“துஷ்பிரயோகம்” (Abuse) என்ற சொல் இன்று சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும், நீதிமன்றங்களிலும், அன்றாட உரையாடல்களிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு மனவேதனையும் அல்லது உறவு முறிவும் “துஷ்பிரயோகம்” அல்ல. அதேபோல், காதல் தோல்விக்குப் பிறகு ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அதற்காக மற்றைய நபர் தானாகவே சட்டப்படி குற்றவாளியாகிவிட மாட்டார்.
எனவே “சிறுவர் துஷ்பிரயோகம்”, “உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம்” மற்றும் “காதல் தோல்விக்குப் பிந்தைய தற்கொலை” ஆகிய மூன்றிற்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

துஷ்பிரயோகம் (Abuse) என்றால் என்ன?
துஷ்பிரயோகம் என்பது, ஒரு நபரின் உடல், மனம், பாலியல் சுதந்திரம், மரியாதை அல்லது பொருளாதார நலனுக்கு திட்டமிட்டு அல்லது தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் செயல் அல்லது நடத்தையாகும். துஷ்பிரயோகத்தின் முக்கிய அம்சங்கள்
- அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்
- கட்டுப்படுத்த முயற்சித்தல்
- அச்சுறுத்துதல்
- உடல் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்துதல்
- தொடர்ந்து நடைபெறும் தீங்கான நடத்தை
சிறுவர் துஷ்பிரயோகம் (Child Abuse) என்றால் என்ன?
சிறுவரின் உடல், மனம், பாலியல் பாதுகாப்பு அல்லது இயல்பான வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் தொடர்ச்சியான எந்தவொரு செயல், செயற்பாடு அல்லது புறக்கணிப்பும் சிறுவர் துஷ்பிரயோகமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. உடல் துஷ்பிரயோகம்
- அடித்தல்
- உதைத்தல்
- எரித்தல்
- கழுத்தை நெரித்தல்
- ஆபத்தான தண்டனைகளை வழங்குதல்
2. பாலியல் துஷ்பிரயோகம்
- பாலியல் வன்புணர்வு
- சிறுவரை பாலியல் நோக்கத்திற்காகத் தொடுதல்
- சிறுவரின் ஆபாசப் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை உருவாக்குதல்
- இணையவழி பாலியல் சுரண்டல்
- சிறுவரை பாலியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துதல்
3. உணர்ச்சி (மன) ரீதியான துஷ்பிரயோகம்
- தொடர்ந்து திட்டுதல்
- அவமதித்தல்
- பயமுறுத்துதல்
- அன்பை மறுத்தல்
- சிறுவரை பயனற்றவர் என உணரச் செய்தல்
- மற்ற சிறுவர்களுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்துதல்
4. புறக்கணிப்பு (Neglect)
- போதுமான உணவு வழங்காமல் இருத்தல்
- கல்வியை மறுத்தல்
- தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் இருத்தல்
- பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிடுதல்
- அடிப்படை பராமரிப்பை வழங்கத் தவறுதல்
உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் (Emotional Abuse) என்றால் என்ன?
உடலில் காயங்கள் ஏற்படாமல் இருந்தாலும், ஒருவரின் மனநலம், தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் உணர்ச்சி நலனுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நடத்தையே உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் எனலாம். இது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகள் நீண்டகால மனநல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தின் உதாரணங்கள்
- “நீ ஒன்றுக்கும் உதவாதவன்.”
- “உன்னை யாரும் விரும்பமாட்டார்கள்.”
- தொடர்ந்து அவமானப்படுத்துதல்
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துதல்
- தொடர்ச்சியான சந்தேகம் மற்றும் கட்டுப்பாடு
- மிரட்டல்
- சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புதல்
- தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல்
- உறவு முடிந்த பின்னரும் தொடர்ந்து தொந்தரவு செய்தல்
எல்லா காதல் தோல்வியும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமா?
இல்லை. ஒருவர் காதலை நிராகரிப்பது அல்லது உறவை முடிப்பது மட்டும் சட்டப்படி துஷ்பிரயோகம் அல்ல. ஒவ்வொரு வயது வந்த நபருக்கும்
- காதலிக்க உரிமை உண்டு.
- காதலை நிராகரிக்க உரிமை உண்டு.
- உறவை முடிக்க உரிமை உண்டு.
இவை தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்.
எப்போது காதல் உறவு உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமாக மாறுகிறது?
உறவு முடிந்த பின்னர் ஒருவர்,
- தொடர்ந்து தொந்தரவு செய்தால்
- மிரட்டினால்
- பின்தொடர்ந்தால் (Stalking)
- சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்
- தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டினால்
- திருமணத்திற்கு அல்லது உறவிற்கு வற்புறுத்தினால்
- தற்கொலை செய்வதாக மிரட்டி மற்றவரை கட்டுப்படுத்த முயன்றால்
இவை உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் அல்லது பிற குற்றங்களாகக் கருதப்படலாம்.
இலங்கைச் சட்டத்தின் பார்வை
காதல் தோல்விக்குப் பிறகு ஒருவர் தற்கொலை செய்துகொண்டால். அந்த நபரை காதலித்தவர் அல்லது உறவை முடித்தவர் தானாகவே குற்றவாளி ஆகிவிட மாட்டார். நீதிமன்றம் பரிசீலிப்பவை
- தொடர்ந்து மிரட்டப்பட்டாரா?
- சட்டவிரோத அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
- தற்கொலை செய்யத் தூண்டப்பட்டாரா?
- மிரட்டல் செய்திகளா?
- ஆதாரங்கள் உள்ளனவா?
இவ்வாறான ஆதாரங்கள் இல்லாமல், “அவர் என்னை விட்டுச் சென்றதால் நான் தற்கொலை செய்தேன்“என்பது மட்டும் மற்றவருக்கு குற்றப்பொறுப்பை ஏற்படுத்தாது.
சிறுவர் துஷ்பிரயோகம், உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் காதல் தோல்விக்குப் பிந்தைய தற்கொலை ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றினாலும், சட்ட மற்றும் தடயவியல் மருத்துவக் கண்ணோட்டத்தில் அவை முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களாகும். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவரின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் நலனை பாதிக்கும் செயலாகும். உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒருவரின் மனநலத்தையும் சுயமரியாதையையும் தொடர்ந்து சேதப்படுத்தும் நடத்தையாகும். காதல் தோல்விக்குப் பிந்தைய தற்கொலை என்பது பல உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான விளைவாகும். எனவே, ஒவ்வொரு வழக்கும் சட்ட ஆதாரங்கள், மருத்துவச் சான்றுகள் மற்றும் தடயவியல் விசாரணைகளின் அடிப்படையில் தனித்தனியாக மதிப்பிடப்பட வேண்டும்.
