மின்னல் எச்சரிக்கை!!

டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
5. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
6. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
7. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது) .
8. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
9. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
10. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
11. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
12. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
13. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. 

அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு  முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா?

 உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (  ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

மேலும் தற்காலத்தில் ChatGPT  இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது

சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியாமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி  அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும்.  

 மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்     

“பாலியல் கல்வி” மாணவர்களுக்கு அவசியமா?

எதிர் வரும் வருடத்தில் இருந்து  இலங்கையின் கல்வித்திட்டத்தில் பாலியல் கல்வித்திட்டம் என்ற பாடத்தினை சேர்ப்பது சம்பந்தமான விடயம் பேசப்பட்டு வருகின்ற நிலையில் பலர் அவ்விடயத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பதிவானது மாணவர்களுக்கு அதுவும் குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு ஏன் “பாலியல் கல்வி” என்பதினை போதிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்ன என்பது பற்றி விலாவாரியா விளக்குகின்றது.

1. மாணவர்களுக்கான பாலியல் கல்வி என்றால் என்ன?

விரிவான பாலியல் கல்வி (Comprehensive Sexuality Education – CSE) என்பது மாணவர்களுக்கு  பாலியல் மற்றும் அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய துல்லியமான, வயதுக்கு ஏற்ற தகவல்களை வழங்குகிறது (“age‑appropriate sexual education”), இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்விற்கு மிகவும் முக்கியமானது. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி என்பது விரிவான பாலியல் கல்வியின் ஓர் முக்கிய அம்சம் ஆகும்.

2. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி (age‑appropriate sexual education) என்றால் என்ன?

மாணவர்களின் வயது, அவர்களின் உள விருத்தி என்பவற்றினை கருத்தில் கொண்டு அவர்களின் வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை வழங்குதலே வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி என்பதன் முக்கிய குணாம்சம் ஆகும். இலங்கையிலும் இவ்வாறான வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினையே பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. பலரும் நினைப்பது பாலியல் கல்வி என்றால் காமசூத்ரா என்று  உண்மையில் அவ்வாறல்ல.  

3. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் என்ன என்ன விடயங்கள் அடங்கியிருக்கும்?

பாடத்திட்டமானது  வெவ்வேறு வயதினருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.  அதாவது அவை குழந்தைப் பருவம், சிறுவர் பருவம்  மற்றும் இளமைப் பருவம் ஆகியோருக்குரிய  பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பல்வேறு தகவல்களை கொண்டிருக்கும். முக்கியமாக  குடும்பங்கள் மற்றும் உறவுகள், மரியாதை, சம்மதம் (consent) மற்றும் உடல் சுயாட்சி ( உடற்கூறியல், பருவமடைதல் மற்றும் மாதவிடாய், கருத்தடை மற்றும் கர்ப்பம், HIV உட்பட பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களின் வகைகள், பாலியல் துஸ்பிரயோகங்களை எவ்வாறு தவிர்ப்பது போன்ற விடயங்கள் வயதிற்கு ஏற்ற வகையில் உள்ளடங்கியிருக்கும்.

4. ஏன் பாடசாலை மாணவர்களுக்கு இத்தகைய கல்வியை கற்பிக்க தொடங்க வேண்டும்?

வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி ஆனது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மரியாதைக்குரிய சமூக மற்றும் பாலியல் உறவுகளை வளர்க்கவும், பொறுப்பான தேர்வுகளை எடுக்கவும், மற்றவர்களின் உரிமைகளைப் புரிந்துகொண்டு பாதுகாக்கவும் மாணவர்களுக்கு உதவுகின்றது.

மேலும் விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் இவ்வாறு இளமைக்காலத்தில் வழங்கப்படும் பாலியல் கல்வியானது மாணவர்களின் வாழ்நாள் பூராகவும் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்லது. குறிப்பாக பாலியல் கல்வி காரணமாக அவர்கள் தமது பாலியல் செயற்பாடுகளை காலம் தாமதித்தே தொடங்குகின்றனர் அதனால் அவர்கள் கல்வி மற்றும் ஏனைய கல்விசாரா செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் அவர்கள் பாதுகாப்பான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.

வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி மூலம் பருவமடைதல் மற்றும் இளமைப் பருவம் உட்பட, அவர்கள் வளரும்போது ஏற்படும் உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்களுக்குத் தயாராகி தம்மை தாமே நிர்வகிக்கின்றனர். எனவே தான் பாலியல் கல்வி பாடலை மாணவ பராயத்தில் இருந்தே தொடங்கப்படுகின்றது. திருமணத்திற்கு முன்பாக அல்ல. திருமணத்திற்கு முன்பாக உளவள ஆற்றுப்படுத்துகையே வழங்கப்படுவது வழமை.

5. எந்த வயதில் பாலியல் கல்வியினை கற்பிக்க தொடங்கலாம்?

UNESCO, UNFPA, UNICEF, UN Women, UNAIDS, UN, WHO போன்ற பல்வேறு நிறுவனங்கள் வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை மாணவர்களின் 05 வயதில் இருந்து கற்பிக்க சிபாரிசு செய்கின்றன. விரிவான பாலியல் கல்வி என்பது வாழ் நாள் பூராகவும் கற்பிக்க பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

6. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை யாரால் கற்பிக்க முடியும்?

பாடசாலைகளில் தகுந்த ஆசிரியர்களினால் அல்லது வீடுகளில் மாணவர்களின் பெற்றோர்கள்

7. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை வழங்காதவிடத்து என்ன தீமையான விளைவுகள் இடம் பெறலாம்?

இன்றைய காலத்தில் மாணவர்கள் சமூக வலைத்தளங்கள், ஏனைய வலைத்தளங்கள் போன்றவற்றினை இலகுவாக அணுகுகின்றனர். இவற்றில் வழங்கப்படும் பிழையான பாலியல் தகவல்கள் மாணவர்களை சென்றடையும் அத்துடன் அவர்கள் அத்தகைய பிழையான தகவல்களை பின்பற்றி தங்களின் வாழ்க்கையினை பிழையான முறையில் கொண்டு செல்வார்கள் இதன் காரணமாக பாலியல் நோய்கள், குடும்ப பிளவுகள், மதுபானம் மற்றும் போதைக்கு அடிமையாதல் போன்றன நிகழும்

8. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை பாடசாலை மாணவர்களுக்கு போதிப்பதினால் அவர்கள் பாடசாலை கல்வியினை விட்டு விலகி பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவார்களா?

விஞ்ஞான ரீதியாக அவ்வாறான சான்றுகள் ஏதுமில்லை. மாறாக இவ்வாறான கல்வி வழங்கப்படாத இடத்து அல்லது பற்றாக்குறையாக உள்ள இடத்து இளவயது கர்ப்பம் தரித்தல், HIV உட்பட்ட பாலியல் நோய்களுக்கு உள்ளாதல், இளவயதில் ஆபத்தான பாலியல் நடத்தைகள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளதால் போன்றவற்றிற்க்கு உள்ளாகின்றனர்.

9. இவ்வாறான கற்கை பாலியல் துஸ்பிரயோக நிகழ்வுகளை குறைக்குமா?

நிச்சயமாக பாலியல் துஸ்பிரயோகங்களை குறைக்கும் அத்துடன் பால்நிலைக்கு எதிரான வன்முறைகளையும் குறைக்கும். மேற்குறித்த விடயங்கள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

10. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மாணவர்களினை காலம் தாழ்த்தி அதாவது பதின்ம வயதுகளின் (21 வயதின் பின்னர்) பின்னர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுரை கூறுவது ஆகும். ஏன்?

மிக இள வயதுகளில் அதாவது பதின்ம வயதுகளில் பாலியல் நடவடிக்கை மற்றும் திருமணங்களில் ஈடுபடுபவர்களிடம் போதிய மன முதிர்ச்சி அற்று இருக்கும் இதன் காரணமாக அவர்களின் திருமண வாழ்வு சிலவருடங்களில் முறிந்து விடுகின்றது அத்துடன் தேவையற்ற கர்ப்பம், ஆபத்தான பாலியல் நடத்தைகள்,  கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெண் தலைமைத்துவ குடும்பம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு  முகம் குடுக்க வேண்டி வருகின்றது. பலர் கேட்கலாம் முந்திய காலங்களில் இளவயது திருமணம் நடைபெற்றது தானே என்று முந்திய காலத்தில் இறுக்கமான சமூக கட்டமைப்பு, கூட்டு குடும்ப அமைப்பு போன்றன நிலவியமையால் பல பிரச்சனைகள் எழவில்லை.

11. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியின் சில உதாரணங்கள் தருக?

வயது 3–5

உடல் பாகங்களின் பெயர்கள் சரியாக சொல்லுங்கள் (மலவாசல் , வாய், மார்பு…. போன்றவை).​சில உடல் பகுதிகள் தனிப்பட்டவை என்று கூறுங்கள். தான் விரும்பாத எந்தத் தொடுதலையும் மற்றவர்களால் நடக்கக் அனுமதிக்க கூடாது.​குடும்பம், நட்பு, உணர்வுகள் பற்றி பேசுங்கள். ஆண் மற்றும் பெண் வேறுபடலாம் ஆனால் அனைவரும் மதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் .​

வயது 5–8

உடல் பாகங்களின் பெயர்கள் மீண்டும் சொல்லுங்கள்; ஆண் மற்றும் பெண் உடல்கள் எப்படி வேறுபடுகின்றன என்று வண்ணமாக விளக்குங்கள்.​ தனிப்பட்ட நடத்தைகள் மற்றும் பொது நடத்தைகள் பற்றி கூறுங்கள்; உதாரணமாக தனிப்பட்ட உடல் தொடுதல் தனிப்பட்ட இடங்களில் செய்ய வேண்டும்.​ நட்பு, அன்பு, கூச்சல் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த அடிப்படைகளை சொல்லுங்கள் ​

வயது 8–11

பதின்ம வயது  மாற்றங்கள் (மார்பு வளர்ச்சி, மாதவிடாய், பெண் மற்றும் ஆண் மாற்றங்கள்) மற்றும் சுய பராமரிப்பு.​ கர்ப்பம் எப்படி நிகழ்கிறது என்பதை எளிதில் சொல்லுங்கள்; பெரும்பாலும் கூடுதல் விபரங்கள் தேவையில்லை.​உடலை தொடுவதற்கு தேவையான அனுமதி குறித்த விளக்கம்,  ‘இல்லை’ என்று சொல்லும் உரிமை, பாதுகாப்பற்ற ரகசியங்களை பகிராதீர்கள்.​

வயது 12–15

பாலியல் தொடர்புகள், கர்ப்பத் தடுத்தல் மற்றும் தொற்று நோய்கள் குறித்து தெளிவாக கூறுங்கள்.​ காதல், பரிமாற்றங்கள், கிளாமர்ஸ், லிங்க அடையாளங்கள் பற்றி பேசுங்கள்.​ ஆன்லைன் ஆபத்துக்கள் (சேட்சிங், படங்கள் பகிர்தல்) குறித்து அறிவுறுத்துங்கள்.​

வயது 15–18

கர்ப்பத் தடுத்தல் முறைகள் மற்றும் சட்ட அறிவுறுத்தல்களை விரிவாக கூறுங்கள்.​ உறவுகளிலும் பாதுகாப்பிலும் பேசுவதற்கான திறன்களை வளர்க்கவும்.​ மதிப்பும் பொறுப்பும், வாழ்வுத் திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி விளக்குங்கள்.​

நன்றி

மண்சரிவுகளும் மரணங்களும்

இலங்கையின் பல பகுதிகளில் பெய்த கடுமையான மழையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெறுகின்றன குறிப்பாக மலையக பகுதிகளில் இவ்வாறு இடம் பெறுகின்றன. மலைப்பகுதிகளில் இவ்வாறன மண்சரிவுகள் இடம் பெறுவதற்கு பல்வேறு மனித மற்றும் இயற்கை காரணங்கள்  எதுவாக அமைகின்றன. இவ்வாறான மண் சரிவுகளின் பொழுது சிக்கும் மனிதர்களுக்கு எவ்வாறு மரணம் சம்பவிக்கின்றது என்பது குறித்து இப்பதிவு விளக்குகின்றது

1. மண் சரிவின் பொழுது கட்டிட இடிபாடுகள், மரங்கள் போன்றன மனிதரின் மேல் நேரடியாக வீழ்வதினால் காயங்கள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

2. மண் சரிவின் பொழுது கணிசமான மனிதர்கள் உயிருடன் கட்டிட இடிபாடுகளினுள் மாட்டி விடுவார்கள். இதன் காரணமாகவே இறுதிமட்டும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும். இவ்வாறு சிக்கியவர்களின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளின் மீது இடிபாடுகளினால் கடுமையான அழுத்த விசை பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் நெஞ்சு மற்றும் வயிற்கு பகுதிகளின் சுவாச அசைவு தடைப்படும் இந்த நிலைமை சட்ட மருத்துவத்தில் traumatic asphyxia என்றழைக்கப்படும். இதன் காரணமாக அவர்கள் மரணத்தினை தழுவுவார்கள்.

Traumatic asphyxia இல் தப்பிப் பிழைத்த ஒருவரின் தோற்றம்

3. மேலும் மண் சரிவின் பொழுது நீர், சேறு என்பன அவர்களின் சுவாச தொகுதியினுள் செல்வதினாலும் இறப்பு ஏற்படுகின்றது.

4. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மாரடைப்பு போன்ற இயற்கையான நோய்நிலைமைகள், மின்சார தாக்குதல் போன்றவற்றினாலும் மரணத்தினை தழுவுகின்றனர்.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நிகழும் பொழுது அதிகளவிலான மக்கள் இறப்பார்கள் இந்நிலையில் இறந்த உடலங்களுக்கு முற்று முழுதான உடற் கூராய்வு பரிசோதனை செய்வது வழக்கம் இல்லை. எனினும் தற்போதுள்ள சட்ட நடைமுறைகளின் பிரகாரம் வெளிப்புற பரிசோதனைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மரணத்திற்கான காரணம் கொடுக்கப்பட்டு உடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றது. ஆனால் செயற்கையாக மனிதனினால் உண்டாக்கப்பட்ட அனர்த்தங்கள் ஆன குண்டு வெடிப்பு போன்றவற்றின் பொழுது முற்று முழுதான உடற் கூராய்வு செய்யப்படுவது வழமை. மேற்குறித்தவையே இலங்கையின் சட்ட திட்டங்கள்.

அனர்த்தங்களின் பொழுது உடற்கூராய்வு பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கிய நோக்கம் அனர்த்தங்களின் பொழுது சிக்கி சிதலமாகிய உடலங்களை சரிவர அடையாளம் காண்பதற்கே ஆகும். இவ்வாறு அடையாளம் காண்பதன் மூலமே ஒருவரின் உடலத்தினை சரியான உறவினர்களிடம் கையளிக்க முடியும். அதன் பின்னர் பின்னுருத்தாளிகள் இறந்தவரின் மரண சான்றிதழை பெறுவதன் மூலம் இறந்தவரின் ஓய்வூதியம், காப்புறுதி, சொத்து என்பவற்றை சட்ட ரீதியாக பெற தகுதி பெறுவார்கள்.

நன்றி

வெள்ளப்பெருக்கின்  பின்னரான தொற்றுநோய்களில் இருந்து எம்மை பாதுகாப்போம்

இலங்கையில் புயலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளப் பெருக்கு என்பன சற்று தணிந்துள்ள நிலையில். வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருகின்றது. இந்நிலையில் எதிர் வரும் நாட்களில் மக்கள் தமது வாழ்விடங்களை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு சூழ்நிலையில் வெள்ளப்பெருக்குக்கு நிலவுகின்ற அல்லது அதற்கு பிந்திய சூழ் நிலையில் தொற்று நோய்கள் பரவுகின்ற அபாயம் மிக அதிகமாக இருக்கின்றது. வெள்ள பெருக்கு காரணமாக மலசல குழிகள் நிரம்பி வழிந்து ஓடும் நீருடன் கலந்து இருக்கலாம் மேலும் இவ்வாறான வெள்ள நீர் அன்றாடம் நாம் பயன்படுத்தும் நீர் நிலைகளில் கலந்து அந்த நீர் மாசடைந்திருக்கும் எனவே பின்வரும் முறைகளை கையாள்வதன் மூலம் நாம் இயன்றளவுக்கு எம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம்.

1.  வெள்ள நீர் கலக்காத கிணறுகளில் இருந்து பெறப்பட்ட நீரினை தாங்கிகளில் சேகரித்து குளோரின் பரிகரிப்பு செய்து பாவிக்கலாம். அல்லது நீர் வழங்கல் சபையின் ஊடாக வழங்கப்படும் நீரினை பாவிக்கலாம்

2. குடிப்பதற்கு குளோரின் மூலம் பரிகரிக்கப்பட்ட கொதித்து ஆறிய  நீரினை பாவிப்பதே சிறந்தது. அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரினை பாவிக்கலாம்.

3. இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கி இருப்பவர்கள் இவ்வாறு வெவ்வேறு தேவைகளுக்கு என வேறுவேறாக நீரினை பாவிப்பது நன்று.

4. நீரினை குளோரின் மூலம் பரிகரித்தல், தரம் பரிசோதித்தல், மீள் பார்வை செய்தல் போன்றவற்றிக்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று கொள்ளவும்.

5. நில நீர் மட்டம் நன்றாக குறைந்து கிணற்றின் அரைவாசியினை விட குறைவாக இருக்கும் பொழுதே கிணற்றினை இறைத்து துப்பரவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். நீர் நிரம்பிய நிலையில், மண்ணில் நீரின் அளவு கூடுதலாக உள்ள நிலையில் கிணற்றினை இறைத்தால் கிணறு இடிந்து வீழ்ந்து உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும்.

6. இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்கள் தமது சமையலின் பொழுது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரின் ஆலோசனை மற்றும் உதவிகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வழங்கப்படும் சமைத்த உணவுகளை இயன்றவரை தவிர்த்து உலர் உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

7. கரட், கீரை போன்ற மரக்கறிகளை பச்சையாக அதாவது சமைக்காது உண்பது தவர்க்கப்படல் வேண்டும்.

8. வெள்ளம் காரணமாக மலக்குழிகள் நிறைத்து இருக்கும் இந்நிலையில் மேடான பகுதிகளில் தற்காலிக மலசலகூடங்களை அமைத்து பாவிக்க வேண்டும். குழந்தைகளின் மலைக்கழிவுகள், பம்பஸ் போன்றவற்றினை கட்டாயம் சிறுகுழிகள் வெட்டி புதைக்க வேண்டும்.

9. நிரம்பிய மலக்குழிகளை இறைத்து வெளியேற்றுவதோ அல்லது மலக்குழிகளின் மேல் ஏறி நிற்பதோ ஆபத்தினை விளைவிக்கும். மண்ணில் நீர்பற்று கூடிய நிலையில் மலக்குழி எந்நேரமும் இடிந்து விழலாம். ஒருசில நாட்களில் நீர் மட்டம் குறையும் பொழுது மலக்குழியிலும் நீர் மட்டம் குறைந்து நாம் வழமை போன்று பாவிக்கலாம்.  

10. வீடுகளுக்கு திருப்பும் பொழுது வீடுகளில் சேற்று நீர் நிரம்பி வீடு அழுக்கடைந்து இருக்கும் இந்நிலையில் வீட்டினை நன்றாக கழுவிய  பின்னர் தரை, சுவர்கள்  மற்றும் தளபாடங்களை குளோரின் நீர் அல்லது பினாயில் நீர் கொண்டு துடைத்தல் வேண்டும்.

11. வீட்டின் அயற்பிரதேசங்களில் இறந்து கிடக்கும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளின் உடலங்களை குழி தோண்டி புதைக்க வேண்டும். 

12. டெங்கு நுளம்பு பரவாமல் இருக்க வீட்டின் அயற்பிரதேசங்களில் வெள்ளத்தினால் கொண்டுவரப்பட்டு தேங்கி இருக்கும் கோம்பைகள், பிளாஸ்ட்டிக் பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரினை வெளியில் ஊற்றி அவற்றினை தலை கீழாக கவிட்டு வைக்க வேண்டும்.    

13. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு காச்சல் ஏற்பட்டால் அது சாதாரண சளிக் காச்சல் என்று சுய வைத்தியம் செய்யக்கூடாது. ஏனெனில் அது ஆபத்தான எலிக்காச்சல் அல்லது டெங்கு காச்சல் ஆக இருக்கலாம். வைத்திய ஆலோசனைகளை நிச்சயம் பெற வேண்டும்.

14. சிறுவர்களுக்கு வயிற்றோட்டம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு ஜீவனி போன்றவற்றினை உடனடியாக கொடுக்க வேண்டும் அத்துடன் வைத்திய ஆலோசனைகளை நிச்சயம் பெற வேண்டும்.

15. சமையலிற்கு முன்னரும், உணவு உண்ண முன்னரும் கைகளை நன்றாக சவர்க்காரம்  கொண்டு நீரில் கழுவுதல் கட்டாயம் அல்லது தொற்றுநீக்கி (Hand sanitizer) பாவித்து கழுவுதல் கட்டாயம்.

16. இடைத்தங்கல் முகாம்களில் சமையலின் பொழுது இறுக்கமான சுகாதாரத்தினை பேனல் வேண்டும். பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளலாம்.

17. நோய் தோற்ற கூடிய ஆபத்தான பிரதேசங்களில் வசிப்பவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் எலிக்காச்சல் போன்ற நோய்கள் தமக்கு உண்டாகாத வண்ணம் பாதுகாப்பு மருந்துகளை (chemoprophylaxis) உட்கொள்ளலாம்

இவ்வாறான சூழ்நிலையில் சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெறுதல் நன்று. இறுக்கமான தனிநபர் மற்றும் சமூக சுகாதார நெறிமுறைகளை கையாளுவதன் மூலம் நாம் உயிரிழப்புக்களை மற்றும் வைத்திய சாலை அனுமதி, சிகிச்சை போன்றவற்றினை குறைத்து கொள்ளலாம்

நன்றி   

இலங்கையில் “உள்நாட்டு சுனாமி” ??

இலங்கையில் புயலோடு கூடி பெய்யும் வரலாறு காணாத அதிக மழை வீழ்ச்சி காரணமாக அதிகளவான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது மேலும் பாலங்கள், குளங்கள் என்பன உடைப்பெடுத்திருக்கின்றன. மண் சரிவுகளில், வெள்ள பெருக்கில்  சிக்கி பலர் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு அதிக சேதங்கள் வருவதற்காக காரணங்கள் என்ன? ஏன் இவ்வாறு வெள்ளம் கரை புரண்டு ஓடியது? அதற்கான காரணங்கள் என்ன?

கரைபுரண்டு ஓடிய வெள்ளம் காரணமாக உடைந்த மொறகாகந்த பாலம்

1. குறுகிய காலத்தினுள் அதிக மழை வீழ்ச்சி

சாதாரணமாக ஒரு வருடத்தினுள் வருடம் பூராகவும் பெய்ய வேண்டிய மழையின் அளவானது ஒருசில நாட்களில் அதுவும் குறித்த மணித்தியாலங்களினுள் புயல் காரணமாக பெய்திருக்கின்றது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகள் தமது கொள்ளளவினை தாண்டிய நிலையில் நீரினை வெளியேற்றுகின்றன.

2. பருவ மழைவீழ்ச்சி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில்  ஏற்கனவே ஆங்காங்கு பெய்த மலையின் காரணமாக மண் போதிய அளவு நீரினை உறிஞ்சி அதன் கொள்ளவினை அடைந்திருந்தது. மேலும் நில நீரின் மட்டமும் கணிசமான அளவு உயர்த்திருந்தது இதன் காரணமாக மண் அதிகளவு நீரினை உறிஞ்ச முடியாத நிலை உருவாக்கியது.

3. இயற்கையான நீரோட்டங்கள் மனித நடவடிக்கைகளினால் தடைப்பட்டமை. உதாரணமாக கட்டிடங்கள், மதில்கள் போன்றன நீரோட்ட பாதைகளில் அமைக்கப்பட்டமை, நீரோட்ட பாதைகளினை பாரமரிக்க தவறியமை காரணமாக சிறுமரங்கள், செடிகள், கொடிகள் போன்றன வளர்ந்து அதில் பிளாஸ்ட்டிக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் சிக்கி நீரோட்டத்தினை தடைசெய்தமை.

4. வேகமான நகர மயமாக்கம் காரணமாக இயற்கையான நீரினை உறிஞ்சும் மண் சீமெந்தினாலும், தார் இனாலும் நிரப்பப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது இதன் காரணமாக நீர் தேங்கி நிற்கும் அல்லது வழிந்து ஓடவே செய்யும்.

5. அதிகரித்த நீர் வரத்து காரணமாக குளம், வாவி போன்றவற்றின் வாசல்கள் திறக்கப்பட்டு அதிகளவு நீர் ஒரேடியாக வெளியேற்றப்பட்டமை.

