ஆபத்தான எருக்குவியல்

நேற்றுமுன்தினம் வவுனியாவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் எருக்குவியல் ஒன்றின் மீது இருந்த இளைஞர் ஒருவர் சடுதியாக மூச்சு திணறலுக்கு உட்பட்ட நிலையில் உயிரிழந்தார். எமது மக்களில் பலருக்கு ஏன் அவர் இறந்தார் என்பது பற்றிய போதிய அளவு விளக்கம் இல்லை. மிக அண்மைக்காலத்தில் கூட வவுனியாவில் நகரசபைக்கு சொந்தமான கொல்களத்தில் கழிவுகளை அகற்றும் பொழுது வெளியேறிய விஷவாயுவினை சுவாசித்த நிலையில் 04 இளம் குடும்பத்தலைவர்களான தொழிலாளர் இறந்தனர். மக்களிற்கு இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவின்மை மற்றும் உரிய நிர்வாக தரப்புக்கள் இது சம்பந்தமாக தொழிலாளருக்கு அறிவூட்ட அலட்சியம் காட்டுகின்றமை போன்றவற்றினால் இத்தகைய முற்றாக தவிர் படக்கூடிய இறப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பொதுவாக விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள் என்பன உக்கி அழிவடையும் பொழுது பல்வேறுபட்ட வாயுக்கள் இயற்கையாகவே வெளியேற்றபடும். உக்கி அழிவடைதல் (Decomposition) என்ற செயற்பாடு உலகில் இயற்கை சமநிலையினை பேண மிகமுக்கியமானதொன்றாகும். இவ்வாறு நடைபெறும் பொழுது பல நச்சு (Toxic)மற்றும் நச்சு அல்லாத வாயுக்கள்(non toxic) வெளியேற்றப்படும்.

Cow Dung Manure Powder, Packaging Size: 50kg, Rs 12 /kg Bandekar Agro Farms  | ID: 22037146655

முதலில் எருக்குவியலில் இருந்து வெளிவரும் எவ்வாறான வாயுக்கள் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என பார்ப்போம்.
1. ஹைட்ரஜன் சல்பைட்
அழுகிய கூழ் மூட்டை மணம் உடைய வாயு ஆகும். இது சாதாரண வளியினை விட பாரம் கூடியது என்பதினால் எருக்குவியலின் மேற்பரப்பில் அதிக செறிவில் காணப்படும். அத்துடன் ஒருவர் தொடர்ந்து அதிக செறிவில் இவ்வாயுவினை சுவாசிக்கும் பொழுது அவரது மணத்திற்குரிய நரம்புகள் செயல் இழக்கும் இதன்காரணமாக அவர் தன்னை அறியாமலே தொடர்ந்து இவ்வாயுவினை சுவாசிப்பர். மேலும் இவ்வாயு சுவாசத்தொகுதி மற்றும் கண்கள் போன்றவற்றில் எரிவினை ஏற்படுத்தும். இவ்வாயு மனிதனின் இரத்தத்தில் நேரடியாக இணைந்து கல சுவாச செயற்பாட்டினை பாதிக்காவிடினும் மூச்சு திணறலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாயுவினை தொடர்ந்து சுவாசிப்போர் களைப்பான மயக்க நிலைக்கு செல்வதினால் அவர்களினால் ஆபத்தில் இருந்து வெளியேற முடிவதில்லை.
2. அமோனியா
மிகவும் காரமான மனமுடைய வாயு இதுவாகும். இதுவும் மனிதனின் சுவாசத்தொகுதி மற்றும் கண்ணில் கடுமையான எரிவினை ஏற்படுத்தும்.
3. கார்பன் டயோக்சிட்
இவ்வாயுவானது சாதாரண வளியினை விட பாரம் கூடியது என்பதினால் எருக்குவியலின் மேற்பரப்பில் அதிக செறிவில் காணப்படும் அத்துடன் இது மணம் அற்றது. மேலும் இது சூழலில் உள்ள ஓட்ஸிசனின் அளவினை குறைத்து மூச்சுத்திணறலினை ஏற்படுத்தும்.
4. மீதேன்
இதுவும் மணம் அற்ற வாயு ஆகும் அத்துடன் இது இலகுவில் தீப்பற்றி எரியும் தன்மை உடையது. எனவே தான் எருக்குவியலிற்கு அருகில் செல்லும் பொழுது சுருட்டு அல்லது பீடி போன்றவற்றினை புகைத்தல் தீ விபத்து ஆபத்தினை ஏற்படுத்தும்.

