சிறுமியை பதம் பார்த்த கிளிப்

இன்றைய உலகில் பெண்கள் பல்வேறுபட்ட அழகு சாதனப்பொருட்களை தமது அழகினை மெருகூட்டும் முகமாக பாவிக்கின்றனர். பல நிறுவனங்கள் பல்வேறு விதமான பொருட்களை இதன் காரணமாக உற்பத்தி செய்கின்றன. மேலும் பல்வேறுபட்ட போலி உற்பத்திகளும் சந்தையில் உலாவுகின்றன. இவற்றில் முக்கியமாக  பல்வேறு வகையான கொண்டைக்கு மாட்டும் கிளிப்புகள் (Hair clips) உள்ளடங்கின்றன.

அவள் ஏழு வயதான சிறுமி, தாயார் வேலை முடித்து வீடு வருவதினை கண்டதும் ஆசையோடு ஓடிச்சென்று தாயாரினை கட்டி அணைக்கின்றாள். தாயாரும் அவளினை தூக்கி அனைக்கின்றாள். சில வினாடிகள் தான் குழந்தை வீறிட்டு கத்துகின்றது. தாயார் பார்க்கும் பொழுது அவளது கொண்டையில் போடப்பட்டிருந்த கிளிப் ஆனது குழந்தையின் கழுத்து பகுதியில் முழுவதுமாக குத்தி உட்சென்று இருந்தது.

தாயாருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, குழந்தையினை அசையாமல் வைத்திருந்தவாறு அவசர அம்புலன்ஸ் சேவையினை அழைத்து வைத்தியசாலைக்கு வந்தாள். அதிஸ்டவசமாக கழுத்தில் உள்ள பாரிய இரத்த குழாய்கள், களம், சுவாச குழாய் போன்றவற்றிற்கு எவ்விதமான காயமும் ஏற்படவில்லை. வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் உள்ளே இருந்த கிளிப்பினை அகற்றி எடுத்தனர்.

மேலே படத்தில் உள்ள கிளிப்பே இவ்வாறு ஆபத்தினை ஏற்படுத்தியது. அதன் நுனிப்பகுதியினை உற்று நோக்குவோமானால் அது கூர்மையானதாக உள்ளது. மேலும் அதன் விளிம்புகள் சொர சொரப்பாக (serrated) உள்ளது இதன் காரணமாக இவ்வகையான கிளிப்புகள் குறைந்த விசையுடன் மிக இலகுவாக எமது தோலினை ஊடுருவி சென்று ஆபத்தினை விளைவிக்கும். எனவே இவ்வாறான கிளிப்புகளுடன் சிறுவர்கள் விளையாடுவது ஆபத்தில் முடியும்.

எமது உடலில் எலும்புக்கு அடுத்து ஊடுருவ அதிக விசை தேவைப்படுவது தோல் ஆகும். இங்குள்ள கிளிப்பின் நுனிப்பகுதி தோலினை இலகுவாக ஊடுருவும் அதன் பின்னர் உள் அங்கங்களினை ஊடுருவுவதற்கு பாரிய விசை தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது

தவறி வீழ்ந்தவனின் கதை

அவனுக்கு பதினேழு வயது. பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கின்றான். குடும்ப வறுமைநிலை காரணமாக இரு வாரங்களுக்கு முன்னரே மேசன் உதவியாளராக கொழும்புக்கு  வேலைக்கு வந்திருந்தான். அன்று காலையில் 6வ வது மாடியில்  அவன் குறுக்கு சுவர்களுக்கான கொங்கிறீட் கற்களை சுமந்து வரும் பொழுதுதான் தவறுதலாக அத்தளத்தில் இருந்த துவாரத்தின் ஊடாக தரையில் வீழ்ந்தான். அவனது சக தொழிலாளர்கள் கீழ் தளத்தினை நோக்கி ஓடினர் ஒருசில வினாடிகள் தான் தண்ணீர் என்று கேட்டு முனகினான். அதன் பின்னர் அசைவொன்றும் இல்லை. மேலதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள்  தொழிலாளரினை நோக்கி சொன்னார்கள் “அவன் இறந்துவிட்டான் நீங்கள் உங்கள் வேலையினை தொடருங்கள்” என்று. அவர்களுக்கும் வேறு வழி இல்லை. சிறிது நேரத்தில் போலீசார் வந்தனர் அவனுடன் ஒரேதளத்தில் வேலை செய்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். உடல் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவனது உடலை அவனது சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அவனது குடும்பத்தினரிடம் காசு வசதி இல்லை. ஏன் அவனது தாய் மற்றும் தந்தை கொழும்பிற்கு வருவதற்கு பணம் கூட இல்லை. அவனது சக தொழிலார்கள் தங்களால் இயன்ற பணத்தினை சேகரித்து உடலை ஊருக்கு அனுப்பினர்.

இன்றைய கால கட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல இளைஞர்களும், மலையகத்தினை சேர்ந்த பலரும்  கொழும்பு போன்ற நகர்ப்புறங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பல மாடி கட்டிட தொகுதிகளை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுவாக மேசன் வேலை, மின்சார வயர்களை மற்றும் நீர்க்குழாய்களை பொருத்தும் வேலை,  டைல் பதிக்கும் வேலை, பெயிண்ட் அடிக்கும் வேலை, அலுமினிய பிட்டிங் வேலை …. போன்ற பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். பலர் சாதாரண கூலி வேலை செய்பவர்களாகவும் ஒருசிலர் மட்டும் தொழில்வாண்மை மிக்க வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பலர் குடும்ப வறுமை காரணமாகவே பாடசாலை படிப்பினை இடையில் விட்டுவிட்டு இவ்வாறான வேளைகளில் பகுதியாகவோ அல்லது முழுநேரமாகவோ ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஒரு தொடர் மாடி அமைக்கும் பொழுது நடைபெறும் பல்வேறு பட்ட வேலைகளும் உப ஒப்பந்ததாரர்கள்  மூலமே நடைபெறும். இவ்வாறே வேலைக்காரர்களும் பல்வேறுபட்ட தரகர்கள் மூலமே சேர்க்கப்படுகின்றனர்.

ஓர் தொடர் மாடித்தொகுதி கட்டிடம் கட்டப்படும் பொழுது லிப்ட் போன்றவற்றினை பொருத்துவதற்காகவும் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும் ஒவ்வொரு தளத்திலும் தரைப்பகுதியில்  பல்வேறுபட்ட அளவுகளில் (floor openings) துவாரங்கள் இருக்கும். தொழிலார்கள் இத்துவாரங்களை ஒவ்வொரு தளங்களிலும் வேலைகளின் பொழுது உருவாகும் பல்வேறுபட்ட கழிவுகள் அடித்தளத்தினை நோக்கி போட பயன்படுத்துவார்கள் , மேலும் இரவு நேரங்களில் பல்வேறு தளங்களில் தங்கிநிற்கும்,  மது போதையில் இருக்கும் வேலைக்காரர்கள் வெறுமையான பியர் டின்கள், உணவு பொதிகள் போன்றவற்றினை இவற்றினுடாக வீசுவார்கள். பல சந்தர்ப்பங்களில் போதையில் மூத்திரம் கூட பெய்வார்கள்.