6. இலங்கையின் கரையோர பிரதேசங்கள் அதாவது சமவெளிகள் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இல்லை எனவே சாதாரணமாக நீர் இப்பிரதேசத்தில் அதிவேகமாக பாயாது 

7. அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற கட்டுமானங்களினால் இயற்கையான நீரோட்டம் தடைப்பட்டமை.

8. கட்டுக்கடங்கா நீர்வரத்து காரணமாக குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்கள் திடீர் என்று உடைப்பெடுத்தமை.

   இவ்வாறன காரணங்களினால் அதிகளவு நீர் வெளியேறி அலை போன்று பாய்ந்து அதிக சேதங்களை விளைவித்தல் “உள்நாட்டு சுனாமி” (An “inland tsunami” is a term used to describe a powerful, fast-moving flash flood that behaves similarly to a tsunami, carrying debris and causing widespread destruction) (colloquial term) என்று சில வல்லுனர்களினால் அழைக்கப்படும். இவ்வாறு திடீர் வெள்ளப்பெருக்குகளால் ஏற்படும் சேதாரங்களை கட்டுப்படுத்துவது கடினம் அதற்கு நீண்ட கால திட்டமிடல், சட்ட அமுலாக்கம், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு … போன்றன அவசியம். இதனை விட இவற்றினை அமுல்படுத்த நீண்ட கால கொள்கை அவசியம். இலங்கை போன்ற நாடுகளில் இது சாத்தியமா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சில உள்நாட்டு சுனாமி சம்பவங்கள் சில

1. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டூவூம்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை ஊடகங்கள் “உள்நாட்டு சுனாமி” என்று வர்ணித்தன.

2. 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் யூகோவ்ராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை குடியிருப்பாளர்கள் “உள்நாட்டு சுனாமி” என்றும் அழைத்தனர்.

3. ஜான்ஸ்டவுன் வெள்ளம் (1889): பென்சில்வேனியாவில் தெற்கு ஃபோர்க் அணை உடைந்த பிறகு, 12 மீட்டர் (40 அடி) உயரமான நீர் அலை லிட்டில் கோன்மாக் நதி பள்ளத்தாக்கில் பாய்ந்து 2,200 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் மற்றும் “உள்நாட்டு சுனாமி” நிகழ்வின் ஒரு சிறந்த வரலாற்று எடுத்துக்காட்டு.

4. செயின்ட் பிரான்சிஸ் அணை உடைப்பு  (1928): கலிபோர்னியாவில் உள்ள அணையின் உடைப்பு , சான் பிரான்சிஸ்கிட்டோ கேன்யன் மற்றும் சாண்டா கிளாரா நதி பள்ளத்தாக்கு வழியாக கடலுக்குச் சென்ற ஒரு பெரிய அளவிலான நீர் , இது பரவலான பேரழிவை ஏற்படுத்தியது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது.

5. Texas Hill Country Floods (2015 Memorial Day Flood): பிளாங்கோ நதி போன்ற ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளை உயிர் பிழைத்தவர்களும் ஊடகங்களும் “உள்நாட்டு சுனாமிகள்” என்று விவரிக்கின்றனர், ஏனெனில் திடீரென ஏற்படும் சக்திவாய்ந்த அலைகள்  குப்பைகள் மற்றும் கட்டிடங்களை  விரைவாக அழித்து, நீண்ட தூரத்திற்கு கட்டமைப்புகளை எடுத்துச் சென்றன.

“உள்நாட்டு சுனாமி” என்ற கருத்தியலில் பல்வேறு சர்ச்சசைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

ஆபத்தான முடிவு

இலங்கையில் மழை கொட்டி தீர்க்கின்றது. இந்த சூழ்நிலையில் பல வீதிகளின் குறுக்காக வெள்ளம் ஓடுகின்றது சில இடங்களில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் பலர் தமது வாகனங்களில் அவற்றினை கடக்க முயன்று பலரின் வாகனங்கள் வெள்ளத்தோடு அடித்து செல்லப்படுகின்மை பார்க்க கூடியதாக உள்ளது. மேலும் சில இடங்களில் பஸ்கள் இவ்வாறு கடக்க முற்பட்டு நடு வெள்ளத்தில் மாட்டி பின்னர் பிரயாணிகளை மீட்பு பணியாளர்கள் மற்றும் உலங்கு வானுர்தி மூலம் மீட்ட  சம்பவங்கள் நடந்துள்ளன.    இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பாரிய உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலர் முக்கியமாக வாகனங்களின் சாரதிகள் ஓடும் வெள்ள நீரினால் ஏற்படும் விசையினை தவறாக கணிப்பதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஓடுகின்ற நீரில் வாகனங்களை செலுத்துதல் ஏன் ஆபத்தான  விளைவாக மாறுகின்றது.

1. ஓடும் நீரினால் அழுத்த (Hydrostatic force) மற்றும் இயங்கு நிலை விசைகள் (kinetic force) பிரயோகிக்கப்படும். பெரும்பாலான சந்தர்ப்பத்தில் எமது மூளை அழுத்த விசையினால் ஏற்படும் விளைவினை மறந்துவிடும். இவ்விரு விசைகளின் சேர்க்கையினால் அதீத விசை உருவாகும். உதாரணமாக வேகமாக ஓடும் ஒரு அடி நீர் கார் போன்ற சிறிய வாகனங்களை தள்ளிவிடும் அவ்வாறே வேகமாக ஓடும் 2 அடிநீர் பெரிய வாகனங்களாக பஸ் போன்றவற்றினை ஆட்டம் காண வைக்கும்.

2. நீரில் வாகனம் மிதக்க தொடங்கியவுடன் ரயருக்கும் நிலத்துக்கும் இடையிலான தொடர்பு அற்று போகும் இதன் காரணமாக இலகுவாக வாகனம் நீரின் ஓட்ட திசையில் அசையும்.

3. நீரின் ஒட்டத்தினுள் கிடங்குகள், அடித்துவரப்படும் மரங்கள், வீதியோரம் முறிந்த மரங்கள், முறிந்த மின் கம்பங்கள் போன்றன இருக்கும். இவற்றில் உங்கள் வாகனம் சிக்கிவிடும். 

4. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஓடும் நீர் சிறிய ஆழத்தில் ஓடுவது மாதிரி இருக்கும் ஆனால் ஓடும் நீரின் நடுப்பகுதியில் மண்ணரிப்பு காரணமாக மிக ஆழமான பகுதிகள் காணப்படலாம்.

5. ஓடும் நீரின் போக்கு அடிக்கடி மாறுபடும் சில நிமிட இடைவெளிகளில் பெருக்கெடுக்கலாம் அல்லது சுழிகள் உருவாகலாம்.

6. வாகனத்தின் எஞ்சினினுள் நீர் சென்று விட்டால் வாகனம் தீடீர் என்று ஓடும் நீரின் நடுவே நின்று விடும் அத்தகைய சூழ் நிலையில் வாகனத்தின் மின்சாரமும் துண்டிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலையில் கார் போன்ற வாகனங்களின் கதவுகளை திறந்து வெளியேறுவது கடினம். ஒருசில நிமிடங்களில் நீர் முற்றாக வாகனத்தினை நிரம்பிவிடும். மேலும் இவ்வாறு வாகனம் சடுதியாக நிற்கும் பொழுது (water lock) அதனை நாம் கட்டுப்படுத்தல் முடியாது . வாகனம் நீரில் மிதந்து அதன் ஒட்டத்தில் செல்ல ஆரம்பித்து விடும்.

எனவே நாம் இவ்வாறான ஓடும் நீரோட்டங்களை (நிலையான தேங்கிய நீர் அல்ல)  கண்டால்  அதனை வாகனத்தில் கடக்க முயற்சிக்காது வாகனத்தினை வேறு பாதையில் திருப்பி செல்வதே பாதுகாப்பான பயணமாக அமையும்        

முற்றும்

கடியோ கடி!!

மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் மிருகங்களில் இருந்து கூர்ப்படைந்தவர்கள் என்று காலத்திற்கு காலம் நிரூபித்துவிடுவார்கள். அவ்வாறான ஓர் சந்தர்ப்பமே மற்றைய மனிதர்களை வாயினால் கடிப்பதாகும். உதாரணமாக குடும்ப வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை மற்றும் போதைப்பொருள் போன்றன பாவித்த பின்னர் நடைபெறுகின்ற தனி நபர் மீதான தாக்குதல் சம்பவங்கள் போன்றவற்றில் இவ்வாறான கடித்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இவ்வாறு மனிதர் ஒருவரில் கடிகாயங்கள் காணப்படும் பொழுது சட்ட மருத்துவ ரீதியாக என்ன விடயங்களை செய்யலாம் என்பதை இந்த பதிவு விளக்குகின்றது

1. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கடி காயங்களினால் மூக்கு, உதடு போன்றன பகுதியளவில் துண்டிக்கப்படலாம். இவ்வாறு துண்டிக்கப்படல் என்பது ஓர் பாரிய காயம் ஆகும். அதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றினால் உரிய தண்டனைகள் வழங்கப்படலாம்.

2. சந்தேக நபர்களினை கைது செய்தல் – ஒவ்வொரு மனிதனுக்கும் வாயில் அமைந்த பற்களின் நிலை தனித்துவமானதாகும் இதன் காரணமாக அவர்கள் பிற மனிதர்களில் அல்லது பொருட்களில் கடிக்கும் பொழுது உருவாகும் கடி காயங்களும் தனித்துவமானதாக இருக்கும் இதன் காரணமாக  பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் இவ்வாறு கைதுசெய்யப்படலாம். மேலும் கடி காயங்களில் காணப்படும் உமிழ் நீரில் இருக்கும் DNA மற்றும் ஏனைய பொருட்கள் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்  கைதுசெய்யப்படலாம்

3. மேலும் இவ்வாறு ஏற்படும் கடிகாயங்கள் நீதிமன்றில் தாக்குதல் மேற்கொண்டவர் – பாதிக்கப்பட்டவர் இடையிலான பௌதீகரீதியிலான தொடர்பு இருந்ததினை நிரூபிக்க போதுமானதாக இருக்கின்றது மேலும் நடைபெற்ற குற்ற செயலுக்கான ஆதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றது  (corroborating evidence). உதாரணமாக பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் மார்பங்களில் காணப்படும் கடிகாயம்

4. சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு நாட்களில் உண்டாக்கப்பட்ட கடி காயங்கள் காணப்படும். கடி காயங்களின் பின்னர் அதில் ஏற்படும் நிறமாற்றத்தினை அவதானித்து கடி காயம் எந்த காலப்பகுதியில் ஏற்பட்டது என கூறமுடியும் 

மேலும் இவ்வாறான கடி காயங்கள் ஏற்படும் பொழுது கட்டாயம் மருத்துவ சிகிச்சையினை பெறவேண்டும். வைத்தியர்கள் கடிகாயத்திற்கு

1. காயம் மாறுவதற்காக ஆண்டிபையோட்டிக் மருந்து தருவார்கள் மேலும் கடுமையான வேதனை இருக்கும் பொழுது வலி நிவாரணிகள் தருவார்கள்

2. ஏற்புவலி ஏற்படாமல் இருக்க டொக்சாய்ட் (Tetanus toxoid) ஊசி போடுவார்கள்.

3. மேலும் நீர் வெறுப்பு நோய் ஏற்படாமல் இருக்க (ARV – Anti rabies Vaccine)ஊசி  போடுவார்கள்

நன்றி      

பலரினை பலியெடுத்த பஸ் விபத்து – நடந்து என்ன?

மூன்று தினங்களுக்கு முன்னர் (17/11/2025) அன்று ஓர் துயர சம்பவம், சவூதி அரேபியாவின் மக்காவில் இருந்து மதீனா செல்கின்ற இந்திய யாத்திரிகர்களை ஏற்றிய பேருந்து ஒரு டீசல் எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதியது. இந்த விபத்தின் காரணமாக பேருந்தில் இருந்த 45 பயணிகள் பரிதாபரமாக இறக்கின்றனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கின்றார். எவ்வாறு தீ பரவியது, ஏன் பயணிகள் தப்பி ஓட முடியவில்லை , ஏன் அவ்வாறு நடந்தது, “Kiln Effect” என்றால் என்ன? என்பதை அறிவியல் ரீதியாகப் இப்பதிவு விளக்குகின்றது.

1. வாகன மோதலின் பொழுது எவ்வாறு எரிபொருள் சிந்தியது (Atomization vs. Spillage)?

வழமையாக விபத்து நடந்த சாலைகளில் பேருந்துகள் 100 – 120km வேகத்திலேயே செல்வது வழமை . இவ்வாறே குறித்த பேருந்தும் 100km/h இற்கு மேற்பட்ட அதிவேகத்திலேயே பிரயாணித்தது. வழமையாக டேங்கரில் முற்றாக நிரம்பிய நிலையிலேயே எரிபொருள் கொண்டுசெல்லப்படும். பகுதியளவில் கொண்டுசெல்வது டேங்கருக்கு சேதத்தினை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது  இவ்வாறு இரு வாகனங்களும் மிக மிக அதி வேகத்தில் மோதும் பொழுது டேங்கரில் இருந்த டீசலில் மிக அதிக அழுத்தம் உருவாகும் இதன் காரணமாக டீசல்  ஆனது டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரங்கள் மற்றும் சிறு வெடிப்புக்கள் வழியாக பீச்சி அடிக்கப்படும். இச் செயற்பாட்டின் பொழுது டீசல் ஆவியாகும் அதாவது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் (atomization) மேலும் அந்த சூழலில் நிலவிய அதீத வெப்பம் இவ்வாறான ஆவியாதலினை மேலும் அதிகமாக துரிதப்படுத்தும்

மேலும் சில மில்லி செக்கன்களில் டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரம் மற்றும் சிறு வெடிப்பு என்பன  பெரிதாக டேங்கரில் இருந்த டீசல் ஓர் வாளியில் இருந்த நீர் ஊற்றுவது போல் அருவியாக வெளியேறி டேங்கரினை சுற்றியுள்ள நிலத்தில் வீழ்ந்து தேங்கும்.  இவ்வாறு உருவாக்கிய டீசல் ஆவி இருவாகனங்களையும் கணப்பொழுதில் சூழ்ந்து கொள்ளும்.

2. எவ்வாறு தீப்பொறி ஏற்பட்டது?

பின்வரும் காரணங்களினால் தீப்பொறி உண்டாகியிருக்கலாம்

  1. அதி வேகத்தில் இரு வாகனங்களும் மோதியமையால் இரண்டினதும் உலோக பகுதிகள் உரசுவதினால்
  2. வாகன மின் சுற்றில் இருந்து
  3. சூடான வாகனத்தின் இயந்திர பகுதியில் இருந்து

இவ்வாறான நிலையில் சூழ இருந்த டீசல் ஆவி மிக இலகுவாக தீப்பற்றும் தன்மையுடையது. உண்மையில் திரவ டீசல் ஆனது இலகுவில் தீப்பற்றாது ஆனால் இவ்வாறான டீசல் ஆவி மிக இலகுவில் தீப்பற்றும் தன்மை உடையது. மேலும் டீசல் ஆவி வளியுடன் குறித்த விகிதத்தில் கலந்து இருக்கும் பொழுது வெடித்தலுடன் தீப்பற்றும். டீசல் வாகனங்களில் இன்ஜெக்டர் இந்த வேலையினை செய்கின்றது. ஆனால் இங்கு மிக மிக பெரிய அளவில் இச்செயற்பாடு நடந்துள்ளது

3. எவ்வாறு தீ பரவியது?

உண்டாகிய பொறியில் இருந்து தீ உடனடியாகவே வாகனத்தினை சூழ இருந்த டீசல் ஆவிக்கு பரவி ஒரு சில வினாடிகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் (Flash fire ) இரு வாகனத்தினையும் தீ சூழ்ந்திருக்கும். இதன் பிற்பாடே டேங்கரில் இருந்து கீழே சிந்திய டீசலுக்கு பரவியிருக்கும் (pool fire )சம நேரத்தில் பேருந்தின் இயந்திரம் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக, நெருப்புப் பந்து விளைவு என்பது எரியக்கூடிய வாயுக்கள் அல்லது காற்றில் கலந்த திரவ எரிபொருளின் விரைவான எரிப்பு காரணமாக ஏற்படலாம், இது ஒரு கோள வடிவ சுடர் முகப்பை உருவாக்குகிறது, இது விரைவாக வெளிப்புறமாக விரிவடைகிறது. நெருப்புப் பந்தின் தீவிரம், அளவு மற்றும் கால என்பன எரிபொருள் வகை, அளவு மற்றும் சூழல் என்பவற்றில் தங்கியிருக்கும்

4. “Kiln Effect” என்றால் என்ன?

