட்டால் Regulator வாயிலிருந்து விலகி, உடனடியாக மூழ்கி இறக்க நேரிடும்.

4. பீதி (Panic) மற்றும் காற்று தீர்தல்

குகைக்குள் வழிதவறும் போது ஏற்படும் தீவிர பயம் (Panic) காரணமாக, வீரர்கள் வேகமாகச் சுவாசிப்பார்கள் (Hyperventilation). இதனால் சில மணி நேரங்களுக்கு வர வேண்டிய சிலிண்டர் காற்று, சில நிமிடங்களிலேயே தீர்ந்துபோய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது.

5. மிக வேகமான மேலேற்றம் மற்றும் Decompression Illness (DCS)

பயத்தின் காரணமாக divers அவசரமாக மேலே ஏற முயன்றால் (Rapid Ascent) இரத்தத்தில் கரைந்த நைட்ரஜன் வாயு, சோடா பாட்டிலைத் திறப்பது போல உடனே குமிழிகளாக (Gas Bubbles) மாறும். இக்குமிழிகள் மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களை அடைப்பதால் (Arterial Gas Embolism – AGE) மற்றும் நுரையீரல் கிழிவடைவதால் (Pulmonary Barotrauma) உடனடி மரணம் நிகழ்கிறது.

மீட்பு வீரர் ஏன் உயிரிழந்தார்?

மீட்பு நடவடிக்கைகள் (Search and Recovery) சாதாரண diving-ஐ விட உடல் மற்றும் மன ரீதியாக மிகக் கடுமையானவை. மீட்பு diver:

  • அதிதிடீரென ஆழத்திற்குச் செல்ல வேண்டியிருந்திருக்கலாம் அல்லது பலமுறை ஏறி இறங்கியிருக்கலாம் (Repetitive Diving).
  • அதிக உடல் உழைப்பால் உடலில் கார்பன் டைஆக்சைடு தேங்கியிருக்கலாம்.
  • அவர் உடல்களை மீட்டெடுத்து மேலே வந்தபின் சரிந்து விழுந்து (Collapse) உயிரிழந்தது, தீவிரமான Decompression Sickness (DCS), Arterial Gas Embolism (AGE) அல்லது கடுமையான குளிர் மற்றும் உழைப்பால் ஏற்பட்ட இதயம் சார்ந்த முடக்கம் (Cardiac Arrhythmia) ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது.

தடயவியல் உடற்கூற்றுப் பரிசோதனை (Forensic Autopsy)

இவ்வாறான நீர்மூழ்கல் மரணங்களில் வழக்கமான உடற்கூறாய்வு மட்டும் போதாது. தடயவியல் மருத்துவ விசாரணையில் பின்வருவன முக்கியமாக ஆராயப்படும்:

  • Post-mortem CT Scan / X-ray: திசுக்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் காற்று/நைட்ரஜன் குமிழிகள் (Gas embolism) உள்ளதா என்பதைக் கண்டறிதல்.
  • காது மற்றும் நுரையீரல் ஆய்வு: அழுத்த மாறுபாட்டால் ஏற்பட்ட பாரோட்ராமா (Barotrauma) மற்றும் நுரையீரல் வீக்கம் (Pulmonary Edema) உள்ளதா எனப் பார்த்தல்.
  • Gas Analysis & Toxicology: சிலிண்டரில் இருந்த வாயுக்களின் கலவை (கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மை உள்ளதா) மற்றும் வீரர்களின் உடலில் வேறு ஏதேனும் மருந்துகள் உள்ளதா என ஆய்வு செய்தல்.
  • Dive Computer பதிவுகள்: அவர்களின் டைவ் கம்ப்யூட்டரில் பதிவான ஆழம், நேரம் மற்றும் மேலேறிய வேகம் (Diving Profile) ஆகியவற்றை ஆய்வு செய்து விபத்தின் காட்சியை முழுமையாக மீளமைத்தல்.

