கணவன் மனைவியை பல தடவைகள் கத்தியால் குத்தியது ஏன்?

அன்மையில் நடந்த ஓர் கொலைச்சம்பவம் ஒன்றில் கணவன் மனைவியை 15 தடவைகள் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்தார். இவ்வாறாக நடைபெற்ற சம்பவங்களில் எம்மனதில் ஏன் இவ்வாறு ஒருவர் பலமுறை குத்தி அல்லது வெட்டி கொலை செய்யவேண்டும்? என்ற வினா மனதில் எழும். சாதாரணமாக இவ்வாறான குற்ற சம்பவங்களில் குற்றவாளியின் மனதில் எழும் பழிவாங்க வேண்டும் என்ற மன உந்துதல் (intention) காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்து செயற்பாடும் (action) மன உந்துதலும் ஒருங்கே நடைபெற்றிருக்க வேண்டும்.

மன உந்துதல் இன்றி நடைபெற்ற குற்ற சம்பவங்கள், குற்ற செயல்களாக கருதப்படுவதில்லை அத்துடன் தண்டனையும் விதிக்க படுவதில்லை. பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியின் மனநிலை சட்ட மருத்துவ துறை சார்ந்த உளவியல் நிபுணரால் விசேட ஆராயப்படும். மேலும் இவ்வகையான குற்றவாளிகள் சமுதாயத்தில் இருப்பதால் பெரும் தீங்குண்டாகும். இதனால் சமூகத்தின் நன்மை கருதி இவர்கள் வாழ்நாள் முழுவதும் அல்லது அவர்கள் மன நோயில் இருந்து மீளும் வரை மனநல வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

வழக்கு விசாரணையின் பொழுது சட்ட வைத்திய அதிகாரியிடம் குற்றவாளியின் மன உந்துதல் சம்பந்தமாக பல்வேறு கேள்விக்கணைகள் தொடுக்கப்படும். ஓர் சட்ட வைத்திய அதிகாரியானவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இறந்தவரின் உடலில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவார்

  1. வெட்டு அல்லது குத்து காயங்களின் எண்ணிக்கை

குற்றவாளிக்கு மன உந்துதல் அதிகமாயின் காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

  1. வெட்டு அல்லது குத்து காயங்கள் உடலில் காணப்பட்ட பிரதேசங்கள்

குற்றவாளிக்கு மன உந்துதல் அதிகமாயின் காயங்கள் பொதுவாக நெஞ்சு, கழுத்து மற்றும் முகத்தில் காணப்படும். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளினால் ஏற்படும் கொலைகளில் பொதுவாக பெண்களின் அல்லது ஆண்களின் முகம் அதிகளவில் சிதைக்க ப்பட்டிருக்கும்

3. ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் காயத்தினை ஏற்படுத்தியிருத்தல்

உதாரணமாக வெட்டு காயங்கள் மூலமும் துப்பாக்கி சூட்டு மூலமும் மரணத்தினை ஏற்படுத்தியிருத்தல்
4. சில சந்தர்ப்பங்களில் ஒரு நபர் இறந்த பின்பும் குற்றவாளி தீவிர மன உந்துதல் காரணமாக காயங்களை (postmortem injuries) ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது அவரது உடலை துண்டங்களாக வெட்டி (Dismemberment) இருக்கலாம
5. ஒரு நபர் இறந்த பின்பும் குற்றவாளி மன உந்துதல் காரணமாக அவரது உடலை மறைத்து வைத்திருக்கலாம் (surreptitious disposal)

இவ்வாறான விடயங்களின் அடிப்படையிலேயே குற்றவாளியின் மன உந்துதல் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படுகின்றது

போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

நிஜத்திலிருந்து.....'s avatarநிஜத்திலிருந்து.....

அன்று காலை எனது அலுவலக அறையினுள் வெலிக்கடை சிறை காவலர்கள் இருவர் 50 வயது மதிக்கதக்க ஒருவரை கைத்தாங்கலாக தூக்கி வந்து எனக்கு முன்னாள் நிறுத்தினார்கள். என்ன பிரச்சனை என்று விசாரித்த பொழுது அவர்கள் சொன்னார்கள் “இவன் மரணதண்டனை கைதி, இவனுக்கு மெடிக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது”. நான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவனிடம் கேட்டேன் யார் அடித்தார்கள்? என்று அவன் சொன்னான் ஒருவரும் அடிக்கவில்லை. நான்  பயப்படவேண்டாம் என்று சொல்லி மீண்டும் கேட்டேன், யார் அடித்தார்கள்? என்று, அவன் சொன்னான் சேர் ஒருத்தரும் அடிக்கவில்லை. என்னால் நடக்க முடியாது. தயவு செய்து கிட்ட வந்து ஒருக்கா பாருங்கள் என்றான். அவனும் நின்றபடியே தனது சாரத்தினை மெதுவாக அவிழ்த்து காட்டினான். ஒருகணம் நான் திகைத்து விட்டேன். அவனுக்கு இரண்டு பக்கமும் ஹேர்னியா வந்து அவனது விதைப்பை தேங்காய் அளவு வீங்கி இருந்தது. அவன் தொடர்ந்து நடந்ததால் அது தேய்ப்பட்டு புண்ணாகி சீழ் பிடித்து மணத்தது. நான் கேட்டேன் உந்த ஹேர்னியா எவ்வளவு காலமாக இருக்கின்றது என்று? அவன் கூறினான் 6 வருடமாக. மேலும் அவரிடம் தொடந்து வினவிய பொழுது அவர் கூறினார் தான் முன்பு மெனிங்க் மீன் மார்க்கெட்டில் நாளாந்த கூலிக்கு மீன் வெட்டியதாகவும் வழமையாக வேலை முடிந்து வரும் பொழுது அவ் மார்க்கெட்டில் முதலாளியாக இருக்கும் ஒருவரின் முச்சக்கரவண்டியில் வந்து தனது வீட்டிக்கு அருகாமையில் இறங்குவதாகவும் தெரிவித்தார். மேலும்…

