பெண்ணின் மனது ஆழ் கடல்

அவள் 15 வயது நிரம்பிய பாடசாலை சிறுமி தனது தமக்கையாருடன் வயிற்று குற்றுக்காக வெளி நோயாளர் பிரிவில் மருந்து எடுப்பதற்காக வந்திருந்தாள். வரிசையில் காத்திருக்கும் பொழுது அவளுக்கு குத்து அதிகமாகியது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள் அங்கு ஒருசில நிமிடங்களில் அவள் ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதன் பின்னர் தான் பிரச்சனை ஆரம்பித்தது. வைத்தியர் இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தார். அவர்களும் சீருடையில் குழுவாக வந்து வைத்தியசாலையில் சக நோயாளிகள் முன்பாக விசாரணை செய்தார்கள். முக்கியமாக அவர்கள் சிறுமியிடம் இந்த கற்பத்திற்ற்கு யார் தான் காரணம் என்று அறிய முயன்றார்கள் ஆனால் முடியவில்லை. இது தவிர வைத்தியர்கள், மருத்துவ மாணவர்கள், தாதியர், தாதிய மாணவர், சிற்றுளியர் ஆகியோர் தாங்கள் ஏதோ பொலிசாருக்கு உதவ வேண்டும் என்று எண்ணியோ அல்லது தமது மன வக்கிரத்தினை தீர்க்கும் முகமாக பல்வேறு கேள்விகளை கேட்டு மனோ ரீதியில் துன்புறுத்தினர் இறுதியில் எல்லோருக்கும் ஏமாற்றமே. ஒரு சில நாட்களின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி ஆகிய என்னிடம் அச்சிறுமியை பொலிஸார் அழைத்து வந்திருந்தனர். அவர்களின் முதல் கோரிக்கை சேர், கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பதை கேட்டு சொல்லுங்கள் என்பது தான். நானும் முதல் நாள் இரு மணித்தியாலங்கள் விசாரித்தேன், பதில் காண முடியவில்லை.
இவ்வாறே இரண்டாம் நாளும் ஒரு மணி நேரம் விசாரித்தேன், பதில் பெற முடியவில்லை. பின்னர் சிறுமி மனரீதியில் மிகவும் பாதிக்கப் பட்டு இருந்தமையினால் மன அழுத்தத்தை குறைக்கும் முகமாக கவுன்சிலிங் கிளினிக்குக்கு அனுப்பினேன். அங்கும் பெண் கவுன்சிலர் ஒருவர் சில மணி நேரம் விசாரித்தார். அப்பொழுது தான் பல அதிர்ச்சி காரணமாக உண்மைகள் வெளிவந்தன. சிறுமியின் இரத்த உறவினர் ஒருவரே கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தார். குடும்பத்தாரின் அழுத்தம் காரணமாகவே சிறுமி உண்மையினை மறைத்து வந்தார்.
சிலசந்தர்ப்பங்களில் ஓர் சந்தேக நபரிடம் இருந்து அல்லது குற்றவாளியி் டம் இருந்து சில தகவல்களை பெற பல மணி நேரம் செலவிட வேண்டும். குறிப்பாக பெண்களிடம் இருந்து. இதன் காரணமாகவே 5 மணிநேரம் அல்லது 8 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இவ்வாறு பல மணிநேரம்  பல நபர்களினால் ஒருவரிடம் இருந்து வெவ்வேறு வாக்கு மூலங்கள் பெறப்பட்டு  இறுதியில் ஒன்றாக இருந்து அலசி ஆராயப்படும். இதன் பின்னரே விடயங்கள் தெரியவரும். சில சந்தர்ப்பங்களில் விசேட மனோ தத்துவ நிபுணர்களின் பரிசோதனைக்கு உட் படுத்தப்படுவர் .

ஈழத்தில் பலியாகும் சிறுவர்கள்

அண்மையில் தமிழ் நாட்டில் ஆழ் துளை கிணறில் தவறி வீழ்ந்த சுர்ஜித் என்ற சிறுவனுக்காக பலரும் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எம்மை சூழ அயல் கிராமங்களில், மாவட்டங்களில்  இதனை ஒத்த சம்பவங்களினால் பரிதாபமான முறையில் இறக்கும் சிறுவர்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஒவ்வோர் வருடமும் கார்த்திகை  மாதம் தொடக்கம் தை மாதம் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெய்யும் வட கீழ் பருவ பெயர்ச்சி மழையின் காரணமாக ஒவ்வொரு வருடமும் மேற்குறித்த மாகாணங்களில் குறைந்தது 5 சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறுகளில் தவறுதலாக வீழ்ந்து இறப்பர். இவ்வருடமும் அவ்வாறே நடைபெற்றுள்ளது.

sw9.jpg

மேலே உள்ள படமானது இலங்கையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளின்  தோற்றங்களினை காட்டுகின்றது.

பாதுகாப்பான கிணறு என்றால் என்ன? ஓர்  பாதுகாப்பான கிணறு என்பது தூய  குடிநீரினை வழங்குவதற்கும், தவறுதலாக நீரில் வீழ்ந்து உயிரிழப்புகளை தடுப்பதற்கும், வெள்ள நீர் போன்றன உட்புகாத வகையில் அமைக்கப்படுவது ஆகும். இங்கு  எவ்வாறு உயிரிழப்புகள் எவ்வாறு ஏற்படுகின்றது, எவ்வாறு அவற்றினை தடுக்கலாம் என்பது பற்றி விளக்குகின்றேன்.
பொதுவாக கிணறுகளுக்கு சுற்றிவர இருக்கும் சுவர் கட்டு இல்லாமல் இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. மழையின் காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால் கிணறுகளின் அமைவிடம் தெரியாமல் போவதினால் விபத்துகள் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அப்பிரதேசத்திற்கு அறிமுகமானவர்களும் அறிமுகமற்றவர்களும் விபத்திற்கு உள்ளாகின்றனர். கிணற்றின் சுற்று சுவர் ஆனது குறிப்பிட்ட அளவு உயரம் வரை (3 அடி – சில சந்தர்ப்பங்களில் 5 அடி  ) உள்ளதாக கிணறு முழுக்க சுற்றி   கட்ட வேண்டும் அப்பொழுது தான் சிறுவர்கள், ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள் தவறி விழுவதினை தடுக்கலாம். பொதுவாக கிணற்று நீரினை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் சுவரின் உயரத்தினை குறைப்பதோ அல்லது முற்றாக இல்லாமல் செய்வதோ விரும்ப தக்கது அல்ல.

