கட்டிப்போடல்: பாதுகாப்பா? அபாயமா?

மனநல நோய்கள், ஞாபக மறதி (Dementia), அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவை உலகளவில் அதிகரித்து வருகின்றன. இதனுடன் தொடர்புடைய பராமரிப்பு தேவைகளும் அதிகரித்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள் கடுமையான ஆவேசம், வன்முறை, தற்கொலை எண்ணம், அல்லது தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடத்தைகளை வெளிப்படுத்தலாம். இத்தகைய அவசரநிலைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, ஆனால் மிகுந்த சர்ச்சைக்குரிய நடைமுறைகளில் ஒன்று “கட்டிப்போடல்” (Restraint) ஆகும்.

கட்டிப்போடல் சில நேரங்களில் உயிரைக் காப்பாற்றக்கூடியதாக இருக்கலாம். அதேவேளை தவறாக பயன்படுத்தப்பட்டால் மனித உரிமை மீறல்கள், உடல் மற்றும் மன உளைச்சல்கள், மேலும் மரணம் கூட ஏற்படக்கூடும். எனவே இதன் பயன்பாடு குறித்து பொதுமக்கள், குடும்பத்தினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சரியான புரிதலைக் கொண்டிருப்பது அவசியமாகும்.

1. கட்டிப்போடல் என்றால் என்ன?

ஒரு நபர் தமக்கோ அல்லது பிறருக்கோ உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில், அவரின் அசைவுகள், நடத்தைகள் அல்லது சுதந்திரத்தை தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையே கட்டிப்போடல் (Restraint) ஆகும்.

இதன் முக்கிய நோக்கங்கள்:

  • உயிரைக் காப்பாற்றுதல்
  • காயங்களைத் தடுப்பது
  • பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
  • அவசர மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்பளித்தல்

கட்டிப்போடல் என்பது:

  • தண்டனை அல்ல
  • ஒழுக்கம் கற்பிக்கும் முறை அல்ல
  • பணியாளர்களின் வசதிக்காக செய்யப்படும் செயல் அல்ல

மாறாக, அனைத்து மாற்று வழிமுறைகளும் தோல்வியடைந்த பின் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கடைசி வழிமுறையாகும்.

2. ஏன் சில நோயாளிகள் வன்முறையாக அல்லது ஆவேசமாக நடக்கிறார்கள்?

மனநோயாளிகள் அனைவரும் வன்முறையாளர்கள் என்பது சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கையாகும். உண்மையில் பெரும்பாலான மனநோயாளிகள் சமூகத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில மருத்துவ நிலைகளில் வன்முறை நடத்தை தோன்றலாம். இந்நிலைகளில் நோயாளி:

  • இல்லாத குரல்களைக் கேட்கலாம்
  • தன்னை யாரோ தாக்கப்போகிறார்கள் என்று நம்பலாம்
  • சுற்றியுள்ளவர்களை எதிரிகளாக கருதலாம்

இதன் விளைவாக தற்காப்பு உணர்வில் வன்முறையாக நடந்து கொள்ளலாம்.

போதைப்பொருள் பாவனையில்

போதைப்பொருட்கள் மூளையின் இயல்பான செயற்பாடுகளை மாற்றி, சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine அல்லது Ice), கொக்கெய்ன் (Cocaine), செயற்கைத் தூண்டுதல் போதைப்பொருட்கள் (Synthetic stimulants) போன்றவை பயன்படுத்தப்பட்டால், நபர் மிகுந்த ஆவேசம், பதற்றம், சந்தேக உணர்வு மற்றும் வன்முறை நடத்தையை வெளிப்படுத்தலாம். அதேபோல் அதிக அளவு மதுபானம் அருந்திய நிலை (Alcohol intoxication) அல்லது நீண்டகால மதுபானப் பாவனைக்குப் பிறகு திடீரென நிறுத்தும்போது ஏற்படும் மதுபான விலகல் நிலை (Alcohol withdrawal) கூட கடுமையான கலக்கம், குழப்பம், மாயத் தோற்றங்கள் மற்றும் ஆபத்தான நடத்தை உருவாக்கக்கூடும். இந்நிலைகளில் சிலர் தமக்கோ அல்லது பிறருக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படலாம்.

எனவே இவ்வாறான ஆவேசமான நடத்தைகள் ஒழுக்கக் குறைபாடு அல்லது குற்றவியல் மனநிலை காரணமாக அல்ல; மாறாக, உடனடி மருத்துவ கவனம் தேவைப்படும் ஒரு மருத்துவ அவசரநிலையின் வெளிப்பாடாகக் கருதப்பட வேண்டும்.

3. கட்டிப்போடலின் வகைகள்

A. உடல் கட்டிப்போடல் (Physical Restraint)

பணியாளர்கள் உடல் வலிமையைப் பயன்படுத்தி நோயாளியின் அசைவுகளை கட்டுப்படுத்துதல்.

