பகிடிவதையினால் உயிரிழந்த மாணவன் – ஏன்?

அண்மைக்கால பகுதியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் முக்கிய இடம் பிடித்து இருப்பது உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை சம்பந்தமான செய்திகளே. அவற்றில் பலர் குறிப்பிட்டிருந்த தகவல் யாதெனில் இதுவரை காலமும் பகிடிவதை செயற்பாட்டின் பொழுது இறந்த மாணவர்களின் விபரங்களும் அவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதுவுமே. பகிடிவதை செயற்பாடுகளின் பொழுது மாணவர்கள் அதீத மனஅழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்ததாக சிறுநீரக செயலிழப்பு அதிகளவு மாணவர்களுக்கு மரணத்தினை ஏற்படுத்தி இருந்தது. எம்மில் பலருக்கு பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக பகிடிவதையில் ஈடுபடும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம். பகிடி வதையில் பல்வேறு பட்ட வடிவங்கள் உண்டு. உதாரணமாக பாலியல் (sexual) சார்ந்த பகிடிவதை, உடலியல் (physical) சார்ந்த பகிடி வதை மற்றும் மனம் (psychological) சார்ந்த பகிடிவதை. இவற்றில் உடலியல் சார்ந்த பகிடிவதையின் பொழுதே சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது.
உடலியல் சார்ந்த பகிடி வதையின் பொழுது மாணவர்கள் அதிக தடவைகள் தோப்புக்கரணம் போடுதல், அதிக தூரம் ஓடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உள்ளாவர். இதன் பொழுதே அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு அவர்கள் அதிகளவு உடலியல் சார்ந்த பகிடிவதைக்கு உட்படும் பொழுது அவர்களின் தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK),  myoglobin எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை

rhabdomyolysis-1-638
தற்பொழுது எல்லோர் கேள்வி யாதெனில் புதுமுக மாணவர்கள் ஆரோக்கியமாகத் தான் பல்கலைக்கழகம் சென்றார்கள். அவ்வாறு இருக்க எவ்வாறு திடீர் என்று சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது என்பதே ஆகும். தற்காலத்தில் சகல புதுமுக மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது வேறுவிடயம். பின்வரும் காரணிகள் புதுமுக மாணவர்களில் தசை அழிவினை ஏற்படுத்தி (முக்கியமாக வன்கூட்டு தசை)சிறுநீரக செயலிழப்பினை தூண்டுகின்றன.
1. அதீத வெப்ப நிலையும் ஈரலிப்பும் (high temperatures and humidity)
இலங்கை ஓர் அயன மண்டல நாடாகும் இதன் காரணமாக சராசரி வெப்ப நிலை 27 செல்ஸியஸ் ஆகவும் அதிக ஈரலிப்பு உள்ளதாகவும் உள்ளது. குறிப்பாக பகிடிவதை நடைபெறும் இடம் காற்றோட்டம் குறைந்த இடமாகவே இருக்கும். சிரேஸ்ட மாணவர்கள் சத்தம் வெளியே கேட்காதவாறு யன்னல்களையும் கதவுகளையும் மூடியிருப்பர். இதன் காரணமாக அச்சூழலில் அதிக வெப்பநிலையும் ஈரலிப்பும் நிலவும் இவை சிறுநீரக பாதிப்பினை தூண்டும்
2. குறைந்த நீர்ச்சத்து (poor hydration)
புதுமுக மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள மலசல கூடங்களையும் சிற்றுண்டி சாலையினையும் பாவிக்க அனுமதிக்க படமாட்டார்கள், இதன் காரனமாக புதுமுக மாணவர்கள் குறைந்தளவு நீரே ஓர் நாளில் அருந்துவர். அதாவது சராசரியாக ஒரு மனிதனுக்கு ஓர் நாளில் தேவையான அளவான நீரின் அளவினை விட குறைந்தளவு நீரே அருந்துவர். இதனால் அவர்களின் உடலில் உள்ள நீரின் அளவு குறைவாக இருக்கும். இது எமது உடலில் தசைகள் அழிவடைவதையும், சிறுநீரக செயலிழப்பினை தூண்டும் ஓர் காரணியாகும்
3. அதீத உடல் வேலை (intense physical ?training)
சாதாரணமாக புதுமுக மாணவர்கள் கடினமான உடல் வேலைகளை செய்து பழகி இருக்க மாட்டார்கள், இவ்வாறானவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்களினால் வழங்கப்படும் உடல் வேலை ஆபத்தானதாகவே முடியும். இங்கு விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு வேலை வழங்கினால் மட்டுமே பாதிப்பு வரும் என்று எவ்வித கணிப்பும் இல்லை.
4. தொடர்ச்சியான உடல் வேலை (bout of physical ?training)
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் புதுமுக மாணவர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக உடலியல் ரீதியான பகிடிவதைக்கு உள்ளாவதினால் அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

இவ்வாறன காரணிகள் தான் புதுமுக மாணவர்களில் தசை அழிவடைவதன் மூலம் சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றது.

                                                            முற்றும்

HP PNG

யார் இவர்கள்?

அண்மையில் மாங்குளம் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட வேலைகளின் பொழுது ஒரு சில மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. அது தவிர இலங்கையின் பல பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகளின் மூலம் பல நூற்றுக்கணக்கான மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மக்களின் முன்னால் உள்ள இது தொடர்பான  பல கேள்விகளில் பிரதானமானதும் முக்கியமானதுமான கேள்வி யாதெனில் இவ்  எலும்பு கூடுகளுக்கு உரியவர்கள் இனம் காணப்படுவார்களா? அதாவது இவ்வாறு எலும்பு கூடாக உள்ளவர்கள் யார்? என்பதே. எவ்வெலும்பு கூடுகளை அடையாளம் காண்பது என்பது சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரணமாக சட்ட மருத்துவத்தில் இவ்வாறு கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகள்  இருவிதமான அடையாள படுத்தலுக்கு உட்படுத்த படுகின்றது. அவையாவன

  1. பொதுவான அடையாளம் காணல் (Tentative identification)
  2. தனித்துவமான அடையாளம் காணல் (Specific/positive identification)

பொதுவான அடையாளம் காணல்

பொதுவான அடையாளம் காணலில் கிடைத்த எலும்பு கூடுகளில் இருந்து அவற்றின் மண்டையோடு,தாடை எலும்பு , இடுப்பு வளையம்  மற்றும் ஏனைய எலும்புகளின் உருவ தோற்றமைப்புகளை (Anthropological and morphological measurements) ஆராய்ந்து ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ள இயல்புகளுடன் ஓப்பிட்டு ஆராய்வதன் (Comparative analysis) மூலம் அவ்வெலும்பு கூட்டிற்கு உரியவரின் பால்(ஆண் /பெண்), வயது, உயரம் மற்றும் இனம் என்பன கண்டறியப்படும். இங்கு இனம் என்பது மனிதனில் உள்ள பின்வரும் உபஇனங்களை கூறிக்கும்

  • Caucasoid (White) race.
  • Negroid (Black) race.
  • Mongoloid (Oriental/ Amerindian) race.

