இலங்கையின் அண்மைய தீவிபத்துகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

பேரிடர்கள் மனித சமுதாயத்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளன. இயற்கை அனர்த்தங்கள், தொழில்துறை விபத்துகள், தொற்றுநோய் பரவல்கள், வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் உலகின் அனைத்து நாடுகளையும் காலம் காலமாக பாதித்துள்ளன. இவற்றில் தீ விபத்துகள் தனித்துவமானவை. ஏனெனில் ஒரு சிறிய மின்கசிவு, கவனக்குறைவாக கையாளப்பட்ட எரிவாயு சிலிண்டர், பராமரிப்பின்றி இயங்கும் மின்சாதனம் அல்லது ஒரு மனித தவறு சில நிமிடங்களில் பாரிய உயிரிழப்புகளையும் சொத்து சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இரண்டு முக்கிய தீ விபத்துகள் நாட்டின் பேரிடர் ஆயத்தநிலை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து பல கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழித்தது. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருத்துவ வளங்கள் இழக்கப்பட்டன. இந்த சம்பவம் ஒரு கட்டிட சேதம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சைத் தொடர்ச்சியையும் பாதிக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஹொரணை பகுதியில் அமைந்திருந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து 12 உயிரிழப்புகளையும் பல காயங்களையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள இயலாத மக்களுக்கான நிறுவனங்களில் அவசரகால திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரு அடிப்படை உண்மையை நினைவூட்டுகின்றன. தீ விபத்தை முழுமையாகத் தடுக்க முடியாத சூழல்கள் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளை குறைப்பது மனிதர்களின் கைகளிலேயே உள்ளது. உலகளாவிய ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், பல தீ விபத்துகளில் உயிரிழப்புகளும் கடுமையான காயங்களும் தீயினால் நேரடியாக ஏற்படுவதில்லை. மாறாக, தாமதமான கண்டறிதல், ஒழுங்கற்ற வெளியேற்றம், பணியாளர்களின் பயிற்சியின்மை, செயலற்ற எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பலவீனமான அவசரகால திட்டமிடலே அதிக சேதத்திற்கு காரணமாகின்றன.

எனவே பேரிடர் ஆயத்தநிலை என்பது ஒரு நிர்வாக ஆவணம் மட்டுமல்ல. அது உயிர்களைப் பாதுகாக்கும் ஒரு முதலீடு. ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பு, அங்கு வாழ்பவர்களின் பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சி மற்றும் சமூகத்தின் நம்பிக்கை ஆகிய அனைத்தும் பேரிடர் ஆயத்தநிலையுடன் நேரடியாக தொடர்புடையவை.

பேரிடர் ஆயத்தநிலை என்றால் என்ன?

பேரிடர் ஆயத்தநிலை (Disaster Preparedness) என்பது ஒரு பேரிடர் நிகழ்வதற்கு முன்பாக அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டமிடல், பயிற்சி, வள ஒதுக்கீடு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.

பேரிடர் நிகழ்ந்த பிறகு எவ்வாறு பதிலளிப்பது என்பதைக் குறித்த திட்டமிடல் மட்டுமல்லாது, பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே அபாயங்களை அடையாளம் கண்டு அவற்றை குறைப்பதற்கான முயற்சிகளும் இதில் அடங்குகின்றன. அதாவது பேரிடர் ஆயத்தநிலை என்பது “நிகழ்வுக்குப் பிறகு என்ன செய்வது?” என்ற கேள்விக்கான பதில் மட்டுமல்ல; “நிகழ்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கும் பதிலாகும்.

ஒரு சிறந்த பேரிடர் ஆயத்தநிலைத் திட்டம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்:

  • அபாயங்களை அடையாளம் காணுதல்
  • பாதிப்பு மதிப்பீடு செய்தல்
  • அவசரகால பதிலளிப்பு நடைமுறைகள் உருவாக்குதல்
  • வளங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருத்தல்
  • பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்குதல்
  • அவசர ஒத்திகைகளை மேற்கொள்ளுதல்
  • தகவல் தொடர்பு அமைப்புகளை பராமரித்தல்
  • மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குதல்

பல நிறுவனங்கள் பேரிடர் ஆயத்தநிலையை ஒரு ஆவணமாகவே கருதுகின்றன. ஆனால் ஒரு அலமாரிக்குள் பூட்டிவைக்கப்பட்ட திட்டம் எந்த உயிரையும் காப்பாற்றாது. செயல்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வரும் திட்டங்களே பேரிடர் நேரத்தில் பயனளிக்கும்.