முக்கியப் பாதுகாப்பு பாடங்கள்

  1. ஆழம் அதிகமானால் அபாயமும் பல மடங்கு அதிகரிக்கும்: 40 மீட்டருக்குக் கீழே diving செய்வது முறையான தொழில்நுட்பப் பயிற்சி (Technical Diving) மற்றும் பிரத்யேக வாயுக்கலவைகள் (Trimix – Helium, Nitrogen, Oxygen) இல்லாமல் மேற்கொள்ளப்படக் கூடாது.
  2. குகை நீர்மூழ்கல் (Cave Diving) மிக அபாயகரமானது: அவசரத்திற்குச் செங்குத்தாக மேலே வர முடியாத சூழலில், ஒரு சிறிய தவறும் மரணக் காரணியாக மாறும்.
  3. அனுபவம் மட்டும் பாதுகாப்பை உறுதி செய்யாது: அதிகப்படியான தன்னம்பிக்கை சில நேரங்களில் ஆபத்தான எல்லைகளைத் தாண்டத் தூண்டும். உலகின் மிகச் சிறந்த நீர்மூழ்கி வீரர்களும் இத்தகைய விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
  4. மீட்பு நடவடிக்கைகளும் உயிருக்கு ஆபத்தானவை: உடல்களை மீட்பது என்பது உயிருடன் இருப்பவர்களை மீட்பதை விட கடினமானது மற்றும் ஆபத்தானது.

மாலத்தீவு சம்பவம் ஒரு சாதாரண விபத்து அல்ல. மனித உடல் இயல்பாகத் தாங்கக்கூடிய எல்லைகளைத் தாண்டிய சூழலில் நிகழ்ந்த ஒரு “சங்கிலித் தொடர் தோல்வி” (Cascade Failure) ஆகும். ஆழ்கடல் diving இல் அழுத்தம், நைட்ரஜன், ஆக்சிஜன், பீதி மற்றும் சோர்வு ஆகியவை ஒரே நேரத்தில் தாக்கும் போது மிகச் சிறிய தவறும் மரணமாக முடியும். “கடலை மனிதனால் ஒருபோதும் வெல்ல முடியாது; அதன் அறிவியலை மதித்து நடப்பதே உயிரைக் காக்கும்” என்பதே இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தும் மிக முக்கிய பாடமாகும்.

ஒரு இரவு உல்லாசம்… மறுநாள் சடலம்! விடுதிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

தங்கும் விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயது நபர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் ஹசலக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், அண்மையில் அறிமுகமான ஹங்குரன்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணுடன் தங்குவதற்காக மஹியங்கனை நகரிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் அறையை முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முடியும் வரை, சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணை மஹியங்கனை பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக விடுதிகளில் (Lodge/Guest house) தங்கியிருக்கும் நடுத்தர வயது நபர்கள் உடலுறவின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தடயவியல் மருத்துவ ரீதியாக, இது தற்செயலான மரணம் (Accident dead) அல்ல; மாறாக உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மருந்துகளின் தவறான பயன்பாடு ஆகியவற்றின் விளைவாகும். இவ்வாறான திடீர் மரணங்களுக்குரிய காரணங்கள் பின்வருமாறு

1. இதயமும் இரத்த அழுத்தமும் (Cardiovascular Strain)

உடலுறவு என்பது ஒரு தீவிரமான உடற்பயிற்சிக்குச் சமமானது. உச்சகட்ட நிலையை (Orgasm) அடையும் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140–180 வரை அதிகரிக்கலாம். அவ்வாறே இரத்த அழுத்தமும் சடுதியாக 200mmHg இணை தாண்டி அதிகரிக்கும். பலரில்  நீண்டகால இரத்த அழுத்தம் இதயத் தசைகளைத் தடிமனாக்கி, இரத்தக் குழாய்களைச் சுருக்குகிறது. இவ்வாறான நிலையில் இந்த திடீர் அழுத்தத்தை இதயம் தாங்க முடியாமல் போகும்போது மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.

இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் அறிமுகமில்லாத இடங்களில் அல்லது மறைமுகமான சந்திப்புகளின் போதே அதிகம் நிகழ்கின்றன. “பிடிபட்டு விடுவோமோ” என்ற பயமும், “திறமையை நிரூபிக்க வேண்டும்” என்ற பதற்றமும் உடலில் அட்ரினலின் (Adrenaline) ஹார்மோனை அதிகப்படியாகச் சுரக்கச் செய்கிறது. இது இரத்த அழுத்தத்தை அபாய கட்டத்திற்கு தள்ளுகிறது.

2. விரிவடைந்த இதயத் தசை நோய் (Dilated Cardiomyopathy)

பலவீனமான மற்றும் விரிவடைந்த இதயம் கொண்டவர்களுக்கு, உடலுறவின் போது ஏற்படும் அதிகப்படியான வேலைப்பளு இதயத்தை உடனடியாக செயலிழக்கச் செய்யும்.

3. பக்கவாதம் (Stroke)

உடலுறவின் போது ஏற்படும் அதீத இரத்த அழுத்த உயர்வால் மூளையிலுள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் வெடிக்கக்கூடும் (Subarachnoid Hemorrhage). இதனால் உடலுறவின் போதோ அல்லது முடிந்த உடனேயோ கடும் தலைவலி ஏற்பட்டு நபர் உயிரிழக்க நேரிடும்.

4. சில்டெனாபில் (Sildenafil/Viagra) மற்றும் மருந்து இடைத்தாக்கம்

பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் சில்டெனாபில் மாத்திரைகள் பல நேரங்களில் எமனாக மாறுகின்றன:

  • நைட்ரேட் மருந்துகளுடன் இடைத்தாக்கம்: ஏற்கனவே இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள், சில்டெனாபில் மாத்திரையைச் சேர்க்கும்போது இரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறைந்து மயக்கம் அல்லது மரணம் ஏற்படலாம்.
  • எச்சரிக்கை மணி முடக்கப்படுதல்: விறைப்புத்தன்மை குறைபாடு என்பது இதயம் பலவீனமாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும். அந்த இயற்கை எச்சரிக்கையை மாத்திரைகள் மூலம் மறைத்துவிட்டு உடலை வருத்தும்போது இதயம் “ஷார்ட் சர்க்யூட்” ஆகி நிக்கிறது.

5. உடலுறவுக்குப் பின் நிகழும் மாற்றம் (Post-Coitus Death)

மரணம் உடலுறவின் போது மட்டுமல்லாமல், முடிந்த சில நிமிடங்களிலும் நிகழலாம். உச்சகட்டத்திற்குப் பிறகு உடல் ஓய்வு நிலைக்குத் திரும்பும் போது ஏற்படும் திடீர் இரத்த அழுத்த மாற்றத்தை (Vasovagal response) பலவீனமான இதயம் தாங்கிக் கொள்ளாது.

தடயவியல் மருத்துவ  ஆய்வு

மரணத்திற்குப் பிறகு செய்யப்படும் சோதனைகளில் இதயத்தின் தமனிகளில் அதாவது முடியுரு நாடிகளில்  அடைப்பு உள்ளதா அல்லது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்று பார்க்கப்படுகிறது. மேலும்  இரத்தத்தில் சில்டெனாபில் அல்லது மதுவின் அளவு எவ்வளவு உள்ளது என்று நவீன LC-MS/MS கருவிகள் மூலம் கண்டறியப்படுகிறது.
உடல் தகுதியை மீறிய செயல்பாடும், முறையற்ற மருந்துப் பயன்பாடும் இத்தகைய “கட்டில் மரணங்களுக்கு” (Death in the saddle) முக்கியக் காரணமாகின்றன. 40 வயதைக் கடந்தவர்கள் முறையான இதயப் பரிசோதனை செய்து கொள்வது இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க உதவும்.

விடுதிகளில் நிகழும் திடீர் மரணங்கள் – மறைக்கப்பட்டிருக்கும் மருத்துவ அபாயங்கள்

தற்காலிக மகிழ்ச்சியை விட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்

1. இரத்த அழுத்தத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்

  • கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம்.
  • அறியப்படாத இதய நோய்கள் (உதாரணம்: இதயத் தசை வீக்கம் – Cardiomyopathy).