இனி விடயத்திற்கு வருவோம்,   இத்துவாரங்களினால் என்னதான் பிரச்சனை? பொதுவாக பல தொழிலார்கள் இவ்வாறு அமைக்கப்பட்ட துவாரங்கள் ஊடாகவே உயரமான கட்டிடங்களில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளார்கள். முக்கியமாக இத்துவாரங்களை சூழ தற்காலிக தடுப்புக்கள் வேலிகள் அமைக்க வேண்டும் ஆனால் நடைமுறையில் அவ்வாறு அமைக்கப்படுவதில்லை இதன் காரணமாகவே இவ்வாறன அகால மரணங்கள் நிகலுகின்றன. பல விபத்துகள் மதுபோதையில் நிகழுகின்றன. அநேகமாக புதிதாக வேலைக்கு வரும் உயரமான கட்டிடங்களில் வேலைசெய்து அனுபவம் அற்றவர்கள் இரவு வேளைகளில் நடமாடும் பொழுது தவறுதலாக  இந்த துவாரங்கள் ஊடாக தவறி விழுகின்றனர்.

(மேலே உள்ள இரு படங்களும் பாதுகாப்பு அற்ற துவாரத்தினையும், இளைஞன் தவறி விழுந்த இடத்தினையும் காட்டுகின்றன)

இது தவிர சில சந்தர்ப்பங்களில் கொங்கிறீட் தட்டுகள் உடைந்து விழுவதினாலும், தொழிலாளர் வேலை செய்யும் கம்பிகளாலான தட்டுகள் உடைந்து விழுவதினாலும் இறப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு வேலைத்தளங்களில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக காப்புறுதி செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக இறந்த பின்னரோ அல்லது காயப்பட்ட பின்னரோ காப்புறுதிப்பணம் கிடைப்பதில்லை.  தொழிலாளரும் இது பற்றி அலட்டி கொள்வதில்லை. மேலும் தொழிலாளருக்கு உயரமான கட்டிடங்களில் வேலை செய்யும் பொழுது எவ்வாறு விபத்துக்களை தவிர்ப்பது என்பது பற்றி பயிற்சி வழங்கப்படுவதில்லை அத்துடன் உரிய தற்பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படுவதில்லை. தொழிலாளருக்கு தமது உரிமைகள் மற்றும் தொழிலார் சட்டங்கள் போன்றவற்றில் போதிய அறிவு இல்லாதவரை இவ்வாறான சம்பவங்கள் தொடரும்.

சிறுமியும் ஸ்கூட்டியும்

அந்த சிறுமியின் தாய் பிரதேச செயலகம் ஒன்றில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றுகின்றார். தகப்பனார் ஆசிரியர். அன்று காலையிலேயே தகப்பனாரும் மூத்த பிள்ளையான அண்ணனும் பாடசாலை சென்றுவிட்டனர். தாயார் சமையல் வேலை எல்லாவற்றையும் முடித்து விட்டு, அச்சிறுமியை அவளது அப்பம்மா வீட்டில் விடும் நோக்கில் ஸ்கூட்டியில் அழைத்து சென்ற பொழுதுதான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தாயார் ஸ்கூட்டியினை செலுத்தும் பொழுது சிறுமி தாயாரின் கால்களுக்கு இடையில் ஸ்கூட்டியின் முன்புறத்தில் இருந்தவாறு பிரயாணித்தாள் . அவள் சிறிது வேகமாகத் தான் சென்றாள் ஏன்னெனில் அன்று ஒரு முக்கிய கூட்டம் காலையில் இருந்தது. அவர்கள் பிரதான வீதியில் நுழையும் பொழுது ஓர் வாகனம் அதிவேகமாக அவர்களை நோக்கி வந்ததது. தாயார் சடுதியாக பிரேக்கினை போட்டார். வாகனம் மோதவில்லை ஆனால் சிறுமியின் முகம் பலமாக ஸ்குட்டியின் ஹெட் (head) உடன் மோதி சில பற்கள் உடைந்து விழுந்தன கீழ் உதடு கிழிந்து தொங்கியது. மொத்தத்தில் சிறுமியின் முகம் ஒரு கோணலாகியது.

நான் அவளினை பார்வையிடும் பொழுது அவள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். சிறுமியின் ஏக்ஸ்ரே ஆனது அவளது கீழ் தாடை எலும்பு உடைந்து இருந்ததினை வெளிப்படுத்தியது. நல்ல வேலையாக தாயாருக்கு எவ்விதமான காயமும் இல்லை. தாயாரும் சிறுமியின் அருகே அழுதவாறு காணப்பட்டாள்.
இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் அதிகளவான மக்கள் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளினை பாவித்து வருகின்றனர். முக்கியமாக பெண்கள் இதனை விரும்பி பாவிக்கின்றனர் ஏன்னெனில் இலகுவாக ஓடமுடியும். மேலும் ஆண்களும் அதிகளவில் பாவிக்கின்றனர் ஏன்னெனில் இலகுவாக பொருட்களை கொண்டு செல்லலாம். அதாவது கால்கள் இடையேயும், இருக்கையின் கீழேயும் வைக்கலாம். அண்மைக்காலமாக சட்ட வைத்திய அதிகாரி என்ற வகையில் பல சிறுவர்களுக்கு இவ்வாறன வகை காயங்கள் ஏற்படுவதினையும், அவை அதிகரித்து செல்வதினையும் அவதானித்து உள்ளேன். இவ்வாறான காயங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி சிறிது நோக்குவோம்.

