தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட…

காலை 10 மணியளவில் எனதுஅலுவலகம் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். ஓர் பல்கலை கழக புதுமுக மாணவியை பெண் போலீசார் அழைத்து வந்திருந்தனர். போலீசார் கூறினார்கள்        ” சேர், பல்கலை கழகத்தில் நடைபெற்ற ராக்கிங்கின் பொழுது இவ்மாணவியின் கையினை சிரேஷ்ட மாணவிகள் வெட்டியுள்ளார்கள்”. மேலும் அவர்கள் இச்சம்பவம் மீடியாக்களில் வந்து பிரச்சனையாக இருப்பதாகவும், நீங்கள் இம்மாணவியினை பரீட்சிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நானும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு பெண் பரிசாரகரின் முன்னிலையில், பொலிஸாரினால் குறிப்பிடடசம்பவம் பற்றி      என்ன நடந்தது? எவ்வாறு நடந்தது ? பாவிக்க பட்ட ஆயுதம் என்ன? போன்ற விபரணங்களை கேட்டேன். அம்மாணவி கூறிய சம்பவம் இதுதான், “தான் விடுதியில் உள்ள குளியறையில் குளித்து கொண்டிருக்கும் பொழுது இரவு சிரேஷ்ட மாணவிகள் சிலர் அத்துமீறி உள்ளே புகுந்து தனது இடது கையில் பிளேடினால் பலமுறை வெட்டியதாகவும் அதன் பின்னர் தான் மயங்கி வீட்டதாகவும், மீண்டும் விழித்த பொழுது தான் விடுதி அறையில் உள்ள கட்டிலில் படுத்து இருந்ததாகவும்” கூறினார். மேலும் அவர் தனது சக மாணவிகள் இது பற்றி பல்கலை கழக நிர்வாகத்தில்  முறையிடத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். அவரின் காயங்களின் இயல்புகளை பார்த்த உடனேயே எனக்கு விளங்கி விட்டது அதேபோல் அருகில் நின்ற அனுபவம் மிக்க பெண் பரிசாராருக்கும் விளங்கி விட்டது அதாவது இக்காயம் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டது (Deliberate self-harm (DSH), self- inflicted injury (SII), nonsuicidal self-injury (NSSI)). நான் அம்மாணவியிடம் எனது கருத்துக்களை கூறி ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டேன். அம்மாணவி அதனை முற்றாக மறுத்து தனக்கு சிரேஷ்ட மாணவிகள்  இடது கையில் பிளேடினால் பலமுறை வெட்டியதாக உறுதியாக கூறினார். பெண் என்ற ரீதியில் அருகில் நின்ற சிரேஷ்ட பரிசாராரும் எனது மேலதிகாரியும் ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டனர். அவள் அம்மாணவி மீண்டும் மீண்டும் சம்பவத்தினை மறுத்தாள் . இறுதியாக அவள் கடும் மன உளைச்சலில் இருப்பதனால் அவளை உளவள ஆலோசனைக்கு அனுப்பிவைத்தேன். பொலிஸாருக்கு அம்மாணவியில் காணப்பட்ட காயங்கள் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டதால் ஏற்பட்டது என்று அறிக்கையிட்டேன். சில வாரங்களின் பின்னர் வேறு அலுவலாக வந்த போலீஸ் அதிகாரி கூறினார், கடைசியில் மாணவி எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டார் பின்னர் நடைபெற்ற விசாரணைகள் முடிவுறுத்த பட்டுள்ளன என்று.

எம்மில் பலர் மன நெருக்கீடான நேரங்களில் எம்மை நாமே காயப்படுத்தும் வழக்கத்தினை கொண்டுள்ளனர். வேறு சிலர் சில சம்பங்களில் இருந்து தப்பிவிக்கவும், சம்பவங்களை திசைதிருப்பவும் இவ்வாறு செய்கின்றனர். சிலர் சிலரிடம் இருந்து அனுதாபத்தினை பெறவும் அல்லது அவர்களை பயப்படுத்தவும் இவ்வாறு செய்கின்றனர். ஓர் சட்ட வைத்திய அதிகாரி இக்காயங்களில் காணப்படும் பின்வரும் இயல்புகளை கொண்டு அவற்றினை இலகுவாக இனம் காணுவார்.

  • பொதுவாக பெண்களே இவ்வகையான காயங்களை தமக்கு தானே ஏற்படுத்துவார்கள்.
  • காயங்கள் பொதுவாக தனது கைகளுக்கு எட்ட கூடிய இடங்களான கையின் முற்புறம், தொடையின் முற்புறம், வயிறு மற்றும் நெஞ்சின் முற்புறம் என்பவற்றில் காணப்படும்.
  • காயங்கள் அநேகமாக வெட்டு காயமாக இருக்கும், இதேவேளை அவை தோலின் ஆழத்திற்கே காணப்படும் மேலும் காயங்கள் ஒன்றுக்கு ஒன்று சமாந்தரமாக காணப்படும்
  • மேலும் இவர்களை பரீட்சிக்கும் பொழுது முன்பு ஏற்படுத்திய இவ்வகையான காயங்களின் தழும்புகள் காணப்படும்
  • இக்காயங்கள் காணப்படும் ஆண்கள் சிலவேளைகளில் போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள்.
  • சிலர் ஒருவித மனநோயினால் பாதிக்க பட்டவர்களாக இருப்பார்கள்.

மார்ச் 1ம் திகதி உலகளாவிய ரீதியில் இவ்வகையான காயங்களை குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாகும்.

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

அறிமுகம்

முன்பொருபோதும் இல்லாதவாறு பாலியல் துஸ்பிரயோக, கொலை  மற்றும் ஏனைய குற்றவியல் வழக்குகள் நடைபெறும்போது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுசனங்கள் இடையிலும்  DNA   பரிசோதனை முடிவுகள் சம்மந்தமாக பெருமளவு கதைக்கப்படுக்குகின்றது. DNA பரிசோதனை முடிவானது தகுந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் சந்தேகநபர்கள் தண்டனையில் இருந்து விடுதலை பெறவும் உதவும். DNA பரிசோதனை சரியான முறையில் மேற் கொள்ளப்பட்டால் எத்தகைய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினாலும் அவ்வழக்கில் வெற்றி பெறுவது சவாலானது.

DNA என்றால் என்ன?

Deoxyribo Nucleic Acid என்பதன் சுருக்க பதமே DNA ஆகும். மனித உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் தமது கருவினுள் மேற்படி பதார்த்தத்தினை கொண்டிருக்கும். DNA ஆனது சாதரணமாக உமிழ்நீர் மயிர், இரத்தம், என்பு மற்றும் விந்து என்பவற்றில் காணப்படும்.

சாதரணமாக குற்றம் ஒன்று நடைபெறும் பொது மேற்படி பொருட்களின் பரிமாற்றம் பாதிக்கப்பட்ட நபர்,  சந்தேகிக்கப்படும் நபர் அல்லது குற்றவாளி  மற்றும் குற்றம் நடைபெற்ற பிரதேசம் என்பவற்றுக்கிடை யில் பரிமாற்றப்படும். இதன் மூலம் குற்றவாளி அல்லது சந்தேகநபர் ஆனவர் குற்றம் நடைபெற்ற பிரதேசத்துடன் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியான தொடர்பில் இருந்துள்ளார் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படும்.

DNA பரிசோதனை ஏன் தனித்துவமானது?