Types-of-water-sources-in-the-study-site-A-Protected-well-B-Protected-well-with-lid

மேலே உள்ள படமானது உலகத்தில் உள்ள சில கிணறுகளின் தோற்றங்களினை காட்டுகின்றது
வயல் வெளிகள், கடற்கரைகள் போன்றவற்றில் உள்ள கிணறுகளில் பெரும் பாலும் சிறுவர்கள் பட்டம் ஏற்றி விளையாடும் பொழுதும், கிரிக்கெட் விளையாடும் பொழுதும் பின்னோக்கி நகரும் பொழுது தவறுதலாக வீழ்ந்து மரணத்தினை தழுவிக்கொள்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் மாரி காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கிணறுகளில் மீன் பிடித்து விளையாடும் பொழுது தவறுதலாக உள்ளே வீழ்ந்து இறக்கின்றனர், மேலும்  உள்ளே இறங்கி நீந்தி விளையாடும் பொழுதும் பூரணமாக கட்டிடபடாத காரணத்தினால் மண் மற்றும் பாரிய கல் போன்றன வீழ்ந்தும் இறப்புக்கள் நடைபெற்றுள்ளன.
வேறு சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற கிணறுகளில் இருந்து நீரினை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் குறுக்கே போடப்படும் மரங்கள் பொதுவாக தென்னங் குற்றி மழையினால் அதிக நீரினை உறிஞ்சி, நீர் அள்ளும் பொழுது பாரம் தாங்காமல் முறிந்து வீழ்ந்து மரணத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.
இனி எவ்வாறு இவ்வாறான அநியாய மரணங்களினை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் முதலில் கடற்கரை, வயல்வெளி போன்றவற்றில் உள்ள தேவையற்ற பாகாப்பற்ற கிணறுகளினை அல்லது குழிகளினை முற்றாக முடிவிடவேண்டும். மேலும் எதிர் கால பயன்பாட்டிற்கு தேவையான கிணறுகளை அடையாளம் கண்டு அவற்றினை பாதுகாப்பான கிணறுகளாக மாற்றி புனரமைக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச, அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளினை பெருகொள்ளலாம்.
வெள்ளம் காரணமாக மறைபடும் சாத்தியம் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளை அல்லது குழிகளினை சுற்றி தடிகளை நாட்டி சிவப்பு துணிகளையோ அல்லது பொலித்தினையோ பயன்படுத்தி தெளிவாக அடையாளம் இடவேண்டும். மிக வறுமையில் உள்ளவர்கள் குறைந்தது ஒவ்வோர் வருடமும் பாதுகாப்பற்ற கிணற்றின் குறுக்காக போடப்பட்ட மரத்தினையாவது மாற்றுவது நல்லது. மேலும் கிணற்றின் சுற்று சுவரின் உரம் குறைவாக இருந்தால் கிணற்றினை சுற்றி மூடி வைப்பது நல்லது

   சில சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அற்ற வாய்க்கால் போன்றவற்றில் வீழ்ந்து சிறுவர்கள் இறந்துள்ளனர். மேலும் பெற்றோர்  சிறுவர்களின் நடமாட்டத்தினை எப்பொழுதும்  அவதானித்த வண்ணம் இருக்க வேண்டும் அதனை விடுத்து தொலைக்காட் சி தொடரிலோ அல்லது கைத்தொலை பேசியிலோ மூழ்கி தன்னிலை மறப்பது சிறுவர்களின் உயிரிழப்புகளை மேலும் அதிகரிக்கும்.

sw8

மிக முக்கியமாக 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வீடுகளில் உள்ள பாரிய நீர் நிறைந்த பரல்கள், நீர்த்தாங்கிகள் என்பவற்றினுள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே இவ்வாறான சிறுவர்கள் தொடர்பாக அதிக அவதானமாக இருக்க வேண்டும்.

                                                                     முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

மரணித்த மனிதம்

ஒரு சில நாட்களுக்கு முன்னர் யாழில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு வாளால்  வெட்டப்பட்டு வீதியோரம் தூக்கி வீசப்பட்டார். பொதுமக்கள் எவருமே அவனை தொடவும் இல்லை அவனை வைத்திய சாலையில் அனுமதிக்கவும் இல்லை.  அவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர். அதனை தொடர்ந்து அவ்விடத்தில் எற்கு வந்த பொலிஸார் குற்றியிராக இருந்த இளைஞனை வைத்திய சாலையில் அனுமதிக்காது, வீதியோரத்தில்  குற்று உயிராக இருந்த அவனிடம் இருந்து வாக்கு மூலம் போன்று தகவல்களை ஏற்தாழ  30 நிமிடங்களுக்கு மேலாக பெற்றனர் அதன் பின்னரே வைத்திய சாலையில் அனுமதித்தனர். அதிக இரத்த போக்கு காரணமாக குருதி மாற்றீடு மற்றும் சத்திர சிகிச்சை போன்றவற்றிற்கு  உட்படுத்தப்பட்டான் . அதன் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அவதானித்த ஊடகங்கள் அவன் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன அவ்வாறே இணையதளங்களும் செய்தி வெளியிப்பட்டுள்ளது.