Kiln என்பதன் அர்த்தம், செங்கல், மண் பொருட்கள், செராமிக் போன்றவற்றை மிக அதிக வெப்பத்தில் எரிக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பு (பொதுவாக 800°C – 1,200°C அல்லது அதற்கு மேல்). இலகு தமிழில் பாண் போறணைக்கு எதிரான விளைவு ( பாண் போறணை உட்பக்கத்திலேயே வெப்பம் உண்டாக்கப்படுகின்றது).

அதாவது ஒரு மூடிய கட்டமைப்பு உதாரணமாக பேருந்து, கார், அறை வெளியில் இருந்து வரும் தீவிர வெப்பத்தால் உட்புறம் முழுவதும்  மிக அதிக வெப்பத்தில் சூடாக மாறும் நிகழ்வு.

சுருக்கமாக (Kiln Effect)பேருந்து  போன்ற மூடிய இடம் திடீரென “சூப்பர்-ஹீட்டட் ஓவன்” (superheated oven) போல மாறும் நிலை. அதாவது வெளியில் எரியும் தீயின் வெப்பம் அதை உலோக சுவர் மற்றும் மேல் தகடுகள் உறிஞ்சி உள்ளே நோக்கி கதிர்வீச்சாக (radiate) அனுப்புவதால் உள்ளே இருக்கும் மனிதர்கள் சில வினாடிகளில் மிக அதிக வெப்பத்தால் செயலிழந்து சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும்

5. பேருந்தில் இருந்த பிரயாணிகளுக்கு என்ன நடந்திருக்கும்?

பேருந்து தீ விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அறிவியல் காரணம் ஆரம்ப கட்டத்தில் தீ அல்ல; பேருந்து மிக அதிக வெப்பமுள்ள அடுப்பு போல மாறுவதுதான். அதற்கான காரணிகள்  

  1. கதிர்வீச்சு வெப்ப பரிமாற்றம்: பேருந்தின் இரும்பு உடல் வெளியில் எரியும் எரிபொருளில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி, அதை உள்ளே நோக்கி கதிர்வீச்சாக செலுத்துகிறது. கண்ணாடிகள் வெப்ப அதிர்ச்சி (thermal shock) காரணமாக திடீரென உடைந்து விழும்.
  2. நச்சு வாயு சூழல்: உள்ளே உள்ள இருக்கைகள், பிளாஸ்டிக், இன்சுலேஷன் போன்றவை எரிவதால், கார்பன் மொனாக்சைடு (CO) மற்றும் ஹைட்ரஜன் சயனைடு (HCN) கொண்ட அடர்த் கரும்புகை உருவாகிறது.
  3. விளைவுவாக குறுகிய, மூடிய இடத்தில் இவ்வாயுக்கள் ஆக்சிஜனை சில வினாடிகளில் முடித்து விடுகின்றன இதனால் பேருந்தில் பயனித்தவர்களுக்கு ஆரம்பத்தில் மூச்சு திணறல் (suffocation) ஏற்படும்

6. யாத்திரிகர்கள் தப்பி ஓடமுடியாமைக்கும் மரணம் அடைந்தமைக்கும் என்ன காரணம்?
இந்தச் சம்பவத்தில் துயரத்தை மேலும் அதிகரித்த காரணம், விபத்து இரவு 1:30 மணியளவில் நடந்தது; பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.

  • மனிதர்கள் தப்பி ஓடமுடியாமை  (Incapacitation): Flash fire ஏற்பட்டவுடன் வெப்பம் திடீரென அதிகரிப்பதால்அதிகரித்த வெப்ப காற்று காரணமாக தொண்டை கட்டி மூச்சு விடுவது கடினம் (laryngeal spasm ) இதனால் மனிதர்கள் கத்தவோ சுவாசிக்கவோ முடியாத நிலை உண்டாகிறது.
  • உயிரிழத்தல் காரணம் – மூச்சுத்திணறல்: தீ உடலில் தொடுவதற்கும் முன், எரியும் பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ஹைட்ரஜன் சயனைடு காரணமாக சில வினாடிகளில் மயக்கம் ஏற்படும்.
  • வெப்ப அதிர்ச்சி: சுற்றியுள்ள வெப்பம் 150°C–200°C கடந்தவுடன் மனித உடல் உடனடியாகத் தளர்ந்து விழும்; எனவே தப்பிக்க முயல்வதும் கூட இயலாத நிலை

இறுதியாக இந்த விபத்து பேருந்து கணநேரத்தில் அணுவாக்கமடைந்த டீசல் எரிபொருளால் (டீசல் ஆவி) மூடப்பட்டு உடனே தீப்பற்றியது. “Fireball” தாக்கத்தின் காரணமாக பயணிகளுக்கு எந்தவித எதிர்வினை நேரமும் கிடைக்கவில்லை. இழந்த 45 உயிர்களும் தீ மெதுவாக பரவியதற்கல்ல; அது உடனடியாக, மிகவும் தீவிரமான வெப்ப வெடிப்பு போல உருவாகி, அனைவரும் தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் பேருந்தை முழுவதும் சூழ்ந்துகொண்டதால்தான் ஏற்பட்டது.

நன்றி

உயிரை பறிக்கும் “மாவா”!!

அண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?,  மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது?

    மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்:

    1. பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர்.
    2. புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள்.
    3. சுண்ணாம்பு (Slaked Lime): புகையிலை மற்றும் பாக்கின் காரத்தன்மையை (alkalinity) மாற்றி, அதில் உள்ள நிக்கோடினை (Nicotine) உடல் வேகமாக உறிஞ்சிக்கொள்ள இது உதவுகிறது.

    சில நேரங்களில், கூடுதல் சுவைக்காக சில மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படலாம், ஆனால் மேற்கண்ட மூன்றுமே இதன் முக்கியப் பொருட்கள் ஆகும்.

    2. மாவா பாக்கில் கஞ்சா இருக்கின்றதா?

    இல்லை. மாவா பாக்கின் அடிப்படை மற்றும் பொதுவான தயாரிப்பு முறையில் கஞ்சா (Ganja) சேர்க்கப்படுவது இல்லை.அதன் போதைத்தன்மைக்கு முக்கிய காரணங்கள் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் (Nicotine) மற்றும் பாக்கில் உள்ள அரெகோலின் (Arecoline) ஆகிய இரண்டு பொருட்களும்தான்.இருப்பினும், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் சில இடங்களில், கூடுதல் போதைக்காகவோ அல்லது மக்களை வேகமாக அடிமையாக்கவோ, அதில் கஞ்சா அல்லது வேறு சில ஆபத்தான ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படலாம். ஆனால், இது மாவா பாக்கின் அதிகாரப்பூர்வமான தயாரிப்பு முறை அல்ல.

    3. மாவா பாக்கினை எவ்வாறு தயாரிப்பார்கள்?

    இந்தியாவில் பெரும்பாலும் கடைகளில், வாடிக்கையாளர் கேட்கும் போதே உடனடியாகத் தயார் செய்து தரப்படும் ஒரு கலவையாகும்.

    1. நறுக்கப்பட்ட பாக்கு, புகையிலை மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு ஆகியவற்றை உள்ளங்கையில் வைத்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கட்டை விரலால் நன்கு தேய்ப்பார்கள் (நசுக்குவார்கள்).
    2. இந்த கலவை ஒரு சிறிய தாளில் மடித்துக் கொடுக்கப்படும். இதை பயன்படுத்துபவர் வாயில் வைத்து மெதுவாக மென்று, அதன் சாற்றை உமிழ்நீருடன் கலந்து கொள்வார்.

    இலங்கையில் கிடைக்கும் ஏற்கனவே தயாரித்து விற்கப்படும் (Pre-Packaged) மாவா பாக்குகள் வீரியம் குறைந்தவை அல்ல. அவை உடனடியாகத் தயார் செய்யப்படும் மாவா பாக்கைப் போலவே, அல்லது சில சமயங்களில் அதைவிட மோசமாக, அதிக வீரியமும் அடிமையாக்கும் திறனும் கொண்டவை.