சில சந்தர்ப்பங்களில் கிடைத்த எலும்புக்கூட்டில் அம்மனிதன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள், எலும்பு முறிவுக்கு செய்ய பட்ட சத்திர சிகிச்சையின் பொழுது வைக்க பட்ட உலோக தகடுகல்  மற்றும் ஆணிகளின் விபரங்கள், பற்களுக்கு அளிக்க பட்ட சத்திர சிகிச்சைகளின் விபரங்கள் முக்கியமாக பிடுங்க பட்ட , நாட்டப்பட்ட பற்களின் விபரங்கள் என்பவற்றினை ஓப்பிட்டு நோக்குவதன் மூலம் அவ்வெலும்பு  கூடுகள் யாராக இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வரலாம் . ஓரே விதமான சிகிச்சையினை பல மனிதர்களுக்கு அளிக்க படுவதனால் இவ்வாறு அடையாளம் காண்பதுவும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிக்கும். மேலும் இங்கு பால், வயது, உயரம் மற்றும் இனம் என்பன சரியாக கணிக்கப்பட்டாலும்  ஒரு குறித்த சமூகத்தில் பல மனிதர்கள் ஒரே வயது, பால்  மற்றும் உயரம் என்பதை கொண்டிருப்பதால், ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளம் காணமுடியாது. எனவே இவ்வாறு பல மனித எலும்புக்கூடுகள் அல்லது மனித உடல்கள் ஒரே சமயத்தில் மீட்கப்படும் பொழுது நாம் அவற்றிற்குரிய மனிதர்களை அடையாளம் காண தனித்துவமான அடையாளம் காணும் முறைகளை பிரயோகிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுவான அடையாளம் காணலுக்கு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் தரவுகள் (Missing persons data) பெருமளவில் தேவைப்படும். அதாவது இங்கு தரவு என்று குறிப்பிடும் பொழுது அவர்களின் வயது, பால், உயரம், கடைசியாக அணிந்து இருந்த ஆடைகள், ஆபரணங்கள் பற்றிய விபரம், அவர்களுக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பற்றிய விபரங்கள், அவர்களுக்கு இருந்த நோய்கள் பற்றிய விபரங்கள் ….போன்ற விபரங்கள் ஆகும். இவ்விபரங்களை கிடைத்த எலும்பு கூடுகளின் விபரங்களுடன் ஓப்பிட்டே பொதுவான அடையாளம் காணப்படும். அதன் பின்னரே தனித்துவமான அடையாளம் காணப்படும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

இலங்கையில் இவ்வாறு காணாமல் போனோரின் தரவுகள் (Anthropological data) எந்த ஒரு நிறுவனத்திடமோ, அராசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சில நிறுவனங்களிடம் இருந்தாலும் அது முழுமை பெறாத ஒன்றே.

மேலும் போர் நிறைவடைந்து ஏறத்தாழ 10 வருடங்கள் கழிந்த நிலையில் பல காணாமல் போனோரின் நெருங்கிய உறவினர்கள் தமது சொந்தங்களை தேடியே இறந்து விட்டார்கள் இதனால் இனிவரும் காலங்களில் காணாமல் போனோரின் மிகச்சரியான அடையாளம்காணலுக்குரிய தரவுகளை பெறுவது எட்டா கனியே. மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பயம் காரணமாக சரியான தகவல்களை வெளியிட தயங்குவார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

தனித்துவமான அடையாளம் காணல்

மனிதர்களில் தனித்துவமான அடையாளம் காணும் முறைகளாக பின்வரும் முறைகளை FBI, Interpol போன்ற பிரபல்யமான புலனாய்வு நிறுவனங்கள் கருதுகின்றன

  1. கைரேகை மூலம் அடையாளம் காணும் முறை
  2. பற்களின் தனித்துவமான அமைப்பு மூலம் முறை
  3. DNA மூலம் அடையாளம் காணும் முறை

இவற்றில் DNA மூலம் அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்தது. இவற்றில் இலங்கையில் குறிப்பிட்ட ஒருசில குற்றவாளிகளின் கைரேகை பற்றிய தரவுகளே இலங்கையில் உள்ளன. மற்றைய பற்கள் பற்றிய தரவுகள், DNA தரவுகள் எதுவும் இல்லை. மேலும் இங்கு  காணாமல் போனோரின் உறவுகள் இறந்தமையாலும் மற்றும் வெளிநாடு சென்றமையாலும் உரிய DNA மாதிரிகளை பெறுவதும் கடினமே. ஓட்டு மொத்தத்தில் கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகளுக்கு பொதுவான மற்றும் தனித்துவமான அடையாளம்காணலை மேற்கொள்வது என்பது கடினமானதே.