ஊடக விதிகளின் அடிப்படையில் ஓர் சம்பவத்தினை தீர விசாரித்து உறுதி செய்யத பின்னரே செய்தியாக வெளியிட வேண்டும். அதாவது ஓர் சம்பவத்தினை கண்ணால் கண்டலும் காதினால் கேட்டாலும் போதாது. தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.
நம்மில் பலர் இவ்வாறு தாக்கபடுபவர்களை அல்லது வீதி விபத்தில் சிக்குபவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க பின்னிற்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் தாங்கள் எதிர்காலத்தில் போலீசாரின் விசாரணை மற்றும் நீதி மன்ற விசாரணை போன்றவற்றை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதே. முதலில் நாம் ஒன்றினை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் நாம் சாட்சிகள் மட்டுமே. நாம் குற்ற வாளியோ அல்லது பாதிக்கபட்ட தரப்போ அல்ல. வாய்ப்பேச்சிலும் முகநூலிலும் தங்களை நியாயவான்களாகவும்  அநியாயத்திற்கு எதிராக பொங்குபவர்களாகவும் இருப்பவர்கள் நியத்தில் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வாறு பிரச்சனைகளுக்கு பயப்டுபவர்கள் அவசர ஆம்புலன்ஸ் சேவையினை அழைத்து காயப் பட்டவர்களுக்கு உதவி செய்யலாம். தற்பொழுது இந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை நாடு பூராவும் உள்ளது . இங்கு அழைப்பவர்களின் விபரம் பொதுவாக பொலிஸாருக்கோ அல்லது வேறு யாருக்குமோ பொதுவாக தெரியப்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு போராடியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் ….

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

என்கவுண்டரினை எதிர்ப்போம்

இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டு வண்புணர்வுக் கொலை என சந்தேகிக்கப்பட்டு சந்தேக நபர்களாக நால்வர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் பொலிஸாரின் காவலில் இருந்த நிலையில். அவர்கள் நால்வரும் பொலிசாரிடம் ஆயுதத்தை பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்ததாக அதேபொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு சமூக வலைத்தளங்களில் இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது திட்டமிட்ட கொலை என்று நன்றாகவே எல்லோருக்கும் தெரியும். நான்கு பேரில் ஒருவரைக் கூட பொலிஸாரினால் உயிருடன் பிடிக்க முடியவில்லை என்பதே மிகப்பெரிய புதினம் ஆகும் .

This slideshow requires JavaScript.

இந்திய நீதித்துறை வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய இடத்தில் மக்கள் சந்தோசமாக கொண்டாடிதீர்க்கின்றார்கள் , அது போதாததற்கு இலங்கையிலும் பலர் மற்றும் சில படித்தவர்களும் கூட பொலிசாரின் இந்த சட்டமீறலை நீதியென நம்பி மகிழ்ச்சி கொள்கின்றனர். இலங்கையில் கூட இவ்வாறு என்கவுண்டர் என்றழைக்கப்படும் முறையில் சந்தேக நபர்கள் பொலிஸாரினால், சிறை காவலர்கள் மற்றும் ஆயுத படைகளினால் கடந்த காலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இனி நாம் ஏன் இவ்வாறான சம்பவங்களினை வன்மையாக எதிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