    தொழிற்சாலைகளில், புகையிலை, பாக்கு, சுண்ணாம்பு, மற்றும் வாசனைப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்டு, பாக்கெட் (Sachet) செய்யப்படுகிறது. இதிலும் சுண்ணாம்பு ஏற்கனவே கலக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பாக்கெட்டில் உள்ள கலவை எப்போதுமே தீவிர காரத்தன்மை (High pH) உடனேயே இருக்கும். இந்த பாக்கெட்டைப் பிரித்து வாயில் போடும்போது, அது உமிழ்நீருடன் கலந்தவுடனேயே, அந்த உயர் காரத்தன்மை நிக்கோட்டினை “சுதந்திர நிக்கோட்டினாக (free nicotine)” மாற்றி ரத்தத்தில் கலக்கத் தொடங்கிவிடும். இதற்கு “தேய்க்கும்” அல்லது “கசக்கும் ” வேலை கூடத் தேவையில்லை.

    “வீரியம்” (Potency) என்பது நிக்கோட்டின் (Nicotine) எவ்வளவு வேகமாக உங்கள் மூளையைச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்தது.

    4. மாவா பாக்கினை வாயில் மென்றவுடன் கிறுகிறுவென போதை தலைக்கு ஏற காரணம் என்ன?

    இதன் பின்னால் பின்வரும் மூன்று இரசாயனவியல்  மற்றும் உயிரியல் காரணங்கள் இருக்கின்றன

    1. முக்கிய காரணம்: சுண்ணாம்பு (Slaked Lime)மக்களுக்கு ஏற்படும் தீவிரமான போதை உணர்விற்குக் காரணம் புகையிலையின் அளவு மட்டுமல்ல, அந்த புகையிலையிலிருந்து நிக்கோட்டினை நமது உடல் எவ்வளவு வேகமாக உறிஞ்சுகிறது (absorb) என்பதைப் பொறுத்தது.இங்கேதான் சுண்ணாம்பு ஒரு முக்கிய இரசாயனவியல்  வேலையைச் செய்கிறது.

    a. pH அளவை மாற்றுதல்: புகையிலை இலைகள் இயற்கையாகவே சற்று அமிலத்தன்மை (Acidic) கொண்டவை. ஆனால், சுண்ணாம்பு ஒரு தீவிர காரத்தன்மை (Alkaline) கொண்டது.

    b. இரசாயனவியல் மாற்றம்: புகையிலையும், பாக்கும், சுண்ணாம்புடன் கலந்து உமிழ்நீருடன் சேரும்போது, அந்த கலவையின் pH அளவு (காரத்தன்மை) மிக அதிகமாகிறது.

    c. “Free-Basing” நிக்கோட்டின்: இந்த உயர் pH சூழலில், புகையிலையில் உள்ள நிக்கோட்டின் அதன் வேதியியல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. அது “நிக்கோட்டின் உப்பு” (Nicotine Salt) வடிவத்திலிருந்து “சுதந்திர நிக்கோட்டின்” (Free-Base Nicotine) வடிவத்திற்கு மாறுகிறது.

    2. “சுதந்திர நிக்கோட்டின்” (Free-Base)

    நிக்கோட்டினின் இந்த “Free-Base” வடிவம் தான் அதன் போதைத்தன்மைக்கு முக்கிய காரணம்.

    a. எளிதில் உறிஞ்சுதல்: “நிக்கோட்டின் உப்பு” வடிவம் நமது வாயின் உட்புறச் சவ்வுகள் (Buccal Mucosa) வழியாக எளிதில் உறிஞ்சப்படாது. ஆனால், இந்த “சுதந்திர நிக்கோட்டின்” வடிவம் கொழுப்பில் கரையக்கூடியது (Lipid-Soluble).

    b. நேரடி ரத்த ஓட்டம்: நமது வாயின் உட்புறம், ரத்த நாளங்கள் (Blood Vessels) நிறைந்தது. மாவா பாக்கை மெல்லும்போது அல்லது வாயில் அடக்கி வைக்கும்போது, இந்த “சுதந்திர நிக்கோட்டின்” நேரடியாக வாயின் சவ்வுகள் வழியே ஊடுருவி, உடனடியாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

    c. மூளைக்குச் செல்லும் வேகம்: இவ்வாறு ரத்தத்தில் கலக்கும் நிக்கோட்டின், செகண்டுகளில் மூளையைச் சென்றடைகிறது. இது புகை பிடிப்பதைப் (Smoking) போலவே மிக வேகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.சுருக்கமாகச் சொன்னால்: சுண்ணாம்பு, புகையிலையில் உள்ள நிக்கோட்டினை “பூட்டி வைக்கப்பட்ட” நிலையிலிருந்து “திறந்துவிடுகிறது” (unlocks). இதனால் அது மிக வேகமாக ரத்தத்தில் கலந்து, மூளையைத் தாக்கி, கடுமையான போதை உணர்வை உடனடியாகத் தருகிறது.

    3. கூடுதல் காரணம்: பாக்கு (Areca Nut)மாவா பாக்கில் உள்ள மற்றொரு போதைப்பொருள் பாக்கு. பாக்கில் “அரெகோலின்” (Arecoline) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுவும் ஒரு இலகுவான போதையைத் தரக்கூடியது (Stimulant).நிக்கோட்டின் (புகையிலையிலிருந்து) மற்றும் அரெகோலின் (பாக்கிலிருந்து) ஆகிய இரண்டும் ஒன்று சேரும்போது, அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கும் ஒட்டுமொத்த போதை உணர்வு (Synergistic Effect) தனித்தனியாக எடுத்துக்கொள்வதை விட மிகவும் அதிகமாக இருக்கும்.

    5. மாவா பாக்கு பாவிக்கும் பொழுது குறித்த நபர் மாவா பாக்கு பாவனைக்கு அடிமை ஆகுவாரா?

    நிச்சயமாக அடிமை ஆகுவார். மாவா பாக்கில் “நிக்கோட்டின்” இருப்பதினால் அவர் அதற்கு அடிமையாகுவார்.

    நிக்கோட்டின் (புகையிலை), உலகில் மிகவும் அடிமையாக்கக்கூடிய போதைப்பொருட்களில் ஒன்றாகும்.பல அறிவியல் மற்றும் மருத்துவ தரவரிசைகளின்படி, ஒருவரை அடிமையாக்கும் திறனில் (Addictive Potential) நிக்கோட்டின், ஹெராயின் (Heroin) மற்றும் கோகோயின் (Cocaine) போன்ற போதைப்பொருட்களுக்கு இணையாகவோ அல்லது சில அளவீடுகளின்படி அவற்றை விட மோசமாகவோ மதிப்பிடப்படுகிறது. இது நிச்சயமாக மதுபானம் (Alcohol) மற்றும் ஐஸ் (Methamphetamine) ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க கொடிய போதைப் பொருளாகும்.

    6. மாவா பாக்கு எவ்வாறு மிகவும் அடிமையாக்குகிறது?

    ஒரு பொருளைப் பயன்படுத்தியவுடன், எவ்வளவு வேகமாக அது மூளையைச் சென்று இன்ப உணர்வைத் (Dopamine release) தூண்டுகிறதோ, அவ்வளவு வேகமாக ஒருவர் அதற்கு அடிமையாவார்.மாவா பாக்கில், சுண்ணாம்பின் உதவியால் நிக்கோட்டின் உடனடியாக ரத்தத்தில் கலப்பதால், பயனருக்கு உடனடி போதை கிடைக்கிறது. இந்த “உடனடி திருப்தி” (Instant Gratification) தான், ஒருவரை மிக எளிதாகவும், மிக ஆழமாகவும் இந்த பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.எனவே, மாவா பாக்கின் அதிக போதைத்தன்மைக்குக் காரணம் நிக்கோட்டினின் அளவு மட்டுமல்ல, சுண்ணாம்பின் மூலம் அந்த நிக்கோட்டின் ரத்தத்தில் கலக்கப்படும் வேகமே ஆகும்.

    7. மாவா பாக்கினை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வது குற்றமா?

    தற்பொழுது இலங்கையில், புகையிலை பொருட்கள் (tobacco products) விற்பனை, வாங்குதல் மற்றும் விளம்பரம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது எல்லை 21ஆக இருக்கின்றது. எனவே புகையிலையினை கொண்டிருக்கும் மாவா பாக்கினை 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வது சட்ட விரோதமானது.

    8. மாவா பாக்கிணை பாவிப்பதினால்  உடலில் ஏற்படும் தீங்கான விளைவுகள் என்ன?

    மக்களை மிக எளிதில் அடிமையாக்கக் கூடியது. இதை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் (Oral Cancer), பல் மற்றும் ஈறு நோய்கள், மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட மிகக் கொடிய நோய்கள் வர அபாயம் உள்ளது. இலகுவாக சொல்வதானால் சிகரெட் மற்றும் புகையிலை போன்றவற்றினை பாவிப்பதினால் ஏற்படும் தீங்கான விளைவுகள் அனைத்தும் ஏற்படும்.