                                                                        முற்றும்

HP PNG

உயிரை பறித்த முகநூல் அறிவுரை

இன்றைய காலப்பகுதியில் முகநூல் மூலம் பலரும் பல்வேறுபட்ட சம்பவங்களினை மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே சம்பவத்தின் உண்மைத் தன்மையினை ஆராயாமல் பகிர்ந்து வருகின்றனர். முக்கியமாக ஓர் தகவலை யார் எழுதினார்கள் அவரின் கல்வித்தகமை மற்றும் உண்மைத்தன்மை பற்றி ஆராய்வதில்லை.
அண்மையில் கம்பஹாவில் முகநூலில் வெளிவந்த வைத்திய அறிவுரையை பார்த்த ஒருவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக கஜ மடார மரத்தின் இலைகளை ஜுஸ் பண்ணி குடித்த நிலையில் 10 நிமிடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
நாம் இனி எவ்வாறு இறந்தார் என்று அலசுவோம். சிங்களத்தில் கஜ மாடார மரம் என்றைக்கப்படுவதின் தாவரவியல் பெயர் Cleistanthus collinus. இது தமிழில் ஒடுவந்தலை/ஓடுவன் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இடத்துக்கு இடம் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இது காலாகாலமாக சிங்கள மக்களினால் மருத்துவ தேவைக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. இதன் இலைகள் பின்வரும் நஞ்சு பதார்த்தங்கள் காணப்படுகின்றன Diphyllin , Cleistanthin A and B

cleistanthus collinus tamil nameக்கான பட முடிவுகள்

cleistanthus collinus treeக்கான பட முடிவுகள்இவை மனிதனின் சிறுநீரகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக எமது உடலில் பொட்டாசியம் போன்ற அயன்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும் அத்துடன் இது நேரிடையாகவும் இருதயத்தினை தாக்கும் தன்மை உடையது. மேலும் குருதி அமுக்கத்தினையும் சடுதியாக குறைக்கும் தன்மை உடையது. (Hypokalemic metabolic acidosis, hypotension and acute kidney injury )
இன்று எம் முன்னே உள்ள கேள்வி யாதெனில் முன்பு இயற்கை வைத்தியத்தில் பாவித்த இவ்வாறன தாவரங்கள் எவ்வாறு இக்காலத்தில் நஞ்சாக மாறுகின்றது என்பதே. அதற்கு பின்வரும் காரணங்களினை குறிப்பிடலாம்.
1. முற்காலத்தில் தாவரங்களின் இலைகள் சிறு உரல் போன்றவற்றில் இடித்து வெறும் கையினால் பிழிந்தே சாறுகள் பெறப்பட்டன. இதன் காரணமாக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அளவினை விட குறைந்த அளவிலேயே அவற்றில் பதார்த்தங்கள் இருக்கும் (sub lethal dose). ஆனால் தற்காலத்தில் நாம் இவ்வாறன செயன்முறைக்கு மின்சாரத்தின் மூலம் இயங்கும் உபகரணங்களையே பாவிக்கின்றோம் இதன் மூலம் இலைகள் நன்றாக அரைக்கப்படுவதினால் . இவ்வாறு பெறப்படும் ஜூஸில் அதிகளவு நஞ்சு பதார்த்தங்கள் இருக்கும் (toxic dose).
2. மேலும் சிலர் நினைப்பார்கள் இலையில் இருந்து பெறப்படும் ஜூ ஸ் இயற்கையானது தானே. எனவே நாம் எவ்வித பிரச்சினையும் இன்றி வேண்டிய அளவில் பாவிக்கலாம் என்று. அக்கருத்து மிக தவறானது. இதன் காரணமாகவே எம் முன்னோர்கள் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் போன்றவற்றில் பல்வேறு பட்ட மருந்து அளவுகளை உருவாக்கினர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதே உண்மை யாகும்.
3. வைத்தியர்கள் இயற்கை வைத்தியத்தில் மருந்துகளை பரிந்துரைக்கும் பொழுது கட்டாயம் உணவு கட்டுப்பாடுகள் செய்வார்கள் . அதாவது சில மருந்துகளை உணவுடன் எடுக்க சொல்வார்கள். வேறு சில மருந்துகளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவ்வாறு சொல்வதன் நோக்கம் குறிப்பிட்ட மருந்துகளின் அகதுறிஞ்சலை கட்டுப்படுத்தல் ஆகும். பொதுவாக மருந்துகள் மற்றும் ஏனைய நஞ்சு பதார்த்தங்கள் வெறும் வயிற்றில் அதாவது உணவுகால்வாயில் வேறு உணவுகள் இல்லாத பொழுது கூடுதலான அளவில் உறிச்சப்படும்.

                                                                               முற்றும்

HP PNG

 

பகிடிவதை ஒழிப்பு சாத்தியமானதா?

யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பாலியல் சார்ந்த பகிடிவதைகள் சம்பந்தமான தகவல்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்ததினை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவர்களின் கோபக்கனல்களினை முகநூல் பதிவுகளில் அவதானிக்க கூடியதாக இருந்தது. பலரும் பகிடிவதையினை மேற்கொண்ட மாணவர்களினை கீழ்தர மான வார்த்தைகளினால் திட்டி தங்கள் கோபத்தினை அடக்கிக் கொண்டார்கள். இந்நிலையில் பலரும் மறந்துவிட்ட ஓர் விடயம் தான் ஏன் இந்த பகிடிவதையினை இவ்வளவு காலமாக ஒழிக்க முடியாது உள்ளது என்பதே.

