Mephedrone என்ற புதிய போதைப்பொருள் ஆபத்தானதா?

Mephedrone என்ற புதிய வகை போதைப்பொருளானது அண்மையில் இலங்கையின் பலஇடங்களில் கைப்பேற்றப்பட்ட போதைப்பொருளில் இருப்பது அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு இலங்கையில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இப்போதைபொருளானது மிகமிக ஆபத்தானது என்ற வகையில் செய்திகள் வந்துள்ள நிலையில் இப்போதைப்பொருள் ஏன் ஆபத்தானது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

Mephedrone ஆனது 4-methylmethcathinone என்ற இரசாயன பெயரினால் அழைக்கப்படும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட cathinone வகையினை சேர்ந்த போதைப்பொருளாகும். போதைப்பொருட்கள் எமது உடலில் இருவகையான மாற்றங்களை உண்டுபண்ணும்

1. நரம்புத்  தொகுதியின் செயற்பாட்டினை மந்தமாக்கும் போதை பொருட்கள்  – முக்கியமாக ஹெராயின், ஓபியம் போன்றன இவற்றில் அடங்கும்

2. நரம்புத்தொகுதியில் கிளர்ச்சியினை ஏற்படுத்தும் போதைப்பொருட்கள் – இவற்றில் ஐஸ் (மெத்தமிட்டாமின், அம்மீட்டமின்) மற்றும் கொக்கைன் போன்றன இவற்றில் அடங்கும்.

Mephedrone ஆனது எமது நரம்பு தொகுதியில் கிளர்ச்சியினை அல்லது உற்சாகத்தினை ஏற்படுத்தும் ஓர் போதை மருந்தாகும். இது  drone,M-CAT, white magic, meow meow, bubble போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இது முதன் முதலாக 1929ம் ஆண்டு செயற்கையாக தொகுக்கப்பட்டது எனினும் 2000ம் ஆண்டுவரை இதன் பயன்பாடு அறியப்படவில்லை. அதன் பின்னரே இது போதை தரும் பொருளாக பாவிக்கப்பட ஒவ்வொரு நாடுகளினாலும் போதைப்பொருளாக வரையறுக்கப்பட்டு பாவனை, உற்பத்தி, கையிருப்பில் வைத்திருத்தல் மற்றும் கடத்துதல் என்பன குற்றங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருளானது பொலிஸாரினால் கைப்பேற்றப்பட்டது தவிர எவ்வளவு தப்பி சென்றது என்பது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் பொதுமக்கள் இது பற்றி அவதானமாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த போதைப்பொருள் பவுடர் வடிவத்தில் அல்லது பளிங்கு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவத்தில் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

Mephedrone ஏன் ஆபத்தானது என்பது பற்றி பார்ப்போம்

1. சடுதியான இறப்பு

இது ஓர் செயற்கையாக தயாரிக்கப்படும் ஓர் போதைப்பொருள். இதனை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒருபோதுமே தரசான்றிதழ் பெற்றவை அல்ல. எனவே இவை தயாரிக்கும் போதைப்பொருளில் உண்மையான போதைப்பொருள் அளவு அதாவது தூய போதைப்பொருளின் அளவு (variable potency ) எப்போதும் மாறுபடும் இதன் காரணமாக முதல் பாவித்த அளவில் நபர் ஒருவர் தொடர்ந்து பாவிக்கும் பொழுது சடுதியான நஞ்சாதல் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும். மற்றைய செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்பொருட்களிலும் இவ்வாறு ஏற்படும்.

2.  கடுமையான உடல் பாதிப்புக்கள்

இப்போதைப்பொருள் ஆனது எமது உடலில் உள்ள இரத்த நாடிகளை சுருங்க வைக்கும் (vaso constriction) தன்மையுள்ளது இதன் காரணமாக சடுதியான மாரடைப்பு, கை மற்றும் கால்களின் விரல்கள் அழுகுதல் (dry gangrene), மூக்கின் ஊடாக நுகர்பவர்களில் மூக்கு  சவ்வு (Nasal septum) அழிவடைதல் போன்றன ஏற்படும். மேலும் எமது உடலில் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி வலிப்பு, சிறுநீரக செயலிழப்பு என்பவற்றினை ஏற்படுத்த வல்லது.

3. மீண்டும் மீண்டும் பாவிக்க தூண்டி அடிமையாக்கும் தன்மை

இந்த போதைப்பொருளானது மனித உடலில் 30-60 நிமிடங்கள் மாற்றத்தினை உண்டுபண்ணும் அதன் பின்னர் அதன் விளைவு படிப்படியாக அற்று போகும். இதன் காரணமாக நீண்ட நேர விளைவினை விளைவினை விரும்புபவர்கள் மற்றும் இப்போதைபொருளினை பாவித்ததினால் ஏற்பட்ட விளைவில் இருந்து தப்பிக்க அடிக்கடி பாவிக்க வேண்டி இருக்கும். எனவே மற்றைய போதைப்பொருட்கள் மாதிரி இதுவும் அடிமையாக்கும் (Addictive) தன்மை உடையது.

4. மேலும் இந்த போதைப்பொருள் எமது நரம்புத்தொகுதியில் பாலியல் நடத்தை மாற்றத்தினை ஏற்படுத்த வல்லது. பொதுவாக இந்த வகை போதைப்பொருளானது அதீத பாலியலினை தூண்டும் மேலும் வழமையாக ஒரு இன பாலியல் உறவினை மேற்கொள்பவர்கள் இதனை பாவித்து கொள்வார்கள். இவ்வாறு போதை பொருட்களினை பாவித்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுதலை chemsex என்றழைப்பர். இந்த பாலியல் நடவடிக்கையில் methamphetamine (ICE), mephedrone,  ketamine போன்ற வகை போதைப்பொருட்கள் பாவிக்கப்டுகின்றன.

நேற்றைய தினம்  mephedrone என்ற போதைப்பொருள் முதன் முதலாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உடன் மக்களுக்கு அறியத்தந்தவர்கள் எவருமே இந்த போதைபொருள் ஏன், எந்த வகையில் ஆபத்தானது (மனிதனை போதைக்கு அடிமையாக்குவதிலா, திடீர் இறப்பினை ஏற்படுத்துவத்திலா அல்லது உடல் தீங்கான பக்கவிளைவினை ஏற்படுத்துவத்திலா ) என்பது குறித்து குறிப்பிடவில்லை. நேற்றைய செய்திகளை வாசித்த போதைப்பொருள் பாவனையாளர்கள் மாறி சிந்திக்கவும் வாய்ப்புண்டு அதாவது ஐஸ், ஹெராயின், கஞ்சா போன்றவை குறைந்த அளவில் உடலுக்கு தீங்கினை ஏறப்டுத்தும் என்று. உண்மையில் இந்த போதைப்பொருட்களில் குறைந்த அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் என்று ஒன்றுமே இல்லை. எல்லா போதைப்பொருளுமே மனித உடலுக்கு பாரிய தீங்கினை ஏற்படுத்த கூடியவை. முக்கியமாக ஹெராயின் மனிதனை போதைக்கு அடிமையாக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது.

நன்றி

சனநெரிசலில் இறப்புக்கள் ஏற்படுவது ஏன்?

நேற்றைய தினம் தமிழ் நாட்டின் கரூரில் நடிகர் விஜய் அவர்களின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். பலருக்கு ஏன் சன நெரிசலின் பொழுது இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கமின்மை நிலவுகின்றது அத்தோடு சனநெரிசலில் இருந்து எவ்வாறு உயிர் தப்புவது என்ற அறிவும் குறைவாக உள்ள நிலையில். அதனை போக்கும் முகமாக இந்த பதிவு அமைகின்றது.


பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் சிறிய, மூடிய கட்டிடங்களில் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக குறுகிய பாதையினுடாக/வாசலினுயூடாக அதிகளவான மக்கள் வெளியேறும் பொழுது அல்லது உள் நுழையும் பொழுது ஏற்படுகின்றது. மேலும் குறித்த கட்டிடம் அல்லது இடமானது தாங்கக்கூடிய சனத்தொகையினை விட அதிகளவு மனிதர்கள் கூடும் பொழுதே ஏற்படுகின்றது. திறந்த வெளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது அரிது.
இவ்வாறான சம்பவத்தின் பொழுது compressive or restrictive asphyxia என்பதே பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்து விடுகின்றது. compressive or restrictive asphyxia என்றால் என்ன? நாம் சாதாரண நிலைகளில் சுவாசிக்கும் பொழுது அதாவது உட்சுவாசம் செய்யும் பொழுது முறையே எமது நெஞ்சறையானது வெளிநோக்கி மற்றும் மேல்நோக்கி அசையும் அவ்வாறே வெளிச்சுவாசம் செய்யும் பொழுது முறையே உள்நோக்கி மற்றும் கீழ்நோக்கி அசையும். மேலும் நாம் வலிந்த சுவாசம் (Forced respiration) செய்யும் பொழுது எமது கைகளில் உள்ள சில தசைகளும் வேலை செய்யும். சனநெரிசலின் பொழுது பிரயோகிக்கப்படும் பொழுது வெளிப்புற விசைகள் காரணமாக மிகுந்த சனநெரிசல் ஓர் குறுகிய மூடிய பிரதேசத்தில் ஏற்படும் பொழுது அங்கு கூடியிருக்கும் மனிதர்களின் சுவாச அசைவுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக சனநெரிசலில் சிக்கி உள்ளவர்களில் சுவாசம் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக இரத்தத்தில் காபனீர்ஓட்ஸைட்டின் அளவு அதிகரித்து ஓட்ஸிசன் அளவு குறைவடையும் இதன்காரணமாக மயக்கம் அல்லது இறப்பு ஏற்படும். மேலும் மனிதர்கள் காற்றோட்டம் குறைந்த இடத்தில் கை மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் நிமிர்ந்த நிலையில் நிற்கும் பொழுது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடையும் இதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படும்.
மயக்கம் ஏற்பட்டு ஒருவர் விழும் பொழுது சனநெரிசலில் “domino effect” காரணமாக மேலும் பலர் விழுவார்கள். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் விழும் பொழுது மேலும் நசிபடுவர்களினால் தொடர்ந்து சுவாசிக்க முடியாது இறப்பு ஏற்படும்.


மேலே உள்ள படமானது டோமினோ விளைவு எவ்வாறு சனநெரிசலில் ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை காட்டுகின்றது.

மேலும் ஒருவர் மயக்கம் அடைந்து விழும் பொழுது பதட்டமடையும் அருகில் உள்ளவர்களினால் இந்த நிலை மோசமடையும். மேலும் விழுந்தவர்களின் மேல் மற்றைய மனிதர்கள் ஏறி நிற்கும் பொழுது இந்த நிலை மேலும் மேலும் மோசமடையும் அத்துடன் அவர்களின் உள்அவயவங்கள் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் உண்டு.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூடிய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தும் மின்சார கம்பிகள் அறுந்து வீழ்ந்து மின்சாரம் பாய்ந்தும் இறப்பு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. இது தவிர இவ்வாறான நெருக்கடியில் நெரிபடுபவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்டு இயற்கை நோய்களான மாரடைப்பு, இரத்தத்தில் சீனி அதீதமாக குறைவடைதல், காக்கைவலி, ஆஸ்துமா  மற்றும் மூளையில் இரத்த கசிவு என்பன ஏற்பட்டும் இறப்பு ஏற்படலாம். மேலும் இவ்வாறன சனநெரிசலில் சிக்கும் இருதய நோயாளிகள் போன்றோர் தமது நோய் நிலைமை மோசமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
மக்களுக்கு இவ்வாறு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் நிகழ்வினை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்கள் மீதே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறு கூட்டம் ஒன்றில் சன நெரிசலினை குறைக்கலாம்

1. நிகழ்ச்சி ஒருங்கமைப்பு  – நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே நன்றாக திட்டமிடவேண்டும் குறிப்பாக நுழைவாயில், வெளிச்செல்லேம் வழி, பங்குபற்றும் நபர்களின் எண்ணிக்கை என்பன குறித்து திட்டமிடவேண்டும். நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் எல்லோரையும் உடனே வெளியேற அனுமதிக்க கூடாது. வெளிச்செல்லும் வாசல் எப்பொழுதும் அகலமானதாக இருக்க வேண்டும். சன நெருக்கடியான வேளைகளில் தற்காலிக வெளிச்செல்லும் வாசல்களை ஏற்படுத்த வேண்டும். அனுபம் மிக்க ஊழியர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும்.

2. கூட்ட அடர்த்தியைக் கண்காணிக்கவும் நெரிசலைக் கணிக்கவும் AI-இயங்கும் கண்காணிப்பு கருவிகள் , ட்ரோன்கள் மற்றும் CCTV தரவு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். மேலும் நிகழ்நேர கூட்டக் கண்காணிப்புக்கு RFID (Radio Frequency Identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும்.

3. கூட்டத்தில் பங்குபற்றுபவர்களுக்கு சனநெருக்கடியான நேரத்தில் தெளிவான, இலகுவில் விளங்கக்கூடிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சாதாரண நெரிசல்கள் இவ்வாறான தொடர்பாடல் பிரச்னைகள் காரணமாக மோசமடைந்தமைக்கான சான்றுகள் நிறையவே உண்டு. மேலும் இவ்வாறான சனநெருக்கடியான நேரத்தில் தொலைபேசிகள் பொதுவாக இயங்க முடியாத நிலைக்கு சென்றுவிடும் ஏனெனில் குறித்த பிரதேசத்தில் அதிகளவு கைத்தொலைபேசி பாவனை வலைத்தள நெருக்கடிகாரணமாக ஆகும். எனவே ஒலிபெருக்கிகள் தான் சிறந்த தொடர்பாடல் முறை ஆகும்.

4. மக்களுக்கு அறிவுட்டல் – கூட்டம் நடைபெறும் இடத்தின் அமைவிடம், வெளிச்செல்லும் வாசல்களின் அமைவிடம் போன்றவற்றினை மக்களுக்கு கூட்டம் தொடங்கும் முன்னரே அறிவிக்க வேண்டும். கூட்டத்தின் அமைவிடம் உரிய மக்களின் எண்ணிகையினை அடைந்ததும் எக்காரணம் கொண்டும் மேலதிக மக்களை அனுமதிக்க கூடாது. மேலும் இவ்வாறான பாரிய கூட்டம் நடைபெறும் இடங்களில் முதலுதவி படைகளை வாடகைக்கு அமர்த்தல் வேண்டும் 