  1. ஒருவர் நீதிமன்றினால் நடாத்தப்படும் பூரண விசாரணையினை தொடர்ந்து தான் அவர் குற்றவாளியா அல்லது குற்றம் அற்றவரா என தீர்மானிக்க முடியும். அதுவரை அவர் சந்தேக நபராக தான் கருதப்பட வேண்டும். இங்கு நீதிமன்ற விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் போலீசார் நீதி வழங்கியுள்ளனர்.
  2. பொலிஸாருக்கோ, சிறைக்காவலருக்கோ அல்லது ஆயுத படைகளுக்கோ இவ்வாறு நீதி வழங்குவதற்கு எவ்விதமான அருகதையும் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான இலாபம் தரக்கூடிய விடயங்களையே செய்வர். இந்தியாவின் காஸ்மீரில் இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வேண்டும் என்ற ஆசையினால் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் இவ்வாறு நூற்றுக்கு கணக்கான இளைஞர்கள் கொல்லப்படடனர். இவ்வாறு சட்ட விரோத கொலைகளை செய்த பிடிபட்ட ஒருசில அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறே இலங்கையிலும் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட சகல சந்தேக நபர்களும் பயங்கர வாதிகளோடு தொடர்புடையதாக்கப்பட்டனர்.
  3. இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் போலீசார் விஞ்ஞான ரீதியான புலனாய்வுகளை (scientific investigations) பெரிதும் மேற்கொள்வதில்லை. உதாரணமாக ஓர் சம்பவத்தில் பாரிய குற்ற செயல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர்கள் அநேகமான சந்தர்ப்பத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பொய் வாக்கு மூலம் பெறப்பட்டு அப்பாவியான ஒருவர் குற்றவாளியாக்கப்படுவர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் இருந்த பலர் பல வருடங்களில் பின்னர் குற்றவாளி அல்லர் என விடுதலை செய்யப்பட்ட சம்பவங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் நடைபெறும் நிலையில் ஒருவரினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் அவருக்கு மரண தண்டனை அளிப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது.
  4. போலீசார் அரசியல் செல்வாக்குள்ள அல்லது பண வசதியுள்ள சந்தேக நபர்களினை கைது செய்தால் இவ்வாறு செய்யவர்களா? என்றால் பதில் நிச்சயம் இல்லை என்பதே ஆகும். எனவே இவ்வாறான சம்பவங்களில் நிச்சயம் பாதிக்கப்படுவது ஏழைகளும், அரசியல் செல்வாக்கற்ற சாதாரண பொதுமக்களும். இன்று பலர் தனக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற மனநிலையில் தான் உள்ளனர்.
  5. இன்று பலரும் கூறிக்கொள்வது யாதெனில் சந்தேக நபர்களினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினால் அவர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள் என்பதே ஆகும். இவர்கள் இவ்வாறு தப்புவதற்கு ஏதுவான முக்கிய காரணிகளில் ஒன்று பொலிஸாரின் பிழையான விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் சான்றுப்பொருட்டுகள் ஆகும். போலீசார் முதலில் மேற்குரியவற்றில் ஏற்படும் பிழைகளை திருத்துவத்தினை விடுத்து அப்பாவிகளை பழி வாங்குவது அல்லது அவர்களினை தமது பதவி உயர்வுக்கு பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு. பொலிஸாரின் விசாரணை செயற்பாட்டுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
  6. இவ்வாறு கூட்டு வன்புணர்வு கொலை நடைபெறும் பொழுது அதில் சந்தேக நபர்களாக பெயரிடுபவர்கள் யாவரும் அந்த கொடூர செயலினை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் குற்ற செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்திருப்பர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு நீதி மன்றத்தில் வாதாடாமல், தீர்ப்பெழுதாமல் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி போன்றோர் செயற்படவேண்டும். இல்லாவிடில் உரிய நீதியினை நாம் எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே வளர்ச்சியடைந்த மேலைத்தேச நாடுகளில் இவ்வாறன சம்பவங்களின் பொழுது பெரும்பாலும் விஞ்ஞான ரீதியான சான்றுகளை (scientific evidence) சமர்ப்பிக்கின்றனர். அதனை பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். தேவை ஏற்படும் பொழுது எவ்வாறு சான்றுகள் சேகரிக்கப்பட்டன , ஆராயப்பட்டன என்று நீதிமன்றில் மீளுருவாக்கம் (reproducible) செய்யப்படுகின்றது.
  7. தண்டனை வழங்க முதல் உண்மையான குற்றவாளி அவர்கள் தானா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு நீதிமன்றமே எமக்குள்ள ஒரேயொரு தெரிவாகும். குற்றவாளிகளுக்கு போலீசாரே தண்டனை வழங்குவது என்றால் நீதிமன்றம் எதற்கு நீதிபதிகள் எதற்கு அவர்களுக்கு வீணாக சம்பளம் எதற்கு? சட்டம் குற்றவாளிகளுக்கு ஒழுங்காக தண்டனை வழங்குவது இல்லை என்றால் ஒழுங்கான சட்டத்தை உருவாக்கவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு நடைபெறும் சட்ட விரோத கொலைகளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க கூடாது.

எனவே வெறும் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறான சட்ட விரோத கொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அறிவு பூர்வமாக சிந்திப்போம் செயற்படுவோம்.

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

சாவுக்கு பயந்தவன்

அன்று காலையில் இருந்தே பல தொலை பேசி அழைப்புக்கள், அவை யாவும் ஒரு இளைஞனின் மரணத்துடன் தொடர்பானது. தொடர்பு கொண்டவர்கள் எல்லோரும் சொன்னார்கள், இது ஓர் சந்தேகத்திற்குரிய மரணம் ஆதலால் நன்றாக ஆராய்ந்து தீர்மானிக்கும் படி. நானும் அந்த குற்றம் நடைபெற்ற பிரதேசத்தினை போலீசாரின் உதவியுடன் சென்றடைந்தேன். அது ஓர் கட்டிட தொகுதியின் பின்புறம் உள்ள ஓர் சிறிய வெளி. அதில் ஓர் மரம் அதில் தான் அவனது உடல் தூங்கிக் கொண்டிருந்தது. நான் சென்ற உடனேயே அங்கு கூடி இருந்தவர்கள் சொன்னார்கள் அவனின் தலையினை பார்க்கும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். நானும் அவதானித்தேன் அவனது தலை மற்றும் முகம் ஓர் தடித்த துணியினால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் தூக்கினை மாட்டுவதற்கு எந்தவொரு ஓர் உபகரணமும் இல்லை மேலும் சம்பவம் நடைபெற்ற பிரதேசம் ஓர் திறந்த வெளி. இவை நிலைமையினை மேலும் சிக்கலாக்கியது. கூட இருந்த உறவினர்களின் குற்றசாட்டு அவன் முகத்தில் துணி போடப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் தான் தூக்கிலிடப்பட்டான் என்பது ஆகும்.

குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலன் விசாரணைகளும் உடற் கூராய்வு பரிசோதனை முடிவுகளும் எதுவிதமான கொலை நடைபெற்றமைக்கான எதுவிதமான சாதகமான முடிவுகளையும் காட்டவில்லை. அவ்வாறே இரத்த மற்றும் சல பரிசோதனைகளும் எதுவிதமான கொலை நடைபெற்றமைக்கான சாதக முடிவுகளையும் காட்டவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தான் இறந்தவரின் உளவியல் உடற் கூராய்வு (psychological autopsy) பரிசோதனை தகுதி வாய்ந்த சட்ட மருத்துவ மனோதத்துவ நிபுணர்களினால் (Forensic psychiatrist) நடத்தப்பட்டது. இதற்காக இறந்தவரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன் இறந்தவரின் தொலை பேசி கலந்துரையாடல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முடிவாக நிபுணர்களின் குழு இறந்தவர் மரணத்துக்கு பயந்து தான் முகத்தினை மூடிக்கொண்டு தூக்கில் தொங்கினார் என்று கூறியது. இவ்வாறே சிலசந்தர்ப்பங்களில் வாயினுள் துணி போன்றவற்றினை அடைந்து கொண்டும் தொங்குவார்கள் ஏன்னெனில் சத்தம் வெளியில் வருவதனை தடுப்பதற்கு என்ற மனோவியலே காரணம் .