இங்கு குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஏருக்குவியலின் மேல் ஏறி அமர்ந்து இளைப்பாறியுள்ள நிலையிலேயே மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஈறுக்குவியலின் மேற்பரப்பில் தான் மேற்குறித்த நச்சு மற்றும் மனிதனின் சுவாசத்திற்கு உதவாத வாயுக்கள் அதிக செறிவில் காணப்படும் இதனால் அவற்றினை அவன் அதிக அளவில் சுவாசித்திருக்க நேர்ந்திருக்கலாம். மேலும் பலமாதங்களாக இருந்த எருக்குவியலின் உள்ளே தோன்றிய வாயுக்கள் அடைபட்டு ஓர் சமநிலையில் இருந்திருக்கும் இவ்வாறு ஏறி அமரும் பொழுது உள்ளே இருந்த வாயுக்கள் வெளி அழுத்தம் காரணமாக அதிகளவில் வெளியேறி உயிர் ஆபத்தினை விளைவிக்கும்.

                                                                 முற்றும்

 

மலவாசலில் போதை …..

நவீன உலகில் பல்வேறு சந்தர்ப்பங்களில்  மனிதர்கள் தமது உடலில் போதைப்பொருளினை மறைத்து வைத்து கடத்தும் பொழுது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக நாம் அறிந்திருக்கின்றோம். எம்மில் கூட பலர் இதனை செய்திருக்கின்றனர், ஆனால் இதனால் உடலிற்கு ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி நாம் அறிவதில்லை. இதனை செய்பவர்களின் நோக்கமே தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கடத்துவதன் மூலம் பணம் ஈட்டுவதுதான். மிக அரிதாகவே கடத்துபவர்கள் அந்த போதைப்பொருளினை பாவிப்பார்கள். இவர்கள் பொதுவாக மலவாசல், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு (Vaginal canal) , இரைப்பை போன்றவற்றில் மறைத்து வைத்து கடத்துவார்கள். இவர்கள் இதற்கென வடிவமைக்கப்பட்ட கொள்கலங்களை அல்லது விசேட ரப்பர் வகையினை (multilayered latex, rubber or condoms) பாவிப்பர். பொதுவாக ஆணுறைகளில் போதை மருந்தினை இறுக்க கட்டி முடிந்தபின்னர் அதனை விழுங்கியோ அல்லது மலைவாசலில் செருகியோ கடத்துவர். பொதுவாக வறிய மக்களே இவ்வாறு பணத்திற்காக போதை மருந்தினை கடத்துவார்கள். இவர்களில் பலவகையினர் உள்ளனர்
1. body packers – இவர்கள் உடலில் உள்ள எந்தவோர் துவாரத்தில் போதை மருந்தினை அடைத்து மறைத்த நிலையில் அல்லது வாயின் மூலம் விழுங்கிய நிலையில் குறித்த தடை செய்யப்பட்ட போதைப்பொருளினை கடத்துவர்.
2. body stuffers – இவர்கள் தமது உடைமையில் தடை செய்யப்பட்ட போதை மருந்தினை வைத்திருந்து கடத்துவர். இவர்கள் போலீசாரிடம் அல்லது சுங்க அதிகாரிகளிடம் மாட்டுப்படும் பொழுது சடுதியாக அப்போதைப்பொருளினை விழுங்கி விடுவார்கள் அல்லது மலைவாசலில் செருகி விடுவார்கள் . இவர்கள் மிகவும் மருத்துவ ரீதியாக ஆபத்தினை எதிர்நோக்குவர் ஏனெனில் அவர்கள் போதைப்பொருளினை தகுந்த முறையில் பொதிசெய்வதில்லை, இதன் காரணமாக போதை மருந்தானது அதிகளவில் உடலில் சேர்வடையும் (intoxication)
இனி இவர்களில் இந்த செயற்பாடானது உடலியல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களினை ஏற்படுத்தும் என பார்ப்போம்
1. குடலில் ஏற்படும் அடைப்பு (intestinal obstruction) – இவர்கள் விழுங்கும் போதைப்பொருட்கள் அடங்கிய பொதி மனித சமிபாட்டுத்தொகுதியில் எந்தவொரு இடத்திலும் பௌதிக ரீதியில் அடைப்பினை உருவாக்கி, இறப்பினை ஏற்படுத்தக்கூடும்.
2. சடுதியான நஞ்சாதல் (intoxication) – இவர்கள் விழுங்கும் போதைப்பொருட்கள் அடங்கிய பொதி ஆனது சமிபாட்டுத்தொகுதியில் வெடிக்கலாம், இதன் காரணமாக பொதியிலிருந்த போதைப்பொருட்கள் சமிபாட்டுத்தொகுதியில் விடுவிக்கப்பட்டு சடுதியாக உடலினுள் உறிஞ்சப்படும். இச்செயற்பாடு காரணமாக கோமா அல்லது இறப்பு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருளானது சிறிதளவில் உறிஞ்சப்படும் இதனால் பொதியில் இருந்த போதைப்பொருளின் தன்மைக்கு ஏற்ப நோயாளி பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாவர். இவ்வாறான நோய் நிலைமை body packers syndrome என்று மருத்துவத்தில் அழைக்கப்படும்.
3. பொதுவாக நீண்ட விமான பயணம் மூலம் கடத்தப்படும் பொழுது குடலில் இருந்து போதைப்பொதி வெளித்தள்ளப்படுவதினை குறைக்க பல்வேறுபட்ட மருந்து வகையினை பாவிப்பர். அதன் காரணமாக பல்வேறு பட்ட பக்க விளைவுகளுக்கு உள்ளாவர்.