View original post 195 more words

ஏன் நாம் மரண தண்டனையினை எதிர்க்க வேண்டும்?

இலங்கை சனாதிபதி கையெழுத்து இட்டதினை தொடர்ந்து அடுத்த வாரம் அளவில் ஒரு சில மரண தண்டனை கைதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் மரணதண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மரணதண்டனைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. இதனால் தான் சர்வதேச நாடுகள் பலவும் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பலவும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பலருக்கு ஏன் நாம் மரண தண்டனையினை எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை. இதற்கு அண்மையில் நடந்த ஓர் சம்பவத்தினை எடுத்துக்கூற விரும்புகின்றேன். கடந்த வருடத்தில் மாவீரர் தினத்தினை ஓட்டி வவுணதீவில் நடைபெற்ற சம்பவத்தில் இரு போலீசார் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் தடுப்பில் வைக்க பட்டார். அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பினை தொடர்ந்து கைது செய்யப் பட்டவர்களில் நடந்த விசாரணைகளின் படி அவர் குற்றம் அற்றவர் என்று விடுதலை செய்ய பட்டுள்ளார். இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழாது விடின் அவர் கொலைக்குற்றவாளி ஆக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது பல வருட சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப் பட்டிருக்கலாம் அல்லது சிறையிலேயே இறந்திருக்கலாம்

இவ்வாறு ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், சட்ட வைத்திய அதிகாரி உரிய சான்று பொருட்களை சேகரிக்காமல் விடலாம் அல்லது நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம், சட்ட தரணி உரிய முறையில் வாதாடாமல் இருக்கலாம், பிரபல குற்றவியல் சட்ட தரணியின் சேவை கிடைக்காமல் விடலாம், மற்றும் சிலவேளைகளில் நீதிபதி உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பு வழங்கலாம்.

இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப் பட்ட வழக்கினை விஞ்ஞான ரீதியில் மீளாய்வு செய்ய வசதிகள் இல்லை, இவ்வாறான நிலையில் பல மனித உயிர்கள் மரணதண்டனை மூலம் பலியாக வாய்ப்புள்ளது. மேலும் மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம்.

போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

 

ஆபத்தான பட்டன் பற்றரி

இன்றைய நவீன காலத்தில் பல சிறிய மின்னணு உபகரணங்கள் மிகச்சிறிய லித்தியம் பற்றரியினால் நெடுங்காலம் இயங்கத்தக்கதாக வடிவமைக்க பட்டுள்ளன. அவற்றில் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் முக்கியமானவை. ஆரம்ப காலத்தில் அளவில் பெரிதாயும் வினைத்திறன் குறைந்ததாயும் இருந்த மின்கலங்கள் தற்பொழுது அளவில் சிறியதாயும் நீண்டகாலம் பாவிக்க கூடியதாயும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்த மூன்று வயது சிறுவனின் தந்தையார் கொழும்பு மாநகரின் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்களை விற்கும் கடை ஒன்றினை நடாத்தி வருபவர். அநேகமாக வாராந்தம் அவரது கடைக்கு வரும் புதிய விளையாட்டு சாதனங்களில் ஒன்றினை வீட்டிற்கு கொண்டு வந்து, அச்சிறுவணிற்கு விளையாட கொடுப்பது வழமை.

மூன்று மாதங்களுக்கு முன்னர் துடிதுடிப்பாக இருந்த சிறுவனுக்கு கடுமையான சளி, காய்ச்சல் வந்தது. அவர்களும் அவனை வழமையாக போகும் அவர்களது குடும்ப வைத்தியரிடம் அழைத்து சென்று மருந்து எடுத்தார்கள். வைத்தியரும்  அவனை பரிசோதித்து விட்டு ஒரு சில மருந்துகளை கொடுத்தார். இரண்டு வாரமாக மருந்து எடுத்தும் அவனது நோய் நிலைமை குறையவில்லை மாறாக நோய் நிலைமை கூடியது.

உணவு அருந்தும் பொழுதும் பால் குடிக்கும் பொழுதும் மற்றும் அவன் கடுமையாக இருமுவான், பலசந்தர்ப்பங்களில் வாந்தியும் எடுப்பான். இவ்வாறு இவனது நிலை நாளுக்கு நாள் மோசமாகியதால் அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். தூரதிஷ்டவசமாக அனுமதிக்கப்பட்ட ஒரிஇரு மணித்தியாலங்களில் அவன் இறந்துவிட்டான்.