பின்வரும் காரணஙகளுக்காக DNA பரிசோதனையானது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது

  1. ஒவ்வொரு மனிதர்களும் கொண்டிருக்கும் DNA ஆனது தனித்துவமானது. அதாவது ஒரு மனிதனில் இருக்கும் DNA ஆனது இன்னொரு மனிதனில் காணப்படாது. விதிவிலக்காக ஒத்த இரட்டையரில் (Identical twins) ஒரே மாதிரியான DNA காணப்படும்.
  2. DNA ஆனது வயதுடனோ அல்லது வேறு எந்த செயன்முறை மூலமோ மாற்றம் அடையாது. பிறப்பில் இருந்து இறக்கும் வரை ஒரே வகையான DNA காணப்படும்.
  3. DNA பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் மாதிரி பொருட்களை பல வருடங்களுக்கு இலகுவாக சேமித்து வைத்திருக்க முடியும்.
  4. சில வளர்ச்சி அடைந்த நாடுகளில் அந்நாட்டின் சகல பிரசைகளினதும் DNA ஆனது சேகரித்துவைக்கபட்டிருக்கும் (Combined DNA Index System – CODIS). அத்தரவுகளில் இருந்து குற்றவாளியினை இலகுவாக கண்டுபிடித்து விடலாம் .

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

பாலியல் வல்லுறவு அல்லது வேறு வகையான  பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறும் போது குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குற்றம் நடந்த பிரதேசம் என்பவற்றுக்கிடையில் சாட்சிய பொருட்களான  உமிழ்நீர், மயிர், இரத்தம், என்பு மற்றும் விந்து என்பவற்றின் பரிமாற்றம் நிகழும். DNA பரிசோதனையின் ஆரம்ப கட்டிடமாக சந்தேகநபர் அல்லது குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குற்றம்  நடந்த பிரதேசம் என்பவற்றில் இருந்து மாதிரி பொருட்களை சேகரிக்கவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின்    பிறப்பு உறுப்பு, மலவாசல், கடி காயங்கள், உள்ளாடைகள் மற்றும் விரலின் நகக்கண்  ஆகிய உடற்பகுதிகளில்  இருந்து  மாதிரி பொருட்களை சேகரிக்கவேண்டும்.

மாதிரி பொருட்களை உரிய முறையில், உரிய அளவில் சேகரிக்கவேண்டும்.அத்துடன் மாதிரி பொருட்களை சப்பவம் இடம்பெற்ற பின்பு இயலுமானளவு விரைவாக சேகரிக்கவேண்டும். ஏன்னெனில் மாதிரிபொருட்களின் உள்ள DNA வேறு பொருட்களுடன் கலக்கலாம் அல்லது இயற்கையாகவே அழிந்து போகலாம். மாதிரி பொருட்களை சேகரிக்கும் நபரினது மயிர், எச்சில் போன்றன மாதிரி பொருட்களில் கலக்கா வண்ணம் சேகரிக்கும் நபர் கையுறை, தலைக்கவசம் மற்றும் முகமூடி என்பவற்றை அணிந்துதிருப்பார்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து 72 மணித்தியாலங்களுக்குள் மாதிரிகளை சேகரித்தால் சிறந்த முடிவுகளை பெறமுடியும். 72 மணித்தியாலங்களிற்கு பிறகு சேகரிக்கப்படும் மாதிரிகளில் இருந்து பெறப்படும் முடிவுகள் எதிர்மறையானா முடிவாக இருப்பதற்கு சாத்தியக்கூறு கூட உண்டு. மாதிரி பொருட்களில் உள்ள DNA ஆனது வெப்பம் மற்றும் ஈரலிப்பு என்பவற்றால் அழிவடைந்து போகும் . எனவே இம்மாதிரி பொருட்கள் உலர்த்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மிகமிக சிறிதளவு DNA கிடைத்தாலும் நவீன தொழில் நுட்ப உதவிமூலம் (Polymerase Chain Reaction – PCR) எமக்கு தேவையான DNA இணை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் DNA ஆனது குற்றவாளியிடம் அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து பெறப்படும் DNA உடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு உண்மையான குற்றவாளி இனம்காணப்படுவர்.

இலங்கைல் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் (Section 122 of CPC amended by 14 of 2005 and Section 45 of the Evidence Ordinance) DNA சான்றானது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் இவ்வாறு DNA தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கோகண்டர வழக்கு, நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கு மற்றும் சிறுமி சேயா கொலை வழக்கு என்பவற்றை குறிப்பிடலாம். கூட்டு பாலியல் வல்லுறவு நடைபெறும் போதும், பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை என்று தெரியாதபோதும் DNA பரிசோதனை மூலம் குற்றவாளிகளை இலகுவாக இனம் காணலாம்.

DNA பரிசோதனையின் வெற்றியானது மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்ட நேரம், முறை, கழஞ்சிய படுத்தப்பட்ட முறை, பரிமாற்றம் செய்யப்பட்ட முறை (chain of custody) மற்றும் சேகரிப்பவரின் அனுபவம், திறமை என்பவற்றில் தங்கி உள்ளது.

 

காப்பாற்ற குதித்தவனும் மாண்ட கதை

அது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம். அவனின் தொழில் வீடு வீடாக சென்று மண்ணெண்ணெய்யில் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் கிணறுகளை துப்பரவாக்கி இறைத்து கொடுப்பதே. அவனுக்கு உதவியாள் என்று யாரும் இல்லை. போகும் இடத்தில் யாரையாவது உதவிக்கு அழைப்பான். அன்றும் வழமைபோலவே மாலைவேளை   70 அடி ஆழமான அக்கிணற்றினை இறைக்க ஆயத்தமாகினான். அக்காலப்பகுதி  சித்திரை மாதம் என்பதால் பெய்த சிறுமழையினால் கிணற்றில் கணிசமான அளவு நீர் நிறைந்து இருந்தது. அவனது மண்ணெண்ணெய்யில் வேலை செய்யும் இயந்திரதின் வலு நீரினை மேலிழுத்து இறைக்க போதாதது. அதனால் ஏறத்தாழ நடுவில் 30 அடி  ஆழத்தில் சீமெந்தினால் செய்யப்பட்டுள்ள தட்டு ஒன்று உள்ளது அதில் நீர் இறைக்கும் இயந்திரத்தினை இறக்கி அதனை இயக்கி தனது வேலையை ஆரம்பித்தான். அயலில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். ஏறத்தாழ நீர்முழுவதும் இறைத்து முடியும் நிலையில் இறங்கி கிணற்றினை சுத்த படுத்த தொடங்கினான். மேலே நின்ற  இளைஞன் ஒருவன் குப்பைகளை அள்ளி உதவி புரிந்தவண்ணம் இருந்தான். தீடீரென்று கிணற்றில் உள்ளே வேலைசெய்த வண்ணம் இருந்த நபர் வலிப்பு மாதிரி வந்த நிலையில் மயங்கி வீழ்கின்றான். அதனை தொடர்ந்து உதவி செய்த இளைஞன் கிணற்றின் உள்ளே இறங்குகின்றான். வீழ்ந்து கிடந்தவனை தூக்கி நிறுத்திய படி சொன்னான். தனக்கும் மயக்கம் மாதிரி வருகின்றது என்று சிலவினாடிகள் தான் தாமதம் இருவரும் தடாலடியாக மீண்டும் வீழ்ந்தனர்.  மேலே நின்றவர்கள் செய்வதறியாது கத்தினார்கள். அவர்களில் ஒருவன் மேலே இருந்து நீரினை ஊற்றி இயங்கிய வண்ணம் இருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தினை நிற்பாட்டினார்கள்.