இவ்வாறு போதை மருந்துகளை கடத்துபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலான ஓர் விடயமாகும் ஏனெனில்
1. பொதுவாக இவ்வாறு மருந்துகளை கடத்துபவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு தாங்கள் என்ன வகையான போதை மருந்தினை கடத்தினார்கள் என்பது பற்றி தெரிவதில்லை.
2. கடத்தலை மேற்கொள்ள வைக்கும் நபர்கள் (முதலாளி) இது சம்பந்தமான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதில்லை.
3. மேலும் போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பெரும்பாலும் தூய நிலையில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் ஓர் குறித்த போதைப்பொருளுடன் மற்றைய போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறுவகையான நோய்களிற்கு பாவிக்கும் மருந்துகளை கலப்பார்கள். இச்செயற்பாடு cutting என்றழைக்கப்படும். இதன் காரணமாக குறித்த ஓர் போதை மருந்திற்கென சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொள்ள முடிவதில்லை.

Body packer imaged with plain films and CT. Upper (a) and lower (b)... |  Download Scientific Diagram

மேலுள்ள கதிர்ப்படத்தில் மனிதன் ஒருவனின் சமிபாட்டுத்தொகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதைப்பொருட்கள் இருப்பதனை நாம் காணலாம்.

body-packers-14-638

மேலுள்ள படத்தில் மனிதன் ஒருவன் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் போதைப்பொருட்களினை கடத்தும் பொழுது பொதியின் உறை வெடித்ததன் காரணமாக இறந்தான். இறந்த நிலையில் அவனது இரைப்பையில் போதை மருந்துகள் இருப்பதனை மேற்படி படம் காட்டுகின்றது.
முற்றும்

துகில் உரியப்பட்ட சிறுமி

அன்று வழமைபோல் அந்த 10 வயது சிறுமி தனது வீட்டின் முன்னால் மற்றைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பொழுதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் அவளுக்கு தெரிந்த நபர் ஒருவரினால் அவள் தந்திரமான முறையில் தூர அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அந்த காமுகனிடம் இருந்த தப்பிய சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தாயிடம் சொன்னாள். உடனே அவளின் தாய் நீ ஏன் வெளியில் நின்று விளையாடினாய் என்று கேட்டவாறு வேலியில் நின்ற மரத்தின் கிளையினை முறித்து விளாசித்து தள்ளினாள். வேதனையில் துடித்த சிறுமி அழுதவாறே தூங்கிவிடடாள். சம்பவம் அறிந்து சிறிது நேரத்தில் வீடு திரும்பிய தகப்பன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை திட்டியவாறே பெல்ட்டினால் பலதடவை விளாசினார். சம்பவம் அறிந்து அவளது வீட்டில் ஒன்றுகூடிய அவளது உறவினர்கள் எல்லோரும் அவளை திட்டி தீர்த்தனர். அவர்கள் அவளை சீரழித்தவன் பற்றி ஓர் வார்த்தை கூட பேசவில்லை. இதன் பின்னர் உறவினர் ஒருவர் அவளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். முதலில் வந்த ஆண் போலீஸ் உத்தியோகத்தர் அந்த சிறுமியை நோக்கி கேட்டார் “உனக்கு இந்த வயதில் இது தேவையா?” என்று. அவளது மறுமொழி அழுகை மட்டுமே. அதனை தொடந்து அங்கு வந்த போலீஸ் நிலைய பெண் போலீசார் சிறுமியிடம் ஆதரவாக கதைத்து வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டனர், அதனடிப்படையில் சந்தேக நபர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் சிறுமியையும் சந்தேக நபரினையும் ஒரு வாகனத்தில் ஏற்றி வைத்தியசாயில் அனுமதித்தனர். வாகனத்தில் செல்லும் பொழுது சிறுமி மிக பயந்தவாறே பிரயானித்தாள்.