JMedSci_2014_34_1_40_129392_f1

அவனது உடலினை உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொண்ட பொழுது தெரியவந்த அதிர்ச்சி தரும் விடயம்  யாதெனில் அவன் விளையாடும் பொழுது அவனது விளையாட்டு சாதனத்தில் இருந்த பட்டன் பற்றியினை விழுங்கி இருந்தான் அது அவனது களத்தில் (Oesophagus) ஒட்டியவாறு இருந்து அதில் துவாரத்தினை (traumatic tracheoesophageal fistula) ஏற்படுத்தி அவனின் சுவாச தொகுதியின் வாதனாளியுடன் தொடர்பு படுத்தியது இதன் காரணமாக அவன் சாப்பிட்ட உணவு மற்றும் பால் போன்ற திரவங்கள் அவனின் சுவாச தொகுதியினுள் சென்று அவனிற்கு நிமோனியா காய்ச்சலினை ஏற்படுத்தி அவனிற்கு இறப்பினை ஏற்படுத்தியது.

சாதாரணமாக பாவிக்கும் இவ்வாறான பற்றரிகளில் லித்தியம் காணப்படும். இவ்வகை பற்றிகள்  மிக ஆபத்தானது ஏனெனில் தவறுதலாக விழுங்கப்படும் பொழுது இவை சிறுவர்களின் களத்தில் ஓட்டுப்பட்டு அவற்றில் துவாரத்தினை ஏற்படுத்தும், இத்துவாரமானது அருகில் உள்ள வாதநாளி உடனோ அல்லது அருகில் உள்ள இரத்த குழாய்களுடனோ தொடர்பு கொள்ளும் பொழுது முறையே எமது சுவாச தொகுதியினுள் உணவு உட்செல்லல் மற்றும் இரத்த போக்கு என்பன ஏற்படும் இவை காலப்போக்கில் இறப்பிற்கு வழிகோலும். (The damage is caused, not by the contents of the battery, but by the electric current that is created when the anode  of the battery comes in contact with the electrolyte-rich esophageal tissue. The surrounding water undergoes a hydrolysis reaction that produces a sodium hydroxide (caustic soda) build up near the battery’s anode face. This results in the liquefactive necrosis of the tissue, a process whereby the tissue effectively is melted away by the alkaline solution. Severe complications can occur, such as erosion into nearby structures like the trachea or major blood vessels, the latter of which can cause fatal bleeds)

(இங்கு மேலே விளையாட்டு சாதனம் ஒன்றில் பற்றரி இலகுவில் கழற்ற முடியாதபடி மூடியில் ஆணி வைத்து பூட்ட பட்டுள்ளது)

இவற்றிக்கு மேலதிகமாக இவ்வாறான பற்றரிகளில் Mercury or cadmium போன்ற பார உலோகங்கள் காணப்படும் இவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சாதாரணமாக விளையாட்டு உபகரணங்களில் இவ்வகையான பற்றரிகள் இலகுவில் கழன்று வெளியே வாரா வண்ணம் ஓர் சிறிய ஆணி (screw ) மூடியில் போடப்பட்டிருக்கும். விலை குறைந்த உபகரணங்களில் இவ்வாறு இருப்பதில்லை.

Gagging உயிருக்கு ஆபத்தானதா?

அண்மையில் திருட்டில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் பலாத்காரமாக புகுந்து கொள்ளையில் இடுபட்ட பொழுது, அம் மூதாட்டி உதவி கோரி கத்த முற்பட்டார் அப்பொழுது அவர்கள் அவரின் வாயினுள் துணியினை அடைந்து விட்டு கொள்ளையில் இடுபட்டார்கள். பின்னர் அவரின் கை மற்றும் கால்களில் கயிற்று மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைத்து விட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் வாயில் அடைந்த துணியை எடுக்கவும் இல்லை. மறுநாள் அயலவர் அவரினை பார்க்க சென்ற பொழுது அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டு அவசரமாக வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உயிர் பிழைத்தார்.
கடந்த காலங்களில் இவ்வாறு மேற்கூறியதை ஒத்த பல சம்பவங்களில் பல உயிரிழப்புக்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் திருடர்களின் நோக்கம் அவ்மூதாட்டியினை கொலை செய்வதல்ல. அவரின் உதவி கோரும் குரலினை வெளியில் கேட்க விடாமல் செய்வதே.

man-mouth-covered-masking-tape-preventing-speech-isolated-black-410325867978025000070593872.jpg