ஏறத்தாழ 30 நிமிடங்களின் பின்னர் அவர்களின் உடலையே மேலே கொண்டுவர முடிந்தது. உறவினர்களிடம் விபரங்களினை பெற்ற பின்னர் உடற் கூராய்வு பரிசோதனையினை மேற்கொண்டேன்.  அவர்களின் சொண்டின் உள் பகுதி சிவந்திருந்தது. இரத்தமும் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது. அவர்களில் உயிர் ஆபத்தினை ஏற்படுத்த கூடிய காயங்கள் ஏதும் இல்லை. அவர்கள் இருவருமே இள வயதினர் என்பதினால் மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைகளும் காணப்படவில்லை. மேலும் நீரில் மூழ்கி இறந்தமைக்கான சான்றுகளும் இல்லை. இந்நிலையில் அவர்களின் இரத்தம் மற்றும் ஏனைய அவசியமானவற்றினை மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பகுப்பு ஆய்வு திணைக்களத்திற்கு அனுப்பினேன். முடிவில் அவர்களின் இரத்தத்தில் கார்பன் மொனோக்சைட்டு (Carbon monoxide) வாயு அளவுக்கு மீறி கலந்து இருப்பதாக முடிவு வந்திருந்தது.

கார்பன் மொனோக்சைட்டு வாயு ஆனது பொதுவாக குறை தகனம் நிகழும் பொழுது வாகனகளில் இருந்து வெளியேறும் ஓர் மணம், நிறம் அற்ற வாயு ஆகும். இது ஓர் சுவாசிக்க தகுந்த அல்லாத ஓர் நச்சு வாயு ஆகும். இது சாதாரணமாக வழிமணடலத்தில் இருந்து நாம் உள்ளெடுக்கும் ஒக்சிசன் விட இது 200 மடங்கு எமது இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறத்திற்கு காரணமான ஈமோகுளோபினுடன் நிரந்தரமாக இணையும் திறன் உள்ளது. இதன் காரணமாக  ஒக்சிசன் எமது உடலில் உள்ள அங்கங்களுக்கு கடத்தப்படாது. இதன்காரணமாக மூளை மற்றும் இருதயம் ஆகியன இறக்கும் அதனை தொடர்ந்து அம்மனிதனும் இறப்பான்.

முக்கியமாக நீர் இறைக்கும் இயந்திரத்தினை வைத்திருந்த நபரின் உறவினர்கள் என்னிடம் கேட்டார்கள் முன்பும் இவ்வாறன சந்தர்ப்பங்களில் அவர் நீர் இறைப்பு வேலை செய்தது உண்டு. அவ்வாறு இருக்க ஏன் அன்று இத்துயர சம்பவம் நடைபெற்றது? என்று நான் அவர்களுக்கு பின்வருவனவற்றினை விளங்க படுத்தினேன்.

  1. இயந்திரத்தில் குறை தகனம் இயங்க ஆரம்பித்த உடனேயே நடைபெறாது. விதிவிலக்காக காபறேற்றில் பழுது இருந்தால் குறைதகனம் நடைபெறும்.
  2. இயந்திரம் நீண்ட நேரம் அதிக பளுவுடன் வேலை செய்யும் பொழுது குறைதகனம் நடைபெறும்.
  3. இயந்திரம் இயங்குவதற்கான ஒக்சிசன் கிணற்றின் ஆளப்பகுதியில் குறைவாக காணப்படும்பொழுது இயந்திரத்தில் குறை தகனம் நிகழும் சாத்தியக்கூறு அதிகம்.
  4. கிணற்றின் ஆளப்பகுதியில் ஒக்சிசன் குறைவாக காணப்படும்பொழுது கார்பன் மொனோக்சைட்டு வாயுவின் பாதிப்பு அதிகம்.
  5. மேலும் குறைதகனத்தின் பொழுது கார்பன் மொனோக்சைட்டு தவிர வேறு பல மனித சுவாசத்திற்கு உதவாத வாயுக்களும் வெளியேறி அவ்விருவரின் மரணத்தினையும் துரித படுத்தி இருக்கும்.
  6. மேலும் ஆழ் கிணறுகளில் மனிதனின் சுவாசத்திற்கு உதவாத மீதேன், கார்பன் டயோக்சிட் .. போன்ற வாயுக்கள் அதிகளவில் தேங்கி நிற்பதுவும் இத்தகைய மரணங்கள் ஏற்பட ஏதுவாகின்றது.

wp-15841865674796858912672646381447.jpg

நவீன காலத்தில் வலு கூடிய நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றின் வெளியில் வைத்தது பாவிப்பதன் மூலம் அல்லது நீரினுள்ளும் (Submersible water pump)  மின்சாரத்தினால் வேலை செய்யும் நீர் இறைக்கும் இயந்திரங்களை பாவிப்பதன் மூலம் இவ்வாறான அநியாய உயிரிழப்புகளை தடுக்கலாம்.

                                                              முற்றும்

சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

இலங்கையில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இறப்பின் பின்னர் உடற் கூராய்வு பரிசோதனை சட்ட வைத்தியர்களினால் நடாத்தப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்த நபரின் உறவினர்களுக்கு சட்ட வைத்தியரிடம் இருந்து எவ்வாறன தகவல்களை பெறலாம் என்பது தெரிவதில்லை. அவற்றினை தெளிவுபடுத்தும் நோக்குடன் இப்பதிவானது வெளியிடப்படுகின்றது.