The Secret of Sexual Assault in Schools - NEA Today

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் அவள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக நேர்ந்தது. வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர், ஊழியர்கள் அதன் பின்னர் விடுதியில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் அவளை கேள்வி கேட்டே துளைத்து எடுத்து விட்டார்கள். அவர்கள் அவளிடம் நடந்த சம்பவத்தினை கேட்டு விட்டு உனக்கு இது தேவை தானா? என்ற பாணியில் ஏசிவிட்டே சென்றார்கள். இறுதியாக சட்ட வைத்தியரின் அலுவலகத்திற்கு வருகை தந்த சிறுமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு பயந்த நிலையில் இருந்தாள். பலத்த சிரமத்தின் மத்தியிலேயே அவளிடம் வாக்கு மூலம் பெற முடிந்தது.
இன்றைய எமது சமூகத்தில் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் பெண்களை குற்றவாளியாக பார்க்கும் மனோ நிலை வளர்ந்து வருகின்றது. படித்த வைத்தியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த மனோநிலை நிலவுகின்றது. உண்மையில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களே தவிர குற்றவாளிகள் அல்லர்.
மேலும் எம்மில் பலர் இவ்வாறான சம்பவங்களை கேட்டறிந்தது சுய இன்பம் அடைபவர்களாகவே இருக்கின்றனர். அத்துடன் பலர் ஒருசில அனுதாப வார்த்தைகளை கூட பேசுவதற்கு பின்னிற்கின்றனர். மேலும் ஒருசிலர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சமூக, கலாச்சார மற்றும் சமய காரணங்களைக் காட்டி சமூகத்தில் குற்ற வாளியாகக் முற்படும் நிலை (Secondary victimization and victim-blaming) மிக மோசமான கலாச்சார சீரழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

                                                        முற்றும்

இனபெருக்கத்திற்கான உரிமை

அவள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து பல ஆண்டுகள் வேலையற்ற பட்டதாரியாக இருந்தாள், இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு திருமணமும் நடைபெற்றிருந்தது. எனினும் மூன்று வருடங்களாக அவர்களுக்கு பிள்ளைகள் எதுவும் இல்லை. பல வைத்தியரினை சந்தித்து சிகிச்சை பெற்ற பின்னரே இந்த குழந்தை உருவாகியது. குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதுதான் அவளுக்கு பட்டதாரி நியமனமும் கிடைத்தது. பிள்ளையின் பலனால்தான் வேலை கிடைத்தது என்று அதிகம் மகிழ்ந்து இருந்தவளுக்கு மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. அவள் வேலை செய்யும் அரச நிறுவனத்தின் மேலதிகாரி பல சந்தர்ப்பங்களில் அவளினை வசை பாடினார். அதுவும் முதன் முதலாக அவள் வேலைக்கு வரும் பொழுதே கர்ப்பிணி என்பதை சுட்டிக் காட்டி பேசினார். அதனால் மிக மன அழுத்தத்திற்கு உள்ளான அவள் அதிகளவிலான வலி நிவாரணிகளை உட்க்கொண்டதினால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டாள். அதனை தொடர்ந்து இனப்பெருக்க உரிமை பற்றியும் கர்ப்பிணி பெண்ணுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் சட்டத்தரணி ஒருவரினால் மேலதிகாரிக்கு எடுத்து விளக்கப்பட்டது. அதன் பின்னரே விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Rohtak Rape Brings Into Focus India's Troubled Relationship With Reproductive  Rights
எம்மில் பலருக்கு இனப்பெருக்க உரிமை (Reproductive rights) என்பது பற்றி பெரிதளவில் தெரியாது. இதன்காரணமாக அவ்வுரிமை மீறப்படும் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுக்க தவறிவிடுகின்றனர். மேலும் பல பெண்கள் தமது தலைவிதி என நொந்துகொள்கின்றனர். பலசந்தர்ப்பங்களில் பல பெண்கள் தாம் முடிவெடுக்காது கணவனின் முடிவுக்கோ வைத்தியரின் முடிவுக்கோ எதுவிதமான மறுப்பும் இன்றி கட்டுப்படுகின்றனர். இனப்பெருக்கம் எனப்படுவது இரு உயிரிகள் கூடிக்கலப்பதன் மூலம் தம்மை ஒத்த உயிரிகளை உருவாக்கும் செயற்பாடு ஆகும். இனப்பெருக்க உரிமை என்பதில் பல்வேறு விடயங்கள் உள்ளடப்பட்டுள்ளன. அவற்றில் சில வருமாறு
1. தமக்கு பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை, பிள்ளைகளுக்கு இடையிலான காலம், பிள்ளைகள் பிறக்கும் காலம் என்பவற்றினை தீர்ந்தமானித்துக்கொள்ளும் உரிமை.
2. தமக்குரிய இனப்பெருக்கத்திற்குரிய உச்சமான சுகாதார வசதிகளை அனுபவிக்கும் உரிமை
3. தமக்கு தேவையான உரிய கருத்தடை முறைகைளை கைக்கொள்ளும் உரிமை
4. பலவந்தமான கருத்தடை முறைகளில் அல்லது ஏமாற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் கருத்தடைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் உரிமை
5. பாலியல் நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் உரிமை
6. உரிய பாலியல் கல்வியினை மற்றும் தகவல்களினை பெற்றுக்கொள்ளும் உரிமை

இவ்வாறு இனப்பெருக்க உரிமை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வுரிமை மீறப்படும் பொழுது குரல் கொடுப்பது அவசியம் ஆகும்.

