விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை

அண்மையில் இலங்கையில் கறுப்பு சிறுத்தை ஒன்று மனிதர்கள் வைத்த பொறியில் மாட்டியபின்னர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இறுதியில் அது இறந்த பொழுது அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக நாம் மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நடைபெறும் உடற் கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இறந்த சிலவகை விலங்குகளுக்கும் உடற் கூராய்வு பரிசோதனை செய்யப்படுகின்றது. அதனைப் பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

Daily Mirror - Haphazard development Jeopardises Leopard Habitat
முந்தைய காலத்தில் பொதுவாக அரிய வகையான விலங்குகள் போன்ற வெள்ளை நாகம், சிலவகை ஆமை இனம், பண்டா …. போன்றன இறக்கும் பொழுதும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு இனங்களான பந்தய குதிரைகள் மற்றும் பந்தய புறா போன்ற இறக்கும் பொழுதும் இவ்வாறான உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய விஞ்ஞான உலகத்தில் மேற்குறித்த சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாது பண்ணை போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் விலங்கினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், தமது செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும் பொழுதும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீர் வாழ் உயிரினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், புதிய வகை நோய்கள் விலங்குகளை தாக்கி இறப்பினை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திலும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

10 of the Most Famous Endangered Species | Britannica

இவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் நோக்கம் குறித்த விலங்குகள் என்ன காரணத்திற்காக இறந்தது என்று கண்டு பிடிப்பதற்காகவும் மற்றும் எவ்வாறான சூழ் நிலையில் விலங்குகள் இறந்தது என்று கண்டறிவதற்காகவும் ஆகும். உதாரணமாக விலங்குகள் நோய் வாய்ப்பட்டு இறந்ததா அல்லது நஞ்சு ஊட்டப்பட்டு அல்லது வேறு எதாவது சூசகமாக முறையில் கொல்லப்பட்டதா எனக்கண்டறிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இது தவிர உடற் கூராய்வு பரிசோதனைகளினால் ஏற்படும் வேறு நன்மைகள் யாவை? உதாரணமாக பண்ணை ஒன்றில் உள்ள ஆயிரக்கணக்கான கோழிகள் இனம் காணப்படாத நோயினால் இறக்குமானால், அவை எந்த நோயினால் இறந்தது , நோயினால் விலங்கில் ஏற்பட்ட தாக்கம் என்ன, என்ன வகை மருந்தினால் சிகிச்சை வழங்க முடியும் போன்ற தகவல்களை உடற் கூராய்வு மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நாம் எமது தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக ஓர் விலங்கினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பினால் அருகில் உள்ள கால்நடை வைத்தியரை நாடவேண்டும். சில சந்தர்ப்பத்தில் நீதிமன்றினால் உத்தரவிடப்படும் ஆணைக்கு அமையவும் விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை நடைபெறும்.
பொருளாதார ரீதியாக விலங்குகளை வளர்த்து அதன் மூலம் அனுகூலம் அடைபவர்கள் நிச்சயம் இவ்வாறான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் அவர்களின் விலங்குகளில் ஏற்படும் அநியாய உயிரிழப்புக்களை தடுக்கலாம்.
முற்றும்

பாம்பு கொலை செய்யுமா?

இந்தியாவின் கேரளாவில் இளம் பெண் உத்ராவை அவரின் கணவர் சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. முதலில் அணலி பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பு மார்ச் 2 ஆம் திகதி உத்ராவை கடித்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக தாய் வீட்டில் இருந்தார் உத்ரா. இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி கருமூர்க்கன் வகை பாம்புடன் உத்ராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சூரஜ். அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது போத்தலில் இருந்த பாம்பைத் திறந்து விட்டுள்ளார். உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்த பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து வெளியறி பாம்பு கொண்டு வந்த போத்தலை வெளியே வீசியுள்ளார்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.

Death of Kollam woman was murder; husband confesses to crime | Murder
இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் ஒருவர் பாம்பு அல்லது ஓர் ஏனைய விலங்கின் தாக்குதலினால் உயிர் இழப்பார் எனில் அவரது மரணம் இயற்கை அல்லாத மரணத்தினுள் அடங்குவதினாலும் சட்ட திட்டங்களின் (குற்றவியல் சட்ட கோர்வை) பிரகாரமும் கட்டாயம் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக பாம்பு கடித்தல் என்பது தவறுதலாகவே நடைபெறும் எனினும் விதிவிலக்காக ஒருசில சந்தர்ப்பத்தில் பாம்பு கொலை செய்யும் கருவியாகவும் தற்கொலை செய்து கொள்ளும் கருவியாகவும் பாவிக்கப் பட்டுள்ளது.