சத்தமின்றி ஒரு வேட்டு

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

 

ஆபத்தான அழகு …

அண்மையில் பிரேசில் நாட்டினை சேர்ந்த யுவதி ஒருவர் HIV நோய் தொற்றலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வைத்தியசாலை சென்றார். அவரிடம் வைத்தியர்கள் அவருக்கு எவ்வாறு HIV தொற்றியது என்பது பற்றி கேட்ட பொழுது, யுவதி தான் ஒருவருடனும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளவில்லை என தெரிவித்தாள். முதலில் வைத்தியர்கள் நம்பவில்லை, இதனை தொடர்ந்து அவள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பட்டபொழுது அவள் கன்னி கழியாதவள் என தெரியவந்தது. மேலும் அவள் பச்சை குற்றவில்லை அத்துடன் அவள் போதைப்பொருள் பாவனையாளரும் அல்ல. அதனை தொடர்ந்து வைத்தியர்கள் அவளுக்கு எவ்வாறு  HIV தொற்றி இருக்க முடியும் என ஆராய்ந்த பொழுது தான் அவள் அதனது சிறுவயதில் HIV தொற்றுக்கு உள்ளான உறவினர் ஒருவரின் manicure செய்யப்படும் உபகரணங்களை பாவித்தமை தெரிய வேண்டி வந்தது. எனினும் வைத்திய நிபுணர்கள் இதனை நம்பவில்லை. அவர்கள் இருவரினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அதில் உள்ள HIV வைரஸின் DNA ஆனது ஒப்பீட்டு ஆராயப்பட்டது. அப்பொழுது தான் வைத்தியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது அதாவது இருவரின் இரத்த மாதிரியில் உள்ள வைரஸின் DNA யின் சில பகுதிகள் மிக நெருங்கிய ஒற்றுமையினை வெளிக்காட்டின. இதன் மூலம் இதுவரை காலமும் manicure  போன்ற அழகு ஆக்கல் செயன்முறையின் பொழுது HIV தொற்றாது என நம்பப்பட்டு வந்தமை பொய்யானது.

அவளின் தாயாரும், ஆண் நண்பரும் கூடவே HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அதன் முடிவாக அவர்களுக்கு குறித்த நோய் நிலை இல்லை என்பதுவும் அவளின் தாயார் தான் உண்மையான தாயார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் CDC (Centers for Disease Control and Prevention) நிறுவனமானது சுகாதாரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் அக்குபஞ்சர், பச்சை குத்துதல் மற்றும் உடல் உறுப்புகளில் துளை இட்டு ஆபரணங்கள் அணிதல் போன்றவற்றினால் HIV தொற்றும் ஆபத்துள்ளது என்று ஏற்கனவே பட்டியல் இட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே சுகாதாரமற்ற அழகு ஆக்கல் சாதனங்களினாலும் HIV வைரசு ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்ற சாத்தியம் உள்ளது. இலங்கையில் சுகாதார துறையினர் அழகு ஆக்கல் நிலையங்களினை கண்காணித்து நெறிப்படுத்துகின்றனரா? என்பதே தற்போதுள்ள கேள்வி.

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. “சமூகங்கள் நிலைமையை மாற்றலாம் (Communities make the difference)”என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 3,507 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2,391 ஆண்களும், 1,116 பெண்களும் காணப்படுகின்றனர். இலங்கையின் பொறுத்தவரை இங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக பாதுகாப்பற்ற உடலுறுவு காணப்படுகின்றது. அது தவிர நோய்தொற்றுள்ள தாயிடம் இருந்து பிள்ளைக்கு தொப்புள் கொடி மூலமாகவும்  கடத்தப்படுகின்றது. இலங்கையில் குருதி மாற்றீடு சேவை மிக சிறந்த தரத்தில் இருப்பதால் அதாவது குருதி வழங்குனரின்  குருதியில்  HIV, MALARIA, HEPATITIS போன்ற நோய்நிலைகளை உண்டாக்கும் கிருமிகள் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே இன்னொரு நோயாளிக்கு வழங்கப்படும் இதன் காரணமாக குருதி மாற்றீடு காரணமாக  இலங்கையில் எச்ஐவி தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அரிதான ஒன்றாகும். இவ்வாறே இலங்கையில் சகல வைத்திய சாலைகளிலும்  நோயாளிகளுக்கு ஒருமுறை மட்டும் பாவிக்கும் ஊசி பாவிக்கப்படுவதினால்  இவ்வாறு ஊசிகள் மூலம் தொற்றுவதும் அரிது.

இலங்கையில் மாவட்ட அரச வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய், மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில், பொதுமக்கள் தாமாகவே வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக நோயாளிகள் பயப்பட வேண்டிய தேவையில்லை.