நாம் பலரும் சிறுவர்களை மோட்டர் சைக்கிளில் ஏற்றி செல்லும் பொழுது அவர்கள் நித்திரை கொண்டு வீழ்ந்து விடுவார்கள் என்றே பெரும்பாலும் சிந்திப்போம். ஆனால் இங்கு சிறுமிக்கு காயமானது சடுதியான அமர்முடுகல்  (deceleration force)காரணமாகவே ஏற்பட்டது என்பதை சிந்திக்க மறந்து விடுவோம். அதாவது இங்கு ஸ்கூட்டியின் வேகமானது ஒருசில செக்கன்களில் பூச்சிய நிலைக்கு வரும்பொழுது ஸ்கூட்டியின் கால்கள் வைக்கும் இடத்தில் நிக்கும் சிறுவர் முன்னோக்கி அதி விசையுடன் தள்ளப்படுவர் இதன்பொழுது அவர்களின் தலை ஸ்கூட்டியின் ஹெட் பகுதியுடன் பலமாக மோதும். இங்கு சிறுவர்கள் எனப்படும் பொழுது நான் 5 தொடக்கம் 6 வயதுக்கு உட்பட்டவர்களையே குறிப்பிடுகின்றேன் ஏன்னெனில் அவர்களின் உயரம் மிக குறைவானது அத்துடன் அவர்களின் தலைப்பகுதி மட்டுமட்டாக ஸ்கூட்டியின் ஹெட் உயரத்துடன் உடன் நிற்கும், சடுதியான அமர்முடுகளின் பொழுது தலையானது ஸ்கூட்டியின் ஹெட் உடன் மோதும். மேலும் சிறுவர்களின் கைகளில் போதிய பலம் இல்லாததன் காரணமாகவும் சிறுவர்கள் விபத்தினை எதிர்பாக்காததன்( not anticipate) காரணமாகவும் அவர்களின் தலை வேகமாக மோதும். இவ்வகையான விபத்துக்களினை எவ்வாறு குறைக்கலாம்? உண்மையில் சிறுவர்களை ஸ்கூட்டியின் முன்பகுதியில் நின்றவாறு வைத்துக்கொண்டு பிரயாணம் செல்வதினை குறைக்க வேண்டும் மற்றும் வேகத்தினையும் குறைக்க வேண்டும்.

Sketch001

மேலே உள்ள படம் எவ்வாறு அமர்முடுகல் விசையானது ஸ்கூட்டியின் கால் வைக்கும் இடத்தில் (foot rest) நின்றவாறு பிரயாணம் செய்யும் சிறுவர்களை தாக்கி காயத்தினை உண்டாடக்குகின்றது என்பதினை விளக்குகின்றது.

“இளம் கன்று பயம் அறியாது”

செத்தல் மிளகாயில் ஆபத்தா?

அண்மையில்  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் aflatoxin என்ற புற்று நோயினை  உருகவாகும் toxin கண்டறியப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட செத்தல் மிளகாய்  தனியார் களஞ்சியங்களில் இருந்து பாரிய அளவில் அதாவது 20 மெட்ரிக் தொன் என்ற அளவில்  மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது உரிய தரச் சான்றிதழ் வரமுன்னரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுள்ளது .

இந்த செத்தல் மிளகாயில் என்ன பதார்த்தம் உள்ளது? அது ஏவ்வாறான விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்தும்? என்பது பற்றி பார்ப்போம். இவ்வாறு செத்தல் மிளகாயில் இருந்தது aflatoxin என்ற mycotoxin ஆகும். இது பங்கசு (பூஞ்சன) வகையான Aspergillus flavus, Aspergillus parasiticus , Aspergillus nomius போன்றவற்றில் இருந்து இயற்கையாக வெளியே சுரக்கப்படும் பதார்த்தம் ஆகும். இது மற்றைய பங்கசு  வகைகள் மற்றும் நுண்ணுயிரிகள் வளர்வதை தடுக்கும். இதில் aflatoxins, ochratoxins, citrinin, ergot alkaloids, patulin, Fusarium toxins போன்ற பல்வேறு வகைகள் உண்டு. Aflatoxin மட்டும் 18 வகையான உப வகைகள் உண்டு. இதில் aflatoxin b1 என்பதே மிகவும் ஆபத்தானது, இது class 1 என்ற carcinogen  (புற்று நோயினை உருவாக்கும் காரணி )  ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது class 1 என்றால் இந்த பதார்த்தம் அடங்கிய உணவு பொருட்களை உட்கொண்டால் நிச்சயமாக புற்று நோய் உண்டாகும் சாத்தியம் உள்ளது. முக்கியமாக ஈரல் புற்று நோய் உருவாகும். இந்த aflatoxin ஆனது வெப்பத்தினால் அழிவடையாது அதன்காரணமாக சமைத்த பின்னரும் இரசாயன ரீதியில் உயிர்ப்பாக காணப்படும். மேலும் இவ்வாறு aflatoxin இனால் பழுதடைந்த உணவுகளை உட்கொண்ட பசுக்களின் பாலில் aflatoxin b1 இன் பக்க விளைபொருள் ஆகிய  aflatoxin m1 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து aflatoxin எவ்வளவு ஆபத்தானது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.08

முக்கியமாக Aspergillus flavus என்ற பங்கசு தானியங்களான சோளம், கச்சான், அரிசி, மிளகு, செத்தல் மிளகாய் போன்றவற்றில் இயற்கையாக வளரும். முக்கியமாக மேற்குறித்த தானியங்களினை வெப்பமான ஈரலிப்பான இடங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பொழுதும், மழை நாட்களில் அறுவடை செய்யும் பொழுதும்  இந்த பங்கசு தொற்றி கொள்ளும்.

தற்போதைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் கறி மிளகாய்த் தூள் செய்வதில்லை மாறாக கடைகளில் இருந்தே வாங்குகிறோம் இவ்வாறு வாங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வகையான பங்கசு  தொற்றுக்கு உள்ளான செத்தல் மிளகாய்களும் நிச்சயம் அரைக்கபட்டு தூளின் ஊடாக எமது உணவில் சேரும்..

  1. இவ்வகையான தொற்றுதல் அடைந்த உணவுகளை உண்பதினால் என்ன சுகாதார சீர்கேடுகள் உண்டாகும்? Aflatoxin இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உண்டாகும் நிலை  aflatoxicosis என்றழைக்கப்படும். இந்நிலையினால்  ஈரல் புற்று நோய், ஈரல் அழற்சி (cirrhosis and Reye’s syndrome), உணவுகள் சமிபாடு அடையாத்தனமை,  போன்றன ஏற்படும்.
  2. நாம் உண்ணும் உணவில் எந்த எந்த அளவில் aflatoxin இருக்கலாம்? பல்வேறு நாடுகளில் இதன் அளவானது 0-50mg/kg வரை வேறுபடுகின்றன. அமெரிக்காவில் 5mg/kg அளவினை விட அதிகரித்தல் ஆகாது . இலங்கையில் இது 15mg /kg ஆக இருக்கின்றது (Ref: Clarke’s Analytical Forensic Toxicology).
  3. இவ்வாறு இந்த பங்கசு  பாதித்த உணவுகளை அடையாளம் காணுவது? மிளகாயில் கறுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள் , கச்சானில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பருப்புகள், சோளத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி, தேங்காய் கொப்பராவின் பழுதடைந்த  கறுப்பு நிறமாக பகுதி, வெங்காயம் மற்றும் உள்ளியில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி ஆகியன பங்கசினால் பாதிக்கபட்ட பகுதிகள் ஆகும் இவற்றினை மக்கள் உண்பதினை தவிர்ப்பது நல்லது.
  4. எவ்வாறு இந்த பங்கசு தொற்றினை தவிர்ப்பது?நாம் மேற்குறித்த உணவுகளை களஞ்சிய படுத்தும் பொழுது உலர்ந்த, இரலிப்பற்ற இடங்களில் களஞ்சிய படுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லை. எம்மில் எத்தனை பேர் சமைக்கும் பொழுது பங்கசு  தோற்றிய உணவு பகுதிகளை அகற்றி விட்டு சமைக்கின்றோம்  என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதீத மது போதையும் தீடீர் மரணமும்

அண்மையில் இரவில் நடந்த மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவன் அடுத்த நாட்காலை தீடீரென்று மரணத்தினை தழுவிய செய்தி எல்லோருடைய மனதையும் ஒருகணம் பதற வைத்தது. பலருக்கு ஏன் இவ்வாறான தீடீர் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி தெரியாது. இப்பதிவில் அதிகளவு மதுபான பாவனை எவ்வாறு தீடீர் மரணத்திற்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றேன்.