Daboia russelii ( Indian Russell's viper/ Rakta Anali) (med bilder ...
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது பாம்பு கடிப்பதினாலே ஏற்படும் அடையாளம் இருப்பதை கொண்டும் பாம்பின் விஷத்தினால் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டும் பாம்பு கடித்தமை உறுதிப்படுத்தப்படும். இலங்கையில் இறந்தவரின் இரத்தத்திதினை பரிசோதித்து பாம்பு கடித்தமையினை உறுதிப்படுத்தும் முறைமை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்த அடையாளம் தெளிவாக தெரியாது இதன் காரணமாகவும் இவ்வாறு இறந்தவரின் உடற் கூராய்வு பரிசோதனை சவால் மிக்கதாக அமையும்.
சில சந்தர்ப்பத்தில் உறவினர்கள் இறந்த பாம்பினையும் கொண்டுவருவார்கள், அத்தகைய சந்தர்ப்பத்தில் பாம்பின் கொட்டும் பற்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் உடலில் காணப்படும் காயத்தில் இருக்கும் பற்களின் அடையாளங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் ஒப்பீடு செய்வதன் மூலம் கடித்த ஓரளவிற்கு பாம்பினை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைமைகள் மோசமடைவதன் காரணமாகவும், பாம்பின் விஷத்தினை இல்லாமல் செய்வதற்காக கொடுக்கப்படும் மருந்தின் ஒவ்வாமை காரணமாகவும் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் யாருக்காவது பாம்பு கடித்து இறப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றும்

நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் 3 பெண்கள் இறந்தார்கள், அத்துடன் சிலர் காயமடைந்தனர். எம்மில் பலருக்கு இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் எவ்வாறு சன நெரிசலில் சிக்கி மக்கள் இறப்பர் என்பது தான்.

கீழே உள்ள படமானது உதைபந்தாட்டமைதானம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இறந்தவர்களை குறிக்கின்றது

Major soccer stadium disasters - CBS News இவ்வாறான சம்பவங்கள் உலகில் முன்பும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. சில சம்பவங்களின் பொழுது நூற்றுக்கணக்கானோர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது. பங்காளதேசத்திலும், கும்பமேளாவின் பொழுது இந்தியாவிலும், மதீனாவிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  இனி எவ்வாறு இவ்வாறன சந்தர்ப்பத்தில் உயிரிழப்பு நடைபெறுகின்றது என்பது பற்றி பார்ப்போம்.

  1. இவ்வாறான சம்பவங்கள் மிக இடவசதி குறைந்த இடத்தில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதினால் பொதுவாக ஏற்படுகின்றது. இங்கு பொதுவாக வெளியேறும் பாதை மூடப்பட்டிருக்கும் அல்லது மிக ஒடுக்கமானதாக இருக்கும். இதன் பொழுது மக்கள் மிக நெருங்கி ஒருவரோடு அமுத்தப்படுவதினால் அவர்களினால் மக்கள் மூச்சு விட கடினப்படுவர். நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .

இவ்வாறான நிலையின் பொழுது  பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். மேலும் சூழலில் உள்ள ஓட்ஸிசன் அளவும் குறைவடைவதினால் அவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறப்பு ஏற்படலாம்.

  1. இது தவிர மக்கள் நெருக்கி அடிப்பதினால் கட்டிடம் உடைந்து வீழ்ந்து இறப்பினை ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.
  2. சில சந்தர்ப்பங்களில் மின்சார கேபிள்கள் அறுந்து மக்கள் மீது வீழ்ந்து மக்கள் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
  3. இவ்வாறான சன நெருக்கடி மிக்க இடத்தில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு இயர்கையாக இருக்கும் நோய் நிலைமைகளான மாரடைப்பு, ஆஸ்துமா போன்றன அதிகரிப்பதினாலும், அதீத வியர்வை மற்றும் அதிகரித்த சூழல் வெப்பநிலை போன்றவற்றின் காரணமாக சலரோக நோயாளியின் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவு சடுதியாக குறைவதினாலும் இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.
  4. அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் அல்லது பிரதேசங்களில் மக்கள் இவ்வாறு ஒன்று கூடும் பொழுது அவர்கள் இலகுவாக வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாவர். இதனாலும் இறப்பு ஏற்படலாம்.

எனவே இவ்வாறு மக்கள் குறுகிய இடத்தில் அதிகளவில் ஒன்று கூடும் பொழுது ஏற்பாட்டாளர்கள் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதினை தடுக்கும் முகமாக அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் மனித உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