                                                              முற்றும்

ஊடகவியாலாளர் -கொலை செய்யப்பட்டாரா?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பு மாநகரின் சந்தடிமிக்க பகுதியான சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் இல்லை கொலை செய்யப்பட்டு வீசப்பட்டார் எனவும் பல சர்ச்சைகள் கிளம்பின. இப்பதிவில் இவ்வாறு ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்படுவார் எனின் எவ்வாறு சட்ட வைத்திய நிபுணர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், இறந்த நபர் எவ்வாறன சூழ்நிலையில் (Circumstance of death) அவர் இறந்தார் என்பதை எவ்வாறு கண்டறிவார்கள் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.
பொதுவாக துப்பாக்கி மூலம் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்பவர்கள் ஏற்கனவே ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றவர்களாகவும் அனுமதி பெற்றோ அல்லது அனுமதி பெறாமலோ துப்பாக்கி வைத்திருப்பார்கள். மேலும் பொதுவாக அவர்கள் கைத்துப்பாக்கியினை பயன்படுத்துவார்கள். சில சந்தர்ப்பங்களில் இராணுவ வீரர்கள் தங்களின் தொழில் முறை துப்பாக்கியினை ஓர் இடத்தில் நிலையாக பொருத்தி (Fixed) அதனை தூர இருந்து கம்பி அல்லது கயிறு மூலம் இயக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் உண்டு. மேலும் துப்பாக்கிகளினை காலிற்கு இடையில் வைத்து இயக்கி தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு. எனவே AK 47 அல்லது T 56 போன்ற துப்பாக்கிகளினால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்பது ஏற்றுக்கொள்ள தக்க விவாதம் அல்ல.
பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு நாடப்பட்ட தீரா நோய்களும், அதிகளவு கடன், காதல் தோல்வி போன்றன காணப்படலாம்.
மேலும் பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஓர் ஒதுக்கு புறமான, ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியினை தான் தெரிவு செய்வார்கள். விதிவிலக்காக சிலர் பிரபல்யமான ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியினை தெரிவு செய்வதும் உண்டு. பொதுவாக தற்கொலை செய்துகொள்ளபவர்கள் வாயின் உட்பகுதி, தொண்டை, நெற்றியின் பக்கப்பகுதி (temple), கழுத்து, நெஞ்சு போன்ற பகுதிகளைத்தான் தெரிவு செய்துகொள்வார்கள். பல சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்து கொள்பவர்கள் தமது தற்கொலைக்கான காரணத்தினை கடிதம் மூலம், முகநூல் பதிவு மூலம் அல்லது கைத்தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவர்.

Does A Gunshot Wound To The Head Mean Instant Death?
பொதுவாக தற்கொலை செய்து கொள்ளும் இடத்தில் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி காணப்படும் அத்துடன் அப்பிரதேசம் ஒழுங்கான முறையில் (not disturbed) காணப்படும். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து இருப்பார்கள்.
மேற்கூறிய இயல்புகள் பலவும் விஞ்ஞான ரீதியான சான்றாக இருப்பதில்லை அதன் காரணமாக இவ்வாறான மரணங்களினை ஆராய்பவர்கள் எப்பொழுதும் விஞ்ஞான ரீதியான சான்றுகளை தேடுவார்கள், இதன் பொழுது அவர்கள் பயன்படுத்தும் சில முறைகள் வருமாறு
1. துப்பாக்கி ஒன்று இயங்கும் பொழுது அதில் இருந்து வெளியேறும் புகை மற்றும் காபன் போன்றன அதனை இயக்கியவரின் கையில் குறிப்பாக விரல்களில் படியும் இதனை Gun Shot Residue (GSR ) என்றழைப்பர். இறந்தவரின் விரலில் GSR காணப்படுகின்றதா என ஆராய்வதன் மூலம் யார் துப்பாக்கியினை இயக்கியது என இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

Analysis of gunshot residues produced by .38 caliber handguns ...

Gunshot Residue (GSR) and Testing
2. துப்பாக்கி ஒன்று மனித உடலிற்கு மிக அண்மையில் வைத்து இயங்கும் பொழுது, காயம் உண்டாகிய மனித உடலில் இருந்து அதிக வேகத்தில் மிகச் சிறிய அளவில் இரத்த துணிக்கைகள் துப்பாக்கியிலும் துப்பாக்கியினை இயக்கியவரின் கையிலும் தெறிக்கும் இதனை சட்ட மருத்துவத்தில் Back Spatter என்றழைப்பர். இந்த Back Spatter இணை ஆராய்ந்து யார் துப்பாக்கியினை இயக்கியது என்று கண்டுபிடிக்கலாம்.