இனி இவ்வாறன சம்பவங்களில் எவ்வாறு மரணம் சம்பவிக்கும் என்பதை பார்ப்போம். சாதாரணமாக எமது வாய்க்குழியில் எந்தவொரு பிற பொருளும் வைக்க படும் இடத்து வழமைக்கு மாறாக அதிக அளவில் உமிழ் நீர் சுரக்கும். இங்கும் இவ்வாறே அதிகளவு உமிழ்நீர் சுரந்து அடைக்கப்பட்ட துணியை ஈரமாக்கும் இதனால் துணி (gag)அளவில் பெரிதாகி தொண்டையினுள் (naso pharynx) இறங்கி தொண்டையை முற்றாக அடைக்கும் அல்லது ஏற்கனவே பகுதி அளவில் அடைபட்டிருந்த தொண்டை முற்று முழுதாக அடைப்பட சுவாசம் மேற்கொள்ள முடியாமல் இறப்பு ஏற்படும். இது சட்ட மருத்துவத்தில் Gagging என்று அழைக்கப்படும். இங்கு துணியானது தொண்டை பகுதியிலேயே காணப்படும். உலகில் இவ்வாறன சம்பவங்கள் அரிதாக வாய்மூல உடலுறவின் போதும் ஏற்படலாம்.
தமிழில் புரைக்கேறல் என்பது நாம் உண்ணும் உணவு வாத நாளியினுள் (trachea) உள்ளிறங்குதல் ஆகும்.

மரண வீட்டில் போலீஸார் அத்துமீறியது ஏன்?

அவருக்கு 70 வயது. அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாதசாரி கடவையில் வீதியை கடந்து சென்ற பொழுது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவ்வயோதிபரினை  மோதித்தள்ளியது. படுகாயமடைந்த அவர் வைத்திய சாலையில் சுயநினைவு அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த கசிவு உள்ளதாக கூறி அவரின் தலைப்பகுதியில் இரு முறை சத்திர சிகிச்சை செய்தார்கள். ஆனால் அவருக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. இவ்வாறு அவர் வைத்தியசாலையில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்ற பொழுது அவருக்கு சுவாச குழாய்களில் சளி அதிகம் அடைப்பதாக கூறி வைத்தியர்கள் கழுத்து பகுதியில் ஒரு சத்திர சிகிச்சை மூலம் குழாய் ஒன்றினை பொருத்தினார்கள். மேலும் அவர்கள் அவருக்கு உணவு கொடுப்பதற்கு வசதியாக வயிற்று பகுதியிலும் குழாய் ஒன்றினை பொருத்தினார்கள்.

இவ்வளவு செய்தும் அவரின் உடல் நிலை முன்னேறவில்லை. உறவினர்கள் அவரினை தாம் வீட்டில் வைத்து  பராமரிப்பது என்று முடிவெடுத்து வைத்தியர்களின் ஆலோசனைக்கு எதிராக வீடு கூட்டி வந்து அவருக்கு தேவையானவற்றினை  செய்தார்கள். இவ்வாறு இருவாரங்கள் கழிந்த நிலையில் அவர் ஒருநாள் இரவு தீடீர் என மூச்சு விட கடினப்பட்டு இறந்து விட்டார்.

அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தினை மறந்து அவர் வயோதிபம் காரணமாக இறந்ததாக கூறி கிராம சேவையாளரிடம் இருந்து கடிதம் ஒன்றினை பெற்று உரிய மரண சடங்குகளை செய்தார்கள். அப்பொழுது அப்பிரதேச போலீசார் அங்கு வந்து அவரது உடலினை பலாத்காரமாக கைப்பேற்றி அருகில் உள்ள வைத்தியசாலையில் உடற் கூராய்வு பரிசோதனைக்காக ஒப்படைத்தார்கள்.

5b6a1130693a2.image

அருகில் உள்ள வைத்திய சாலையில் நிகழ்ந்த உடற் கூராய்வு பரிசோதனையின் பின்னர் அவருக்கு நீண்ட காலமாக சுயநினைவு அற்ற நிலையில் படுத்த படுக்கையாக இருந்ததன் விளைவாக இரு நுரையீரல் களிலும் நிமோனியா கிருமித்தாக்கம் வந்ததன் காரணமாக அவர் இறந்ததாக அறியப் பட்டது.
மனிதர்களுக்கு பல்வேறுபட்ட காரணிகளால் காயங்கள் ஏற்படலாம். சிலசந்தர்ப்பங்களில் மரணம் உடனடியாக ஏற்படும். பலசந்தர்ப்பங்களில்  பலர் காயப்பட்டு ஒருசில மாதங்கள் அல்லது ஒருசில வருடங்களின் பின்னரே இறக்கின்றனர். அப்பொழுது தான் பிரச்சனை எழும்புகிறது. நீண்ட காலம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்ததன் காரணமாக பெரும்பாலும் உறவினர் இந்நிலைமை ஏற்பட்டமைக்கான அடிப்படை காரணத்தினை மறந்து விடுவார்கள் அல்லது மிக விரைவாக இறுதி சடங்குகளை நடத்த முற்படுவர். இதன் பொழுது அவர்கள் உடற் கூராய்வு பரிசோதனை பற்றி மறந்து விடுவார்கள்.