                                                                    முற்றும்

கொரோனாவும் சொல்மயக்கமும்

இன்றைய கால கட்டத்தில் நாட்டின் ஒவ்வோர் பிரசைகளும் சுகாதாரம் சம்பந்தமான தகவல்களை அதிலும் கொரோனா நோயின் பற்றிய தகவல்களை அறிவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த நிலையில் பல்வேறுபட்ட தரப்பினராலும் பல்வேறு தகவல்கள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எல்லாவற்றின் நோக்கமும் சாதாரண பொதுமக்களை தெளிவடைய வைப்பதே. உண்மையில் இவ்வாறான அறிக்கைகள், பத்திரிகையாளர் கூட்டங்கள் போன்றவற்றில் சாதாரண மருத்துவ அறிவு குறைந்த மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையிலேயே சொற்பதங்கள் பாவிக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கும் நிபுணர்கள், மருத்துவர்கள் கடுமையான சாதாரண மக்களினால் விளங்கிக் கொள்ள முடியாத சொற்பதங்களை பாவிப்பதில்லை. அதாவது அவர்கள் தங்களின் வித்துவ காச்சலினை இவ்வாறான இடங்களில் காண்பிப்பதில்லை. இவ்வாறான நிலையில் வெளியிடப்படும் கருத்துக்களினை மற்றைய மருத்துவர்கள் அந்த அறிக்கை அல்லது கருத்து யாரால், யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது என்பதினை நோக்கவேண்டும். இன்றைய கால கட்டத்தில் மருத்துவ துறைக்கான கலைச்சொற்கள் குறைந்த அளவிலேயே பாவனையில் உள்ளன. மேலும் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய சொற்கள் உருவாக்கப்படவும் இல்லை. இதன் காரணமாக ஒவ்வோர் வைத்தியரும் தனது ஆற்றலுக்கு ஏற்ப தமிழ் சொற்பதங்களை பாவிப்பர், எவ்வாறாயினும் இறுதி இலக்கு பொதுமக்கள் பயனடைதலே ஆகும். மருத்துவர்கள் தமது கல்வி திறமையினை மற்றைய மருத்துவர்களுக்கு மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு வெளிக்காட்ட பல்வேறு கருத்தரங்குகள், ஆண்டுக்கூட்டங்கள்… வழமையாக ஒழுங்கமைக்கப்படும்.

Sticker Love, Watercolor, Paint, Wet Ink, Confusion, Word, Desktop ...சட்ட வைத்திய அதிகாரிகள் கூட பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக இருதயத்தின் முடியுரு நாடியில் கொலஸ்ரோல் படிவதன் காரணமாக நாடியில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரும். ஆனால் பொதுமக்களில் பெரும்பாலானோரும், நீதித்துறை சார்ந்தோரும், போலீசாரும் இதனை வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளினால் தான் மாரடைப்பு வந்ததாக தமது அறிக்கைகளில் மற்றும் சாட்சியங்களில் குறிப்பிடுவர்.
இலங்கை போன்ற ஓர் நாட்டில் நாட்டின் சகல அல்லது பெரும்பாலான பொதுமக்கள் இவ்வாறன சொற்பதங்கள் பற்றி தெளிவாக அறிவதற்கு உரிய வசதிகள் இல்லை. தமிழில் தகுதி வாய்ந்தவர்களினால் நடத்தப்படும் மருத்துவ சம்பந்தமான இணையத்தளங்கள் மற்றும் இணைய ஆக்கங்கள் தற்பொழுது தமிழில் மிகக் குறைவாக உள்ளன. இந்நிலையில் சாதாரண பொதுமக்களும் இணையத்தினை பாவித்து அறிவு பெறுவார்கள் என்பது சந்தேகமே.

முற்றும்

உயிர்களைப் பறித்த Styrene விஷவாயு

நேற்றைய தினம் அதிகாலையில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின்  விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு இரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என  தகவல் தெரிவிக்கின்றன.

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிளாஸ்ட்டிக் தொழிலிற்சாலையில் தான் இவ்விபத்து நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்திய வாயு styrene வாயு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

மேற்படி சம்பவத்தினை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 1984-ல் நிகழ்ந்த போபால் விச வாயு கசிவு சம்பவத்தோடு பலர் ஒப்பிடுகின்றனர். போபாலில் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன நச்சு வாயுவால் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகினர். அத்துடன் 3,500க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இனி styrene  வாயுவின் தாக்கத்தினால் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது பற்றி சிறிது பார்ப்போம். strene  ஆனது  polystyrene plastics, ரப்பர், latex மற்றும்  resins உற்பத்தியில் பயன்படும் ஓர் பொருளாகும். இது ஓர் எளிதில் தீப்பற்றக்கூடிய ஓர் திரவமாகும். இது வாகனங்களின் புகை, சிலவகையான மரக்கறி போன்றவற்றிலும் காணப்படும்.

Gas leak, Vishakhapatnam gas leak pic, Vizag gas leak pics, Visakhapatnam pics, LG chemical plant, Gopalapatnam, Indian Express

styrene  இற்கு ஒருவர் உடனடியான முறையில் அல்லது நீண்ட காலத்திற்கு தொடர்பு படலாம். ஒருவர் Styrene வாயுவினை சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு கண் எரிவு, தலையிடி, தலை சுற்றல், வாய் எரிவு, வாந்தி  மற்றும் சுய நினைவு இழத்தல்  போன்றன ஏற்படலாம். இது தவிர ஒருவர் நீண்ட காலமாக styrene உடன் தொடர்புபடுவாராயின் அவருக்கு  மனச்சோர்வு மற்றும் நரம்புத்தொகுதியில் பாதிப்பு(peripheral neropathy) என்பன ஏற்பட சாத்தியம் உண்டு.