2. ஆபத்தான சுய மருத்துவத்தைத் தவிர்க்கவும்

  • சில்டெனாபில் (Sildenafil/Viagra) போன்ற மாத்திரைகளால் ஏற்படும் அபாயங்கள்.
  • மற்ற மருந்துகளுடன் (உதாரணம்: நைட்ரேட் மருந்துகள்) ஏற்படும் உயிருக்கு ஆபத்தான விளைவுகள்.

3. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணருங்கள்

  • அறிமுகமில்லாத இடங்களில் ஏற்படும் அதிகப்படியான பதற்றம்.
  • உடலில் திடீரென அதிகரிக்கும் அட்ரினலின் (Adrenaline) அளவு.

4. மருத்துவப் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்கவும்

  • ஆண்டுதோறும் இதயப் பரிசோதனை செய்தல் (குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்).
  • நாள்பட்ட நோய்களைச் சரியாக மேலாண்மை செய்தல்.

குற்றவாளிகளின் சொர்க்கமாகிறதா இலங்கை? அதிர வைக்கும் பின்னணி!

அண்மைக் காலங்களில் இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகள் பலர் இணைய குற்றச்சாட்டுகள் (Cyber Crime) தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ராஜகிரிய, உணவட்டுன, வத்தளை, மிகுந்தலை, பொரலஸ்கமுவ … போன்ற நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் திடீர் சோதனைகளில் பல வெளிநாட்டவர்கள் சர்வதேச சைபர் குற்ற வலையமைப்புகள் செயல்பட்டதாக இலங்கை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. “ஏன் வெளிநாட்டு குற்றவாளிகள் இலங்கையைத் தேர்வு செய்கின்றனர்?”, “இவர்கள் எவ்வாறு இணைய மோசடிகளை செய்கின்றனர்?” போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் பதிவு இணைய குற்றங்களின் இயல்பு, வெளிநாட்டு குற்றவியல் வலையமைப்புகளின் செயல்முறை, டிஜிட்டல் தடயவியல் விசாரணைகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அம்சங்களை விரிவாக விளக்குகிறது.

சமீபத்திய கைது புள்ளிவிவரங்கள்

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் இணையக் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர், இது கடந்த காலங்களை விட பாரிய அதிகரிப்பாகும். குறிப்பாக மே மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் காலி, ஹிக்கடுவ மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளிகள் உட்பட 198 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்னதாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிலாபம், கொழும்பு மற்றும் தலங்கம பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் சுமார் 152 சீனர்கள் மற்றும் 74 வியட்நாம் பிரஜைகள் கிரிப்டோகரன்சி மற்றும் சர்வதேச நிதி மோசடிகளுக்காகக் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து, விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான மடிக்கணினிகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இணைய குற்றம் (Cyber Crime) என்றால் என்ன?

இணைய குற்றம் என்பது கணினி, இணையம், மொபைல் தொலைபேசி, டிஜிட்டல் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின்னணு வலைப்பின்னல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களைக் குறிக்கிறது. இதில் அடங்குபவை:

  • ஆன்லைன் பண மோசடி
  • OTP மற்றும் வங்கி மோசடிகள்
  • போலி முதலீட்டு திட்டங்கள்
  • கிரிப்டோகரன்சி மோசடிகள்
  • சமூக ஊடக மோசடிகள்
  • காதல் மோசடிகள் (Romance Scam)
  • அடையாள திருட்டு
  • தரவு திருட்டு மற்றும் ஹாக்கிங்

இன்றைய உலகில் சைபர் குற்றங்கள் தனிநபர்களால் மட்டும் செய்யப்படுவதில்லை. பல குற்றவியல் அமைப்புகள் தொழில்முறை நிறுவனங்களைப் போல செயல்படுகின்றன. அவற்றில்:

  • தொழில்நுட்ப நிபுணர்கள்
  • சமூக உளவியல் நிபுணர்கள்
  • தொலைபேசி மோசடி குழுக்கள்
  • Cryptocurrency பரிவர்த்தனை முகவர்கள்
  • போலி இணையதள வடிவமைப்பாளர்கள்

ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர்.