உண்மையில் இவ்வாறன இறப்புகளின் பொழுது பின்வரும் வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்
1. என்ன காரணத்திற்காக அவர் இறந்தார்?
2. அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் இறப்புக்கு எவ்விதத்தில் செல்வாக்கை செலுத்தியது?
3. அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும் மரணத்திற்கான காரணத்திற்கும் நேரடித்தொடர்பு உண்டா?
4. அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய வருத்தம் அல்லது குருதி அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரித்து மரணம் அடைந்தாரா?
5. அவருக்கு ஏற்பட்ட காயம் அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்கள் தவிர புதிதாக கண்டுபிடிக்க பட்ட நோய் நிலமை காரணமாக இறந்தாரா?
மேற்கூறப்பட்ட வினாக்களுக்கான விடை தெரியும் நிலையிலேயே ஓர் குற்றவியல் விசாரணையினை தொடர்ந்து முன்னெடுக்க முடியும். அதன் காரணமாகவே பொலிஸார் மரண வீட்டின் பொழுது அத்துமீறி உடலினை எடுத்து சென்று உடற் கூராய்வு செய்தனர்.
இவ்வாறு பாரிய காயங்கள் ஏற்பட்ட பின்னர் ஒருவர் உயிர் வாழும் காலம் ஆனது அவரின் வயது, ஏற்கனவே உள்ள நோய் நிலமை, காயத்தின் தன்மை, காயம் ஏற்பட்ட பிரதேசம், வழங்கப்ப ட்ட வைத்திய வசதிகள், வழங்க பட்ட தாதிய கவனிப்பு என்பவற்றில் தங்கியுள்ளது.

Are you Virgin?

ஓர் பெண்ணானவள்  மருத்துவ ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எப்பொழுது கன்னித்தன்மையை  இழக்கின்றாள் என்பது பற்றிய பதிவு

முதலில் மருத்துவ ரீதியாக நோக்குவோம், பெண்ணின் யோனி  என்பது சதைப் பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். இது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பெண்குறிக்கும் இடைப்பட்ட பாதையாகும். பொதுவாக வெளிப்புற யோனியானது கன்னிச்சவ்வு  (HYMEN) எனப்படும் யோனிச்சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும். இதன் ஆழமான முடிவில் கருப்பையின் கழுத்துப்பகுதியான கருப்பை வாய் சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும்.

பெண்ணில் கன்னி சவ்வானது பல்வேறு பட்ட வடிவங்களில் (Various morphological shapes) காணப்படலாம். சாதாரணமாக முதன் முறை உடல் உறவு கொள்ளும் பொழுது  மருத்துவ ரீதியாக இங்கு கன்னிச்சவ்வில் காயங்கள் ஏற்படலாம். அதன்காரணமாக பெண்ணிற்கு சிறிதளவு இரத்த போக்கு ஏற்படும். இதனை வைத்து கொண்டே எமது மூதாதையர் ஓர் பெண் கன்னி கழிந்தவளா? அல்லது கழியாதவளா? என்று கூறிவந்தனர்.

hy

ஆனால்   கன்னி சவ்வின் வேறுபட்ட வடிவங்கள் (especially in case of fimbriated hymen)  காரணமாக முதன் முறை உடலுறவின் பொழுது கன்னிச்சவ்வு கட்டாயம் சேதமடைந்து இரத்தம் வரவேண்டிய தேவை இல்லை. மேலும் இவ்வாறு ஓர் பெண்ணின் கன்னித்தன்மையினை அளவீடு செய்வது ஓர் விஞ்ஞான ரீதியான ஏற்றுக்கொள்ளத்தக்க முறை அல்ல.

சட்ட ரீதியாக பின்வரும் சந்தர்ப்பங்களில் ஓர் பெண்ணானவள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபடலாம்,  ஏதாவது ஆள் ஒரு பெண்ணின் சம்மதமின்றி அல்லது வலுக்கட்டாயம்,பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக அல்லது அவளுக்கு கொலை அல்லது காயம் விளைவிப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தி அல்லது அவளை சித்தசுவாதீனமற்ற நிலையிலுள்ளபோது அல்லது குடிபோதையில் உள்ளபோது அல்லது சட்டமுறையற்ற தடுத்துவைப்பிலுள்ள போது சம்மதம் பெற்று பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் வன்புணர்வு  குற்றம் புரிந்தவராவார்.

சட்ட ரீதியாக பார்க்கும் பொழுது பாலியல் வன்புணர்வின்பொழுது கட்டாயம் கன்னிச்சவ்வு சேதமடைய வேண்டிய தேவை இல்லை. தற்போதைய இலங்கை சட்ட திட்டங்களின் பிரகாரம் ஆணின் இலிங்க உறுப்பானது பெண் யோனி வாசலில் வைக்க பட்டாலே (merely penetration) அது பாலியல் வன்புணர்வுக்கு சமனானது. ஆண் கட்டாயம்   இலிங்க உறுப்பினை உட்செலுத்த வேண்டிய தேவை இல்லை.

சட்ட ரீதியாக பார்க்கும் பொழுதுஇவ்வாறே பாதிக்க பட்ட பெண்ணுக்கு கட்டாயம் வேறு உடற்காயங்கள் ஏற்படவேண்டிய தேவையும் இல்லை.

யார் தான் நிபுணர்?

 பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஓர் பெண் உள்ளாகும் பொழுது அவள் வைத்தியசாலையில் அனுமதிக்க படுவாள். இதன் பொழுது பொதுமக்கள் யார் வைத்தியர் அவரினை பரிசோதிப்பார்கள்  என்று தெரிந்து இருக்க வேண்டும்.  இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரே இந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர். அவரின் அறிக்கையினையே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். அனுபவம் அற்ற வைத்தியர்கள் , மகப்பேற்று நிபுணர்கள் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர்கள் இவ்வாறனவர்களை பரிசோதித்து பிழையான அபிப்பிராயங்களினை தெரிவித்த பல சந்தர்ப்பங்கள்  உண்டு.

expertpic

அவசியமானால் சேதமடைந்த கன்னிசவ்வினை உரிய வைத்தியர்கள் மூலம் திருத்திக்கொள்ளவும் இலங்கையில் வசதிகள் உண்டு.

மீண்டும் தோண்டப்படும் உடல்கள்

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடாத்தி பலியான ISIS தீவிர வாதிகளின் புதைக்கப்பட்ட உடல்கள் மீண்டும் DNA பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன. சட்ட மருத்துவத்தில் புதைக்கப்பட்ட ஒரு உடல் ஆனது பின்வரும் சந்தர்ப்பங்களில் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்

  1. இறந்தவர்கள் உரிய முறையில் அடையாளம் காணாமல் அதாவது விஞ்ஞான முறையில் யாவரும் ஏற்றுக்கொள்ள தக்க முறையில் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டிருந்தால் உரிய முறையில் DNA பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் முகமாக தோண்டி எடுக்க படும்.
  2. மரணம் சம்பவித்த சூழ்நிலை / சந்தர்ப்பம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்க பெறும் இடத்து, மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  3. மரணத்திற்கான காரணம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்க பெறும் இடத்து, மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  4. முதலில் நடைபெற்ற உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படாமல், மரணம் அடைந்தவர் இயற்கை மரணம் அடைந்ததாக சான்றிதழ்கள் தயாரிக்க பட்டு இறந்தவரின் உடல் புதைக்கப்படும் இடத்து மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  5. முதலில் உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படாமலும் , உரிய சான்றிதழ்கள் தயாரிக்க ப்படாமலும்  இறந்தவரின் உடல் புதைக்கப்படும் இடத்து மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும். உதாரணமாக பலசந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்டு இரகசிமான முறையில்  புதைக்கப்படும் உடல்கள்.
  6. முதலில் உடற்கூராய்வு பரிசோதனை தகுதி குறைந்த அல்லது அனுபவம் அற்ற வைத்தியரினால் செய்யப்பட்டு , உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் கேள்விக்கு உட்படுத்த பட்டு பல வினாக்களுக்கு உரிய விடை சட்ட வைத்திய அதிகாரியினால் கூறப்படாதவிடத்து இறந்தவரின் புதைக்கப்பட்ட  உடல்  மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  7. முதலில் நடைபெற்ற உடற்கூராய்வு பரிசோதனையின் பொழுது உரிய சான்று பொருட்கள் மற்றும் மாதிரி பொருட்கள் பெற்றுக்கொள்ள படாத விடத்து இறந்தவரின் புதைக்கப்பட்ட உடல்  மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.

மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர பல்வேறுபட்ட சிவில் காரணகளுக்காகவும் புதைக்க ப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப் படலாம், அவையாவன

  1. பல்வேறு பட்ட காரணங்களால் மரண சடங்குகள் உரிய முறையில் செய்யப்படாமல் புதைக்க பட்ட உடல்கள், மரண சடங்குகளை உரிய முறையில் செய்யும் முகமாக
  2. கல்லறைகள் மற்றும் மயானங்கள் விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக
  3. வீதி விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக

ஒரு மரணத்தில் நாம்  சந்தேகம் கொள்ளும் இடத்து தீடீர் மரண விசாரணை அதிகாரியிடத்து விளக்கத்தினை பெற்று கொள்ளலாம் , அவ்விளக்கம் திருப்பதி அளிக்காவிடின்   நீதவான் நீதி மன்றில் சட்ட தரணி  மூலம்  நாம் உரிய முறைப்பாட்டினை மேற்கொண்டு உடலினை தோண்டி எடுத்து நாம் விரும்பிய சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் உடற் கூராய்வு பரிசோதனையினை மேற்கொள்ளலாம்.

DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

 

அறியாமையா? கஞ்சத்தனமா?

அது ஒரு விபத்து சம்பந்தமான உடற் கூராய்வு பரிசோதனை. போலீசார் கூறினர் சேர், இது அவனுடைய நான்காவது முச்சக்கர வண்டி, இறந்த நபர் 33 வருடங்களாக முச்சக்கர வண்டி ஒட்டி தான் பிழைத்தார் . நேற்றைய தினம் அவரது முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதிய நிலையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் கூறினர் சேர், இது மிக்க சந்தேகத்திற்குரியது ஏனென்றால் கழுத்தில் வெட்டு காயம் போன்று ஒரு காயம் காணப்படுகின்றது, நீங்கள் ஒருமுறை வடிவாக பாருங்கள் என்றார். மேலும் அவர் கூறினார் இறந்தவர் வாகனம் ஓட்டும் இருக்கையில் இருந்தவாறே இருந்தார்.