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

 

ஆபத்தான மோட்டார்சைக்கிள்கள்

அவனுக்கு இருத்திரண்டு வயது தான். அவனது சிறு வயதிலேயே பெற்றோர்கள் போரின் பொழுது இறந்துவிட்டார்கள். அதன் பின்னர் அவன் அவனது அக்காவின் அரவணைப்பிலேயே வளர்ந்தான். அதீத செல்லம் காரணமாக பாதியிலேயே பள்ளிக்கூட படிப்பினை கைவிட்டுவிட்டான். சிறிதுகாலம் வேலை எதுவும் அற்று இருந்துவிட்டு கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். இரு வாரங்களுக்கு முன்னர் தான் புதிய ரக மோட்டர் சைக்கிள் ஒன்றினை லீசிங் அடிப்படையில் வாங்கியிருந்தான். அன்று அவன் காலையில் வேலைக்கு வேகமாக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவன் குச்சொழுங்கை ஒன்றில் வேகமாக சென்ற பொழுது நாய் ஒன்று வேகமாக பாதையினை கடந்தது அவனும் அதன் மீது மோதலினை தடுக்கும் முகமாக பிரேக்கினை பிடித்தான். அப்பொழுது அவன் மோட்டர் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு வீதியில் தலை அடிபடும் படியாக விழுந்தவன் தான், அதன் பின்னர் மூச்சு பேச்சு எதுவும் இல்லை. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவனின் உயிரினை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் நடைபெறும் பொழுது அவன் தலைக்கவசம் அணிந்திருந்தான்.
அவனின் பிடரி பக்க எலும்பு உடைந்திருந்தது அத்தோடு மூளையின் முன்பக்க பகுதியில் பாரிய இரத்த கசிவு காயம் ஏற்பட்டிருந்தது. இவை தவிர சிறு சிறு சிராய்ப்பு காயங்களே உடலில் இருந்தன. உடலில் வேறு பாரிய காயங்கள் எதுவுமில்லை.

3-D CT scan of human skull showing bone thickness

மேலுள்ள படம் மனிதனின் மண்டை ஓட்டின் உள்ள பல்வேறு எலும்புகளின் தடிப்பத்தினை விளக்குகின்றது

Inked890_LI

(மேலுள்ள படத்தில் மஞ்சள் அம்புக்குறியானது அமர்முடுகல் விசையினையும், நீல அம்புக்குறியானது சடுதியாக ஏற்படும் சுழற்சியினையும் பச்சை அம்புக்குறியானது தூக்கி வீசப்படுவதற்கான சந்தர்ப்பத்தினையும் குறிக்கின்றது)

93

தற்பொழுது யாழ். குடாநாட்டில் ஸ்போர்ட்ஸ் (sports) அல்லது sports tourer வகையான மோட்டர் சைக்கிளினை இளைஞர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அதுவும் இவற்றின் இன்ஜின் பவர் (RPM/ Torque) சாதாரண மோட்டார் சைக்கிளினை விட அதிகம் ஆகும். இவ்வகையான மோட்டர் சைக்கிளில் நாம் முன்னோக்கி சரிந்த வண்ணம்தான் செலுத்த முடியும். இவ்வாறு அதிவேகமாக செலுத்தும் பொழுது விபத்து நடைபெற்றால் மோட்டார் சைக்கிளின் வேகம் முதலில் பூச்சியமாகும், ஆனால் மோட்டார் சைக்கிளோட்டியின் வேகம் சிறிது நேரத்தின் பின்னரே (மில்லி செக்கன் ) பூச்சியமாகும். அப்பொழுது தாக்கும் அமர்முடுகள் விசை காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்படுவார். இச்செயற்பாடு மோட்டார் சைக்கிளோட்டியின் முன்னோக்கிய சரிவு காரணமாகவும், கை பிடியில் ஏற்படும் சுழற்சி காரணமாகவும் இலகுவாக்கப்படும். இவ்வாறு ஏற்படும் சுழற்சியினை மோட்டர் சைக்கிளோட்டி எதிர்பார்க்க மாடடார் அத்துடன் ஒரு வலது பக்கத்தில் இருக்கும் சுழலும் அக்ஸிலேட்டர் காரணமாக தடுப்பதும் கடினம். இதன் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி தலை நிலத்தில் விழும் படியாக தூக்கி அடிக்கப்படுவார். இதனால் தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் இவ்வகையான தலையில் ஏற்படும் காயங்களினை தடுக்க முடியாது.

20191125_2332525092713423157866351.jpg

இங்கு மனிதனின் மண்டை ஓட்டில் மிகவும் தடிப்பான எலும்பான பிடரி எலும்பில் உடைவு ஏற்பட்டதினை மேலுள்ள படம் காட்டுகின்றது

20191105_1440466056794007590467237.jpg

மனிதனின் பிடரி பக்கத்தில் ஏற்பட்ட காயத்தினால் மூளையின் முன்பக்கத்தில் (contrecoup injury) ஏற்பட்ட பாரிய இரத்த கசிவு காயத்தினை மேலுள்ள படம் விளக்குகின்றது

முற்றும்

இது நிஜம், சினிமா அல்ல…

இன்றைய நவீன உலகில் சினிமாவின் தாக்கம் அளப்பரியது. அதிலும் தொலைக்காட்சி தொடர்களின் சமூகம் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கது. சினிமாவை பொறுத்த வரையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும் இந்திய தமிழ் சினிமாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். அதில் காட்டப்படும் சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் மற்றும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் போன்றவற்றை எம்மில் பலர் ஏற்று கொண்டுள்ளனர், அத்தோடு மட்டும் அல்லாது அவற்றினை நடைமுறைப்படுத்த விழைகின்றனர். அதன் பொழுதே பிரச்சனைகள் உருவாகின்றன.அதில் குறிப்பிட்ட தக்க விடயம் என்னவென்றால் சில படித்தவர்கள் கூட இதற்கு அடிமை. இவ்வாறே தமிழ் சினிமாவில் காட்டப்படும் குற்றம் சம்பந்தமான காட்சிகளையும் சிலர் உண்மை என்று நம்பி அதனை செயற்படுத்த நினைக்கின்றனர். உதாரணமாக அண்மையில் கிளிநொச்சியில் கணவன் தனது மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்தார். அச்சம்பவம் நடைபெற்ற குறுகிய நேர இடைவேளையில் பொலிஸார் உரிய குற்ற வாளிகளை கைது செய்தனர். இது முக்கியமாக தொலைபேசி தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாலேயே முடிந்தது.