stop raggingக்கான பட முடிவுகள்

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி தற்கொலை செய்ய முயன்றதன் மூலம் அந்த பிரச்சனைக்கு தீர்வொன்றினை காண விரும்பினார். அதாவது ஒரு விதத்தில் அவர் அந்த பிரச்சனையில் நிரந்தரமாக விடுபட முயன்றார். ஆனால் அவரது அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறே பகிடிவதை எந்த வடிவில் மேற்கொள்ளப்படடாலும் ஏற்றுக்கொள்ள படமுடியாததே. ஏன் அந்த மாணவி குறித்த மாணவர்களுக்கு எதிராக பல்கலை கழக ரீதியிலும், வெளியில் நீதிமன்றிலும் நடவடிக்கை எடுக்கவில்லை? புதுமுக மாணவிக்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என தெரியாதா? ஏன் பெற்ற பெற்றோர்களுக்கு கூட தெரிவிக்க முயலவில்லை? மூத்த பல்கலைக்கழக மாணவன் தவிர்ந்த வேறு யாராவது இவ்வேறு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறித்த வினாக்களுக்கு விடை தேடும் இடத்து நிச்சயம் ஏன் பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவத்தையினை ஒழிக்க முடியாது உள்ளது என்ற கேள்விக்கான விடை கிடைக்கும்.
தற்போதைய போட்டியான கல்விச்சூழலில், பெற்றோர்கள் மாணவர்களினை பல்கலைக்கழகம் செய்வதற்கு என்று பெருமளவு பணத்தினையும் நேரத்தினையும் செலவழித்து படிப்பிக்கின்றனர், இதற்காக பெற்றோர் அதிகளவில் கஸ்ட்டப்படுகின்றனரே தவிர மாணவர்கள் சொகுசாக தான் வளருகின்றனர். உயர் தரம் வரை பெற்றோரினாலும் ஆசிரியர்களினாலும் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்டு வளர்ந்த மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் தங்களை இவ்வாறான சமூக விரோதிகளிடம் இருந்து பாதுக்காக்க முடியாமல் போகின்றமை மிக்க கவலையானதே.
பெரும்பாலான சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான சம்பவங்களை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பது கூட தெரியாமல் இருப்பது சமூக விரோதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. மேலும் பெரும் பான்மையான புதுமுக மாணவர்கள் தங்களின் மீது திணிக்கப்படும் பகிடிவதையினை ஓர் கல்விசார் நடவடிக்கைகளின் அங்கமாகவே நோக்குகின்றனர் என்பது கவலை தரும் விடயம் ஆகும். மேலும் புதுமுக மாணவராக பகிடிவத்தையினை எதிர்க்கும் மாணவர் அடுத்த வருடம் பகிடி வதையினை ஆதரித்து அதிலும் ஈடுபடுவர்.
சிங்கள பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் பாடசாலைக் கல்வியின் பொழுது “இது எங்கள் நாடு”, “சட்டம் எங்களை பாதுகாக்கவே”, “இது எங்கள் நாட்டின் சட்டம்” போன்ற கருத்துக்கள் ஊட்டப்படுவதினால் அவர்களில் பெரும் பான்மையினர் பல்கலை கழகத்தில் ஏதாவது ஓர் சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக பொலிசாரினை நாடுவர். ஆனால் தமிழ் பிரதேசங்களை பொறுத்த மட்டில் நிலைமை வேறு போலீஸ் நிலையம் செல்வதினையே கௌரவ குறைவாக கருதுவோர் பலர். மேலும் பாதிக்கப்பட்ட நபர் பெண் ஒருவர் எனில் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதன் காரணமாகத்தான் பாலியல் துஸ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றினை சட்டங்கள் இருந்தும் முற்று முழுதாக ஒழிக்க முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் மாணவர் ஒன்றியங்கள், சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் மறைமுகமாக பகிடிவதையினை ஆதரிப்பதுவும் அவர்களே அனுசரணை வழங்குவதும் கவலை தரும் விடயங்கள் ஆகும்.
இவ்வாறு பல்வேறு பட்ட காரணங்களினால் பகிடிவதையினை முற்றுமுழுதாக ஒழிக்க முடியாமல் உள்ளது.

                                                                         முற்றும்

உயிர்பலி எடுத்த TAILGATING விபத்து

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கார் விபத்தின் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனத்தினுள் உள்நுழைந்தமையே அதிகளவான உயிர் சேதம் ஏற்பட காரணமாய் அமைந்தது. மேலும் விபத்துக்குள்ளான சிறிய வகையான காரில் உயிர் காக்கும் பலூன் இருக்கவில்லை அத்துடன் காரில் பயணித்த சிறுவர்களும் சீற் பெல்ட் அணிந்திருக்கவில்லை இதனாலும் உயிரிழப்புக்கான சாத்தியம் அதிகரித்தது. இவ்வாறு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் அல்லது குறைந்த வேகத்தில் பயணித்து கொண்டிருக்கும் உயரம் கூடிய வாகனம் ஒன்றின் பின்/முன் பகுதியில் உயரம் குறைந்த வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுவதினால் ஏற்படும் விபத்து tailgating என்று அழைக்கப்படும். இவ்வகையான விபத்துக்கள் பொதுவாக உயிர் இழப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. ஏனெனில் இங்கு பின்/முன் புறமாக மோதும் பொழுது உயரம் குறைந்த வாகனத்தில் அல்லது மோட்டார் சைக்கிள் உள்ளவர்களின் தலை, கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் அதிகளவு விசை நேரடியாக தாக்குவதினால் உள் அவயவங்களில் ஏற்படும் பாரிய காயங்களே காரணமாகும்.

(இவ்வாறான ஓர் விபத்தில் மரணித்தவரின் காயங்கள் – கோப்பு படங்கள்)

இவ்வகையான விபத்துக்கள் ஏற்படுவதினை தடுக்கும் அல்லது குறைக்கும் முகமாக பின்வரும் பாதுகாப்பு முறைமைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1. உயரமான வாகனங்களின் பின்புறத்தில் சிறிய உயரம் குறைந்த வாகனங்கள் உள் நுழையாத வாறு இரும்பு கேடர்கள் மற்றும் மர பலகைகள் மூலம் ஓர் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும்.wp-15803036192077022428843434983640.jpg
2. வாகனம் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது முழு நீளத்திற்கும் ஒளிரும் பட்டி இயங்கு நிலையில் இருக்கும்
3. வாகனம் பழுதடைந்த நிலையில் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது பல மீற்றர் தூரத்திலேயே முக்கோண வடிவிலான எச்சரிக்கை குறியீட்டின் இனை வீதியில் நிறுத்தி வைப்பார்கள். இது இரவில் மினுமினுக்கும் தன்மை உடையதால் மற்றைய வாகன சாரதிகள் நிலைமையினை இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர்.

triangle danger sign vehicle accidentக்கான பட முடிவுகள்

மேலும் இவ்வகையான விபத்துக்கள் வீதிகளில் அசையும் வாகனங்களில் பின்வரும் சந்தர்ப்பங்களில் நடைபெறலாம்
1. ஆகக்குறைந்த தூரத்தினை (safe distance) பேணாது வாகனங்கள் பயணிக்கும் பொழுது. பயணிக்கும் வாகனம் ஒன்று விபத்தில்லாத வகையில் நிறுத்த தேவையான தூரமே safe distance எனப்படும். பின்னே செல்லும் வாகனம் வேகமாக செல்லும் பொழுது அல்லது முன்னே செல்லும் வாகனம் தனது வேகத்தினை திடீரென்று குறைக்கும் பொழுது இவ்வகையான விபத்து ஏற்படலாம் . safe distance தூரமானது வாகனத்தின் வேகம், வாகனத்தின் வகை, பிரேக் தொழில்பாட்டு நிலைமை, றோட்டின் தன்மை என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும்
2. மேலும் பனி, மழை போன்ற காலநிலை நிலவும் பிரதேசங்களில் இவ்வகையான விபத்துக்கள் நடைபெறும்.
3. மோட்டோர் சைக்கிள்கள் மற்றும் கண்டெய்னர் போன்ற பாரிய வாகனங்களுக்கு இத்தூரம் ஆனது எதிர்பார்ப்பதினை விட அதிகமாக இருக்கும்.