இவ்வாறான சம்பவங்களில் சட்ட வைத்திய அதிகாரி மிகத் திறமையாக செயற்பட வேண்டும் இல்லாவிடில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கவேண்டிவரும். மிக கவனமாக காயங்களை ஆராய்ந்த பொழுது அவை உண்மையிலே கண்ணாடியினால் வெட்டுப்பட்டதனால் உண்டாகியது  என்று தெரியவந்தது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக விபத்து நடந்த இடத்திற்கு குறித்த பொலிஸாரின் உதவியுடன் சென்ற பொழுது பல கண்ணாடி துண்டுகள் உடைந்த நிலையில் வீழ்ந்து காணப்பட்டன அவற்றில் இரத்த கறையும் கூடவே காணப்பட்டது.

வாகனத்தில் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு வகையான கண்ணாடிகள் பொருத்தபட்டிருக்கும்.

car-glass

இவ்வாறு சாதாரணமாக இரு வகையான கண்ணாடிகள் வாகனத்தில் பயன்படுத்தப்படுகின்றன

  1. LAMINATED WINDSCREEN GLASS

இங்கு முக்கியமாக இரு கண்ணாடி துண்டுகளுக்கு இடையில் ஒரு வகையான ஒளியினை ஊடுகடத்த கூடிய பிளாஸ்டிக் polyvinyl butyral (PVB) இடப்பட்டிருக்கும். இது மிக உயர்ந்த வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் தயாரிக்க படுவதால் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் பொழுது மிகச்  சிறிய துண்டுகளாக உடைந்து விழும். இதனால்  வாகனத்தினுள் இருப்பவருக்கு கண்ணாடி உடைவதால் ஏற்படும் காயங்கள்  குறைவாக இருக்கும். இவ்வகையான கண்ணாடியே மிக பாதுகாப்பானது ஆகும்.

laminated-glass

  1. TEMPERED GLASS

இவ்வகையான கண்ணாடிகள் சாதாரணமாக நாம் பாவிக்கும் கண்ணாடியை விட பலமானதும் உறுதி யானது ஆகும். இவையும் உடையும் பொழுது பெரிய கூர்மை அற்ற துண்டுகளாக உடையும் இதனால் வாகனத்தினுள் இருப்பவருக்கு கண்ணாடி உடைவதால் ஏற்படும் காயங்கள்  ஓரளவு குறைவாக இருக்கும் .

windscreen-glass-breaking

ஆனால் இலங்கை போன்ற நாட்டில் அறியாமை,  கஞ்சத்தனம் போன்ற காரணங்களினால் முச்சக்கர வண்டி போன்றவற்றிக்கு நாம் சாதாரண தேவைகளுக்கு பாவிக்கும் தடிப்பு குறைந்த கண்ணாடிகளையே பாவிக்கின்றனர். இவ்வாறன சந்தர்ப்பங்களில் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் பொழுது அதன் முகப்பு அல்லது பக்க கண்ணாடி உடைந்து உள்ளிருப்பவருக்கு பலத்த காயங்களை உண்டாக்கும். முக்கியமாக சாரதி ஆசனத்தில் இருப்பவருக்கு உயிர் ஆபத்தும் ஏற்படலாம்.

1606.m00.i125.n051.s.c12.407250460-broken-

இங்கும் சாரதிக்கு அவரது முச்சக்கர வண்டியினுள் இருந்த முகப்பு கண்ணாடி உடைந்து கழுத்து பகுதியினை தாக்கிய பொழுது அவரது கழுத்து பகுதியில் தோலின் கீழாக காணப்படும் External Jugular Vein என்ற நாளம் வெட்டு பட்டதாலேயே இரத்த போக்கு நிகழ்ந்து இறக்க நேரிட்டது. இங்கு இறந்தவருக்கு கழுத்து பகுதியினை தவிர வேறு பகுதிகளில் பாரிய காயங்கள் இல்லை என்பது குறிப்பிட தக்கது. மேலும் இவ்வகையான கண்ணாடிகள் உடையும் பொழுது கண் போன்றவற்றிக்கும் பாரிய காயங்கள் ஏற்பட  சந்தர்ப்பம் உண்டு.

“இளம் கன்று பயம் அறியாது”

அவனுக்கு இரண்டரை வயது தான். அவன் சராசரி குழந்தைகளை விட அதிக நிறை உள்ளவன். அவன் குடுகுடு என்று ஓடிவரும் அழகே தனி அழகு தான். அவனது தகப்பன் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர். தாய் ஓர் ஆசிரியர் அவளுக்கு ஓர் பெண் பிள்ளை அதாவது அவனுக்கு ஓர் தங்கை கிடைத்து இப்ப தான் 2 மாதங்கள் ஆகிறது. அன்று மதியம் பெண் பிள்ளைக்கு பாலூட்டி கொண்டு இருந்தாள். அவன் வீட்டின் முன் விறாந்தயில் தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தான் . அவனது தகப்பனார் வேலையால் வீடு திரும்பவில்லை. அவனது வீட்டின் முன் பகுதியில் உயர்ந்த இரு பூச்சாடிகள் உண்டு.  அவனின் தகப்பனார் அவற்றில் வழமையாக நீர் நிறைத்து சில வளர்ப்பு மீன்களை வளர்த்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் தகப்பனார் அவனை தூக்கி வைத்து அம்மீன்களை காட்டுவார். அவனும் பார்த்து ரசிப்பான். அவனுக்கு அவற்றினை பார்த்து இரசிப்பதில் கொள்ளை விருப்பம். அன்று இரவு நேரத்தில் விழித்து இருந்ததன் காரணமாக தாய் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விட்டாள் . சிறிது நேரத்தில் கண்விழித்து தேடிய பொழுது அவன் விளையாடி கொண்டிருந்த இடத்தில் இல்லை. வெளியே பார்த்த கணம் அவள் திகைத்து விட்டாள். அந்த சீமேந்தினால் செய்யப்பட்டுள்ள பூச்சாடி அவன் மீது  விழுந்து இருந்தது. அவனது தலையில் பாரிய காயம் அதிலிருந்து இரத்தம் கொட்டிய படி இருந்தது, அவன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் கிடந்தான்.