உதாரணங்கள்: கைகளைப் பிடித்தல், கால்களைப் பிடித்தல், பாதுகாப்பு பிடிப்புகள்…..

B. இயந்திர கட்டிப்போடல் (Mechanical Restraint)

கருவிகளைப் பயன்படுத்தி அசைவுகளை கட்டுப்படுத்துதல்.

உதாரணங்கள்: கைப்பட்டைகள், கால்பட்டைகள், இடுப்புப் பட்டைகள், பாதுகாப்பு நாற்காலிகள்….

C. இரசாயன கட்டிப்போடல் (Chemical Restraint)

நோயாளியை அமைதிப்படுத்த மருந்துகளைப் பயன்படுத்துதல்.

பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகள்: Haloperidol, Olanzapine, Risperidone……..

D. தனிமைப்படுத்தல் (Seclusion)

நோயாளியை பாதுகாப்பான தனி அறையில் வைப்பது.

E. உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை

இவை மிகவும் பாதுகாப்பான மற்றும் மனிதநேயமான அணுகுமுறைகளாகும்.

உதாரணங்கள்: அமைதியான உரையாடல், நம்பிக்கை அளித்தல், குடும்ப ஆதரவு, சத்தத்தைக் குறைத்தல், தூண்டுதல்களை அகற்றுதல்….

4. எப்போது கட்டிப்போடலாம்?

கட்டிப்போடல் பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே நியாயப்படுத்தப்படலாம்:

  • தற்கொலை முயற்சி
  • பிறரைத் தாக்குதல்
  • தன்னைத்தானே காயப்படுத்துதல்
  • உயிருக்கு ஆபத்தான ஆவேசம்
  • அவசர சிகிச்சையைத் தடுக்குதல்

எப்போது பயன்படுத்தக்கூடாது?

  • தண்டனையாக
  • ஒழுக்கம் கற்பிக்க
  • பணியாளர் வசதிக்காக
  • பணியாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய
  • “சிரமமான நோயாளி” என்பதற்காக

5. கட்டிப்போடலின் நன்மைகள்

சரியான சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் போது கட்டிப்போடல் உயிர்காக்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.

நோயாளிக்கான நன்மைகள்

  • தற்கொலை தடுப்பு
  • தன்னைத்தானே காயப்படுத்துவதைத் தடுக்கலாம்
  • உயிரைக் காப்பாற்றலாம்

பிறருக்கான நன்மைகள்

  • பிற நோயாளிகளை பாதுகாக்கலாம்
  • சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கலாம்
  • குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கலாம்

மருத்துவ நன்மைகள்

  • அவசர சிகிச்சைக்கு வாய்ப்பு
  • மருந்து வழங்குதல்
  • ஆபத்தான சூழ்நிலையை கட்டுப்படுத்துதல்

6. கட்டிப்போடலின் தீமைகள் மற்றும் ஆபத்துகள்

கட்டிப்போடல் முழுமையாக பாதுகாப்பான நடைமுறை அல்ல.

உடல் ரீதியான ஆபத்துகள்

  • மூச்சுத்திணறல்
  • நுரையீரல் பாதிப்புகள்
  • இதயத் துடிப்பு கோளாறுகள்
  • இரத்த உறைவு
  • நரம்பு சேதம்
  • தோல் காயங்கள்
  • எலும்பு முறிவுகள்

உளவியல் பாதிப்புகள்

  • பயம்
  • அவமானம்
  • மனஅழுத்தம்
  • PTSD
  • மருத்துவர்களின் மீதான நம்பிக்கை இழப்பு

சமூக மற்றும் சட்ட விளைவுகள்

  • மனித உரிமை மீறல்கள்
  • துஷ்பிரயோகம்
  • நீதிமன்ற வழக்குகள்
  • தொழில்முறை நடவடிக்கைகள்

7. முதியோர் இல்லங்களில் கட்டிப்போடல்

முதியோர் இல்லங்களில் கட்டிப்போடல் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகும். Dementia நோயாளிகள்:

  • அலைந்து திரிவர்
  • விழுந்துவிடலாம்
  • குழப்பமடையலாம்

என்பதற்காக சில இடங்களில் கட்டிப்போடப்படுகின்றனர். ஆனால் ஆய்வுகள் காட்டுவதாவது:

  • கட்டிப்போடல் விழுதல்களைத் தடுக்காது
  • அழுத்தப் புண்களை அதிகரிக்கும்
  • மனநிலையை மோசமாக்கும்
  • மரண அபாயத்தை அதிகரிக்கலாம்

எனவே மருத்துவ காரணமின்றி முதியோரை கட்டிப்போடுவது முதியோர் துஷ்பிரயோகமாகக் கருதப்படலாம்.