4. எதிரே வரும் உயரம் குறைந்த வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து மோதும் பொழுது

மேலும் சிறிய வகையான கார்களில் (பட்ஜெட் கார்) உயிர் காக்கும் பலூன் போன்றவை பல சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.                                                                                                                                   முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

மாணவர்கள் வைத்தியசாலையில் துஸ்பிரயோகமா?

இவ்வாண்டு தொடங்கியது முதல் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் தொடங்கிவிட்டன. மாணவ, மாணவிகள் தங்களின் உடற் தகுதி பரிசோதனைக்காக அருகில் உள்ள அரச வைத்திய சாலைகளை நாளாந்தம் நாடுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஆசிரியர்களின் துணை இன்றி வருகின்றனர். மாணவர்கள் இவ்வாறான உடற் தகுதி பரிசோதனைகள் செய்யப்படும் பொழுது சில சந்தர்ப்பங்களில் துஸ்பிரயோகம் ஆகும் நிலையும் ஏற்படுகின்றது.  இது சம்பந்தமாக மாணவர்கள் பின்னரும் விடயங்களினை அறிந்திருத்தல் நல்லது. சாதாரண பொதுமக்களில் பலருக்கு வைத்தியர்கள் தவறு செய்ய மாடடார்கள் என்ற அதீத நம்பிக்கையும், வைத்திய பரிசாதனைகள் பற்றிய அடிப்படை அறிவு இன்மையுமே இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற காரணமாக அமைந்து விடுகின்றன.

THE PROBLEM

வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் பொழுது பொதுவாக ஆண் நோயாளியாயின் ஆண் உதவியாளர் (Chaperone) ஒருவரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளர் ஒருவரும் துணை இருத்தல் வேண்டும். இங்கு உதவியாளர் என்பவர் பொதுவாக வைத்தியசாலை ஊழியர் ஒருவராக இருப்பார் அவ்வாறு இல்லாத பட்ஷத்தில் நோயாளியுடன் கூட வருபவர் வைத்தியரின் அனுமதியுடனும் நோயாளியின் அனுமதியுடனும் உதவியாளராக செயற்படலாம்.

அந்தரங்கமான வைத்திய பரிசோதனைகளை (intimate medical examinations) உதாரணமாக இனப்பெருக்க உறுப்புக்களை பரிசோதித்தல் மற்றும் மார்பகங்களை பரிசோதித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும்பொழுது ஆண் நோயாளி ஆயின் ஆண் உதவியாளரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளரும் கூட இருத்தல் கட்டாயமானதாகும். மேலும் இவ்வாறான பரிசோதனைகள் ஓர் மறைவான இடத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் வேறு வைத்திய சாலை ஊழியர்கள் பிரசன்னமாயிருப்பின் அவர்களை அப்பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூற நோயாளிக்கு முழு உரிமையும் உண்டு. நோயாளி அவ்வாறு கூறுவாராயின் வைத்தியர்கள் அக்கூற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிலவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னர் நோயாளிகள் குறித்த வைத்தியருடன் எவ்வாறான சோதனைகளை எவ்வாறு மேற்கொள்ளுவீர்கள் என கேட்டறிந்து கொள்ள முடியும். அவ்வாறு நோயாளி கேட்கும் பொழுது வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும். அண்மையில் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கட்டு ஒன்றுடன் வைத்திய பரிசோதனைக்கு சென்ற பொழுது வைத்தியர் போதிய விளக்கங்கள் கொடுக்காமல் அவரின் மார்பங்களை பரிசோதனை செய்து பெரும் சர்ச்சையில் மாட்டினார். உண்மையில் மருத்துவ ரீதியாக அவ்வைத்தியர் மார்பில் ஏதாவது கட்டி இருக்கின்றதா எனவும், அது கழுத்து பகுதிக்கு பரவியதா எனவும் அறியவே அப்பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நோயாளிக்கு வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.

சாதாரண வைத்திய பரிசோதனைகளை விட சட்ட வைத்திய பரிசோதனைகள் (Medico – legal examination) மேற்கொள்ளப்படும் பொழுது போலீசாரே, இராணுவத்தினரோ அல்லது சிறைக்காவலரோ சோதனை மேற்கொள்ளப்படும் நபரின் அருகில் இருக்க அனுமதிப்பதில்லை.

இது தவிர வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினை நோயாளிக்கு கொடுப்பதுவும், தொழில் முறையற்ற ரீதியில் உரையாடல்களை மேற்கொள்ள முனைவதும் தொழில்முறை துஸ்பிரயோகமே.

வைத்தியசாலை தவிர வைத்தியரின் விடுதி, வீதியோரங்கள், வைத்தியரின் வாகனம் அல்லது வீடு அல்லது போலீசாரின் வாகனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகள் மிகவும் சர்ச்சைக்கு உரியவை. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

                                                                            முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

தொப்புள் கொடி-உயிரை பறிக்குமா?

தமிழரின் வாழ்வியலில் தொப்புள் கொடி என்பது முக்கியமானது. நாம் பிரிக்க முடியாத உறவுகளை மேற்கோள் காட்டிட “தொப்புள் கொடி ” உறவு என்ற சொற் பதத்தினை பாவித்து வருகின்றோம். பலர் தொப்புள் கொடி என்ற சொற்பதத்திற்கு பதிலாக “நச்சு கொடி” என்ற சொற்பதத்தினை பாவிப்பதும் உண்டு. ஆனால் கருத்தியல் ரீதியில் அது பொருத்தமற்றது. பலருக்கு இந்த தொப்புள் கொடியானது தாயில் இருந்து அவளது கருப்பையில் வளரும் கருவிற்கு அதாவது குழந்தையிற்கு தேவையான உணவு, ஓட்ஸிசன் போன்றவற்றினை வழங்குகின்றது. எம்மில் பலருக்கு இவ்வாறு ஓர் கருவிற்கு உயிர் வழங்கும் தொப்புள் கொடியானது உயிர் இழப்பினை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தும் என்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தும். இவ்வாறு சிசுவிற்கு உயிர் ஆபத்தினைஉண்டு பண்ணும் சந்தர்ப்பங்கள் பற்றி பார்ப்போம்.
1. கழுத்தினை சுற்றி இறுக்கிய நிலை (Cord around the neck)
சில சந்தர்ப்பங்களில் தொப்புள் கொடியானது சிசுவின் கழுத்தினை சுற்றி காணப்படும். ஆனால் இவ்வாறு காணப்படுவதனால் பொதுவாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. தொப்புள் கொடியானது நீளத்தில் சிறிதாக இருந்து பிரசவம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் குழந்தையிற்கு வழங்கப்படும் இரத்தத்தின் அளவு சடுதியாக குறைவடையும் இதன் காரணமாக குழந்தையின் இருதய துடிப்பு குறைவடைந்து இறப்பு ஏற்படலாம். இவ்வாறு சிசு மரணம் ஒன்று ஏற்படும் பொழுது உரிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே சிசுவின் மரணத்திற்கான காரணத்தினை கூறமுடியும். வெறுமனே தொப்புள் கொடியானது கழுத்தினை சுற்றி இருந்தால் இறப்பு ஏற்பட்டது என்று யாரவது கூறினால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும்.