345இதேபோன்று இந்திய சினிமாவில் பொதுவாக காட்டப்படும் இன்னொரு காட்சி தான் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் இருக்கும் ஒருவரை மின்சார ஆளியினை நிறுத்தி அல்லது அவரது சுவாச குழாயை கழற்றி கொலை செய்வது. அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது தாயார் இலங்கையில் இவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகித்து என்னிடம் இதுபற்றி வினவியிருந்தார். இலங்கையில் அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்தியாலையில் இவ்வாறான சமல்வங்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் பல வைத்தியர்கள், தாதியா உத்தியோகத்தர்கள், சிற்றோழியர்கள் போன்றோரின் கண்காணிப்பில் 24 மணிநேரமும் இருக்கும். இது தவிர வெளியில் பெரும்பாலும் ஓர் காவலாளி கடமையில் இருப்பார். பாஸ் அனுமதி நடைமுறை வேறு அமுலில் இருக்கும் அதுவும் ஒரு நாளைக்கு இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படும். மேலும் பல சந்தர்ப்பங்களில் CCTV கேமராவின் கண்காணிப்பு வேறு இருக்கும் . இந்நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற வாய்ப்புக்கள் மிக மிக அரிது.இவ்வாறே போதை மருந்து மற்றும் கஞ்சா போன்றவற்றை கடத்துபவர்களும் இலகுவில் மாட்டிக்கொள்கின்றனர்.
மேலும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தொழில் நுட்ப அறிவு மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளின் திறன், எண்ணிக்கை என்பன கிட்டதட்ட நாடு பூராவும் சமனான முறையில் பரவி இருக்கும் அத்துடன் ஒருசில நூறு கிலோமீட்டர் தொலைவில் எல்லா இடங்களும் இருப்பதால் குற்றவாளிகள் இலகுவில் தப்பிக்க முடியாது.

ஆங்கில க்ரைம் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் பெரும்பாலானவை உண்மையானவை. ஆனால் தமிழ் சினிமாவில் வருபவை அவ்வாறானவை அல்ல, இந்த வித்தியாசத்தினை நாம் உணரவேண்டும்.

 

சாட்சியங்களற்ற கொலை….

யுவோனா( Yvonne Jonsson) மற்றும் கரோலின் இருவரும் சுவீடனில் வசிக்கும் சகோதரிகள். இவர்களின் தாயார் ஓர் இலங்கையர். வழமையாக இவர்கள் இருவரும் விடுமுறை காலங்களினை இலங்கையில் வந்து களிப்பார்கள். இவ்வாறே 2005 ஆம் ஆண்டும் இலங்கை வந்திருந்தார்கள். பாவம் அவர்கள் அறியவில்லை அந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கறை படிந்த சம்பவமாக மாறும் என்று.
அவர்கள் இருவரும் ராஜகிரிய பகுதியில் உள்ள ரோயல் கார்டன் என்ற அதி சொகுசு மாடி குடியிருப்பில் தான் வழமையாக தங்குவார்கள். இந்தமுறையும் அவ்வாறு தான் தங்கினார்கள். இவ்வாறு தங்கிய இருவரும் 30 ஆம் திகதி ஜூன் மாதம் மாலை வேளையில் பார்ட்டி ஒன்றுக்காக கிளம்பினார்கள். அவர்கள் அறியவில்லை தங்களில் ஒருவர் அன்று உயிர் துறப்பார் என்று. போகும் வழியில் கரோலின் தனது ஆண் நண்பன் ஜெயமஹா என்ற இலங்கையனையும் அழைத்து கொண்டாள். மூவரும் பல்வேறுபட்ட கிளப் போன்றவற்றுக்கு சென்று கொண்டாடினார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது மது அருந்திய நிலையில் கரோலினுடன் ஜெயமஹா வாக்கு வாதப்பட்டான். அப்பொழுது யுவோனா அவர்களினை விலக்குப்பிடித்தாள். இதனால் யுவான்னா மீது ஜெயமஹா கடும் கோபத்தில் இருந்தான். பின்னர் மூவரும் நள்ளிரவில் திரும்பினர். ஜெயமாஹா சகோதரிகள் இருவரையும் அவர்களின் குடியிருப்பில் விட்டுவிட்டு சென்றான். சகோதரிகள் இருவரும் நடனமாடியதாலும் மது அருந்திய நிலையில் இருந்ததினால் விரைவில் தூங்கி போனார்கள். ஆனால் ஜெயமஹா செல்லவில்லை யுவானவை அவளது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து வெளியே வருமாறு அழைத்தான். அவளும் வெளியே வர காத்திருந்த ஜெயமஹா அவளை கொலை செய்தான். அடுத்த நாள் காலை வேளையில் தொடர் மாடியினை துப்பரவு செய்யும் தொழிலாளி ஒருவர் 19 வயதான யுவான்னாவின் உடலினை மாடிப்படியில் கண்டு பிடித்ததினை தொடர்ந்து. கொலை இடம்பெற்றது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

 