8. போதைப்பொருள் மறுவாழ்வு நிலையங்களில் கட்டிப்போடல்

Methamphetamine மற்றும் Cocaine போன்ற தூண்டுதல் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் கடுமையான ஆவேசத்துடன் காணப்படலாம். இந்நிலையில்:

  • அதிக உடல் வெப்பம்
  • அதிக இதயத் துடிப்பு
  • அசாதாரண உடல் வலிமை

காணப்படலாம். இத்தகைய நபர்களை தவறான முறையில் கட்டிப்போடுவது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

9. இலங்கையின் சட்ட நிலை

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் Mental Diseases Ordinance 1873 மிகவும் பழமையான சட்டமாகும். இச்சட்டத்தில் உடல் கட்டிப்போடல், இரசாயன கட்டிப்போடல், தனிமைப்படுத்தல் பற்றிய தெளிவான விதிமுறைகள் இல்லை.

எனவே:

  • மருத்துவ ஆவணப்படுத்தல்
  • மூத்த மருத்துவ மேற்பார்வை
  • மனித உரிமை பாதுகாப்பு

மிகவும் முக்கியமானவையாகின்றன.

10. கட்டிப்போடலின் போது ஏற்படும் மரணங்கள் – தடய மருத்துவப் பார்வை

கட்டிப்போடலின் போது ஏற்படும் மரணங்கள் உலகளவில் முக்கியமான நீதிமருத்துவ பிரச்சினையாகும்.

A. Positional Asphyxia (நிலைமுறை மூச்சுத்திணறல்)

நோயாளியை குப்புறப்படுக்க வைத்து முதுகில் அழுத்தம் கொடுத்து பிடித்திருப்பதால் நுரையீரல் விரிவடைய முடியாது.

இதன் விளைவாக ஆக்சிஜன் குறைவு, கார்பன் டையாக்சைடு அதிகரிப்பு ஏற்பட்டு இறுதியாக இதய நிறுத்தம், மரணம் ஏற்படலாம்.

B. Excited Delirium

இதன் அறிகுறிகள் மிகுந்த ஆவேசம், அதிக உடல் வெப்பம், அசாதாரண வலிமை, வலி உணராமை, குழப்பம். இந்த நிலையில் இதயம் திடீரென நின்றுவிடலாம்.

C. கழுத்து அழுத்தம்

கழுத்தில் அழுத்தம் கொடுப்பது:

  • மூளைக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கும்
  • சுவாசப்பாதையை அடைக்கும்
  • பக்கவாதம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும்

D. Hog-Tie Position

கைகள் மற்றும் கால்களை பின்னால் இணைத்து கட்டுவது. இது:

  • மார்பு விரிவைத் தடுக்கிறது
  • சுவாசத்தை குறைக்கிறது
  • மரண அபாயத்தை அதிகரிக்கிறது

E. Hyperthermia மற்றும் Metabolic Collapse

நீண்ட நேர போராட்டத்தால்:

  • உடல் வெப்பம் அதிகரிக்கும்
  • தசைகள் சிதைவடையும்
  • சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்

11. தடுப்பு மற்றும் மாற்று வழிமுறைகள்

கட்டிப்போடலைத் தவிர்ப்பதே சிறந்த நடைமுறையாகும். இதற்காக:

  • ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதல்
  • அமைதியான உரையாடல்
  • தூண்டுதல்களைக் குறைத்தல்
  • குடும்ப ஆதரவு
  • தன்னார்வ மருந்தளிப்பு
  • பயிற்சி பெற்ற பணியாளர்கள்

மிகவும் அவசியம்.

12. குடும்பத்தினரும் பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டியவை

உங்கள் குடும்ப உறுப்பினர் ஒரு பராமரிப்பு நிலையத்தில் இருந்தால்:

  • கட்டிப்போடல் கொள்கையை கேளுங்கள்
  • பணியாளர்கள் பயிற்சி பெற்றவர்களா என அறியுங்கள்
  • தேவையற்ற கட்டிப்போடலை சந்தேகித்தால் புகார் அளியுங்கள்

ஒவ்வொரு நோயாளிக்கும் மனித கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமை உள்ளது. கட்டிப்போடல் என்பது மருத்துவம், மனித உரிமைகள், சட்டம் மற்றும் நெறிமுறைகள் சந்திக்கும் மிக நுணுக்கமான துறையாகும். சரியான முறையில் பயன்படுத்தப்படும் போது அது உயிரைக் காப்பாற்றக்கூடியது. ஆனால் தவறாக பயன்படுத்தப்படும் போது கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

எனவே, கட்டிப்போடலின் நோக்கம் ஒருவரை அடக்குவது அல்ல; அவரையும் அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே ஆகும். மனித கண்ணியம், கருணை, அறிவியல் ஆதாரம் மற்றும் சட்டப் பொறுப்பு ஆகியவை எப்போதும் இந்த நடைமுறையின் மையமாக இருக்க வேண்டும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.