cord around neck க்கான பட முடிவு

சில சந்தர்ப்பத்தில் தொப்புள் கொடியானது அதிகமாக முறுக்குப்பட குழந்தைக்கு செல்லும் இரத்தத்தின்அளவு குறைவடையும் இதன் காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி குறைந்ததாக இருக்கும். அதனை கீழ் உள்ள படம் விபரிக்கின்றது

cord around neck க்கான பட முடிவு

2. தொப்புள் கொடியில் ஏற்படும் முடிச்சுகள் (knots)
சிசுவின் வளர்ச்சியின் பொழுது சிசுவின் அசைவின் காரணமாக தொப்புள் கொடியில் முடிச்சுகள் ஏற்படும். இந்த முடிச்சுகள் உண்மையான முடிச்சுகளாகவோ (True knots) அல்லது சாதாரண மடிப்புகளாவோ (false knots) இருக்கலாம். இவ்வாறு முடிச்சுகள் இருந்தால் மட்டும் இறப்பு ஏற்பட்டு விடாது முடிச்சில் ஏற்படும் இறுக்கம் காரணமாக குழந்தைக்கான இரத்த ஓட்டம் தடைப்படும் பொழுதே இறப்பு ஏற்படும். அதாவது அரிதான ஓர் சந்தர்ப்பத்திலேயே இவ்வேறு நடைபெறும். கீழே உள்ள படமானது தொப்புள் கொடியில் ஏற்படும் உண்மையான முடிச்சுகளையும் மடிப்புகளையும் காட்டுகின்றது.

tyu

                                                                     முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

பால்மா ஆபத்தானதா?

இயற்கையில் இருக்கும் பூரண உணவுகளில் ஒன்று பால் ஆகும். அண்மைக்காலத்தில் பலரின் மனதினை குடையும் கேள்வி நாம் குடிக்கும் பால்மா வகைகளினால் உடலுக்கு தீங்கு விளையாதா? என்பதே மறுபுறம் ஏன் இப்பொழுது இறக்குமதியாகும் பால்மா வகைகள் நஞ்சு என்று கூக்குரலிடுகின்றனர்? இவற்றினை அலசி ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

வர்த்தக நோக்கத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் பொழுது பின்வரும் இரசாயனப்பொருட்கள் பாலில் விரும்பியோ விரும்பாமலோ கலபடுகின்றன. அவற்றினை ஒவ்வொன்றாக பார்ப்போம்

  1. நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics)

மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு நோய்கள் ஏற்படும் பொழுது மனிதர்களுக்கு பாவிக்கும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளே பெரும்பாலும் பாவிக்கப்படும். உதாரணமாக விலங்குகளுக்கு எரித்ரோமைசின், டெட்ராசைக்ளின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பல்வேறு வகையான நுண்ணுயிர் கொல்லிகள் பாவிக்கப்படும் பொழுது அவை பாலின் மூலம் வெளியேற்றப்படும். இதன் மூலம் அவை மனிதனை அடையும். கீழ் வரும் அட்டவனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மனிதர் அருந்தும் பாலில் இருக்க வேண்டிய நுண்ணுயிர் கொல்லிகளின் அதிகூடிய அளவினை காட்டுகின்றது

  1. ஓட்டுண்ணி கொல்லிகள் (PARASITICIDE DRUGS)

விலங்குகளில் பல்வேறுபட்ட ஓட்டுண்ணி புழுக்கள் (flukes, tapeworms, round worms) இருப்பதன் காரணமாக, அவற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கால்நடைகளுக்கு பலவிதமான Parasiticide மருந்துகள் வழங்கப்படும். உதாரணமாக பின்வரும் மருந்துகள் oxylosanide, closantel, albendazole and rafoxanide வழங்கப்படும். இதில் நாம் சாதாரணமாக பாவிக்கும் பூச்சி குளிசையான albendazole உள்ளடக்கம், இதன் விளைபொருட்கள் (albendazole sulfoxide, albendazole sulfone and albendazole 2-amino sulfone) பாலின் ஊடாக மனிதனை அடையும் பொழுது அவை மனிதனின் கலத்தில் உள்ள நிறமூர்த்தத்தில் மாற்றங்களினை (mutagenic ) உண்டு பண்ணும்.இதன் காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் அவற்றின் அளவினை வரையறுத்துள்ளன. (maximum residue limit for total albendazole residues of 100 ng/ ml). கீழ் வரும் அட்டவனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மனிதர் அருந்தும் பாலில் இருக்க வேண்டிய பல்வேறுபட்ட தீங்கு பதார்த்தங்களின் அதிகூடிய அளவினை காட்டுகின்றது

  1. ஹோர்மோன்கள்

பால் பெறுவதற்காக பல்வேறுபட்ட மிருகங்களினை வர்த்தக ரீதியில் வளர்க்கும் பொழுது அவற்றுக்கு பல்வேறுவகையான ஹோர்மோன்கள் கொடுக்கப்படும். அவை முழுமையாகவோ பகுதியாகவோ பாலின் ஊடாக வெளியேறும். முக்கியமாக இந்த ஹோர்மோன்கள் கொழுப்பில் அதிகம் கறியும் தன்மை உள்ளதால் பாலில் அதிகமாக இருக்கும் உதாரணமாக Bovine Growth Hormone (BGH) மற்றும் ஸ்டிரொயிட் வகையான ஹோர்மோன். இந்த ஹோர்மோன்கள் பால் பதப்படுத்தல் முறையின் பொழுது மாற்றமடையாது மனித உடலினை அவ்வாறே சென்றடையும் (Food processing, such as heating or churning, appears to have no effect on the hormones in milk and dairy products although cheese ripening does).