  1. அவரின் மரணத்திற்கான காரணம் (Cause of dead) என்ன?
  2. மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்ன?
  3. மரணம் ஏற்பட்ட அண்ணளவான காலப்பகுதி (Time since dead) என்ன?
  4. காயத்தினால் ஏற்பட்ட மரணம் எனில் காயம் ஏற்படட பின்பு எவ்வளவு உயிர் வாழ்ந்தார் (Period of survival)?
  5.  அவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் எத்தனை?
  6. எவ்வகையான காயங்கள்(type of injuries) காணப்பட்டன?
  7. உடலில் எப்பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன?
  8. உடலின் உள் அங்கங்களில் காயங்கள்(internal injuries) காணப்பட்டனவா? எவ்வங்களில் காணப்பட்டன?
  9. கழுத்து, தலை, நெஞ்சு மற்றும் விதைப்பை ஆகியவற்றில் காணப்படட காயங்கள் யாவை? ஆண்களில் விதைப்பையில் காயம் காணப்பட்டதா என்று ஏன் விசாரிக்கவேண்டும் எனில் சில சந்தர்ப்பங்களில் விதைபையில் தாக்கும் பொழுது குறித்த நபர் மயக்கமடைவர் (Vasovagal syncope) அதன் பின்பு அவரினை அவர்கள் தூக்கில் தொங்கவிட்டு குறித்த நபர் தற்கொலை செய்ததாக சொல்வார்கள்
  10. மூளையில் எதாவது இரத்த கசிவு இருந்ததா (stroke) ?
  11. இருதயத்தின் முடியுரு இரத்த நாடியில் கொலெஸ்ட்ரோல் அடைப்பு (Coronary artery atherosclerosis) இருந்ததா? அது இறப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததா (Is it significant to cause to dead?) ? முக்கியமாக 70% விட அதிகமாக கொலஸ்ட்ரால் அடைப்பு இருக்கும் பட்சத்திலேயே மரணம் சம்பவிக்கும் சாத்தியக்கூறு அதிகம்
  12. இருதயத்தின் வால்வுகள் (Valves conditions – ? stenosis/ prolapse) என்ன நிலையில் இருந்தது? முக்கியமாக பலர் தவறாக புரிந்து கொண்டுள்ள விடயம் யாதெனில் இருதயத்தின் வால்வில் வரும் நோய்களுக்கும் (stenosis/ prolapse) முடியுரு குருதி நாடிகளில் வரும் கொலெஸ்ட்ரோல் அடைப்பு ஒன்று என்பதே
  13. உடலின் ஏனைய உள் அங்கங்களில் காணப்பட்ட இறப்பை ஏற்படுத்தும் நிலையில் காணப்படட நோய் நிலைமைகள் யாவை (Other significant pathological conditions)?
  14. என்ன மாதிரிகள் (இரத்தம், இரைப்பையின் உள்ளடக்கம், உடல் அங்கங்கள் ..) உடலில் இருந்து மேலதிக பரிசோதனைகளுக்காக (toxicological and histo pathological analysis) எடுக்கப் பட்டன? சில சமயத்தவர்  இப்பரிசோதனைகள் முடிந்த பின்பு இவ்வாறு பெறப்பட்டவரை மீள பெற்று உரிய சமய சடங்குகளை செய்வர் . அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு.
  15. அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (government analyst department and Medical research institute) போன்றவற்றிக்கு அனுப்பப்பட்ட  மாதிரிகள் யாவை? என்ன பரிசோதனைக்காக அனுப்பட்டன?
  16. அவரின் இரைப்பை , குடல் ஆகியவற்றில் இருந்த நஞ்சு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் பற்றிய விபரங்கள் யாவை ?
  17. பலசமயங்களில் வைத்திய தவறுகள் காரணமாக இறப்புகள் ஏற்படுகின்றன. உறவினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறையில் திருப்தி இல்லாவிடில் அவர்கள் இது பற்றி சட்ட வைத்திய அதிகாரி இடம் வினவலாம். குறிப்பாக அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள், ஏற்பட்ட பிரதிகூலமான விளைவுகள் (Complications) யாவை? இறந்தவரினை வேறு வசதியுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்து இருப்பாரா? போன்றவற்றினை தயக்கம் இன்றி கேட்கலாம்
  18. சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நீரிழிவு, இருதய நோய் போன்ற நோயநிலைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் விபத்தினால் அல்லது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமை ஏற்பட்ட காயம் காரணமாக தீவிரமடைந்து இறப்பு ஏற்படும். இவ்வாறன நிலைமைகளில் எதனால் மரணம் ஏற்பட்டது என்று (காயத்தினாலா/ ஏற்கனவே உள்ள நோயினாலா) சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும்.

மேற்கூறப்பட்டவற்றினை தவிர அவரின் இறப்பு சம்மந்தமாக உறவினர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் என்பவற்றினை  தயக்கம் இன்றி கேட்கலாம். கேட்கப்படும் கேள்விகளும் விடைகளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப   வேறுபடும் (case specific).

இலங்கையில் மீட்கப்பெற்ற எலும்பு கூடுகளை அடையாளம் காண்பது சாத்தியமா?

அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகளின் மூலம் பல நூற்றுக்கணக்கான மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மக்களின் முன்னால் உள்ள இது தொடர்பான  பல கேள்விகளில் பிரதானமானதும் முக்கியமானதுமான கேள்வி யாதெனில் இவ்  எலும்பு கூடுகளுக்கு உரியவர்கள் இனம் காணப்படுவார்களா? அதாவது இவ்வாறு எலும்பு கூடாக உள்ளவர்கள் யார்? என்பதே. எவ்வெலும்பு கூடுகளை அடையாளம் காண்பது என்பது சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரணமாக சட்ட மருத்துவத்தில் இவ்வாறு கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகள்  இருவிதமான அடையாள படுத்தலுக்கு உட்படுத்த படுகின்றது. அவையாவன

  1. பொதுவான அடையாளம் காணல் (Tentative identification)
  2. தனித்துவமான அடையாளம் காணல் (Specific/positive identification)

பொதுவான அடையாளம் காணல்

பொதுவான அடையாளம் காணலில் கிடைத்த எலும்பு கூடுகளில் இருந்து அவற்றின் மண்டையோடு,தாடை எலும்பு , இடுப்பு வளையம்  மற்றும் ஏனைய எலும்புகளின் உருவ தோற்றமைப்புகளை (Antropological and morphological measurements) ஆராய்ந்து ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ள இயல்புகளுடன் ஓப்பிட்டு ஆராய்வதன் (Comparative analysis) மூலம் அவ்வெலும்பு கூட்டிற்கு உரியவரின் பால்(ஆண் /பெண்), வயது, உயரம் மற்றும் இனம் என்பன கண்டறியப்படும். இங்கு இனம் என்பது மனிதனில் உள்ள பின்வரும் உபஇனங்களை கூறிக்கும்

  • Caucasoid (White) race.
  • Negroid (Black) race.
  • Mongoloid (Oriental/ Amerindian) race.

சில சந்தர்ப்பங்களில் கிடைத்த எலும்புக்கூட்டில் அம்மனிதன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள், எலும்பு முறிவுக்கு செய்ய பட்ட சத்திர சிகிச்சையின் பொழுது வைக்க பட்ட உலோக தகடுகல்  மற்றும் ஆணிகளின் விபரங்கள், பற்களுக்கு அளிக்க பட்ட சத்திர சிகிச்சைகளின் விபரங்கள் முக்கியமாக பிடுங்க பட்ட , நாட்டப்பட்ட பற்களின் விபரங்கள் என்பவற்றினை ஓப்பிட்டு நோக்குவதன் மூலம் அவ்வெலும்பு  கூடுகள் யாராக இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வரலாம் . ஓரே விதமான சிகிச்சையினை பல மனிதர்களுக்கு அளிக்க படுவதனால் இவ்வாறு அடையாளம் காண்பதுவும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிக்கும். மேலும் இங்கு பால், வயது, உயரம் மற்றும் இனம் என்பன சரியாக கணிக்கப்பட்டாலும்  ஒரு குறித்த சமூகத்தில் பல மனிதர்கள் ஒரே வயது, பால்  மற்றும் உயரம் என்பதை கொண்டிருப்பதால், ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளம் காணமுடியாது. எனவே இவ்வாறு பல மனித எலும்புக்கூடுகள் அல்லது மனித உடல்கள் ஒரே சமயத்தில் மீட்கப்படும் பொழுது நாம் அவற்றிற்குரிய மனிதர்களை அடையாளம் காண தனித்துவமான அடையாளம் காணும் முறைகளை பிரயோகிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுவான அடையாளம் காணலுக்கு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் தரவுகள் (Missing persons data) பெருமளவில் தேவைப்படும். அதாவது இங்கு தரவு என்று குறிப்பிடும் பொழுது அவர்களின் வயது, பால், உயரம், கடைசியாக அணிந்து இருந்த ஆடைகள், ஆபரணங்கள் பற்றிய விபரம், அவர்களுக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பற்றிய விபரங்கள், அவர்களுக்கு இருந்த நோய்கள் பற்றிய விபரங்கள் ….போன்ற விபரங்கள் ஆகும். இவ்விபரங்களை கிடைத்த எலும்பு கூடுகளின் விபரங்களுடன் ஓப்பிட்டே பொதுவான அடையாளம் காணப்படும். அதன் பின்னரே தனித்துவமான அடையாளம் காணப்படும்.