பேரிடர் ஆயத்தநிலை அபாய மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்

பேரிடர் முகாமைத்துவத்தில் மிகவும் முக்கியமான கொள்கைகளில் ஒன்று “ஒரே திட்டம் அனைவருக்கும் பொருந்தாது” என்பதாகும். ஒவ்வொரு கட்டிடமும் அதன் இருப்பிடம், பயன்பாடு, கட்டுமான அமைப்பு மற்றும் அங்கு வசிக்கும் அல்லது பணிபுரியும் மக்களின் தன்மைகளைப் பொறுத்து வெவ்வேறு அபாயங்களை எதிர்கொள்கிறது.

எடுத்துக்காட்டாக, கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்று சுனாமி, கடலோர வெள்ளம் மற்றும் புயல் அபாயங்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். அதே நேரத்தில் நகர மையத்தில் அமைந்துள்ள பல்மாடிக் கட்டிடம் தீ விபத்து, மின்சார கோளாறு அல்லது பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகளவில் பாதிக்கப்படக்கூடும்.

எனவே ஒவ்வொரு நிறுவனமும் முதலில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் காண வேண்டும்:

  • எங்களை அதிகம் பாதிக்கக்கூடிய பேரிடர் எது?
  • அந்த பேரிடர் ஏற்பட்டால் யார் அதிக ஆபத்தில் இருப்பார்கள்?
  • எமது பலவீனங்கள் என்ன?
  • எமது வளங்கள் போதுமானவையா?
  • அவசரநிலையில் எவ்வாறு வெளியேற்றம் மேற்கொள்ளப்படும்?

இந்த மதிப்பீட்டை பேரிடர் முகாமைத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிறுவன நிர்வாகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும். சரியான அபாய மதிப்பீடு இல்லாத பேரிடர் திட்டம், வரைபடமில்லாத பயணத்தைப் போன்றதாகும்.

எடுத்துக்காட்டுகள்

ஒரு கட்டிடத்தின் செயல்பாடுகள் மற்றும் இருப்பிடம் அதன் பேரிடர் அபாயங்களை தீர்மானிக்கின்றன.

கடலோர வைத்தியசாலை

கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சுனாமி, கடலோர வெள்ளம், புயல், கடுமையான காற்றழுத்தம் மற்றும் மின்சார விநியோகத் தடங்கல் போன்ற பல்வேறு இயற்கை மற்றும் சூழலியல் அபாயங்களுக்கு முகங்கொடுக்கக்கூடும். எனவே, அவசர நிலைகளில் நோயாளிகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கான முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் தடையற்ற சுகாதார சேவையை உறுதிசெய்ய மாற்று மின்சார வசதிகள் தயாராக இருப்பது மிகவும் அவசியமாகும்.

முதியோர் பராமரிப்பு இல்லங்கள்

முதியோர் இல்லங்களில் தீ விபத்துகள், வெப்ப அலைகள் மற்றும் தொற்றுநோய் பரவல்கள் போன்றவை முக்கிய அபாயங்களாகக் காணப்படுகின்றன. இங்கு தங்கியிருப்போர் பலர் வயது முதிர்வு, உடல் பலவீனம் அல்லது நோய்நிலைகள் காரணமாகத் தாங்களாகவே விரைவாக நகர முடியாதவர்களாக இருப்பதால், அவசர நிலைகளில் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான சிறப்பு நடைமுறைகள், போதுமான பணியாளர் ஆதரவு மற்றும் முன்கூட்டிய அவசரத் தயார்நிலைத் திட்டங்கள் அவசியமாகின்றன.

மருந்துக் களஞ்சியசாலைகள்

தொழிற்சாலைகள், களஞ்சியசாலைகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் சேமிப்பு நிலையங்கள் போன்ற இடங்களில் மின்கசிவு, தீ விபத்து மற்றும் இரசாயன எதிர்வினைகள் பாரிய சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, அபாயங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக தானியங்கி தீ கண்டறிதல் அமைப்புகள், தீ அணைப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டாயமாக நிறுவப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