  1. நாம் மதுபானம் அருந்தும் பொழுது அது எமது இரத்தத்தில் எதைல் ஆல்கஹாலின் அளவு படிப்படியாக அதிகரித்து செல்லும். இவ்வாறு செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் அது குறித்த நடத்தை கோலங்களினை மது அருத்துபவரில் ஏற்படுத்தும். உதாரணமாக 50mg/dl என்ற அளவில் உள்ளபொழுது அது மது அருந்துபவரில் அதிகம் கதைக்கும் தன்மை, சுயநிலை மறந்த தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். இவ்வாறே படிப்படியாக அதிகரித்து 250mg/dl என்ற அளவினை அடையும் பொழுது மயக்கம் மற்றும் கோமா நிலை போன்றவற்றினை ஏற்படுத்தும். 300mg/dl என்ற அளவினை தாண்டும் பொழுது அது ஆல்கஹால் நஞ்சு (Acute alcohol intoxication) ஆதலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.
  2. மதுபானமானது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களினை உண்டாக்கும். அவற்றில் முக்கியமானது உணவு விழுங்கும் ஆற்றலினை பாதித்தல் ஆகும். இதன்காரணமாக அதிக மது அருந்திக்கொண்டு உணவு அருந்துபவர்களில் உண்ணும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம் அல்லது வாந்தி எடுக்கும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம். இவ்வாறு புரைக்கேறுவதினால் மது அருந்துபவர் திடீர் மரணம் அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
  3. அருந்தும் மதுவின் அளவினையும் அவர்கள் அதற்கு எடுக்கும் கால இடைவெளியினையும் வைத்து மது அருந்துபவர்களினை அவர்களினை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவர்களின் ஒருவகையினர் தான் Binge drinker (heavy episodic drinker) இவர்கள் யார் என்றால் நாளாந்தம் மது அருந்தாமல் குறித்த சில நாட்களில் மிக அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள். இவர்களை வரைவிலக்கணப்படுத்த பல்வேறு வரைவிலக்கணங்கள் மருத்துவரீதியில் உண்டு. இவர்கள் இவ்வாறு அளவுக்கு அதிகமாக மது அருந்தி சில மணித்தியாலங்களில் அவர்களின் இருதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக (sudden arrhythmic death syndrome (SADS)) மாறும் அதாவது சாதாரண மனிதன் ஒருவனுக்கு சராசரியாக நிமிடத்திற்கு 72 துடிப்புக்கள் என்று காணப்பட்ட இருதய துடிப்பு அதிகரித்து அதன் ரிதம் மாற்றமடையும் இதனால் மது அருந்தியவருக்கு மயக்கம், தலைச்சுற்று போன்றன ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படலாம்.
  4. மேலும் அதீத போதையில் மது அருந்தியவர் தன்னிலை மறந்து நீண்டநேரம் மனித உடலின் நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழ் உள்ளவாறும் கால்ப்பகுதிமேலே உள்ளவாறும் தூங்குவார்கள் அதாவது கட்டில் அல்லது கதிரையில் இருந்து நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழே விழுந்த நிலையில், இவ்வாறு இவர்கள் ஏறத்தாழ தலைகீழாக அதிக நேரம் தூங்கும் பொழுது அவர்களின் வயிற்றில் உள்ள அங்கங்கள் நெஞ்சு பகுதியினை அமுக்குவதினால் மூச்சு விட சிரமப்பட்டு இறப்பார்கள். இவ்வாறான இறப்புக்கள் சட்ட மருத்துவத்தில் positional asphyxia deaths என்றழைக்கப்படும்.456
  5. அதீத மது போதையில் உள்ளவர்கள் வீதி விபத்துகளில் சிக்கியும், உயரமான கட்டிடங்களில் இருந்து தவறி வீழ்ந்தும், நீரில் மூழ்கியும் திடீர் மரணங்களை சந்தித்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
  6. மது அருந்த தொடங்கும் பொழுது நண்பர்களாக அருந்த தொடங்கியவர்கள், சிறிது நேரம் செல்ல போதையில் ஒருவரை ஒருவர் அடித்து கொலை செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.
  7. ஒருவர் நீண்ட காலமாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருக்கும் பொழுது அவர்களின் உடலில் பல்வேறுபட்ட நோய் நிலைகள் ஏற்படலாம். குறிப்பாக ஈரல் பழுதடைந்தல் (Cirrhosis), உணவு விழுங்கும் களத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் வரிக்கோசுநாளத்தில் ஏற்படும் வெடிப்பினால் ஏற்படும் குருதிப்பெருக்கு (esophageal varicieal bleeding), இதயத்தின் செயற்பாடு குறைதல்(cardiomyopathy) போன்றன ஏற்படலாம். மேற்குறித்த நோய் நிலைகள் திடீர் மரணங்களினை ஏற்படுத்தலாம்.
  8. பொதுவாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருப்பவர்கள் தற்கொலைக்கு முன்பாக அதிக மது அருந்திய நிலையிலேயே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அதீத மது போதை பல்வேறுபட்ட வழிகளில் திடீர் மரணங்களினை விளைவிக்கின்றது.

வெடித்து சிதறியது ஏன்?