Gas leak, Vishakhapatnam gas leak pic, Vizag gas leak pics, Visakhapatnam pics, LG chemical plant, Gopalapatnam, Indian Express

LC50 (Lethal Concentration 50) என்பது குறித்த ஓர் கூட்ட விலங்குகளுக்கு ஓர் நஞ்சானது செலுத்தப்படும்பொழுது  அதில் உள்ள அரைவாசி எண்ணிக்கையான விலங்குகளை இறக்க வைக்க தேவையான நஞ்சின் அளவு ஆகும். இங்கு  LC50 ஆனது  2194 ppm ஆக உள்ளது அதாவது குறைந்த செறிவுள்ள styrene  வாயுவே அதிகளவான உயிரினங்களை கொல்ல போதுமானது.

மேலும் The LCLo (Lowest lethal concentration) என்பது குறித்த காலப்பகுதியில் ஓர் விலங்கில் இறப்பினை ஏற்படுத்த தேவையான  ஓர் நஞ்சின் குறைந்த செறிவு ஆகும். styrene வாயுவானது 10,000 ppm அளவில் வளியில் காணப்படும் பொழுது 30 நிமிடத்தில் அது இறப்பினை ஏற்படுத்தும்.

Gas leak, Vishakhapatnam gas leak pic, Vizag gas leak pics, Visakhapatnam pics, LG chemical plant, Gopalapatnam, Indian Express

ஒட்டுமொத்தத்தில் Styrene  ஆனது ஓர் நஞ்சு தன்மையான வாயு ஆகும் அதன் காரணமாகவே மேற்குறித்த இழப்புக்கள் ஏற்பட்டன. நாட்கள் செல்லச்செல்ல தான் முழுமையான பாதிப்பு விபரம் வெளிவரும். இறுதியாக கொரோனா நோய்ப்பரவல் காரணமாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததன் காரணமாக வாயு தேங்கி இருந்தமையாலும் அதிக வெப்பம் காரணமாக styrene  வாயு தன்னிச்சையாகவே auto polymerization  அடைந்ததன் காரணமாகவும் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. விசாரணையின் முடிவில் தான் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.

                                                                    முற்றும்

தமிழ்ப்பெண்களும் ஆபாசப் படங்களும் (பகுதி 01)

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒரு கும்பல் பெண்களை மிரட்டி ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டியதாக செய்திகள் வெளிவந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அவ்வாறே ஒருசில சம்பவங்கள் வட புலத்திலேயும்  நடைபெற தொடங்கி விட்டன என்பது தான் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்.

1. யார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் ?
பெரும்பாலும் இளைஞர்களே ஈடுபடுகின்றனர் குறிப்பாக 20 தொடக்கம் 30 வயதான இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேலை அற்றவர்களாகவும் மதுபானம் மற்றும் போதை பொருளுக்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் அதிக வாகன கடன் போன்ற கடன்களையும் கொண்டுள்ளனர்.

2. யார் இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
இளவயது பெண்கள் தொடக்கம் நடுத்தர வயது குடும்ப பெண்கள் வரை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்கள் சமூக சூழ்நிலை கருதியும், தமது பாதுகாப்பு கருதியும் தகவல்களை வெளிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவனை இழந்த பெண்களும் கணவனினால் கைவிடப்பட்ட பெண்களும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. எவ்வாறு பெண்கள் இந்த வலையில் விழுகின்றனர்?
பொதுவாக காதல்/நட்பு மூலமே பெண்கள் இந்த மோசடி வலையில் விழுகின்றனர். மேலும் சிலர் குறித்த நபர்களிடம் இருந்து பொருட்கள் மற்றும் பண உதவிகள் போன்றவற்றினை பெறும் சந்தர்ப்பத்தில் இந்த மோசடி வலையில் விழுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் முகநூல், வைபர், வாட்சப் போன்றவற்றின் மூலமும் பெண்கள் இந்த வலையில் வீழ்த்தப்படுகின்றனர். இந்த மோசடி ஆண்கள் தங்களை காதல் செய்யுமாறு வற்புறுத்துவார்கள் மறுக்கும் சந்தர்ப்பத்தில் தமது கைகளை அல்லது கழுத்தினை பிளேட்டினால் அறுத்து தற்கொலை செய்ய போவதாகவும் அச்சுறுத்துவர். சிலர் பெண்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியும் உள்ளனர்.