ஏன் வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் இலங்கையைத் தேர்வு செய்கின்றனர்?

1. எளிதான விசா மற்றும் நுழைவு வசதி

பலர் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்து, பின்னர் சட்டவிரோதமாக தங்கி சைபர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றவியல் வலையமைப்புகள் பொதுவாக எளிதில் நுழையக்கூடிய நாடுகள், குறைந்த கண்காணிப்பு உள்ள பகுதிகள், தற்காலிக தங்குமிட வசதி அதிகமான நகரங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்கின்றன.

2. நல்ல இணைய மற்றும் தொலைத்தொடர்பு வசதி

இலங்கையில்:

  • வேகமான இணைய இணைப்பு
  • மலிவான தரவு சேவைகள்
  • பரவலான ஸ்மார்ட்போன் பயன்பாடு
  • சர்வதேச தகவல் தொடர்பு வசதி

உள்ளதால், உலகின் எந்த நாட்டினரையும் இலக்கு வைத்து மோசடிகளை நடத்துவது எளிதாகிறது.

3. புவியியல் மற்றும் சர்வதேச அணுகல்

தெற்காசியாவின் மையப்பகுதியில் உள்ள இலங்கை, சர்வதேச விமான சேவைகள் மற்றும் தொடர்பு வசதிகளால் குற்றவாளிகளுக்கு தங்கள் செயல்பாட்டு மையங்களை மாற்றிக்கொள்ள ஏற்ற இடமாக உள்ளது. ஒரு நாட்டில் சட்ட அமலாக்கம் கடுமையடையும் போது, குற்றவாளிகள் தங்கள் செயற்பாடுகளை மற்ற நாடுகளுக்கு மாற்றுகின்றனர்.

4. வாடகை வீடுகள் மற்றும் ஹோட்டல்கள்

பல குற்றவியல் குழுக்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகை வீடுகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களை “Cyber Scam Centres” போல பயன்படுத்துகின்றனர். வெளியே பார்த்தால் சாதாரண குடியிருப்புகள் போல தோன்றினாலும், உள்ளே:

  • நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள்
  • கணினிகள்
  • SIM கார்டுகள்
  • இணைய Router-கள்
  • Cryptocurrency சாதனங்கள்

இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் எவ்வாறு சைபர் குற்றங்களை செய்தனர்?

1.போலி முதலீட்டு மோசடிகள்

    மக்களை தொடர்புகொள்வதற்கு WhatsApp, Telegram, Facebook, Instagram, Dating Apps, போலி முதலீட்டு இணையதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    “குறைந்த முதலீட்டில் அதிக லாபம்”, “வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்”, “Crypto Trading மூலம் விரைவில் பணக்காரர் ஆகலாம்” போன்ற வாக்குறுதிகள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

    2. Call Centre முறை மோசடிகள்

    பல சைபர் குற்ற மையங்கள் தொழில்முறை Call Centre போல செயல்படுகின்றன.

    அவற்றில் தொலைபேசி மோசடி குழுக்கள், போலி வங்கி அதிகாரிகள், தொழில்நுட்ப ஆதரவு மோசடிக்குழுக்கள், Cryptocurrency மோசடி நிபுணர்கள் இருக்கின்றனர்.

    3. சமூக உளவியல் (Social Engineering)

    குற்றவாளிகள் மனிதர்களின்:

    • பேராசை
    • பயம்
    • காதல் உணர்வு
    • தனிமை
    • விரைவான வருமான ஆசை

    போன்ற உளவியல் பலவீனங்களை பயன்படுத்துகின்றனர்.

    சிலர்:

    • “உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்”
    • “உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது”
    • “உங்கள் குடும்ப உறுப்பினர் ஆபத்தில் உள்ளார்”

    போன்ற பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பயமுறுத்துகின்றனர்.