அவள் அன்று அதிகாலையிலேயே எழுந்து சமைக்கத் தொடங்கிவிட்டாள். அவர்கள் வசிப்பது கொழும்பு மாநகரின் ஓர் சேரிப்புறம். அவளும் அவனும் காலை எழு மணிக்கு கொழும்பு மாநகர சபையின் வாகனத் தரிப்பிடம் ஒன்றிற்கு செல்ல வேண்டும். அங்கு தான் இருவருக்கும் மாலை வரை வேலை. வழமையாக இருவரும் சமைத்து பார்சல் செய்து எடுத்துச் செல்வார்கள். அவர்களது குடும்ப வறுமை காரணமாக அவர்கள் மண்ணெண்ணெய் குக்கர் ஒன்றினையே சமையலுக்கு பயன்படுத்தினார்கள் . அன்றும் சமையல் ஏறத்தாள முடிந்து விட்டது. கடைசி கறி அவிந்து கொண்டிருக்கும் பொழுது தான் அவள் அவதானித்தாள் குக்கர் வேலை செய்யவில்லை. அவள் குக்கரின் எண்ணெய் தாங்கியை திறந்து பார்த்தாள். அதில் மண்ணெண்ணெய் சிறிதளவு தான் இருந்தது. அவள் உடனடியாகவே அருகில் இருந்த கானில் இருந்த மண்ணெண்ணெய்யிணை எடுத்து குக்கரின் எரிபொருள் தாங்கியில் நிரப்பி விட்டு, எண்ணெய் தாங்கியின் முடியினை மூடி விட்டு திரும்பியதும் தான் தாமதம் பாரிய சத்தத்துடன் குக்கர் வெடித்து சிதறியது. அவள் பாரிய தீ்க்காயங்களுடன் உயிர் தப்பினாள்.
நாம் மேற்கூறியவாறன செய்திகளை பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நாளாந்தம் பார்க்கின்றோம். பலருக்கு மண்ணெண்ணெய் குக்கர் ஏன் வெடிக்கிறது என்று தெரியாது. அதனை விளக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் இவ்வாறன சம்பவங்களை குறைக்கும் வகையிலும் இப்பதிவினை இடுகின்றேன்.
சாதாரணமாக மண்ணெண்ணெய்யில் வேலை செய்யும் குக்கர்கள் இரண்டு வகையில் உள்ளது
1. அமுக்கத்தில் வேலை செய்யும் குக்கர் இதில் எரிபொருள் தாங்கியில் அமுக்கம் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் மண்ணெண்ணெய் வளியுடன் கலந்து விசிறப்பட்டு எரிக்கப்படுவதன் காரணமாக வெப்பம் பிறப்பிக்கபடும். இவ்வகையான குக்கர் ஓரளவு பாதுகாப்பானது ஆனால் விலை கூடியது. மேலும் ஒப்பீட்டளவில் பராமரிப்பு செலவு கூடியது. இங்கு எரிபொருள் தாங்கியிலிருந்து மண்ணெண்ணெய் ஆனது குறிப்பிட்ட உயரம் வரை சென்று தான் எரிகின்றது இதன் காரணமாக வெப்பம் பெரிதளவில் எரிபொருள் தாங்கியினை அடைவதில்லை.

04

2. திரிகள் மூலம் வேலை செய்யும் குக்கர். இங்கு 25 தொடக்கம் 50 வரையான திரிகள் பயன்படுத்தப்படும். இது சாதாரண மண்ணெண்ணெய் கைவிளக்கு ஒன்று எவ்வாறு எரிகின்றதோ அவ்வாறே இந்த குக்கரும் வேலை செய்யும். வித்தியாசமான இங்கு பூரண தகனத்தினை உறுதி செய்யும் முகமாக burner பொருத்தபடிருக்கும். இவ்வகையான திரி குக்கர் அடுப்புகள் மிக மலிவானவை அத்துடன் ஆபத்து மிகுந்தவை.

03

இங்கு திரியாணது எரிபொருள் தாங்கியிள் இருந்து குறிப்பிட்ட அளவு உயரதிலேயே இருக்கும் ஏனென்றால் திரியானது மண்ணெண்ணெயிணை புவியீர்ப்பு விசைக்கு எதிராக குறிப்பிட்ட மிக குறைந்த உயரம் வரை தான் கொண்டுசெல்ல முடியும். இதன் காரணமாக எரிபொருள் தாங்கி நீண்ட நேர சமையலின் பொழுது வெப்பமடையும், மேலும் குக்கர் முழுவதும் உலோகத்தினால் செய்யப்பட்டு உள்ளதால் அவற்றின் மூலமும் வெப்பம் கடத்தப்பட்டு எரிபொருள் தாங்கியினை அடையும், மேலும் திரியானது தளர்வான நிலையில் பொருத்தப்பட்டிருந்தால் அது பொருத்தப்பட்டிருந்த ஓட்டையின் ஊடாக புகை மற்றும் வெப்பக் காற்று என்பன எரிபொருள் தாங்கியின் உட்புறத்தினை அடையும் இதன் காரணமாக தாமாகவே உட்புறம் உள்ள மண்ணெண்ணெய் தீப்பற்றி எரியக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. நீண்ட நேர சமையலின் பொழுது இடையில் மண்ணெண்ணெய் ஊற்றும் பொழுது இது மேலும் அதிகரிக்கும். மேலும் மண்ணெண்ணெய் பதிலாக பெட்ரோல் போன்ற எரிபற்று நிலை குறைந்த எரிபொருட்களை தவறுதலாக ஊற்றும் பொழுது சாத்தியககூறுகள் மேலும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு எரிபொருள் தாங்கியின் உட்புறத்தில் தீ ஏற்படும் பொழுது அதிகளவு CO2, CO போன்ற வாயுக்கள் அதிகளவு உண்டாகும் மேலும் எரிபொருள் தாங்கியின் உட்புறத்தில் உள்ள வாயுக்கள் அதிகளவு விரிவடையும் அதன் காரணமாக அதிகளவு அமுக்கம் உட்புறத்தில் உருவாகும் இதன் காரணமாகக் குக்கர் அதாவது எரிபொருள் தாங்கி வெடித்து சிதறி பாரிய சேதத்தினை விளைவிக்கும்.
மேற்குறித்த சந்தர்ப்பம் தவிர கீழ்வரும் சந்தர்ப்பத்திலும் தீ விபத்து ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. சிறிய மண்ணெண்ணெய் குக்கரில் ஒப்பீட்டளவில் பாரிய பாத்திரங்களை வைத்து அதிகளவு விசையுடன் சமையல் செய்யும் பொழுது குறிப்பாக அரிசி மா வறுத்தல் போன்றவற்றினை செய்யும் பொழுது குக்கர் தலைகீழாக விழுந்து சமையல் வேலை செய்பவரினை காயப்படுத்திய சந்தர்ப்பம் உண்டு.

மேலும் முக்கியமாக எம்மவர் குக்கர் வாங்கும் பொழுது அதனோடு சேர்ந்து வரும் அறிவுறுத்தல் பட்டியலை வாசிப்பதே இல்லை என்பதுவும் இவ்வகையான விபத்துக்களுக்கு ஓர் முக்கிய காரணம் ஆகும்.

தொட்டால் குற்றமா?

தற்கால இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தூக்கில் தூங்கி யாராவது இறந்தால், கொலை செய்து தூக்கியதாகவே செய்திகள் வெளியிடுகின்றனர். அதுவும் கால்கள் நிலத்தை தொட்ட நிலையில் அவர் தூங்கிக் காணப்பட்டால் சொல்லி வேலையில்லை. இவ்வாறான சம்பவங்களில் பலரும் பலவாறாக தமது அபிப்பிராயங்களினை முன்வைப்பர். முக்கியமாக பலர் கூறுவது யாதெனில் கால்கள் தொட்ட நிலையில் தூக்கில் தொங்கி இறக்க முடியாது, யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இழுத்து வந்து தூக்கில் கொழுவியிருப்பார்கள் என்பதே.