இலங்கையில் இவ்வாறு காணாமல் போனோரின் தரவுகள் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அராசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சில நிறுவனங்களிடம் இருந்தாலும் அது முழுமை பெறாத ஒன்றே.

மேலும் போர் நிறைவடைந்து ஏறத்தாழ 10 வருடங்கள் கழிந்த நிலையில் பல காணாமல் போனோரின் நெருங்கிய உறவினர்கள் தமது சொந்தங்களை தேடியே இறந்து விட்டார்கள் இதனால் இனிவரும் காலங்களில் காணாமல் போனோரின் மிகச்சரியான அடையாளம்காணலுக்குரிய தரவுகளை பெறுவது எட்டா கனியே. மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பயம் காரணமாக சரியான தகவல்களை வெளியிட தயங்குவார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

தனித்துவமான அடையாளம் காணல்

மனிதர்களில் தனித்துவமான அடையாளம் காணும் முறைகளாக பின்வரும் முறைகளை FBI, Interpol போன்ற பிரபல்யமான புலனாய்வு நிறுவனங்கள் கருதுகின்றன

  1. கைரேகை மூலம் அடையாளம் காணும் முறை
  2. பற்களின் தனித்துவமான அமைப்பு மூலம் முறை
  3. DNA மூலம் அடையாளம் காணும் முறை

இவற்றில் DNA மூலம் அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்தது. மேலும் இங்கு  காணாமல் போனோரின் உறவுகள் இறந்தமையாலும் மற்றும் வெளிநாடு சென்றமையாலும் உரிய DNA மாதிரிகளை பெறுவதும் கடினமே. ஓட்டு மொத்தத்தில் கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகளுக்கு பொதுவான மற்றும் தனித்துவமான அடையாளம்காணலை மேற்கொள்வது என்பது கடினமானதே.

மனித புதைகுழிகள் ஆராயப்படவேண்டுமா?

தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒருசில தோண்ட படுகின்றன. யுத்தம் நிலவிய பிரதேசங்களில் இவ்வாறு புதைகுழிகள் கண்டுபிடிக்க படுகின்றமை உலக வழமையே.  பெரும்பாலான மக்களிற்கு இவை ஏன் தோண்டப்படவேண்டும்? இவை தொடர்பாக ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும்? யார் யார் இவற்றில் ஈடுபடுகின்றனர்? இவ்ஆராய்ச்சியினால் என்ன பிரயோசனம் போன்ற விடயங்கள் தெளிவாக தெரிவதில்லை. அவற்றினை சிறிதளவாவது தெளிவுபடுத்தும் நோக்குடன் இது எழுதப்படுகின்றது. இங்கு மனித புதைகுழி என்பது பொதுவாக போர்  அல்லது  இயற்கை அனர்தங்களினால் இறந்த பல மனிதர்களின் உடல்கள் புதைக்கபட்டுள்ள இடமாகும். நடந்த சம்பங்கள் தொடர்பாக இணையதத்தளங்கள் மற்றும் முகநூல் பதிவுகளில் வந்ததினை  இங்கு நினைவு கூறலாம்

  1. போர் உக்கிரமாக நடந்த போர்முனையில் ஒருசில மனித எலும்பு கூடுகள் மீட்க படுகின்றன. அவை எவ்விதமான அடையாளம் காணலும் இன்றி அதேயிடத்தில் வைத்து எரித்து அழிக்கபடுகின்றன (இணையதத்தள செய்தி).
  2. வடமாகாணத்தின் ஒரு பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தின் கட்டுமான வேலை நடைபெற்ற பொது ஒருசில மனித எலும்பு கூடுகள் அத்திவாரம் தோண்டப்பட்ட பொழுது வெளிவந்தன.  மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தம்காரணமாக அவை அப்படியே போடப்பட்டு அதன் மேல் கலாச்சார மண்டபம் எழுப்பபட்டுள்ளது. இவ்வாறே மன்னாரிலும் தேவாலயம் ஒன்றின் புனரமைப்பின் பொழுதும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பொழுதும் பொறுப்பான குருவானவர் அதனை மூடிமறைத்து தேவாலய கட்டுமான பணியினை முன்னெடுத்து முடித்துள்ளார் (இணையதத்தள செய்தி)
  3. அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் தீவகத்தில் பல கிணறுகளில் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்(இணையதத்தள செய்தி).
  4. ஒரு அரசியல்வாதி தனது முகநூல் பதிவில் மனித புதைகுழிகளினை ஆராய்வதன் மூலம் நாம் “இனப்படுகொலை” யினை நிரூபிக்க முடியாது என்ற தொனிப்பட கருத்து தெரிவித்து இருந்தார்.
  5. ஒரு ஆசிரியர் தனது முகநூல் பதிவில் மனித புதைகுழிகளினை தோண்டுவதால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனவும் அது இறந்த மனிதர்களை மேலும் அவமரியாதைக்கு உட்படுத்தும் செயல் என விபரித்து இருந்தார்.

உண்மையில் புதைகுழிகள் தோண்டி ஆராய வேண்டுமா என்று யாரவது கேட்டால், நிச்சயமான பதில் “ஆம்” என்பதே ஆகும். புதைகுழிகள் யாரால் உண்டாகியவை , எக்காலப்பகுதியில் உண்டாகியவை, பாதிக்கப்பட்ட நபர்கள் யார் போன்ற அரசியல் இலாபம் தரும் விடயங்களை கருத்தில் கொள்ளாது மனித புதைகுழிகள் யாவும் பின்வரும் காரணங்களுக்காக விரிவாக ஆராயப்படவேண்டியவை.

  1. இறந்த மனிதர்களை மரியாதை செய்வதற்காக, அவர்கள் மிருகங்களிலும் கேவலமாகவே கொல்லப்பட்டு எவ்விதமான சமய சடங்குகளும் இன்றி புதைக்கப்படார்கள். அவர்களின் உறவினர்களுக்கு இறந்த தமது உறவினர்களை தமது சமய மற்றும் கலாச்சார முறைப்படி உரிய மரியாதை செய்வதற்கு சகல உரிமைகளும் உண்டு.
  2. இன்று அணுஅணுவாக வேதனைகளை அனுபவித்த வண்ணம் தமது உறவுகளை கண்டு பிடித்து தரும்படி வேண்டுகோள் விடுக்கும் காணாமல் ஆக்கப்படோரின் உறவினர்களுக்கு  இவ்வாறன நிலையில் எவ்விதமான விசாரணைகளும்  இன்றி மரண சான்றிதழ் அல்லது காணாமல் ஆக்க பட்டோர் சான்றிதழ் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை அல்ல. எனவே இவ்வாறன நிலையில்  புதைகுழி ஆராய்ச்சி அவசியம்.
  3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தம் உறவுகள் ஏன் இறந்தார்கள்? எவ்வாறு இறந்தார்கள்? அவர்கள் செய்த குற்றம் என்ன? … போன்றவற்றினை அறிவதற்கு முழு உரிமையும் உண்டு.
  4. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தம் உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது இறந்து விட்டனரா? என்பதை அறிவதற்கு முழு உரிமையும் உண்டு
  5. மனித புதைகுழிகள் மற்றும் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மனித எச்சங்கள் மீடகப்படும் பொழுது அவர்கள் ஏன் இறந்தார்கள் (Cause of dead) என்பதினை போல் அவர்கள் யார் (Identification) என்பதுவும் மிக முக்கியமானது.
  6. இறப்பு சான்றிதழினை பெற, இதன்மூலமே இறந்தவரின் வங்கி கணக்கினை மூடி மீதமுள்ள பணத்தினை பெறலாம் மேலும் காப்புறுதி , மாதாந்த வேதனம் என்பவற்றினை பெறலாம்.
  7. இறப்பு சான்றிதழினை பெற்ற பின்னரே பரம்பரை சொத்துக்களை உறவினர்களுக்குக்கிடையே பிரித்து கொள்ளலாம்.
  8. இவற்றினை தாண்டிய மிக முக்கியமான விடயம்தான் இப்படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் ஆகும். 

