இலங்கையின் நீச்சல் தடாகங்களில் அதிகரிக்கும் தடுக்கக்கூடிய உயிரிழப்புகள்!!!

சமீப மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள நீச்சல் தடாகங்களில்  மூழ்கி இறக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்துள்ளன. இவை தவிர்க்க முடியாத விபத்துகள் அல்ல; மாறாக பாதுகாப்பு தரநிலைகள், கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை குறைபாடுகளால் ஏற்பட்ட தடுக்கக்கூடிய மரணங்களாகும். சுற்றுலா விடுதிகளிலிருந்து சமூக விளையாட்டு மையங்கள் வரை பல இடங்களில் ஒரே மாதிரியான குறைகள் காணப்படுகின்றன: பாதுகாப்பு வசதிகளின் பற்றாக்குறை, பயிற்சி பெறாத பணியாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின்மை. இந்த சம்பவங்கள் தனித்தனியான விபத்துகள் அல்ல. நீச்சல் தடாக பாதுகாப்பை இலங்கை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதில் உள்ள அமைப்புசார் தோல்வியின் பிரதிபலிப்பாகும். இனி அனுதாபம் மட்டுமின்றி முன்கூட்டிய, கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

தற்போதைய நிலைமை

இலங்கையில் ஐந்து நட்சத்திர விடுதிகளிலிருந்து சிறிய சமூக நீச்சல் தடாகங்கள் மற்றும் பாடசாலைகள் வரை பல வகையான நீச்சல் தடாகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒரே மாதிரியான பாதுகாப்பு தரநிலைகளின் கீழ் இயங்குவதில்லை. நீச்சல் தடாகங்களில் உள்ள முக்கிய குறைபாடுகள்

1. சான்றளிக்கப்பட்ட உயிர்காக்கும் பணியாளர்கள் இல்லாமை

பல விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் சமூக மையங்களில் பயிற்சி பெற்ற lifeguard பணியில் இருப்பதில்லை. சில இடங்களில் சாதாரண ஊழியர்களே எந்தவித பயிற்சியும் இல்லாமல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

2. பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் ஆழக் குறியீடுகள் இல்லாமை

“Diving செய்ய வேண்டாம்”, நீரின் ஆழம், அவசர தொலைபேசி எண்கள் போன்ற அடிப்படை அறிவிப்புகள் பல இடங்களில் காணப்படுவதில்லை.

3. பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை

உயிர்காக்கும் வளையங்கள், மீட்பு கம்பிகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் அவசர அலாரங்கள் பல இடங்களில் இல்லாமையோ அல்லது பழுதடைந்த நிலையிலோ உள்ளன.

4. கட்டாய ஆய்வு முறைமையின்மை

பல நாடுகளில் போல வருடாந்திர பாதுகாப்பு ஆய்வுகள் இலங்கையில் கட்டாயமாக இல்லை.

5. மோசமான நீச்சல் தடாகங்கள் வடிவமைப்பு

வழுக்கும் தரைகள், கூர்மையான அடிப்பகுதி விளிம்புகள், பாதுகாப்பற்ற நீர்வெளியேற்ற அமைப்புகள் போன்றவை விபத்துகளை அதிகரிக்கின்றன.

6. நீச்சல் பாதுகாப்பு கல்வி இல்லாமை

பல குழந்தைகளும் பெரியவர்களும் நீச்சல் திறமையோ பாதுகாப்பு அறிவோ இல்லாமல் நீரில் இறங்குகின்றனர்.

7. அவசரநிலை நடவடிக்கை தாமதம் மற்றும் சட்ட அமலாக்க பலவீனம் ஆகிய காரணிகளுடன் தொடர்புடையவை.

ஒவ்வொரு நீச்சல் தடாகத்திலும் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

1. உயிர் பாதுகாப்பு (Lifeguards)

பொது மற்றும் ஹோட்டல் நீச்சல் தடாகங்கள் இயங்கும் நேரங்களில், சான்றிதழ் பெற்ற உயிர்காப்பாளர்கள் (Lifeguards) பணியில் இருப்பது சட்டப்படி கட்டாயமாகும்.

2. கட்டாய பாதுகாப்பு உபகரணங்கள்

ஒவ்வொரு குளத்திலும் 15 மீட்டர் கயிறுடன் lifebuoy , மீட்பு கம்பி , முதலுதவி பெட்டி , AED (பெரிய மையங்களில்) மற்றும் அவசர தொடர்பு சாதனம். இவை அனைத்தும் உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

3. எச்சரிக்கை பலகைகள்

 தடாகத்தின் ஆழம் (Depth Markings) ,“No Diving” எச்சரிக்கை ,அதிகபட்ச பயனாளர் எண்ணிக்கை, குழந்தைகள் கண்காணிப்பு அறிவிப்பு, அவசர எண் (1990)மற்றும் பாதுகாப்பு விதிகள் தெளிவாகத் தெரியும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

4. பாதுகாப்பு வேலி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு

குழந்தைகள் அணுகக்கூடிய அனைத்து நீச்சல் குளங்களும் குறைந்தது 1.2 மீட்டர் உயரமான வேலியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

5. Drain பாதுகாப்பு

மூழ்கல் மற்றும் உடல் சிக்குதல் ஏற்படாத வகையில் anti-entrapment drain covers கட்டாயமாக இருக்க வேண்டும்.

6. நீர்தரமும் வெளிச்ச வசதியும்

நீரின் அடிப்பகுதியை தெளிவாக பார்க்கக்கூடிய அளவிற்கு நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

7. அவசரநிலை செயல்திட்டம்

ஒவ்வொரு நிலையிலும் எழுதப்பட்ட Emergency Action Plan இருக்க வேண்டும்.