எவ்வாறு உயிர் தப்பித்து கொள்வது

  1. மற்றையவர்களின் மேல் விழாமல் தனது சொந்தக்காலில் இறுதிவரை நிக்க முயற்சிக்க வேண்டும்
  2. சனத்திரல் அசையும் திசையில் அசைய வேண்டும். எதிர் திசையில் ஒருபோதும் அசையக்கூடாது.
  3. நெஞ்சிற்கு குறுக்காக கைகளை கட்டி கொள்ள வேண்டும் இதன் காரணமாக சுவாசிக்க நெஞ்சின் அசைவு ஏற்பட வழி உண்டாகும்.
  4. கைப்பாசைகள் மூலமே தொடர்புகொள்ளவேண்டும். கத்தி குளறுவதன் மூலம் உடலில் இருந்து சக்தி இழப்பு ஏற்படும்
  5. சுவர் மற்றும் தூண்களுடன் தற்காலிகமாக தொடர்பில் இருப்பதன் மூலம் சனத்திரளின் ஒட்டத்தில் அள்ளுப்பட்டு, நெரிபட்டு  போகாமல் தப்பிக்கலாம்     

முற்றும்

அதீத மதுப்பாவனையும் குடலில் ஏற்படும் இரத்த போக்கும்

அண்மையில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  இறந்தமை யாவரும் அறிந்த விடயம். அவர் இறந்தவுடன் பல சமூக ஊடகங்கள், மற்றும் தனிநபர்களின் முக நூல்கள் அவர் பல்வேறுவிதமான நோய்களினால் இறந்தார் என முகநூலில் கருத்து தெரிவித்திருந்தனர். அவற்றில் பலரின் கருத்துக்கள் தற்போதைய மருத்துவ அறிவிற்கு பொருத்தமானதாக தெரியவில்லை. இவ்வாறு கருத்து தெரிவித்தவர்கள் அவர் மஞ்சள் காமாலை நோய், சிரோசிஸ் (Cirrhosis), குடலில் ஏற்பட்ட குருதி பெருக்கு (gastrointestinal bleeding), உள் அவயவங்களின் செயலிழப்பு ( multi organ failure), ஈரலில் கொழுப்பு படிந்தமை ( fatty liver), GORD (Gastro-Oesophageal Reflux Disease ) என்றவாறு பல்வேறு நோய் நிலைமைகளினால்  இறந்தார் என விபரித்து இருந்தனர். இதன் உண்மைத்தன்மை பற்றி இப்பதிவு ஆராய்கின்றது.

முதலாவதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலையின் பொறுப்புவாய்ந்த அதிகாரி கூறுகையில் அவருக்கு குடலினுள் இரத்த போக்கு  ஏற்பட்டு அவயவங்கள் செயலிழந்தமை (massive gastrointestinal bleed and multiorgan dysfunction secondary to a complex abdominal condition) மற்றும் வயிற்றுனுள் உள்ள சிக்கலான நிலைமைகள் காரணமாக இறப்பு ஏற்பட்டதாக உத்தியோகபூர்வமாக கூறினார். மனிதரின் இறப்புக்கான காரணம் மருத்துவ ரீதியாக அனைவரினாலும் இலகுவாக விளங்க கூடியதாகவும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும் இதன் காரணமாகவே உலக சுகாதார நிறுவனம் (World Health organization) மரணத்திற்கான காரணத்தினை சர்வதேச நியமம் (WHO format for Medical Certificate of Cause of Death – MCCD) ஒன்றில் வழங்க கூடியதாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இனி ஒவ்வொரு நோய் நிலைமைகளும் மரணத்தினை ஏற்படுத்துமா என பார்ப்போம்

1. மஞ்சள் காமாலை நோய் (Jaundice )

இது மனிதனின் ஈரல் செயலிழந்துள்ளமையினை வெளியில் தெரிவிக்கும் நோயின் குணங்குறி (sign/symptoms) ஆகும். மருத்துவ ரீதியாக இது ஓர் நோய் நிலைமை அல்ல மாறாக நோயின் அறிகுறி. எனவே அவரின் மரணத்திற்கான காரணம் மஞ்சள் காமாலை  என கூறுவது மருத்துவரீதியில் பொருத்தம் அற்றது

2. ஈரலில் கொழுப்பு படிந்தமை (Fatty liver)

இவ்வாறு ஈரலில் கொழுப்பு படிக்கின்றமையை மருத்துவத்தில் fatty liver என்று அழைப்பர். Fatty Liver அதாவது கொழுப்பு ஈரல் (கல்லீரல்) என்பது ஈரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதாகும். இது பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படலாம் (Alcoholic fatty liver) அல்லது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் (nonalcoholic fatty liver) ஏற்படலாம். முறையற்ற உணவுப் பழக்கம், உடலுழைப்பின்மை, உடல் பருமன், நீரிழிவு போன்ற காரணங்களால் இது பெரும்பாலும் வருகிறது. இது ஈரலை பாதித்து, நீண்ட காலப்போக்கில் சிரோசிஸ் (cirrhosis), ஈரல்  செயலிழப்பு (liver failure) போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இறுதியில் இறப்பு  இழைநார் வளர்ச்சி (cirrhosis) , ஈரல்  செயலிழப்பு (liver failure) ஆகியற்றினால்த்தான் ஏற்படும். இறப்பு ஏற்படும் பொழுது அவருக்கு fatty liver என்ற நோய் நிலைமை இருக்காது. எனவே அவரின் மரணத்திற்கான காரணம் கொழுப்பு ஈரல் என கூறுவது மருத்துவரீதியில் பொருத்தம் அற்றது

3. GORD (Gastro-Oesophageal Reflux Disease) 

இரைப்பையும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு இறுக்கி (spincter) காணப்படுகிறது.  இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்.  இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது. இந்த நோய் நிலைமை  மிக அரிதாகவே இரைப்பையினுள் இரத்த பெருக்கினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. சிரோசிஸ் (Cirrhosis)

சிரோசிஸ் (Cirrhosis) என்பதன் தமிழ் அர்த்தம் ஈரல் இழைநார் வளர்ச்சி ஆகும். இது கல்லீரல் திசுக்களில் வடு (scar)ஏற்படுவதைக் குறிக்கும் ஒரு ஈரல் நோயாகும், இது ஈரலின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. ஈரலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் (நீண்டகால ஹெபடைடிஸ், மது அருந்துதல், கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவை) சிரோசிஸ் ஏற்பட காரணமாகலாம். ஈரலின் சாதாரன செல்கள் அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் வடு திசுக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஈரலின் தொழில்பாடு படிப்படியாக குறைவடைந்து செல்லும்.

இயற்கையாகவே எமது ஈரல் தன்னில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீளும் தன்மையுள்ளது ஆனால் ஒருவர் மது அருந்துதல் போன்ற ஈரலுக்கு ஊறு விளைவிக்கும் செயற்பாட்டினை மேற்கொள்வாராயின் இறுதியில் ஈரலின் புத்துஉயிர்க்கும் தன்மை அற்று போகும். அந்தநிலையில் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி மற்றும் வீக்கம், கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், அரிப்பு, சோர்வு போன்றவை ஏற்படலாம். ஒருநிலையில் இறப்பு ஏற்படும்.