கார்பன் டேட்டிங் என்றால் என்ன?

கார்பன் டேட்டிங் (கதிரியக்கக் கார்பன்  காலக்கணிப்பு/ ரேடியோ கார்போன் டேட்டிங்/ Radio Carbon Dating) என்றால் என்ன?

How-Does-Carbon-Dating-Work

சாதாரணமாக மனித புதைகுழிகளில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்படும் பொழுது அம்மனிதர்கள் எக்காலத்தில் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டார்கள் என்பதினை கண்டறிய நாடாத்த படும் ஒரு பரிசோதனையே கார்பன் டேட்டிங் ஆகும். சாதாரணமாக உலகத்தில் உள்ள ஒவ்வொரு முலகத்திர்ற்கும் சமதானி உண்டு அவ்வாறே கார்பன் மூலகத்திர்ற்கும் 14/6C என்றகதிரியக்கமுடைய (Radioactive) சமதானி உண்டு. இச்சமதானியே டேட்டிங் இல் பயன்படுவதால் இச்செயறபாடு ரேடியோ கார்பன் டேட்டிங் (கதிரியக்கக் கார்பன்  காலக்கணிப்பு)  என்றழைக்கப்படும்.

கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு நுட்பம், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி என்பவராலும் அவரது உடன்பணியாளர்களினாலும் 1949 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மாற்றீடு செய்யப்படக்கூடிய கார்பன் -14 (14C) இன் சீரான கதிரியக்கச் செறிவு (steady state radioactivity concentration), ஒரு கிராம் கரிமத்தில், ஒரு நிமிடத்துக்கு 14 அழிவுகளாக இருக்கும் எனக் கணிப்பிட்டார். 1960 ஆம் ஆண்டில், கரிமம்-14 (14C) காலக் கணிப்பு முறைக்காக லிப்பிக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

 கார்பனுக்கு நிலையான, கதிரியக்கமற்ற இரண்டு சமதானி உண்டு (கார்பன் -12 (12C), கார்பன் -13 (13C)). அத்துடன் புவியில் மிகக் குறைந்த அளவிலான கதிரியக்கம் உள்ள கார்பன் -14 (14C) னும் காணப்படுகின்றது. கதிரியக்கம் காரணமாகப் படிப்படியாக அழிகின்ற கார்பன் -14 இன் அரைவாழ்வுக் காலம்  (அதாவது ஒரு மூலகம் கதிரியக்கம் காரணமாக அம்மூலகம்  ஆனது இயற்கையான கதிரியக்கம் காரணமாக அழிவடைந்து அரைவாசியாக மாற எடுக்கும் காலம் ஆகும்)  5730 ஆண்டுகளாகும். அண்டக் கதிர்கள், வளிமண்டலத்தில் உள்ள நைதரசன் மீது தாக்கிப் புதிதாகக் கார்பன் -14 அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நிகழாவிட்டால், கார்பன் -14 எப்பொழுதோ முற்றாக அழிந்துபோயிருக்கும்.

கார்பனுக்கு 14C என்கிற ஒரு கதிரியக்கமுடைய சமதானி  உள்ளது. வளியிலுள்ள நைதரசனுடன் நியூத்திரன் வினைப்பட்டு கார்பன் -14 ஐத் தோற்றுவிக்கிறது.

இந்த தாக்கம் பின்வருமாறு குறிக்கப்படும்:

radiocarbon

இந்த தாக்கதிற்கு தேவையான நியூட்ரான்கள், அண்டக் கதிர்கள் வளிமண்டலத்தையடையும் போது வளிமூலக்கூறுகளில்  தாக்கம் பட்டு பெறப்படுகிறது. இந்த கதிரியக்கமுடைய கார்பன் 14 உயிர்ப்புள்ள மரம், செடிகொடிகளால் ஏற்றுக்கொள்ளபடுகிறது. இது CO2 நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் குறைந்த அளவே இருக்கும் கார்பன் 14 இன் அளவு நாள்கள் செல்லச் செல்ல கூடுகிறது. கதிரியக்கம் காரணமாக இது குறைவு படவும் செய்கிறது. ஒரு நிலையில் கார்பன் 14 இன் அளவு நிலையானதாக, கதிரியக்கச் சமநிலையினை அடைகிறது. ஆனால் இந்த மரம் வெட்டப்பட்டோ அல்லது உயிர் இழந்த நிலையில் கார்பன் 14 லின் அளவு, கதிரியக்கம் காரணமாக குறைந்து கொண்டே இருக்கும். கார்பன் 14 இன் அரை வாழ்நாள் 5600 ஆண்டுகளாகும். அரை வாழ்வு நாள் என்பது 14 கார்பன் ஆனது கதிரியக்கம் காரணமாக தனது தனது ஆரம்ப அளவில் இருந்து சரி அரைவாசி அளவாக மாறுவதற்கு எடுக்கும் காலப்பகுதி ஆகும்

இதனைப் பயன்படுத்தி பழைய மரத்தின் துண்டிலிருந்து அல்லது மனித எலும்பின் பழமையினைக் கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

பயன்படும் நுட்பங்கள்

கார்பன் 14 உள்ளடக்கம் அளவிட பயன்படும் மூன்று முக்கிய நுட்பங்கள் உள்ளன-

  1. Gas proportional counting
  2. Liquid scintillation counting,
  3. Accelerator mass spectrometry.(AMS)

இவற்றில் AMS ஒரு நவீன ரேடியோ கார்பன் டேட்டிங் முறையாகும், இது ரேடியோ கார்பன் உள்ளடங்கிய ஒரு மாதிரியை அளவிடுவதற்கு மிகவும் திறமையான வழி என்று கருதப்படுகிறது.

ரேடியோ கார்பன் டேட்டிற்கான சிறந்த முறையைத் தேர்ந்தெடுப்பது கிடைக்கக்கூடிய மாதிரி அளவைப் பொறுத்தது அல்லது விலையுயர்ந்த பொருட்களின் விஷயத்தில், எவ்வளவு அழிக்கப்பட முடியும் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, AMS, முறையில் மாதிரி பொருளின் ஒரு பகுதி எரிந்து அழியும்.

அணுகுண்டு கார்பன் விளைவு (Bomb carbon effect) என்றால் என்ன?

கார்பன் டேட்டிங் முறையில்     வளிமண்டலத்தில் கார்பன் 14  உலகளாவிய அளவு காலப்போக்கில் மாறவில்லை என்பதே ஒரு அனுமானமாகும். 1950 கள் மற்றும் 1960 களில் அணுசக்தி சோதனை காரணமாக  1965 ஆம் ஆண்டின் மொத்த அளவிலான வளிமண்டல கார்பன் 14 உள்ளடக்கத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டது. 1963 மற்றும் 1965 ஆண்டுகளுக்கு இடையில் குவாண்டம் கார்பன் அளவு 100% அதிகமாக இருந்தது. வடக்கு அரைக்கோளம் 1963 இலும், தெற்கு அரைக்கோளம் 1965 இலும் 14 கார்பன் உச்சநிலையை அடைந்தது. இந்த நிகழ்வு பொதுவாக குண்டு விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.