சட்ட மருத்துவ ரீதியாக தூக்கில் தொங்கி இறத்தல் என்பது என்பது இறப்பவர் தனது முழு அல்லது பகுதி அளவிலான உடல் எடையினை விசையாக பயன்படுத்தி கழுத்தினை நெரித்து இறத்தல் ஆகும். பகுதி அளவிலான உடல் எடையினை பயன்படுத்தல் Partial hanging எனப்படும். இதன்பொழுது பொதுவாக கால் தரையினை தொட்ட வண்ணம் இருக்கும். தூக்கில் தொங்கி இறத்தல் சம்பவம் ஒன்றின் பொழுது மரணம் ஏற்பட்ட முறை மற்றும் சந்தர்பம் (cause and circumstance of death) ஏனைய காரணிகள் விலக்குவதால் அடையப்படும் (exclusion of other conditions). சிறைச்சாலைகள், போலீசின் தடுப்பு அறைகள் போன்றவற்றில் இருக்கும் தடுப்பு கைதிகள் கதவின் கைபிடியில் தூக்கு மாட்டி இறந்த சம்பவங்கள் நிறைய உண்டு.

பணமும் பிணமும்

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் வடமாகாணத்தின் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் பிணப் பரிசோதனை ஒன்றினை நடாத்துவதற்கு அவ்வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் இறந்தவரின் உறவினரிடம் பணம் கேட்டமையினையும் அதனை இறந்தவர்களின் உறவினர்கள் கொடுக்க மறுத்ததினை தொடர்ந்து அவ்ஊழியர் விடுமுறையில் நின்றதினை தொடர்ந்து பிணப்பரிசோதனை ஒரு நாள் தள்ளி போனதோடு மட்டும் அல்லாது அவரது உடல் அழுகிய நிலையில் இரு நாட்களின் பின்னர் பிண பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
இப்பதிவின் மூலம் அரசாங்க வைத்தியசாலைகளில் நடைபெறும் மரணங்களும் அதனைத் தொடர்ந்து பிணப் பரிசோதனை நடைபெறும் பொழுது எவ்வாறு பொதுமக்களிடம் இருந்து அதாவது இறந்தவரின் உறவினரிடம் இருந்து எவ்வாறு பணம் மோசடியான முறையில் பெறப்படுகின்றது என்பதினை வெளிப்படுத்துவதே.
1. சில சந்தர்ப்பங்களில் இறந்தபின் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. பொதுவாக அடுத்த நாளே செய்யப்படும். இவ்வாறான சந்த்ப்பங்களில் வைத்தியசாலை ஊழியர் இறந்த உடலினை குளிர்ப் பெட்டியில் வைத்து பாதுகாக்க பணம் கேட்பார்கள் கொடுக்கவிடில் உடலினை வெளியே வைப்பார்கள். அது தானாகவே அழுகிய நிலையில் பின்பு உறவினரிடம் ஓப்படைக்கப்படும் அல்லது எலி மற்றும் கரப்பான் போன்ற விலங்குகள் சேதப்படுத்திய நிலையில் ஒப்படைக்கப்படும்.

2. உடலினை வைத்திய சாலை விடுதியில் இருந்து பிரேத பரிசோதனை அறைக்கும் அதிலிருந்து வைத்திய சாலையின் வெளிப்புறம் கொண்டு வந்து தருவதற்கு பணம் கேட்பார்கள்.
3. சில வேளைகளில் விரைவாக பிரேத பரிசோதனையை முடித்து தர சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிசாருக்கு பணம் தேவை என வைத்திய சாலை ஊழியர் பணம் பெற்ற சந்தர்ப்பம் உண்டு
4. மரண விசாரணையிணை மேற்கொள்ளும் பொலிஸார் தான் வேறு கடமையில் இருப்பதாகவும் அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி வர காலதாமதம் ஆகும் என்றும் விரைவாக முடிக்க வேண்டும் எனில் சப்பொட் பண்ணுமாறும் கேட்டதுண்டு.
5. மரண விசாரணைக்கு வந்த பொலிஸார் தான் சாப்பிடவில்லை எனக்கூறி உறவினர்களை அழைத்து சென்று விலை உயர்ந்த கடையில் கோழிப் பிரியாணி சாப்பிட்டதுடன் ஒரு சிகரெட் பாக்கெட்டை முழுமையாக வாங்கிய சம்பவமும் நடந்ததே.
6. சட்ட வைத்திய அதிகாரி போன்று பதில் கடமையாற்றும் சில வைத்தியர்கள் இறந்தவரின் உறவினரிடம் வைத்தியசாலை ஊழியர்கள் மூலம் கொத்து ரொட்டியும் மெகா சோடா போத்தல் ஒன்றும் வாங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
7. தீடீர் மரண விசாரணை அதிகாரி தனக்கு மரணம் நடந்த இடத்திற்கு வருகை தருவதற்கு பணம் வேண்டும், வாகன வசதி வேண்டும் என்று அடம் பிடித்த சம்பவங்கள் உண்டு. அவ்வாறு செய்ய மறுத்த நிலையில் வேண்டும் என்றே தாமதமாக வந்தமையும் போலீஸ் ரிபோட்க்கு என்று உறவினரிடம் காசு வேண்டியமையும் நடந்துள்ளது.
8. பெட்டிக்கடைகாரன் (சவப்பெட்டி ) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடையும் தருவாயில் இருக்கும் உறவினரிடம் வந்து விசிட்டிங் காட் கொடுத்து தன்னிடம் வரும்படி கோரிக்கை விடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
9. விடுதி வைத்தியர் ஒருவர் சட்ட மருத்துவ ரீதியாக தீடீர் மரண விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத மரணம் ஒன்றிற்கு உறவினரிடம் வேண்டும் என்றே மரண விசாரணையினை இல்லாமல் செய்ய காசு வேண்டும் என்று கேட்டமையும் நடந்துள்ளது.
10. பிரேத பரிசோதனை செய்த வைத்தியசாலை ஊழியர் பணம் கொடுக்க மறுத்த சந்தர்ப்பத்தில் உடலினை உரிய முறையில் தைக்காமல் கொடுத்த சந்தர்ப்பமும், அண்மையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவரின் உடலில் இருந்து பெறுமதியான தங்க ஆபரணம் இணை கொள்ளை இட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இவற்றிற்கு என்னதான் தீர்வு? இலங்கையின் அரசவைத்திய சாலைகளில் நடைபெறும் தீடீர் மரணவிசாரணை மற்றும் அதனோடு இணைந்த உடற்கூராய்வு பரிசோதனை போன்றவற்றிக்கு எவ்விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதே. பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்…