4. எவ்வாறு இந்த மோசடி நடைபெறுகின்றது?
காதல் அல்லது நடப்பு மூலம் ஓர் பெண்ணின் படத்தினை அவர்கள் பெறுவார்கள் அதன் பின்னர் அவர்கள் போட்டோஷொப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் நிர்வாணமாக இருக்குமாறு மாற்றி அமைப்பார்கள், சில சந்தர்ப்பத்தில் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை நேரிடையாகவே பெறுவார்கள். இதன் பின்னர் தான் அவர்களின் சுய ரூபம் தெரியவரும் அவர்கள் பெண்களிடம் வாகன லீசிங் கட்ட வேண்டும், கடன் கட்ட வேண்டும், புதிய போன் வாங்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்பார்கள். அவர்கள் மறுக்கும் பொழுது அவர்களின் நிர்வாண படத்தினை அல்லது தங்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தினை முகநூலில் அல்லது இணைய தளத்தில் பதிவேற்ற போவதாக குரு மிரட்டுவர். மேலும் இவர்கள் பொதுவாக போதைக்கு அடிமையானவர்களாக இருப்பதோடு பெண்களை தமது காம இச்சைக்கு (sexual torture) வேண்டியவாறு பயன் படுத்துவர் இதன் பொழுது அவர்கள் உடலியல் ரீதியான வேதனை, உளவியல் ரீதியான வேதனை, பாலியல் நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்து போன்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வர். இவர்கள் மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் உடலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவர்.

HP PNG

5. இவர்கள் குழுக்களாக இயங்குவார்களா ?
ஆம். இவர்களில் பல்வேறு பட்ட நபர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரே நேரிடையாக தொடர்பு படுவர், மற்றையோர் அவர்களுக்கு உதவி புரிவர். ஒருசிலர் பெண்களின் போட்டோக்களை கணகச்சித்தமாக மாற்றி அமைப்பர். சிலர் பெண்களின் நடமாட்டம், தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் … போன்றவற்றினை பெற்று கொடுப்பர். சில போலீஸ் உத்தியோகத்தர்களை இவர்கள் காசு கொடுத்து வாங்கியிருப்பர். அந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் பெண்கள் முறைப்பாடு செய்ய செல்லும் பொழுது பல்வேறு காரணங்களை கூறி வாக்குமூலங்களை திரித்து எழுதி, முறைப்பாட்டினை குடும்ப வன்முறையாக எழுதி திசை திரும்புவர். அத்துடன் குற்றவாளிக்கு அவர்கள் உடனே தகவல் கொடுப்பர் இதனால் முறைப்பாடு செய்ய சென்ற பெண்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவர்.

                                                                       தொடரும்

அடுத்த பகுதியில் எவ்வாறு பெண்கள் இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கலாம் என்பது பற்றியும் எவ்வாறு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்

தற்கொலை செய்து கொள்ளும் இடங்கள்

அண்மைக் காலப்பகுதியில் வடபுலத்தில் தற்கொலை செய்து கொளப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து உள்ளது. போதாக்குறைக்கு கொரோனா நோயினால் பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு முடக்க நிலையும் இதனை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவர் தனது வாழ்விடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். இதனை விடுத்து பல நூறு கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தும் ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கும் அவரது வசிப்பிடத்திற்கும் இடையிலான தூரத்திற்கும் அவரது மரணம் ஏற்பட்ட சூழ்நிலைக்கும் (தற்கொலை அல்லது கொலை) எதுவிதமான அறிவியல் ரீதியான தொடர்பும் இல்லை.
எம்மில் சிலர் தற்கொலை என்றால் நிச்சயம் அவர்களின் வீட்டில் அல்லது வீட்டிற்கு மிக அருகாமையில் தான் நடக்கும் எனவும் தூர பிரதேசங்களில் நடைபெற்றால் அது கொலை எனவும் பிழையான கருதுகோளை கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் பொதுவாக ஆள் நடமாற்றம் குறைந்த, ஒதுக்குபுறமான பிரதேசங்களையே தெரிவு செய்வர். மாறாக சிலர் ஆள் நடமாட்டம் கூடிய தொலை தூரத்தில் உள்ள பிரதேசங்களையும் தெரிவு செய்வர்.
தற்கொலை செய்வர்களின் மன நிலை, அவர்களின் கல்வி அறிவு, சமய, கலாச்சார செல்வாக்கு என்பன இவ்வாறு அவர்கள் தற்கொலை செய்யும் இடத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். இனி நாம் உலகத்தில் ஒரு சில இடங்களில் அதிகளவிலான மக்கள் தற்கொலை செய்துள்ளனர், அவ்வாறான ஒரு சில இடங்களினை பார்ப்போம்
1. Nanjing Yangtze ஆற்றுப்பாலம் இது சீனாவின் Nanjing பிரதேசத்தில் உள்ளது. இதில் இருந்து குதித்து வருடம் தோறும் பலர் இறக்கின்றனர். பலரின் உடல்கள் காணாது போய்விடுவதினால் எண்ணிக்கை மிக அதிகமாகும். 1968-2006 வரையான காலப்பகுதியில் 2000 வரையானோரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Nanjing Yangtze River Bridge - Wikipedia
2. Golden Gate பாலம் இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இங்கும் வருடம் தோறும் பல நூற்றுக்கணக்கானோர் குதித்து தற்கொலை செய்கின்றனர்.