பணியாளர் பயிற்சியின் முக்கியத்துவம்

பேரிடர் முகாமைத்துவத்தில் அதிகம் பேசப்படாதாலும் மிகவும் முக்கியமான கூறு பணியாளர் பயிற்சியாகும். நவீன தீ எச்சரிக்கை அமைப்புகள், விலையுயர்ந்த தீ அணைப்பு உபகரணங்கள், அவசர வெளியேற்ற வரைபடங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ திட்டங்கள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தத் தெரியாத பணியாளர்கள் இருந்தால் அவை அனைத்தும் பயனற்றதாகிவிடும். பல பேரிடர் ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், அவசரநிலையின் முதல் சில நிமிடங்களிலேயே எடுக்கப்படும் முடிவுகளே உயிரிழப்புகளின் அளவை தீர்மானிக்கின்றன. தீ விபத்து ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் பெரும்பாலான தீ விபத்துகள் கட்டுப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பான வெளியேற்றம் மேற்கொள்ளப்படவோ முடியும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாளர்கள் பின்வரும் விடயங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்:

  • தீ விபத்திற்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணுதல்.
  • தீ எச்சரிக்கை அலாரத்தை இயக்குதல்.
  • அவசர சேவைகளை தொடர்புகொள்ளுதல்.
  • ஆரம்ப கட்ட தீ அணைப்பு நடவடிக்கைகள்.
  • பாதுகாப்பான வெளியேற்ற நடைமுறைகள்.
  • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல்.
  • முதலுதவி வழங்குதல்.
  • முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல்.

பயிற்சி என்பது வகுப்பறையில் வழங்கப்படும் சொற்பொழிவு மட்டுமல்ல. நடைமுறை ஒத்திகைகள், உருவகப்படுத்தப்பட்ட அவசரநிலை பயிற்சிகள் (simulation exercises), மற்றும் மேசைப் பயிற்சிகள் (table-top exercises) ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

பணியாளர்களின் இடமாற்றம், புதிய நியமனங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படும் போது பயிற்சிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படும் பயிற்சிகள் போதுமானவை அல்ல. அதிக அபாயம் கொண்ட நிறுவனங்களில் காலாண்டு அடிப்படையில் பயிற்சிகள் நடத்தப்படுவது சிறந்த நடைமுறையாக கருதப்படுகிறது.

தீ விபத்து பேரிடர் ஆயத்தநிலையின் முக்கிய கூறுகள்

1. தீ அபாய மதிப்பீடு

தீ விபத்து ஏற்படக்கூடிய காரணிகளை முறையாக அடையாளம் காண்பதே தீ அபாய மதிப்பீட்டின் நோக்கமாகும்.

பல தீ விபத்துகள் எதிர்பாராதவையாக தோன்றினாலும், பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அவற்றில் பெரும்பாலானவை முன்னரே கண்டறியக்கூடிய அபாயங்களுடன் தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்துகின்றன.

தீ அபாய மதிப்பீட்டில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • பழுதடைந்த மின்சார அமைப்புகள்
  • அதிக சுமையுடன் இயங்கும் மின்சுற்றுகள்
  • தவறான வயரிங்
  • எரிவாயு கசிவுகள்
  • எரியக்கூடிய இரசாயனங்கள்
  • காகித ஆவண களஞ்சியங்கள்
  • மருந்து மற்றும் இரசாயன சேமிப்பகங்கள்
  • சமையலறை வசதிகள்
  • குளிரூட்டும் மற்றும் மின் உற்பத்தி அமைப்புகள்

அபாயங்கள் கண்டறியப்பட்ட பின்னர் அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அபாயத்தை அறிந்தும் நடவடிக்கை எடுக்காதது நிர்வாகப் பொறுப்பின்மையாக கருதப்படலாம்.

2. முன்கூட்டிய கண்டறிதல் அமைப்புகள்

தீ விபத்து நேரத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான கருவி முன்கூட்டிய கண்டறிதல் ஆகும். தீ பரவுவதற்கு முன்பே அதை அடையாளம் காண்பது வெளியேற்றத்திற்கான நேரத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அல்லது குறைந்த பணியாளர்கள் உள்ள சூழல்களில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு கட்டிடத்திலும் பின்வரும் அமைப்புகள் பரிசீலிக்கப்பட வேண்டும்:

  • புகை உணரிகள்
  • வெப்ப உணரிகள்
  • தீ எச்சரிக்கை அலாரங்கள்
  • தானியங்கி எச்சரிக்கை அமைப்புகள்
  • மைய கண்காணிப்பு வசதிகள்

இவை நிறுவப்பட்டிருப்பது மட்டும் போதாது. அவை முறையாக பராமரிக்கப்பட்டு சோதிக்கப்பட வேண்டும். செயலிழந்த எச்சரிக்கை அமைப்பு இல்லாத அமைப்பிற்கு சமமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

3. தீ அணைப்பு உபகரணங்கள்

தீ விபத்தின் ஆரம்ப கட்டத்தில் சிறிய தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான உபகரணங்கள் அவசியம்.