கடந்த சில வருடங்களாக வட மாகாணத்தில் பல்வேறு காரணகளுக்காக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவற்றில் சில பின்வருமாறு செய்திகளில் தலைப்பில் வந்துள்ளன.
“ஆசிரியர் ஒருவர் மிகவும் ஏசியதால் மாணவர் தூக்கில் தொங்கி மரணம்”
“அதிபர் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்தமையால் ஆசிரியர் நச்சு அருந்தி தற்கொலை
“பிரதேச செயலகத்தில் உயர் அதிகாரியுடன் கடமை முரண்பாடு, அலுவலகத்தில் இளைஞன் தற்கொலை”
தனியார் துறைகளில் நடைபெற்ற இதேமாதிரியான பல்வேறு தற்கொலை பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.
இலங்கையில் தற்பொழுது நாளாந்தம் 8 வரையான பேர்கள் பல்வேறு வகையான காரணங்களினால் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். உலக அளவில் தற்கொலை செய்து கொள்வோர்களின் பட்டியலில் இலங்கை 29 வது இடத்தில் இருக்கின்றது. இலங்கையில் அதுவும் வடமாகாணத்தில் கணிசமாக தற்கொலைகள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெறுகின்றன. நாம் தற்கொலைகளுக்கான காரணங்களை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் தான் நாம் அவற்றினை தடுக்க முடியும். தற்கொலைக்கு ஏதுவான காரணங்களில் சிலவற்றினை எம்மால் இலகுவில் தடுக்க முடியாது. ஆனால் தற்கொலைக்கு ஏதுவான பல காரணங்களை எம்மால் இலகுவில் தடுக்க முடியும்.
இவ்வாறான தடுக்கப்பட கூடிய பல காரணங்களில் ஒன்றே வேலைத்தளங்களில் ஏற்படும் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொள்ளல் ஆதல் ஆகும்.

முக்கியமாக இவ்வகையான தற்கொலைகள் மிக்க மனஅழுத்தம் காரணமாக நடைபெறுகின்றது. முக்கியமாக மேலதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அல்லது வன்மையான சொற் பிரயோகங்களை செய்வதாலும் மாணவர் மற்றும் ஏனையோர் இலகுவில் மனம் உடைந்து விடுகின்றனர். மேலும் மேலதிகாரிகள் பலர் இவ்வாறு அதிகாரத்தொனியுடனும் வன் சொல் பிரயோகத்துடனும் நிர்வாகம் செய்வது தான் சிறந்த நிர்வாகம் என்ற நினைப்பில் உள்ளனர். பாடசாலை மாணவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் வெவ்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களின் எதிர்வினைத் தாக்கமும் வேறுபட்ட தாகவே அமையும். மற்றும் மேலதிகாரிகள் தமக்கு கீழே வேலை செய்பவர்களின் மனத் திடகாத்திரத்தினை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஊழியர்களின் திறமைக்கு ஏற்ப குறித்த வேலையினை வழங்க முடியும் அல்லது வேலையின் அளவினை மாற்ற வேண்டும். அதனை விடுத்து ஊழியருடன் கடிந்துகொள்வதில் பயனேதும் இல்லை. அவ்வாறே ஆசிரியரும் மாணவர்களின் மனநிலை, பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை போன்றவற்றினை அறிந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஏற்றவாறு கற்பித்தலில் மாற்றங்களை செய்யவேண்டும். அதனை விடுத்து இயந்திரங்கள் மாதிரி எல்லா மாணவர்களுக்கும் பொதுவாக கற்பித்தலினால் பிரயோசனங்கள் பெரிதாக வந்து விடப்போவதில்லை.
இன்றைய தினம் உலக தற்கொலையாளர் தடுப்பு தினம், நாளை மகாகவி பாரதியார் நினைவு தினம் இவற்றினை ஒட்டி இப்பதிவினை இடுகின்றேன்.

இச்சிறுமியின் மரணத்திற்கு யார் காரணம்?

வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?

அண்மைய செய்திகளில் இலங்கையில் சிறுநீரக வியாபாரம் அதாவது மனிதன் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு சட்ட விரோதமான முறையில் சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரகம் மாற்றீடு செய்யப்படுவதாக இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் பிரகாரம் உலகில் நாளொன்றுக்கு சராசரியாக 60 பேர் அவயவ மாற்று சிச்கிசைக்கு உள்ளாகின்றனர். அதேவேளை 13 பேர் உரிய உறுப்பு கிடைக்காமை காரணமாகக் இறக்கின்றனர். இலங்கையின் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டில் 400பேர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட வேளையில் ஏறத்தாழ 2000 பேர் உரிய சிறுநீரகம் கிடைக்காமல் மரணத்தினை தழுவினர். இதன் காரணமாகவே சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்றீடு சிகிச்சைக்காக பலர் அரச வைத்திய சாலையில் காத்து இருக்கின்றனர். இவ்வாறு உரிய உறுப்புகள் கிடைக்கமையே பல்வேறுபட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கின்றது. சாதாரணமாக முற்று முழுதாக சிறுநீரகம் பழுதடைந்த ஒரு நோயாளி தனக்குரிய சிறுநீரகத்தினை பின்வரும் வழிமுறைகளில் பெற்று கொள்ளலாம்

  1. இறந்த ஒரு நபரின் உடலில் இருந்து
  2. மூளை இறப்பு ஏற்பட்ட ஒரு நபரின் உடலில் இருந்து
  3. உயிர் உள்ள ஓர் நபரின் உடலில் இருந்து

இப்பொழுது பேசு பொருளாக இருப்பது இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட பிரதேசங்களில் இருந்து இளவயது இளஞர்களின் உடலில் இருந்துசிறுநீரகம் பலவந்தமாக அல்லது ஏமாற்று முறையில் அகற்றப்படுவது பற்றியதே.

இலங்கையில் இவ்வாறு ஒரு மனிதனின் இருந்து இன்னொரு மனிதருக்கு அவயவங்களினை மாற்றீடு செய்யும் பொழுது அவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது Transplantation of Human tissues act No 48 of 1987 (certified on 11th December 1987) என்ற சட்டம் ஆகும் அத்துடன் சுகாதார அமைச்சின் சில சுற்றறிக்கைகள் Director General Health (DGHs) circulars of Ministry of health ஆகும்.

இங்கு முக்கியமாக உயிர் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து எவ்வாறு சிறுநீரகம் போன்ற அங்கங்கள் இன்னொருவருக்கு மாற்றீடு செய்யப்படுகின்றது என்பது பற்றி பார்ப்போம். பல்வேறுபட்ட காரணகளினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் பொழுது நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் அப்பொழுது சிகிச்சை அளிக்கும் வைத்தியர் நோயாளிக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் சிறுநீரக மாற்றீடு செய்வதால் வரும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்து கூறுவார் அத்தோடு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக மேற்கொள்ளும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையின் சாதக பாதகங்களை எடுத்து கூறுவார் அதன் பின்னரே நோயாளி தனக்கு எந்தவிதமான சிகிச்சை வேண்டும் என்பதை தீர்மானித்து சிகிச்சையை பெறுவார். இங்கு வைத்தியர் உரிய மற்றும் தேவையான தகவல்களை தெரிவிக்க முடிவெடுப்பது நோயாளிதான்.