இப்போதெல்லாம் விஞ்ஞானிகள் காலவரையறையை தங்கள் ரேடியோ கார்பன் ஆண்டு முடிவுகளை காலண்டர் ஆண்டாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் கார்பன் 14 உலகளாவிய அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்து கொள்கின்றார்கள், இதில் ஒன்று அணு ஆயுத சோதனை ஆகும். இதன் மூலம் மனித எலும்பு மாதிரி பொருள் புதைக்கப்பட்ட காலப்பகுதியினை மிக தெளிவாக மற்றும் குறிப்பாக (more accuracy) அறிந்து கொள்ளலாம்.

புதைகுழி மர்மத்தின் முடிச்சு அவிழ வேண்டுமெனில் முதலில் அறியப்பட வேண்டியது இவ் என்புகள் எப்போது புதைக்க பட்டவை என்பதாகும். அதற்கு உள்ள ஒரே முறை  ரேடியோ கார்போன் டேட்டிங் முறையாகும் இது செய்யப்படாமல் ஊகங்கள் அடிப்படையில் கதைப்பது ஆரோக்கியமானது இல்லை.

அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயும்..

 இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள்
• இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
• இன்றுவரைக்கும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
• வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• ஏறத்தாழ 8000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர்.
• இந்நோயானது வடமத்திய மாகாணம், ஊவாமாகாணம், வடமேல் மாகாணம், கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி, வவுனியா மாவட்டத்தின் தென்பகுதி மற்றும் அம்பாந்தோட்டை என்பவற்றை பாதித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் என்றால் என்ன?
அளவுக்கு அதிகமான உரப்பாவனை, பீடை கொல்லிப்பாவனை நடைபெறும் பிரதேசங்களில் உள்ள மக்கள் அங்குள்ள நீர்நிலைகளை தமது அன்றாட தேவைகளிற்காக பயன்படுத்தும் போது, நீண்ட காலப் போக்கில் அவர்களது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சிறிது சிறிதாக நிறுத்திக் கொள்ளல் ஆகும்.
வழமையாக இந்நோயானது உயர் குருதி அழுத்தம், சலரோகம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களையே அதிகம் தாக்கும். ஆனால் விவசாயிகளில் காணப்படும் இந்நோயானது அவர்களிற்கு வேறு எந்த நோய்களும் இல்லாத பட்சத்திலேயே ஏற்படுகின்றது. (chronic kidney diseases of multi-factorial origin) or (chronic kidney disease of unknown etiology -CKDu.) இந்நோயானது ஏற்படுவதற்க அச்சூழலில் காணப்படுமு; பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்க செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும்.

இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து கூடியவர்கள்

• இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள்.
•விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள்
• சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள்.
• குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள்
• கடினத்தன்மையான (Hardness of the water) நீரினை அருந்தும் மக்கள்.
• கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள்.
• இந்நோயானது 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.
• பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும்.
• இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள்.

விவசாயிகளுக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

1. ஆசனிக்கு, கட்டியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல்
மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன.
அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம்
குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்டியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆ) உணவுச்சங்கிலி மூலம்
நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும்.

2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல்
சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (Neonicotinoids) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும்.
குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும்.
உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது.

3. களை கொல்லிகள் ((Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால்
புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது.

முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது.

4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water)
உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது.

மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன.
• கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை
• உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை
• அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen)   போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை.

ஏன் வடமாகாண மக்களாகிய நாம் இந்நோயினையிட்டு  கவலைப்பட வேண்டும்?

1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது.

2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள்.

3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் கடந்த 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும்.

4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழகை;கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும்.

5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீருக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம்.

6. கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen)  போன்ற (NSAIDs) வலி நிவாரணிகளை  வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும்.
7. போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் வடமாகாணம் ஆனது விவசாயத்தில் தன்னிறைவ பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் மரக்கறிவகைகள், பழவகைகள் வெளி மாகாணங்களில் இருந்து கொண்டு வரப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது தக்காளி, கோவா, உருளைக் கிழங்கு முதலான மரக்கறிகள் பிரதானமாக தம்புள்ள சந்தையில் இருந்தே கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. தம்புள்ள என்பது வடமத்திய மாகாணத்தில் உள்ள பிரபல்யமான மரக்கறி கொள்வனவு செய்யப்படும் இடம் ஆகும். இங்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள் பொரும்பாலும் அம்மாகணத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இம் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படடுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும்.

உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் :

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன.
1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல்.
2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல்.
3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்கு பதிலாக இயற்கயான முறைகள் மூலம் அல்லது உயி ரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல்.
4) விவசாயிகளுக்கு போதிய அறிவூட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினி களை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல்.
குறிப்பாக வடமாகாண சபையின் விவசாய அமைச்சு மற்றும் சுகாதார அமைச்ச என்பவை இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். உள்ளுரில் இயற்கையான பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைக் மற்றும் பழவகைகளின் விற்பனையை ஊக்குவித்தல்.

 

உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணாதே…

அன்று விடுமுறை தினம் என்பதால் வைத்தியசாலை செல்லவில்லை. அன்று மாலை தொடக்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர், வைத்தியசாலை போலீசார் மற்றும் ஏனைய வைத்தியர்கள் பலதடவை எனக்கு தொலைபேசியில் அழைத்து சொன்ன விடயம் “சேர், குடும்பம் ஒன்றின் உணவில் நஞ்சு சேர்க்கப்பட்டுள்ளது, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்” இது சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று. நான் உடனேயே தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர் மற்றும் தாதியர் ஆகியோரினை தொடர்பு கொண்டு அவர்களின் வாந்தி, சிறுநீர் மற்றும் இரத்தம் எனபவற்றினை உரிய முறையில் சேகரிக்க அறிவுறுத்தினேன். அடுத்த நாள் காலையில் வீட்டின் தலைவியிடம் இது சம்பத்தமாக விசாரித்த பொழுது தெரியவந்ததாவது

அவள் மிதி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் தான் வேலை செய்கிறாள். அவள் ஓர் முன்னாள் போராளி என்பதாலும் ஆயுதங்கள் பற்றிய அறிவு போதுமாக இருந்ததும் அவள் இந்த வேலைக்கு இலகுவாக தெரிவுசெய்யப்பட்டாள். அது பங்குனி மாதம் என்பதால் அதிக வெயில். அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்து காலை மற்றும் மதிய உணவுகளை தயார் செய்து வைத்துவிட்டு 5.30 மணிக்கு வேலைக்கு செல்லவேண்டும். இறுதி யுத்தத்தில் கணவன் காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து அவள் தான் குடும்ப சுமையினை சுமந்து வருபவள். முதல் இரு பிள்ளைகளும் பெண் பிள்ளைகள். கடைக்குட்டி 4 வயதுடைய ஆண் பிள்ளை. அவன் மீது அதிக பாசம் அவளுக்கு ஏன்னெனில் அவன் உரிச்சு வைச்சு அவனின் கணவன் அச்சுதான். அன்று அவள் வரும்பொழுது வயதானவர் ஒருவர் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். இவள் எது நல்ல காய் என்று தேடிய பொழுது அவர் ஓர் வெடித்த காயினை எடுத்து கொடுத்து இது முத்திய காய் அதனால் தான் வெடித்து உள்ளது என சிபாரிசு செய்தார். இவளும் அவரிடம் சிறிய வெள்ளரிக்காயினை வாங்கி வந்து பிள்ளைகள் எல்லோருக்கும் ஊட்டிவிட்டாள். மாலையாகியதும் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே வயிற்றோடமும் சத்தியும் ஆரம்பித்தன. அவர்கள் மிக களைத்த நிலையில் அயலவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டார்கள். அவள் கடைக்குட்டிக்கு அதிகளவு ஊட்டியதால் அவன் மிகவும் சோர்வடைந்து இருந்தான்.