    நிச்சயமாக, நீங்கள் குறிப்பிட்ட விழிப்புணர்வு செய்திகளை மேலும் விரிவாகவும், விளக்கமாகவும் கீழே காணலாம்:

    பொதுமக்களுக்கான சைபர் பாதுகாப்பு ஆலோசனைகள்

    1. ரகசியத் தகவல்களைப் பாதுகாத்தல்: உங்கள் வங்கியின் OTP, Password, அல்லது ATM PIN ஆகியவற்றை வங்கி அதிகாரிகளே கேட்டாலும் பகிராதீர்கள். எந்தவொரு உண்மையான வங்கியும் இத்தகைய தகவல்களைத் தொலைபேசியில் கேட்காது.
    2. ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள்: “குறைந்த முதலீட்டில் அதிக லாபம்”, “வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இவை பெரும்பாலும் உங்களை வலைக்குள் வீழ்த்தும் தந்திரங்களே.
    3. சமூக வலைதளக் குழுக்களில் எச்சரிக்கை: WhatsApp அல்லது Telegram-ல் முன்பின் தெரியாத நபர்களால் தொடங்கப்படும் முதலீட்டு ஆலோசனைக் குழுக்களில் இணையாதீர்கள். அங்கு காட்டப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ (Screenshots) போலியானவையாக இருக்க வாய்ப்புள்ளது.
    4. கிரிப்டோகரன்சி (Cryptocurrency) அபாயங்கள்: கிரிப்டோ முதலீடுகள் அதிக ரிஸ்க் கொண்டவை. முறையான அங்கீகாரம் இல்லாத செயலிகள் மூலம் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். சந்தை நிலவரம் தெரியாமல் இதில் பணத்தைச் செலுத்த வேண்டாம்.
    5. தெரியாத லிங்க்குகளைத் தவிர்க்கவும்: அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் SMS அல்லது மின்னஞ்சல் இணைப்புகளை (Links) கிளிக் செய்யாதீர்கள். அவை உங்கள் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடவோ அல்லது போனை ஹேக் செய்யவோ பயன்படுத்தப்படலாம்.
    6. உடனடி புகார் அளித்தல்: உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது யாராவது உங்களை மிரட்டினாலோ, தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணுக்கோ அல்லது http://www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கவும்.
    7. அதிகாரப்பூர்வ செயலிகள் மட்டுமே: வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் (Official App) அல்லது இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தவும். கூகுள் தேடலில் கிடைக்கும் போலி எண்களைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.  

    முக்கிய எச்சரிக்கைகள்

    • அந்நிய நடமாட்டம்: உங்கள் பகுதியில் திடீரென அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் தங்கியிருந்து, மடிக்கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தினால் அது குறித்து விழிப்புடன் இருங்கள்.
    • வீட்டு வாடகை: வீடுகள் அல்லது ஹோட்டல்களை வாடகைக்கு விடும்போது அவர்களின் விசா காலம் மற்றும் வருகைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    • மோசடி அழைப்புகள்: சர்வதேச எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய லிங்க்குகள் (Links) அல்லது கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பான அழைப்புகளைத் தவிர்க்கவும்.
    • உடனடித் தகவல்: சந்தேகத்திற்கிடமான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது 119 என்ற அவசர இலக்கத்திற்கோ தகவல் வழங்குங்கள்.
    • இணையக் குற்றங்களுக்கு எதிரான இந்த விழிப்புணர்வுச் செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

    இலங்கையில் வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது, உலகளாவிய சைபர் குற்ற வலையமைப்புகளின் விரிவடைந்த தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. இன்றைய உலகில் சைபர் குற்றம் என்பது வெறும் இணைய மோசடி மட்டுமல்ல; அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    சட்ட அமலாக்க அமைப்புகள், டிஜிட்டல் தடயவியல் நிபுணர்கள், வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பினால்தான் இந்த வளர்ந்து வரும் இணைய குற்ற அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும்.