  1. பூச்சி கொல்லிகளும் பீடை நாசினிகளும்

விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படும் உணவில் நிச்சயம் பூச்சி கொல்லிகளும் பீடை நாசினிகளும் காணப்படும். ஏன்னெனில் அவற்றினை பாவித்தே அவற்றுக்கான உணவுகள் தாயார்செய்யப்படுகின்றன. பூச்சி கொல்லிகளும் பீடை நாசினிகளும் இரசாயன ரீதியில் பெருமளவில் மாற்றம் அடையாது பாலின் மூலம் மனிதனை சென்றடையும் உதாரணமாக Polychlorinated biphenyls (PCBs), Dioxins போன்றவை அதிகளவில் பாலின் மூலம் மனிதனை அடையும்.

Bio-concentration of residual pesticides in food chain.

  1. Mycotoxins

இவை பங்கசுக்கள் உற்பத்திசெய்யும் நச்சு பதார்த்தங்கள் ஆகும். இவ்வாறு பங்கசு பாதித்த உணவுகளை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கும் பொழுது முக்கியமாக Aflatoxin B என்ற என்ற பங்கசு பாத்தித்த உணவு பொருட்களை கொடுக்கும் பொழுது பாலில் அதன் விளைபொருளாகிய Aflatoxin M1 (AFM1) என்ற புற்று நோயினை உருவாகும் பொருள் (AFB1 as primary and AFM1 as secondary groups of carcinogenic compounds) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  1. பார உலோகங்கள்

பார உலோகங்களான ஈயம், செப்பு, கட்மியம் போன்றன உணவு சங்கிலி வழியே திரண்டு பசுக்களினை அடையும் அதன் பின்னர் பால், இறைச்சி மூலம் மனிதனை அடைகின்றது. இலங்கையில் மாகாவலி வலயத்திலும் வடமத்திய மாகாணத்திலும் உள்ள நீரில் அதிக அளவில் மேற்குறித்த பார உலோகங்கள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே அங்கு வசிக்கும் மக்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று பரவலாக நம்பப்படுகின்றது.

என்னதான் தீர்வு?

இவ்வாறு பல்வேறு பட்ட தீங்கு விளைவிக்கும் பாதார்த்தங்கள் பால் மூலம் மனிதனை அடைகின்றது. இவ்வாறு அடையும் பதார்த்தங்களில் பல பால் பதப்படுத்தும் செயன்முறையின் பொழுது அழிவடையாது எனவே திரவ பால் ஆக பாலை குடித்தால் என்ன பால்மாவாக குடித்தால் என்ன பெரிதாக வித்தியாசம் இல்லை. சிலர் கேட்கலாம் இலங்கையில் தான் திரவ பால் உற்பத்தியாகின்றது எனவே மேற்படி தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் பாலில் இல்லாமல் இருக்கும் என்று, அக்கருத்து மிக பிழையானது ஏனெனில் இலங்கையில் பீடை கொல்லிகள், களைநாசினிகள், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் போன்றவற்றை விவசாயத்திலும் கால்நடைகளின் வளர்ச்சிக்கும் பாவிப்பதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. இதன் காரணமாகவும் போதிய அறிவின்மை காரணமாகவும் விவசாயிகள் மேற்குறியவற்றினை அளவுக்கு அதிகமாக பாவிக்கின்றனர். அதன் விளைவாகவே வடமத்திய மாகாணத்திலும், மகாவலி அபிவிருத்தி பிரதேசத்திலும் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்.

உலக சுகாதார நிறுவனம், உலக உணவு நிறுவனம் போன்றன பாலில் இருக்க வேண்டிய ஆகக்கூடிய அளவு பதார்த்தங்களினை பட்டியலிட்டுள்ளன மேலும் பல நாடுகள் தங்களுக்கென தனியான வரையறைகளை கொண்டுள்ளன. எனவே உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்களை குறித்த காலஇடைவெளிகளில் பரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவினை பரிசோதிக்க வேண்டும் (hazard analysis critical control points – HACCP).

நாம் உள்ளேடுக்கும் மருந்து அல்லது நஞ்சானது எமது உடலில் குறித்த அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுதே அதாவது இரத்தத்தில் அதன் செறிவு குறித்த அளவினை தாண்டும் பொழுதே நாம் நஞ்சாதலுக்கு உள்ளவோம். மேலும் ஒரு மனிதனை கொல்ல தேவையான நஞ்சின் அல்லது மருந்தின் அளவு Lethal Dose (LD) என்று அழைக்கப்படும். இது மருந்து அல்லது நஞ்சிற்கு ஏற்றவாறு வேறுபடும். இந்த அளவானது மருந்து அல்லது நஞ்சினை உள்ளெடுக்கும் மனிதனின் உடல் நிறை, வேறு நோய்கள் உள்ள நிலமை , குறிப்பாக சிறுநீரக மற்றும் ஈரல் போன்றவற்றின் தொழில் பாடுகள் பாதிக்கபட்டுள்ளமை போன்றவற்றில் தங்கி உள்ளது. தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவு குறித்த மட்டத்தினை விட குறைவாக இருந்தால், அவற்றினால் மனித உடலில் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தினை மேற்கொள்ள முடியாது. இலங்கையில் இவ்வாறு பாலில் காணப்படும் மேற்குறித்த பதார்த்தங்களினை அளவிடும் முறை இன்னும் பெரிய அளவில் விருத்தி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpgimg-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpgimg-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

ஆடைகள் களைந்து சுகம் பெறுவோம்!