அவள் உதவி கோரி கத்தினாள் சிறிது கன நேரத்தில் பலர் கூடினர் அவனை வைத்திய சாலையில் அனுமதித்தனர். தூரதிஸ்ட வசமாக அவன் வெளிநோயாளர் பிரிவில் இறந்து இருந்தான்.

(மேலுள்ள படத்தில் சிதறிய நிலையில் வீழ்ந்து கிடக்கும் மலர் சாடியினை கவனிக்கவும்)

இங்கு அவனின் மேல் விழுந்த சாடி 3 அடி உயரத்தில் சிமேந்தினால் ஆனது அத்துடன் கிட்டத்தட்ட 24 kg நிறை உடையது. இங்கு சாடியின் அடியானது மெல்லிய தண்டு (stem) மூலம் மேற்பகுதியில் உள்ள சாடியுடன் இணைக்க பட்டிருந்தது மேலும் இச்சாடியாணது நான்கு பகுதிகள் ஆக இருந்தது. இதனால் அது நிலத்தில் உறுதியாக நிற்காது. மேலும் மேற்புறத்தில் நீர் இருக்கும் போது அது இலகுவில் ஆடி சாடி விழுவதற்கான சாத்தியம் அதிகம் ஆகும். இந்த நிலையில் விளையாடிய குழந்தை அதனை பிடித்து ஆடியதன் காரணமாகவே அது அவன் மீது வீழ்ந்தது.

முக்கியமாக 1 தொடக்கம் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பல்வேறுபடட உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் விபத்துக்களை நாம் சாதாரணமாக வசிக்கும் வீட்டில் சந்திக்கும் சாத்தியம் உள்ளது. இது சம்பந்தமாக இப்பதிவு உள்ளது.

மேற்குறிபபிட்ட வயதுடைய குழந்தைகள் மிக துடிப்பு மிக்க வர்கள் இவர்கள் இவ்வாறு பொருட்களை இழுத்து பார்ப்பது வழமை . இதன் பொழுது இவ்வாறன அவர்களின் உடல் மீது வீழ்ந்து சாதாரண உயிர் ஆபத்து அற்ற காயங்கள் முதல் உயிர் ஆபத்து மிக்க காயங்களையும் அநியாய மரணங்களையும் ஏற்படுத்தும். மேலும் இவ்வகை வயதுடைய சிறுவர்கள் வீட்டின் உயரமான இடங்களுக்கு ஏறி அதிலிருந்து தவறுதலாக வீழ்தல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை அருந்துதல், முக்கியமாகக் கிராம புறங்களில் மண்ணெண்ணெய் ஆனது பச்சை நிற குளிர்பான போத்தலகளில் உள்ள பொழுதும் சிறுவர்களின் கைக்கு எட்ட கூடிய இடத்தில் உள்ள பொழுதும் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மண்ணெண்ணெய்யின் நீல அல்லது ரோஸ் நிறம் கூட ஒருவிதத்தில் சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இவ்வயதுடைய சிறுவர்கள் வீட்டினுள் அமைந்த கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றில் வீழ்ந்தும் மரணமடைந்த சம்பவங்கள் நிறைய உண்டு. இது தவிர சமையலறையில் உயரத்தில் உள்ள அல்லது அடுப்பில் உள்ள நீர் , கறி அல்லது பால் நிறைந்த சூடான பாத்திரங்களை தம் மேல் இழுத்து வீழ்த்தி எரி காயங்களுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. வீட்டில் உள்ள ரோல் பிளக்கில் (Role plug) கைவிட்டு மின்சார தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. மேலும் வயது வந்தவர்கள் பாவிக்கும் மருந்துகளை தவறுதலாக உண்ட மற்றும் குழந்தைகளுக்கான பாணி மருந்தினை அளவுக்கு அதிகமாக பருகிய குழந்தைகளும் உண்டு.

நாம் வீட்டில் பாவிக்கும் வாகனத்தில் சிக்கிய குழந்தைகளும் உண்டு. இது சம்பந்தமாக இன்னொரு பதிவில் விபரமாக குறிப்பிடுகின்றேன்.  எனவே முக்கியமாக 1 வயது தொடக்கம் 5 வயது வரை உள்ள வீட்டில் பெற்றோர் குழந்தைகள் தொடர்பில் கவனமாக இருப்பதன் மூலம் அநியாயமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.