அவனது சிறுநீரகம் தற்காலிகமாக செயலிழந்து (Acute Kidney Injury) இருந்தது. குழந்தை வைத்திய நிபுணர் மிக அக்கறையாக சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். நான் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து போலீசாரின் உதவியுடன் அவர்களின் வீடிற்கு சென்றேன். அது ஒரு ஓலையால் வேயப்பட்ட சிறிய வீடு.   அவளின் வீட்டின் சமையலறை சிறிய ஒரு குடில் மட்டுமே. அதனுள் நாய் மற்றும் பூனை என்பன போகாதவாறு தகரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி இலகுவாக உள்ளே செல்வதற்கு பல ஓட்டைகள் இருந்தன. வேறு மனிதர்கள் கூட இலகுவாக உள்நுழையலாம்.

இதன் காரணமாகத்தான் அவள் உணவில் நச்சு கலக்கப்பட்டதாக போலீசில் தெரிவித்து இருந்தாள் என நினைத்தேன். மேலும் அவளின் குடிசையில் இருந்த மீதமிருந்த சமைத்த உணவு பொருட்களின் மீதியினை சேகரித்து இருந்தேன்.

இறுதியாக இவ்வாறு சேகரித்த எல்லாவற்றினையும் உரிய முறையில் சீல் செய்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தேன். ஓரிரு நடிகைள் அவர்களின் அறிக்கையும் வந்தது அதில் அவர்கள் வெள்ளரிக்காயில் கார்போபியூரான் என்ற கொடிய பூச்சி கொல்லி (Carbofuran is one of the most toxic carbamate pesticides) இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

போலீசாரும் வழமையினை விட தீவிரமாக விசாரித்ததன் பலனாக இறுதியில் உரிய விவசாயினை கண்டறிய முடிந்தது. அவன் தான் பழங்களை பிடுங்குவதற்கு முதல் நாள் குறித்த வகையான பூச்சிக்கொல்லி மருந்து விசிறியதினை ஓப்புக்கொண்டார். அவர் மேலும் கூறினார் தான் வெள்ளரிக்காய் வெடித்து இருந்ததினை கவனிக்கவில்லை என்று. இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளினால் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் பாவிக்கபடுவதினால் உணவு நஞ்சாதல் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோவா, லீக்ஸ் போன்ற மரக்கறி வகைகள் இலகுவாக நஞ்சடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றது. எனவே அவற்றினை நுகரும் பொழுது அவதானமாக இருக்க வேண்டும்.

 

கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 7500லிட்டர் தூய எதனோல் அதிரடிப்படையினரால் கலப்படம் செய்யப்பட இருந்த நிலையில் கைப்பெற்ற பட்டது. கடந்த இரு வருடங்களாக திக்கம் வடிசாலையில் உற்பத்தியாகும் பனம் சாராயத்துடன் இவ்வாறு கலப்படம் நடைபெற்றுள்ளதா? என்பதை சந்தேகிக்க இச்சம்பவம் வைத்துள்ளது. சாதாரணமாக பனம் சாராயம் ஆனது கள்ளில் இருந்தே பலபடி முறைகளுக்கூடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. வருடத்தின் குறித்த சில மாதங்களில் கள்ளு உற்பத்தி குறைவாக இருப்பதன் காரணமாக பனம் சாராயம் உற்பத்தி குறைவடையும். இதனால் வாடிக்கையாளரின் நுகர்வுத்தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறான கலப்படம் நடைபெற வாய்ப்புள்ளது. இது  தவிர சாதாரண செயன் முறையின் படி பனம் சாராயத்தினை உற்பத்தி செய்ய அதிகளவு பணம் செலவாகும் (உற்பத்தி செலவு ). ஆனால் செயற்கை முறையில் தூய எதனோலுக்கு நீர் மற்றும் உரிய நிறமூட்டிகள் மற்றும் வாசனை பொருட்களை சேர்த்து உருவாகும் பொழுது  உற்பத்தி செலவு மிக குறைவாகும். இதனால் பெருமளவு இலாபம் கிடைக்கும். உதாரணமாக பனம் சாராயத்தில் எதனொலின் செறிவு 30% எனில் தூய ஒரு லிட்டர் எதனோலில் இருந்து ஏறத்தாழ 33 லிட்டர் பனம் சாராயத்தினை தயாரிக்க முடியும்.  இதனால் பெருமளவு இலாபம் கிடைக்கும்.

 

தூய எதனோல் பின்வரும் வகைகளில் கிடைக்க பெறுகின்றது

  1. 200 Proof Alcohol: Contains 100% Ethanol
  2. 190 Proof Alcohol: Contains 95% Ethanol.
  3. 160 Proof Alcohol: Contains 80% Ethanol.
  4. 140 Proof Alcohol: Contains 70% Ethanol

இவற்றில் நச்சு பொருட்களான மெத்தனால் (கசிப்பு ), அசட்டோன் (acetone ) போன்றன அதிக அளவில் காணப்படும்

இவ்வாறு சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தினை அருந்துவதினால் ஏற்படும் தீங்கான சுகாதார விளைவுகளை நோக்குவோம். சாதாரணமாக அதிக போதையினை உண்டாக்கும் முகமாக இங்கு அதிக செறிவில் (லேபிலில் குறிப்பிட்ட செறிவினை விட ) எதனோல் ஆனது இருக்கும். இதனால் அதிகளவில் வீதி விபத்துகள், அகால மரணங்கள் உண்டாகும். மேலும் சாதாரண மதுபாணத்தினை பாவிப்பவர்களினை விட இவ்வகையான மதுபானத்தினை பாவிப்பவர்கள் குறுகிய காலத்தினுள் ஈரல் அழற்சி போன்ற நீண்ட காலமாக மதுபானம் அருந்துபவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு உள்ளாவர்.

இவற்றுக்கு மேலதிகமாக  இவ்வகையான மதுபானத்தினை பாவிப்பவர்கள் இலகுவில் எதனோல் நஞ்சாதல் (ACUTE ETHANOL TOXICITY) என்ற நோய் நிலைக்கு உட்பட்டு திடீர் என்று மரணமடைவார். சாதாரணமாக இரத்தத்தில் 300mg /dl என்ற அளவினை எதனோல் தாண்டும் பொழுது திடீர் என்று மரணமடைவார்.  இன்றைய காலகட்டதில் நுகர்வோரின் தேவையினை ஈடுசெய்யும் முகமாக பல மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் செயற்கையாக எதனோலினை பயன்படுத்தியே மதுபானத்தினை உற்பத்தி செய்கின்றனர் பெரும்பாலும் இவர்கள் சிறந்த நியம அளவினை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறைவாக இருக்கும். மாறாக எவ்வித நியம அளவும் இல்லாமல் கைக்கணக்கில் கலப்படம் செய்தால் ஏற்படும் தீங்கான விளைவுகளும் அதிக அளவில் இருக்கும்.