Golden Gate Bridge - Wikipedia
இவ்வாறான இடங்களில் தற்கொலை செய்வதற்காகவே பலர் பல நூறு கிலோமீட்டர் பிரயாணம் செய்து வருவர்.
இலங்கையிலும் இவ்வாறான பல இடங்கள் உண்டு.

Kallady / Lady Manning Bridge (Batticaloa) · YAMU
முக்கியமாக இப்பதிவு தற்கொலையினை தூண்டும் விதமாக பதிவிடப்படவில்லை. மாறாக ஒருவர் எங்கு வேண்டுமானாலும் சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது கொலை செய்யப்படலாம். நாம் இது சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடும் பொழுது எமது குறுகிய நோக்கங்களை தவிர்த்து உண்மையினை வெளிக்கொணரும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்பதினை வலியுறுத்துகின்றது .
முற்றும்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)

எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of death) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermint) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது. உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .

அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்

  1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
  2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
  3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

Psychological Autopsy & Modern Autopsy - The Nurse Page

திடீரென ஏற்படும் மன அழுத்தங்களால் தற்கொலைகள் நிகழ வாய்ப்பு இருக்காதா? அப்படி ஒருவர் உடனடி முடிவில் தற்கொலையை மேற்கொண்டால் அது பற்றி இந்த முறையில் முரண்பாடு தோன்றாதா? இல்லை. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது விஞ்ஞானரீதியான ஓர் செயன்முறை அதன் பிரதான நோக்கமே தற்கொலையினை இனம்காணல். திடீர் மனஅழுத்தம் ஏற்படும் மனிதர்கள் எல்லோரும் தற்கொலை செய்வதில்லை ஒருசிலரே செய்கின்றனர். இதற்கு அவர்களின் ஆளுமை, கடந்தகால அனுபவங்கள், சமூக பொருளாதார காரணிகள், உறவினர்களின் அரவணைப்பு / வெறுப்பு (psychology, sociology, biology, epidemiology, and anthropology)….. போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை உளவியல் நிபுணர்கள் மேற்கொள்ளும் போது மேற்படி காரணிகளையும் கருத்தில்கொண்டே முடிவெடுப்பர் .

மேலும் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை ஆனது இறந்தவர்களின் உடலில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு நிகரானது அல்ல மாறாக உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை எவ்வாறான சூழ்நிலையில் ஒருவர் இறந்தார் என கணடறியப் உபயோகிக்கப்படும் பரிசோதனை முறை ஆகும். மேலைத்தேச நாடுகளில் Psychological Autopsy Investigator (PAI) என்ற விற்பன்னர்கள் மூலமே இவ்வாறான உளவியல் உடற்கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன

முற்றும்

தகனமா? புதைகுழியா? சிறந்தது

நாட்டில் ஒரு புறம் கொரோனா நோயினால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த நோயினால் இறந்த இரு முஸ்லீம் மக்களின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான முறையில் எரிக்கப்பட்டதினை தொடர்ந்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டுமா? புதைத்தால் ஆபத்தாய் முடியுமா? என்ற வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்பதிவில் இவை பற்றி ஆராயப்படுகின்றது.

Cremation-or-Burial-How-to-Choose-Whats-Best-for-You-1024x681

  1. இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

ஆரம்பத்தில் சுகாதார திணைக்களம் விடுத்த சுற்றறிக்கையின் பிரகாரம் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்த அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படும் உடல்களை புதைக்கவும் அல்லது எரிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது நோயாளியின் இறப்பினை தொடர்ந்து 1/4/2020 இல் ஏற்கனவே இருந்த சுற்றறிக்கை முற்றாக  மாற்றி அமைக்கப்பட்டு அவ்வாறான ஓர் உடலை எரித்து தகனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது QUARANTINE AND PREVENTION OF DISEASES என்ற சட்டத்தின் பிரகாரம் ஆகும். இச்சட்டதின் பிரகாரம் சுகாதார அமைச்சின் இயக்குனர் (DGHS ) அவர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

  1. சடலத்தினை புதைப்பதினால் கொரோனா வைரசு மேலும் பரவ சாத்தியம் உண்டா?

கொரோனா வைரசு 2019 ம் ஆண்டின் இறுதிப்குதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது, இக்குறுகிய கால இடைவேளையில் இவ்வைரசு சம்பந்தமான சகல தகவல்களும் ஆராய்ச்சிகள் மூலம் பெறப்படவில்லை. எனினும் கொரோனா குடும்ப வைரசுக்களின் இயல்புகள் போன்றவை ஏற்கனவே உள்ள தெளிவான தகவல்கள் ஆகும். தற்பொழுது உள்ள விஞ்ஞான அறிவின் பிரகாரம் இவ்வாறு கொரோனாவினால் இறந்த ஒருவரின் உடலினை புதைப்பதினால் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிப்பதில்லை.