Bloodstain Pattern Analysis - Independent Forensic Services
3. பல சந்தர்ப்பங்களில் இயக்கியவரின் கை ரேகையானது துப்பாக்கியில் படிந்து இருக்கும். கைரேகையானது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமானது.
4. சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கி மூலம் சுட்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் கையில் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி அவர்கள் இறந்த பின்னரும் கூட இறுக்க பற்றிய நிலையில் இருக்கும். இவ்வாறான நிலை சட்ட மருத்துவத்தில் cadaveric spasm என்றழைக்கப்படும். இவ்வாறான நிலையினை நாம் செயற்கையான முறையில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தாலும் இறந்தவரின் விரல்கள் துப்பாக்கியினை இறுக்க பற்றி பிடிக்காது.

The occurrence of cadaveric spasm is a myth | SpringerLink
இவ்வாறான முறைகளை பின்பற்றுவதன் மூலம் சட்ட வைத்திய நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் மிக இலகுவாக குறித்த நபர் மரணம் அடைந்த சூழ்நிலையினை விஞ்ஞான ரீதியான ஆதாரங்களுடன் கண்டறிவர்.
முற்றும்

ஆபத்தான கட்டிப்போடல்

அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் சம்பவத்தில் போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் கழுத்துப் பகுதியில் தனது முழங்காலினை வைத்து நெரித்ததினால் அந்த நபர் பரிதாபகரமான முறையில் இறந்து போனார். நடைபெற்ற இந்த சம்பவம் உலகம் பூராகவும் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இவ்வாறு குற்றவாளிகளை அல்லது சந்தேக நபர்களை கைது செய்யும் பொழுது அல்லது சிறையில் உள்ள சிறைக்கைதிகளினை அடக்கும் பொழுது போலீசார் பல்வேறுபட்ட வழிமுறைகளில் அவர்களை விலங்கினாலும் கைகளினாலும் கட்டிப்போடுவார்கள் ( Physical restrain methods). இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இப்பதிவில் இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது என்பது பற்றி விளக்கப்படுகின்றது.

wp-15909082187462278077131009766586.jpg

1. Hog-tying (total appendage restraint procedure -TARP)
இந்த முறையில் கைதியின் கைகள் மற்றும் கால்கள் மடிக்கப்பட்டு அவரின் உடலின் பின்புறத்தில் கட்டப்படும். அதன் பின்னர் கைதி முகம் தரையினை பார்த்தவாறு கிடத்தப்படுவார். இந்த நிலையின் பொழுது கைதியின் நெஞ்சுபகுதி அழுத்தப்படுவதினால் அவருக்கு படிப்படியாக மூச்சு திணறல் ஏற்படும். அத்துடன் அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு மற்றும் சுவாச நோய்கள் இருந்தால் இந்த நிலைமை காரணமாக அவை மோசமடையும். மேலும் கைதி ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தால் மூச்சுத்திணறல் அதிகரிக்கும். இறுதியில் கைதி கவனிப்பாரற்ற நிலையில் இருப்பாராயின் இறப்பு ஏற்படும்.

22. Completed Accessible Hog Tie – TheDuchy

2. Choke hold
இந்த முறையின் பொழுது உத்தியோகத்தர் பின்னே நின்று, கைதியின் கழுத்தினை சுற்றி கையினை இறுக்குவார். இங்கு கழுத்து பகுதியினை கை பகுதியே அழுத்தும். இந்த முறையின் பொழுது கழுத்தின் முன் பகுதியில் இருக்கும் சுவாசக்குழாய் அழுத்தப்படும். அதன்காரணமாக கைதி மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறக்க நேரிடலாம்.

01

3. Lateral vascular neck restraint (LVNR)
இந்த முறையும் மேற்குறித்த முறையினை ஒத்தது ஆனால் இங்கு கழுத்து பகுதியானது முழங்கை பகுதியில் நெறிப்படும். இதனால் கைதிக்கு மூச்சு திணறல் ஏற்படும்.

02

மேற்குறித்த முறைகள் தவிர பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீசார் மற்றும் சிறைக்காவலர் தமது வசதி, அனுபவத்திற்கு ஏற்றவாரு பல்வேறு முறைகளை உருவாக்குவார்கள். பொதுவாக கைதிக்கு கைவிலங்கையினை மாட்டிய பிறகு அல்லது அவயவங்களை கட்டிய பிறகு இவ்வாறு செய்வதன் காரணமாக, கைதிகளினால் தப்பித்து ஓட முடியாது. இவ்வாறான கட்டுப்போடும் முறைகளினால் பல சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக பல நாடுகளில் இத்தகைய முறைகளை பாவிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக கைதிகளைக் கட்டுப்படுத்த Pepper spray போன்ற மிளகு எண்ணெயினை விசிறும் உபகரணங்கள், மின்சார தாக்குதலை உண்டாக்கும் Taser போன்ற துப்பாக்கிகள் நவீன உலகத்தில் பயன்படுகின்றன. இதனால் பெருமளவில் உயிரிழப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளன.

wp-15841865674796858912672646381447.jpg
முற்றும்

வெடி மருந்தின்றி ஒரு வெடிப்பு சம்பவம்

இலங்கையில்  கல்சியம் காபைட் ஆனது பொதுவாக மலசல கூட கழிவு குழாய்கள், சமையற்கூட கழிவு குழாய்கள் கழிவுகளினால் அடைபடும் பொழுது அவற்றினை நீக்க பாவிப்பார்கள்.