இவ்வாறு கொலை நடைபெற்ற பொழுது கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்கள் ஒன்றுமே இல்லை என்பதினால் பொலிஸார் என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்ற வேளையில் தான் பொலிஸார் ஒருவர் மாடிப்படியில் சில இரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்களினை கண்டார்.
இதன் பின்னர் தான் திருப்பம் ஏற்பட்டது. விசேட கைரேகை நிபுணர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்களின் முடிவின் படி அந்த இரத்தம் தோய்ந்த கை அடையாளத்தில் இருந்த கை ரேகை முக்கிய சந்தேக நபராகிய ஜெயமஹாவின் கைரேகை உடன் ஒத்து போவது தெரிந்தது . குற்றவியல் வழக்குகளில் குற்றமானது நூறு வீத சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப் படவேண்டும் மேலும் கைரேகை அடையாளம் சிறு சத்திர சிகிச்சை போன்றவற்றினால் இலகுவில் மாற்றி அமைக்கப்பட முடியும். எனவே இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மேலும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். முடிவாக இரத்தம் தோய்ந்த கை அடையாளத்தில் இருந்த இரத்த்தினை எடுத்து சந்தேக நபரான ஜெயமஹாவின் இரத்தத்தினையும் எடுத்து DNA பரிசோதனைக்கு அனுப்பினார்கள். பரிசோதனை முடிவில் முடிவில் இரண்டு இரத்தங்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒருவருடையது என்று உறுதியாகியது. இதன் மூலம் ஜெயமஹாதான் குற்றவாளி என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இந்த கொடூர கொ லை செய்த கு ற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேன பொ துமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இலங்கையின் இரு நீதிமன்றங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட மரண தண்டனை கைதியே அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் மன்னிப்பினால் விடுதலையானவர்.

34

சாட்சியங்களற்ற நிலையில் நடக்கும் கொலை, பாலியல் வல்லுறவு போன்றவற்றின் புலன் விசாரணையில் DNA பரிசோதனை மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டு. மேலும் மரண தண்டனை விதிக்கபட்டவர்களை விடுதலை செய்ய இலங்கையில் ஓர் நிபுணர் குழுவின் சிபாரிசு தேவைப்பாடாக உள்ளது.

இது ஆபத்தானதா?

வடகிழக்கு பருவமழை காலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண பகுதிகளில் தீடீர் தீடீர் என்று முளைத்து, பூத்து குலுங்கும் சிறிய தாவரங்களில் (கொடி ) இதுவும் ஒன்று. மற்றைய காலங்களில் இது உயிருடன் இருந்தாலும் பொதுவாக பூப்பதில்லை. கடும் வறட்சியான காலங்களில் நிலத்தின் மேலான பகுதிகள் கருகினாலும் இது நிலத்தின் கீழ் உள்ள கிழங்கின் மூலம் உயிர்ப்பான முறையில் இருக்கும். இது பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது செங்காந்தள் அல்லது காந்தள் (கார்த்திகைப் பூ). இதன் தாவரவியல் பெயர் Gloriosa superba என்பதாகும் . கார்த்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. எம்மில் பலருக்கு இது ஓர் நஞ்சு மிக்க தாவரம் என்று தெரியாது. இதன் பூ, இலை, தண்டு, கிழக்கு போன்றவற்றில் கோல்சிசின் (colchicine) என்ற நஞ்சு பொருள் உள்ளது. அதுவும் கிழங்கில் அதிகளவில் உள்ளது. ஒரு மனிதன் சாதாரணமாக 125 கிராம் கிழங்கினை உட்கொண்டால் நிச்சயம் இறப்பு ஏற்படும். இந்த நஞ்சானது மனிதனின் என்புமச்சை, சமிபாட்டுத்தொகுதி போன்ற விரைவாக பிரிந்து பெருகும் கலங்கள் அதிகளவு தொழில் பாட்டில் உள்ள தொகுதிகளில் செயலிழப்பினை ஏற்படுத்தும். இந்த நஞ்சானது முக்கியமாக கலங்களின் பெருக்கத்தினை தடுக்கும். கிழங்குகளில் உள்ள நச்சானது கிழங்கினை சமைத்தாலும் அழிவடையாத நிலையில் தொடர்ந்து காணப்படும்.
இந்த தாவரம் ஆனது பண்டைய காலங்களில் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக சித்த மற்றும் ஆயுர் வேத வைத்தியர்களினால் பயன்படுத்தப்பட்டது.இங்கு பொதுவாக மிக சிறிதளவான கிழங்கே பாவிக்கப்படுவதினால் (Sub Lethal Dose) அது மனிதனுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. எனினும் சிலசந்தர்ப்பங்களில் நஞ்சாதல் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
பொதுவாக மனிதர்கள் இதன் கிழங்கிணை வேறு தாவர கிழங்குகள் முக்கியமாக வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று தவறுதலாக உட்கொள்வர். சிலர் தற்கொலை செய்யும் நோக்கில் இதன் கிழங்கினை உட்கொள்வதுண்டு. சில சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் பாவிக்கப்படுவதுண்டு.
இதனை உட்கொண்ட பின்னர் பின்வரும் மாற்றங்கள் உடலில் ஏற்படும். உடனடியாக வாய், தொண்டை மற்றும் வயிற்று பகுதிகளில் எரிவு ஏற்படும்.அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றோட்டம் என்பன ஏற்படும். ஒரு சில நாட்களின் பின்னர் தலைமயிர் உதிரல், தோல் மேற்படை கழறுதல், வெளியேறும் சிறுநீர் அளவு குறைவடைதல் என்பன ஏற்படும். சில சமயங்களில் மனம் குழம்பிய நிலைமைகளும் ஏற்படும்.முக்கியமாக போதிய வைத்திய கண்காணிப்பு இல்லாத விடத்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி இறப்பிணை ஏற்படுத்தும்.

பண்டைய இலக்கியங்களில் இது பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.

  • இதன் பூ தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
  • இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
  • இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
  • இதுபற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
  • வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
  • கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
  • மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
  • நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
  • பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.
  • கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

காந்தள் மலரின் அழகு காரணமாகவும் கிழங்கின் மருத்துவ தேவைப்பாடு கருதியும் சில இடங்களில் இந்த தாவரம் வர்த்தக ரீதியில் சாகுபடி செய்யப்படுகின்றது.