8. குழந்தைகளுக்கான தனிப்பிரிவு

சிறுவர்களுக்கான shalllow pool தனியாக அமைக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நீச்சல் தடாகங்களுக்கு சட்ட வழிகாட்டுதல் உள்ளதா?

ஆம். இலங்கையில் நீச்சல் தடாக வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவை நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA), உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ஆகியவற்றின் சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.

1. கட்டுமானத்திற்கான சட்ட கட்டமைப்பு (Construction Laws)

  • நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் (UDA Law): இலங்கையில் எந்தவொரு நீச்சல் தடாகத்தையும் அமைப்பதற்கு முன்னதாக, UDA அல்லது அந்தந்த பிரதேச மாநகர சபை/நகர சபையிடம் இருந்து அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தை (Development Permit) கட்டாயம் பெற வேண்டும்.
  • கட்டுமானத் தொழில் வளர்ச்சிச் சட்டம் (CIDA Act): தடாகத்தை அமைக்கும் ஒப்பந்ததாரர் (Contractor) இலங்கையின் கட்டுமானத் தொழில் வளர்ச்சி அதிகாரசபையில் (CIDA) பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • கட்டமைப்பு தரநிலைகள்: நீச்சல் தடாகத்தின் தரை மற்றும் சுவர்கள் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (Reinforced Concrete) மூலம் நீர்க்கசிவு ஏற்படாதவாறு அமைக்கப்பட வேண்டும். இதற்கான வரைபடங்கள் தகுதிவாய்ந்த பொறியியலாளர் (Chartered Engineer) ஒருவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2. பராமரிப்பு மற்றும் நீரின் தரம் (Maintenance & Water Quality)

சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் அல்லது பொது நீச்சல் தடாகங்களில் நீரின் தரத்தை பராமரிப்பது சட்டப்படி கட்டாயமாகும்:

  • இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) விதிமுறைகள்: வணிக ரீதியான நீச்சல் தடாகங்களின் நீரின் தரம் தினமும் குறைந்தது இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
  • இரசாயன அளவுகள்:
    • pH அளவு: நீரின் pH அளவு கண்டிப்பாக 7.4 முதல் 7.6 க்குள் இருக்க வேண்டும்.
    • குளோரின் (Chlorine) அளவு: நீரில் எஞ்சியிருக்கும் குளோரின் அளவு 0.5 ppm (Parts Per Million) என்ற அளவில் இருக்க வேண்டும்.
  • கழிவுநீர் அகற்றல்: தடாகத்தை சுத்தம் செய்யும்போது வெளியேறும் இரசாயனம் கலந்த கழிவுநீரை பொது வடிகால்களில் நேரடியாக விட முடியாது. அதை பிரத்யேக உறிஞ்சு குழி (Soakage Pit) மூலம் நிலத்தடிக்குள் செலுத்த வேண்டும்.

இது தவிர இலங்கையில் “Guidelines for Safe Pool Operations – Sri Lanka (GSPO–SL)” எனப்படும் தேசிய வழிகாட்டுதல் ஆவணம் உள்ளது. இது Sri Lanka Life Saving உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் பல இடங்களில் மேற்குறித்த சட்டங்கள் போதிய அளவில் அமுல்ப்படுத்தப்படுவதில்லை இதன் காரணமாகவே இவ்வாறான தடுக்கப்படக்கூடிய இறப்புக்கள் தொடர்கதையாக உள்ளன. இலங்கையில் இன்னும்:

  • தனித்த Swimming Pool Safety Act இல்லை
  • தேசிய Aquatic Safety Authority இல்லை
  • கட்டாய ஆண்டு ஆய்வு முறைமை இல்லை
  • அனைத்து நீச்சல் குளங்களுக்கும் ஒரே உரிமம் தரநிலை இல்லை
  • அலட்சியத்திற்கு எதிரான தெளிவான குற்றப்பொறுப்பு சட்டம் இல்லை

இதன் விளைவாக பல இடங்கள்:

  • விருப்பப்படி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகின்றன,
  • அல்லது முற்றிலும் பின்பற்றாமல் இயங்குகின்றன.

சர்வதேச அளவில் இன்று பயன்படுத்தப்படும் அடிப்படை சட்டக் கோட்பாடு “Foreseeable and Preventable Risk” அதாவது “முன்கூட்டியே எதிர்பார்க்கக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய ஆபத்து.” ஒவ்வொரு நீச்சல் குள மூழ்கி இறப்பும் ஒரு குடும்பத்தின் துயரமல்ல; அது சமூக பாதுகாப்பு அமைப்பின் தோல்வி. இலங்கை இன்னும் பாதுகாப்பை விருப்பத் தேர்வாகப் பார்க்கிறது. ஆனால் பாதுகாப்பு என்பது செலவு அல்ல. அது உயிரைக் காக்கும் அடிப்படை பொறுப்பு.

இன்று நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாளைய மரணங்கள் “விபத்து” அல்ல “முன்கூட்டியே தெரிந்த அலட்சியத்தின் விளைவு” என வரலாறு பதிவு செய்யும் போதிய பாதுகாப்பு வேலி இல்லாததாலோ அல்லது தெளிவற்ற நீரினாலோ தடாகத்தில் ஏதேனும் விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், சொத்தின் உரிமையாளர் மீது இலங்கை தண்டனைச் சட்டத் தொகுப்பின் (Penal Code) கீழ் அலட்சியக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.