சிரோசிஸ் ஏற்படும் பொழுது ஈரலிற்கு உணவு கால்வாய் தொகுதியில் இருந்து போசணைப்பொருட்கள் அடங்கிய குருதியை வழங்கும் தொகுதிப்பெருநாடியில் குருதி அழுத்தம் அதிகரிக்கும் இதன் காரணமாக உணவுக்கால்வாய் தொகுதியில் வெரிகோஸ் ஏற்பட்டு இரத்த குழாய் வெடிப்பினால் இரத்த போக்கு ஏற்படும். இவ்வாறு இரத்த போக்கு ஏற்படும் பொழுது நோயாளிக்கு எந்த வலியும் இருக்காது மேலும் குறித்த அளவு இரத்தம் வெளியேறிய பின்னரே களைப்பு, மயக்கம், அதிகளவு வியர்த்தல், நெஞ்சு படபடப்பு என்பன ஏற்படும். மேலும் இரத்த வாந்தி, மலம் தார் போன்று  கறுப்பாக வெளியேறல் போன்றன ஏற்படும். மேலும் குருதி அதிகளவு வெளியேறும் பொழுது உடலின் முக்கிய அவயவங்களுக்கு செல்லும் குருதியின் அளவு குறைவடையும் இதன் காரணமாக மூளை, சிறுநீரகம்.. போன்ற அங்கங்கள் செயலிழக்கும் இவ்வாறு செயலிழத்தலினை மருத்துவத்தில் multiorgan dysfunction/ Failure என்றழைப்பர். இவ்வாறு பல  அங்கங்கள் செயலிழந்த நோயாளியினை அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வழமையாக சிகிச்சை அளிப்பர். அவர்களின் உடல் நிலையினை பொறுத்து அவர்களின் விதி தீர்மானிக்கப்படும்.  

சாதாரணமாக சிரோசிஸ் ஏற்பட்ட உடனேயே இறப்பு ஏற்படாது ஏனெனில் ஈரல் தன்னால் இயன்ற அளவு வேலைகளை இறுதி வரைக்கும் (Compensated liver cirrhosis) செய்யும் குறித்த நபர் மதுபானம் போன்றவற்றினை தொடந்து பாவிக்கும் நிலையில் ஈரலின் தொழில்பாடு முற்றாக பாதிக்கப்படும் இந்நிலை மருத்துவத்தில் decompensated liver cirrhosis  என்றழைக்கப்படும் இதன் பின்னரே மரணம் ஏற்படும். சிரோசிஸ் ஏற்பட்ட பின்னர் மேற்குறித்த முறை தவிர வேறு முறைகளிலும் ( mechanisms of death) இறப்பு ஏற்படலாம். 

நன்றி 

சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறை ஏன்??

இலங்கையின் நீதிமன்றங்களில்  இதுவரை காலமும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகள் திறந்த நீதிமன்றத்திலேயே பெரும்பாலும் நடைபெற்றுவந்தன, ஒருசில வழக்குகள் மட்டுமே நீதிவானின் பிரத்தியேக அறையில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் கடந்தவாரம் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சாட்சியம் அளிக்கவென பிரத்தியேகமான சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறை இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக கண்டி மேல் நீதிமன்றில் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான விசேட வசதிகள் கொண்ட அறைகள் நாடு பூராகவும் உள்ள நீதி மன்றங்களில் எதிர்வரும் காலத்தில் தாபிக்கப்படவுள்ளன.

சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறைகள் ஏன் அவசியமானவை அவற்றின் பயன்பாடுகள் பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.

பாரம்பரிய திறந்த நீதிமன்ற அறை ஒரு சாட்சிக்கு, குறிப்பாக ஒரு சிறுவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழலாக அமையலாம். இது அவர்களின் சாட்சியம் அளிக்கும் திறனைப் பாதிப்பதோடு, கடுமையான உணர்ச்சி ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் , குழந்தை சாட்சியங்களுக்கான சிறப்பு அறைகளைப் பயன்படுத்துவதை அதிகரித்து வருகின்றன. இந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடங்கள், குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், சட்ட செயல்முறையின் நேர்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பல நன்மைகளையும் பலன்களையும் வழங்குகின்றன.

சிறுவர்களுக்கான சாட்சிய அறைகளின் முக்கிய நன்மைகளை மூன்று முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்: குழந்தையின் உளவியல் நலம், அவர்களின் சாட்சியத்தின் தரம் மற்றும் துல்லியம் மற்றும் நீதித்துறை செயல்முறையின் ஒட்டுமொத்த மேம்பாடு.

1. குழந்தையின் உளவியல் நலனைப் பாதுகாத்தல்

சிறுவர்களுக்கான சாட்சிய அறைகளின் முதன்மையான நன்மை, குழந்தை சாட்சிகளுக்கு ஏற்படும் மன அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் கணிசமாகக் குறைப்பதாகும். ஒரு தனிப்பட்ட, நேயமிக்க இடமாக சிறுவர்களுக்கான சாட்சியம் வழங்கும் அறைகள் இடம் பின்வரும் உளவியல் நன்மைகளை வழங்குகிறது:

  • குறைக்கப்பட்ட பயம் மற்றும் அச்சுறுத்தல் ( Reduced Fear and Intimidation) :

இந்த அறைகள் நீதிமன்றத்தின் கடுமையான சூழலிலிருந்து மாறுபட்டு, வசதியான மற்றும் வயதுக்கு ஏற்ற தளபாடங்களுடன், அமைதியான சூழ்நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிறுவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது.

  • குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாதுகாப்பு:

சிறுவர்  சாட்சிகளுக்கு இருக்கும் ஒரு முக்கிய பயம், குற்றம் சாட்டப்பட்டவரை நேருக்கு நேர் சந்திப்பதாகும். CCTV  or one-way mirrors போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குழந்தை குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒரே அறையில் இல்லாமல் சாட்சியம் அளிக்க இந்த அறைகள் உதவுகின்றன. இந்த பிரிப்பு, குழந்தை மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாவதைக் குறைக்கிறது.

  • உணர்ச்சி ரீதியான ஆதரவு (Emotional Support: ):

இந்த அறைகளில், இடைநிலையாளர்/ சமூக சேவகர் (Child psychologist or child counselor or social worker ) அல்லது சாட்சியமளிக்காத குடும்ப உறுப்பினர் போன்ற ஒரு ஆதரவான நபர் குழந்தையுடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார். இது சாட்சியமளிக்கும் செயல்முறை முழுவதும் குழந்தைக்கு ஆறுதலையும் உறுதியையும் அளிக்கிறது.

  • இரண்டாம் நிலை உளவியல் ரீதியாக பாதிப்பைத் தடுத்தல் (Prevention of Secondary Victimization): நீதிமன்றத்தின் கடுமையான சூழலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் மூலம், சாட்சிய அறைகள் இரண்டாம் நிலை உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன. அதாவது, சட்ட செயல்முறையே குழந்தைக்கு மேலும் உணர்ச்சி ரீதியான தீங்கை ஏற்படுத்துவதைத் தவிர்க்கிறது.

2. சாட்சியத்தின் தரம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துதல் (Enhancing the Quality and Accuracy of Testimony)

பாதுப்பாகவும் பதற்றம் குறைவாகவும் இருக்கும் சூழ்நிலையில் சிறுவர் , தனக்கு நடந்த நிகழ்வுகளைப் பற்றி தெளிவான, ஒத்திசைவான மற்றும் துல்லியமான விவரங்களைக் கொடுக்கும் வாய்ப்பு அதிகம். சாட்சிய அறைகளின் அம்சங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களின் தரத்தை மேம்படுத்த நேரடியாக பங்களிக்கின்றன:

  • மேம்படுத்தப்பட்ட தகவல் பெறல்:

குறைந்த மன அழுத்தம் உள்ள சூழலில், குழந்தைகளால் கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு பதிலளிக்க முடிகிறது. பெரும்பாலும், சிறுவர்களுடன்  வயதுக்கு ஏற்றவாறு தொடர்புகொள்வதில் பயிற்சி பெற்ற ஒரு இடைநிலையாளர் இதற்கு உதவுகிறார். அவர் சிக்கலான சட்டச் சொற்களை எளிதாக்கி, சிறுவர்கள்  கேட்கப்படுவதைப் புரிந்துகொள்வதை உறுதி செய்கிறார். மேலும் இடைநிலையாளர் சிறுவர்களின் அங்க மொழித்தொடர்பான விளக்கத்தினையும் நீதி மன்றிற்கு விளங்கப்படுத்த கூடிய சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது. பல சந்தர்ப்பத்தில் சிறுவர்களுக்கு வாய் மூலமான சொற்கள் வருவதில்லை. இச்சந்தர்ப்பத்தில் அவர்களின் உடல் மொழி முக்கியமானது

  • அதிகரித்த கவனம் (Increased Focus and Concentration):

சாட்சிய அறையின் அமைதியான மற்றும் தனிப்பட்ட அமைப்பு கவனச்சிதறல்களைக் குறைத்து, சிறுவர்  தனது சாட்சியத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

  • சாட்சி மிரட்டலைக் குறைத்தல்(Mitigation of Witness Intimidation):

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நேரடிப் பார்வையிலிருந்து சிறுவர்களை அகற்றுவதன் மூலம், சாட்சிய அறைகள் சாட்சிகளை மிரட்டும் அபாயத்தைக் குறைக்கின்றன. இல்லையெனில், சிறுவர்கள் பயத்தின் காரணமாக தனது சாட்சியத்தை மாற்றக்கூடும் அல்லது மறைக்கக்கூடும்.

3. நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துதல்

சிறுவர்  சாட்சிய அறைகளின் பயன்பாடு குழந்தைக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், சட்ட நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த நேர்மையையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது:

  • சிறந்த ஆதாரத்தைப் பெறுதல் (Obtain best evidence):

ஒரு சிறுவன் திறம்பட தொடர்புகொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம், நீதிமன்றம் முடிந்தவரை “சிறந்த ஆதாரத்தைப்” பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். இது ஒரு நியாயமான மற்றும் தகவலறிந்த முடிவை எட்டுவதற்கு முக்கியமானது.

  • குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாத்தல் (Upholding the Rights of the Accused):

சிறுவர் சாட்சியைப் பாதுகாக்கும் அதே வேளையில், நேரடி வீடியோ இணைப்பு போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, குற்றம் சாட்டப்பட்டவரின் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை உட்பட, ஒரு நியாயமான விசாரணைக்கான உரிமையை உறுதி செய்கிறது. நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறுவர்களின்  சாட்சியத்தை நிகழ்நேரத்தில் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

  • சிறுவர்களிகளின் பங்கேற்புக்கான அதிகரித்த வாய்ப்பு: இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் கிடைப்பது, சிறுவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அறிந்து, மேலும் பல சிறுவர்கள்  முன்வந்து நீதி அமைப்பில் பங்கேற்க ஊக்குவிக்கும்.

சிறுவர் சாட்சிய அறைகள் ஒரு நவீன, குழந்தை நேயமிக்க நீதி அமைப்பின் இன்றியமையாத அங்கமாகும். சிறுவர்களின்  உளவியல் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்த சிறப்பு வசதிகள் மேலும் அதிர்ச்சியடைவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு சிறுவர்களின் குரல் தெளிவாகவும் திறம்படவும் கேட்கப்படுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இறுதியில் நியாயமான மற்றும் நேர்மையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன.

நன்றி

பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை

அண்மையில் ஓர் தாயார் எனது அலுவலகம் வந்திருந்தார், கூடவே அவருடன் அவரின் மகனும் வந்திருந்தார். வந்திருந்த தாயார் மகனை அலுவலகத்தின் வெளியே இருக்க சொல்லிவிட்டு என்னிடம் உரையாட தொடங்கினார். அவர் கூறிய விடயங்களாவது தனது 24 வயதுடைய மகனின் நடத்தையில் அண்மைக்காலமாக வித்தியாசம் தெரிவதாக கூறினார்.  குறிப்பாக அடிக்கடி கோபப்படுவதாகவும், வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அந்த தாயார் குறிப்பிடுகையில் பிளாஸ்டிக் சோடா போத்தல் ஒன்றினுள் தண்ணீர் விட்டு குழாய் ஒன்றினை அதனுள் செலுத்தி அதன் மறுமுனையினை வாயில் வைத்து குமுழி விளையாடுவதாகவும் கூறினார். மேலும் நான் தொடர்ந்து வினாவுகையில் குறிப்பாக மாலை வேளைகளில் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார் மேலும் மகனின் அறையில் அதிகளவான பாவித்த சொக்லட் அலுமினிய பேப்பர் இருப்பத்தினையும் தாயார் அவதானித்தாக கூறினார். இதன் பிற்பாடு அவரின் மகனை அழைத்து நான் போதைப்பொருள் பாவனை தொடர்பாக வினாவிய பொழுது அவர் தான் எந்த விதமான போதைப்பொருள் பாவனையும் செய்யவில்லை என கூறிய நிலையில் அவரின் சிறுநீர் மாதிரியினை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அதன் பிற்பாடு தான், அவர் போதைப்பொருள் பாவிப்பதினை ஒத்துக்கொண்டார். இவ்வாறு பல பெற்றோர், மனைவிமார் தங்கள் பிள்ளைகள் அல்லது கணவர் வீட்டில் போதைப்பொருள் பாவிப்பதினை அறியாமல் உள்ளனர்.

Drug paraphernalia என்பதன் தமிழ் அர்த்தம் போதைப் பொருட்களைத் தயாரிக்க, மறைக்க அல்லது பயன்படுத்த உதவும் உபகரணங்கள் அல்லது பொருட்கள் என்பதாகும். இது போதைப் பொருள்களை  உபயோகிக்க உதவும் எந்தவொரு கருவியையும் குறிக்கும். உதாரணமாக, போதைப் பொருட்களை உள்ளிழுக்க உதவும்  அல்லது செலுத்தும் குழாய்கள், சூடாக்க உதவும் சிறிய உலோக  கரண்டிகள் அல்லது போத்தல்களின்  உலோக மூடிகள் , சோதனை குழாய்கள், பின்பக்கம் அகற்றப்பட்ட தங்குதன் (tungsten-halogen bulb) மின்குமிழ்கள்  சிறிய பைகள் அல்லது வெற்றுப் பெட்டிகள், தீப்பெட்டி, லைட்டர், தராசுகள், உடலினுள் மருந்து செலுத்த உதவும் ஊசிகள், இரத்தத்தினை துடைக்கும் பஞ்சு/ துண்டுகள், கையினை கட்டிட உதவுவம் நூல் (tourniquet)  போன்றவை இதில் அடங்கும்.

குறிப்பாக போதைப்பொருள் புகையினை சேகரித்து நுகரும் வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலசந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தமது அறிவினையும் இணையத்தில் இருக்கும் விளக்கங்களையும் கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான உபகரணங்களை வடிவமைப்பர். 

மேலும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் பொருட்கள், மறைக்க உதவும் பொருட்கள் மற்றும் உபயோகிக்க உதவும் பொருட்கள் யாவும் Drug paraphernalia என்பதில் சட்ட ரீதியாக உள்ளடங்குகின்றது. இப்பொருட்களை தனித்தனியாக நோக்கும் பொழுது அவை பெரும்பாலும் வீட்டு உபயோக பொருட்களாகவே இருக்கும் எனினும் சேர்த்து நோக்கும் பொழுது தான் அவை என்ன நோக்கத்திற்காக பாவிக்கப்படுகின்றது என்பதினை கண்டு பிடிக்கலாம்.

அண்மையில் நடந்த இன்னோர் சம்பவத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் நாணயத்தாளினை சுருளாக சுற்றி போதைப்பொருள் நுகர்ந்தமை தெரியவந்துள்ளது. இன்றைய நிலைமையில் போதைப்பொருள் பாவனையானது எங்கும் பரவியுள்ளது மற்றும் சமூகத்தில் உள்ள பலரும் வேறுபாடுகளை களைந்து இந்த போதைப்பொருள் பாவனையாளர்களாகி அடிமையாளர்களாக மாறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உள்ளவர்கள் இவ்வாறன போதை நுகர உதவும் பொருட்கள் சம்பந்தமான அறிவினை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.

(சமூக நலன் கருதி விரிவான விளக்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)

நன்றி

போதைப்பொருள் பாவனையாளர்களின் திடீர் மரணம் – காரணம்??

சமீபத்திய காலங்களில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது மேலும் அண்மைக்காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் போதைப்பொருளினை பாவித்து கொண்டிருக்கும் பொழுதே அதாவது ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருக்கின்ற பொழுது அல்லது மூக்கின் ஊடாக நுகர்ந்துகொண்டிருக்கின்ற பொழுது  இறக்கின்ற நிகழ்வுகள் கூட சர்வசாதாரணமாகிவிட்டது. இப்பதிவில் ஏன் இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி விளக்கப்படுகின்றது

  1. போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஒருபொழுதும் தூய போதைப்பொருளினை விநியோகிக்க மாட்டார்கள். அவர்கள் பெருமளவு இலாபம் கருதி ஒரு போதைப்பொருளினுள் இன்னொரு போதைப்பொருளினை அல்லது வேறுவகையான பொருட்களை (cutting) கலந்து விற்பார்கள். இனி விடயத்திற்கு வருவோம் இவ்வாறு இலாப நோக்கம் கருதி கலக்கப்படும் பொருட்கள் (Adulterants) பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை உடையன சில சந்தர்ப்பங்களில் அவை பாவனையாளருக்கு கடுமையான ஒவ்வாமையினை (Anaphylactic shock) ஏற்படுத்தி இறப்பினை உடனடியாகவே ஏற்படுத்தும்.
  2.  மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை கலந்து பாவிக்கும் போது ஒன்றின் விளைவினை மற்றைய போதைப்பொருள் தூண்டும் இதன் காரணமாக போதையின் விளைவு அதிகமாகி இறப்பினை உடனடியாக ஏற்படுத்தும். உதாரணமாக பின்வரும் போதைப்பொருட்களின் சேர்க்கை தீங்கானதாக அமையும்     

மதுபானம் + ஓப்பியம்

கொக்கையின் +கெரோயின்

மதுபானம் + கொக்கையின்

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறித்த போதைப்பொருட்கள் குறைந்த அளவில் இருந்தாலும்  மற்றைய போதைப்பொருளின் ஒத்த தாக்கத்தினால் அதன் விளைவு கூட்டப்பட்டு இறப்பு ஏற்படும்.

3. எமது உடலில் ஒவ்வொரு போதைப்பொருளும் இரத்தத்தினுள் சென்று நரம்புத்தொகுதியில் அதற்குறிய உணர்வேற்பிகளில் (Receptors) இணைந்து தொழிற்படுவதன் காரணமாகவே எமது மனித உடலில் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. உணர்வேற்பிகளின் எண்ணிக்கை மனிதன் ஒருவனின் மருந்து அல்லது போதைப்பொருள் பாவனைக்கு ஏற்ப கூடும்  அல்லது குறைவடையும். மேலும் ஒருவர் போதைப்பொருளினை தொடர்ச்சியாக பாவிக்கும் போது அவரின் உடலில் உணரவேற்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதன் காரணமாக நீண்ட காலப்போக்கில் குறித்த அளவிலான போதைப்பொருள் மூலம் அவர் திருப்தியினை அடைய முடியாமல் இருக்கும் (Tolerence) இதன் காரணமாக அவர் சிறிதுசிறிதாக போதைப்பொருளின் அளவினை அதிகரிப்பார். இவ்வாறு காலப்போக்கில் ஒருவர் போதைப்பொருளிற்கு அடிமையாகிவிடுவார்

பல  சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருக்கும் பொழுது அவர்களின் உணர்வேற்பிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் (Receptor Down-Regulation) இந்நிலையில்  போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருந்து விட்டு திடீர் என்று முன்னைய அளவில் பாவிக்கும் பொழுது  குறித்த போதைப்பொருளானது அவர்களின் உடலில் நஞ்சாதலை (Toxicity) ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. போதைப்பொருட்களின் நேரடி விளைவின் காரணமாக உதாரணமாக ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் நேரடியாகவே மூளையின் உணரவேற்பிகளில் தொழிற்பட்டு எமது சுவாசத்தினை குறைக்கும் . மேலும் கொக்கைன் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் எமது இருதய சுற்றோட்டத்தொகுதியினை அளவுக்கு அதிகமாக தூண்டும் இதன் காரணமாக இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து சடுதியான இருதய செயலிழப்பு அல்லது மூளையில் இரத்த கசிவு  ஏற்படும். இதன் காரணமாக மரணம் சம்பவிக்கும்.

5. ஏற்கனவே கூறியவாறு போதைப்பொருட்களில் பல்வேறு விதமான பொருட்கள் கலக்கப்படும். பல சந்தர்ப்பத்தில் போதையினை மேலும் அதிகரிக்கும் முகமாக fentanyl போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட வீரியம் மிக்க ஓபியம் வகை மருந்துகள் அளவு கணக்கு இன்றி பாவனையாளருக்கு தெரியாத வகையில் சேர்க்கப்படும். இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படுகின்றது.  fentanyl என்பது மருத்துவ துறையில் பாவிக்கப்படும் ஓர் வலிநிவாரணி மருந்தாகும் அங்கு வைத்தியரின் கண்காணிப்பில், உரிய அளவில் பாவிக்கப்படுவதினால் இறப்புக்கள் ஏற்படுவது குறைவு. fentanyl  ஆனது ஹெரோயினை விட 30-50 மடங்கு வீரியம் மிக்கது அத்துடன் மோபினை (morphine) விட 100 மடங்கு வீரியம் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

உடலிலினுள் ஓர் நேர வெடிகுண்டு

மருத்துவ துறையில் பல நோய் நிலைமைகளை வைத்தியர்கள் விபரிக்கையில் அந்த நோய் நிலைமை ஓர் “நேர வெடி குண்டு(Time bomb)” என விபரிப்பார்கள் ஏனெனில் அந்த நோய் நிலைமை குணம் குறிகள் அற்று இருக்கும். திடீரென்று அந்த நோய் நிலைமை மோசமாகி குறித்த நபரினை திடீர் இறப்பு நிலைமைக்கு இட்டு செல்லும். இவ்வாறான ஓர் நோய் நிலைமை தான் இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் ஏற்படும் அடைப்பு. தமிழில் பொதுவாக கொலஸ்ட்ரோல் புளொக்/ அடைப்பு என்று சொல்வார்கள் (இருதயத்தின் வால்வுகளில் ஏற்படும் சுருக்கம், இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் ஏற்படும் அடைப்பு என்பன இரண்டு வெவ்வேறான நோய் நிலைமைகள் , இரண்டும் ஒன்றல்ல). அண்மையில் கூட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபொழுது அவருக்கு இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றில் வழக்ககறிஞர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்தில் எமது இருதயத்திற்கு இரத்தம் வழங்கும் முடியுரு நாடிகளில் ஏற்படும் கொலஸ்ட்ரோல் படிவுகள் atherosclerotic plaque என்றழைக்கப்படும். இவ்வாறு முடியுரு நாடியினை ஏறத்தாழ முற்றாக அடைத்த atherosclerotic plaque இணை கீழ்வரும் படம் விளக்குகின்றது

இவ்வாறு உருவாகிய atherosclerotic plaque குறித்த நாடியின் ஊடாக செல்லும் இரத்த ஒட்டத்தினை மட்டுப்படுத்தும் இதன் காரணமாக குறித்த நபருக்கு வேலை செய்யும் பொழுது நெஞ்சு வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.  திடீரென்று ஓர் நாள் குறித்த atherosclerotic plaque ஆனது வெடிக்கும் இதன் காரணமாக atherosclerotic plaque இன்னுள்ளே இருந்த பதார்த்தங்கள் நாடியினுள் விடுவிக்கப்படும் இதனை தொடர்ந்து குருதியில் உள்ள குருதி சிறுதட்டுக்கள் இவ்விடத்தில் சேர்த்து முழுமையான அடைப்பினை ஏற்படுத்தும் அதனை தொடந்து முடியுரு நாடியினுடாக செல்லும் இரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

பொதுவாக 70% மேற்பட்ட வகையில் atherosclerotic plaque இனால் அடைப்பு இருந்தால் குறித்த நபருக்கு எந்த நேரமும் மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உள்ளது. இதனால் தான் வைத்தியர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள சிபாரிசு செய்வார்கள்.

இந்த atherosclerotic plaque எப்பொழுது வெடித்து (rupture ) மாரடைப்பினை உண்டாக்கி மரணத்தினை ஏற்படுத்தும் என யாராலும் எதிர்வு கூறமுடியாது. இவ்வாறு atherosclerotic plaque கடுமையாக உள்ள நோயாளிகள் கட்டாயம் மாரடைப்பு நோய் வந்துதான் இறக்கவேண்டும் என்றில்லை. இவ்வாறான நோயாளிகள் விபத்தில் அல்லது வேறு இயற்கையான நோய் நிலைமைகளினால் இறந்துள்ளனர் வேறுசிலர் தற்கொலை செய்துகூட உள்ளனர். மாறாக இவ்வாறு atherosclerotic plaque கடுமையாக உள்ள நோயாளிகள் atherosclerotic plaque வெடித்து மாரடைப்பு வந்து இறந்தும் உள்ளனர்.

மேற்குறித்த நோய் நிலமை தவிர கீழ்வரும் நோய்  நிலைமைகள் கூட “நேர வெடி குண்டு(Time bomb)”  என்று அழைக்கப்படும் உதாரணமாக பெருநாடி அனீரிசிம் (Aortic Aneurysm), உயர் குருதி அழுத்தம், Melioidosis (Vietnamese Time Bomb)… ஏனெனில் குறித்த நோய் நிலைமைகள்  எப்பொழுது மோசமடைந்து உயிர் ஆபத்தினை விளைவிக்கும் என்று யாருக்கும் தெரியாது.

நன்றி      

இலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன??

“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு  தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும்  அத்தியாவசியப் பொருட்களாக உள்ளன. ஆச்சரியமாக உள்ளதா, உதாரணமாக இருமல் பாணிகளில் காணப்படும்  எபெட்ரின் (ephedrine) மற்றும் சூடோஎபெட்ரின்(Pseudo ephedrine) ஆகியவை மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்திக்கான முக்கிய முன்னோடிகளாகும். இவ்வாறான முன்னோடி இரசாயன பொருட்கள் போதை மருந்து கடத்தல் செய்பவர்களுக்கு சென்றடைந்தால் அவர்கள் மிக இலகுவாக போதை மருந்தினை உற்பத்தி செய்து கொள்வார்கள். முன்னோடி இரசாயனங்களின் அடிப்படை இரசாயன கட்டமைப்பில் மாற்றங்களை செய்வதன் ஊடக போதைப்பொருளாக மாற்றலாம்.

இலங்கையில் இவ்வாறான முன்னோடி இரசாயன பொருட்களின் இறக்குமதி, கண்காணிப்பு, பயன்பாடு என்பன இலங்கையில் தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் (National Dangerous Drugs Control Board (NDDCB). கட்டுப்படுத்தப்படுகின்றன. மேற்படி நிறுவனத்தில் முன்னோடி இரசாயனங்களினை இறக்குமதி செய்ய, உரிய நிறுவனங்களை பதிவுசெய்ய, முன்னோடி இரசாயனங்களினை பரிசோதிக்க, நிறுவனகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளவென தனியான பிரிவு ஒன்று இருக்கின்றது அதுதான் முன்னோடி இரசாயனங்களினை  கட்டுப்படுத்தும் பிரிவு Precursor Control Authority (PCA). இந்த முன்னோடி இரசாயனங்களின் இறக்குமதி, பயன்பாடு ….. போன்ற விடயங்கள் பின்வரும் சட்ட மூலம்  Conventions against Illicit traffic in Narcotic Drugs and Psychotropic Substances Act No. 01 of 2008  ஊடக கட்டுப்படுத்தப்படுகின்றது.

போதை மருந்து கடத்தல்காரர்கள் நேரடியாக போதை மருந்தினை கொண்டுவருவதிலும் பார்க்க முன்னோடி இரசாயன பொருட்களை நாட்டினுள் இலகுவாக கொண்டுவந்து போதை பொருளினை இலகுவாக உற்பத்தி செய்துவிடலாம். மேலும் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்பிக்கலாம் அல்லது குறைந்த தண்டனையினை பெற்றுக்கொள்ளலாம். இலங்கையில் பலவருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஆய்வுகூடம்/ தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். தென்னமெரிக்க நாடுகளில் இவ்வாறான பல்லாயிரக்கணக்கான ஆய்வுக்கூடங்கள்/ தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையிலேயே அண்மையில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள்  உற்பத்தி செய்யும்  தொழில் சாலையினை இலங்கையில் நடத்தியதாக கூறப்படுகின்றது 

நன்றி

சீட் பெல்ட் ஏன் அவசியம்?

கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஆனது வீதிகளில் செல்லும் வாகனங்களில் இருக்கையில் இருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் (ஆசன பட்டி) அணிய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம் மூலம் ஒன்றை உருவாக்கியுள்ளது அத்துடன் அது மிகவிரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது . ஏற்கனவே சாரதியானவர் இந்த ஆசன பட்டியை அணிய வேண்டும் என்ற சட்டமூலம் இருந்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படாத வகையிலேயே இருந்து வருகின்றது அல்லது போலீசாரை கண்டவுடன் அணியும் விதமாகவும் இருந்து வருகின்றது.

சீட் பெல்ட்களின் செயல்திறன் வெறும் தத்துவார்த்தமானது மட்டுமல்ல; பல தசாப்த கால நிஜ உலக தரவுகளால் இது நிரூபிக்கப்படுகின்றது . தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தரவுகளின் படி, சீட் பெல்ட் அணிவது:

  1. முன் இருக்கையில் பயணிக்கும் கார் பயணிகளுக்கு ஆபத்தான காயம் ஏற்படும் அபாயத்தை 45% குறைக்கிறது.
  2. மிதமான முதல் கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தை 50% குறைக்கிறது.

இந்நிலையில் இந்த பதிவானது ஆசன பட்டி எவ்வாறு விபத்துகளில்  பொழுது பிரயாணிகளின் ஏற்படும் காயங்களின் தீவிரத்தன்மையினை குறைக்கின்றது என்பது பற்றி விளக்குகின்றது.

  1. வாகனம் ஒன்று பிரயாணிக்கும்  பொழுது வாகனத்தில் பிரயாணிக்கும் பிரயாணிகள் மற்றும் ஏனைய  பொருட்கள் யாவும் வாகனத்தின் வேகத்திலேயே பிரயாணிக்கும். இதனை நியூட்டனின் முதலாவது விதியானது தெளிவாக விளக்குகின்றது. விபத்து  நடைபெறும் பொழுது வாகனத்தின் வேகமானது சடுதியாக பூச்சிய நிலைக்கு வருகின்றது. ஆனால் வாகனத்தில் உள்ளிருக்கும் பிரயாணிகளின்  வேகமானது சிறிது நேரத்தில் பிற்பாடே பூச்சிய நிலைக்கு  வரும். இதன் காரணமாக வாகனத்தில் உள்ளிருக்கும் பிரயாணிகள் வாகனத்தினுள் முன்னோக்கி வீசப்படுவார்கள் அல்லது வாகனத்தில்  உள்ளிருக்கும்  முன்புற இருக்கைகள் மற்றும் ஏனைய பொருட்களுடன் மோதுவார்கள் இதனால் அவர்களுக்கு காயம் உண்டாகும். இவ்வாறு பிரியாணிகள் முன்னோக்கி அசைவதனை இந்த சீட் பெல்ட் ஆனது முற்றாக தடுக்கின்றது. மேலும் பிரியாணிகளின் அமர்முடுகளிற்கான  நேரத்தினை அதிகரித்து அவர்களில் தாக்கும் விசை இணை குறைக்கின்றது.
  2. விபத்தும் பொழுது ஏற்படும் அமர்வுகள் விசையினை இந்த சீட் பெல்ட் ஆனது பரந்துபட்ட வகையில் உடம்பில் தாக்க அனுமதிக்கின்றது. முக்கியமாக இடுப்பு பகுதியில் போட்டிருக்கும் பெல்ட் ஆனது  எமது இடுப்பு குழியில் உள்ள வன்மையான என்புகளின் மீது விசையை பரவச் செய்கின்றது. இதன் காரணமாக ஏற்படும் காயங்கள்  மற்றும் காயங்களின் தீவிர தன்மை குறைவாக இருக்கின்றது.
  3. சீட் பெல்ட் ஆனது பிரயாணிகளினை விபத்தின் பொழுது வாகனத்தின் வெளியே வீசப்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்கின்றது. முக்கியமாக சீட் பெல்ட்களில் நெஞ்சுக்கு குறுக்கே போட்டு இருக்கும் பெல்ட் ஆனது  இந்தப் பணியை சிறப்பாக செய்கின்றது.
  4. வாகனங்களில்  உள்ள பாதுகாப்பு பலூன்களானது தன்னிச்சையாகவே செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனினும். சீட் பெல்ட் உபயோகிக்கும் பொழுது, சீட் பெல்ட் ஆனது விபத்தின் பொழுது பிரியாணிகளை இருக்கைகளுடன்  இறுக்கி வைத்திருப்பதற்கு உதவுகின்றது . இந்நிலையில் பலூன் ஆனது மேலும் வினைத்திறனான வகையில் தொழிற்படுவதற்கு  சீட் பெல்ட் உதவுகின்றது.

இலங்கையில் பல வாகனங்களில் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக சீட்  பெல்ட் என்ற போர்வையில் ஏதாவது ஒன்றினை பொருத்தி இருப்பார்கள் ஆனால் நவீன வாகனங்களில்  மேம்பட்ட சீட் பெல்ட் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, அவை பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகின்றன.

  1. ப்ரீ-டென்ஷனர்கள் (Pre-tensioners:): விபத்து ஏற்பட்டால், சென்சர்கள் சீட் பெல்ட்டை உடனடியாக இழுக்கும் ஒரு பொறிமுறையைத் தூண்டுகின்றன, எந்தவொரு தளர்வையும் நீக்குகின்றன. இது மோதலின் ஆரம்ப தருணங்களிலிருந்து பயணி தங்கள் இருக்கையில் உறுதியாகப் பிடிக்கப்படுவதை உறுதிசெய்கிறது,  மற்றும் அவர்கள் பலூன் (Airbag) தொழில்படுவதற்கு  உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
  2. லோட் லிமிட்டர்கள் (Load Limiters): சீட் பெல்ட் ஆனது மார்பில் அதிக சக்தியை செலுத்துவதையும் கடுமையான விபத்தில் காயத்தை ஏற்படுத்துவதையும் தடுக்க இந்த அமைப்பு உதவுகின்றது, ப்ரீ-டென்ஷனர்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு . இது பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கத்தின் உச்ச சக்திகளை உறிஞ்சி பயணிகளில் ஏற்படும் காயத்தின் தீவிர தன்மையினை குறைக்க உதவுகின்றது.

நன்றி

போதை தரும் “குஷ்”

அண்மையில் அரசியல் வாதி ஒருவர் “குஷ்” என்ற போதைப்பொருளுடன் கைதுசெய்ப்பட்டிருப்பாதக செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தன. முன்னரும் இந்த வகையான போதைப்பொருள் இலங்கையில் கைப்பெற்ற பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குஷ் என்றால் என்ன என்பதை இந்த பதிவு விளக்குகின்றது. கஞ்சா செடியில் பல்வேறு வகைகள் உண்டு அவற்றில் பிரதானமானவை

  1. Cannabis sativa
  2. Cannabis  indica

இது தவிர பல்வேறு கலப்பின வகைகளும் உள்ளன. இவற்றில் cannabis sativa ஆனது உடலுக்கு உற்சாகத்தினை கொடுக்கும் மறுதலையாக cannabis indica உடலினை தளர்த்தி உறக்க நிலைக்கு இட்டு செல்லும். இவ்வாறு இருவேறு விளைவுகளுக்கு காரணமாக அமைவது அவற்றில் இருக்கும் இரசாயனங்களின் விகித வேறுபாடே ஆகும்.

கஞ்சா செடியில் உள்ள பல்வேறு இரசாயன பதார்த்தங்களும் Cannabinoids என்ற பொதுப்பெயரினால் அழைக்கப்படும். இவற்றில் பொதுவானது Tetrahydrocannabinol (THC) மற்றும் Cannabidiol (CBD). மேலும் Cannabinol (CBN),Tetrahydrocannabinol acid (THCA) மற்றும் Cannabigerol (CBG) ஆகிய இரசாயன பதார்த்தங்களும் காணப்படும்.

தற்காலத்தில் கஞ்சா செடிகளில் உள்ள இரசாயனக்களின் விகித வேறுபாட்டினை வைத்து அறிவியலாளர்கள் மூன்றாக பிரிக்கின்றனர் (chemical varieties – chemovars)

வகை I: high THC

வகை II: THC/CBD combined

v III: high CBD

குஷ் போதைப்பொருளானது Cannabis indica இல் இருந்தே பெறப்படுகின்றது.  Cannabis indica ஆனது இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. முக்கியமாக இந்து குஷ் மலைத்தொடரில் இது அதிகளவில் காணப்படுகின்றது. இதன் காரணமாக “குஷ்” என்று அழைக்கப்படுகின்றது. மேலும் “குஷ்”  பின்வரும் பிரிவுகளை கொண்டிருக்கின்றது Afghan Kush, Hindu Kush, Green Kush,OG Kush, Bubba Kush மற்றும் Purple Kush.

குஷ் ஆனது  Cannabis indica இன் இருந்து பெறப்படும் இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் போன்றவற்றிற்கு  இரசாயன பொருட்களை விசிறி உலர்த்தி தயார்படுத்தப்படுகின்றது. 

                    முற்றும்