அவற்றில்:

  • கைமுறை தீ அணைப்பான்கள்
  • தீ அணைப்பு குழாய்கள்
  • தானியங்கி ஸ்பிரிங்களர் அமைப்புகள்
  • தீ போர்வைகள்
  • அவசர நீர் விநியோக அமைப்புகள்

என்பன அடங்கும்.

ஆனால் உபகரணங்கள் இருந்தாலே போதாது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பணியாளர்களுக்குத் தெரிய வேண்டும். உலகளாவிய ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், ஆரம்ப கட்டத்தில் சரியான முறையில் பயன்படுத்தப்படும் ஒரு தீ அணைப்பான், பல சந்தர்ப்பங்களில் கோடிக்கணக்கான சொத்து சேதங்களையும் பல உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியதாக இருக்கிறது.

4. பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள்

பல தீ விபத்துகளில் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணம் தீ அல்ல; வெளியேற முடியாமையே ஆகும். வெளியேற்ற பாதைகள்:

  • தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • எப்போதும் திறந்திருக்க வேண்டும்.
  • தடைகளற்றதாக இருக்க வேண்டும்.
  • போதுமான அகலத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அவசர விளக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சில நிறுவனங்களில் அவசர வெளியேற்ற வாயில்கள் பூட்டப்பட்டிருப்பதும், பொருட்கள் குவிக்கப்பட்டிருப்பதும், வழிகாட்டி பலகைகள் இல்லாமலும் காணப்படுகின்றன. பேரிடர் நேரத்தில் இத்தகைய குறைபாடுகள் உயிரிழப்புகளுக்கான நேரடி காரணமாக மாறலாம்.

5. எழுத்துப்பூர்வ அவசரகால திட்டம்

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எழுத்துப்பூர்வமாக தயாரிக்கப்பட்ட அவசரகால திட்டம் இருக்க வேண்டும். அதில்:

  • தீ கண்டறியப்பட்டால் யார் என்ன செய்ய வேண்டும்?
  • யார் அவசர சேவைகளை அழைப்பார்கள்?
  • யார் வெளியேற்றத்தை ஒருங்கிணைப்பார்கள்?
  • யார் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவுவார்கள்?
  • கூடும் இடம் எது?
  • பொறுப்பேற்கும் அதிகாரிகள் யார்?

என்பன தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். அவசரநிலையில் குழப்பம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே பொறுப்புகள் ஒதுக்கப்பட வேண்டும்.

6. ஒழுங்கான ஒத்திகைகள்

ஒரு திட்டம் செயல்படுமா இல்லையா என்பதை அறிய ஒரே வழி அதனை சோதிப்பதே ஆகும். தீ ஒத்திகைகள்:

  • பதிலளிப்பு நேரத்தை அளவிடுகின்றன.
  • பலவீனங்களை வெளிப்படுத்துகின்றன.
  • பணியாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கின்றன.
  • பயம் மற்றும் பதற்றத்தை குறைக்கின்றன.

ஒத்திகைகள் அறிவிக்கப்பட்டதும் அறிவிக்கப்படாததுமான இரு வடிவங்களிலும் நடத்தப்பட வேண்டும். ஒரு நிறுவனம் தீ ஒத்திகையை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை என்றால், அது பேரிடர் நேரத்தில் முதல் முறையாக தனது திட்டத்தை சோதிப்பதற்கு சமமானதாகும்.

7. பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பு

அனைத்து நபர்களும் அவசரநிலைகளில் சமமான திறனுடன் செயல்பட முடியாது. பின்வரும் குழுக்கள் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகின்றனர்:

  • முதியவர்கள்
  • குழந்தைகள்
  • நோயாளிகள்
  • கர்ப்பிணிப் பெண்கள்
  • மாற்றுத்திறனாளிகள்

இவர்களுக்கான வெளியேற்றத் திட்டங்கள் தனித்தனியாக உருவாக்கப்பட வேண்டும். ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான விசேட திட்டங்கள் இல்லாதபோது ஏற்படக்கூடிய அபாயத்தை நினைவூட்டுகிறது.

8. முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பு

சில கட்டிடங்கள் வெறும் கட்டிடங்களாக மட்டுமல்ல; அவை சமூகத்தின் அத்தியாவசிய சேவைகளின் மையங்களாகும். உதாரணமாக:

  • வைத்தியசாலைகள்
  • மருந்துக் களஞ்சியசாலைகள்
  • தரவு மையங்கள்
  • மின்நிலையங்கள்
  • நீர் வழங்கல் நிலையங்கள்

இவை சேதமடைந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எனவே இத்தகைய இடங்களில்:

  • தீ எதிர்ப்பு கட்டுமானங்கள்
  • தானியங்கி தீ கட்டுப்பாட்டு அமைப்புகள்
  • மாற்று மின்சார வசதிகள்
  • தரவு காப்பு அமைப்புகள்

கட்டாயமாக இருக்க வேண்டும்.

9. அவசர தகவல் தொடர்பு

பேரிடர் நேரத்தில் தகவல் தொடர்பு தோல்வியடையும் போது குழப்பம் அதிகரிக்கிறது. சரியான தகவல் தொடர்பு:

  • விரைவான பதிலளிப்பை உறுதி செய்கிறது.
  • வதந்திகளைத் தடுக்கிறது.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் வழங்குகிறது.
  • ஊடகங்களுடன் தொடர்பை ஒழுங்குபடுத்துகிறது.

எனவே நிறுவனங்கள் அவசர தொடர்பு பட்டியல்களையும் மாற்று தகவல் தொடர்பு முறைகளையும் பராமரிக்க வேண்டும்.

10. ஒவ்வொரு சம்பவத்திலிருந்தும் கற்றுக்கொள்வது

ஒவ்வொரு தீ விபத்தும் ஒரு பாடமாகும். சம்பவத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம்:

  • என்ன தவறு நடந்தது?
  • என்ன சரியாக செயல்பட்டது?
  • என்ன மேம்படுத்தப்பட வேண்டும்?

என்பன கண்டறியப்பட வேண்டும்.

பேரிடர்களிலிருந்து கற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் அதே தவறுகளை மீண்டும் செய்யும் அபாயத்தில் உள்ளன.

ஆயத்தநிலை கலாசாரத்தை உருவாக்குதல்

பேரிடர் ஆயத்தநிலை ஒரு திட்டமாக அல்ல, ஒரு கலாசாரமாக மாற வேண்டும். பாதுகாப்பு என்பது பாதுகாப்பு அதிகாரியின் பொறுப்பு மட்டுமல்ல. அது நிர்வாகம், பணியாளர்கள், குடியிருப்போர், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரின் பொறுப்பாகும். ஒரு பாதுகாப்பு கலாசாரம் உருவாகும் போது:

  • அபாயங்கள் விரைவாக அறிக்கையிடப்படுகின்றன.
  • குறைபாடுகள் உடனடியாக திருத்தப்படுகின்றன.
  • ஒத்திகைகள் வழக்கமானதாக மாறுகின்றன.
  • பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உயர்கிறது.

இதுவே பேரிடர்களின் தாக்கத்தை குறைப்பதற்கான நீண்டகால வழிமுறையாகும்.

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலை தீ விபத்தும், ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தும், பேரிடர் ஆயத்தநிலையின் அவசியத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இச்சம்பவங்கள் வெறும் தனிப்பட்ட விபத்துகள் அல்ல; நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை மணியாகும்.

பேரிடர் ஆயத்தநிலை என்பது ஒரு செலவல்ல; அது உயிர்களையும் அத்தியாவசிய சேவைகளையும் பாதுகாக்கும் முதலீடாகும். சரியான அபாய மதிப்பீடு, பயிற்சி பெற்ற பணியாளர்கள், செயற்படும் எச்சரிக்கை அமைப்புகள், ஒழுங்கான ஒத்திகைகள் மற்றும் வலுவான தலைமைத்துவம் ஆகியவை இணைந்தாலே ஒரு நிறுவனம் உண்மையான பாதுகாப்பை அடைய முடியும்.

தீ விபத்து எப்போது நிகழும் என்பதை நாம் அறிய முடியாது. ஆனால் அது நிகழும்போது நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதே உயிர்களையும் சொத்துகளையும் காப்பாற்றும் முக்கிய காரணியாகும்.

.

எனது தற்போதைய வேலைத்தளத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொழில் சரிபார்க்கப்பட்ட தண்ணீர் பீச்சும் குழாய் அமைப்பு

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.