  1. புதைப்பதினால் கொரோனா வைரசு நிலத்தடி நீரில் சென்று குடிநீர் மூலம் பரவுமா?

இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தில் உடலானது 8 அல்லது 10 அடி ஆழமான குழியிலே புதைக்கப்படும். மேலும் இரு தடித்த பொலித்தின் இனால் ஆன உறைகள் (more than 150µm and zipped seal body bag) மூலம் உடல் முற்றாக மூடப்படும். இதனால் உயிர்ப்பான நிலையில் வைரசுவானது நிலத்தடி நீரினை அடையாது. ஓரிரு மாதங்களில் உடலின் முக்கிய பகுதிகள் அழிவடைந்து விடும். அதன் பின்னரே பொலித்தீன் பைகள் உக்கி அழிவடைய ஆரம்பிக்கும். இவ்வாறே உடலினை சுற்றி பொலித்தீன் பைகள் போடப்படுவதினால் வழமைக்கு மாறாக அதிக வேகத்தில் உடலமானது உக்கி அழிவடையும். இக்காலப்பகுதியில் இறந்தவரின் உடலில் இருக்கும் வைரசுவும் இறந்து விடும். பொதுவாக இந்த வைரசுவானது 4 மணித்தியாலங்கள் வரை இறந்தவரின் உடலில் உயிர்ப்பான நிலையில் இருக்கும். வைரசுக்கள் தொடர்ந்து பிரிந்து பெருகி உயிர் வாழ  உயிர் நிலையில் உள்ள ஓர் கலம் தேவை. எனினும் தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம் இவ்வைரசுக்கள் உலோகம் போன்றவற்றின் மேற்பரப்பில் 72 மணித்தியாலங்கள் வாழும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் கருத்தின்படி புதைத்தல் மூலம் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதினை கூறவில்லை.

wp-15841865674796858912672646381447.jpg

  1. உடற் கூராய்வு பரிசோதனைகள் ஆபத்தானதா?

இவ்வைரசுவின் தொற்று ஏற்படும் காரணமாக இந்த நோயினால் இறந்தவர்களுக்கும் அவ்வாறு சந்தேக படுபவர்களுக்கு சுகாதார சேவை ஊழியர்களின் நலன் கருதி பொதுவாக செய்யப்படுவதில்லை. கொரோனா வைரசுவானது நோயாளி தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் அவரின் சுவாச தொகுதியில் உள்ள வைரசு ஆனது துணிக்கைகள் மூலம் மற்றையவரை சென்றடையும் ஆனால் உடற்கு கூராய்வு பரிசோதனையின்  பொழுது  இறந்த உடலில் இருந்து இவ்வாறு தும்மல் போன்ற போன்ற செயற்பாடுகள் நடைபெறாது எனினும் மின்சாரம் வாள் போன்றவற்றில் இருந்து துகள்கள் பறப்பதினாலும், இவ்வாறு வளியில் வைரசு ஆனது உயிர்ப்பாக காணப்படும் தன்மை இருப்பதினாலும், உடலின் மேற்பரப்பில் இருந்து தொடுகை மூலம் நேரடித்தொற்று ஏற்பட சாத்தியம் இருப்பதினாலும் உடற் கூராய்வு ஆபத்தானதாக இருக்கும்.

  1. உலகம் இவ்வாறான ஆபத்தான நிலையில் உள்ள பொழுது கட்டாயம் எரித்தல்/ புதைத்தல் என்ற வேறுபாடு தேவை தானா?

இன்றைய பொழுதில் உலக வல்லரசுகள் நோயின் தாக்கத்தினால் ஆடிபோயிருக்கும் நிலையில் பலரினதும் கேள்வி ஏன் சிலர் மட்டும் புதைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர், உடலினை எரித்தால் என்ன நடந்து விடப்போகின்றது. வேறு சிலரின் கருத்து மனிதன் இறந்து விட்டால் அது சடலம் தானே அதன் பிறகு எரித்தென்ன  புதைத்தென்ன.

தற்போதைய கால கட்டம் ஓர் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஓர் நெருக்கடியான அனர்த்தம் ஆகும். அதிஷ்டவசமாக   ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை கையாளக்கூடிய எண்ணிக்கையில் தான் அமைந்துள்ளன. இறப்புக்களின் எண்ணிக்கை கையாள முடியாத எண்ணிக்கையினை தாண்டி செல்லும் பொழுது நாம் எல்லோரும் நாட்டின் நன்மை கருதியும் சக பொதுமக்களின் நன்மை கருதியும் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இலங்கையில் அதிஷ்டவசமாக அந்த நிலை இன்னமும் ஏற்படவில்லை.

ஒருவரின் மத நம்பிக்கை என்பது அவர் பின்பற்றும் மதங்களுக்கு ஏற்ப வேறுபடும், இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அந்த நம்பிக்கைக்கு அடிப்படையில் ஓர் விஞ்ஞான ரீதியான அல்லது தர்க்க ரீதியான அடிப்படை ஒன்று இருக்கும். பல சந்தர்ப்பங்களில்  மேற்குறித்த ஒன்றுமே இருக்காது. இவ்வாறான நிலையில் ஏன் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் என்ன என்ற ரீதியில் வாதிடுவது ஓர் முட்டாள் தனமான செயற்பாடாகவே அமையும்.  மேலும் மத அறிஞர்கள் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையில் தமது மத சம்பந்தமான அறிவின் ஊடாக புதைத்தலுக்கு பிரதியீடாக என்ன செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

  1. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டுமா?

 உலக சுகாதார நிறுவனம் (WHO) அவ்வவ்போது தனது உறுப்பு நாடுகளுக்கு இவ்வாறு வழிகாட்டுதல்களை வெளிவிடும். அவை உண்மையிலேயே வழிகாட்டுதல்கள் தான் மாறாக சட்டம் அல்ல. உறுப்பு நாடுகள் அதனை தமது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம் அல்லது முற்றாகவே பின்பற்றாமல் விடலாம் அல்லது தமது நாட்டிற்கு என தனித்துவமான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தலாம்.

  1. சுகாதார அல்லது வைத்திய அதிகாரிகள் ஏன் இறந்தவரின் உடலினை உறவினரிடம் கையளிக்க பின்னிற்கின்றனர்?

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலில் அதிகளவு Covid 19 வைரசுக்கள் (high virus load) காணப்படும் இதன் காரணமாக மற்றவர்கள் இலகுவில் தொற்றுக்கு உள்ளவர் மேலும் இறந்தவரின் உடலினை குறித்த கால இடைவெளியினுள் (less than 12 hours ) மேலும் மத அறிஞர்கள் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையில் தமது மத சம்பந்தமான அறிவின் ஊடாக புதைத்தலுக்கு பிரதியீடாக என்ன செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இது தவிர இலங்கையில் மரண சடங்கினை கொண்டு நடத்துபவர்களுக்கு (funeral directors) என விசேட சட்ட மூலங்கள் எதுவும் இல்லை, இதன் காரணமாக கையளிக்கப்பட்ட உடலுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியாது. மேலும் உறவினர்களினால் சீல் செய்யப்பட்ட உடல் சூழலுக்கு வெளிக்காட்டிடப்படும் சந்தர்ப்பமும் உண்டு.

                                                                      முற்றும்

கொரோனாவை ஒளித்து மறைப்பது ஏன்?

நேற்றைய தினம் நீர்கொழும்பு பகுதியில் ஒருவர் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தார். அதனைத்தொடர்ந்து அந்த நோயாளி மீது தன்னிடம் இருந்த நோயினை மறைத்து வைத்ததாகவும், சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்கவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் குற்ற சாட்டுக்கள் பரவிய வண்ணம் உள்ளன. நோயாளியும் குடும்பத்தினரும் இவ்வாறு மறைத்தமைக்கான காரணங்களில் ஒன்று இறந்தவர் கொரோனா நோயாளி என கண்டுபிடிக்கப்பட்டால் இறப்பினை தொடர்ந்து அவரது உடல் கட்டாயம் எரிக்கப்படும் என்ற பொய்யான தகவலே ஆகும். பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூத மதத்தினர் இறந்தவரின் உடலினை புதைக்கவே விரும்புவர். எரித்து தகனம் செய்வது என்பது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதினால் அதனை விரும்புவதில்லை.
இலங்கையில் உள்ள தற்போதைய சுகாதார அமைச்சின் சட்ட திட்டங்களின் பிரகாரம் கொரோனா தொற்றினால் மரணமடைந்த ஒருவரின் உடலினை எரித்து தகனம் செய்ய அல்லது புதைக்க முடியும். புதைப்பதாயின் 6 அடி ஆழமான குழியில் நீருடன் தொடுகையில் இல்லாதவாறு உரிய சட்ட விதிகளின் படி புதைக்க முடியும். வைத்தியசாலையில் இவ்வாறான இறப்பு நடைபெற்ற பின்னர் அதிகாரிகள் யாரவது இறந்தவரின் உடலினை எரித்து தகனம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்தினால் மேலதிகாரிகளுக்கு அல்லது நீதிமன்றில் முறையிட முடியும்.
கீழே உள்ள படத்தில் இருந்து உரிய தகவல்களை பெற்று கொள்ள முடியும்.

Doc2-1_LI

ஆதாரம்: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19-cpg_march-2020-moh-sl.pdf
25 தொடக்கம் 28 வரையான பக்கங்கள்

                                                                        முற்றும்