அடுத்த கட்டமாக நோயாளி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு விரும்பினால் அவர்தான் தனக்குரிய சிறுநீரக வழங்குநரை கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிடில் அவரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர் முளை இறப்பு அடைந்த ஒருவரின் சிறுநீரத்திற்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருப்பது என்பது நிச்சயமாக ஒருசில நாட்களோ மாதங்களோ அல்ல. நிச்சயமாக ஒருசில வருடங்கள் செல்லும் அந்த காலப்பகுதியில் நோயாளி ஒழுங்கான முறையில் வாரத்தில் ஒருசில தடவைகள் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். நோயாளி பல்வேறு காரணங்களினால் இறப்பினை சந்திக்கவும் நேரும். இவ்வாறான பாதக விளைவுகளை தவிர்க்கவே நோயாளி ஒருவர் தனது பழுதடைந்த சிறுநீரகத்திற்கு மாற்று சிறுநீரகத்தினை தேடுவர்.

முதலில் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவரும் கொடுக்க முயற்சி செய்வார்கள். அது சரிவராது பட்சத்தில் வேறு ஓருவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்யவார் அப்பொழுதுதான் பிரச்சினைகள் எழுவதற்கு ஆரம்பிக்கும். இலங்கையில் தற்பொழுது உள்ள சட்டத்தின் பிரகாரம் உயிர் உள்ள ஒருவர் அல்லது இறந்து ஒருவரின் பின்னுருத்தாளிகள் வியாபார நோக்கம் கருதி உடல் உறுப்புக்களை விற்பனை செய்ய முடியாது. அன்பின் அல்லது பாசத்தின் காரணமாவே உறுப்புக்களை தானம் செய்யாலாம். எனவே வெளி நபர் ஒருவருக்கு பணத்தினை அல்லது வேறு பெறுமதியான பொருட்களை கொடுத்து அவரின் பூரண சம்மதத்துடன் அவரின் சிறுநீரகத்தின் பெறுவார்கள். இவ்வாறு சிறுநீரகம் போன்ற உறுப்புக்களினை பெறல் organ trafficking என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். இவ்வாறு சிறுநீரகத்தினை பெற பத்திரிகைகள் மூலம் விளம்பர படுத்துவார்கள் அல்லது இதற்கான தரகர்களை அனுகுவார்கள்.

  1. எவ்வாறான மனிதர்கள் தமது சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை தானம் செய்வார்கள் ?

மிகவும் வறுமையில் இருப்பவர்கள் தமது வறுமையினை போக்க நினைத்து தமது சிறுநீரகத்தினை வழங்குவர் மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முளை வளர்ச்சி குறைந்தவர்கள் போன்றவர்கள் இவ்வாறு பணத்திற்காக வழங்க முற்படலாம். இதுபோன்றே சில பெண்கள் வாடகை தாயாக செயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட வெளிவந்த செய்திகளின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்கள் என்று ஒருவர் கூட இலங்கை போலீசில் முறைப்பாடு செய்யவில்லை.

  1. ஏன் இதுவரை சட்ட நடவடிக்கைகளை பெருமளவில் எடுக்க முடியாது உள்ளது?

இங்கு கவனிக்கத்தத்தக்க விடயம் என்னெவெனில் இவர்கள் யாவரும் 18 வயதினை அடைந்தவர்களே மேலும் இவர்கள் சுயவிருப்பதின் பேரில் சிறுநீரகத்தினை வழங்குவதால் பொலிஸாரினால் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கமுடியாமல் போகும். பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தானம் செய்யபவர்கள் உரிய பணத்தினை கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு அவற்றிலும் அவர்கள் போலீசில் முறைப்பாடு செய்வதில்லை. மேலும் இவ்வகையான செயற்பாடுகளில் பல உயர் அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் ஈடுபடுவதினால் அவர்களை பொலிஸாரினால் இலகுவில் அடைய முடியாது.

  1. வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?

ஒரு சிறுநீரக செயலிழப்பு நோயாளி சிறுநீரக வழங்குநர் ஒருவரினை பலத்த சிரமத்தின் மத்தியில் அழைத்து வரும் பொழுது மருத்துவ நிபுணர்கள் வழங்குனரின் குருதி வகை, அவருக்கு எயிட்ஸ், ஹெப்பட்டைட்டிஸ் போன்ற பல நோய்கள் இருக்கின்றதா என பரிசோதிப்பார்(சிறுநீரகத்தினை மாற்றும் பொழுது ஒத்துபோகுமா என அறிய பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்). அவற்றில் பிரச்சனைகள் எதுவும் இல்லை எனில் தொடர்ந்து சத்திர சிகிச்சை நிபுணரிடம் சிபாரிசு செய்யப்படும். இலங்கையில் உள்ள பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரில் பெரும்பாலானோருக்கு போதிய மருத்துவ அறிவின்மையாலும், உரிய தீர்மானம் எடுக்கும் திறன் இன்மையாலும் வைத்தியரின் முடிவினையே ஏற்கின்றனர். மேலும் குறித்த வைத்தியருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் (success rate) நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே இவற்றினை கருத்தில் கொண்டு அவர் ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரினை சிபாரிசு செய்வார். தொடர்பாடல் முறைகளில் ஏற்பட்ட தவறுகளினால் (Communication error) தான் பெரும்பாலான மக்கள் சிபாரிசு செய்யும் வைத்தியர்கள் ஆதாயம் அடைவதாக நினைக்கின்றார்கள். அது உண்மையில் தவறான எண்ணம் ஆகும்.

  1. உண்மையில் உறுப்பு மாற்றீடு சிகிச்சை முறையில் தவறுகள் நடக்கவில்லையா?

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியர் சிலர் இலங்கையில் வந்து சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு இலங்கையரின் சிறுநீரகமே பொறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணைகளின் பின்பு இலங்கையில் வெளிநாட்டவரின் உறுப்பு மாற்று சிகிச்சை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை பெறுவதற்காக காத்திருப்பிப்போர் பட்டியலில் உள்ளோர் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்கினை பாவித்தும், வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கி விரைவாக சத்திர சிகிச்சை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் நடந்துள்ளன. ஆதாரங்கள் இன்றி குற்றசாட்டுகளினை சுமத்துவது இறுதியில் எதுவும் அறியா நோயாளிகளினையே இறுதியில் பாதிக்கும்.