    9. குட்கா மற்றும் மாவா இரண்டும் ஒன்றா?
    குட்கா (Gutkha) மற்றும் மாவா (Mawa) இரண்டும் ஒரே பொருள் அல்ல, ஆனால் இரண்டும் புகையிலை சார்ந்த பொருட்கள். இரண்டிலும் புகையிலை முக்கிய கூறு.​
    குட்கா என்பது சுண்ணாம்பு, புகையிலை, அரிசி பப்பாளி, மசாலாஞ்சிகள் போன்றவற்றின் கலவையாக இருக்கும் மெல்லக்கூடிய புகையிலை வகை.​
    மாவா என்பது சுண்ணாம்பு, சுடுகலை (Areca nut / betel nut) மற்றும் புகையிலை கலப்பு; இதில் சில நேரங்களில் சிறிய அளவு இனிப்பும் சேர்க்கப்படும்.​

    பைக்கற்றில் உள்ள குட்கா மற்றும் மாவா

    நன்றி

    போதைமாத்திரைகள்!

    அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பலபகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக என்றும் இல்லாதவகையில் அதிகளவில் போதை மாத்திரைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வரும் நிலையில் போதைமாத்திரை என்றால் என்ன, ஏன் அவற்றை பாவிக்க வேண்டும் மற்றும் அவற்றினால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவு விளக்குகின்றது

    பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஒருதொகுதி போதை மாத்திரை

    1. போதை மாத்திரை என்றால் என்ன?

    Pregabalin, Gabapentin மற்றும் tramadol போன்ற மருத்துவ மாத்திரைகளே சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் போதை மாத்திரை என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. இவை வெவ்வேறு மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனிகளினால் தாயாரிக்கப்பட்டு வெவ்வேறு வியாபார பெயர்களில் நோயாளருக்காக  விற்பனை செய்யப்படுகின்றது

    2.  இந்த மாத்திரைகள் என்ன என்ன வைத்திய தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன?

    பொதுவாக இந்த மாத்திரைகள் வலிப்பு நோய்க்கு பாவிக்கப்படுகின்றது. மேலும் நரம்புகளில் ஏற்படும் பிரச்னையால் உண்டாகும் நோவுக்கு வலி நிவாரணியாகவும் பாவிக்கப்டுகின்றது. இவை தவிர மன பதகளிப்பு … போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு பாவிக்கப்படுகின்றது.

    3. Pregabalin அல்லது Gabapentin ஆகிய இரு மாத்திரைகளும் ஒன்றா?

    இல்லை இவ்விரு மாத்திரைகளும் ஒரே வர்க்கத்திற்கு உரியவை. இவற்றின் கட்டமைப்பு gamma-aminobutyric acid (GABA) என்ற நரம்பு கணத்தாக்கத்தினை கடத்தும் பதார்தத்தினை ஒத்திருக்கும். gamma-aminobutyric acid (GABA) ஆனது எமது மூளையில் கணத்தாக்கத்தினை கடத்தாது நோவினை குறைக்கும். இதன் காரணமாகவே மேற்குறித்த மாத்திரைகள் வலிநிவாரணியாக பயன்படுகின்றது.

    4.   Pregabalin அல்லது Gabapentin ஆகிய மாத்திரைகளில் போதைப்பொருள் இருக்கின்றதா?

    நிச்சயமாக இந்த மாத்திரைகள் நார்க்கோர்ட்டிக் (Narcortics) அல்லது ஒபிஒய்ட் (Opioid) வகையான மருந்து மாத்திரைகள் அல்ல. மேற்குறித்த மாத்திரைகளில் போதை பொருட்கள் ஏதும் அடங்கியிருக்காது.

    5. அவ்வாறு எனில் மேற்குறித்த மாத்திரைகள் ஏன் போதை மாத்திரைகள் அல்லது போதை வில்லைகள் என்று அழைக்கப்படுகின்றது?

    குறிப்பாக போதை மருந்து பாவிப்பவர்கள் மேற்குறித்த மாத்திரைகளை பாவிப்பதன் காரணமாகவே அவை தவறான காரண பெயராக போதை மாத்திரை என அழைக்கப்படுகின்றன.

    6. மேற்குறித்த மாத்திரைகளை பாவிக்கும் பொழுது போதை உண்டாகுமா?

    இந்த மாத்திரைகளை மருத்துவ ரீதியாக சிபாரிசு செய்யப்பட்ட அளவில் பாவிக்கும் பொழுது மருத்துவ ரீதியாக போதை உண்டாகாது. எனினும் சிபாரிசு செய்யப்படாத அதிக அளவில் (overdose) பாவிக்கும் பொழுது இம்மாத்திரைகளின் பக்கவிளைவுகளான சோர்வுத்தன்மை, தளர்வான நடை, மங்கலான பார்வை, அதிக நித்திரை, கனவுலகில் மிதத்தல், பார்வையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் .. போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் இப்பக்கவிளைவுகள்  போதைப்பொருள் அல்லது மதுபானம் பாவித்தால் வரும் விளைவுகளை ஓத்திருப்பதினால் சிலர் இந்தவகை மாத்திரையினால் போதை உண்டாகின்றது  என்ற நம்பிக்கையில் இதனை பாவிக்கின்றனர்.மேலும் இங்கு pregablin மற்றும் gabapentin என்பன பூஸ்டர் டோஸாக தொழிற்படும் தன்மை உடையவை

    7. பூஸ்டர் டோஸாக தொழில் படுதல் என்றால் என்ன?

    வேறு ஓர் போதைப்பொருளுடன்  அல்லது மதுபானத்துடன் சிலவகை பொருட்களை சேர்த்து பாவித்தால் அதிக போதை உண்டாகும் அத்துடன்  போதை அதிக நேரம் நிலைத்து நிற்கும். இதன் காரணமாகவே போதை மாத்திரைகள் அதிகளவில் பாவிக்கப்டுகின்றன.


    8. Pregablin மற்றும் gabapentin ஆகிய மருந்துகளை மருத்துவர்கள் சேமித்து வைப்பது அல்லது நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது குற்றமா?
    இல்லை. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் அல்லது பல் மருத்துவர் ஒருவர் மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும். அவர்களுக்கு சட்ட ரிதீயான அங்கீகாரம் உண்டு. இவ்வாறே நார்கோடிக் மருந்துகளை (உண்மையான போதை மருந்துகளை) பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும்.

    9. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபர் அதற்கு அடிமையாகும் தன்மை உருவாகுமா?
    ஆம். அண்மைக்காலத்தில் வெளிவந்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் மேற்குறித்த மருந்துகள் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பாவிக்கும் இடத்து பாவனையாளரை அடிமையாக்கும் தன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தற்பொழுது அல்லது முன்பு பல்வேறுபட்ட போதை பொருட்களை பாவிப்பவர்கள் இவற்றிற்கு அடிமையாகும் தன்மை அதிகம்.

    10. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை சாதாரண குடிமகன் ஒருவர் தனது உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகுமா?
    இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் Poisons, Opium and Dangerous Drugs (Amendment) Act No. 41 of 2022 (23/11/2022) இன் பிரகாரம் சாதாரண குடிமகன் வைத்தியரின் உரிய பரிந்துரை இன்றி மேற்குறித்த மருந்துகளை அதிகமாக வைத்திருத்தல் குற்றமாகும்.


    11. இப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
    இலங்கையின் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் வைத்தியர்கள் களஞ்சியப்படுத்தக் கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய அதிகூடிய அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் வைத்தியர்கள் மருத்துவ ஒழுக்கவியலுக்கு அமைய தமது நோயாளர்களின் தேவைப்பாட்டிற்கு அமைய மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்து பரிந்துரைக்கலாம். மேலும் நார்க்கோர்ட்டிக் மருந்து விற்பனையின் பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கைக்கொள்ளலாம்.

    12. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

    மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, கவனம் மற்றும் மன தெளிவு ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள், படபடப்பு, சோர்வு, நடுக்கம், தூக்கமின்மை, பதட்டம், எரிச்சல், செவிப்புலன் பிரமைகள், உணர்ச்சி உறுதியற்ற தன்மை மற்றும் மனநோய் போன்ற பல்வேறு உடல் மற்றும் உள  ஆரோக்கிய பிரச்சினைகளை தொடர்ச்சியான பாவனை ஏற்படுத்தும்.

    நன்றி