அவள் 42 வயதான இல்லத்தரிசி, கணவன் பல்வேறுபட்ட கூலி வேலைகளை செய்பவர். இவர்கள் தங்கள் மேலதிக வருமானத்திற்காக அவர்களின் வீட்டில் ஏறத்தாழ 30 கோழிகளை வளர்த்து வந்தனர். அவள் கடந்த மூன்று நாட்களாக கடுமையான காச்சல், தலைவலி போன்றவற்றினால் அவதிப்பட்ட நிலையில் பிரதேச வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்தாள். அவள் மரணமடைந்ததிற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் அவளது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது தான் சில அதிர்ச்சிகரமான விடயங்கள் தெரியவந்தன, அவையாவன அவளின் மார்பு பகுதியில் சிறிய எரிகாயம் போன்ற ஓர் காயம் காணப்பட்டது. இதனை வைத்தியர்கள்  Eschar என்பர். இது உண்ணி கடித்த இடமே ஆகும். உண்மையில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி போன்ற விலங்குகளில், சிறு புதர் பற்றைகளில்  உள்ள Leptotombidium mite larvae (chiggers) என்ற  உண்ணி கடிக்கும் பொழுது அதனுடாக Orientia tsutsugamushi என்ற நுண்ணங்கி மனித உடலில் உட்செலுத்தப்படும். மேலும் உடற்கூராய்வின் பொழுது அவளது நுரையீரல் செயலிழந்தமையும் (ARDS) இருதயம் கிருமித்தாக்கத்திற்கு (Myocarditis) உட்பட்டமையுமே காரணம் என அறிந்து கொள்ள முடிந்தது.

wp-15793696989568824193884100597914.jpg
பலருக்கு இந்த உண்ணி காச்சல் காரணமாக இறப்பு ஏற்படும் என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கும்.  பொதுவாக இந்த உண்ணிகள் மனிதரில் கடிக்கும் பொழுது வலி ஏற்படுவதில்லை அதனால் அவை கடித்தமை நோயாளிக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலும் இந்த உண்ணிகள் மார்பகங்களின் கீழ்ப்புறம், இடுக்கு பகுதி, பெண் உறுப்பு பகுதிகள், ஆணின் விதைப்பை மற்றும் அக்குள் போன்றவற்றில் கடிப்பதினால் பெரும்பாலான நோயாளிகள் அவற்றினை அவதானிப்பதில்லை.

இந்த உண்ணி காச்சல் ஆரம்ப கட்டத்தில் பொதுவாக ஏனைய வகை  காச்சல் போன்று வருவதினால் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியாது, ஆனால் மேற்குறித்த காயம் (Eschar) இருப்பதனை கொண்டு வைத்தியர்கள் இலகுவாக இந்த நோயினை அடையாளம் கண்டு கொள்வர்.  மேலும் தற்பொழுது பெரும்பாலான  வைத்தியர்கள் காச்சலுடன் வரும் நோயாளிகளை பூரணமாக உடற் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு நோயாளி மீது அக்கறையின்மை மற்றும்  நேரமின்மை போன்றனவாகும். சில சந்தர்ப்பங்களில் ஆண் வைத்தியர்கள் பெண் நோயாளினை உடற்பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவதில்லை அவ்வாறே சில சந்தர்ப்பத்தில் நோயாளியும் விரும்புவதில்லை. மறுதலையாக பெண் வைத்தியர் பரிசோதிப்பதினை ஆண் நோயாளிகளும் சில சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை.  இவ்வாறான காரணங்களினால் உண்ணி காச்சல் ஆரம்ப நிலையில் அடையாளம் காணப்படாமல் விடுபடுவதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. சிலர் கருதலாம் இரத்த பரிசோதனை மூலம் இலகுவாக ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கலாம் தானே என்று, இந்த உண்ணி காச்சலினை ஆரம்பத்தில் கண்டு பிடிக்க உதவும் உரிய பரிசோதனைகள் இலங்கையில் இல்லை என்பதே உண்மை ஆகும்.

யுவதிகள் உரிழந்தமை ஏன்?

அண்மையில் அஸர்பைஜானில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23, 25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே என இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் கீழ் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் மூன்று மாணவிகளும் மயக்கமுற்றுள்ளனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உ யிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேற்குறித்த மாணவிகள் மூவரும் தீக்காயங்களினால் நேரிடையாக பாதிக்க படாத பொழுதும் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதே பலரின் கேள்வியாகும்.

sister-1சாதாரணமாக தீ விபத்து ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுக்கு உட்படாத சந்தர்ப்பத்திலும் இறப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் தாக்கம் ஆகும். ஓர் கட்டிடம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் உள்ள பிளாஸ்டிக்கினால், இறப்பரினால் மற்றும் வேறு பல சேதன சேர்வைகளினால்  ஆன பொருட்கள் பொருட்கள் பற்றி எரியும் இதன் பொழுது பின்வரும் நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் நைட்ரிக் ஒக்சைட், சல்பர் ஒக்சைட், போஸ்யீன், கார்பன் மோனோக்சைட், சயனைட்  மற்றும் பல்வேறுபட்ட சேதன சேர்வைகளின் வாயுக்கள்.

unmj

இந்த வாயுக்கள் மிக்க நச்சுத்தன்மையாக இருப்பதோடு மனிதன் இவற்றினை சுவாசிக்கும் பொழுது இவை நுரையீரலினால் ஊடாக இரத்தத்தில் கலக்கின்றது அத்துடன் ஒருசில நிமிடங்களிலேயே சுவாசித்த மனிதனை அறிவற்ற நிலைக்கு கொண்டுவந்து விடும். அதன் பின்னர் அம்மனிதனினால் தீ விபத்து நடைபெறும் பிரதேசத்தில் இருந்து வெளியேறமுடியாது இறப்பினை தழுவ நேரிடும். முக்கியமாக இங்கு கார்பன் மோனோக்சைட், சயனைட் போன்றவை மிகமிக நச்சுத்த தன்மையானவை. அத்துடன் அவை நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட பலமடங்கு விருப்பத்துடன் (Affinity) இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும். இதன் மூலம் கல நிலையில் சுவாச செயற்பாடு தடைப்பட்டு ஒருசில நிமிடங்களில் இறப்பு நேரிடும். மேலும் இவ்வாயுக்கள் பொதுவாக மணமற்றவை, இதன் காரணமாக மனிதர்கள் இவ்வாயுக்கள் வெளிவருவதினை இனம் கண்டுகொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு தீ விபத்து சம்பவத்தில் இவ்வாறு தான் சில மனிதர்கள் எவ்விதமான தீக்காயங்களுக்கும் உட்படாமல் பரிதாபகரமாக இறக்கின்றனர். இதன்காரணமாகவே தீயணைப்பு வீரர்கள் விசேடமாக வடிவமைக்கப்பட்ட முக மூடிகளினை பயன்படுத்துகின்றனர்.

                                                                     முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg