கூட்டுபாலியல் வல்லுறவு வழக்குகளில் DNA

இன்றைய தினம் இலங்கையின் உயர் நீதிமன்றம் வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையினை உறுதிசெய்துள்ளது.  கூட்டு வல்லுறவு (Gang rape) மற்றும் அதனுடன் தொடர்புடைய கொலை வழக்குகள், தடயவியல் மருத்துவத்தில் மிகவும் சிக்கலான விசாரணைப் பிரிவுகளில் ஒன்றாகும். பல குற்றவாளிகள், குறைந்த நேரத்தில் நிகழும் தாக்குதல், சாட்சியமின்மை, மற்றும் சம்பவ இடத்தில் கிடைக்கும் சான்றுகளின் கலப்பு தன்மை ஆகியவை இந்த வழக்குகளை சவாலானவைகளாக மாற்றுகின்றன. இத்தகைய சூழலில், பாரம்பரிய சாட்சி ஆதாரங்களைக் காட்டிலும் DNA தடயவியல் (Forensic DNA analysis) மிக உயர்ந்த அறிவியல் நம்பகத்தன்மையைக் கொண்ட ஆதாரமாக திகழ்கிறது. குறிப்பாக, வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகள், DNA சான்றுகள் எவ்வாறு குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காண உதவுகின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன.

DNA-வின் அடிப்படை அறிவியல்

DNA (Deoxyribonucleic Acid) என்பது உயிரினங்களின் மரபணு தகவலைக் கொண்ட அடிப்படை மூலக்கூறு ஆகும். ஒவ்வொரு மனிதரின் DNA அமைப்பு தனித்துவமானது (identical twins தவிர). இதன் காரணமாக, DNA ஒரு “உயிரியல் விரல் ரேகை” (biological fingerprint) எனக் கருதப்படுகிறது. தடயவியல் துறையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முறை Short Tandem Repeat analysis (STR analysis) எனப்படும் முறை ஆகும்

STR-ன் முக்கிய அம்சங்கள்

  • DNA-யில் மீண்டும் மீண்டும் வரும் குறுகிய வரிசைகள் (repeat sequences)
  • ஒவ்வொரு நபருக்கும் மீண்டும் மீண்டும் வரும் குறுகிய வரிசைகளின் எண்ணிக்கை வேறுபடும்
  • பல loci-களில் ஆய்வு செய்தால் → தனிப்பட்ட DNA profile உருவாகும் ( Loci என்பது DNA-வில் ஒரு குறிப்பிட்ட இடம் (location) அல்லது நிலையம் ஆகும். இது chromosome-இல் ஒரு gene அல்லது genetic marker இருக்கும் துல்லியமான இடத்தை குறிக்கிறது)

இதனால், ஒரே மாதிரியில் பல நபர்களின் DNA இருந்தாலும் அவற்றை வேறுபடுத்த இயலும்.

கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்குகளில் உயிரியல் சான்றுகள்

இந்த வகை வழக்குகளில் பல்வேறு உயிரியல் சான்றுகள் கிடைக்கின்றன

1. விந்து (Semen)

  • முக்கிய குற்றவாளி அடையாள சான்று
  • விந்தணுக்கள் மூலம் ஆண் DNA பெறப்படுகிறது
  • பல குற்றவாளிகள் இருப்பதால் கலப்பு DNA காணப்படும்

2. Epithelial / Touch DNA

  • உடல் தொடர்பின் மூலம் தோல் செல்கள்
  • உடைகள், தோல் மேற்பரப்புகள், கட்டுப்பாட்டு பொருட்களில் கிடைக்கும்

3. இரத்தம் (Blood)

  • போராட்டம் அல்லது காயங்களால்

4. உடை மற்றும் சுற்றுப்புற சான்றுகள்

  • உடைகள், நிலம், கற்கள், கயிறுகள் முதலியவற்றில் DNA கிடைக்கலாம்

கலப்பு DNA  (Mixed DNA )

கூட்டு பலாத்காரம் வழக்குகளில் மிகப் பெரிய சவால் ஒரே மாதிரியில் பல நபர்களின் DNA கலந்திருக்கும் நிலை. இவ்வாறான நிலையில் பின்வரும் படிமுறைகளின் ஊடாக குற்றவாளிகளை கண்டறியும் செயன்முறை நடைபெறும்

1.STR அடிப்படையில் கலப்பு DNA வேறுபடுத்தி அறிதல்

    ஒரு locus-ல்:

    • ஒருவர் → 2 alleles
    • 2 பேர் → அதிகபட்சம் 4 alleles
    • 3 பேர் → 6 alleles

    👉 இதன் மூலம் சந்தேகநபர்களின் எண்ணிக்கை கணிக்கப்படுகிறது

    2. விந்து பிரித்தல் நுட்பம் (Differential Extraction)

    இந்த நுட்பம் மிக முக்கியமானது:

    • முதலில் epithelial (பெண்) செல்கள் உடைக்கப்படும்
    • விந்தணுக்கள் பாதுகாக்கப்படும்
    • பின்னர் விந்தணுக்கள்ல் இருந்து DNA எடுக்கப்படும்

    👉 இதனால் குற்றவாளி ஆணின் DNA தெளிவாக பிரித்தல் செய்யப்படுகிறது

    3. DNA பெருக்கல் (PCR Amplification)

    கலப்பு DNA மாதிரிகளில் DNA அளவு குறைவாக இருக்கும்

    • Polymerase Chain Reaction (PCR) மூலம் STR பகுதிகள் பெருக்கப்படுகின்றன
    • மிகச் சிறிய DNA அளவிலிருந்தும் ஆய்வு செய்ய இயலும்

    4. Capillary Electrophoresis & Electropherogram Analysis

    DNA fragments:

    • அளவின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன
    • graph வடிவில் (electropherogram) காணப்படும்

    5. Peak Analysis

    • Peak position → allele size
    • Peak height → DNA அளவு

    👉 பல peaks இருப்பது → பல contributors இருப்பதை காட்டுகிறது

    Major மற்றும் Minor Contributors அடையாளம் காணுதல்

    • உயரமான peaks → major contributor (நபரின் DNA அளவு sample-ல் அதிகம் உள்ளது )
    • குறைந்த peaks → minor contributors (நபரின் DNA அளவு sample-ல் குறைவாக உள்ளது)

    👉 இதன் மூலம் முக்கிய குற்றவாளி அடையாளம் காண முடியும்

    முக்கிய தவறான புரிதல்

    👉 Major contributor என்பதன் பொருள் “அவர் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டவர்” என்பதல்ல.

    6. Mixture Deconvolution (DNA பிரித்தல்)

    இது மிக சிக்கலான மற்றும் முக்கியமான கட்டமாகும்:

    • allele எண்ணிக்கை மதிப்பீடு
    • peak ratio analysis
    • PCR artefacts நீக்கம் (stutter peaks)

    👉 இறுதியாக, ஒவ்வொரு contributor-ன் genotype கணிக்கப்படுகிறது

    7. Probabilistic Genotyping (நவீன கணினி மாதிரி)

    நவீன முறைகள்

    • STRmix
    • TrueAllele

    செயல்பாடு

    • பல genetic combinations கணக்கிடும்
    • Bayesian statistical models பயன்படுத்தும்
    • மிகவும் சாத்தியமான DNA profile தேர்வு

    8. புள்ளிவிவர ஆதாரம் (Statistical Interpretation)

    Likelihood Ratio (LR)

    • Hypothesis 1: DNA accused-இலிருந்து வந்தது
    • Hypothesis 2: DNA random நபரிடமிருந்து வந்தது

    👉 LR அதிகமாக இருந்தால் → குற்றவாளியாக இருப்பதற்குரிய மிகவும் சாத்தியம்

    9. Random Match Probability (RMP)

    • பொதுவான நபருடன் DNA பொருந்தும் சாத்தியம்
    • 1 in millions அல்லது billions

    👉 இது DNA சான்றின் வலிமையை அளவிடுகிறது

    10. Y-STR Analysis – ஆண் சார்ந்த ஆய்வு

    • Y chromosome வழியாக பெறப்படும்
    • பல ஆண் contributors உள்ளபோது பயன்படும்
    • sperm-rich samples இல் மிகவும் பயனுள்ளது

    Chain of Custody (சான்று பாதுகாப்பு நடைமுறை)

    • சரியான சேகரிப்பு
    • லேபிள் செய்தல்
    • பாதுகாப்பான சேமிப்பு
    • பதிவு பராமரிப்பு

    👉 DNA contamination தவிர்க்க முக்கியம்

    நீதிமன்றத்தில் DNA சான்றின் பங்கு

    இதன் மூலம்:

    • குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்தது நிரூபிக்கப்படுகிறது
    • பாலியல் தொடர்பு உறுதி செய்யப்படுகிறது
    • பல குற்றவாளிகள் தனித்தனியாக அடையாளம் காணப்படுகின்றனர்

    தடயவியல் மருத்துவக் கண்ணோட்டத்தில், DNA ஆய்வு கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்குகளில் மாற்றமற்ற முக்கியத்துவம் பெற்றுள்ளது. Mixed DNA மாதிரிகளில் இருந்து தனிநபர்களை அடையாளம் காணும் திறன், STR analysis, PCR amplification, electrophoresis, மற்றும் advanced statistical modeling ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் சாத்தியமாகிறது. இதன் மூலம் “ஒரே கலந்த உயிரியல் மாதிரியில் இருந்து பல குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் கண்டு, அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் நீதியை உறுதிசெய்ய முடியும்”

    DNA, தடயவியல் மருத்துவம்  மற்றும் குற்றம் நடந்த இட சான்றுகள் ஆகிய மூன்றும் சேரும்போது மட்டுமே ஒரு வழக்கில் முழுமையான தடயவியல் நிரூபணம் உருவாகிறது. DNA ஆதாரம் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையிலான உயிரியல் தொடர்பை (biological link) நிரூபிக்கிறது, அதாவது சம்பவ இடத்தில் அல்லது உடலில் அவருடைய உயிரியல் தடயங்கள் உள்ளனவா என்பதை காட்டுகிறது. ஆனால் DNA மட்டும் சம்பவத்தின் சூழ்நிலையை அல்லது தாக்குதல் நடந்த விதத்தை விளக்க முடியாது. இதனை தடயவியல் மருத்துவ ஆதாரம் நிரப்புகிறது; உடல் பரிசோதனையில் காணப்படும் காயங்கள், அவற்றின் வகை, வயது மற்றும் உருவான விதம் ஆகியவை பலவந்தம் இருந்ததா, உயிருடன் இருந்தபோது காயம் ஏற்பட்டதா என்பதைக் காட்டுகிறது. அதேபோல் குற்றம் நடந்த இட சான்றுகள் சம்பவ இடத்தில் காணப்படும் ரத்தக் கறை வடிவம், பொருட்கள், உடை நிலை மற்றும் பிற தடயங்கள் மூலம் சம்பவம் எங்கு, எப்படி, எந்த வரிசையில் நடந்தது என்பதை விளக்குகிறது. இவ்வாறு DNA “யார்?”, தடயவியல் மருத்துவம் “எப்படி?”,குற்றம் நடந்த இட சான்றுகள் “எங்கு மற்றும் எந்த சூழ்நிலையில்?” என்பதைக் கூறி, மூன்றும் ஒருங்கிணைந்து தான் ஒரு வழக்கில் முழுமையான மற்றும் நம்பகமான தடயவியல் முடிவை உருவாக்குகின்றன.

    உயிரைப் பறித்த ஒரு முத்தம்!

    கடந்த வாரம்  மெக்சிகோ சிட்டியில் 17 வயது இளைஞரான ஜூலியோ மசியாஸ் கோன்சாலஸ், தனது காதலி கழுத்தில் வைத்த ‘லவ் பைட்’ (Hickey) காரணமாக உயிரிழந்தார்; அந்த அழுத்தமான முத்தத்தால் கழுத்தின் இரத்தக் குழாயில் உருவான ஒரு இரத்த உறைவு (Blood clot) மூளைக்குச் சென்று பக்கவாதத்தை (Stroke) ஏற்படுத்தியதே இந்த எதிர்பாராத மரணத்திற்கு காரணமாக அமைந்தது. ஓர் முத்த தழும்பானது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்தும் நிலைக்கு இட்டு சென்றது என்பது குறித்து இப்பதிவு ஆராய்கின்றது

    “முத்த தழும்பு”, “அன்பு கடி” அல்லது Love bite / Hickey என்பது பொதுவாக தோலில் உறிஞ்சுதல் (உறிஞ்சும் செயல் – suction) மூலம் ஏற்படும் மேலோட்டமான காயம் (மேல்தோல் இரத்தக் கசிவு – contusion / ecchymosis) ஆகும். இது பெரும்பாலும் பாதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. ஆனால், மிகவும் அரிதான சில சூழ்நிலைகளில், குறிப்பாக கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட இத்தகைய காயத்திற்குப் பின் திடீர் மரணம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் மருத்துவ மற்றும் சட்ட (தடயவியல்) ரீதியாக முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன.

    இத்தகைய வழக்குகளில், காரண–விளைவு தொடர்பு (causation), நேர ஒத்திசைவு (temporal relationship), மற்றும் உடற்கூறு ஆதாரங்கள் (pathological evidence) ஆகியவை மிக முக்கியமானவை.

    கழுத்தின் உடற்கூறு முக்கியத்துவம் (Anatomical Importance of Neck)

    கழுத்துப் பகுதி மிகவும் நுணுக்கமான அமைப்புகளை கொண்டுள்ளது:

    • கரோட்டிட் நாடி (Carotid artery) – மூளைக்கு இரத்தத்தை வழங்கும் முக்கிய நாடி
    • கரோட்டிட் சைனஸ் (Carotid sinus) – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணர்வுக் குழு (receptor)
    • வேகஸ் நரம்பு (Vagus nerve) – இதய துடிப்பு மற்றும் உடல் தன்னியக்க கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும்

    எனவே, இப்பகுதியில் ஏற்பட்ட சிறிய காயங்களுக்குக் கூட சில நேரங்களில் கடுமையான விளைவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. ஒவ்வொரு சாத்தியக்கூறுகளும் சாத்திய வரிசையில் கீழே பட்டியல் படுத்தப்படுகின்றது

    1. கரோட்டிட் நாடி காயம் மற்றும் இரத்த உறைவு (Carotid Artery Injury and Thrombosis) – மிக அதிக சாத்தியம்

    கழுத்தில் ஏற்பட்ட உறிஞ்சும் காயம் காரணமாக கரோட்டிட் நாடியின் உள் அடுக்கு (intima) சேதமடையலாம். இதன் விளைவாக குருதி சிறுதட்டுக்கள்  சேர்தல் (platelet aggregation) மற்றும் இரத்த உறைவு கட்டி உருவாக்கம் (thrombus formation) நடைபெறும். இவ்வாறு உருவான இரத்த உறைவு கட்டி அங்கேயே இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம் அல்லது மூளைக்குச் சென்று தடுப்பு ஏற்படுத்தலாம் (embolism)

    இதனால்:

    • மூளை இரத்த ஓட்டக் குறைவு (ischemic stroke)
    • மூளை திசு அழிவு (cerebral infarction)
    • திடீர் மரணம்

    என்பன ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

    2. கரோட்டிட் நாடி அடுக்கு பிரிவு (Carotid Artery Dissection)

    சில நேரங்களில் காயத்தால் நாடியின் சுவர் அடுக்குகள் பிரிந்து பொய்யான வாயில் (false lumen) உருவாகலாம். இதனால் இரத்த ஓட்ட குறைதல் மற்றும் இரத்த உறைவு கட்டிகள்  நகர்தல் (embolism) போன்றன நடைபெறும். இதன் விளைவாக பாரிசவாதம் அல்லது திடீர் மரணம் ஏற்படலாம்

    3. கரோட்டிட் சைனஸ் தூண்டுதல் (Carotid Sinus Stimulation)

    கரோட்டிட் நாடியின் பிரிவு பகுதியில் உள்ள கரோட்டிட் சைனஸ் என்பது இரத்த அழுத்த கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. இப்பகுதி அதிகமாக தூண்டப்பட்டால்:

    • வேகஸ் நரம்பு செயல்பாடு அதிகரிக்கும்
    • இதய துடிப்பு குறையும் (bradycardia)
    • இதய நிறுத்தம் (asystole) / திடீர் மரணம் ஏற்படலாம்

    இந்த நிலை Carotid Sinus Hypersensitivity (CSH) உள்ளவர்களில் அதிகமாகக் காணப்படும். ஆனால் சாதாரண love bite பெரும்பாலும் மேலோட்டமானது மற்றும் ஆழமான அழுத்தம் இல்லை

    👉 எனவே இது சாத்தியமான காரணமாக இருந்தாலும், குறைந்த சாத்தியக்கூறுடையது.
    👉 இந்த நிலை உடற்கூறு ஆதாரம் இல்லாததால், இது “மற்ற காரணங்கள் நீக்கப்பட்ட பின்” (diagnosis of exclusion) மட்டுமே கருதப்படுகிறது.

    4. வேகல் தடுப்பு (Vagal Inhibition)

    கழுத்தில் திடீர் தூண்டுதல் காரணமாக தன்னியக்க நரம்பியல் (parasympathetic) செயல்பாடு அதிகரித்து திடீர் இதய நிறுத்தம் ஏற்படலாம். இது உடனடி மயக்கம் மற்றும் வீழ்ச்சி மரணம் போன்றன இருக்கும் மேலும் உடற்கூறு ஆதாரம் இருக்காது

    ❗ ஆகையால் நிரூபிக்க மிகவும் கடினம் அத்துடன் மற்ற காரணங்கள் நீக்கப்பட்ட பின் மட்டுமே கருதப்பட வேண்டும்

    அடிப்படை இயற்கை நோய்கள் (Underlying Natural Diseases)

    சில நேரங்களில் மரணத்தின் உண்மையான காரணம்:

    • இதய மின்சார கோளாறுகள் (cardiac arrhythmias)
    • இதய தசை நோய் (cardiomyopathy)
    • மூளை aneurysm

    இத்தகைய நிலைகளில்:
    👉 “love bite” என்பது சம்பவ ஒற்றுமை (coincidence) மட்டுமே

    ⚠️ எனவே, தடயவியல் ஆய்வில்:

    • இயல்பான நோய்கள் முதலில் நீக்கப்பட வேண்டும்

    கழுத்தில் ஏற்பட்ட “அன்பு கடி” காரணமாக திடீர் மரணம்
    ✔️ மிகவும் அரிதானது
    ✔️ ஆனால் மருத்துவ ரீதியாக சாத்தியம் உள்ளது

    ✔️ நாம் மிகுந்த காதல் உணர்ச்சி வசப்படும் பொழுது எம்மை அறியாமல் அதிக உறிச்சுதல் விசையினை பிரயோகிக்க முற்படும் சந்தர்ப்பத்தில் இவ்வாறன துர்பாக்கிய நிகழ்வுகள் நடைபெற சாத்தியம் உள்ளது. எனவே உணர்ச்சி வசப்படும் பொழுது அவதானம் தேவை 

    சுயமாக ஏற்படுத்தப்படும் காயங்களால் ஏற்படும் தற்கொலை மரணங்கள்

    சுயமாக ஏற்படுத்தப்படும் கூரிய காயங்களால் ஏற்படும் இரத்தச்சோர்வு மரணம் (Hemorrhagic death) பொதுவாக தற்கொலை சம்பவங்களில் காணப்படுகிறது. தடயவியல் மருத்துவத்தில், இவ்வகை மரணங்கள் மரணக் காரணத்தை நிரூபிப்பதற்கும், அது தற்கொலையா அல்லது கொலையா அல்லது விபத்தா என்பதை வேறுபடுத்துவதற்கும் முக்கியமானதாகும். இவ்வாறான மரணங்களின் முக்கிய அடிப்படை பொறிமுறை முக்கிய இரத்தக் குழாய்களில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறி (exsanguination) இரத்த அழுத்தம் குறைந்து அதிர்ச்சி (shock) ஏற்பட்டு மரணம் அடைவதாகும். பொதுமக்களில் பலருக்கு இவ்வாறான மரணங்கள் புதுமையானதாகவும் அரிதானதாகவும் இருக்கும் ஆனால் தடயவியல் மருத்துவத்தில் இவ்வாறான பல மரணங்கள் பலதடவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    இரத்தச்சோர்வு மரணத்தின் செயல்முறை

    இரத்தச்சோர்வு மரணம் என்பது உடல் தன்னுடைய இரத்த அளவைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இழக்கும்போது ஏற்படுகிறது. சுயமாக ஏற்படுத்தப்படும் கூரிய காயங்களில் இது பொதுவாக

    • முக்கிய நாடிகள் /தமனிகள் (arteries) சேதமடைவதால் ஏற்படுகிறது (கரோட்டிட், ரேடியல், பெமோரல் போன்றவை)
    • இரத்தக் குழாய்களின் முழுமையான தொடர்ச்சி கெடுதல்
    • வெளிப்புறமாக அதிக இரத்தப்போக்கு

    நாடிகள் /தமனி கிழிந்தால்:

    • உயர் அழுத்தத்தில் இரத்தம் வெளியேறும்
    • உடலின் இரத்த அளவு வேகமாக குறையும்
    • இது இரத்த அளவு குறைவால் ஏற்படும் அதிர்ச்சி (Hypovolemic shock) உருவாகும்

    இதன் விளைவுகள்:

    • இரத்த அழுத்தம் குறைதல்
    • மூளைக்கு ஆக்சிஜன் குறைதல்
    • மயக்கம் / உணர்வு இழப்பு
    • இதய செயலிழப்பு மற்றும் மரணம்

    சுய காயங்களின் வடிவமைப்பு (Injury Pattern)

    தடயவியல் பரிசோதனையில் சில முக்கிய காய வடிவங்கள் காணப்படும்:

    1. தயக்கக் காயங்கள் (Hesitation cuts)

    • பல சிறிய, மேலோட்டமான வெட்டுக் காயங்கள்
    • பொதுவாக கை, மணிக்கட்டு, முன்கை போன்ற பகுதிகளில் காணப்படும்
    • தற்கொலை முயற்சிக்கு முன் ஏற்பட்ட தயக்கத்தை காட்டும்

    2. இறுதி உயிர்க்கொல்லும் காயம்

    • ஆழமான மற்றும் தீர்மானமான வெட்டு
    • முக்கிய இரத்தக் குழாய்களை பாதிக்கும்
    • அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும்

    3. அணுகக்கூடிய இடங்களில் காயங்கள்

    • உடலின் எளிதில் அடையக்கூடிய பகுதிகளில் மட்டுமே காயங்கள்
    • பொதுவாக வலது/இடது கை இயக்கத்திற்கு ஏற்ப அமைந்திருக்கலாம்

    பொதுவாக காயங்கள் காணப்படும் உடற்பகுதிகள்

    சுய இரத்தச்சோர்வு மரணங்களின் பொழுது காயங்கள் அதிகமாக காணப்படும் இடங்கள்

    • மேல் கை – ரேடியல் நாடி , அல்னார் நாடி
    • கழுத்து பகுதி – கரோட்டிட் தமனி, ஜுகுலார் நாளம்
    • கால் அல்லது துடை (அரிதாக) – பெமோரல் நாடி அல்லது தமனி

    கழுத்து இரத்தக் குழாய்கள் காயமடைவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில்

    • மூளைக்கு நேரடி இரத்த ஓட்டம் அதிகம்
    • மிக விரைவாக இரத்த இழப்பு ஏற்படும்

    மரண செயல்முறை (Pathophysiology)

    முக்கிய இரத்தக் குழாய் கிழிந்ததும்

    1. உடனடி இரத்த இழப்பு ஆரம்பமாகிறது
    2. உடல் தற்காலிகமாக பதிலளிக்கிறது:
      • இதயத் துடிப்பு அதிகரிப்பு
      • இரத்தக் குழாய் சுருக்கம்
    3. இரத்த இழப்பு 30–40% கடந்தவுடன் உடல் சமநிலை குலையும்
    4. மூளைக்கு இரத்தம் குறைவதால் மயக்கம் ஏற்படும்
    5. இறுதியில்:
      • ஆக்சிஜன் குறைபாடு
      • இதய செயலிழப்பு
      • மரணம்

    கொலை மற்றும் தற்கொலை தடயவியல் மருத்துவ வேறுபாடு

    தடயவியல் மருத்துவர் பின்வரும் அம்சங்களை ஆய்வு செய்கிறார்

    தற்கொலைக்கு ஆதரவான அம்சங்கள்:

    • தயக்கக் காயங்கள் இருப்பது
    • எளிதில் அடையக்கூடிய இடங்களில் மட்டுமே காயங்கள்
    • பாதுகாப்பு காயங்கள் இல்லாமை
    • போராட்ட அடையாளங்கள் இல்லாமை

    கொலைக்கு சந்தேகமான அம்சங்கள்:

    • பாதுகாப்பு காயங்கள் (defence wounds)
    • காயங்கள் பல திசைகளில் இருப்பது
    • போராட்ட அடையாளங்கள்
    • அணுக முடியாத இடங்களில் காயங்கள்

    சம்பவ இட ஆய்வு (Scene Investigation)

    முழுமையான தடயவியல் ஆய்வில்:

    • உடலின் நிலை (position of body)
    • இரத்தப் பரவல் வடிவம் (blood spatter pattern)
    • பயன்படுத்திய ஆயுதத்தின் அருகாமை
    • சூழல் தடயங்கள் (footprints, disturbance)
    • கடிதம் அல்லது டிஜிட்டல் ஆதாரங்கள்

    இரத்தப் பரவல் பொதுவாக:

    • தமனி வெட்டப்பட்டால் துடிப்பான இரத்தச் சிதறல்
    • உடல் கீழ் பகுதியில் இரத்தக் குவிப்பு
    • நிலைமைக்கு ஏற்ப ஓட்ட வடிவங்கள்

    சுயமாக ஏற்படுத்தப்படும் கூரிய காயங்களால் ஏற்படும் இரத்தச்சோர்வு மரணம் என்பது மிக விரைவாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை ஆகும். தடயவியல் மருத்துவத்தில், காயங்களின் வடிவம், உடற்கூறு பகுதி, இரத்த இழப்பு இயந்திரம் மற்றும் சம்பவ இட ஆய்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மரணத்தின் உண்மையான காரணத்தையும் வகையையும் நிரூபிக்கப்படுகிறது. இது சட்ட மற்றும் மருத்துவ ரீதியில் மிக முக்கியமானதாகும்.

    முக்கிய குறிப்பு – இப்பதிவு ஓர் விழிப்புணர்வு பதிவே மாறாக தற்கொலைகளை தூண்டும் நோக்கம் அல்ல

    தற்கொலைகளில் விசித்திரமான உடைகள்!

    தற்கொலை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மிகத் துயரமான முடிவு. பொதுவாக, இத்தகைய நிகழ்வுகளில் தடயவியல் ஆய்வாளர்கள் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் கவனம் செலுத்துவார்கள். இருப்பினும், சில அரிதான நிகழ்வுகளில், உயிரிழந்தவர்கள் அணிந்திருக்கும் விசித்திரமான அல்லது வழக்கத்திற்கு மாறான உடைகள் (Bizarre Clothing) புலனாய்வாளர்களுக்குப் பெரிய சவாலாக அமைகின்றன. இந்த உடைகள் வெறும் தற்செயலானவை அல்ல; அவை அந்த நபரின் இறுதி மனநிலை மற்றும் உள்மன போராட்டத்தின் வெளிப்பாடாக இருக்கின்றன. பின்வரும் காரணங்களினால் சில நபர்கள் தற்கொலை செய்யும் பொழுது தமது வழமையான உடைகளுக்குக் பதிலாக விசித்திரமான உடைகளை அணிகின்றனர்.

     

    1. அடையாளமும் சடங்கு ரீதியான வெளிப்பாடும் (Symbolic Ritualism)

    பலருக்குத் தற்கொலை என்பது வெறும் மரணம் மட்டுமல்ல, அது ஒரு சடங்காகவே பார்க்கப்படுகிறது. தனது வாழ்நாளில் அடைய முடியாத ஒரு அடையாளத்தை மரணத்தின் போதாவது அடைய வேண்டும் என்ற வேட்கை இதில் வெளிப்படும்.

    • திருமண உடைகள் அல்லது சீருடைகள்: ஒரு நபர் தான் விரும்பிய திருமண வாழ்வு அமையாதபோது திருமண ஆடைகளை அணிந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட கௌரவமான பதவியைக் குறிக்கும் சீருடைகளை அணிந்தோ தற்கொலை செய்துகொள்வது, தங்களது ஆசையை மரணத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியாகும்.
    • கௌரவம் தேடுதல்: கிழிந்த துணிகளுக்குப் பதிலாக, மிகவும் விலை உயர்ந்த அல்லது நேர்த்தியான ஆடைகளை அணிவது, சமூகத்தில் தனக்கிருந்த பிம்பத்தை நிலைநாட்ட எடுக்கும் கடைசி முயற்சியாகக் கருதப்படுகிறது.

    2. மனச்சிதைவு மற்றும் சிதறிய சிந்தனைகள் (Psychosis and Disorganized Thinking)

    தீவிரமான மனநலப் பாதிப்புகள், குறிப்பாக ‘மனச்சிதைவு’ (Schizophrenia) உள்ளவர்களின் தற்கொலைகளில் உடைகள் மிகவும் விசித்திரமாக இருக்கும்.

    • அடுக்கடுக்கான ஆடைகள்: ஒரே நேரத்தில் பல சட்டைகள் அல்லது பல பேண்ட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிவது. இது வெளிப்புற சக்திகளிடமிருந்து அல்லது ‘குரல்களிடமிருந்து’ தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் எடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருக்கலாம்.
    • தொடர்பற்ற ஆடைகள்: கோடை காலத்தில் குளிர்கால உடைகளை அணிவது அல்லது ஆடைகளைத் தலைகீழாக அணிவது போன்றவை அவர்களின் சிதறிய சிந்தனைப் போக்கைக் காட்டுகின்றன.

    3. பாலியல் பிறழ்வு மற்றும் விபத்து மரணங்கள் (Paraphilia)

    தடயவியல் ஆய்வில் இது மிக முக்கியமான பகுதி. பல நேரங்களில் விசித்திரமான ஆடைகளுடன் நிகழும் மரணங்கள் தற்கொலையாகக் கருதப்பட்டாலும், அவை உண்மையில் ‘சுய இன்ப மூச்சுத்திணறல்’ (Autoerotic Asphyxiation) போன்ற செயல்பாடுகளின் போது ஏற்படும் விபத்துகளாக இருக்கலாம்.

    • மாற்று பாலின உடை (Cross-dressing): ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து தற்கொலை செய்வது அல்லது இத்தகைய செயல்பாடுகளின் போது உயிரிழப்பது. இது அவர்களின் ரகசியமான பாலியல் தேடல்களைக் காட்டுகிறது. இத்தகைய மரணங்களைச் சமூக அவமானத்திற்குக் பயந்து தற்கொலை என உறவினர்கள் கருதக்கூடும், ஆனால் தடயவியல் சான்றுகள் இதனை விபத்தென நிரூபிக்கலாம்.

    4. ஒரு செய்தி அல்லது எதிர்ப்பு (Communication and Protest)

    சில நேரங்களில் ஆடை என்பது ஒரு பேசாத தற்கொலை கடிதமாக (Suicide Note) மாறும்.

    • முகமூடிகள்: முகமூடி அணிவது என்பது தன்னை உலகிற்கு அடையாளப்படுத்த விரும்பாத தன்மையைக் குறிக்கும். அதே சமயம், அது தான் ஒரு ‘பாத்திரம்’ (Character) போல நடித்து மடிவதையும் குறிக்கலாம்.
    • கருப்பு ஆடைகள்: துக்கம் அல்லது சமூகத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தக் கருப்பு நிற ஆடைகள் தேர்ந்தெடுக்கப்படலாம்.

    5. உடலை ஒரு பொருளாகக் கருதுதல் (Depersonalization)

    தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் போது ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்க, அவர்கள் தங்களை ஒரு மனிதனாகப் பார்க்காமல் ஒரு பொருளாக அல்லது பொம்மையாகப் பார்க்க முற்படுவார்கள். விசித்திரமான ஒப்பனைகள் மற்றும் உடைகள் மூலம் தங்களை மாற்றிக் கொள்வது, தற்கொலை செய்துகொள்வதை அவர்களுக்கு எளிதாக்குகிறது.

    தற்கொலை நிகழ்வுகளில் காணப்படும் விசித்திரமான உடைகள் என்பது அந்த நபரின் மனவேதனை, குழப்பம் மற்றும் கடைசி ஆசைகளின் தொகுப்பாகும். ஒரு தடயவியல் மருத்துவர் அல்லது புலனாய்வாளர், அந்த உடைகளை வெறும் துணியாகப் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்களை (Psychological Autopsy) ஆராய்ந்து, அந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வருவார்கள் மேலும்  அது தற்கொலையா அல்லது கொலையா  என்பதைக் இலகுவாக கண்டறிந்து கொள்வார்கள்.

    இலங்கையின் (வறட்சிக்கால) புத்தாண்டு கொண்டாட்டங்களில் நீரில்மூழ்கி ஏற்படும் மரணங்கள் – காரணங்கள்???

    இலங்கையில் 2026-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு பெரும் சோகத்துடன் முடிந்துள்ளன. ஏப்ரல் மாதத்தின் கடுமையான வறட்சி மற்றும் நீர்நிலைகளில் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், சுமார் 26 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு “ஆழமற்ற இடங்களின் ஆபத்து ” என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. நீர் குறைவாக இருக்கும்போது பாதுகாப்பு அதிகம் என்ற பொதுவான எண்ணமே இத்தகைய விபத்துக்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. இந்த கட்டுரையானது, புவியியல், நீரியல் மற்றும் சமூகக் காரணிகள் எவ்வாறு இந்த விபத்துக்களுக்குப் பின்னணியாக அமைகின்றன என்பதை ஆராய்கிறது.

    1. புவியியல் பொறி: ஆற்றுப்படுகையின் தரை அமைப்பு மற்றும்கும்பா’ குழிகள்

    வறட்சிக் காலங்களில் ஆறுகளின் நீர் மட்டம் குறையும் போது, ஆற்றின் மேற்பரப்பு அமைதியாகத் தெரிந்தாலும் அதன் அடிப்பகுதி மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது.

    • மறைந்திருக்கும் குழிகள்: இலங்கையின் ஆறுகளில் (உதாரணமாக மகாவலி அல்லது தெதுரு ஓயா) நீரோட்டத்தினால் பாறைகளுக்கு இடையில் செங்குத்தான ஆழமான குழிகள் உருவாகின்றன. இவற்றை உள்ளூர் வழக்கில் ‘கும்பா’ (Kumbas) என அழைப்பர். சட்ட விரோத மணல் அகழ்வினால் இவ்வாறு பல இடங்களில் ஆழமான குழிகள் தோன்றியுள்ளன
    • ஆழத்தின் மாயை: ஒருவர் முழங்கால் அளவு நீரிலேயே நடந்து செல்வதாக நினைப்பார். ஆனால், திடீரென ஒரு படி எடுத்து வைக்கும்போது, எதிர்பாராத விதமாக 3 முதல் 5 மீட்டர் ஆழமுள்ள இவ்வாறான குழிகளுக்குள் விழ நேரிடும். இந்தத் திடீர் ஆழம் ஒருவருக்கு “அதிர்ச்சி எதிர்வினையை” (Cold shock response) உண்டாக்கி, சுவாசிக்க முடியாமல் நீரில் மூழ்கச் செய்கிறது.

    2. நீரியல் ஏற்ற இறக்கங்கள்: திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Surge)

    ஒரு பகுதியில் நிலவும் வறட்சி என்பது நாடு முழுவதும் மழை இல்லை என்று அர்த்தமல்ல. இலங்கையில் சித்திரைப் புத்தாண்டு காலம் ‘இடைக்கால பருவமழை’ (Inter-monsoon) காலத்துடன் ஒத்துப்போகிறது. அண்மையில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு இத்தகைய திடீர் நீரோட்டமே காரணமாகக் கருதப்படுகிறது. நீர் மட்டம் குறைவாக இருக்கும் ஆற்றில், திடீரென வரும் அதிகப்படியான நீரை உள்வாங்கும் திறன் குறைவாக இருப்பதால், அது சில விநாடிகளில் ஒரு பெரும் அலையாக உருவெடுத்து மக்களை அடித்துச் செல்கிறது.

    3. பாய்ம இயக்கவியல்: குறுகிய பாதைகளில் நீரின் வேகம்

    இயற்பியல் விதிகளின்படி, நீரின் அளவு குறைவது ஆபத்தைக் குறைப்பதில்லை. ஒரு ஆற்றில் நீர் குறையும் போது, அது பாறைகளுக்கு இடையிலான குறுகிய பாதைகள் வழியாகவே பாய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது.

    தொடர்ச்சி சமன்பாட்டின் (Principle of Continuity) படி: Q = A X V

    (இங்கு Q என்பது நீரின் வெளியேற்றம், A என்பது குறுக்குவெட்டுப் பரப்பு, மற்றும் Vஎன்பது நீரின் வேகம்).

    ஆற்றுப்பாதை குறுகும் போது (அதாவது பரப்பு A குறையும் போது), நீரின் வேகம் (V) பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால் மேற்பரப்பில் அமைதியாகத் தெரியும் நீர், கீழே ஒருவரை இழுத்துச் செல்லும் வலிமையைக் கொண்டிருக்கக்கூடும். இது “வெஞ்சுரி விளைவு” (Venturi effect) என அழைக்கப்படுகிறது.

    4. சமூக மற்றும் உடலியல் காரணிகள்

    புத்தாண்டு காலத்தின் கொண்டாட்ட மனநிலை மக்களின் எச்சரிக்கை உணர்வைக் குறைக்கிறது.

    1. தவறான பாதுகாப்பு உணர்வு: நீர் மட்டம் குறைவாக இருப்பதால் சிறுவர்களையும், நீந்தத் தெரியாதவர்களையும் மக்கள் எளிதாக ஆற்றில் அனுமதிப்பார்கள். இது மேற்பார்வை குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
    2. மது அருந்துதல்: சட்ட மருத்துவக் கண்ணோட்டத்தில் (Medicolegal perspective), பல விபத்துக்களுக்கு மது அருந்துவது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. மது ஒருவரின் சமநிலைத் தன்மையைக் குலைப்பதோடு, தொண்டையின் ‘குரல்வளை தசைப்பிடிப்பு’ (Laryngospasm) எனப்படும் பாதுகாப்பு அடுக்கைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்கிறது. இதனால் மிகக் குறைந்த நீரில் விழுந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
    3. அறிமுகமில்லாத இடங்கள்: சுற்றுலா செல்லும் மக்கள் அந்தந்த இடத்திலுள்ள ஆற்றுப்படுகையின் ஆபத்துகள், வழுக்கும் பாறைகள் அல்லது மணல் அகழ்வு செய்யப்பட்ட இடங்கள் பற்றித் தெரியாமல் நீராடுவது விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது.

    5. சுற்றுச்சூழல் இடர்கள்: பாசி மற்றும் வழுக்கும் பாறைகள்

    வறட்சி காலங்களில் நீர் ஓட்டம் சீராக இல்லாத இடங்களில் பாறைகளின் மீது பாசிகள் (Algae/Biofilms) வேகமாக வளரும்.

    • இயந்திரவியல் காயம்: வழுக்கும் பாறையில் விழுவதால் தலையில் ஏற்படும் காயம் ஒருவரை மயக்கமடையச் செய்யலாம்.
    • உலர் நீரில் மூழ்கல் (Dry Drowning): பாறையில் வழுக்கி விழும் போது மிகக் குறைந்த அளவு நீர் குரல்வளையைத் தாக்கினாலும், சுவாசப்பாதை உடனடியாக மூடிக்கொள்ளும். இது நுரையீரலுக்கு காற்று செல்வதைத் தடுத்து உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    இலங்கையின் 2026 புத்தாண்டு கால உயிரிழப்புகள், நீரின் ஆழம் மட்டுமே ஆபத்திற்கான அளவுகோல் அல்ல என்பதை நமக்கு உணர்த்துகின்றன. மறைந்திருக்கும் புவியியல் குழிகள், திடீர் நீரோட்டங்கள் மற்றும் கொண்டாட்ட மனநிலையால் ஏற்படும் கவனக்குறைவு ஆகியவையே இத்தகைய மரணங்களுக்குக் காரணமாகின்றன. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குறிப்பாக நீர் மட்டம் குறைவாக இருக்கும் போது ஆற்றில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை விளக்குவதும் எதிர்கால உயிரிழப்புகளைத் தடுக்க அவசியமாகும்.

    இலங்கையில் “குஷ்” (Kush) போதைப்பொருள் தொடர்பான கைதுகள் அதிகரிக்கக்காரணங்கள் என்ன?

    இலங்கையில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ‘கேரளா கஞ்சா’ (KG) மற்றும் கடல் வழியாகக் கடத்தப்படும் ஹெரோயின் ஆகியவற்றுக்கு அப்பால், தற்போது ‘குஷ்’ (Kush) எனப்படும் அதிக வீரியமுள்ள கஞ்சா வகை ஒரு புதிய மற்றும் தீவிரமான சவாலாக உருவெடுத்துள்ளது. இது வெறும் நுகர்வோர் விருப்ப மாற்றமாக மட்டும் இல்லாமல், அதிக லாபம் தரும் புதிய சந்தையை நோக்கி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள் திட்டமிட்டு நகரும் போக்கைக் காட்டுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளமைக்கும், ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ (Ice) சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாரிய விநியோகத் தட்டுப்பாட்டிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சட்டவிரோத வர்த்தக உலகில், இது சந்தை இடமாற்றம்‘ (Market Displacement) என்று அழைக்கப்படுகிறது.

    ‘குஷ்’ பொதுவாக சாதாரண கஞ்சாவை விட அதிக THC கொண்டதாகக் கருதப்படுகிறது; அதனால் அதன் தாக்கம் வலுவாகவும், அடிமைத்தன்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கான அபாயமும் அதிகமாகவும் இருக்கலாம். இலங்கையில் சமீப காலமாக விமான நிலையம் வழியாக பெரிய அளவில் ‘குஷ்’ கைப்பற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிப்பதால், இது உள்ளூர் பயன்பாட்டையும் கடத்தல் முறைகளையும் இரண்டையும் மாற்றக்கூடிய போக்காகத் தெரிகிறது.

    இதன் முக்கியத்துவம் என்னவென்றால், போதைப்பொருள் சந்தையில் வகைமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கடத்தல் பாதைகளும் முறைகளும் மிகவும் நுட்பமாகி வருகின்றன. ஆகவே, இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்புகள் இனி ஹெரோயின் மற்றும் பாரம்பரிய கஞ்சாவை மட்டும் அல்லாமல், புதிய தலைமுறை செயற்கை மற்றும் அதிக வீரியமுள்ள கஞ்சா வகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    அண்மைக்காலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) அதிகளவிலான குஷ் கஞ்சா கைப்பற்றப்படுவதற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன:

    • ஹெரோயின்/ஐஸ் தட்டுப்பாடும் ‘குஷ்’ வரவும்: இலங்கை கடற்படையினரின் தீவிர கண்காணிப்பால் கடல் வழியாக வரும் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களின் வரத்து அண்மைக்காலமாகப் பெருமளவு குறைந்துள்ளது. சந்தையில் ஹெரோயினுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய கடத்தல்காரர்கள் குஷ் கஞ்சாவை ஒரு மாற்றாக அறிமுகப்படுத்துகின்றனர்.
    • தீவிரத்தைத் தேடுதல்: பாரம்பரிய உள்ளூர் கஞ்சாவால் (கேரளா கஞ்சா – KG), ஹெரோயின் அல்லது ஐஸ் போதைக்கு பழகியவர்களின் அதிகப்படியான போதை எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.
    • குஷ் ஒரு நடுத்தரபாலம்: குஷ் கஞ்சாவில் THC செறிவு மிக அதிகம் (உள்ளூர் கஞ்சாவை விட மூன்று மடங்கு அதிகம்). இது ஒரு ஓபியாய்டு (Opioid) இல்லாவிட்டாலும், இதன் தீவிர மயக்க மற்றும் உளவியல் தாக்கம், விலையுயர்ந்த போதைப்பொருட்களை வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது.
    • போலித் தோற்றம்: ஐஸ் போன்ற இரசாயன போதைப்பொருட்களுக்குப் பயப்படும் இளைஞர்கள், குஷ் என்பது “இயற்கையான தாவரம்” என்ற போலிப் பிரச்சாரத்தை நம்பி அதற்கு அடிமையாகின்றனர். ஆனால், அதன் நச்சுத்தன்மை (Toxicity) இரசாயன போதைப்பொருட்களுக்கு இணையானது.
    • தாய்லாந்து காரணி: தாய்லாந்து போன்ற நாடுகளில் கஞ்சா தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து இலங்கைக்கு குஷ் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இது ஒரு பிரதான விநியோக மையமாக மாறியுள்ளது.
    • அதிக சந்தை மதிப்பு: உள்ளூர் கஞ்சாவை விட குஷ் கஞ்சாவின் விலை மிக அதிகம். ஒரு கிராம் குஷ் கஞ்சா பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுவதால், கடத்தல்காரர்கள் இதில் அதிக இலாபம் காண்கின்றனர்.
    • நவீன கண்காணிப்பு முறைகள்: பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் (PNB) சுங்கத்துறையினரும் தற்போது புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ‘புரொபைலிங்’ (Profile-based screening) முறையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் உணவுப் பொதிகள் மற்றும் பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்படும் குஷ் எளிதாகக் கண்டறியப்படுகிறது.

    2. ‘குஷ்’ கஞ்சா எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

    குஷ் என்பது சாதாரண கஞ்சாவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒன்றல்ல; இது ஒரு குறிப்பிட்ட வகை தாவர இனமாகும்.

    • மரபணு மூலம்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள ‘இந்து குஷ்’ (Hindu Kush) மலைத்தொடரைச் சேர்ந்த Cannabis indica வகை கஞ்சா தாவரங்களிலிருந்து இவை உருவாக்கப்படுகின்றன.
    • வீரியம் மிக்க வளர்ப்பு: இவை பெரும்பாலும் மூடிய அறைகளில், கட்டுப்படுத்தப்பட்ட வெப்பம் மற்றும் ஒளி (Hydroponics) சூழலில் வளர்க்கப்படுகின்றன. சாதாரண கஞ்சாவை விட இதில் THC (Tetrahydrocannabinol) எனும் போதைப்பொருளின் அளவு மிக அதிகமாக இருக்கும்படி மரபணு ரீதியாக மாற்றப்படுகின்றன.
    • பிசின் உற்பத்தி: இந்தத் தாவரங்கள் கடும் சூழலைத் தாங்குவதற்காக அதிகப்படியான பிசினை (Resin) உற்பத்தி செய்கின்றன. இந்தப் பிசினில்தான் போதையைத் தரும் மூலக்கூறுகள் செறிந்து காணப்படுகின்றன.

    3. சாதாரண கஞ்சா மற்றும் குஷ்: ஆரோக்கிய விளைவுகளின் ஒப்பீடு

    அம்சம்சாதாரண கஞ்சா (உதாரணம்: KG)குஷ் கஞ்சா (Kush)
    THC அளவு5% முதல் 15% வரை25% முதல் 35% வரை (மிக வீரியமானது)
    மனநல தாக்கம்லேசான மனமகிழ்ச்சி, தளர்வு.தீவிரமான பய உணர்வு (Paranoia), மாயத்தோற்றங்கள் (Hallucinations).
    அடிமையாதல்நடுத்தரமானது.மிக விரைவாக அடிமையாக்கும் தன்மை கொண்டது.
    உடல்நல பாதிப்புகண்கள் சிவத்தல், பசி அதிகரித்தல்.இதயத் துடிப்பு மிக வேகமாக அதிகரித்தல் (Tachycardia), கடுமையான வாந்தி.

    மருத்துவக் கண்ணோட்டத்தில், இந்த மாற்றம் கவலையளிக்கிறது. “குஷ்” என்பது ஒரு பாதுகாப்பான கஞ்சா தயாரிப்பு என்று பயனர் நம்பலாம். ஆனால், பல குஷ் வகைகள் அதிகப்படியான THC மற்றும் மிகக்குறைந்த CBD கொண்டிருக்குமாறு வளர்க்கப்படுவதால், அவை தீவிர மனநல பாதிப்புகளை (Psychosis) ஏற்படுத்தக்கூடும். இது ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தும்போது ஏற்படும் கிளர்ச்சியான நிலையை ஒத்திருக்கும்.

    4. கடல் வழி மற்றும் விமான வழி கடத்தல்களுக்கு இடையிலான தொடர்பு

    கடல் வழியாகக் கடத்தப்படும் ஹெரோயின்/ஐஸ் (Ice) மற்றும் விமான நிலைய குஷ் கைதுகளுக்கு இடையே ஆழமான தொடர்பு இருப்பதை புலனாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

    • ஒரே கடத்தல் குழுக்கள்: சர்வதேச அளவில் இயங்கும் பெரிய கும்பல்களே இந்த இரண்டு வழிகளையும் கையாளுகின்றன. கடல் வழியாகப் பெருமளவில் ஹெரோயினை அனுப்பும் அதே கும்பல், உயர்தர வாடிக்கையாளர்களுக்காக விமானம் மூலம் குஷ் கஞ்சாவை அனுப்புகிறது.
    • பணப் பரிமாற்றம்: இரண்டு வகையான கடத்தல்களுக்கும் ‘ஹவாலா’ முறைகள் அல்லது நவீன டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களே பயன்படுத்தப்படுகின்றன.
    • தகவல் தொடர்பு: கடலில் பிடிபடும் விசைப்படகுகளில் உள்ள செய்மதித் தொலைபேசி (Satellite phone) தரவுகள், விமான நிலையத்தில் பிடிபடும் நபர்களுடன் தொடர்பில் இருப்பதை அண்மைக்கால விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

    இலங்கையின் போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. விமான நிலையங்களில் அதிகரித்து வரும் கைதுகள், கடத்தல் கும்பல்கள் தங்களின் உத்திகளை மாற்றியுள்ளதைக் காட்டுகின்றன. மருத்துவ மற்றும் தடய அறிவியல் பார்வையில், குஷ் கஞ்சாவின் அதீத வீரியம் எதிர்காலத்தில் பாரிய மனநல பாதிப்புகளைச் சமூகத்தில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    கஞ்சா மீள்வகைப்படுத்தல்: அமெரிக்காவின் புதிய அறிவியல் அடிப்படையிலான கொள்கை மாற்றமா?

    அமெரிக்காவில் சமீபத்தில் கஞ்சா (Marijuana) தொடர்புடைய சில தயாரிப்புகள் மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளமை (reclassification) என்பது மருந்தியல் அறிவியல் மற்றும் பொதுச் சுகாதாரக் கொள்கைகளில் ஒரு முக்கிய மாற்றமாகும். இந்த மாற்றம் கஞ்சாவில் உள்ள முக்கிய செயற்பாட்டு வேதிப்பொருட்களான THC (Δ⁹-tetrahydrocannabinol) மற்றும் CBD (cannabidiol) ஆகியவற்றின் உயிரியல் மற்றும் மருத்துவ பண்புகள் குறித்த புதிய விஞ்ஞான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த இரண்டு சேர்மங்களின் மாறுபட்ட மனநிலை மற்றும் உடலியல் விளைவுகள், அவற்றின் மருத்துவ பயன்பாட்டு திறன் மற்றும் தவறான பயன்பாட்டு அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கஞ்சாவை ஒரே மாதிரியான அபாயகரமான பொருளாக அல்லாமல், அதன் வேதிப்பொருள் அமைப்பைப் பொறுத்து வேறுபடுத்தி மதிப்பிடும் அணுகுமுறை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, சில கஞ்சா சார்ந்த தயாரிப்புகள் Schedule III வகைப்பாட்டிற்கு மாற்றப்பட்டு, அவற்றின் மருத்துவ பயன்பாடு அதிகமாக அங்கீகரிக்கப்படுவதோடு, கட்டுப்பாட்டு அமைப்பும் மேலும் நுணுக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கம் வருமாறு

    அமெரிக்காவில் கஞ்சா தொடர்புடைய தயாரிப்புகள் மீண்டும் வகைப்படுத்தப்படுவதற்கு (reclassification) காரணமாக இருப்பது THC (Δ⁹-tetrahydrocannabinol) மற்றும் CBD (cannabidiol) ஆகிய முக்கிய கனபினாய்டுகளின் மருந்தியல் (pharmacological) பண்புகள் பற்றிய அறிவியல் முன்னேற்றமே ஆகும். இந்த மாற்றம் கொள்கை மாற்றமாக மட்டுமல்லாமல், இந்த இரு சேர்மங்களின் உயிரியல் விளைவுகள், மருத்துவ பயன்பாடுகள் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் (abuse) சாத்தியக்கூறுகள் பற்றிய விரிவான விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

    கஞ்சா என்பது நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்களை கொண்ட ஒரு சிக்கலான தாவரமாகும். இதில் THC மற்றும் CBD ஆகியவை மிக முக்கியமானதும் அதிகமாக ஆய்வு செய்யப்பட்டதும் ஆகும். THC என்பது கஞ்சாவின் முக்கிய மனதை பாதிக்கும் (psychoactive) சேர்மமாகும். இது மூளையில் உள்ள CB1 ரிசெப்டர்களுடன் இணைந்து நரம்பியல் சிக்னல்களை மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சி உணர்வு, உணர்வு மாற்றம், சிந்தனை மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் அல்லது நீண்டகாலமாக பயன்படுத்தும்போது நினைவாற்றல் குறைவு, பதட்டம், சில நபர்களில் மனநோய் போன்ற அறிகுறிகள் மற்றும் அடிமை நிலை உருவாகும் சாத்தியம் ஆகியவை காணப்படுகின்றன. இதன் காரணமாகவே கஞ்சா நீண்ட காலமாக “Schedule I” கட்டுப்பாட்டில் இருந்தது.

    இதற்கு மாறாக, CBD என்பது மனதை பாதிக்காத (non-intoxicating) சேர்மமாகும். இது CB1 மற்றும் CB2 ரிசெப்டர்களுடன் நேரடியாக அதிகமாக இணைவதில்லை; ஆனால் செரோட்டோனின் மற்றும் வானிலாய்ட் (vanilloid) போன்ற பிற நரம்பியல் அமைப்புகளை ஒழுங்குபடுத்துகிறது. CBD உடன் தொடர்புடைய முக்கிய விளைவுகள் கவலை குறைப்பு, அழற்சி எதிர்ப்பு, வலிப்பு கட்டுப்பாடு மற்றும் நரம்பு பாதுகாப்பு போன்றவை ஆகும். மேலும் இது மிகக் குறைந்த தவறான பயன்பாட்டு சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. சில ஆய்வுகள் CBD, THC ஏற்படுத்தும் சில எதிர்மறை விளைவுகளை (எ.கா. பதட்டம், மனஅழுத்தம்) குறைக்கக்கூடும் எனவும் கூறுகின்றன. இதனால் THC:CBD விகிதம் கஞ்சாவின் மொத்த விளைவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறுகிறது.

    இந்த THC மற்றும் CBD இடையிலான அறிவியல் வேறுபாடு அமெரிக்காவில் கஞ்சா மீள்வகைப்படுத்தலில் முக்கிய பங்காற்றியுள்ளது. கஞ்சா என்பது ஒரே மாதிரியான மருந்து அல்ல; அதன் விளைவுகள் அதில் உள்ள கனபினாய்டு அமைப்பைப் பொறுத்து மாறுபடும் என்பதை ஒழுங்குமுறை அமைப்புகள் தற்போது அதிகமாக ஏற்றுக்கொள்கின்றன. அதிக THC உள்ள தயாரிப்புகள் அதிக மயக்க விளைவையும் அதிக தவறான பயன்பாட்டு அபாயத்தையும் கொண்டுள்ளன. அதே சமயம் CBD அதிகமுள்ள அல்லது சமநிலை THC:CBD கொண்ட தயாரிப்புகள் குறைந்த அபாயத்துடன் மருத்துவ பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றன.

    இதன் அடிப்படையில் சில கஞ்சா சார்ந்த தயாரிப்புகள் Schedule III ஆக மாற்றப்படுவது என்பது மருத்துவ ஆதாரங்கள் அதிகரித்துள்ளதை பிரதிபலிக்கிறது. Schedule III வகைப்பாடு என்பது மருத்துவ பயன்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டும், மிதமான அல்லது குறைந்த அடிமை அபாயம் கொண்ட பொருட்களைக் குறிக்கிறது. இது கஞ்சா சார்ந்த மருந்துகள் நீண்டகால வலி, கீமோதெரபி காரணமான வாந்தி, மற்றும் சில வகை வலிப்பு நோய்கள் போன்றவற்றில் பயனுள்ளதாக இருப்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டியுள்ளதைக் கருத்தில் கொள்கிறது.

    முக்கியமாக, இந்த மீள்வகைப்படுத்தல் கஞ்சா முற்றிலும் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கவில்லை அல்லது THC ஆபத்தற்றது என்பதையும் குறிக்கவில்லை. மாறாக, இது கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பயன்பாட்டிற்கான தயாரிப்புகள் மற்றும் அதிக THC கொண்ட பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கான தயாரிப்புகள் ஆகியவற்றை வேறுபடுத்தும் ஒரு நுணுக்கமான ஒழுங்குமுறை அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. மருந்தின் அளவு, பயன்படுத்தும் வழி, மற்றும் THC:CBD விகிதம் ஆகியவை அதன் மருத்துவ விளைவுகளையும் பக்கவிளைவுகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

    முடிவாக, THC மற்றும் CBD பற்றிய மருந்தியல் அறிவின் முன்னேற்றமே அமெரிக்காவில் கஞ்சா மீள்வகைப்படுத்தலுக்கான அறிவியல் அடிப்படையாகும். THC இன் மயக்க மற்றும் அபாய விளைவுகளுக்கும் CBD இன் மருத்துவ மற்றும் குறைந்த அபாய தன்மைக்கும் இடையிலான வேறுபாடு, கஞ்சாவை ஒரே வகையான அபாயகரமான பொருளாக அல்லாமல், அதன் அமைப்பு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து மதிப்பிட வேண்டிய பல்தன்மை கொண்ட பொருளாக பார்க்கும் புதிய ஒழுங்குமுறை அணுகுமுறையை உருவாக்கியுள்ளது.

    மீள் வகைப்படுத்தல் காரணமாக கஞ்சா தாவரப் பொருள், கஞ்சா சார்ந்த சாறு/எக்ஸ்ட்ராக்ட்கள், மற்றும் THC கொண்ட தயாரிப்புகள் ஆகியவை Schedule III கீழ் வரலாம். இதன் மூலம் கஞ்சாவிற்கு மருத்துவ பயன்பாடு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது, ஆனால் அதே நேரத்தில் அதன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் தொடரும். ஏற்கனவே சில CBD அடிப்படையிலான மருந்துகள் மற்றும் செயற்கை THC மருந்துகள் தனித்த கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த மீள்வகைப்படுத்தல் பொழுதுபோக்கு கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்குவதில்லை; மாறாக, இது மருத்துவ பயன்பாட்டை முன்னிறுத்தி, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கட்டுப்பாட்டை நுணுக்கமாக மாற்றும் முயற்சியாகும்.

    நோயை விட வேகமாகப் பரவும் பெருந்தொற்று!!!

    Infodemic என்ற புதிய பொது சுகாதாரச் சவால்

    தகவல் பெருந்தொற்று (Infodemic) என்பது “Information” (தகவல்) மற்றும் “Epidemic” (பெருந்தொற்று) என்ற சொற்களின் சேர்க்கையால் உருவான ஒரு முக்கிய பொது சுகாதாரக் கருத்தாகும். இது ஒரு நோய் பரவும் காலத்தில், குறிப்பாக தொற்று நோய்கள் காலத்தில், உண்மை, தவறான தகவல், வதந்தி மற்றும் பயமூட்டும் செய்திகள் அனைத்தும் கட்டுப்பாடின்றி அதிக அளவில் பரவுவதை குறிக்கிறது. இத்தகவல்கள் சமூக ஊடகங்கள், இணையதளங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் வாய்மொழி மூலம் மிக வேகமாக பரவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்குகின்றன.

    Infodemic இன் முக்கிய அம்சங்களில் முதன்மையானது தகவல் குவியல் (information overload) ஆகும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான செய்திகள், வீடியோக்கள், பதிவுகள் வெளிவருவதால் மக்கள் எந்த தகவல் உண்மை, எந்தது தவறு என்பதை பிரித்தறிய முடியாமல் மனஅழுத்தம் மற்றும் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள். இரண்டாவது அம்சமாக வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் (misinformation & disinformation) குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக சமூக வலைதளங்கள் வழியாக அறிவியல் ஆதாரம் இல்லாத மருந்துகள், வீட்டுவைத்திய முறைகள், அல்லது நோய் பற்றிய தவறான கருத்துகள் வேகமாக பரவுகின்றன. சில சமயங்களில் இது நோயை விட வேகமாக பரவும் நிலையை உருவாக்குகிறது. மூன்றாவது அம்சம் நம்பிக்கை குறைதல் (loss of trust) ஆகும். தவறான தகவல்கள் அதிகமாக பரவும்போது, மக்கள் மருத்துவ நிபுணர்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையக்கூடும்.

    Infodemic ஏன் ஆபத்தானது என்பதைப் பார்த்தால், இது நேரடியாக மக்களின் சுகாதார நடத்தை மீது தாக்கம் செலுத்துகிறது. உதாரணமாக, தவறான தகவல்களை நம்பி மக்கள் ஆபத்தான மருந்துகளை உட்கொள்ளலாம் அல்லது தேவையான மருத்துவ சிகிச்சையை தாமதப்படுத்தலாம். மேலும், தடுப்பூசி போன்ற உயிர் காக்கும் தடுப்பு நடவடிக்கைகளை தவிர்க்கும் நிலை உருவாகலாம். இது சமூகத்தில் தேவையற்ற பயம், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதோடு, சுகாதார அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதால், பொது சுகாதார நடவடிக்கைகள் குறைந்த விளைவுடன் செயல்படலாம். இதன் காரணமாக, உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) Infodemic-ஐ “தொற்றுநோயுடன் இணைந்து பரவும் தகவல் பெருந்தொற்று” எனக் குறிப்பிடுகிறது.

    Infodemic பெரும்பாலும் தொற்றுநோய்கள் காலத்தில் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக, COVID-19 காலத்தில் வைரஸ் தோற்றம், சிகிச்சை, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பல தவறான தகவல்கள் உலகம் முழுவதும் பரவின. சிலர் பூண்டு, மூலிகைகள் அல்லது உறுதி செய்யப்படாத மருந்துகள் வைரஸை குணப்படுத்தும் என்று கூறியதால் மக்கள் தவறான முடிவுகள் எடுத்தனர். அதேபோல், தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள் காரணமாக சில சமூகங்களில் தடுப்பூசி ஏற்றுக்கொள்ளுதல் குறைந்தது.

    Infodemic-ஐ கட்டுப்படுத்துவதற்கு “information hygiene” (தகவல் சுத்தம்) மிகவும் முக்கியம். இது சரியான தகவல் மூலங்களைப் பயன்படுத்துதல், அறிவியல் ஆதாரங்களை சரிபார்த்தல், அதிகாரப்பூர்வ சுகாதார அமைப்புகளின் அறிவிப்புகளை நம்புதல் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை விமர்சன ரீதியாக (critical thinking) மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெளிவான, நேர்மையான மற்றும் எளிதில் புரியும் தகவல்களை மக்களுக்கு வழங்குவது Infodemic கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சுருக்கமாகச் சொன்னால், நோய்கள் கிருமிகளால் பரவுவது “Epidemic” என்றால், குழப்பம் மற்றும் தவறான தகவல்களால் ஏற்படும் சமூக பாதிப்பு “Infodemic” ஆகும். இது உடல் ஆரோக்கியத்தையே அல்லாது, மனநலம், சமூக நம்பிக்கை மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளையும் நேரடியாக பாதிக்கும் ஒரு நவீன கால சவாலாகும்.

    தரமற்றநிலக்கரி இறக்குமதி ஓர் சூழலியல் பேரனர்த்தம்

    இன்றைய உலகில் மின் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை நேரடி தொடர்புடையவை. 2008ம் ஆண்டு சுன்னாகம் மின் நிலையத்தால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக யாழ் குடாநாட்டின்  பலபகுதிகளில் நிலத்தடி நீர் ஆனது  எண்ணெய், கிரீஸ், பெட்ரோலிய கழிவுகள் மூலம் பாதிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றது. இதனால் சில கிணறுகள் குடிநீருக்கு உகந்ததல்லாத நிலையில் மாறியது மற்றும்  அருகிலிருந்த மக்கள் நீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. 2019ம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றம் குறித்த மின்னிலையத்தின் செயற்பாடுகளை குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை நிறுத்தியதோடு மட்டும் அல்லாது பாதிப்பட்ட மக்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குமாறும் உத்தரவிட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

    ஆனால் சமீப காலங்களில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் அதன் மூலம் அதிகரிக்கும் பாதரசம் (Mercury) மாசுபாடு, சுற்றுச்சூழல் நச்சுத்தன்மை மற்றும் பொது சுகாதாரத்தில் தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது ஒரு மெதுவான, ஆனால் பரவலான விஷப்பாதிப்பு மாதிரியை உருவாக்குகிறது. இந்த நிலைமையை ஜப்பானில் பாதரச மாசுபாட்டினால் ஏற்பட்ட மினமாட்டா நோய் (Minamata disease) உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதன் தீவிரமும் எதிர்கால அபாயமும் தெளிவாக புரிகிறது.

    மினமாட்டா நோய் ஒரு வரலாற்றுச் சுற்றுச்சூழல் பாடம்

    மினமாட்டா நோய் என்பது பாதரச நச்சுத்தன்மையால் ஏற்படும் ஒரு தீவிரமான நரம்பு மண்டல பாதிப்பு ஆகும். இது மனித வரலாற்றில் தொழில்துறை வளர்ச்சியால் ஏற்பட்ட மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1950-களில் ஜப்பானின் மினமாட்டா நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

    ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள மினமாட்டா நகரில் ‘சிசோ கார்ப்பரேஷன்’ (Chisso Corporation) என்ற ரசாயன ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை அசிட்டால்டிஹைட் தயாரிப்பிற்காகப் பாதரசத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தியது. 1932 முதல் 1968 வரை, இந்த ஆலை நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் மெர்குரி (Methylmercury) கலந்த கழிவுநீரை நேரடியாக மினமாட்டா கடலில் கலந்தது. கடலில் கலந்த பாதரசம் உணவுச் சங்கிலி வழியாகப் பரவியது

    1. கடலில் உள்ள பாக்டீரியாக்கள் பாதரசத்தை மெத்தில்மெர்குரியாக மாற்றின.
    2. இந்த நச்சு முதலில் பாசிகள் மற்றும் சிறிய மீன்களின் உடலில் சேர்ந்தது.
    3. பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்டபோது, நச்சுத்தன்மை பலமடங்கு அதிகரித்தது (Bio-accumulation).
    4. அந்த நச்சு கலந்த மீன்களை மினமாட்டா நகர மக்கள் மற்றும் பூனைகள் உண்டபோது, அவர்களுக்குத் தீவிர நச்சு பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் முடக்கப்பட்டனர். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, 1968-ல் தான் ஜப்பானிய அரசு இந்த நோய்க்குக் காரணம் தொழிற்சாலைக் கழிவுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. 

    இந்தத் துயரத்தின் நினைவாகவும், மீண்டும் இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுக்கவும், 2013-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ‘மினமாட்டா உடன்படிக்கை’ (Minamata Convention)கையெழுத்தானது. இதில் இந்தியா உட்பட 140-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து பாதரசப் பயன்பாட்டைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

    இலங்கையில் நிலக்கரி பயன்பாடு

    இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகள், மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரியை பெரிதும் நம்புகின்றன. இலங்கையின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் நாட்டின் முக்கிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையமாகும். அத்துடன் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மிகப்பெரிய வெப்ப மின் நிலையமாகும். இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிக்கைகளின்படி, 2025–2026 காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட சில நிலக்கரி சரக்குகள் தரநிலைக்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தரமற்ற நிலக்கரியின் பயன்பாடு காரணமாக குறைந்த மின் உற்பத்தி , அதிக சாம்பல் அளவு உற்பத்தி மற்றும் அதிகரித்த கனிம நச்சுப் பொருட்களின் வெளியேற்றம் என்பன நடைபெறுகின்றன. மேலும் குறித்த அளவு மின்சாரத்தினை பெறும் பொருட்டு அதிக அளவு நிலக்கரி எரிக்க வேண்டிய நிலை உருவாகிறது.

    நிலக்கரிக்கும் பாதரசத்திற்கும் இடையிலான தொடர்பு

    நிலக்கரி என்பது பூமிக்கடியில் உருவாகும் ஒரு இயற்கை எரிபொருள். இதில் இயற்கையாகவே மிகச்சிறிய அளவில் பாதரசம் கலந்திருக்கும்.  நிலக்கரி எரிக்கப்படும்போது வெளியேறும் பாதரசம் மூன்று முக்கிய நிலைகளில் இருக்கும். இதை ‘Mercury Speciation’ என்று அழைப்பார்கள்:

    1. ஆவி நிலை (Elemental Mercury )

        நிலக்கரியை எரிக்கும்போது, இந்த பாதரசம் ஆவியாகி நச்சுப் புகையாக வெளியேறுகிறது. மின் உற்பத்தி நிலையத்தில்  நிலக்கரி எரிக்கப்படும்போது, அதிலுள்ள பாதரசம் சுமார் 1000°C வெப்பநிலையில் ஆவியாகி வாயு நிலைக்கு (Elemental Mercury ) மாறுகிறது. இது காற்றில் மிக நீண்ட காலம் (6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை) தங்கியிருக்கும். இது காற்றோட்டம் காரணமாக உலகளாவிய அளவில் பரவக்கூடியது.

        2. ஆக்சிஜனேற்றப்பட்ட நிலை (Oxidized Mercury)

        இது நீரில் எளிதில் கரையக்கூடியது. எனவே, இது மின் நிலையத்திற்கு அருகிலேயே மழையுடன் கலந்து மண்ணில் படியும். மேலும் புகை வெளியேறும் குழாய்களில் (Flue gas) இந்த வாயு குளிர்ந்து மற்ற வேதிப்பொருட்களுடன் (உதாரணமாக குளோரின்) வினைபுரிந்து, நீரில் கரையக்கூடிய ஆக்சிஜனேற்றப்பட்ட பாதரசமாக மாறுகிறது.

        3. துகள் நிலை (Particulate-bound Mercury)

        இது நிலக்கரி சாம்பல் துகள்களில் ஒட்டியிருக்கும் பாதரசம் ஆகும்.

        இவ்வாறு சூழலுக்கு வெளியேறும் வெவ்வேறு வடிவங்களினால் ஆன பாதரசம் காரணமாகவே சூழல் மாசுபடுகின்றது

        நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் நடப்பது என்ன

        பொதுவாக ஒரு கிலோ நிலக்கரியில் 0.1 மி.கி (0.1 mg/kg) பாதரசம் இருக்கும். ஆனால் தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் நிலக்கரியில் 0.27 மில்லிகிராம் பாதரசம் இருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஆண்டுக்கு 2.2 முதல் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியைப் பயன்படுத்துவதால், இது ஆண்டுக்கு 600-650 கிலோ பாதரசம்  வெளியிடப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

        இந்த நிலக்கரி ஆலையில் இரண்டு வடிகட்டிகள் உள்ளன.  முதலாவது  Electrostatic Precipitator (ESP) ஆகும், இது பறக்கும் சாம்பலைச் சேகரிக்கிறது. எரிதலின்போது பாதரசம் ஆவியாகிவிடுவதால், ESP அந்தப் பாதரசத்தைச் சேகரிப்பதில்லை. நடத்தப்பட்ட ஆய்வில் பறக்கும் சாம்பலின் கன உலோகப் பகுப்பாய்விலும், அதில் பாதரசம் இருப்பது கண்டறியப்படவில்லை.

        இரண்டாவது வடிகட்டி Flue Gas Desulfurization (FGD) ஆகும். இது அனல் மின் நிலையங்களில் (Coal Power Plants), நிலக்கரியை எரிக்கும் போது வெளிவரும் புகையில் கந்தக டை ஆக்சைடு (Sulfur Dioxide ) என்ற நச்சு வாயு இருக்கும். இந்த வாயுவை வெளியேற்றும் முன், அதிலுள்ள கந்தகத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமே . இது புகை வாயுவில் உள்ள SOx வாயுக்களை உறிஞ்சுவதற்காக, அதன் மீது கடல் நீரைத் தெளிக்கிறது. இருப்பினும், இந்த செயல்முறை கடல் நீருடன் வினைபுரியும்போது பாதரசப் புகையின் ஒரு பகுதியை மெத்தில் மெர்குரியாக மாற்றுகிறது. நுரைச்சோலை மின்நிலையத்தில் FGDயின் பின்னரான நீர் வெளியேற்றம், பாதரசத்தை அகற்றுவதற்கான எந்தவொரு சுத்திகரிப்பும் செய்யப்படாமல் மீண்டும் கடலுக்குள் வெளியிடப்படுகிறது.

        நுரைச்சோலை மின்நிலையத்தில் மீதமுள்ள பாதரசம் புகைபோக்கிகள் வழியாக வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. அவையும் மீண்டும் பூமிக்குத் திரும்புகின்றன. கடலுக்குள் எவ்வளவு சதவீதம் வெளியிடப்படுகிறது, வானத்திற்குள் எவ்வளவு சதவீதம் வெளியிடப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க இன்றுவரை எந்தவொரு உறுதியான ஆய்வும் நடத்தப்படவில்லை.

        விஞ்ஞான ரீதியான சான்றுகள்

        2019ம் ஆண்டு சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வெளியிட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம் நுரைச்சோலை, பனியடியா, நாரக்கல்லியா மற்றும் புத்தளம் நகரத்தை ஒட்டியுள்ள நீரேரிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அபாயகரமான அளவில் பாதரச பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.தொழில் ரீதியாக பாதரசத்துடன் நேரடித் தொடர்பில்லாத 18 முதல் 44 வயதுடைய 28 பெண்களின் தலைமுடி மாதிரிகளில், அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்த பாதுகாப்பு அளவான 1ppm-க்கும் அதிகமான பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு அதிகபட்சமாக 15.584 ppm என்ற அளவில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளது.

        இந்த பாதிப்புக்கு நீரேரி மீன்களை உட்கொள்வதே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது, இது நொச்சோலை நிலக்கரி மின் நிலையத்திலிருந்து வெளியேறும் பறக்கும் சாம்பலுடன் (Fly ash) தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சூழல் மாசுபடல் தற்போதைய தரமற்ற நிலக்கரி பயன்பாட்டுடன் நிச்சயமாக அதிகரிக்கும் ஏனெனில் தரமற்ற நிலக்கரியில் அதிகளவு பாதரசம் போன்ற பார உலோகங்கள் அதிகளவில் மாசாக உள்ளமையே ஆகும்.

        சுற்றுச்சூழல் தாக்கம்

        வருடத்திற்கு 600 – 650 கிலோகிராம் பாதரசம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க வெளியேற்றமாகும், மேலும் இது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மின் நிலைய புகையிலிருந்து வெளியேறும் பாதரசம் நீர்நிலைகளில் கலந்தவுடன், அங்குள்ள நுண்ணுயிரிகளால் மெத்தில்மெர்குரி (Methylmercury) ஆக மாற்றப்படுகிறது.

        • குறிப்பாக கடலில் உள்ள மெத்தில் மெர்குரி. ஒரு அதிக நச்சுத்தன்மை கொண்ட நரம்பு நஞ்சாகும். அதனை சிறிய மீன்கள் இந்த நச்சை உட்கொள்ளும் (bioaccumulation).
        • பெரிய மீன்கள் பல சிறிய மீன்களை உண்பதால், அவற்றின் உடலில் நச்சுத்தன்மை பல மடங்கு அதிகரிக்கிறது. இவ்வாறு உணவுச் சங்கிலி வழியே பாதரசத்தின் அளவு அதிகரிக்கிறது (biomagnification)
        • இறுதியாக மனிதர்கள் இந்த மீன்களை உண்ணும்போது, மெத்தில் மெர்குரி மனிதனை அடைகின்றது. இதனால் மனிதர்களுக்கு மறைமுக விஷப்பாதிப்பு ஏற்படுகிறது.

        சுகாதார விளைவுகள்

        இவ்வாறு சிறிது சிறிதான அளவில் மனிதனை அடையும் பாதரசம் நீண்ட காலப்போக்கில் மனிதனுக்கு பல்வேறு உடலியல் தீங்குகளை ஏற்படுத்தும். அவ்வாறான சில சுகாதார தீங்குகள் வருமாறு

        1. நரம்பு தொகுதி  

        பாதரசத்தின் சேர்க்கை காரணமாக அதிக பாதிப்பிற்க்கு உள்ளாவது நரம்பு மண்டலமே ஆகும். பாதரசம் நேரடியாக மூளை மற்றும் நரம்புகளைப் பாதிக்கிறது.

        • நடுக்கம் : கைகள், கால்கள், நாவுகள் மற்றும் கண் இமைகளில் லேசான நடுக்கம் தொடங்கும். இது ‘மெர்குரியல் ட்ரெமர்’ (Mercurial Tremors) எனப்படும்.
        • எரிதிசம் (Erethism): இது ஒரு மனநல பாதிப்பு. இதனால் அதிகப்படியான கூச்சம், கோபம், பதற்றம், ஞாபக மறதி மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.
        • உணர்வு இழப்பு : கை, கால் விரல்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு (Paresthesia) அல்லது மரத்துப்போதல் ஏற்படும்.
        • தடுமாற்றம் (Ataxia): நடப்பதில் தடுமாற்றம் மற்றும் உடல் சமநிலையை இழத்தல். 

        2. சமிபாட்டு தொகுதி

        • மெர்குரியல் லைன் (Mercurial Line): ஈறுகளில் நீலநிற அல்லது கருமை நிறக் கோடுகள் தோன்றும்.
        • ஈறு வீக்கம் (Gingivitis): ஈறுகளில் வீக்கம், புண்கள் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும்.
        • அதிக உமிழ்நீர் (Ptyalism): வாயில் உமிழ்நீர் சுரப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும்.
        • பற்கள் பாதிப்பு: பற்கள் தளர்வடைந்து விழக்கூடும் (Loosening of teeth).

        3. சிறுநீரக தொகுதி

        பாதரசம் சிறுநீரகங்களில் தங்கி அவற்றைச் செயலிழக்கச் செய்யும்.

        • நெப்ரோடிக் சிண்ட்ரோம் (Nephrotic Syndrome): சிறுநீரக வடிகட்டிகள் பாதிக்கப்படுவதால், சிறுநீர் வழியாக அதிகப்படியான புரதம் (Protein) வெளியேறும்.
        • சிறுநீரகச் செயலிழப்பு: நீண்ட கால பாதிப்பால் நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) ஏற்படலாம். 

        4. கண் மற்றும் பார்வை

        • பார்வை குறைபாடு: பார்வைத் திறன் குறைதல் மற்றும் பக்கவாட்டுப் பார்வை (Peripheral vision) மங்குதல் (Tunnel vision).
        • அட்கின்சன் அறிகுறி (Atkinson’s Sign): கண்ணின் லென்ஸின் முன்பகுதியில் பழுப்பு நிறப் படிவம் தோன்றுதல்.

        5. தோல் மற்றும் இதர பாதிப்புகள்

        • அக்ரோடினியா (Acrodynia): இது முக்கியமாக குழந்தைகளைப் பாதிக்கும். கை, கால்கள் சிவந்து வீங்குதல், அரிப்பு மற்றும் தோல் உரிதல் போன்றவை ஏற்படும். இது ‘பிங்க் நோய்’ (Pink Disease) என்றும் அழைக்கப்படும்.
        • அதிக வியர்வை: உடல் வெப்பநிலை மாறுபடுதல் மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல். 

        6. கரு வளர்ச்சி

        • கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதரச நச்சு ஏற்பட்டால், அது நஞ்சுக்கொடி வழியாகக் கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி தடைபடுதல், பார்வையின்மை மற்றும் கேட்கும் திறன் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

        மினமாட்டா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடாக, 2020 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பாதரச மூலங்களையும் ஒழிக்க இலங்கை கடமைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மினமாட்டா நோய் நமக்குக் கற்றுத்தந்த பாடம் என்னவென்றால், முறையற்ற கழிவு மேலாண்மை மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதாகும். பொருளாதார வளர்ச்சியை விடச் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மக்களின் ஆரோக்கியமுமே முதன்மையானது என்பதை இந்தச் சோகம் உலகுக்கு உணர்த்தியது.

        இலங்கையின் நுரைச்சோலை  ஜப்பானின் மினமாட்டா நகரம் போன்றதொரு பாரிய சுகாதார பேரழிவாக மாறுவதற்கு முன்னரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாதிப்பின் மூலத்தைக் கண்டறிந்து தடுத்த நிறுத்த வேண்டும்.

        பாதுகாப்பான புத்தாண்டு கால விளையாட்டுக்கள்

        இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியத்தில் புத்தாண்டு கால விளையாட்டுக்கள் மிக முக்கியமான அங்கமாகும். ஆண்டு முழுவதும் பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு கால விழாக்களில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. ‘தலையணைச் சண்டை’ மற்றும் ‘சறுக்கு மரம் ஏறுதல்’ போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல், ‘மாரத்தான்’ மற்றும் ‘சைக்கிள் ஓட்டம்’ போன்ற நவீன போட்டிகள் வரை அனைத்தும் நமது வீரத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுகின்றன.

        எவ்வாறாயினும், இப்போட்டிகளின் போது ஏற்படும் அதீத உற்சாகம் மற்றும் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமை காரணமாக, பாரதூரமான விபத்துக்களும் சடுதியான மருத்துவ அவசர நிலைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் இவ்வாறான ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன. கடந்த ஆண்டுகளில் பாதுகாப்பற்ற நடைமுறை காரணமாக இவ்வாறான புத்தாண்டு விளையாட்டுகளில் பல காயமடைந்து இருக்கின்றார்கள் அத்துடன் ஒருசிலர் மரணம் அடைந்திருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

        இதனைக் கருத்திற்கொண்டு, விளையாட்டு வீரர்களினதும் பார்வையாளர்களினதும் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு (Directorate of Non-Communicable Diseases) இந்த விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. விபத்துக்களைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் விளையாட்டுக்களைக் கொண்டாடுவதற்குத் தேவையான அறிவையும் உத்திகளையும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் வழங்குவதே இந்த வழிகாட்டியின் பிரதான நோக்கமாகும்.

        இலங்கையில் புத்தாண்டு கால விளையாட்டுக்கள் என்பவை வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, அவை நமது பாரம்பரிய விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் களங்களாகும். இருப்பினும், முறையான திட்டமிடல் இல்லையெனில் இந்த மகிழ்ச்சி கசப்பான விபத்துக்களில் முடியலாம். இதனைத் தவிர்க்க சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.

        பங்கேற்பாளர்களின் உடல் தகுதி மற்றும் தயார்நிலை

        விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு அவர்கள் போட்டிக்காக தங்களை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்பதில் தொடங்குகிறது.

        • முன்கூட்டிய பயிற்சி: நீண்ட நேர உடல் உழைப்பு தேவைப்படும் மாரத்தான், சைக்கிள் ஓட்டம் அல்லது நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு முன்னரே தகுந்த பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
        • மருத்துவ அங்கீகாரம்: ஏற்கனவே ஏதேனும் நோய்த்தொற்றுகள் அல்லது உடல் உபாதைகள் உள்ளவர்கள், தங்களைச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் முறையான அனுமதிச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் .
        • சீரான போஷாக்கு: போட்டிக்கு முன்னரும், பின்னரும் உடல் நீரிழப்பைத் (Dehydration) தவிர்க்க போதிய நீர் மற்றும் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

        பாரம்பரிய விளையாட்டுக்களுக்கான விசேட பாதுகாப்பு

        பாரம்பரிய விளையாட்டுக்களில் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் கடுமையானதாக இருக்கலாம். அவற்றுக்கான பாதுகாப்பு முறைகள்:

        • தலையணைச் சண்டை (Pillow-fighting):
          • இதற்காகப் பயன்படுத்தப்படும் மரம் அல்லது கம்பு தரையிலிருந்து 2 மீட்டருக்கு மேல் உயரத்தில் இருக்கக்கூடாது.
          • கீழே விழும்போது காயம் ஏற்படாமல் இருக்க நிலத்தில் தடிமனான மெத்தைகள், வைக்கோல் அல்லது மரத்தூள் பரப்பப்பட்டிருக்க வேண்டும். மணல் அல்லது கற்களைப் பயன்படுத்தக்கூடாது.
          • தலையணையின் எடை 650 கிராமிற்கு குறைவாக இருக்க வேண்டும் மற்றும் அதில் கடினமான பொருட்கள் இருக்கக்கூடாது.
        • சறுக்கு மரம் ஏறுதல் (Climbing the Greasy Pole):
          • பயன்படுத்தப்படும் மரம் உறுதியானதாகவும், நிலத்தில் ஆழமாக (உதாரணமாக 20 அடி மரத்திற்கு 5 அடி ஆழம்) புதைக்கப்பட்டும் இருக்க வேண்டும் .
          • பூசப்படும் கிரீஸ் (Grease) நச்சுத்தன்மையற்றதாகவும், மனித தோலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் .

        நீர் நிலைகளில் நடைபெறும் போட்டிகள்

        நீச்சல் மற்றும் படகோட்டப் போட்டிகள் அதிக அவதானம் தேவைப்படும் பகுதிகளாகும்.

        • சுற்றுச்சூழல் ஆய்வு: போட்டிகள் நடைபெறும் நீர் நிலைகளில் முதலைகள், நீருக்கடியில் உள்ள பாறைகள் அல்லது கடுமையான நீரோட்டங்கள் உள்ளனவா என்று முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட வேண்டும்.
        • உயிர்காக்கும் கவசங்கள்: அனைத்துப் படகோட்டிகளும், நீச்சல் வீரர்களும் கட்டாயம் உயிர்காக்கும் அங்கிகளை (Life Jackets) அணிய வேண்டும்.
        • பாதுகாப்புப் படகுகள்: அவசர காலங்களில் உடனடியாகச் சென்று உதவக்கூடிய வகையில் மோட்டார் படகுகள் மற்றும் பயிற்சி பெற்ற உயிர்காக்கும் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

        ஒருங்கிணைப்பாளர்களின் கடமைகள் மற்றும் அவசர கால நடவடிக்கைகள்

        போட்டி ஏற்பாட்டாளர்கள் பின்வரும் அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்:

        • காலநிலை அவதானிப்பு: கடுமையான வெப்பம் அல்லது மழையின் போது போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். நீண்ட தூர ஓட்டப் போட்டிகளை வெப்பம் அதிகரிக்கும் முன்னரே, அதாவது காலை 7.00 மணிக்கும் முன்பே தொடங்க வேண்டும்.
        • அவசர ஊர்தி வசதி: விபத்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அல்லது முதுகுத்தண்டு வளையாமல் படுக்க வைக்கக்கூடிய வாகனங்கள் இருக்க வேண்டும். முச்சக்கர வண்டிகளில் நோயாளிகளை ஏற்றிச் செல்வது ஆபத்தானது.
        • முதலுதவி மையம்: போட்டி நடைபெறும் இடத்திலேயே அடிப்படை முதலுதவி உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் அல்லது மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
        • தொடர்பு வலைப்பின்னல்: அருகிலுள்ள மருத்துவமனை, பொலிஸ் நிலையம் மற்றும் அவசர அம்புலன்ஸ் சேவை (1990) ஆகியவற்றின் எண்கள் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் .

        நன்றி