அது கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட் ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும் இவ்வாயுவானது மிகஎளிதாக தீப்பற்றி எரியும் தன்மை யுடையது மற்றும் இவ்இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது.இங்கு மலசலக்கழிவுத்துதொட்டியானது ஓர் இறுக்கமான அறை ஆகும் இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு சம்பவம் நிகழலாம்.

விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை

அண்மையில் இலங்கையில் கறுப்பு சிறுத்தை ஒன்று மனிதர்கள் வைத்த பொறியில் மாட்டியபின்னர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இறுதியில் அது இறந்த பொழுது அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக நாம் மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நடைபெறும் உடற் கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இறந்த சிலவகை விலங்குகளுக்கும் உடற் கூராய்வு பரிசோதனை செய்யப்படுகின்றது. அதனைப் பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

Daily Mirror - Haphazard development Jeopardises Leopard Habitat
முந்தைய காலத்தில் பொதுவாக அரிய வகையான விலங்குகள் போன்ற வெள்ளை நாகம், சிலவகை ஆமை இனம், பண்டா …. போன்றன இறக்கும் பொழுதும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு இனங்களான பந்தய குதிரைகள் மற்றும் பந்தய புறா போன்ற இறக்கும் பொழுதும் இவ்வாறான உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய விஞ்ஞான உலகத்தில் மேற்குறித்த சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாது பண்ணை போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் விலங்கினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், தமது செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும் பொழுதும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீர் வாழ் உயிரினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், புதிய வகை நோய்கள் விலங்குகளை தாக்கி இறப்பினை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திலும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

10 of the Most Famous Endangered Species | Britannica

இவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் நோக்கம் குறித்த விலங்குகள் என்ன காரணத்திற்காக இறந்தது என்று கண்டு பிடிப்பதற்காகவும் மற்றும் எவ்வாறான சூழ் நிலையில் விலங்குகள் இறந்தது என்று கண்டறிவதற்காகவும் ஆகும். உதாரணமாக விலங்குகள் நோய் வாய்ப்பட்டு இறந்ததா அல்லது நஞ்சு ஊட்டப்பட்டு அல்லது வேறு எதாவது சூசகமாக முறையில் கொல்லப்பட்டதா எனக்கண்டறிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இது தவிர உடற் கூராய்வு பரிசோதனைகளினால் ஏற்படும் வேறு நன்மைகள் யாவை? உதாரணமாக பண்ணை ஒன்றில் உள்ள ஆயிரக்கணக்கான கோழிகள் இனம் காணப்படாத நோயினால் இறக்குமானால், அவை எந்த நோயினால் இறந்தது , நோயினால் விலங்கில் ஏற்பட்ட தாக்கம் என்ன, என்ன வகை மருந்தினால் சிகிச்சை வழங்க முடியும் போன்ற தகவல்களை உடற் கூராய்வு மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நாம் எமது தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக ஓர் விலங்கினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பினால் அருகில் உள்ள கால்நடை வைத்தியரை நாடவேண்டும். சில சந்தர்ப்பத்தில் நீதிமன்றினால் உத்தரவிடப்படும் ஆணைக்கு அமையவும் விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை நடைபெறும்.
பொருளாதார ரீதியாக விலங்குகளை வளர்த்து அதன் மூலம் அனுகூலம் அடைபவர்கள் நிச்சயம் இவ்வாறான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் அவர்களின் விலங்குகளில் ஏற்படும் அநியாய உயிரிழப்புக்களை தடுக்கலாம்.
முற்றும்

பாம்பு கொலை செய்யுமா?

இந்தியாவின் கேரளாவில் இளம் பெண் உத்ராவை அவரின் கணவர் சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. முதலில் அணலி பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பு மார்ச் 2 ஆம் திகதி உத்ராவை கடித்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக தாய் வீட்டில் இருந்தார் உத்ரா. இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி கருமூர்க்கன் வகை பாம்புடன் உத்ராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சூரஜ். அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது போத்தலில் இருந்த பாம்பைத் திறந்து விட்டுள்ளார். உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்த பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து வெளியறி பாம்பு கொண்டு வந்த போத்தலை வெளியே வீசியுள்ளார்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.

Death of Kollam woman was murder; husband confesses to crime | Murder
இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் ஒருவர் பாம்பு அல்லது ஓர் ஏனைய விலங்கின் தாக்குதலினால் உயிர் இழப்பார் எனில் அவரது மரணம் இயற்கை அல்லாத மரணத்தினுள் அடங்குவதினாலும் சட்ட திட்டங்களின் (குற்றவியல் சட்ட கோர்வை) பிரகாரமும் கட்டாயம் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக பாம்பு கடித்தல் என்பது தவறுதலாகவே நடைபெறும் எனினும் விதிவிலக்காக ஒருசில சந்தர்ப்பத்தில் பாம்பு கொலை செய்யும் கருவியாகவும் தற்கொலை செய்து கொள்ளும் கருவியாகவும் பாவிக்கப் பட்டுள்ளது.

Daboia russelii ( Indian Russell's viper/ Rakta Anali) (med bilder ...
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது பாம்பு கடிப்பதினாலே ஏற்படும் அடையாளம் இருப்பதை கொண்டும் பாம்பின் விஷத்தினால் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டும் பாம்பு கடித்தமை உறுதிப்படுத்தப்படும். இலங்கையில் இறந்தவரின் இரத்தத்திதினை பரிசோதித்து பாம்பு கடித்தமையினை உறுதிப்படுத்தும் முறைமை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்த அடையாளம் தெளிவாக தெரியாது இதன் காரணமாகவும் இவ்வாறு இறந்தவரின் உடற் கூராய்வு பரிசோதனை சவால் மிக்கதாக அமையும்.
சில சந்தர்ப்பத்தில் உறவினர்கள் இறந்த பாம்பினையும் கொண்டுவருவார்கள், அத்தகைய சந்தர்ப்பத்தில் பாம்பின் கொட்டும் பற்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் உடலில் காணப்படும் காயத்தில் இருக்கும் பற்களின் அடையாளங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் ஒப்பீடு செய்வதன் மூலம் கடித்த ஓரளவிற்கு பாம்பினை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைமைகள் மோசமடைவதன் காரணமாகவும், பாம்பின் விஷத்தினை இல்லாமல் செய்வதற்காக கொடுக்கப்படும் மருந்தின் ஒவ்வாமை காரணமாகவும் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் யாருக்காவது பாம்பு கடித்து இறப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றும்

நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் 3 பெண்கள் இறந்தார்கள், அத்துடன் சிலர் காயமடைந்தனர். எம்மில் பலருக்கு இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் எவ்வாறு சன நெரிசலில் சிக்கி மக்கள் இறப்பர் என்பது தான்.

கீழே உள்ள படமானது உதைபந்தாட்டமைதானம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இறந்தவர்களை குறிக்கின்றது

Major soccer stadium disasters - CBS News இவ்வாறான சம்பவங்கள் உலகில் முன்பும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. சில சம்பவங்களின் பொழுது நூற்றுக்கணக்கானோர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது. பங்காளதேசத்திலும், கும்பமேளாவின் பொழுது இந்தியாவிலும், மதீனாவிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  இனி எவ்வாறு இவ்வாறன சந்தர்ப்பத்தில் உயிரிழப்பு நடைபெறுகின்றது என்பது பற்றி பார்ப்போம்.

  1. இவ்வாறான சம்பவங்கள் மிக இடவசதி குறைந்த இடத்தில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதினால் பொதுவாக ஏற்படுகின்றது. இங்கு பொதுவாக வெளியேறும் பாதை மூடப்பட்டிருக்கும் அல்லது மிக ஒடுக்கமானதாக இருக்கும். இதன் பொழுது மக்கள் மிக நெருங்கி ஒருவரோடு அமுத்தப்படுவதினால் அவர்களினால் மக்கள் மூச்சு விட கடினப்படுவர். நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .

இவ்வாறான நிலையின் பொழுது  பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். மேலும் சூழலில் உள்ள ஓட்ஸிசன் அளவும் குறைவடைவதினால் அவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறப்பு ஏற்படலாம்.

  1. இது தவிர மக்கள் நெருக்கி அடிப்பதினால் கட்டிடம் உடைந்து வீழ்ந்து இறப்பினை ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.
  2. சில சந்தர்ப்பங்களில் மின்சார கேபிள்கள் அறுந்து மக்கள் மீது வீழ்ந்து மக்கள் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
  3. இவ்வாறான சன நெருக்கடி மிக்க இடத்தில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு இயர்கையாக இருக்கும் நோய் நிலைமைகளான மாரடைப்பு, ஆஸ்துமா போன்றன அதிகரிப்பதினாலும், அதீத வியர்வை மற்றும் அதிகரித்த சூழல் வெப்பநிலை போன்றவற்றின் காரணமாக சலரோக நோயாளியின் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவு சடுதியாக குறைவதினாலும் இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.
  4. அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் அல்லது பிரதேசங்களில் மக்கள் இவ்வாறு ஒன்று கூடும் பொழுது அவர்கள் இலகுவாக வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாவர். இதனாலும் இறப்பு ஏற்படலாம்.

எனவே இவ்வாறு மக்கள் குறுகிய இடத்தில் அதிகளவில் ஒன்று கூடும் பொழுது ஏற்பாட்டாளர்கள் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதினை தடுக்கும் முகமாக அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் மனித உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

                                                                    முற்றும்